Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம்(concluded)

விற்பனைப்பகுதியில் பணிசெய்வதால் , "போடா" எனக் கஸ்(ஷ்)டமர்கள் கழுத்தைப்பிடித்துத் தள்ளினாலும், உறுதி குலையாமல் இருக்கும் பக்குவம் எனக்கு வந்திருந்தது. எனவே இதில் நான் பின்னடையவில்லை.
பத்து நிமிடம் கழிந்து மீண்டும் தொடர்புகொண்டேன்.
" உன்னோடு ஒரு நிமிடம் நான் பேசலாமா? " என்றேன்.
மவுனம். " இதோ பார். எனக்கும் தலைக்கு மேல் வேலையிருக்கிறது. வேலையத்துப் போய் உனக்கு போன் செய்யவில்லை. உன்னோடு பேசும் நேரத்தில் எனது வாடிக்கையாளர்களிடம் பேசினால் பணம் குவியும். இருந்தும் ஏன் உனக்குப் போன் செய்கிறேன் தெரியுமா?" எனது குரலில் இருந்த அழுத்தம் அவனைச் சிறிது அயர்த்தியிருக்கவேண்டும்.
" உன்னைப் பற்றி உன் காதலி கவலைப்படுகிறாள். உன் நண்பன் கவலைப்படுகிறான். முன்னேப்பின்னே காணாத பலரும் உன் பேரில் இன்று காலையிலிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிர்ஷ்டக்காரன் டா நீ"
" என்ன அதிர்ஷ்டம் எனக்கு? எல்லாம் போயாச்சு"
" என்ன போச்சு உனக்கு? "
" உனக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி. கெட் லாஸ்ட்" கத்தினான்.
" என்ன தெரியணும்? காலேஜ் படிக்கிற பையன் என்ன போச்சுன்னு இப்படி கத்துகிறாய் எனப் புரியலை" என்றவன் தொடர்ந்தேன்.." உனக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். இது நானாக தேர்ந்து எடுத்துக்கொண்ட விருப்பம். புரிகிறதா?. "
அவன் சட்டென விசிப்பது கேட்டது. " நான் ஒரு தோல்வி. எல்லாம் நஷ்டப்பட்டுவிட்டேன். வாழ்க்கையில் இனி ஒன்றுமில்லை"
" நீ படு புத்திசாலி என உன் நண்பன் சொன்னான். மராத்தி கவிதைகள் எழுதுவியாமே? எனக்கு கவிதைகள் என்றால் பிடிக்கும்" என்றேன்.
" கவிதைகளை உடைப்பில் போடு. என்ன ப்ரயோஜனம். வேலை கிடைக்குமா?"
" கவிதை எழுதினால் வேலை கிடைக்கும் என யாராவது சொன்னார்களா? நீ கவிதை எழுதுவது உனது விருப்பம். உனது தேர்வு இல்லையா?
"ஆம் . அது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
பலதும் பேசினோம். என்ன பேசினாலும் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கையின்மை, சோர்வு இருப்பதை உணர முடிந்தது. சிறுவயதில் கிட்டிய சிறு சிறு ஏமாற்றங்கள், தவறான அனுமானங்கள் அழுத்திக்கிடப்பதை உணர்ந்தேன்.
" பெற்றோர் உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள்" என்றபோது சிரித்தான்.
" அவர்கள் வேண்டாமென்றுதானே , சோலாப்பூர் விட்டு மும்பைக் காலேஜில் படிக்கிறேன். அங்கேயே கிடைச்சது. இவங்க சங்காத்தமே வேணாம்"
