Saturday, January 24, 2015

உப்புமா டிப்ளமஸி

ஆறு மணி. மங்கை இன்னும் எழுந்திருக்கவில்லை. ஃபில்ட்டரில் டிகாக்ஷன் இறக்கி , ஜம்மென்று ஒரு காபியோடு இன்றைய டி.என்.ஏயில் அரைகுறை உடையில் அலியா பட் பார்த்துக் கொண்டிருக்கும்போது , மங்கை தீனஸ்வரத்தில் கூப்பிடுவது போலிருந்தது. மகன் அபி, அவளிடம் குனிந்து கேட்டுவிட்டு விரைந்து வந்தான்.
“அம்மாவுக்கு தலைவலியாம். காலேலைக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு கவலைப்படாதீங்க. நீங்க வேணா , உங்களுக்கு மட்டும்னு எதாவது பண்ணிக்கோங்கப்பா, நான் மாகீ பண்ணிக்கறேன்”
அவனது இந்த அனுசரணையான வார்த்தைகளுக்குப் பின்னே ஒரு அனுபவம் அடங்கியிருக்கிறது, நான் அறிவேன்.
“வேணாம்டா. நான், ரெண்டு பேருக்குமா ஓட்ஸ் கஞ்சி போட்டுடறேன். உனக்கு உப்பா, ஜீனியா?”
அவன் முகம் பீதியில் வெளிறியது. இது கூட்டுத் தற்கொலை.
ஓட்ஸ் என்றாலே ஒரு காத தூரம் ஓடுவான். இதுல நான் வேற கஞ்சி போட்டு...
“வேணாம்ப்பா. க்ளாஸிக் ரெஸ்டாரண்ட் திறந்திருப்பான். ரெண்டு ப்ளேட் இட்லி..போன் நம்பர்.” எல்லாம் முன்னெச்செரிக்கையாத்தான் இந்த காலத்துப் பிள்ளைகள் இருக்கறதுகள்.
”வேணாம். சட்னி ரொம்ப உரைக்கும். நான் வேற எதாவது பண்றேன்”
‘சரி’ என்றான் வேகமாக. ஓட்ஸ் கஞ்சி என்ற சித்ரவதைக்கு , இவன் பண்ற எதுவும் கிலெட்டின் போல வேகமாக இறங்கும்.
இட்லி மாவு இருந்தால் வேக வைக்கலாம். இன்று பார்த்து இட்லி மாவும் இல்லை.
ரைட்டு. நாமே இன்று நமது சமையல் போருக்கு களப்பலி.
பையன் மெதுவாக சமையலறையில் எட்டிப் பார்த்தான்.”மே ஐ ஹெல்ப் யூ? என்றான். விஷக் கலவை என்ன ஃபார்முலேஷன் என்று பார்க்க விரும்பினான் போலும்.
“உப்புமா! ” என்றேன்.
“ஓ. அது எதுல பண்ணுவாங்க. ரைஸ்?!” என்னை மாதிரியே இருக்கானே?
“ரவை வேணும். ப்ரிஜ்ஜுக்குள்ள இருக்கா பாரு.” அவன் ப்ரிஜ்ஜை நோண்ட, நான் அலமாரிகளைத் திறந்து தேடினேன்.
கம்பு மாவு, கேழ்வரகு மாவு என்று கையில் கிடைதததையெல்லாம் வெளியே எடுத்து வைத்தேன். எல்லாப் பாக்கெட்டுகளூம் ரப்பர்பேண்ட் போடப்பட்டு நடுவே நசுங்கி, இருபுறமும் விரை வீக்கம் வந்தது போல் வீங்கியிருந்தன.
”ரவை ! கிடைச்சாச்சு. என்ன செய்யணும்?”
“அங்க வைச்சிருக்கேன் பாரு, எல்லா மாவும்.. அது பக்கத்துல வை. எல்லாத்தையும் ஒரே வரிசைல வை, பார்ப்போம்”
“அப்பா, இன்னொரு மாவு பாக்கெட் , அலமாரி மேல இருக்கு. என்னன்னு தெரியலை”
“சரி எடு. என்ன எழுதியிருக்கு, படி” . மாவுகளை எடுத்து ஒரு வாணலியில் வறுக்கத் தொடங்கினேன்.
“தமிழ்ல எழுதியிருக்கு.. க..ர...னா...ம் போ....ட்..டீ”
