Thursday, June 18, 2015

தெளிவு

தில்லி தீயாய் எரிந்து கொண்டிருந்தது, ஒரு மாதம் முன்பு.
T3 டெரிமினலில் அதிகர்வம் பிடித்த அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் லவுஞ்ச் “ உங்க கார்டெல்லாம் தகுதி போறாது. ஹாங்க்காங் ல கொடுத்த கார்டுன்னா உள்ளே போலாம்” என்ற போது அவமானப்படுத்தப்பட்ட கொதிப்புடன் வேகமாக நடந்தபோது..

“எக்ஸ்க்யூஸ்மி”

“யெஸ்” என்றேன். தென்னிந்திய சாயலுடன் ஒரு பெண்மணி , அருகே தளர்ந்த உடலுடன் ஒரு பெரியவர். நான் அறியாதவனென்றாலும், முகமலர பெரிதாகப் புன்னகைத்தார்.

“நீங்க ஜெட் ஏர்வேஸ்லயா பாம்பே போறீங்க? “ என்றார் அப்பெண். ஆம் என்றதும், “ இவரை போர்டிங்க் கேட் வரை கொண்டு போய்விட முடியுமா? எனக்கு கேட் மற்ற பக்கம். அழைப்பு வந்தாச்சு, நான் சீக்கிரம் போகணும்.” என்றார்.

“நிச்சயமாக” என்றவாறே பெரியவரைக் கை பிடித்துக் கொண்டேன். அந்தப் பெண் நன்றி நன்றி என்றூ பலமுறை சொன்னவாறே எதிரிப்புறம் விரைந்தார்.

பெரியவர் மெதுவாக நடந்தார். உபாதையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். வயோதிகத் தளர்வு. பஞ்சகச்சம் கட்டி,வெள்ளை ஜிப்பா அணிந்திருந்தார். கழுத்தில் பெரிய உருத்திராக்‌ஷ மாலை. நெற்றியில் பெரிய பட்டை, நடுவே குங்குமம். அர்ச்சகர் அல்லது வேத பள்ளி ஆசிரியர் அல்லது சடங்குகள் செய்விக்கும் வாத்தியார்?

“பாம்பேல இருக்கியாப்பா?” கொஞ்சம் பிசிரடித்த குரல். “ ஆம்” என்றேன்.
“எனக்கு பெங்களூர் போணும்ப்பா. பாம்பேல பொண்ணு ஆத்துல ஒரு வாரம் தங்கிட்டு பெங்களூர் போவேன்.”

‘ஓ” என்றேன். நேரம் நிறைய இருந்ததால், மெதுவாகப் போனோம். “எங்கூட ஒருத்தி வந்தாளே? அவா குடும்பத்தோட காசி, கயான்னு போயிட்டு வர்றேன். ஸ்ரார்த்தம் பண்ணனும். ஸ்வாமி, நீர் வந்து பண்ணி வைக்கணும்’னா. ஊர்ல ,நம்மாத்துக்கு அடுத்தாத்துத்ல இருந்தவா. மாட்டேன்னு சொல்ல முடியுமோ?”


இன்னும் ஒரு மணி நேரம் கால தாமதம் என்றார்கள் ஜெட் ஏர்வேஸ் கவுண்ட்டரில். “ போர்டிங்க் பாஸ் கொடுக்கும்போது சொல்லலையே?” என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் மூடில் அவர்கள் இல்லை. ’வந்து மாட்டியாச்சுல்ல? சாவு.’

பெரியவர் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ”சாப்பிட ஏதாவது வேணுமா ஸ்வாமி?” என்றேன்.

”எனக்கு ஒன்ணும் வேண்டாம்டா அம்பி. ஜலம் மட்டும் ஒரு டம்ளர் கிடைச்சா போதும்”

“அம்பியா?” தில்லானா மோகனாம்பாள் பாலையா ரேஞ்சுக்கு திகைத்தாலும் சுதாரித்துக்கொண்டு ,பிஸ்லரி பாட்டில் ஒன்று கொண்டு வந்தேன்.