அடிப்படையான காரணம் புரிந்தது. பெற்றோர் அடித்தது தன்னை தண்டிக்க அல்ல, திருத்தவே என்பது புரியாத வயதில் வாங்கிய ரணங்கள் இறுகி இன்று வெடிக்கிறது.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தேன் . அவன் தன் எண்ணச் சுழற்றலிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பணி கூடவே, மதியம் பேசுவதாக இருவரும் உடன்பட்ட பின், போனை வைத்தேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் அன்பளிப்பாக அனுப்பியிருந்த ஒரு சிறு புத்தகம் என் அலுவலகப் பையில் தட்டுப்பட்டது. வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மதியம் இவனுக்கு என்ன சொல்லுவது?
மதியம் சொன்னபடியே மீண்டும் தொடர்பு கொண்டேன். நிறையப் படித்திருந்தான்.
வாழ்வு இன்றுமட்டும் வாழ்ந்து பார்க்கலாம் என டேல் கார்னீஜ் சொன்னதைப் படித்ததாகவும் சொன்னான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என அடித்து வாதிட்டான்.
லியோ பஸ்காலியா (Leo Buscaglia) எழுதிய Personhood புத்தகம் பற்றி அவன் சொன்னதும், சட்டென எனக்கு ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.. காலையில் புரட்டிக்கொண்டிருந்த personal excellence என்னும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அனுப்பிய இலவசப் புத்தகத்தில் அவரது வார்த்தைகள்...
" நீ கவிதை ரசிப்பாயல்லவா? ஒரு நல்ல சொற்றொடர் சொல்கிறேன். எப்படியிருக்கிறது எனச் சொல்"என்றவாறே அப்புத்தகத்தில் இருந்து வாசித்தேன்.
" வாழ்வு என்பதும் , அதைச் சோதனை செய்துநோக்க வாழ்வு நேரம் என்பதும் நம்மிடம் இருக்கையில், நமக்கு வெற்றி கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகம்"
"Armed with life on our side and a lifetime to experiment, the odds are in our favor"
" Good one" என்றான்.
" வாழ்க்கை வாழ நேரம் இருக்கையில் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு ஓடுவது கவிதையா?" என்றேன்.
மீண்டும் சில நிமிடங்கள் பேசியதும், " என் பெற்றோர் வந்து பேசும்வரை எதுவும் விபரீதமாகச் செய்யமாட்டேன்" என அவனிடம் உறுதிவாங்கியபின் போனை வைத்தேன்.
பெங்களூர் , பின் மும்பையென அலுவலக அழுத்தத்தில் இதனை மறந்தே போனேன்.
சில நாட்கள் முன்பு எனது மொபைல் போனில் தெரியாத நம்பர் மீண்டும்.
" நான் தான்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். " இப்போது சோலாப்பூரில் இருக்கிறேன். பெற்றோரோடு. மகிழ்ச்சியாக என்றெல்லாம் சொல்லமாட்டேன். " வறட்டு கவுரவம்.. தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.
" அப்பாவுடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். படிப்பை அடுத்தவருடம் தொடரலாம் என இருக்கிறேன்.." எனப் பலதும் சொல்லிவந்தவன் தயங்கினான்.
" சார்.." என்றான் மரியாதையோடு " இப்போது வாழ்வும், அதற்கான நேரமும் என்னிடம் இருக்கின்றன. அனைவருக்கும் என் நன்றி" சட்டென போனை வைத்துவிட்டான்.
புன்னகையுடன் நான் மொபைலைப் பார்த்தேன். அவன் நம்பர் பதிவாயிருந்தது. வேண்டாம் . இதைத் தொடர்ந்து பழசெல்லாம் நினைவு படுத்தவேண்டாம். அவனுக்கு அவனது வாழ்வும் , அதனை அனுபவிக்கும் நேரமும் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அவன் ஜெயிக்கட்டும்.