“டேய். எத்தன வருஷமா தமிழ் வார்த்தை படிக்கறே. டி.வி சேனல்ல பாடறவங்க பேரு மட்டும் மடமடன்னு வாசிக்கத் தெரியுது? ஒழுங்காப்படி”
அந்த பாக்கெட்டிலிர்ந்து எடுத்த மாவை போட்டு வைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டே அவனைத் திட்டினேன். இதையும் ராகி, பாஜ்ரா, ரவை மாவுகளோடு சேர்த்துவிட்டால், ஒரு சத்து மாவு உப்புமா ரெடி.
“ஹோல்டான், டாட். அது.. கோனப் போடி”
“மை காட்” அதிர்ந்து போனேன். “ டேய். அது கோலப்பொடி. அத யார்டா வெளிய மாவு பக்கமா வைச்சது?” யாத்தீ, ஒரு நிமிசம் தாமதமாயிருந்தா, அதுவும் என் புது வகை உப்புமாவில் சேர்ந்திருக்கும்.
”மேல இருந்தது. நீங்கதான சொன்னீங்க, எல்லா மாவையும் எடுன்னு”
ரைட்டு. பேசப்படாது இனிமே.
வாணலியில் எண்ணெய் புகை வர அஞ்சறைப் பெட்டியில் கையில் கிடைத்ததையெல்லாம் எறிந்தேன். கட முடாவென்று சப்தத்தோடு, எக்ஸாஸ்ட் ஹூடில் புகை மயம்.
எக்ஸாஸ்ட் ஹூட் ஃபேனின் வேகத்தைக் கூட்டினேன். எளவு, புகை போவேனா என்கிறது. எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தேன். நல்லவேளை, படுக்கையறையின் கதவை மூடியிருக்கிறேன். மங்கை எழுந்து கொண்டு திட்ட மாட்டாள்.
பொடி மிக்ஸைப் போட்டு, தண்ணீர் ஊற்றினால்...
இறுகிக்கொண்டு, ரைட்டு உப்புமா இப்படித்தான் வரும்.
நரகத்தில் க்ளக் க்ளக் என்று அங்குமிங்கும் எரிமலைக் குழம்பு கொதிப்பது போல, அங்குமிங்கும் குமிழித்து வெடித்தது. கலக்கக் கலக்க இறுகிக்கொண்டு கோந்து மாதிரி..
மூடி வைத்து விட்டேன்.
மங்கை எழுந்து வந்துவிட்டாள். “என்ன கலாட்டா.அப்பாவும் பையனும்? கத்தாம, ஒரு பாத்திரத்தை உருட்டாம இருக்க முடியாதா? தலைவலி பிளக்கறது”
பையன் ஒரு ப்ளேட்டில் அந்த கோந்து போன்றிருந்த , கருஞ்சிவப்பு பேஸ்ட்டை கரண்டியில் எடுக்கத் திணறினான். உதறினாலும் கரண்டியில் உயிரோடு கலந்த உறவாக ஒட்டிக்கொண்டிருக்கிறது சனியன்.
ஒருமாதிரியாக அதை தட்டில் போட்டுக்கொண்டு ஒரு வாய் போட்டிருப்பான்.
“என்னடா, ஒரு மாதிரி பாக்கறே? நன்னாயில்லையா?”- என் மனைவி.
“நல்லா இல்லையாடா?”- நான்.
அவன் இருவரையும் மாறி மாறிப்பார்த்தான். உண்மையா, அப்பாவின் மானமா?
“இன்னும் நல்லாயிருந்திருந்தா, சூப்பர் செஃப் அப்பா நீங்க”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நல்லாயிருக்கா இல்லையா? யெஸ் ஆர் நோ?”
அவன் சற்றே மவுனித்தான்.. “ பரவாயில்ல. இன்னும் உப்பு இருந்திருந்தா, இன்னும் வெந்திருந்தா, இன்னும் மிளகாய் கம்மியா போட்டிருந்தா, இன்னும் நல்லாயிருந்திருக்கும்”
மங்கை அந்தப் பக்கம் போனதும் அவனிடம் சொன்னேன்,
“வாழ்த்துக்கள்.மகனே, நீ திருமணமாவதற்கு தகுதி பெற்றுவிட்டாய்”