மெல்ல கூட்டம் பெருகியது. அவர் பையிலிருந்து ஒரு பழைய பழுப்பேறிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு புறம் தேவநாகரி எழுத்தில் தெரிந்தது. மறுபுறம் தமிழாக இருக்கும். சில நிமிடம் கழித்து, கையை நீட்டி என் தோளைத் தொட்டு “ உன்ன எங்கயோ பாத்த மாதிர் இருக்கு. எங்கன்னு சொல்லத் தெரியலை. என் ஆத்துகாரி இங்க இருந்திருந்தான்னு வைச்சுக்கோ.. இன்னேரம் “ இவன் கிச்சா மாதிரி இருக்கான்ல்யோ? நாணா பையன் கூட இப்படித்தான் சாயல். என்ன , அவன் கொஞ்சம் நிறமா இருப்பான்’ன்னு எதாவது சொல்லுவள்” என்றார், சிரித்தபடி.

“ஆண்டவன் ஒரே ஒரு தடவை மட்டும்தான் குடிச்சுட்டு படைச்சான், அதுவும் என்னை,’ என்றுதான் நினைச்சிகிட்டிருந்தேன். இன்னொண்ணா?” சிரித்தேன்.

“அட அதென்னா? அவன் பித்தன் டா. ’பித்தா பிறை சூடி பெருமானே-ன்னு சுந்தரர் பாடலையா? குடிச்சுட்டுத்தானே போதைல ஆடிண்டிருக்கான், “ வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்” பாட்டு கேட்டிருப்பியே? “

“ ஸ்வாமி ஒண்ணு கேக்கலாமா?” என்றேன். வெகுநாட்களாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
“கேளேன்” என்பது போல் ஒரு அசட்டுப் புன்னகையுடன் பார்த்தார்.

“ அம்மா அப்பாவை உயிரோடு இருக்கறவரைக்கும் பார்த்துக்கொள்ளாமல், அவங்க போனப்புறம் இப்படி படு சிரத்தையாக ச்டங்குகள் செய்யறாங்களே? இதுக்கு என்ன காரணம்? சாஸ்த்ரம் சொல்கிறதே என்ற காரணமா?”

அவர் முன்னே குனிந்து, புத்தகத்தை பையில் வைத்தார்.

“ நீ என்ன நினைக்கறே?”

“ நான்..” “ ஒரு பயம்தான் காரணம்னு நினைக்கறேன். செய்யலைன்னா, பாவம் பிடிக்கும்னு சாஸ்த்ர வாக்கு இருக்கே?”

“ எத்தனை பேருக்கு இந்த சாஸ்த்ர வாக்கெல்லாம் தெரியும்னு நினைக்கறே? நீ சொன்னதுல ஒரு வார்த்தை சரி. பயம்.. அதுதான். தெய்வ நம்பிக்கை, சாஸ்த்ரத்துல மரியாதையெல்லாம் ஒண்ணுமில்லை. ”

வியந்துபோனேன். “நீங்களும் இதை சாஸ்த்ர ஒழுகுன்னு நினைக்கலையா?”

“ மனுஷ்ய மனம் ஒரு பெரிய பாழ் தெரீயுமோ? அதுல என்ன கிடக்கறது, எது உற்பத்தி ஆகும்னு எவனுக்கும் தெரியாது. தெய்வ சந்நிதானத்து முன்னாடி நின்னுண்டு, அழுக்கான நினைவெல்லாம் வரும். ஆனா வெளியே சொல்ல வெக்கம்.பிறத்தியார் என்ன நினைப்பாளோன்னு ஒர் பயம். இந்த நாடகம்தான் எல்லாத்துலயும். இன்னொருத்தன் , கலவி நேரத்துல தெய்வத்தை நினைச்சுப்பான். மனசு துண்டாடும். வெக்கமும், குற்ற உணர்வுமா அடுத்த நாள் தீவிரமா பூஜை பண்ணுவன். இதுதான் மனுஷன். மனசுல சாஸ்த்ர ஒழுகுன்னு தீவிரமா பாக்க முடியாதுடாப்பா”

“அப்ப இந்த சடங்கெல்லாம் ஒரு குற்ற உணர்வுலதான் செய்யறோம்கறேளா?”

“நிச்சயமா. இதைச் செய்யலேன்னா இன்னும் குத்த உணர்வு வரும். பிள்ளைக்கு ஒரு நாள் காய்ச்சல் வந்தா, பொண்டாட்டி சொல்லுவள் “பெரியவாளுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்யலையோ? போன வருஷம் விட்டுப்போச்சு இல்லையா?” ஏன்? ஒரு கவலைக்கு ஒரு பயம் தொடர்பு. அர்த்தமே இல்லாம அதுக்கு, நமக்குத் தெரியாத உலகத்தோட தொடர்புபடுத்திப் பார்க்கறது. இது மனுஷ ஸ்வபாவம். தப்புன்னு சொல்ல முடியாது.” ஒரு நிமிடம் நிறுத்தினார்.