இன்றைக்கு மட்டும் வாழ்வோம் 1

அன்று மும்பையில் வெயில் கடுமையாக இருந்தது. அலுவலகத்தை அடைந்ததும் உள்ளேயும் வெப்பம் கடுமையாக...
"நாளைக்கே பெங்களூர் வர்றேன்"என வாடிக்கையாளர் ஒருவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது. தெரியாத எண்..
மீண்டும் பத்து நிமிடத்தில் அதே நம்பர். பதட்டத்துடன் அழைத்தவரை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு நிமிடம் ஆனது. ஒருமுறை ரயிலில் பிறருக்கு உதவுவது குறித்துப் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அறிமுகமானவர். பல தொழில்முறை வல்லுநர்களின் , முறைசாராக் குழுமம் ஒன்றின் உறுப்பினர். மும்பையில் வைர வியாபரத்தில் ஈடுபட்டிருக்கும் பரம்பரை வியாபரக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்.
"இன்று ஒரு கல்லூரி மாணவனுக்கு உதவி தேவையெனத் தகவல் வந்தது. பண உதவியில்லை. ஊக்கப்படுத்தி, தெளிவாகச் சிந்திக்க வைக்கக் கோரி அவனது நண்பன் அழைத்திருந்தான்.கொஞ்சம் உதவ முடியுமா?"
நான் திகைத்தேன் " நான் என்ன செய்யமுடியும்? இதற்கென்றே படித்த மனவியல் வல்லுநர்கள் யாரையாவது அணுகுவோம். அதுதான் நல்லது"
தயங்கினார். "அதற்கு நேரமில்லை. நாம் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவன் எதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான்".
"நான் எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். கூடிய விரைவில் மனநல வல்லுநர்கள் யாராவது கிடைத்தால் அவர்களை ஈடுபடுத்துவோம். அதுவரை கொஞ்சம் தாக்குப்பிடியுங்கள்" என்றார்.
" சரி . அவன் நம்பர் கொடுங்கள்.பேசிப்பார்க்கிறேன்" நாளை பெங்களூர் போகவேண்டும் என்ற கவலை வேறு.
கொடுத்தார். "நேரில் சந்திக்க முயலவேண்டாம். பையன் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறான். யாரையும் பார்க்கத் தயாராயில்லை. அவனது நண்பனின் வீட்டில் இருக்கிறான்.பெற்றோருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். சோலாப்பூரிலிருந்து அவர்கள் நாளை வந்துவிடுவார்கள்"
தான் அவனிடம் பேசியதையும் , எதற்கும் அவன் உடன்பட மறுப்பதையும் சொன்னார்.
" போன தேர்வு முடிவுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். மனமுடைந்து போய்விட்டான். தன் காதலியிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பயமுறுத்தியிருக்கிறான்.அப்பெண் பயந்துபோய் அவனது நண்பனிடம் சொல்ல, அமுக்கமாக நண்பன் வீட்டில் கொண்டுவந்துவிட்டனர். அங்குதான் நேற்று இரவிலிருந்து இருக்கிறான்." இத்தனையும் போனிலேயே சுருக்கமாகச் சொல்லி விட்டு, நண்பர் பிற நண்பர்களுக்கு போன் போட முனைந்துவிட்டார்.

எனக்கு இது புதிது. என்னமோ எனது வாழ்க்கையில் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்ததைச் சொல்லப்போக, மனிதர் நான் அவ்வாறு இருக்கலாம் என தவறாக முடிவுக்கு வந்துவிட்டாரோ?
தயக்கத்துடனே போன் செய்தேன். அவனது நண்பன் எடுத்தான் ( அவர்களது பெயர், முகவரி இடமெல்லாம் மறைத்திருக்கிறேன்) . எனது போன் என்றதும் அவனிடம் கொடுத்தான்.
" ஹலோ, நான் உனது நண்பன்" என்றேன்.
" எனக்கு இப்படி யாரும் நண்பன் கிடையாது" பட்டென வந்தது பதில். அத்தோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் வரும்.

