Monday, May 29, 2006

எங்கவே தொலைஞ்சீரு?

இப்படி உரிமையாகக் கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி. கொஞ்சம் வேலைப்பளுவின் பின், தஞ்சாவூர் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். இலக்கியம், நாடகம் பற்றிய அறிவுபெறுதல், உணர்தல் என்று உருப்படியாகக் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு வந்தேன். அதென்னமோ நமக்கும் சென்னை செல்வதற்கும் என்னமோ தடங்கிகிட்டே வருது. சென்னை நண்பர்கள் அதிர்ஷ்டம் - பிழைத்துப் போனார்கள்.
ஊருக்குப் போனதில் உருப்படியாகப் படித்தது- திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களின் நாடகம் பற்றிய விமரிசனங்களின் தொகுப்பு நூல்.
சிறிய அவகாசம் பின் எழுதுகிறேன்.
அன்புடன்
க.சுதாகர்.

Sunday, May 14, 2006

சீருடையில் களங்கம்

மும்பை காவல்துறை, தனது சுய ரூபத்தை மீண்டும் வெளிக்காட்டிவிட்டது. இம்முறை , கூலிப்படைகள் போல மிருகத்தனமாக அவர்கள் மருத்துவத்துறை மாணவர்கள் மீது பாய்ந்தது மிகவும் வெறுப்பையும் கோபத்தையும் மக்கள் மனத்தில் விதைத்துவிட்டது.
நேற்று, மும்பையின் புகழ்பெற்ற ஆஸாத் மைதானத்தில் மருத்துவத் துறை மாணவ மாணவியர் ,உச்ச நிலை கல்வித் துறையில் ரிசர்வேஷன் கொண்டுவரும் திட்டத்திற், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், சாலை மறியலில் ஈடுபட்டதாகக் காரணம் காட்டி, காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக அடித்துத் துரத்தப்பட்டனர்.
மாணவர்களுக்கு காவல்துறையினரிடமிருந்து வந்த இந்த வன்முறைத் தாக்குதல் எதிர்ப்பாராதது. எந்த ஆயுதங்களும் இல்லாத அம்மாணவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து இக்காவல்துறை சார்ந்த மிருகங்கள் கழிகளால் தாக்கியது அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பப்பட்டு, மக்களை திடுக்கிட வைத்தது.
எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்களில் மாணவிகளும் சகிதமாக இருந்தனர். அவர்களைப் பெண் காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். மாறாக, அப்பெண்களை தரதர வென இழுத்து அடித்தவர்கள் ஆண் காவல் துறையினர். பெண் காவல்துறையினர் ஒருவர் கூட இல்லை. எந்த வகையில் இதனைத் தகுந்த கண்காணிப்புடன் நடத்தப்பட்ட காவல்துறை தடுப்பு எனச் சொல்ல முடியும்?

ஒரு கூட்டம் நடந்தால் அதில் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள் எனக் காவல் துறையினருக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இவ்வாறு ஒரு பெண்காவலாளி கூட பாதுகாப்பிற்கு இன்றி அனுப்பப்பட்ட படை என்றால், அப்படை அனுப்ப்பட்ட உட்காரணம் யாது? "சகட்டு மேனிக்கு அடித்துக் கொல்லுங்கடா" என்பது தானே? இதைச் செய்ய திறமையாக, ஒழுங்கு கூடிய காவல்துறை எதற்கு? கூலிப்படை போதுமே? காவல்படையோ சீருடைக்கு உள்ளில் வெறும் அரசியல் கூலிப்படையாகவே இருக்கிறதோ?

தொலைக்காட்சியில் காட்டிய அடி நொறுக்குதலில், சீருடை அணியாத பலரும் மாணவ மாணவியரை கழிகளால் அடித்து நொறுக்கியதைக் காணலாம். யார் இவர்கள்? சீருடை அணியாத, காவல்துறை சேர்ந்தவர்களா? இவர்கள் வந்து அடிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? அரசியல் தாக்கமோ?

இவ்வளவு நடந்த பின்னும், மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு கொதித்தபின்னும் , காவல்துறை உயர் அதிகாரி ஏ,என்.ராய் " அடிதடி நடக்கவே இல்லை" எனச் சாதிக்கிறார். இந்திய மருத்துவ அசோயியேஷன் (IMA)வைச் சேர்ந்தவர்கள் இதில்தான் மேலும் கொதித்துப்போனார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார் ' இப்படி ஒரு உயர் போலிஸ் அதிகாரி சொல்லுகிறார் என்றால், ஒன்று - அவர் குருடர். இல்லையென்றால் மிகப்பெரிய புளுகர். இவர்களுக்கெல்லாம் திறன் படச் செயல்படுகின்றனர் என்னும் ISO சான்றிதழ் எதற்கு?" சாட்டியடி. ஏ.என் ராய் இந்த கேள்விக்கே நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.

மாண்பு மிகு முதலமைச்சர் எங்கோ மறைந்துவிட்டார். பேசவே இல்லை. அவர் காங்கிரஸ் கட்சி என்பதால் , இந்த கோட்டா விஷயம் அவரது கட்சியின் ஒட்டு வாங்கும் துருப்புச்சீட்டு என்பதால் மெளனம் சாதிக்கிறாரோ? ஆளுநர் எங்கே?
இருபத்திநான்கு மணிநேரம் கெடு ஆட்சியாளர்களுக்கு IMA கொடுத்திருக்கிறது. அவர்கள் நிபந்தனை முக்கியமாக
1. வன்முறையில் ஈடுபட்ட போலிஸ் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
2. வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஏ.என்.ராய் உட்பட - பதவி விலகவேண்டும்

பல மாணவர்களை அடித்து ரவுண்டு கட்டி , ஜெயிலில் வைத்திருந்து நாலரை மணிநேரம் கழித்து விட்டு விட்டனர். போலிஸ் ஸ்டேஷன் எங்கோ, ஆசாத் மைதானம் எங்கோ. இப்பெண்கள் எப்படி வீடு போய்ச் சேருவர்? என்ன பாதுகாப்பு இவர்களுக்கு? யாராவது பதில் சொல்ல முடியுமா? இதில் ஒரு பெண்ணின் கை உடைந்திருக்கிறது. மற்றொரு பெண்ணிற்கு காலில் பலத்த காயம்..ரத்தம் சொட்டச்சொட்ட அவர் விந்தி விந்தி நடக்கிறார். மற்றொரு பெண்ணுக்கு கண் அருகே காயம்.. இது நான் தொலைக்காட்சியில் பார்த்தது. பார்க்காதது எத்தனையோ? பெண்களைத் தாக்கும் மிருகங்களின் கூட்டத்தை போலிஸ் என்றா இன்னும் அழைப்பது? இவர்கள் வீட்டுப்பெண்கள் இருந்தால் இப்படித்தான் அடிப்பார்களா?

