Welcome! This blog is about the ripples on my mind pool by the impact of life. Your comments would be greatly appreciated
Sunday, September 25, 2005
மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்
இந்தியில் கார்டூன் நிகழ்சிகள் என்றதும்,"சரி , இனிமே நம்ம பயல் தொலைக்காட்சி பக்கம் போறதை கொஞ்சம் நிறுத்துவான்" என மகிழ்ந்திருந்தேன். நினைப்பில் மண்ணை வாரிப்போட்டது டிஸ்னி சானல். ஒரு சிரமமும் இல்லாமல் அதே அளவு நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன் பையன் இருக்கிறான். பார்த்த நிகழ்சிகளைக் குழந்தைகள் தங்களுக்குள் பேசி நடித்து விளையாடுவது உலக வழக்கு. நேற்று அவன் விளையாடுவதை சிறுது கவனித்தேன்.
அட்சர சுத்தமாக இந்தி வாக்குகள் சுளுவாக குழந்தைகளுக்கு வருகின்றன. " நீ சொன்னது உனக்குப் புரியுதா?" என்றால் அதன் அர்த்தமும் குழந்தைகள் சொல்கின்றனர். கார்ட்டூன் இந்தியில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் .slang போன்றவை கலக்காமல் பேசப்படுகிறது. விளைவு? நல்ல மொழிப் பயிற்சி அதிகம் முயற்சிக்காமலே வருகிறது. பாராட்டவேண்டும் இந்தியில் மொழிப்பெயற்ச்சி செய்கிறவர்களை.
தமிழிலிலும் கார்ட்டூன் பார்த்தேன். இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ச்ரளமாக slang கலந்து சொற்றொடர்கள் வருகின்றன. இதனால் தமிழ் வளராது போவது மட்டுமல்ல, "தமிழ் இப்படித்தான் பேசவேண்டும் " எனக் கருத்தும் இளைய தலைமுறையிடம் வந்துவிடும்.
மொழிப்பெயர்சி செய்பவர்கள் இவ்வாறு ஒரு கண்ணில் வெண்ணெய் , மற்றொன்றில் சுண்ணாம்பு என இல்லாமல் இருந்தால் தமிழுக்கு நல்லது.
முதலில் ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம் வந்துவிட்டது என்ற நற்செய்தியை அறிவித்துவிடுகிறேன். இரு வாரங்களுக்கு முன் இது குறித்து குறிப்பாக எழுதியிருந்தேன். நண்பர் தெரிவித்த மார்கெட் ரகசியம் என்பதால் சிறிது அடக்கி வாசிக்க நேர்ந்தது.
"இது ஒரு புதிய மார்கெட் திறக்கும்" என சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். சில கருத்துக் கணிப்புகள் , ஆண்களில் பலர் சிகப்பழகு அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தருவதாக எண்ணுவதாக குறித்திருந்தன. உலகமயமாக்கலில், எந்த சமுதாயம் சிலரது தோல் நிறம் கொண்டு தங்கள் முதலீடுகளைத் தீர்மானிக்கிறது எனப் புரியவில்லை.
எந்த சமுதாயத்தில் இவ்வாறு ஆண்கள் சிகப்பழகை விரும்புகிறார்கள் எனபது இனி வரும் விளம்பரத்தில் காணலாம் - மிகத் தவறான கருத்த்து மதிப்பீடுகளின் வெளிப்பாடாக.
அண்ணாசாலையில் "நீங்க ஃபேர் ஆக வேணாடமா? எங்க க்ரீம் யூஸ் பண்ணிப் பாருங்க" என த்ரிஷா, கிரண் ஆகியோரது அறிவுறுத்தல் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
இது உருப்படற வழியாத் தெரியலை.
Saturday, September 17, 2005
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்.
------------------------------------------------------------------------
நீங்கள் நினைத்த அந்த நாலெழுத்து வார்த்தையினும் கெட்டது இது. RAPE என்பதற்கு, தமிழில் கற்பழிப்பு என்பதைவிட மிக வல்லிய வாக்கு இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. அதன் நிகழ்வைவிடக் கொடியது அதனைக்குறித்தான அவதானிப்புகளும், எண்ணங்களும். ஒரு சமுதாயம் எப்படி தன் பெண்களை குறித்து சிந்திக்கிறது என்பது அதன் அரசியல் வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.