Saturday, August 26, 2006

மொழியும் நகரவாழ்வும்

பெங்களூர்(ரு?) ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மாறியிருக்கிறது. பாலங்கள் கட்டும்போது சாலை நெரிசல் என்றார்கள் முதலில். இப்போது பாலங்களடியில் சாலை நெரிசல். மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும்போது ,பிசினஸ் தவிர்த்து வேறெதாவது பேசுவமே என அருகிலிருந்த நண்பனிடம் பேச்சுக்கொடுத்தேன்.
"கன்னடியர்களுக்கு ஏன் தமிழர்களென்றால் இப்படி எரிச்சல்?" அவனைக் கிளப்பிவிடுவதற்காகக் கேட்ட கேள்வி இது.
"தமிழர்களை விடுங்கள். இந்திக்காரர்கள் மேல்தான் இப்போ கோபமெல்லாம்" என்றார் நண்பர். 100% கன்னடியர். பெங்களூர் வாசி - பிறந்ததுமுதல்.
எனக்குப் புரியவில்லை. அவர்களும் திருவள்ளுவர் சிலை மாதிரி வால்மீகி , வியாசர் என விதான்சௌதா முன்னே சிலை வைக்க வந்தார்களோ?
"கன்னடமொழியினை அவர்கள் கிண்டல் செய்து அவமதிப்பது பெரும் கோபத்தைக் கிளறுகிறது. ஒருத்தன் கூட கன்னட மொழி பேச முயற்சிப்பது கூடக் கிடையாது. தமிழர்கள் சரளமாகக் கன்னடம் பேசுவதும், நாங்கள் தமிழ் பேசுவதும் இங்கு சகஜம்"
ஆக, மொழிக்கு மரியாதைதான் இங்கே பிரச்சனை.. கேட்டேன்.
" அவர்களுக்கு கன்னடத்தின் அருமை புரிவதில்லை. எட்டு ஞானபீட விருதுகள் பெற்ற இலக்கியம் எங்களது. கன்னட இலக்கியம் புராண கால, நவீன கால இலக்கியம் இரண்டிலும் சிறந்தது". ஞானபீடம் என்றால் அரசியல் உண்டு இல்லையோ? அதுக்கும் இந்திக்கார வெறுப்புக்கும் என்ன தொடர்பு?
"யக்ஷகானம் புரிவதில்லை என்பது வேறு, 'அது என்னடா, தலைல இம்மாம்பெரிய கொண்டை வைச்சு ராத்திரி பூரா ஆடறான்?' என கிண்டலடிப்பது வேறு இல்லையா?" என்றான் நண்பன். கொதித்துப் போயிருந்தான்.
"பெங்களூரில் யக்ஷகானம் எங்க நடக்கிறது? எனக்குப் பார்க்கணும் என்று ரொம்பநாளா ஆசை" உண்மையைச் சொன்னேன். மும்பையில் கர்நாடக சபாவின் ஆதரவில் எப்பவாவது நடக்கும். எங்கே, எப்போ எனத் தெரிவதற்குள் முடிந்தும் போஇவிடும்.
நண்பன் தடுமாறினான். "நல்ல யக்ஷ கானம் பார்க்கணும் என்றால் மங்களூர் போகணும். அங்குதான் எல்லாம் காக்கப்படுகிறது. பெங்களூர் ஒரு பம்மாத்து. பிட்ஸாவும், பீரும், மினிஸ்கர்ட்டும் தான் இங்கே"
"இந்த விஷயத்தில் சென்னை பரவாயிலை" தொடர்ந்தான்.
"இசைக்கட்சேரி சீசன் என ஒன்று இருக்கு. இந்த அளவுக்கு பெங்களூர் மாதிரி தறிகெட்டுப் போகலை"
"அது உன் அனுமானம் " என்றேன்.
"தமிழ் கலாச்சாரம் என்மமோ பூம்புகார் கடையிலும், போத்தி பட்டுச் சேலையிலும் என இப்போதெல்லாம் வெள்ளைக்காரன் கூட நினைப்பதில்லை"
"தமிழ் இலக்கியம் குறித்து சராசரி கன்னடியருக்கு என்ன தெரியும் ? " என்றேன்.
"ம்... திருவள்ளுவர், பாரதி அப்புறம்..." யோசித்தான்.
" தமிழ் நாடகம் பற்றி ஏதாவது இங்கு பேச்சு உண்டா?"
" இருக்கலாம். தெரியாது" என ஒப்புக்கொண்டான்.
" கே.வி சுப்பண்ணா தெரிந்த தமிழர்களும் இருக்கிறார்கள். " என நான் சொன்னபோது வியந்து போனான்.
" சுப்பண்ணா மரணம் குறித்து எத்தனை கன்னட வலைப்பூக்கள் எழுதின தெரியுமா? இருபது கூடத் தேறாது" என்றேன். சிறிது மௌனம்..
"இப்போதைய கன்னடிய குடும்பங்கள் , குறிப்பாக பெங்களூரில் இருப்பவர்கள் குழந்தைகளுக்குக் கன்னடம் சொல்லிக்கொடுப்பதில்லை. பெங்களூரில், பெரும்பாலான கன்னட குழந்தைகளுக்கு கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது."என்றான்
"கன்னடியர்களே இன்னும் மரியாதை கொடுக்கவில்லை என நீங்கள் சொல்லுகிறீர்கள். இந்திக்காரன் கன்னடம் குறித்துத் தெரிந்திருக்கவேண்டும் என நினைப்பது விடுத்து, கன்னடத்தை கன்னடியர்கள் அறிந்திருக்கச் செய்வது முதல் வேலை இல்லையா? என்றேன்.
சிறிது யோசித்தபின் கேட்டான்" தமிழின் நிலை எப்படி?"
நான் பதில் சொல்லாமல் வெளியே வெறித்தேன்.
பெங்களூர் மீண்டும் ஒரு மாலை மழைக்குத் தயாராகி இருந்தது.
முழுதும் இருட்டுமுன் போய்ச்சேரவேண்டும்.