Saturday, January 17, 2015

மகாபாரதம் - பல்லாண் மணமும், புணர்வும்

பலர் எழுதும் பதிவுகளைப் பார்க்கின்றேன். பாஞ்சாலியையும் சத்யவதியையும் இப்போதைய ப்ரச்சனைக்கு முன் உதாரணமாக வைக்கிறார்கள்.

பல்லாண் புணர்வு ( polykoity) என்பதற்கும் பல்லாண் மணம் ( polyandry) என்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. புணர்வு, மகப்பேறு என்பது மட்டுமே குறிக்கோளல்ல மணம் என்பதற்கு. இது  பல சமூகங்களிலும் இருந்திருக்கிறது. சமீபத்தில் 19050கள் வரை ஒரு பெருந்தட்ட சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது.

சத்யவதி , விசித்ரவீர்யனுக்குப் பிள்ளைகள் இல்லாதபோது, பீஷ்மனை அழைத்துத் தனக்கு வியாஸன், திருமணத்திற்கு முன்பே பராசரரால் பிறந்ததைச் சொல்கிறாள். மீனவ்ப்பெண்ணான சத்யவதியின் மகன் வியாஸன், தவசியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு, அவரை அழைத்து வந்து, அவரது தம்பியான விசித்ரவீர்யனுக்கு பிள்ளைகள் பிறக்க வைக்க பீஷ்மரிடம் சொல்கிறாள். பீஷ்மர் ஆமோதித்து, வியாசரை அழைக்கிறார்.
ஒரு பெண் கடவுளருக்கும், மனிதருக்குமாக மணம் செய்யவிக்கப் படுகிறாள் என்பது அடித்தளத்தில் இருக்கும் தத்துவம். அப்படி பங்கு போடும் அண்ணன் தம்பிகளை தேவர்கள் -கடவுளர்கள் என்னும் வகையில் , (இன்றும் மைத்துனர்களை தேவர்கள்  என்றே வட இந்தியாவில் அழைக்கிறார்கள்.)
சத்யவதி, வியாசரிடம் சொல்கிறாள் “ எப்படி பீஷ்மர் , விசித்ரவீர்யனுக்கு தந்தை வழி அண்ணனோ, அது போல நீயும் அவனுக்கு தாய் வழியில் அண்ணன். எனவே நீ இந்த வம்ஸத்தை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளாய்”

Yathaiva pitro bhishmasthtathaa tvamapi matraha
bhrata vichitraveeryasya va putra manyase

Mahabaratham I, 99, 20ff. Verse 30  ( courtesy Polyandry in Ancient India - Sarva Daman Singh).
இது குடும்பத்தில் மட்டுமே நிகழ்ந்த பல்லாண் புணர்வு, குரு பரம்பரையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
பாஞ்சாலியின் மணம் இதுபோன்று அண்ணன் தம்பியரால் ஒரு குடும்பத்தில் நடந்த பல்லாண் மணம்.

பல்லாண் புணர்வு என்பது வேறு.  நியோகத்தின் மூலம் பிறந்த கர்ணனே , நெறிகெட்ட பல்லாண் புணர்வை எதிர்க்கிறான்.