காவல் நிலையத்திலேயே, நிராதரவான பெண்களை மிரட்டி மானபங்கம் செய்யும் பேயர் வட்டத்தில் இன்னும் நியாயத்தை எதிர்பார்ப்பது என் தவறுதானோ?

ரிசர்வேஷன் குறித்து ஆதரவாய் பேச என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை அதை எதிர்த்துப் பேசவும் இருக்கிறது-சனநாயகத்தில். "எனக்கு ஓட்டு வேண்டும். அதற்காக எதுவும் செய்வேன். நீ யார் கேட்க?" என்னும் அராஜகம், இப் பசுத்தோல் போர்த்திய அரசியல் புலிகளை அடையாளம் காட்டிவிட்டது. மக்கள் இதற்கு எதிர்த்து பலத்த குரல் எழுப்பவேண்டும்.

பெண்கள் உரிமைக் கழகங்கள், இம்மாணவியர் மீதான தாக்குதல்களை எதிர்த்துக் கேட்கவேண்டும். ஏன் பெண் காவல் துறையினர் அவ்விடத்தில் இல்லை?, என்ன பாதுகாப்பு பெண்களுக்கு? என்னும் கேள்விகளை எழுப்பவேண்டும். இல்லாவிட்டால் இவர்களும் இதில் கூட்டு என்பது உறுதியாகிவிடும்.

இன்று இம்மாணவர்கள். நாளை? யார் கண்டது? இப்படி வலைப்பூவில் எழுதியதால் என்னையும் போட்டு மொத்தலாம்.

வாயிருந்தும் ஊமைகளாய், சனநாயகம் செருப்புகளில் கிழிபடுவதைப் பார்த்திருந்ததும், சமூகத்தின் நாகரீக இழைகள் இற்றுப்போவதைப் பார்த்திருந்ததும் போதும். இங்கு இன்னும் வாழ்வது வெட்கக்கேடு.

மூவர் கொண்ட குடும்பம் ஒன்று மும்பையிலிருந்து புலம் பெயர முயற்சிக்கிறது- அகதிகளாக , நாகரீகம்,மனிதநேயம் உள்ள ஒரு நாட்டில் வருவதற்கு என்னவெல்லாம் தேவை? தெரிந்தவர் எனக்குச் சொல்லலாம்.

Monday, May 08, 2006

எந்தூரு உங்களுக்கு?!

என்னமோ எனக்கு ஒரு ESP இருக்கு என்பதில் என்னைவிட என் மனைவி மிக உறுதியாக நம்புகிறார். யாராவது தமிழ்க்காரர் போலத் தெரிந்தால் அவர் திருநெல்வேலி மாவட்டக்காரரா இல்லையா என்பதை அந்த மனிதர் பேசாமலேயே ஊகித்துவிடுகிறேன் என்பதில் அவருக்கு ஆச்சரியம். திருநெல்வேலிக்காரர்கள் பேசவே வேண்டாம். நான் பேசுவதைப் புரிந்துகொண்டாலே அவர் அந்த ஊர்க்காரர்தான் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். பேந்தப் பேந்த முழித்து " என்ன சொன்னீர்கள்?" எனக் கேட்டால் தாமிரபரணித்தண்ணீர் குடித்தவரில்லை என்பது தெளிவு. இதுதான் ரகசியம்.

இரண்டு மாதம் முன்பு எங்கள் அபார்ட்மெண்ட் முன்னால் புதிய இட்லிக் கடை முளைத்திருந்தது. சக்கர வண்டியில் இட்டிலி, தோசை எனச் சுடச்சுடக் கிடைப்பதை ஜன்னலின் வழியே சமயம் கிடைக்கும்போது வேடிக்கை பார்த்திருப்பேன். உ.பி,பிஹார்க்காரர்களுக்கும் என்னமோ இப்பவெல்லாம் இட்லி ஒரு தினசரி உணவாகிவிட்டது போலும். அவர்கள்தான் நிறையப்பேர் வாங்கிச்செல்கின்றனர். வண்டியில் கிடைக்கும் சாப்பாடு என்றாலும் சுத்தமாக இருக்கும்.