பாக்கிஸ்தானில் பஞ்சாயத்தால் பல மிருகங்களால் கற்பழிக்கப்படவேண்டும் என தண்டனை விதிக்கப்பட்ட பெண் அமெரிக்கா சென்று "பாக்கிஸ்தானில் நீதி கிடைக்காது" என வெதும்பிச் சொன்னதைக் குறித்து ,முஷரப் பேசியது மிகத் தரக்குறைவு.
ஒரு நாட்டின் பிரதான பொறுப்பில் உள்ளவர் பேசும் பேச்சல்ல இது.
"பாக்கிஸ்தானியப் பெண்கள் வெளிநாடு சென்று ( அமெரிக்கா, கனடா எனக் குறிப்பிட்டு)குடியேற்றமும், டாலர்களும் கிடைப்பதற்காக, வேண்டுமென்றே கற்பழிப்பில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றனர்" என்று அவர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாக்கிஸ்தானில் பெண்கள் இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளது நியாயமான கோபங்களின் வெளிப்பாடு. ஆயின் இது போதாது.
ஆணாதிக்க உணர்வும், பெண்களை மிகக்கேவலமாக கருதும் எண்ணமும் கொண்ட ஒரு நாட்டுத்தலைவரிடம் என்ன பெரிதாக எதிர்பார்த்துவிடமுடியும்?
வேலியே பயிரை மேய்ந்த அவமானம் ஒருபுறமிருக்க,அதனைக் குறித்தான சிந்தனையும் பேச்சும் அதனைவிட அருவெறுப்பாக இருக்கிறது. முஷரஃப் காஷ்மீர் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு கராச்சியிலும், லாகூரிலும் தனது ஆட்சியின் தரம் குறித்து கவலைப்படட்டும்.
முதலில் மனிதனாக அவர் வாழ முயலவேண்டும். பாக்கிஸ்தானியாக வாழ்வதை பற்றி அவர் பிறகு யோசிக்கலாம்.
காக்கைச் சிறகினிலே -2
நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பச்சி கர்க்காரியாவின் கட்டுரை
சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் கலந்துகொண்டதைக் கண்டித்து அமைந்திருந்த அக்கட்டுரையின் நியாயமான கோபங்கள் சம்பந்தப்பட்டவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்கும்.
கறுப்பாக இருப்பது ஏதோ குறைபாடு என்பது போலவும், அவ்வாறு இருப்பவர்கள் சிவப்பாக்கும் க்ரீம்கள் உபயோகிப்பதன் மூலம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது போலவும் அமைந்து வரும் விஷமத்தனமான விளம்பரங்களின் சொந்தக்காரர்கள் நடத்தும் விழாக்களில் அதுவும் சிகப்பு மட்டுமே அழகு எனக்காட்டும் அழகுப்போட்டிகளில் பெண்ணியவாதிகள் கலந்துகொண்டு கைதட்டுவது எந்தவிதத்தில் அவர்களின் தார்மீகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது?
'உழைத்துப்படித்து முன்னேறுவது என்பதைவிட சிகப்பாக இருந்தால் போதும்; அழகாக இருந்தால் போதும்; பேரும் புகழும் தானாகவே தேடிவரும்; சினிமாவில் வாய்ப்பு கிட்டும்' என்பது போல அமைந்து வரும் விளம்பரங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. (இது குறித்தான எனது வாதங்களை அண்மையில் எழுதினேன்). இதில் சினிமாக்காரர்களும் ( ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இது வேணுமா?)அடக்கம்.
பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளின் மனதைத் திசைதிருப்பும்படி அமையும் இவ்விளம்பரங்கள் ஒரு புறமென்றால், மற்றொரு சோப்பு விளம்பரம் ஒரு படி மேலே செல்கிறது. பெண்ணை சோப்பு வாங்க அனுப்பும் அம்மா, அய்யோ இவள் வேறெதாவது சோப்பு வாங்கிவந்துவிட்டால், சருமத்துக்கு கேடாகும்.. அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது ( எப்படி இருக்கிறது கதை? பெண்ணுக்கு வயது ஏழு இல்லை எட்டு இருக்கும்) என அல்லாடுவதாக அமைந்திருந்தது. யார் சொன்னார்களோ "கல்யாணமே நடக்காது" என்னும் வரிகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன செய்தாலும் விஷம் விஷம்தானே.
இது போன்ற விளம்பரங்களும் அவை விற்கும் விஷங்களும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றும் கொடிய சக்திகள் இவை.
Saturday, September 10, 2005
பாரதி ஸாங்க்ஸ் லிஸன் பண்ணினீங்களா?
பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா இன்று வந்தது. வழக்கம் போல விஜய் ஆதிராஜ் தமிங்கிலத்தில் தொடங்கினார். அதில் பேசிய சொற்றொடர்களைக் கேளுங்கள்.