பலரும் ஆதாரம் காட்டும் அதே மகாபாரதத்தில் கர்ணன் சிந்துதேசத்திற்கு மேற்பட்ட தேசத்து மன்னனான சால்யனை  இழித்துப் பேசுகிறான் ” உங்கள் நாட்டில், தகப்பன், மகன், அண்ணன் , தம்பி , உற்றான் உறவினன், அந்நியன் என்று பாகுபாடில்லாமல்  பெண்கள் பலரையும் புணர்ந்து திரியும் அற்பர்கள். அளவின்றி மது அருந்தி, இறைச்சி உண்டு, கிறக்கத்தில் , காமத்தில் கிளுகிளுத்து, மிருகங்கள் போல் புணர்ந்து திரியும்  நாட்டினரின் மகன், ஒரு மத்ரிகன், நீயா நீதி பற்றிப் பேசத் தகுந்தவன்?”

//Pita mata ca putrascha svas rus asruamatulah
Jamata dhuhita brata napita te te ca banhavah
vayasyabhyagatas canye dasi dasam ca samgatam
punbhirvimisra naryascha jnatajnatah svaechchaya//
மஹா பாரதம்  VII, 27,75-78. ( courtesy Polyandry in Ancient India Page 79)

அட  ,எனக்குக் கூட சம்ஸ்க்ருதம் வருதே?

அதே மகாபாரதம். அதே ஹீரோக்கள், ஹீரோயின்கள். இடம், காலம், சமூகம் மாற்றம். எத்தனை வேறுபாடுகள்? அவரவர் சமூக, குழு நெறிப்படி, கொண்டொழுகும் நெறிப்படி ( ஆபஸ்தம்பர், மனு வேறு வேறு முறையில் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) தங்கள் வாழ்வில் நடந்திருக்கிறார்கள்.

திருச்செங்கோட்டில் நடந்ததாக சித்திகரிக்கப்பட்ட  விசயம் இந்த ரெண்டிலும் உட்பட்டதல்ல.

மகாபாரதம் படி என்று சொல்பவர்கள், முதலில் பாரதம் படிக்கட்டும். பின் பேசட்டும்.

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிதல்... நல்ல பழக்கமல்ல.நம் மீதே கண்ணாடி விழும். காயம் படும்.

Monday, January 12, 2015

ராமாயண கதை கேட்ட கதை.