போனவாரம், அக்கடையைத் தாண்டிச் செல்லவேண்டியதாயிற்று. "சரி ,இட்லி எப்படித்தான் இருக்கிறது எனப் பார்ப்போமே" என நினைத்து அருகில் சென்றபோது, அவர்கள் தமிழில் பேசிக்கொண்டது காதில்விழுந்தது. "ரெண்டு இட்லி கொடுங்க" என்றேன். தட்டு கழுவிக்கொண்டிருந்த சிறுவன் சட்டென நிமிர்ந்தான். "சரி.வேலையாவட்டும். சோவாறாதல" என்ற கடைக்காரர், சட்டென சுதாரித்துக்கொண்டு, "ரெண்டு நிமிசம் ஆகும் சார். சட்னி வருது" என்றார் அடையாளம் காட்டாத தமிழில். எனக்குப் புரிந்தது -தன் ஊர் தெரியாமல் இருக்க நினைக்கிறார் என்பது. ஏன் எனப்புரியவில்லை.
ச்ட்டென்று " உங்களுக்கு எந்தூரு?" என்றேன்.
"திருநவேலி" என்றார் இயல்பாக. மீண்டும் சுதாரிக்க எத்தனித்தார். சிரித்தேன்.
" நம்மூர்க்காரக பேச்சுதான் தெளிவா தெரிஞ்சிரும்லா? எதுக்கு இப்படி மாத்துதீரு?" என்றேன்.
மனிதருக்கு முகம் மகிழ்ச்சியும் பயமும் கலந்ததாக விகசித்தது.
"இல்லேண்ணாச்சி.. அது இங்க ஆளுகளுக்குத் தெரியவேண்டாம்னு முதலாளி சொன்னாருல்லா அதான்" என்றார் தயக்கமாக.
" என்ன பயம்? 'திருநவேலிக்காரன்னா யாராச்சும் சீவிருவம் வே-'ன்னாகளா?" நான் சுவாரசியாமானேன். இட்லி கிடக்குது. பிறவு பாப்பம்.
" இதுக்கு முன்னால கடை போட்டிருந்தான்லா.. களக்காட்டுக்காரன்... எக்கச்சக்கம் கடன் வாங்கிட்டு ஓடிட்டான். எங்க தொலைஞ்சான்-னு தெரியல. அதுலேந்து நம்மூர்க்காரன்-னு தெரிஞ்சா வியாபாரம் முடங்குது. ரெண்டு ஏடு இட்டிலி போவலைன்னு வைங்க.. நேரே அது வயித்துல அடிக்கி. அதான்"
"என்னவே.. சளம்புதீரு? பீஹார்க் காரனுக்கு திருநவேலின்னா தெரியுமா, திருவனந்தபுரம்னா தெரியுமா? அவனுக்கு மதறாசி-ன்னு மட்டும்தான் சொல்லத்தெரியும். சும்மா சொல்லாதீரும்" எனச் சீண்டினேன்.
"இல்லேண்ணே. இங்கன நம்ம ஊர்க்காரங்க இருக்காகல்லா... சேலம், தருமபுரிப்பக்கம் ஆளுங்க. எவனோ **யான் ஏமாத்திட்டு ஓடிட்டான் -னு சொன்னா அதுக்கு நானா கிடைச்சேன்? எவங்கிட்ட சொல்லமுடியும்? அதான் வேண்டாம்னு"
நியாயமாகப்பட்டது எனக்கு. இருந்தாலும் மண் வாடையடிக்காமல் ஒரு திருநெல்வேலிக்காரன் பேச்சா? ஆறவில்லை.
" விடுமய்யா. நான் வரும்போது நம்ம பாசைல பேசணும் நீரு. என்னா? " என்றேன்.
"சரி: என்றார் வெட்கத்துடன். " எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றார் வெகுளியாய்.
" எந்தூரு?ன்னு கேட்டேம்லா? நீரு என்ன சொன்னீரு?" என்றேன்.
"திருநெவேலி-ன்னேன்" என்றார்.
" இந்த கேள்வி புரிஞ்சுதுன்னு வைச்சுக்கோரும்.. நீரு நம்மூரு ஆளாத்தான் இருக்கணும். எவனும் 'எந்தூரு?'-ங்க மாட்டான். 'எந்த ஊரு?' ன்னுதான் கேப்பான். நம்மூரு ஆளைத்தவிர" என்றேன்.
"ஆமா" என்றார் சிந்தனையில் ஆழ்ந்தபடி. எவன் எவனெல்லாம் இப்படி பிடிக்கப்போகிறானோ? என்ற கவலையாயிருக்கலாம்.
சரி.. நிசமாச் சொல்லும்..திருநவேலிக்கு பக்கத்துல எந்தூரு ?" என்றேன் விடப்பிடியாய்.
"வள்ளியூர்"
"வள்ளியூர் பக்கம் எந்தூரு?' என்றேன்.
மனிதர் நெளிந்தார். 'திருக்குறுங்குடி - ன்னு கேட்டிருக்கீயளா?' என்றார் தயங்கியபடி.. கிராமம் பேர் கேட்கிறானே என்ற வெட்கம் போலும்.
" வே.. என்ன அப்படி கேட்டுட்டீரு? நம்பி கோயில் இருக்குல்லா அதானே? கைசிக ஏகாதசி நடக்குமே? அதானவே?" என்றேன்.
மனிதருக்கு ஆச்சரியம் " தெரியுமா? நாங்க அந்தூர்க்காரங்கதான். அது எங்க கோயில்லா" என்றார் பெருமிதம் பொங்க.
"நல்லாவே தெரியும். மலை நம்பி கோயில் போயிருக்கிறீரா?" என்றேன்.
" எத்தன வாட்டி போயிருக்கம்? அடேங்கப்பா. என்ன அப்படி கேட்டுட்டீய? அரிசி, புளியெல்லாம் எடுத்துகிட்டு மேல ஏறுவம். காட்டாத்துல முங்கிட்டு, கூட்டாஞ்சோறு போட்டுத் திம்பம்லா?" மனிதர் அக்கால நினைவுகளூக்கு ஒரு நிமிடம் போய்விட்டார்.
சட்னி ஒரு தூக்குச் சட்டியில் வந்து விடவே, எங்கள் உரையாடல் கலைந்தது. சூடான இட்லியும், காரமான பூண்டு சற்றே அதிகமான சட்னியும்.. நெல்லை மேம்பாலத்து அடியில் ஒரு இட்லிக்கடை உண்டு அப்பவெல்லாம். பார்வதி தியேட்டரில் நைட் ஷோ படம் பார்த்துவிட்டு நடந்து வந்து , சூடான அந்த இட்லியை ஒரு கை பார்க்கும் அனுபவத்தின் வேண்டாத நினைப்பும் வந்துதொலைத்தது.
" இன்னும் சட்னி வேணும்னா கேளுங்க தயங்காம. . கேட்டியளா?" என்றார் உரிமையுடன்.
" சரிண்ணே. உங்க பாசைலேயே இனிமே பேசுங்க. பயப்படாதீங்க. என்னா?" என்றேன். சிரிப்புடன் தலையாட்டினார்.
"ராத்திரி பத்து மணி வர கடை திறந்திருப்பம். சொல்லிட்டீய-ன்னா பய வூட்டுல வந்து கொடுத்திருவான்." என்றவர் "லே, சாருக்கு சாம்பார் ஊத்தலயா இன்னும்? வெறிச்சிகிட்டிருக்கான் எங்கனெயோ.. முட்டா****தி. நீயெல்லாம் செவுடு பிஞ்சாத்தான் சரி வருவலே" என்றார் மனிதர் பயப்படாமல் தெள்ளத்தெளிவாகத் திருநெல்வேலித்தமிழில்..
சட்னி நாக்கில் மட்டுமே சுள்ளென உரைத்தது..இட்லியுடன் சுவையாக நெஞ்சுக்கருகில் இறங்கியபடி..
அந்தத் தமிழ்போலவே.