Friday, August 25, 2006

"பயங்கர"ப் பயணங்கள்

ஆம்ஸ்டர்டாம் விமானநிலயத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த "பயங்கரவாதிகள்"ஐ அப்பாவிப் பயணிகள் தான் என நெதர்லாந்து அடையாளம் காண இரண்டு நாட்களாயிருக்கிறது.. என்னத்தைச் சொல்ல?
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"என தாடி வைத்து, ஆசிய நிறத்தில், நீள அங்கி அணிந்திருக்கும் எவருமே தீவிரவாதி என நினைக்கும் மேலை நாடுகள் கொஞ்சம் புத்தி தெளியவேண்டும். யாராச்சும் அவர்களுக்கு வேப்பிலை அடித்தால் நல்லது. இது சமூக அளவில் வெறுப்பையே ஏற்படுத்தும் என்பதை "பாதுகாப்பு கருதி" யாவது மேல்நாடுகள் உணர்வது அவசியம்.

சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமிலும் பாரீஸ் விமானதளத்திலும் ஆசியர்களை "ஒரு மாதிரியாக"ப் பார்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். துருக்கிக்கு மேல் பறந்துகொண்டிருந்த எங்களது ஏர்பிரான்ஸ் விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக பாரீஸ் திரும்பியது தொடர்ந்து மறுநாள் மீண்டும் மும்பை வந்து இறங்கியது வரை விமானத்தில் இருந்தவர்கள் பட்ட இடர்கள் .... ஒரு பதிவாகவே போடலாம் என இருக்கிக்றேன். இதே விமானம் நியூ யார்க் அல்லது சிகாகோ செல்வதாக இருந்திருந்தால் நிலையே வேறு.

இந்த சந்தேகப் போக்கு கண்டிக்கப்படவேண்டியதுதான் என்றாலும் சில குறைகளை நாமும் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே அயல்நாட்டுப் பயணத்தில் கண்டிருக்கிறேன்.. இந்தியர்கள் ஒழுங்கு கடைப் பிடிப்பதில்லை.
"இருக்கைப் பட்டை அணியுங்கள்" என்றால் "தெரியும்வே" என்னும் அலட்சியம். "நான் அடிக்கடிப் பறப்பவனாக்கும். எனக்கு இதெல்லாம் சாதாரணம்" என்பதுபோல் காட்டிக்கொள்ளும் அல்பத்தனம்.
"விமானம் நிற்குமுன் மொபைல் போன் உபயோகிக்காதே" என்றால் அப்போதுதான் " அலோ" எனக் கத்தி டெல்லி மாமா, சண்டிகார் சாச்சா-வெல்லாரையும் அழைப்பார்கள். அதுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கப் போகிறோமே, அதுக்குள்ள என்ன ஆயிரம் போன்கால் ? ஒரு மர மண்டைக்கும் இது புரியாது.