“இப்ப வந்தாளே எங்கூட ஒருத்தி. அவள் மாமனாரும் எனக்கு சொந்தம்தான். அடுத்த தெருவுல இருந்தார். மனுஷன் ப்ரைவேட்ல வேலை பார்த்து ரிடையர்டு. பென்ஷன் கிடையாது. என்ன பாடு படுத்தினா ,அவரை-ங்கறே? ஒவ்வொரு நாளும் வார்த்தையாலேயே குத்திக் குத்தி மனுஷனை கொன்னா. எப்பவாவது கோயில் வாசல்ல உக்காந்துண்டு சொல்லுவர். ரெண்டு தடவை எங்கிட்டயே அழுதிருக்கார், பாவம். கையில ஒரு மஞ்சப்பையை வச்சுண்டு ஒருதடவ பஸ்ஸ்டாண்டுல நின்னிண்டுருந்தார். எங்கயோ போறேன், போம் -ன்னார் விரக்தியா. பேசிக் கூட்டிண்டு வந்தேன். அத விடு.
அவர் ப்ராணனை விட்டது, வெறு சரீரம் சம்பத்தப்பட்ட விஷ்யம்தான். ஆத்மா எப்பவோ போயிடுத்து.

இவள் பையன் கூட டெல்லியில இருக்கா. பையன் நன்னா சம்பாதிக்கறான். ஆனா பாரு, கல்யாணம் தட்டிப்போறது.

பயம் வந்திருத்து இவாளுக்கெல்லாம்..முன்னோர் சாபமோ என்னமோன்னு, கயா என்ன, காசி என்ன... அடேயப்பா. அமர்க்களம். போன வருஷம் ஸ்ரார்த்தம் செய்யறப்போ கண்ணீர் விடறா. “ என் மாமனார் அப்படி ஒரு நல்ல மனுஷன். எனக்கு கொடுத்து வைக்கலை”ன்னு ஒரு தேம்பல்.
மந்திரம் சொல்லிண்டிருக்கேன், நான். இதெல்லாம் கேக்கறது. எல்லாம் முடிச்சப்புறம் மனசுல வேண்டிண்டேன்.

“ஹே அக்னீ, எல்லாத்தையும் பஸ்மமாக்கிடறாய். இந்த நாடக பாவத்தையும் பஸ்பமாக்கு. எல்லா மனுஷாளுக்கும் இருக்கற அழுக்கையெல்லாம் பஸ்பமாக்கு. ”

வேறென்ன சொல்றது? எல்லாம் புள்ளை கல்யாணம் நன்னா நடக்கணுமே, நாம கையும் காலும் ஒழுங்கா இருக்கறப்போவே போய்ச்சேரணுமேன்னு மரண பயம்தான்.
டிக்கட் வாங்கிக் கொடுத்திருக்கா. திரும்பிப் போறேன்.”

அவர் வாயைத் துடைத்துக் கொண்டார். சில நிமிடம் பேசாமல் இருந்தேன்.

“ சொல்றேனேன்னு நினைச்சுக்காதேப்பா. இதெல்லாம் செய். கண்டிப்பா பண்ணனும். ஆனா ஒரு பீதியில பண்ணாதே. மனசால நிறைஞ்சு பண்ணு. எள்ளும் ஜலமும் இறைக்கறப்போ, கண்ணு நிறையணும் அம்பி. அப்பத்தான் செஞ்சதுக்கு ஒரு பலன் இருக்கு. மடிசாரும், பஞ்சகச்சமும், மட்டும் போதாதுடா. எல்லாம் மனசுதானே? அதுக்கு உண்மையா இரு. நீ போனப்புறம் உன் மனசை யார் கண்டா?"

ஒரு உணர்ச்சிப் பெருக்கில் தலையை மட்டும் ஆட்டினேன்.

“ இப்ப எங்கல்லாமோ முதியோர் இல்லம், அது இதுன்னு.. இருக்கா பாரு. அவாளுக்கு ஒரு வஸ்த்ரம், ஒரு வேளை போஜனம்.. இதையும் செய். மேல இருக்கற தேவதைகளோட வாழ்த்தோட, உயிரோட இருக்கறவா வாழ்த்தறதும் சமம்தான். “

பலதும் பேசிக்கொண்டே விமானத்தில் ஏறி வேறு வேறு வரிசைகளில் அமர்ந்துகொண்டோம். விமானம் கிளம்பிய இரைச்சல் என் மன இரைச்சலில் அதிகம் அன்று கேட்கவில்லை.