"பாரதி எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லையா?
அவர் ஆயிரக்கணக்கான பாடல் எழுதியிருக்கார். அவரோட நிறைய ஸாங்க்ஸ் படங்கள்ல கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க.
இந்த எபிஸோட் அவரை ரிமெம்பெர் பண்ற மாதிரி அமைச்சிருக்கோம்
அவரோட திரைப்பட(?) டூயட் ஸாங்க்ஸ் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல பாடுவாங்க.
நீங்க எந்த ஸாங்க் பாடப்போறீங்க?
வெரிகுட்.
ஒரு சின்ன ப்ரேக்."
பிற நிகழ்சிகளில் ஆங்கிலம் கலப்பதை விடுங்கள். இன்றாவது, பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம். இசைக்கு மொழி கிடையாது என்று ஒரு சாக்கு சொல்லிவிடலாம். ஆனால், பாடலுக்கும், கவிதைக்கும் மொழியின் ஆழம் அடர்வு உண்டு. அந்த அளவிற்காவது பாரதியின் பாடல் என ஒரு மரியாதை இருந்திருக்க வேண்டும்.
இதைச் சொல்லப்போனால் " இது ஜனரஞ்சகமான, பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் நிகழ்ச்சி. இதிலெல்லாம் ரொம்பவும் மொழித் தரம் என்றெல்லாம் பார்க்க முடியாது " எனப் பதில் வரும். அதற்காக இப்படியா?
தேவுடா!
மெல்லத் தமிழினி.....
போன வாரம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமாய் ஒரு அவசரப் பயணம். சென்னைஎக்ஸ்பிரஸ் சென்ட்Tரலில் வந்து சேர்ந்த்ததுமே ஒரு புதிய உற்சாகம். குப்பையாக மும்பை சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு சென்னை என்றாலே கொஞ்சம் நிம்மதிதான்.
மவுன்ட் ரோட்டில் ஒரு பெரிய விளம்பரப்பலகை. "செல்ஃபோன் எதுக்கு. டாக் பண்ண்றதுக்கு" என ஒரு நடிகை சொல்லியவாறு ... தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு அதனை வாசித்துக்க் கட்டுவதில் சிரமமே இருக்கவில்லை. " அப்பா, இது இங்க்லீஷ்ல இருக்கு. நீ தமிழ்ல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு" என்றான். ஒரு வருடம் முன்னால் புனே நகரில் தேசிய வேதியியல் ஆராய்வுச் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
எனது நண்பர் டாக்டர் தேஷ்பான்டேயின் மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை செல்ல நேர்ந்தது. " அவனுக்கு தமிழ் தெரியாதே" என்றார் கவலையாய். " ஒன்றும் பயமில்லை சார். ஒரு மாதத்தில் தேறிவிடுவான். மேலும் அலுவலகத்தில் ஆங்கிலம் இருக்கும். கவலையை விடுங்கள் " என்று சொல்லியிருந்தேன். இரு வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் அவர் பையனைச் சந்தித்தபோது " மொழிப் பிரச்சனை இருக்கா?" என்றேன். இல்லை என்றான் சிரித்தபடி. " அவங்க தமிழ்-ல பேசினாலும் எனக்குப் புரியும். பாதிக்கு மேல தமிழ்ல இங்லீஷ்தானே இருக்கு ? "
தமிழ் இலக்கணம், இலக்கியம் தெரியாது எனக் கவலைப்படுவதை விட இது மிகத் தீவிரமாக கவனிக்கப் பட வேண்டிய விசயம். சராசரி மனிதன் பேசும் தமிழில் தமிழ் எத்தனை சதவீதம் இருக்கிறது? ஆங்கிலம் கலக்காது பேசுவது "செந்தமிழில் பேசுவது" என்று அர்த்தமில்லை.
எளிய தமிழில் கடு கட்டியான செந்தமிழ் வாக்குகள் இல்லாமலே சரளமாக பேசலாம். இந்த மொழிப்பூனைகளுக்கு மணிகட்டுவது நம்மால் மட்டுமே முடியும்.
அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யமாட்டர்கள். அவர்கள் அளவில் மொழிப்பற்று என்பது நெடுஞ்சாலையிலும், ரயில்வண்டி நிலயங்களிலும் இந்தி மொழிப் பெயர்களை தார் போட்டு அழிப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது.
