Saturday, February 28, 2009

உலகத் தமிழன்?

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?”
கேட்டவன் தமிழனில்லை.
ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.. தமிழ்நாடு என்றாலே ”இராமேஸ்வரம் தெரியும்” என்னும் வகை. எல்லா தென்னிந்தியனும் மதராஸி என்று கேட்டு வளர்ந்தவன்.
இலங்கை, அதன் தவிப்பு எல்லாம் அவனுக்கு வெகுதூரம்.
அவன் இப்படிக்கேட்டதும் வியந்துபோனேன். “ இலங்கை பிரச்சனை இன்று நேற்றதல்ல. பிரணாப் முகர்ஜிக்கு முன்பே பலர் இதில் அரைகுறை மனசோடு கைவைத்ததின் விளைவு இன்று இப்படி..” என விளக்கத் தொடங்கிய என்னை நிறுத்தினான்.
“ எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன, . புலிகள் என்று ஒரு அமைப்பு ஒரு பக்கம். ராணுவம் ஒருபக்கம். மாட்டிகிட்டு பாவம் மக்கள் சாகிறாங்க. இது சரியாகப் படலை. ஃபிஜித் தீவுல பீஹாரிகளுக்கு சளி புடிச்சா, டெல்லி தும்மும்.. இங்கே செத்தாலும் ஒண்ணுமில்லன்னா என்னமோ மாதிரியிருக்கு” என்றான்.
மனிதாபிமானம் என்பது மொழி, இனம், மீடியா கடந்தது. இங்கு ஊடகங்கள் என்ன காட்டுகின்றன?
“புலிகளின் கடைசி இருப்பிடத்தை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேற்றம்”. “ பிரபாகரனின் சொகுசு பதுங்குகுளி கைப்பற்றப்பட்டது’ “பிரபாகரன் தப்பி ஓட்டம்”. -ஹிண்டுஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ( ஹிந்துவை விடுங்கள்)வின் கடைசி பக்கச் செய்திகள் கொசுறு போல இலங்கைப் போர் பற்றி. இதுவா நிஜச் சித்தரிப்பு?
”அகதிகளின் நிலை அரசியலாக்கப்படுகிறது - தமிழகத்தில்”- இதுதான் செய்தி சிறப்புப் பார்வைகளில். இம்மேதாவிகள் தி.மு,க, வை,கோ, அ.தி,மு.க தவிர தமிழர்களே இல்லை என்கிறார்களா? தமிழரின் கருத்துக்கள் என்ன? தமிழன் என்றால் யார்?

தமிழன் என்பது ஒரு இனம். உலகின் பல மூலைகளில் பெருமையுடனோ/தவித்தோ உயிருடன் இருக்கத் தவிக்கும் ஒரு தனி இனம். தமிழன் என்பவன் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல. தமிழ் என்னும் பெரும் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காக்கத் தவறிய முட்டாள் மனிதர்களின் மொத்த அடையாளம். சினிமாவில் தன்னைத்தொலைத்து, தொலைந்ததும் தெரியாமல் வாய் பிளந்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்கும் ஒரு மந்தை மனிதர்கள்.

”யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒரு முறை நியூ ஆர்லியன்ஸில் எனது பிற நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். “ உலகமயமாக்குதலின் தீர்க்கதரிசனத்தின் உச்ச கட்டம் இது” என்றனர் பலர் வியந்து. ”இத்தனை பரந்த மனப்பான்மை படைத்த உங்கள் இனம் ஏன் ரோமானியர் போல புகழ் பெறவில்லை?” என்றார் ஒருவர். “ அடக்கியாள்வதும், பிற கலாச்சாரத்தினை அழித்து தன்னுடையதைப் பரப்புவதும் தமிழனின் பண்பாடில்லை” என்றேன். முன்பு படித்த வரலாறு கைகொடுத்தது. “வியப்பாக இருக்கிறது.நாங்கள் என்னமோ அடிமட்ட நிலையில் சுரண்டப்படும் ஒரு இனம் என்றல்லவா நினைத்தோம்?” என்றனர். அது அமெரிக்க அசட்டுத்தனம்.. விடுங்கள்.”
ஒரு புலம் பெயர்ந்த தமிழருடன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அங்கு வந்த எனது அமெரிக்க நண்பர் “உங்கள் மொழியில் எப்படி வித்தியாசம் கண்டுகொள்வீர்கள்?” என்று கேட்டார். நான்”“ தமிழ்நாட்டில இருந்து வந்தவங்க தமிழ்ல பெரும்பாலும் ஆங்கிலம் இருக்கும்- படிச்சவங்க என்று காட்டிக்கிற அடையாளம். இலங்கைத்தமிழர் பேசினா அது தமிழா மட்டுமே இருக்கும்” என்று விளக்கினேன். ”ஆக உலகத்தமிழர் என்று இல்லை. பிராந்திய அளவில் வேற்றுமை கண்டுகொள்ளலாம் இல்லையா?” எனக் கேட்டு சிந்தித்தார். சிந்திக்க வைத்தார்.
உலகத்தமிழர்கள்? இந்த பதத்திற்கு என்ன பொருள்? நாம் இப்படிச் சிந்தித்திருக்கிறோமா? இலங்கைத் தமிழர்/ சிங்கைத் தமிழர்/மலேசியத் தமிழர்/ மும்பைத்தமிழர்.....போகிற போக்கில் மதுரைத்தமிழர்/சென்னைத்தமிழர்/ நெல்லைத்தமிழர் எனவும் வருமோ? நெல்லையில் எவனாவது புகுந்து அடித்தாலும்( ”எவம்ல எங்க ஊர்ல புகுந்து அடிப்பான்னு சொல்றது? ”என நெல்லைக்காரர்கள் அருவாளுடன் எனக்காகக் காத்திருக்கவேண்டாம்) இப்படித்தான் நாம் புலம்புவோமா? ப்ரணாப் முகர்ஜியை எதிர்நோக்கிக் காத்திருப்போமோ?

உணர்ச்சி வசப்பட்டு, தான் மரிப்பதால் எவனுக்கும் லாபமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமலே தீக் குளிப்பதும், அத்தழலில் அரசியல்கட்சிகள் குளிர்காய்வதும் முதல் பக்க செய்திகளாயிருந்து இப்போது கடைசிப்பக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, இலங்கையில் இருக்கும் நாலு தமிழனும் தினமும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்க, நாம் இன்னும் நயன் தாராவுக்கும், அசினுக்கும் கலைமாமணி கொடுத்து கவுரவித்துக்கொண்டிருப்போம். தமிழனது கலை உணர்வை உலகம் அறியவேண்டாமா?

”நிஜமான” ஸ்லம்டாக் மில்லியனர்

டொமினிக் லாப்பியர்-ன் ”சிட்டி ஆப் ஜாய்” புத்தகம் படித்த நண்பர்கள் ”ஸ்லம்டாக் மில்லியனர்” குறித்து என்ன சொல்கிறார்கள் எனக் கேட்க ஆவலாயுள்ளேன்.
எனக்கு இப்படிப் படுகிறது.
நடைமுறை வாழ்க்கை குறித்தது ஒன்று, மற்றொன்று சல்மான் ரஷ்டி சொன்னதுபோல “கற்பனைக்கும் எட்டாத நடக்கவியலாத” மற்றொன்று. உண்மையான ஏழ்மையையும் அடிமட்ட சுரண்டலையும் , வாழ்க்கைப் போராட்டத்தையும் காட்டியது ஒன்று;பணக்காரக்கனவுகளையும், நிதர்சனத்தையும் குழப்பியடித்த கொலாஜ் மற்றொன்று. இரண்டும் ஆழமானவை. மனத்தைத் தாக்கக்கூடியவை.
ஸ்லம்டாக், திரைக்கதைக்கான தகுதியைப் பெற்றிருந்தது. 2 மணிநேரத்திற்குள் ஒரு போராட்டத்தைச் சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தை சுளுவாக சமாளித்தது. சிட்டி ஆப் ஜாய்- அப்படியல்ல. மெதுவாக உள்வாங்கி அசைபோடவேண்டும். பொறுமையும், நிதானமும் வேண்டும். அது கதை. ஸ்லம்டாக்- திரைக்கதை. டொமினிக் லாப்பியர் கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்தபோது மனத்தை அசைத்த அதிர்வுகளின் உண்மை வெளிப்பாடு .மற்றொன்று மும்பையின் வாழ்வுத்தாக்கத்தில், ஓடிய கற்பனையில் உருப்பாடு. கற்பனையின் படிவம் இருப்பதால் சினிமா உருவாகியதில் ஆச்சரியமில்லை.