Sunday, May 07, 2006

இரு மனிதர்கள்

எனக்கு ராகுகாலம் ராத்திரியில் வந்தது என்பதை கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். கொடுமை மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ஆரம்பித்தது என்றால் போகும் வழியிலெல்லாம் தொடர்ந்தது.

ஏதோ மும்பையில் ஏறினோம்அடுத்ததாக நியூயார்க்கில் இறங்கினோம் என்றில்லாமல், இந்தமுறை " கோயில்பட்டிலே கொடை-ல்லா.. அதுனால மதுர வண்டி குறுக்குச்சாலை சுத்தி வுட்டுருக்கான். " என்பது போல, கோட்டிக்காரத்தனமாக ஒரு ரூட்டில் எனக்கு டிக்கட் கிடைத்தது. தத்தி தத்தி, நொந்து நூலாக அமெரிக்கா சென்ற கொடுமை சில மாதம் முன்பு.

மிலான் (மால்பென்ஸா) விமான நிலையத்தில் காத்திருப்பது என்பது மும்பையில் இருப்பதை விட மோசம். டாய்லெட்டுகள் முதற்கொண்டு அப்படியேவா அசுத்தமாக இருக்கவேண்டும்? வெறுத்துப்போய் விமானத்தின் போர்டிங் பாஸ் கிடைக்குமிடத்தின் அருகே சென்று பார்வையிட்டேன். அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி வழிந்திருந்தனர். சிலர் இரண்டு இருக்கைகளில் சாய்ந்து வாய் பிளந்து உறங்கியிருக்க, சில ஆந்தைகள் லாப்டாப்களில் படு சீரியஸாக மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஒரு தூணின் அடியில் சிறிது இடமிருக்கவே, தொப்பென அங்கே அமர்ந்து கண்மூடினேன். தூக்கம் அழுத்தியதென்றாலும், உறங்க முடியவில்லை. அலுப்பும் , வலியும் எரிச்சலும் மிகுந்திருந்தன. இனிமே விமானத்தில் ஆசிய சைவ உணவென்று கொடுத்தாலும் பக்கிரிமாதிரி திங்கக்கூடாது...

தேவுடா என இருந்தவன் எதிரே இருந்த தூணின் அடியில் கால் விரித்து அக்கடாவென அமர்ந்திருந்த ஒரு மனிதர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கவே, "ஹலோ" என்றேன். தூக்கம் வராம இருக்க மற்றவர்களை அறுப்பதைவிட வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அந்த மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். இரு நாட்களாக சவரம் செய்யாத தாடி -சீராகவும் முளைக்காமல், கன்னாபின்னாவென இருந்தது இன்னும் அழுக்காகக் காட்டியது.