ஏற்கெனவே ஆயிரம் பாதுகாப்பு கெடுபிடிகள். அது மீறி இப்ப்படி நடந்துகொள்வது எந்த முறையில் நியாயப்படுத்த முடியும்?
அயல்நாடு போகும் விமானங்களில் "குடி மகன்"களின் தொல்லை இன்னும் மோசம். "ஓசியில கிடைச்சா ஆசிட் கூடக் குடிப்பான்" என மலையாளத்தில் சொல்வார்கள். அதுமாதிரி, ஓசில குடிக்கக் கிடைச்சதும், நம்ம ஆளுங்க வர்ற வரத்து... குடிச்சு வாந்தி வைச்சு, அலம்பு பண்ணி... " சே"ன்னு போயிரும்.
இதெல்லாம் இருப்பதால் ஆம்ஸ்டர்டாம் நிகழ்ச்சியை நான் நியாயப்படுத்தவில்லை. இந்த ஒழுங்கீனம், அலட்சியம் இருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. இதுதான் ஆம்ஸ்டெர்டாமிலும் நடந்திருக்கிறது.
இனியாச்சும் நம்மவர்கள் ஒழுங்கு என்பதைக் கடைப்பிடிப்பார்களா?

சார் போஸ்ட்..

"உங்களுக்கு யாரோ கடிதம் எழுதியிருக்காங்க" என்ற மனைவியின் குரலில் இருந்த ஆச்சரியம் என்னையும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக கடனட்டை அறிக்கைகள், ரீரடஸ் டைஜஸ்ட் கொட்டையெழுத்துக்களில் அனுப்பும் வருடாந்திர மார்க்கெட்டிங் வீண்செலவுகள் எனவே எனது தபால்கள் வருவதுண்டு. இல்லாவிட்டால் உறையின் ஓரங்களில் மஞ்சள் தடவிய திருமன அழைப்புகள், வெகு தொலைதூரச் சொந்தக்காரரது வீட்டின் பூப்புனித நீராட்டுவிழாக்களின் அழைப்புகள் ( எவன் மும்பையிலிருந்து வேலை மெனக்கெட்டு இதுக்கெல்லாம் போகிறான் என இன்னும் புரியவில்லை) எனவே இருக்கும். பெரும்பாலும், பார்த்த சில நொடிகளில் குப்பைகளில் சேர்ந்துவிடும்.
இந்த கடிதம் சிறிது வேறுபட்டது. பொறுமையாகக் கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டு , ஐந்து ரூபாய் தபால்தலை மிக ஒழுங்கக நேராக ஒட்டப்பட்டு மிகக் கவனமாக அஞ்சல் செய்யப்பட்டது. அதனாலேயே கொஞ்சம் மதிப்புடனேயே உறையைப் பிரித்தேன்.