நாம் ஒழுங்கான தமிழில் வீட்டிலும் வெளியிலும் பேசவில்லையெனில் 'மெல்லத் தமிழினி..."
பி.கு அதே தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மும்பையில் எப்படி தெரியுமா? சரியான இந்திச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள்.!
Friday, September 09, 2005
சிந்திக்க ஒரு நொடி
-------------------
நாராயண் மாத்ரே-ஐ கொஞ்ச நாளாய்த்தான் எனக்குப் பழக்கம். பெரிய உரத்தொழிற்சாலையில் பணியாற்றும் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பிடித்துவிட்டது. வழுக்கைத்தலையும், சிறிய மூக்குக்கண்ணாடியுமாய், முதிர்ந்த உயர் நடுத்தரமட்டத்து தலைமுறையின் ஒரு உதாரணம் அவர்.
போனவாரம் எனது அலுவலக மின்னஞ்சல் தொடர்பு சிறிது பாதிக்கப்பட்டிருந்ததை அவருக்கு ஒரு மின்னஞ்சலில் விளக்கியிருந்தேன். நேற்று சந்தித்தபோது சட்டெனக் கேட்டார் "நீங்கள் கான்வெண்ட்டில் படித்தவரில்லை சரியா?"
ஆம் என்றேன்.
"உங்கள் தாய்மொழியில் பள்ளியில் படித்திருப்பீர்கள்" என்றார்
"ஆம்" என்றேன் சற்றே வியப்புடன்.எதாவது தவறாக எழுதிவிட்டேனோ?
கேட்டுவிட்டேன்.
சிரித்தார் " இல்லை. தவறு இல்லாமல் இலக்கண சுத்தமாக இப்போது இளைஞர்கள் எழுதுவதில்லை. அதுவும் மின்னஞ்சல் என்றால் கேட்கவே வேண்டாம்."
"நீங்கள் சொல்வது சற்றே மிகைப்பட்டதாகத் தோன்றுகிறது" என்றேன். " உங்கள் மற்றும் எனது தலைமுறையினருக்கு ஆங்கில மீடிய கான்வெண்ட் படிப்பு என்றால் ஒரு நிறப்பிரிகையுள்ள கண்ணாடி மூலமே பார்க்கிறோம். சிலருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை மறைப்பதற்கு அனாவசியமாக எல்லாவற்றிலும் மட்டம்தட்டி குற்றம் காண்கிறோம். அனைவரும் இப்படி எழுதுவதில்லை. சிலருக்கு பொறுமை இல்லாமை, நேரப்பற்றாக்குறை, அவசரம் ... அதனால் பிழைகள் வரலாம். பொருட்படுத்தாதீர்கள்" என்ற என் பேச்சைக் கேட்டவாறே அவரது கணனியின் திரையைக் காட்டினார்.
"இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்" என்றார். அது ஒரு தனியார் நிதிக்கம்பெனியிலிருந்து வந்திருந்தது. பெரும் பேரும் புகழும் உலகளவில் பெற்றிருக்கும் நிதிக்கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபரின் மின்னஞ்சல். நம்பமுடியாத அளவிற்கு பிழைகள்.
"பிழைகளை விடுங்கள். வார்த்தைகளில் ஒரு மதிப்போ, மரியாதையோ கூடத் தென்படவில்லை.சுதாகர் " என்றார் மாத்ரே. "நான் ஒரு வாடிக்கையாளன் என்ற அளவில் ஒரு மரியாதை எதிர்ப்பார்ப்பது தவறா? சொல்லுங்கள்" என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
Slangs சரளமாக உபயோகித்துப் பழகியிருக்கக் கூடும் அந்த இளைஞன்... வார்த்தைகளி, சொற்றொடர்களில் ஒரு இணைப்பு இல்லை. நேராக விசயத்திற்கு வந்திருந்தான். இரண்டே வார்த்தைகளில் தனது கம்பெனி ஏன் நிதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறான். மிக மிக நாசூக்காகச் சொல்ல வேண்டியது. யார் படித்தாலும் கோபம் மூளும்.
"நமது இளைஞர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டுமென்பதும், சிந்திப்பதை எப்படி வார்த்தைகளில் கொணரவேண்டுமென்பதும் கற்பிக்கப் படவில்லை. நான் படிக்கும்போது லாஜிக் என்றொரு வகுப்பு உண்டு. சிந்திக்கும் முறை, வழி பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள் " என்றார் மாத்ரே, மூக்குக்கண்ணாடியைத் துடைத்தபடியே.
"இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஒரு மனிதனின் தவறை அவன் தலைமுறை முழுதும் ஏற்றுவது சரியல்ல. எத்தனை எம்.பி.ஏ பட்டதாரிகள் இப்போது வருகிறார்கள்? எல்லோருமா இப்படி தவறு செய்கிறார்கள்?" என வாதாடினேன்.
" நான் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே காட்டினேன். என்னுடன் வருகிறீர்களா? மும்பையின் பிரபலமான கல்லூரிகளுக்குச் செல்வோம். எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும், அதனை வெளிப்படச் சொல்லும் திறமை இருக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் மாத்ரே.
"நான் படித்தது கிராமத்தில். மராத்தி மீடியம்தான். அதில் வருத்தமோ வேதனையோ இல்லை. மாறாக இப்போது எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்கிறேன். Wren &Martin இலக்கணமும், மனப்பாடச் செய்யுள்களும், கணித வாய்ப்பாடுகளும் இப்போதும் எனக்குக் கைகொடுக்கிறது. நாலு இலக்க எண்களைக் கூட்டவும், வட்டி, கழிவுத்தொகை கணக்குகளுக்கும் எனக்கு எக்ஸெல் தேவையில்லை. இவர்களுக்கு லாப்டாப் இல்லாமல் முடியாது." மாத்ரேயின் சொற்களில் உண்மையிருக்கிறது.
புதிய பாடத்திட்டங்களை ஒழுங்காக உருவாக்குவதிலும், அதனைச் செயல்படுத்தவும் தோல்வியடைந்த நாம், பழைய பாடத்திட்ட முறையிலிருந்த நல்ல விசயங்களையும் கைவிட்டுவிட்டோ ம். தெளிவாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைக் கோர்வையாகச் சொல்லவும், எழுதவும் நமது இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோ ம்.
இந்தியாவின் இப்போதைய முன்னேற்றத்திற்கு இந்த தெளிவான சிந்தனையும், திறம்படச் செயல்படும் திறனும் முக்கியகாரணம் என்பதை வளர்ந்து வரும் தலைமுறைக்கு உணர்த்தவேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் பேச்சுப்போட்டியும், எழுத்துப்போட்டியும், போட்டியளவில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிட்டும் என்பது இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்பப் பயிற்சியளிக்கவேண்டும். கணிதம் என்றாலே "எங்கே எக்ஸெல்?" என்னும் அளவிற்கு மூளைச் சோம்பேறிகளை உருவாக்குவதில் பெரும் அபாயம் இருக்கிறது. கணனித்துறைக்கு வெறும் coderகள் மட்டும் வேண்டுவதில்லை. ஆராய்ந்து அறிந்து, செயல்படுத்தும் திறமையும் முக்கியம் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணருவதில்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் PTA போன்ற அமைப்புகள் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இல்லையெனில், பெயர் சொல்லவே திக்கித்திணறும் இந்தியாவை இன்னும் பத்துவருடங்களில் காணலாம்.
Saturday, August 27, 2005
காக்கைச்சிறகினிலே
" தெரியுமோ, புதிய சிகப்பழகு சாதனங்களை இந்த முறை நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்தது தென்ன்னகத்தில். அதில்தான் வருமானம் கூடியது. முக்கியமாக கறுப்பாக மக்கள் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவில் தான் வியாபாரம் அதிகம்.." கடுப்பானேன் நான்."கறுப்பு சிகப்பு எல்லாம் ஜாதி பார்ப்பது போல. இதில் என்ன இருக்கிறது?வேறு காரணங்கள் இருக்கலாம். சும்மா சொல்லாதீர்கள்."
" வியாபாரமே நிறத்தில்தான் சார்" என்றார்.
"எத்தனை முறை நீங்கள் சிகப்பாக இல்லையா? எனக்கேட்கிறோமோ, அத்தனைக்கு மக்கள் எங்கள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சிகப்பழககு கிரீம்,பவுடர் வாங்குகிறார்கள் "
ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், மேலும் மறுத்தேன். " இது அநியாயம். மக்களுக்கு இல்லாத ஒரு தாழ்வு மனப்பாங்கை வளர்த்து உங்கள் பொருளை விற்கிறீர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்"
சிரித்தார். "நாங்கள் வளர்க்கவில்லை. கண்டுபிடிக்கிறோம். முக்கியமாக ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுகிறேன். வெளியே சொல்லக்கூடாது "என்றவர் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரையைக் காட்டினார் ( confidential என்பதால் கம்பெனியின் பெயரையும், அவரது பெயரையும் குறிப்பிடவில்லை)
தமிழ்நாட்டில்,ஆந்திராவில் 14-18 வயது மாணவர்கள் மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் வருமான,போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மக்கள் நெருக்கம், பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை போன்ற பல அளவுகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்/பெண்கள், ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஆய்வுக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வளர்க்கிற, உங்களை தொய்யச் செய்கிற முக்கியமான காரணத்தைக் கூறுமாறு ஒரு கேள்வி. அதற்கு "ஆங்கிலத்தில் பேச இயலவில்லை " என 70% கூறியிருக்கின்றனர். "நான் கறுப்பாக இருக்கிறேன்" என்பதை 45% மாணவர்கள் குறையாகச் சொல்லியிருக்கின்றனர். ( சிலர் பல காரணங்களை வரிசைப்படுத்தியதால் இரு தரப்பிலும் அவர்களது காரணங்கள் சேர்க்க்பட்டிருகின்றன).
