Saturday, February 28, 2009

உலகத் தமிழன்?

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?”
கேட்டவன் தமிழனில்லை.
ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.. தமிழ்நாடு என்றாலே ”இராமேஸ்வரம் தெரியும்” என்னும் வகை. எல்லா தென்னிந்தியனும் மதராஸி என்று கேட்டு வளர்ந்தவன்.
இலங்கை, அதன் தவிப்பு எல்லாம் அவனுக்கு வெகுதூரம்.
அவன் இப்படிக்கேட்டதும் வியந்துபோனேன். “ இலங்கை பிரச்சனை இன்று நேற்றதல்ல. பிரணாப் முகர்ஜிக்கு முன்பே பலர் இதில் அரைகுறை மனசோடு கைவைத்ததின் விளைவு இன்று இப்படி..” என விளக்கத் தொடங்கிய என்னை நிறுத்தினான்.
“ எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன, . புலிகள் என்று ஒரு அமைப்பு ஒரு பக்கம். ராணுவம் ஒருபக்கம். மாட்டிகிட்டு பாவம் மக்கள் சாகிறாங்க. இது சரியாகப் படலை. ஃபிஜித் தீவுல பீஹாரிகளுக்கு சளி புடிச்சா, டெல்லி தும்மும்.. இங்கே செத்தாலும் ஒண்ணுமில்லன்னா என்னமோ மாதிரியிருக்கு” என்றான்.
மனிதாபிமானம் என்பது மொழி, இனம், மீடியா கடந்தது. இங்கு ஊடகங்கள் என்ன காட்டுகின்றன?
“புலிகளின் கடைசி இருப்பிடத்தை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேற்றம்”. “ பிரபாகரனின் சொகுசு பதுங்குகுளி கைப்பற்றப்பட்டது’ “பிரபாகரன் தப்பி ஓட்டம்”. -ஹிண்டுஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ( ஹிந்துவை விடுங்கள்)வின் கடைசி பக்கச் செய்திகள் கொசுறு போல இலங்கைப் போர் பற்றி. இதுவா நிஜச் சித்தரிப்பு?
”அகதிகளின் நிலை அரசியலாக்கப்படுகிறது - தமிழகத்தில்”- இதுதான் செய்தி சிறப்புப் பார்வைகளில். இம்மேதாவிகள் தி.மு,க, வை,கோ, அ.தி,மு.க தவிர தமிழர்களே இல்லை என்கிறார்களா? தமிழரின் கருத்துக்கள் என்ன? தமிழன் என்றால் யார்?

தமிழன் என்பது ஒரு இனம். உலகின் பல மூலைகளில் பெருமையுடனோ/தவித்தோ உயிருடன் இருக்கத் தவிக்கும் ஒரு தனி இனம். தமிழன் என்பவன் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல. தமிழ் என்னும் பெரும் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காக்கத் தவறிய முட்டாள் மனிதர்களின் மொத்த அடையாளம். சினிமாவில் தன்னைத்தொலைத்து, தொலைந்ததும் தெரியாமல் வாய் பிளந்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்கும் ஒரு மந்தை மனிதர்கள்.

”யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒரு முறை நியூ ஆர்லியன்ஸில் எனது பிற நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். “ உலகமயமாக்குதலின் தீர்க்கதரிசனத்தின் உச்ச கட்டம் இது” என்றனர் பலர் வியந்து. ”இத்தனை பரந்த மனப்பான்மை படைத்த உங்கள் இனம் ஏன் ரோமானியர் போல புகழ் பெறவில்லை?” என்றார் ஒருவர். “ அடக்கியாள்வதும், பிற கலாச்சாரத்தினை அழித்து தன்னுடையதைப் பரப்புவதும் தமிழனின் பண்பாடில்லை” என்றேன். முன்பு படித்த வரலாறு கைகொடுத்தது. “வியப்பாக இருக்கிறது.நாங்கள் என்னமோ அடிமட்ட நிலையில் சுரண்டப்படும் ஒரு இனம் என்றல்லவா நினைத்தோம்?” என்றனர். அது அமெரிக்க அசட்டுத்தனம்.. விடுங்கள்.”
ஒரு புலம் பெயர்ந்த தமிழருடன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அங்கு வந்த எனது அமெரிக்க நண்பர் “உங்கள் மொழியில் எப்படி வித்தியாசம் கண்டுகொள்வீர்கள்?” என்று கேட்டார். நான்”“ தமிழ்நாட்டில இருந்து வந்தவங்க தமிழ்ல பெரும்பாலும் ஆங்கிலம் இருக்கும்- படிச்சவங்க என்று காட்டிக்கிற அடையாளம். இலங்கைத்தமிழர் பேசினா அது தமிழா மட்டுமே இருக்கும்” என்று விளக்கினேன். ”ஆக உலகத்தமிழர் என்று இல்லை. பிராந்திய அளவில் வேற்றுமை கண்டுகொள்ளலாம் இல்லையா?” எனக் கேட்டு சிந்தித்தார். சிந்திக்க வைத்தார்.
உலகத்தமிழர்கள்? இந்த பதத்திற்கு என்ன பொருள்? நாம் இப்படிச் சிந்தித்திருக்கிறோமா? இலங்கைத் தமிழர்/ சிங்கைத் தமிழர்/மலேசியத் தமிழர்/ மும்பைத்தமிழர்.....போகிற போக்கில் மதுரைத்தமிழர்/சென்னைத்தமிழர்/ நெல்லைத்தமிழர் எனவும் வருமோ? நெல்லையில் எவனாவது புகுந்து அடித்தாலும்( ”எவம்ல எங்க ஊர்ல புகுந்து அடிப்பான்னு சொல்றது? ”என நெல்லைக்காரர்கள் அருவாளுடன் எனக்காகக் காத்திருக்கவேண்டாம்) இப்படித்தான் நாம் புலம்புவோமா? ப்ரணாப் முகர்ஜியை எதிர்நோக்கிக் காத்திருப்போமோ?

உணர்ச்சி வசப்பட்டு, தான் மரிப்பதால் எவனுக்கும் லாபமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமலே தீக் குளிப்பதும், அத்தழலில் அரசியல்கட்சிகள் குளிர்காய்வதும் முதல் பக்க செய்திகளாயிருந்து இப்போது கடைசிப்பக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, இலங்கையில் இருக்கும் நாலு தமிழனும் தினமும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்க, நாம் இன்னும் நயன் தாராவுக்கும், அசினுக்கும் கலைமாமணி கொடுத்து கவுரவித்துக்கொண்டிருப்போம். தமிழனது கலை உணர்வை உலகம் அறியவேண்டாமா?

No comments:

Post a Comment