Saturday, June 13, 2015

முதலில் வந்தது நரகமா?பூமியா?


"முதல்ல வந்தது நரகமா? பூமியா?” அபிஜீத் கேட்டான்.
கொஞ்சம் யோசித்தேன். தோசை சாப்பிட்டுக்கொண்டே சிந்திக்கக்கூடிய விசயமல்ல இது. ஆனால் க்ளாஸிக் ரெஸ்டாரண்ட்டில் தோசை சாப்பிடுவதற்கு மாறாக என்னவேணுமானாலும் செய்யலாம். ஒரு அனஸ்தீஷியா  வேண்டும் அதற்கு.
“நரகம்தாண்டா. பூமி வாழற மாதிரி வர்றதுக்கு முன்னாடி ஒரே நெருப்புக்காடா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா அதுல நீர் உருவாகி, அதுல நைட்ரஜன், ஆக்ஸிஜன் ,கார்பன் கலவைகள் உருவாகி.. உயிரினம்னு  ஒன்னு வந்தப்புறமும், எல்லா இடத்துலயும் உயிர் வாழ்ந்துட முடியலை.  வாழறதுக்கு ஏத்த இடம் எதுவா இருக்கோ அங்க உயிர் பெருகியது. இது பூமியின் , உயிரினத்தின் சரித்திரம்”
பையனுக்கும் தோசைக்கு அனஸ்தீஷியா வேண்டியிருந்திருக்கிறது. கேணத்தனமான கேள்விகளையெல்லாம் பசங்கள் அப்பாக்களுக்கென்றே ஒதுக்கி வைப்பார்கள் போலிருக்கிறது. அம்மாவிடம் பேசுவதற்கென ”வேறு மொழி, வேறு சொற்றொடர்கள்.

டேய், நீ மேஜர் ஆயாச்சு. உன் ஸ்டேட் பாங்க் அக்கவுண்ட்ல மாத்தணும்.போயிட்டு வரியா?
“சரி” என்று செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பியவன் அஞ்சு நிமிடத்தில் திரும்பி வந்தான்.
“ஒரே கூட்டம்ப்பா. பெரிய க்யூ. யார்கிட்ட கேக்கறதுன்னே தெரியலை. கூர்க்காகிட்ட கேட்டா, நீயெல்லாம் படிச்ச பையன் தானே? எழுதியிருக்கிற போர்டை வாசி”ன்னு சொல்றான்.
‘வாசிச்சியா?”
“அங்க போர்டே இல்ல. கவுண்ட்டர் நம்பர்,க்ரீன் சானல்.. அவ்வளவுதான். நம்ம பெரியப்பா மாதிரி டை கட்டிக்கொண்டு க்ரகஹக் மித்ரா- ந்னு ஒருத்தர் நின்னாரு. கேட்டா பதிலே சொல்லலை. கோவமா வந்தது. வந்துட்டேன்.”
பொறுமை இல்லாமல் வளர்கிறதுகளே? என்று ஒரு புலம்பல் தோன்றினாலும் அடக்கிக்கொண்டு அவனை அழைத்துக்கொண்டு நானும் போனேன்.

ப்ரதான்மந்த்ரி ஜன் கன மன என்று ஒரு சேவைப்பிரிவின் கீழும், இன்ஸூரன்ஸ்க்காகவும் பலர் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்த இடத்தில் ஒரு வழியாக நீந்திச் சென்றால், ஒரு கத்தை படிவத்தை எடுத்துத் தந்தார் , முகத்தையே பாராமல் ஒருவர்.
“இத நிரப்பி, போட்டோ, பேன் கார்டு, பாஸ்போர்ட்டு காப்பி/ எம்.டி.என்.எல் பில் கொண்டுவாங்க. ரெண்டு வாரம் ஆகும். கூட்டம் பாத்தீங்கல்ல”
” எம்.டி.என்.எல் பில், எப்படி இவன் பேர்ல இருக்கும் சார்? என் பேர்ல இல்ல வீட்டுக்கு வருது?”
“அப்ப கஷ்டம். பையன் பேர்ல எதாச்சும் ரெஸிடென்ஸ்  ப்ரூஃப் கொண்டு வாங்க”
“அதான் பாஸ்போர்ட் காப்பி இருக்கே?”
“ம்ம்ம். அது போதாதுன்னு நினைக்கறேன். ரெண்டாம் கவுண்ட்டர்க்குப் பின்னாடி  இருக்கற கேபின்ல ஒரு அம்மா இருப்பாங்க. அவங்ககிட்ட கேளுங்க”
அந்த கேபினில் ஒரு பாச்சாய்- கூட நான் பார்க்கவில்லை. வெகுநேரம் காத்திருந்து பின் கிளம்ப நினைத்தபோது அந்தம்மா வந்தார்.
“ பாஸ்போர்ட் காப்பி போதும். உங்க பேர்ல எம்.டி.என்.எல் பில், எலக்ட்ரிக் பில் கொண்டு வாங்க.”