"ஹலோ" என்றவரது கண்கள் சிவந்திருந்தன. தமிழ்க்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டபின் புன்னகையில் ஒரு அன்னியோன்னியம் இருந்தது." நான் ஆரோக்கியராஜ்" என்றார். "டோ ரெண்டோ வில் இருக்கேன். நியூயார்க் போய்விட்டு பத்து நாள் கழிஞ்சு கனடா போவேன்" என்றார்.
"சீனாவில் கொஞ்சம் வேலை. ஆர்டர் கொடுத்துவிட்டு, சியோல் வழியாகப் போகவேண்டியவன்... ஊருல சொந்தக்காரர் ஒருத்தர் சீரியஸ்..., இந்தியா போயிட்டு டிக்கட் கிடைக்காம இப்படி...." நொந்து நூலான கதை எல்லாருக்கும் பொதுதான் போலும்.
"சீனா எப்படி இருந்தது?"
எனது கேள்வியின் உட்காரணம் கடிகாரத்தில் இன்னும் இரண்டுமணிநேரம் கடத்துவதற்காக மட்டுமே. தூக்கம் இன்னும் சொக்கியது.
"இருக்குங்க ..எல்லாம் நம்ம ஊரு மாதிரிதான்"
ஆச்சரியமானேன். நம்மவூர் மாதிரி என்று கேட்டது புதியதாக இருந்தது.
"நம்மூர் மாதிரின்னா?"
"ம்.. எங்கப்பா சொல்லுவாரு." சொந்த ஊர் தாண்டிட்டா எல்லா ஊரும் பரதேசந்தான்."-ன்னு அதுல சீனாவென்ன, கனடாவென்ன.. எங்க போனாலும் ஊருன்னா நம்ம ஊருதான். என்ன நான் சொல்லறது?.." "
" சீனாவும் கனடாவும் ஒண்ணாயிருமா? ஒங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காங்க-ன்னு வைச்சுக்குவம். சீனாவா , கனடாவான்னு... ரெண்டும் ஒண்ணுதான்னு சீனா போயிருவீங்களா?" சீண்டிப்பார்த்தேன்.
சிரித்தார். " எனக்கு நீங்க திருநெல்வேலியா, டொரொண்டோ வா-ன்னு கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவன். எங்க சோறுகிடைக்குதோ அதுதான்.." எத்திசைச் சோறு"ன்னு என்னமோ சொல்லுவாங்கள்லா... அதுதான் நம்ம பாலிசி" என்றவர், 'நியூயார்க்கில் என்ன வேலை சார்?' என்றார். சொன்னேன்.
" அடப்பாவமே.. இதுக்கு நீங்க நேரா பிலடெல்பியா போயிருக்கலாமே? நியூயார்க், அட்லாண்டா.. பிலடெல்பியா.. இதென்ன சுத்திவளைச்சு மூக்கைத் தொடற கதையாயிருக்கு?"
"வயித்தெரிச்சல் சார் " என்றவாறே பேச்சைத் திருப்ப முயற்சித்தேன்.
எதிரில் பேசிக்கொண்டே மெல்ல நடந்து வந்துகொண்டிருந்த மூவர் இந்தியர்கள் போல இருந்தனர்- அவர்களில் பாதிரியார் போல அங்கியணிந்திருந்த இருவர் சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருக்க, அருகில் நடந்து வந்துகொண்டிருந்தவர் அப்பேச்சில் ஈடுபடாமல் விட்டேத்தியாகப் பார்த்துக்கொண்டு வந்தார். எங்களைப்பார்த்துப் புன்னகைத்தார். :ஹலோ" என்றேன்.
" ஹலோ " எனப் புன்னகைத்தவர் குனிந்து கையை நீட்டினார். அமர்ந்திருந்தபடியே கை குலுக்குவது அவமரியாதை என நினைத்தாரோ என்னவோ, ஆரோக்கியராஜ் எழுந்து கை குலுக்கினார். அக்கடா வென இருந்த நானும் எழுந்தேன் வேறுவழியில்லாமல்.
"நான் டேனியல். ஹைதராபாத்-திலிருந்து வருகிறேன்." ( அப்படித்தான் பெயர் சொன்னார் என நினைக்கிறேன்.. சரியாக நினைவில்லை.)என்று ஆங்கிலத்தில் சொன்னவர் கொஞ்சம் தெலுங்கில் மாட்லாடிப்பார்த்தார். தமிழ் நாங்கள் என்று தெரிந்ததும் ஆங்கிலத்திற்கு மாறினார்.
ஆரோக்கியராஜ் கிறித்துவர் எனத் தெரிந்ததும் மகிழ்ந்து போனார் மனிதர். மற்ற இரு பாதிரியார்களில் கண்ணாடி அணிந்த ஒருவரைக் காட்டினார் " அவரும் நானும் ஒரு கான்பெரன்ஸூக்கு வந்திருக்கிறோம்" என்றார். ஆரோக்கியராஜ் அழைத்ததில், மூவரும் ஒரு காபி ஷாப்பை நோக்கி நடந்தோம்.
ஆரோக்கியராஜ் காபியை குடிக்க முற்படுமுன் டானியல் " ஒரு நிமிஷம்" என்றார். கண்களை மூடி ஜபித்தார். நாங்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டோ ம்.
" ஆண்டவனுக்கு முதலில் நன்றி சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் " என்றார் டானியல் ஆங்கிலத்தில்.
ஆரோக்கியராஜ் புன்னகைத்தார். " நான் ஒர் விசுவாசி. எனது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.." என்றவர் மேற்கொண்டு சொல்லத் தயங்கினார்.
" ஒரு கிறித்துவராக இருந்து கொண்டு நீங்கள் ஆனந்தமாக ஜெபிக்கவேண்டாமா? முஸ்லிம்கள் தொழுகை நேரத்தில் எங்கு இருந்தாலும் தொழத் தவறுவதில்லை. நீங்கள் என்னடாவென்றால் பிரார்த்தனை செய்யத் தயங்குகிறீர்கள். கேலியாகப் பார்ப்பார்களே என்று வெட்கம்... என்ன சார்?" என்றார் டானியல் சற்று சூடாக.
ஆரோக்கியராஜ் சிரித்தார் . " கொஞ்சம் இருங்கள். நான் இப்போ வந்துவிடுகிறேன்" என்றவாரே தனது போர்டிங் பாஸ் , பாஸ்போர்ட் இத்யாதிகளை அடுக்கிக்கொண்டு தனது விமானத்தின் நேரத்தைச் சரிபார்க்கப் போனார்.

டானியல் என்னைப் பார்த்தார். "உங்கள் பெயரென்ன சொன்னீர்கள்?" முதற்பெயரைச் சொன்னேன்.
பெயரில் எனது மதம் தெரியவில்லை போலும். " நீங்களாவது ஜெபித்திருக்கலாம்" என்றார்.
"மன்னிக்கவும். எனக்கு பிரார்த்தனை செய்யத் தோன்றும்போது செய்வேன். காபிக்கெல்லாம் ஆண்டவன் கோபித்துக்கொள்ளமாட்டான் என நினைக்கிறேன்" என்றேன். இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது.
" நீங்கள் விசுவாசிஇல்லை அல்லவா?" என்றார்
" எந்த விசுவாசத்தைச் சொல்கிறீர்கள்?" என்றேன்.காபி உதட்டைச் சுட்டது.
" பைபிளில் வருகிறது.. " கர்த்தரை நம்பாதவனுக்கு அந்தோ.."
"சார்" என்றேன் பொறுமையிழந்து. " எனக்கு பைபிள் நன்றாகவே தெரியும். ஆனால் நான் கிறித்துவனில்லை. அதனால் விசுவாசியில்லை என்று அர்த்தமில்லை. எப்படி விசுவசிக்கவேண்டுமென்றும் , கீழ்ப்படிதல் வேண்டுமென்றும் எனக்கு நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். காபியைக் குடியுங்கள்".
அவர் எழுந்துவிட்டார். எவரும் எங்களைக் கவனிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
" உட்காருங்கள்." என அமைதிப்படுத்தினேன்." என்ன நடந்து எனக் கோபப்படுகிறீர்கள்? நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே?"