இதற்கு ஆஸ்கார்? ஹாலிவுட் வேறு உலகம். ரகுமானுக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்ததற்கு சந்தோசப்படலாம். அவ்வளவுதான். ரெண்டு மணிநேரம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்தப்படம் உண்மையான தாராவிச் சேரியையும் சித்தரிக்கவில்லை.. “என்ன ஆக்டிங் பாரு!” என ஆச்சரியப்படுமளவு யாரும் நடிக்கவும் இல்லை. சேரித்தனம் வியாபாரமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா “வாவ்” என ஆச்சரியப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். பேசாமல் எதாவது அழுவாச்சி சீரியலைப் பாருங்கள். ”நேரத்தை வீணே செலவழித்தேன்” என்ற உண்மை தெரிந்த நிறைவோடாவது உறங்குவீர்கள்.

ஏழ்மையையும், வறுமையையும் குறுகுறுப்பாகப் பார்க்கும் மேல்நாட்டுப் பழக்கம் இன்று நேற்றதல்ல. மதர் இந்தியா புத்தகத்தில் “ இந்தியா ஒரு திறந்தவெளி கழிப்பிடம்” என காதரின் மேயோ எழுதியதற்கு, காந்தி “ இப்புத்தகம் ஒரு சாக்கடை மேலாய்வாளரின் அறிக்கை” எனக் கண்டனம் தெரிவித்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உண்மை வேறு.. உண்மையை குழியாடி/குவியாடிகளால் ஒளியியல் பம்மாத்து செய்து விகாரமாக எதிரொளித்து “இதாண்டா ரியலிஸம்” எனச் சொல்வது வேறு.ஸ்லம்டாக் இரண்டாவது வகை.
மும்பைக்கு வரும் பல முதல்முறை சுற்றுலாப் பயணிகள் “ தாராவிக்கு எப்படிப் போகணும்?” எனக் கேட்பது வழக்கம். அங்கு சென்று வருவது ஒரு சுற்றுலா ஆக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மையை ரசிப்பது கொடூரமா இல்லையா என்பதல்ல எனது கேள்வி.. இந்தியாவில் எத்தனையோ பார்க்கவும், பழகிக்கொள்ளவும் இருக்க... இது என்ன கேணத்தனம்? என்ற எண்ணம் எனக்கு எழுவதில் எந்தத் தவறும் இல்லையெனவே நினைக்கிறேன்.
சேரிகள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றவைகளும்தான் சேரிகளைக் கொண்டுள்ளன. அங்கு இல்லாத எந்த அதிசயத்தை இங்கே கண்டுவிட்டனர்? ஒரே வித்தியாசம்... மும்பை சேரிகள் வெறும் ஏழ்மை வலிக்கோடுகளல்ல. முயற்சியும், வலியும், சொந்தங்களும், நட்புகளும், மத, இன வெறிக் கொலைகளும், அதன் நடுவே உயிரைக்கொடுத்தாவது மற்றவனைக் காப்பாற்றும் உணர்வுகளும் கூடிய ஒரு கலவை. ஒரே சமயத்தில் சாக்கடை நாற்றமும், அத்தரும், குல்கந்தும், ரத்த வாடையும் வீசும் விபரீத கலவை. இந்த நவீன சித்திரத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது நமது சாமர்த்தியம். அமெரிக்கா தவறாமல், 1900களில் பார்த்ததுப்போலவே இன்றும் பார்த்திருக்கிறது.

தாராவியில் இருந்து உயர்ந்த மனிதர்கள் ஏராளம். நானே பார்த்திருக்கிறேன். இன்று ஒருவர் ஒரு பெரும் அமெரிக்க நிறுவனத்தில் , ஜப்பானிய ஆய்வு சாலையின் தலைவர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விஞ்ஞனிகள், தொழிலதிபர்கள் பலர் தாராவியில் இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் தாராவி என்றால் வெறும் ஏழ்மையல்ல. அச்சுத் தொழில், தோல் பொருட்கள் ஏற்றுமதி என்று பல தொழில்கள் பெருகிய, துடிப்பான ஒரு பகுதி. என்ன துரதிருஷ்டம் என்றால்... இவர்களைக் குறித்து உண்மையையும் எவரும் எழுதவில்லை... திரைக்கதையையும் ஒருவரும் எழுதவில்லை.

நமது இளைய தலைமுறை எதைப் பார்க்கும்? தாராவியின் வறுமையும், வலியுமாக ஓடும் சாக்கடையாக இப்புத்தகம், தொலைக்காட்சி காட்டியவை கண்டு முகம் சிறுக்கும் அவர்களுக்கு, இவ்வூடகங்கள் தெரிந்தே விட்டுப்போன மாணிக்கங்கள் அச்சாக்கடையின் உள்ளே அழுந்திக் கிடப்பதைப் பார்க்க இயலாது. சாக்கடையை யார் கிளறுவது? எவருடைய பணி இது?