"சிகப்பாக இல்லை எனப் பெண்களைப்போலவே ஆண்களும் நினைக்கின்றனர். குறிப்பாக +2, கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம். " என்றார் நண்பர்.
"மாணவிகள் சிலர், தாங்கள் கறுப்பாக இருப்பதால் சில மாணவிகள் தங்களிடம் பேசுவதில்லை எனவும் , மேடைப்பேச்சு, நாடகம் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களைச் சேர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்" என்கிறது அந்த ஆய்வு.
கிராமச்சூழ்நிலையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இது அதிகமில்லை. நடுத்தரமான நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், விசாகப்பட்டினம், நெல்லூர் என வரும் நகரங்களில் இது அதிகம்.
"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெயர்நத குடும்பத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகளிடம் இம்மனப்பாங்கு அதிகம் காணப்படுகிறது. "குடும்பச் சூழ்நிலையும் நகரச் சூழலும் மாறுபடும் போது உண்டாகும் தடுமாற்றம் இது " என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
" முகப்பூச்சு பவுடர் உபயோகிக்கும் ஆண்கள் ( மாணவர்கள் ) தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகம் " என்கிறது ஆய்வு. "இது வாசனைக்கோ அன்றி வியர்வைக்கோ இல்லை. முகம் வெளுப்பாகத் தோன்றவேண்டும் என்ற அடிப்படை எண்ணமே இந்த உபயோகத்திற்குக் காரணம்" என்றார் நண்பர். விரைவில் ஆண்களுக்கு என விசேஷமாக முகப்பூச்சு பவுடர் கொண்டுவர சில கம்பெனிகள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. மார்க்கெட் அப்படி.
மேலும் வரும்...
Sunday, August 14, 2005
சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்
--------------------------------------
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நமது 70 களின் பசுமைப்புரட்சி பற்றி இன்றும் மார்தட்டிக்கொள்வதின் அபாயத்தை விளக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் சைக்கத் நியோகி. 70 களின் தீவிரம் இன்று இல்லை என்பது வருந்தத்தக்க நிதர்சனமான உண்மை. உணவுப் பொருட்கள் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறது அக்கட்டுரை.
CMIE -ன் உணவுப்பொருள் விளைச்சல் குறித்த 2004-05 -ன் புள்ளிவிவரங்கள் கவலைதருகிறது.
உதாரணமாக அரிச உற்பத்தி 1.3% குறைவாகவும், பருப்பு போன்றவைகளின் உற்பத்தி 1.4% குறைவாகவும் இருப்பது(2003-2004 உற்பத்தியுடன் நோக்கும்போது) குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சராசரி இந்தியனுக்கு கிடைத்த உணவுப்பொருள் 1990-ல் 510 க்ராம். இது 95-ல் 495 கிராம் ஆகவும், 2003-ல் 436 ஆகவும் குறைந்து வருகிரது. இதேபோல பருப்பு வகைகள் 91-ல் 41.6 கிராம் எனவும் 2003-ல் இது 29.1 கிராம் எனவும் குறைந்து வந்திருக்கிறது.