"நீங்கள் கிறித்துவர் இல்லை என்றால் ஏன் பைபிள் பற்றிப் பேசுகிறீர்கள்?" என்றார். வாழ்க்கையில் முதன்முதலாக இப்படிக்கேட்கிறேன்.
" வெட்டி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை. பிரார்த்தனை செய்வதும், செய்யாதிருப்பதும் அவரவரது கடவுள் குறித்தான அறிதலும், சுதந்திரமும்.அந்த மனிதரை முதலில் கேட்டீர்கள். இப்போது நான்.. " முடிக்கவில்லை நான். மனிதர் தோளில் பையை மாட்டிக்கொண்டார். என் முகத்தருகே குனிந்தார்.
" உங்களைப்போன்ற ஆட்களுக்கு நாங்கள் சொல்லிப்பார்த்தும் பயனில்லை. நியாயத் தீர்ப்பு நாள் வரும். அன்று புரியும்." சொல்லிவிட்டு விடு விடுவென நடந்தார்.
எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.. காபியை மெல்லப் பருகினேன்.
ஆரோக்கியராஜ் மீண்டும் வந்தார். முகமெங்கும் சிரிப்பாக. " என்ன மாட்டினீர்களா?" என்றார்
"கிண்டலா?" என்றேன்." மனிதர் என்னைச் சபிக்கவில்லை அவ்வளவுதான். நியாயத்தீர்ப்பு நாளுக்கு காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்."
நடந்ததைச் சொன்னேன்.
ஆரோக்கியராஜ் சற்று மெளனமானர்.
" இவர்கள் போல சிலரால் எது தெய்வ பாதையெனவே தெரியாமல் போகிறது. நான் ஜெபிக்கிறேன். ஆனால் எல்லா ஞாயிறு தோறும் சர்ச் போவதில்லை. என் வேலை அப்படி. நான் மனிதனா என்னும் கேள்விக்கு விடை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பைபிளில் அதற்கு கிடைக்கும் அறிவுரைகள் படி நடக்கிறேன்." என்றார்
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
" எனக்குத் தெரிந்து ஏதோ எனக்குத் தோன்றியதைச் செய்கிறேன். இரு குழந்தைகளுக்கு படிக்க வசதி செய்திருக்கிறேன். அவர்களை கிறித்துவராக ஆகும்படி சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டேன். சொல்லப்போனால் நான் யாரென்றே அவர்களுக்குத் தெரியாது." தொடர்ந்தார்.
" ஆண்டவன் நமது நன்றியையல்ல , அன்பையே எதிர்பார்க்கிறான்" என்றேன்.
" எக்ஸாட்லி. கிறிஸ்து சுகமாக்கிய முடவர்களும், குருடர்களும், நோயாளிகளும் அவரிடம் நன்றி சொன்னதாக பைபிளில் இல்லை எனப் படித்திருக்கிறேன். அவர் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. நமது அன்பை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு,முரட்டுத்தனமாக மற்றவர்களை கடிவது கிறித்துவமல்ல." என்றார்.
"இதைச் சொல்லுவதால் நீயெல்லாம் கிறித்துவனா? என யாராவது கேட்டால் நான் கவலைப்படுவதில்லை." என்றவாறே காபியை அருந்தினார். அவர் முகம் இறுகியிருந்தது. இரு நிமிடம் நாங்கள் இருவரும் பேசவில்லை.

"நேரமாகிறது" என்றவாறே எழுந்தார். கைகுலுக்கியபடி பிரிந்தவரது கழுத்தில் இருந்த மெல்லிய ஜபமாலையில் வெள்ளி சிலுவை லேசாக மினுமினுத்தது.

Friday, May 05, 2006

குஜராத் வன்முறைகள்- பின்னணி

குஜராத்தில் கொதிப்பு இன்று நேற்றல்ல 1947க்கு முன்பிருந்தே இருக்கிறது. என்ன , கொஞ்சம் புகையடித்துக் கிடக்கும் சில வருடங்களுக்கு.. பின் மீண்டும் எரிமலைகள் சீறும் - இருபுறமிருந்தும்... இதில் போதாக்குறைக்கு பாகிஸ்தான் வேறு கட்ச் எல்லைப்ப் பகுதியில் ஊடுருவி ஆயுதங்களை அனுப்பி வைக்கும்.

குஜராத்தின் அமைப்பும் இக்கொந்தளிப்புக்குக் காரணம். கட்ச் பகுதியில் எல்லைப் பகுதி porous border. எத்தனைதான் கண்காணித்தாலும் ஊடுருவி வருவது எளிது. பஞ்சாப்ப் பகுதியிலோ காஷ்மீரத்த்திலோ இது போல் வெட்டைவெளி கிடையாது. ராஜஸ்தான் ,குஜராத் எல்லை பாதுகாப்பு மிக கடினம். பலூச்சிகளும், சிந்திகளும் மட்டுமல்ல; சில நாடோடி 'ரப்பாரிகளின்' காரவன்களும் (கட்ச் பகுதியில் இருந்து ராஜஸ்தான்வரை திரியும் சுதந்திரக் குடிமக்கள்) எல்லைகளில் தான்டித் திரிவர். யாரை யெனக் கண்காணிப்பது?
1400 களில் அகமதாபாத் ஒரு நகராக உருவானபின் நிகழ்ந்த அடக்குமுறைகள் , மராத்தா படையெடுப்பு, இந்து முஸ்லிம் குட்டி சமஸ்தானங்களின் அடிதடி, ஜூனகாத் மன்னர் பாகிஸ்தான் போக நினைத்தது எனப் பல வெளிப்பாடுகல் ,மிக முக்கியமாக சோமநாதபுரப் படையெடுப்புகள் மக்களை பல ஆண்டுகாலமாகவே சமய அடிப்படையில் பிரித்து வைத்திருக்கின்றன.
குஜராத் வன்முறைலளுக்கு வரலாற்றுப் பின்னணி இருப்பினும், பெருவாரியான கலவரங்கள் அண்மையில் அரசியல் சார்ந்ததாகவே நிகழ்ந்தன. பாகிஸ்தானிய ஊடுருவல்கள் அப்பட்டமாகத் தெரிந்திருப்பினும், காங்கிரஸ் அரசுகள் வாக்கு வங்கி அரசியல்லில் கண்மூடி இருந்தது. பெருமளவில் வளர்ந்த ஆயுதக் கிடங்குகள் நம்மமுடியாத இடங்களில் கண்டறியப்பட்டன. இது அகமதாபாத் 2002-இல் கொந்தளித்தபோது வெளியானது. அப்பாவி மக்கள் பலரும் ஒட்டுமொத்தமாக "பாகிஸ்தானிய உளவாளிகள்" எனக் குறிக்கப்ப்ட்டு கொல்லப்பட்டனர். நரோடா என்னும் பகுதியில் நடந்த கொடூரம் இன்னும் அகமதாபாத் நகரில் அச்சத்துடன் பேசப்படுகிறது. பெஸ்ட் பேக்கரி-க்கு சமமாக இதைச் சொல்லலாம்.