“ரூல் என்ன சொல்கிறது?’ என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன். அது என் தாத்தாவின் எஸ்.எஸ்.எல்.ஸி சர்ட்டிபிகேட் கேட்டாலும் கேட்கும். இது எஸ்.பி.ஐ.
அடுத்த வாரம் பையன் போனான்.. போட்டோ காப்பி ஒழுங்காக இல்லை என்று திருப்பி அனுப்பினார்கள். ஒருவழியாக அதையெல்லாம் தாண்டி படிவத்தைக் கொடுத்து இருவாரம் கழிந்து மீண்டும் வங்கிக்குப்போனேன்.
“ அக்கவுண்ட் மேஜர் ஆயிருச்சு. ஆனா ரொம்ப நாள் பயன்படுத்தலை பாருங்க. இன் ஆக்டிவ் ல இருக்கு. நூறு ரூவாய் எடுத்துப் போடுங்க. ஆக்டிவ் ஆயிரும்”
“ஆனா, இவனுக்கு ஏ.டி.எம் கார்டு, இண்டெர்நெட் வசதி எதுவுமே தரலை நீங்க. கேட்டப்போ, மைனர் அக்கவுண்ட்டுக்கு இதெல்லாம் கிடையாதுன்னீங்க. ஹெச்.டி.எஃப் .ஸி பேங்க்ல என் அக்கவுண்ட்டோட இணைச்சுட்டு.கொடுத்தாங்க. ”
“அவனுக ப்ரைவேட் சார். கவெர்மெண்ட்டுன்னா ரூல்ஸ் இருக்கு. நாங்க நியமப்படி போறவங்க. சரி, வித்ட்ராவல் படிவம் நிரப்பி நூறு ரூவா எடுங்க”
ஏடி.எம் கார்டு, இண்டெர்நெட் எல்லாம் புதிய அக்கவுண்ட்டில் வேணுமென்று எழுதியிருந்தாலும் அவை வரவேயில்லை. மீண்டும் படிவங்கள்..
வித்ட்ராவல் படிவம் எடுத்தபடி மகன் வரிசையில் நின்றபொழுது “ இன்னும் உன் அக்கவுண்ட் மேஜர் ஆகலை. உங்கப்பா கார்டியன்ன்னு இருக்கு. நீ எடுக்க முடியாது” என்று திருப்பி அனுப்பினார்கள்.
வெளியே வந்து, கோபத்தில், க்யூவில் நின்ற அயர்ச்சியில் “ இந்த வங்கியே வேணாம்ப்பா. “ என்றான்.
அடுத்த நாள் நான் போனேன். அதே பெரிய வரிசை, அதே நெரிசல். “ அடடா. இன்னிக்கு உங்க பையன் அக்கவுண்ட் மேஜர்னு வந்திருச்சு. அவன் தான் வந்து எடுக்கணும்.”
“விளையாடறீங்களா? நேத்திக்கு அவனை அனுப்பிச்சீங்க”
“அது நேத்திக்கு. இது இன்னிக்கு. “
“சரி, ஒரு அலெர்ட் மெசேஜ் அனுப்பிருக்கலாமே? வேண்டாத க்ரெடிட் கார்டுக்கெல்லாம் குப்பை மெஸேஜ் வருது?”
“அது வேற டிபார்ட்மெண்ட் சார். ஸாரி. அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகாது. அவன் வந்தாகணும்”
“அவன் ஊருக்குப் போயிருக்கான். ஒரு வாரமாகும்”
“நோ ப்ராப்ளம்” என்றார் கூலாக.” வந்து செய்யட்டும். ஒரு மாசமாயாச்சு இன்னும் ஒரு வாரம் தானே? அல்லது அவனை ஒரு லெட்டர் எழுதி, மேனஜருக்கு அனுப்பச்சொல்லுங்க. ஆக்‌ஷன் எடுக்கலாம்”
”கோர் பேங்க்க்கிங் வச்சிருக்கீங்க. அவன் அந்த ஊர்ல கொடுத்தா செல்லாதா?”
“செல்லாது. இங்க வரணும்” எனது வித்ட்ராவல் படிவம் கிழிபட்டது.