உணவுப்பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விளைநிலங்களின் அளவு கூடுவதில்லை எனவும், நிலங்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது எனவும் விவசாயத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விளைநிலங்கள் , ஒரு மனிதனுக்கு 1991 ல் 0.34 ஹெக்டேர்இருந்தது. இது 2001 -ல் 0.31 ஹெக்டேர் ஆகக் குறைந்திருக்கிறது. இருக்கும் நிலத்தில் அதிக மகசூல் தரும் விளை பயிர்களை வளர்ப்பதில் உள்ள பெரும் தடைகல் - விவசாயிகளுக்குத் தேவையான செய்திகள், சரியான ஊடகங்கள் வழியே சென்று சேருவதில்லை. விவசாயத் துறையில் வல்லுநர்கள் அளவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது (M.s.Swaminathanக்கு அடுத்த தள அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ). மேலும் ஊக்கத்தோடு புது முயற்சிகள் எடுப்பதில் உள்ள தயக்கம் ( இஸ்ரேலுடன் ஏற்பட்ட விவசாயத் தொழில் நுட்பப் பரிமாற்ற அமைப்புகளின் முயற்சிகள் என்னவாயிற்று?), உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலப்பாங்கும், அவற்றிற்கு எதிரான புரட்சிகளும் விவசாயத்துறையில் புதுக்காற்று வீசுவதற்கு நல்ல தளம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பண்பளவில் மாற்றப்பட்ட பயிர்கள் ( genetically modified குத் தமிழில் என்னவென தெரியவில்லை, மன்னிக்கவும்), பருத்தியைத் தாண்டி பிற பயிர் ரகங்களில் விவசாயிகளைக் கவரவில்லை. இதிலும் மோன்ஸோன்ண்டா நிறுவனத்தின் பண்புமாற்றப்பட்ட பயிர்களின் விதைகள் குறித்தான வாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
நோய்களையும், புழுக்களையும் எதிர்க்கும் புதுப்பயிர் ரகங்கள் பல பயிர்களில் இந்தியாவில் வருவதில் உள்ள சிரமங்களைக் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது.
நமது இளைய தலைமுறை, விவசாயத்திலும் ஈடுபாடு கொள்ள வேண்டிய தூண்டுதலை பள்ளிகளும், கல்லூரிகளும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் "இஞ்சினீயர், டாக்டர், மென்பொருள் வல்லுநர் " என்னும் கனவுகளோடு மட்டுமே இருப்பதில் "ஒரு தலைமுறையே தவறு செய்துவிட்டதோ?' எனத் தோன்றுகிறது.
விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு புதிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவற்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி வேண்டாத mms-ல் நின்றுவிடாமல், கிராமத்தில் வேளாண்மையின் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியுமானால், நமது வளர்ச்சி சீராக அனைத்துத் துறைகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
Sunday, July 31, 2005
உயிர்களிடத்து அன்பு வேணும்
---------------------------
எனது பக்கத்து வீட்டுக்காரர் இந்திரநில் பாண்டே சொந்தத் தொழிற்சாலை வைத்து நடத்திவருபவர். செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் தொழிற்சாலையில் மிகச்சேதம். அன்று மதியம் கிளம்பி இரவு தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்(வீட்டிலிருந்து அலுவலகம் 3 கி,மீட்டர்தான். மூன்று கிமீ செல்வதற்கு பத்து மணிநேரம் ஆகியிருக்கிறது).
மனிதர் அடுத்த நாள் , அருகில் இருக்கும் ஆரே பால்பண்ணைப் பகுதியில் ( இது நமது ஆவின் போல மும்பைக்கு பால் வழங்கும் மிகமுக்கியமான நிறுவனம்) மாட்டியிருந்தவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலை வரை கொண்டு விட்டுவந்தார். ஆரே நிறுவனப் பகுதியில்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ( பாலாஜி டெலெபிலிம்ஸ் - ஏக்தா கபூர் புகழ்) ஸ்டூடியோக்கள் வைத்திருக்கின்றன. ராயல் பாம் ( Royal palm) போன்ற நவீனக் கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் அழகிய இடம்.இது மலைக்காட்டுப் பகுதி. பால்பண்ணையில் ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்.
அன்று, வெள்ளம் வருமுன்னரே மாடுகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு எடுத்துச்சென்றிருக்கவேண்டும். செய்யவில்லை. குறைந்தபட்சம், அவற்றைக் கட்டியிருக்கும் கயிறுகளையாவது அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. விளைவு மிகப் பயங்கரம்.
"குறைந்தது 700 மாடுகள் செத்து மிதக்கின்றன" என்றார் பாண்டே, மூக்கில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தபடியே. அதிர்ந்துபோனோம்.