பழைய நகர்ப் பகுதிகள் புராதனக் கட்டிடங்கள், நெரிசலான சாலைகள் எனக்கொண்டு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருப்பது கண்கூடு. 'கடைகள் வீடுகள் ஒரே கட்டிடத்தில் கீழும் மேலுமக அமைந்திருப்பதும், நெரிசலான கட்டிடங்களில் மக்கள் கூட்டாக வாழ்வதும் தடுப்புக்காப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.'என்றார் எனது நண்பர். இது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் இப்படித்தான் தன் கூட்டமாகவே வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

புது நகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக்கட்டிடங்கள் வந்தபின்னும், கட்டிடங்களில் சொசைட்டிகள் தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமே வீடுகளை விற்கவும் வாங்கவும் உரிமை அளிக்கின்றன. பழைய நம்பிக்கையற்ற மனப்பாங்கு இன்னும் தொடர்கிறது. இவ்வளவு ஏன்.. இக்கட்டிடங்கள் அமைந்த தெருக்களில் இருக்கும் பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் தங்கள் சமூக மாணவர்களுக்கே முன்னுரிமை. சிறுபான்மையினர் சலுகைகள் கொண்டு அமைக்கிறார்கள் என்றால், பெரும்பான்மையினர் தங்கள் சமாஜம் டிரஸ்டு என்பதின் மூலம் கல்விச்சாலைகள் அமைக்கின்றனர். பெருமளவில் மாணவர்களிடம் வேறுபாடு காட்டப்படுவது இல்லை எனினும் இந்தப் போக்கு கவலை தருவதாகவே உள்ளது.

இவர்களது பரஸ்பர நன்பிக்கையற்ற மனபாங்கு தெரியவேண்டுமானால், ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் இந்துவாக இருந்தால் " அவங்களை நம்பவே கூடாது" என்பார். அவர் முஸ்லிமாக இருந்தால் " இவ்னக்களை நம்பவே கூடாது" என்பார். இருபாலருக்கும் எங்காவது ஒரு உள்காயம் இருக்கும் நிச்சயமாக. எவராவது அவர் குடும்பத்தில் வன்முறையில் மரித்திருப்பார். உதவ வருபவர்கள் அவரது சமூகம் சார்ந்தவராகவே பெரும்பாலும் இருக்க, பழி உணர்ச்சி தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது.

சமானிய மனிதர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதால், கூட்ட உணர்வு பெரிதாக மதிக்கப்படுகிறது. ஒரு கூட்டமாக இருந்து அடித்துப் பழிவாங்க ஒவ்வொரு மனிதனும் துடிக்க பண்டிகைகளை நோக்கிக் காத்திருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் இலக்காகின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேடும் முதலைகள் வேறு. வெறியாட்டத்திற்குக் கேட்கவேன்டுமா?

வன்முறையில் ஈடுபடுபவர்களின் சமூக , பொருளாதார்ச் சூழல் ஆராயப்படுவதில்லை. இது பல அரிய உண்மைகள வெளிக்கொணரலாம். ஒட்டுமொத்தமாக " இந்துக்கள் கொல்கிறார்கள்" என்றோ "முஸ்லிம்கள் நாட்டுத் துரோகிகள்" என்றோ சொல்வது அரசியல் ஆதாயம் தேடும் சமூக விரோதிகளே.சேரிகளில் இக்கலவரம் நிகழ்வது சேரிகள் ஆக்கிரமித்க்த நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் பேராசைக்கார பில்டர்களின் தூண்டுதல்களே பெரும்பாலும்.
கல்லெறிபவனும், அடிபடுபவனும் கொண்டுள்ள உள்தாக்கம் கவனமாக ஆராயப்படுமானால் இவற்றின் தீவிரம் குறையும்.
குறையவேண்டும் ...

Thursday, May 04, 2006

குஜராத் அனுபவம்

"பரோடா மீண்டும் எரிகிறது. ஒரு மனிதனை உயிருடன் வைத்து எரித்திருக்கிறார்கள்" செய்தி வரிகள் தொலைக்காட்சியில் சீராக ஓடிக்கொண்டிருக்க, "சே என்ன மனிதர்கள்.? நாமெல்லாம் அங்கே இருந்தப்போ இப்படியில்லையே?" என் மனைவி கேட்டாள். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு சன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். அன்றும் இப்படித்தான் இருந்தது.. மிக மெல்லிய நட்சத்திரப் படுகை.. ஆனால் அன்று கொஞ்சம் காற்று குளிராக இருந்தது மட்டும் வித்தியாசம்.

1993 ஜனவரி
பாவ்நகர் விட்டு நான் கிளம்பும்போது மணி ஐந்தாகிவிட்டிருந்தது. இன்னும் நாலு மணி நேரம் பயணம் ... அகமதாபாத் வரை. லாரிகள் போக்குவரத்து இரவு ஏழுமணிக்கு மேல் அதிகரித்து விடுமாதலால், பேருந்துகள் மெதுவாகவே செல்ல முடியும். சாலைகள் அப்போதெல்லாம் இத்தனை அகலமில்லை குஜராத்தில்.