எங்கே படித்தேன் என்று நினைவில்லை. பொது நூலகத்தில் கால் வலிக்க புத்தகம் மேய்ந்த்தில், ஒரு மூலையில் நின்றவாறே, ஒரு முட்டியை மடித்து சுவற்றில் உள் பாதம் பதித்து நின்று படித்த்தாக இருக்கலாம். பல முறை , சுவற்றில் கால் தட அழுக்கு படிந்த்தாக , லைப்ர்ரியனிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
ஆனால் வாக்குகள் சிறுவயதில் பட்டென மனதில் பதிந்து போனதுண்மை.  வால்மீகி ராமாயணம், நடேச சாஸ்திரிகள்” என்று பார்த்த மாத்திரத்தில் உடனே தடி தடியாக அனைத்து தொகுதிகளையும் வாங்கி கட்டு கட்டாக பையில் வைத்த்தன்பின்னே அந்த காரணமும் தொக்கி நின்றது.
“ மூதியளா, வீட்டுள்ளாற ஓடாதீயலே. “ காளியப்பனின் அம்மா நான்காவது முறையாக்க் கத்தியபோது, குரல் கீச்சென்றாகி பிசிறடித்த்து. கோபம் தலைக்கேறும்போது குரல் ஆளுமை போகும். பின்னே அவரும் எத்தனை தடவைதான் எங்களுக்குச் சொல்வார்? வீட்டுக்குள்ளே கல்லா மண்ணா? விளையாடியதில், ஆட்டுக்கல் மேலேறி நின்று அவன் ஒரு தடவை அடிவாங்கியாகி விட்ட்து. கள்ளன் போலீஸ்ஸில் அவன் தங்கை , பாய்ந்து ஓடியதில், தொங்க விட்டிருந்த முட்டைக் கூடையில் தலை இடித்து , முட்டை ரெண்டு சிதறி.. அதை கழுவி விட்டு நிமிர்ந்தால், இப்போ நான் சகதியோடு ஜோராக முன்கட்டு அறையில் பாதம் பதித்திருக்கிறேன். அவளும் மனுஷிதானே?
“ஏலே, காளி, இங்கிட்டு வாடா ராசா. ஓடாத, ஓடாத” சுப்பம்மா கிழவி பேசியதாக நினைத்து நடுங்கிய குரலில் ஏதோ சொன்னாள். புரிந்து கொண்டு நானும் அவனும் அவள் அருகில் செல்ல, மெல்ல நடுங்கும் கையால் இருவரையும் தொட்டாள்.
“இந்தாரு, செல்லம்லா ராசா.. அவ என்னதாஞ்செய்வா? அங்? வெளிய போயி வெள்ளாடு..இல்லாட்டி இங்கன அடங்கி இரி… என்ன? டே, ஒம்பேரென்னா சொன்ன? சுவா?”
“சுதாகர், பாட்டி”
“என்ன பேரோ. வீட்டுல தாத்தா பேரு விடலையாங்கும்? ஒங்க சாதி பேருல்லயேடே.. திருமலை, தெய்வநாயவம்.. அதெல்லாம் விட்டுட்டு எங்கேந்து இப்படி செத்த பேரு வச்சாவ? சுவா.. என்னலே சொன்ன? சுவா.. பெறவு என்னா?”
“சுதாகர் பாட்டி” பொறுமையாக மீண்டும் சொன்னேன். இது இரண்டாவது நாளுள் ஆறாவது தடவையாக நடக்கும் உரையாடல். பாட்டிக்கு என் பெயர் மறந்து போகும். முக்குக் கடையில் புகையிலை, வெத்தலை, பாக்கு, மூணாவது என்று வாங்கி வரச்சொல்லும் போதும் பேரில் தடுமாறுவாள்.
“காளி, லே ராசா. இங்கன அடங்கியிரி. என்னா? ஒனக்கொரு கத சொல்லுதேன். “
“பாட்டி , எனக்கு கத?”
“ஒனக்கும் உண்டும்லே. நீ இங்கன இரி. “ கிளவி மெலிந்த கால்களை நீட்டினாள்.
“யாத்தா. உசிரே போனாப்புல வலிக்கே. லே, ரெண்டுபேரும் பாட்டிக்கு முட்டிலேர்ந்து கீழ வரை பிடிச்சு விடுதீயளா?  அங்.. அங்.. அப்படித்தான். முருவா”