நான் இதுவரை பரியச்சப்படாத திரு.ச்ரீனிவாசன் என்னும் முதியவரிடம் இருந்து வந்த அஞ்சல். நடுங்கும் கையெழுத்தில் பழையகால நாகரீக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எனது தூரத்துச் சொந்தம் எனினும் , அவர் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பது மட்டுமே எனக்கு இதுவரை தெரியும். புழக்கத்தில் இருந்து, மீண்டும் அச்சடிக்கப்படாது புதைந்து போன ஒரு வைணவ சமயப் புத்தகத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவரது கடிதம் பல பரிமாணங்களையும் தொட்டிருந்தது 1944களில் இருந்த மும்பை, மகாராஷ்டிர சிறுநகர வாழ்வு, அவரது நண்பர்கள் எனப் பலதரப்பட்டவை குமிழ்ந்திருந்தன. இந்த வயதிலும் எழுத முயல்வது மட்டுமல்ல, அந்தக் கடிதம் அனுப்பும் முறை குறித்து அவர் எடுத்திருந்த கவனம் என்னை மிகவும் கவர்ந்தது.
"எவனுக்க்குவே இதுக்கெல்லாம் நேரம் இருக்கு?" என ஒருமுறை பின்கோடு எழுதாது நான் ஒரு அஞ்சல் செய முயன்றபோது தடுத்த எந்தந்தை மீது சீறியது நினைவுக்கு வந்தது. " எவனுக்கு நஷ்டம்? உனக்கு உன் தபால் ஒழுங்காப் போய்சேரணும்னு ஆத்திரம் இருந்தா , ஒழுங்காச் செய்வே" என அவர் இடித்ததும் வெறுப்போடு பின்கோடு தேடி எழுதினேன். "எப்படி போஸ்ட் பண்ணினாலும் பத்துநாளாவும்.. இதுல பின்கோடு ஒண்ணுதான் குறையாக்கும்" என முணுமுணுத்துக்கொண்டே போஸ்ட் செய்தேன். இரண்டே நாளில் கடிதம் சென்னை போனது. கூரியர் ஒருநாள் முந்திப் போயிருக்கும் அவ்வளவுதான்.
மின்னஞ்சல் வந்ததும் கடிதம் எழுதுவது வெகுவாகக் குறைந்து போனது. "அலோ, இன்னிக்கு என்ன குழம்பு?" என எஸ்.டி.டி. போட்டுப் பேசும் தெனாவெட்டும், வசதியும் வந்ததும் சுத்தமாக எழுதுவது நின்றே போய்விட்டது. "பேசற மாதிரி வருமா?" என்னும் சால்ஜாப்பு வேறு.

ஒரு குறுகுறுப்பில் அவருக்கு பதில் எழுத முனைந்தேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.... எப்படி தொடங்குவது என்பதே மறந்து போய் விட்டது. "அன்புள்ள?" " மதிப்பிற்குறிய?" " உபய குசலோபரி?" "அடியேன் தெண்டம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம்?"
பேனாவை மூடி வைத்தேன். கணணி முன் அம்ர்ந்தேன்.
" கையால் எழுதாதற்கு மன்னிக்க்கவும். என் தமிழ்க் கையெழுத்து எனக்கே புரியவில்லை" என ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்பதுடன் தொடங்கினேன். பிரிண்ட் எடுத்து கூரியரில் அனுப்பினேன் - குற்ற உணர்வோடு.

ஒரு வாரம் கழிந்தது. என் நண்பன் முத்துக் குமரன் டெல்லியிலிருந்து போன் செய்தான். " என்னடே, திடீர்னு தபால் எழுதியிருக்க? ஒரே ஆச்சரியம் என்வீட்டுல.. உனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி இல்லையோடே?"
"ஏல, தபால் வந்தா நல்லாயிருக்கா இல்லியா? " இடைவெட்டினேன்
" சந்தோசமாயிருக்குடே. அதுவும் வேலை மெனக்கெட்டு எனக்குன்னு கைப்பட எழுதிருக்க பாரு. அதுவே சந்தோசம். அதான்டே போன் பண்ணினேன்" அவனது உற்சாகம் என் நெஞ்சில் நிறைந்தது.
சிறிது தயங்கினான் " எங்கய்யாவுக்கு இன்னிக்கு லெட்டெர் தமிழ்ல்ல எழுதிப் போட்டிருக்கேன். நம்ப மாட்டடே மக்கா.. எப்படி எழுதணுனே மறந்து போச்சி. என்னமோ கோழி கிண்டினாப்போல கிறுக்கிப்போட்டு.... காலேஜ்ல எழுதினது அதுக்கு அப்புறம் இப்பத்தான்...வெக்கமாயிருக்குல."
ரோஜாக்கள் கொடுக்கும் கையிலும் மணம் வீசும்.. மலர்களின் வாசனை கைகள் மாறுவதில் சிறக்கிறது.
இன்னும் எழுதணும்.. போஸ்ட் ஆபீஸ் உங்க ஏரியால எங்கயிருக்கு?