கிடைத்த தனியார் பேருந்தில் அடித்து பிடித்து முன்னால் கிடைத்த பக்க இருக்கையில் அமர்ந்தேன். வீடியோ கோச் என்பதால் சரியாக தலைக்கு மேலே மாதுரி தீக்ஷித் "ஏக்தோ தீன்" என தேசாப் படத்தில் ஆடிக்கொண்டிருக்க நான் "விதியே" என முழித்துக்கொண்டு அக்காட்டுக் கூச்சலில் அமிழ்ந்து வந்துகொண்டிருந்தேன்.
நடு வழியில் பத்து நிமிடம் டிரைவருக்கு இலவசமாக சாப்பாடு கிடைக்கும் விடுதியில் நிறுத்தினார்கள். " தஸ் மினிட் ருக்கேகா." என எவருக்கோ வந்த வாழ்வாகச் சொல்லிவிட்டு குதித்து இறங்கிப் போனார். பீடி வெளிச்சம் மட்டும் சிவப்புப் புள்ளிகளாக அங்காங்கே தெரிந்தது.
அருகில் இருந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் " மணிநகர் பக்கம் ஒரு கோயில இடிச்சுட்டாங்களாம். அகமதாபாத்துல ஊரடங்கு உத்தரவுன்னு சொல்றாங்க." அப்பெண்மணி தலையில் கைவைத்து சீட்டின் முன் சரிந்தார். "ஹே ராம். எப்படி வீட்டுக்குப் போவோம்?"
எனக்கு பயம் வயிற்றைக் கவ்வியது. பாப்ரி மசூதி இடிப்பின்போது சூரத்தில் இருந்து மும்பைக்கு deluxe ரயிலில் பயணப்பட்டிருந்தேன். தாதர் ரயில் நிலையத்திலிருந்து கிங் சர்க்கிள் வருவதற்குள் உயிர் போய்த் திரும்பி வந்திருந்தது. இப்போது அகமதாபாத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறேன்... எங்கே போவது?
நான் தங்கியிருந்த விடுதி காலுப்பூர் ரயில் நிலையத்தின் அருகே. போகவே முடியாது.
புதிய நகரில் இருக்கும் சாட்டிலைட் பகுதியில் இருக்கும் எனது கிளை அலுவலகத்தில் தங்கலாம் என முடிவு செய்தேன். அகமதாபாத் நகர் எல்லையில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடவேண்டும்...

இறங்கியபின் தான் எனது முட்டாள்தனம் தெரிந்தது. ஒரு ஈ, காக்கா இல்லை ரோட்டில். இறங்கிய இடம் எதுஎனத் தெரிந்ததும் இன்னும் பயம் கூடியது. ஜுவாப் புரா என்னும் பகுதி. முஸ்லிம்கள் பெருவாரியான பகுதி. அதன் எல்லையில் வேஜல்பூர் என்னும் இந்துக்கள் பெருவாரியான பகுதி. இரண்டுக்கும் எல்லையில் அடிதடி பயங்கரமாக இருக்கும். அந்த ஜுவாப்புரா பகுதியில் தனியனாக நான்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.. கையில் ஒரு ப்ரீஃப்கேஸ்.. நெஞ்சில் பயம்...
"ருக்கோ. கோண்?" மெல்லியதாகக் கேட்ட அக்குரலுக்கே வியர்த்தேன். பேசவில்லை
அருகில் வந்த உருவம் தெருவிளக்கொளியில் என்னைக் கூர்மையாகப் பார்த்தது. மெலிந்த உருவம். அழுக்கு ஜிப்பா. தலையில் தொப்பி..
" எங்கே போகிறாய்?"
உடைந்த குஜராத்தியில் " வேஜல்பூர்" என்றேன். அரை நிமிடம் மெளனமாக நின்றவன் "முட்டாள்தனமாக வந்திருக்கிறாய். ஜுவாப்புரா தாண்டுவாயா? அறிவு வேணும்" என்றபடி இருமித் துப்பினான்.
"எனக்கு மும்பை போகணும் நாளைக்கு. எப்படியாவது சாட்டிலைட் போனாப்போதும் இப்போ." உளறிக்கொட்டினேன். சிறிய மொளனத்தின் பின் என்னைத்தாண்டிச் சென்றான்.
"என்னோட வா" என்றபடி முன்னால் நடந்தான்.
ஏன் அவனுடன் நடந்தேன் எப்படி அவனை நம்பினேன் என்றெல்லாம் எனக்கு இன்றும் தெரியாது. பலியாடாகவே பின் தொடர்ந்தேன்.
ஜுவாப்புராவுக்கும் வேஜல் பூருக்கும் இணைப்பாக ஒரு தார் ரோடு உண்டு. நூறு அடி வரை இருபுறமும் ஒரு புல்பூண்டு இருக்காது. திடீரென இரு பகுதிகளிலும் நெரிசலாக வீடுகள் அடர்ந்திருக்கும். அந்த வெறுமையான இடைவெளியில் எவர் நடந்தாலும் இருபுறமும் தெரியும்.. அடிக்கத் தோதாக.
"எனது கடை இது" என மூடப்பட்டிருந்த ஒரு கடையைக் காட்டினான். அருகில் நெருங்க நெருங்க நிழல்கள் தெரிந்தன. இருளில் கத்தினான் " மாரு மித்ர சே" ( எனது நண்பன் இவன்)
தயங்கிய நிழல்கள் சுவரில் தொத்திநிற்க, திரும்பி என்னைப் பார்த்தான்.
" முன்னால் போ. திரும்பிப் பார்க்காதே. அந்தப்பக்கம் யாராவது கேட்டால் பதறாமல் உன் பெயரைச் சொல். அவசரப்பட்டு ஓடாதே." சொன்னவன் ஒரு சுவருக்குப் பின் மறைய, நான் தனியாக அப்பாதையில் தொடர்ந்தேன். சுவர்க்கோழிகளின் சப்தம் மட்டும் கேட்க, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நூறு மீட்டர் தூரம் மட்டும்..

நல்லவேளை எவரும் என்னைத் தடுக்கவில்லை. வேஜல்பூரில் ஆட்டோ கிடைக்காமல், மீண்டும் நாலு கி.மீட்டர் நடந்து சாட்டிலைட் பகுதிக்குச் சென்றேன். நிறையப் பேர் என்னைப்போலவே ஆட்டோ இல்லாமல் நடந்தனர் என்பதால் பயமின்றிச் சென்றேன்.

வெகுநாட்கள் கழித்து மீண்டும் அகமதாபாத் சென்றபோது அந்தப்பகுதி வெகுவாக மாறியிருந்தது. பெரும் கட்டிடங்கள் இருபுறமும். அகலவெறுமை குறுகியிருக்கிறது.. ஆனாலும் இருக்கிறது இன்னும்..