காளியின் அம்மா கடுப்போடு எட்டிப் பார்த்தாள். தன் பையன் , கிழவிக்கு கால் பிடித்து விடுவதில் அவளுக்கு விருப்பமில்லை போலும்.
“லே, போயி படி. நாளைக்கு பரிச்ச. ஆத்தா, அவனை கால் பிடிக்க சொல்லாத. வள்ளியக் கூப்பிட்டு சொல்லுதேன்”
“க்கும். பெரிய ஆம்பிள சிங்கத்த பெத்துட்டா. அவன் அப்பன் உனக்கு கால் பிடிச்சு விடுதான்லா, அப்பம் அவன் பையன் , பாட்டிக்கு கால் பிடிச்சா என்னாங்கேன்”
”அது போட்டு, லே, உங்க கையெல்லாம் குஞ்சா இருக்கே. பஞ்சாட்டம் வெரலு. டவுசரு போட்டா பெரிய பயலுவளாயிருவீகளோ? இன்னிக்கும் காளிப் பயலுக்கு குஞ்ச பிடிச்சு மோளத் தெரியாது. அழுத்தி அமுக்குங்கலே. அங் அப்படி..”
காளிக்கு வெட்கத்தில் முகம் சிவந்த்து. நான் அன்று மாலையே நண்பர் கூட்ட்த்தில் சொல்ல, எல்லாரும்  அவனை “அச்சகச்சோ, ஆடகச்சோ, காளிக்கு குஞ்சு பிடிக்கத் தெரியாது” என்று அவன் பாட்டுடைத்தலைவனாக மாற்றுவோம் என்பது தெரியும்.
கிழவி இதெல்லாம் பொருட்படுத்தவில்லை. “ லே, ராமாயணம் கத சொல்லுதேன். கேளுங்க, ஏவுட்டி வள்ளீ, நீயும் இங்கிட்டு வா. கேளு”
“போ, பாட்டி, போன வாட்டி கரெண்டு போனப்போவே இந்த கத சொல்லிட்ட”
“எத்தன வாட்டி கேட்டா என்னாட்டீ? பொட்டப் பிள்ள பேச்சப் பாரு. ராமஞ்சாமி கதை சொன்னாலும் கேட்டாலும் சன்ம சாபம் போவுமுட்டீ. நேரா மோச்சம்தான்”
“அப்ப நீயே சொல்லி நீயே கேளு. மோச்சத்துக்குப் போவ” காளியின் அம்மா முணுமுணுத்தாள்.
“ராமன் சொல்லுதான். ” குகனய்யா, நீ என் தம்பியாக்கும். “ யாரைப் பாத்து?”
“குகன்” இந்த கடைசி வார்த்தை கேள்வியாகவும், நாங்கள் பதிலாக பேசுவதும் ஒரு சடங்கு.
”அங்… லே காளி இரி.. இவந்தான் நல்ல பிள்ள. சுவா, உனக்கு அளகா ராசகுமாரி கணக்கா ஒரு பொண்டாட்டி வருவா. யாரு கணக்கா?”
“ போங்க பாட்டி” என்றேன் சிவந்து. இதுவும் சாயங்காலம் மீட்டிங்கில் பரிகசிக்கப்படும். வி ஹேட் கர்ள்ஸ்…அது ஒரு வயது.
பாட்டி உடல் குலுங்க சிரித்தாள் “அதெனாடே? உனக்கு வெக்கமா வருது. பொட்டப்பிள்ளயா ? வெக்கப்படுதக்கு? சரி. நீ , நல்ல நிலம் நீச்சு, வயக்காடுன்னு இருப்ப. இந்த காளியப் பாரு, காட்டுலதாம்ல நீ இருப்ப, இப்படி ராமாயணம் கேக்கச்சே எழுந்து போறீல்லா? சுவா,  சேட்ட பண்ணாம இருக்கான் பாரு”
எனக்கு வியர்த்த்து. செய்த காரியம் பாட்டிக்கு தெரியுமா? மெல்ல எட்டி பாட்டியின் வலப்புறம் பார்த்தேன். அங்க தான் இருக்கு.
“புவயிலை அம்பது பைசாக்கா கொடுக்கான். நாடாரை என்னான்னு போய் கேக்கணும். இல்ல, சின்னப் பய வந்து கேக்கான்னு ஏமாத்துதானோ?” பாட்டி புகையிலையை கிள்ளி வெத்தலை இடிக்கும் கிண்ணியில் சேர்த்தாள்.
“ன்ங், நங்…”
எனது இதயத் துடிப்பு அதிகமானது.
“குகன் அழுதாரு. ராசா ராமா போவாதீய்யா. இங்க்ன கூடி இருமய்யா. நான் தேனு தாறன், தின மாவு தாறன். மீனு தாறன். யாத்தா நீ எடுத்துச் சொல்லாத்தா-ங்கான் சீதயப் பாத்து