இரு வாரத்தில் ஹெச்.டி.எஃ.ஸி வங்கியிலிருந்து அவனுக்கு ஒரு கடிதம் “ ஐயன்மீர், நீங்கள் இப்போது 18 அகவை முடிந்து வாலிபராகிவிட்ட படியாலே, வங்கி, உங்கள் சேமிப்புக்கணக்கை மேஜர் என்ற தகுதிக்கு உயர்த்துகிறது. நீங்கள் ஒரு முறை எங்கள் வங்கிக்குடிலிற்குக் திருப்பாதம் பதித்து, திருக்கையாலே முத்திரை பதிக்க வேணுமாய் ப்ரார்த்திக்க்கொள்கிறேன். வாசக தோஷஹ, க்‌ஷந்தவ்யஹ” என்ற படிக்கு ஒரு ஆங்கில கடிதம். அவன் பெயருக்கு ஒரு கடிதம் என்பதில் டியர் ஸர் என்று அழைத்ததில் பெருமை பொங்க உடனே போனான். போனோம்.
“அபிஜீத்” என்றார் வங்கி அதிகாரி. குரியாக்கோஸோ, ஜோஸ் ஜோர்ஜோ எதோவொரு கோட்டயம் பக்கத்துப் பெயர்.
“ஸிம்ப்ளி ஒரு சைன் இடு” என்றார். பையன் ஒரு படிவத்தில் ஒரு ’கோர்னேர்’ல் கையெழுத்திட்டு நிமிர்ந்த போது ,
 PAN card கோப்பி ?” என்றார்.
“அடடா, ஜெராக்ஸ் எடுக்கலையே? ஒரிஜினல்தான் இருக்கு”
“நோ ப்ரோப்லம். ” என்றவர் ஒரு நகல் எடுத்து வந்தார்.
“போட்டோ ?”
“அட. அதுவும் கொண்டு வரலை. அதான் ஏற்கனவே இருக்கிற அக்கவுண்ட் தானேன்னு...”
“ லெட்டர்ல லிஸ்ட் கொடுத்திருக்கோம். பாக்கலை போலிருக்கு. பரவாயில்ல. போட்டோவோட ஸ்கேன் ஒன்று என் இமெயிலில் அனுப்பிருப்பா”
பையன் வேகமாகத் தலையாட்டினான். இது ஒன்னாம்கிளாஸ் சமாச்சாரம், இக்கால இளைஞர்களுக்கு.
“எப்படி அன்பா பேசறாங்க இல்ல? “ என்றான் வெளியே வந்தபோது.
“உன் அக்கவுண்ட்ல பைசா இருக்கற வரை அன்பாத்தான் பேசுவாங்க, நடத்துவாங்க. இது தனியார் வங்கிடா”
“இப்படி நடத்துவாங்கன்னா, எவ்வளவு பைசா வேணும்னாலும் போடலாம்ப்பா”

நடந்து வரும்போது கேட்டான் “ அப்பா,  ஸ்டேட் பாங்க் எத்தனை வருஷமா இருக்கு?”
”ரொம்ப புராதனமானதுடா அது. இம்ப்பீரியல் வங்கின்னு ஆங்கிலேயர் காலத்துல இருந்தது. அதுதான் இப்ப ஸ்டேட் பாங்க். “
” ஹெச்.டி.எஃப் ஸி?”

“ என்ன.. பதினைஞ்சு , இருவது வருஷமிருக்கும்.”

சில நிமிட மவுனத்திற்குப் பின் சொன்னான்” அப்பா, நீ சொன்னது சரிதான். நரகம் முதல்ல வந்திருக்கு. அப்புறம்தான் வாழற பூமி வந்திருக்கு”

உயிர்கள் , தங்களுக்கு சாதகமான பூமிப்பகுதியில் பெருகி வளர்கின்றன. இயற்கை மட்டும் உயிரினங்களைத் தேர்வு செய்வதில்லை. உயிரினங்களும் தங்கள் இயற்கையைச் சூழலைத் தேர்வு செய்கின்றன.