கிழவியின் குரல் தீனமானது. சட்டென அழுதுவிடுவாள்.
“என்னாத்த சொல்லுவேன்? அன்பா ஒருத்தன் இருங்கான். அவ பொண்டாட்டி, மோச்சத்துக்குப் போ-ன்ங்காளே? ராமன இரின்னு சொல்லுதான் குகன். அவம் பொண்டாட்டி வேணாம்னா சொல்லியிருப்பா? கதையில இல்லயே ராசா?”
பாட்டி சேலைத்தலைப்பில் கண்ணைத் துடைத்துக் கொண்டே, இடித்த புகையிலையை வாயில் போட்டாள்.
நான் எழுந்து பறந்துவிட்டேன். இனி இருந்தால் தாளாது.
“என்னாதிது? கசக்கு? யாத்தா, யாரு இதுல பொட்டு வெடி போட்டிருக்கா? கந்தகம், விசம்லா? ஏல, பாடையில போறவனே, காளி, இங்குட்டு வா, சொல்லுதேன்”
காளி , நிலமை என்னவென்று புரிந்து கொண்டு மிரண்டு ஓடுமுன் அவன் அம்மா முன்னே வர,… டூ லேட்
“ராமாயணம் சொன்ன பாட்டி வாயில வெசமா வைக்கீய? வாங்கல, &*&#ய அருமாமணைல வச்சு அறுக்கேன். காடுதாம்லே உங்களுக்கு வாசம், பதினாலு வருசம் ராமன் கணக்கா”
அன்று காளி வீட்டை விட்டு ஓடி வந்தவன்தான் அதன்பின் நான் அங்கு போகவில்லை. பொட்டு வெடி , காளியினுடையது, இட்டது, நான். பட்டது அவன். ஒரு குற்ற உணர்வில் காளியைத் தவிர்த்தேன். நல்ல வேளை அவன் என் பள்ளியிலும் இல்லை, எங்கள் தெருவிலும் இல்லை.
வெகு நாட்கள் கனவில் ஒரு அடர்ந்த காட்டில் , நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அருமாமணை ஒன்றை  , சுருக்கம் நிறைந்த கைகள் நடுங்கியவாறே நீட்டி வருவது போன்று காட்சிகள் வரும். அலறி எழுவேன். விபூதி மந்தரித்து, கையில் யானை முடி கட்டி, யானையின் வாயில் நீர் கொடுத்து, தலையில் பீய்ச்சி அடிக்க வைத்து… ஊர் பெயர்ந்த்தும், கிழவியும் காளியும் கனவிலிருந்தும் மறைந்து போனார்கள்.
இப்போதும் வனவாசம்தான். காங்க்ரீட் வன வாசம். “ஊரா இது? கட்டிடக் காடு” என்று முணுமுணுப்பவர்கள் ‘ சுத்த காட்டுப் ப்யல்கள்யா உங்கூர்ல” என்பவர்கள் நான் இருக்கும் மும்பை காடு என்பதை உணர்த்தியபடி இருந்தார்கள். பாட்டியின் வெற்றிலை இடிக்கும் கிண்ணத்தில் பொட்டு வெடி போட்ட்தற்கு, இது அதிகபட்ச தண்டனைதான்.
ஒரிஜினல் வால்மீகி  ராமாயணத் தமிழாக்கத்தின், பாலகாண்டம் எடுத்தபடி, ஜன்னல் அருகே காலை நீட்டினேன். வெளியே பொறுமையற்ற கார், பைக் ஹாரன்கள் அலறுகின்றன – காட்டு மிருகங்கள் பிளிறுவதைப் போல…
“’இந்த ராமாயண கதையை எவன் சொல்கிறானோ,எவன் கேட்கிறானோ, அவர்களெல்லாம் இம்மையில் சாபங்கள் நீங்கக் கடவர். மோட்சத்தை அடையக் கடவர்.”
மோட்சம் கூட வேண்டாம். வனவாசம் நீங்கினால் போதும்.
நீங்கும்.
ஸ்ரீ வால்மீகி ராமாயணம். (100 ஆண்டுகளுக்கு முன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட்து)
தொகுப்பாசிரியர் -நடேச சாஸ்த்ரீகள். வருடம் 1900
புத்தகம் தொடர்புக்கு : திரு. எஸ். வெங்கிட ரமணன்.9894661259