"இது பரவாயில்லை. மற்ற தபேலா ( தனியார் மாட்டுப் பண்ணை)க்களில் கூட்டம்கூட்டமாக மாடுகள் மரித்திருக்கின்றன. அவற்றை புதைப்பதற்குக்கூட யாரும் வரவில்லை. நாற்றம் அப்படி குடலைப்பிடுங்குகிறது" என்றார் பாண்டே, தோளைக்குலுக்கி அந்தக்காட்சியை நினத்து அதிர்ந்தபடி. தோல் உரிக்கக் கொண்டு போகும் வசாய் போன்ற இடங்களிலும்" இனிமே மேற்கொண்டு சடலங்களைக் கொண்டுவராதீர்கள்" எனச் சொல்லிவிட்டார்கள். சடலங்களின் நிலையும் , துர்நாற்றமும் அப்படி. இன்னும் உடல் ஊதிய நிலையில் ஆரே காட்டில் சிக்கிக் கிடக்கின்றன பல சடலங்கள். இதில் மனித சடலங்களும் அடக்கம். யார் போய் இக்காட்டில், இம்மழையில் எடுப்பது?
உயிர்வதைத் தடுப்பு தன்னார்வல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தபேலா உரிமையாளர்களை அணுகியபோது புகைப்படம் கூட எடுக்கவிடாமல் துரத்தப்பட்டார்கள். செய்தித்தாள்கள் மூன்றாம்பக்கத்தில் இச்செய்தியைப் பிரசுரித்தன.
முக்கியமாக , இச்சடலங்கள் அழுகுவதால், நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது ( பரவிவிட்டது என்கிறார்கள்). அழுகும் சடலங்களைத் தின்ன காட்டுவிலங்குகள் அருகிலிருக்கும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மலைக்காடுகளிலிருந்து வருவதற்கும் சாத்தியம் இருக்கிறது.
"போய்யா, அவனவன் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டிருக்கான். இதுல மாட்டை காப்பாத்தணுமாமில்ல?" என்று சொல்லிக்கொண்டிருந்தார் தமிழ்க்காரர் ஒருவர் , நேற்று காய்கறிக்கடையில்.
பாரதி இருந்திருந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பான்.
Saturday, July 30, 2005
தமிழா தமிழா
----------------
மழையால் வந்த சேதம் போதாதென, வதந்திகள் உயிர்ப்பலி வாங்கிய அவலம் மும்பையைப் பெரிதும் தாக்கியிருக்கிறது. சுனாமி வருகிறதென சில விஷமிகள் பரப்பிய வதந்தியில் கடற்கரையினருகே நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பதறி ஓட, அந்த அமளியில் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
நேருநகர்பகுதியில் வசிப்பவர்களில் பெருவாரியில் தமிழ்மக்கள்.அன்றாடங்காய்ச்சிகள். அது சேரிப்பகுதியென்பதால் குறுகலான வழிகள் ஓடும் பாதையைல் நெரிசலைக் கூட்டியிருகின்றன. சுனாமி பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்மக்கள் என்பதால் பீதி அதிகமானது.
காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வதந்தியைப் பரப்பியவகளில் சில அறவாணிகளூம், நடனமாதுக்களும் முக்கியமான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேது கொலைக்குற்றம் சாட்டப்படுள்ளது. காவல் ஆணையர் "வதந்திகளை நம்மப வேண்டாம் " என மீடியா மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனமழையில் வேலை செய்யாத மொபைல் போன் கம்பெனிகள், காவல்துறையின் வேண்டுகோள்களை குறு செய்திகள் மூலம் பரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளன.
தாராவி, நேருநகர் குர்லா, செம்பூர் போன்ற இடங்களில் பெருவாரியாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்த தமிழ் சங்கமும் முன்வந்து உதவி செய்ததாக செய்தி இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழ் டி.வி சேனல்களும் "மாண்புமிகு அமைச்சர் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் " போன்ற செய்திகளுடன் கொசுறாக மும்பையில் மழை என்றும் , சில புள்ளி விவரங்கள் தந்ததோடு நிறுத்கிக்கொண்டு விட்டன. முன்பின் தெரியாத மக்களின் உதவியிலும் தியாக மனப்பாங்குமே மும்பையை இயற்கையின் சீற்றத்தில் போராடிப் பிழைக்கவைத்தன என்பது கண்கூடு.
சராசரி மும்பைவாழ் மனிதன் வெள்ளத்தின் மேலே பத்தடி உயர்ந்து நிற்கிறான்.
Wednesday, July 27, 2005
பேய்-யெனப் பெய்யும் மழை
-------------------------
குஜராத்தில் அங்கலேஷ்வரில் நேற்று அலுவலக மீட்டிங் -கில் இருந்தபோது வீட்டிலிருந்து செல்போனில் அவசரமாக அழைப்பு வந்தது. சாதாரணமாக இவ்வாறு வருவதில்லை.
" நீங்கள் இன்னும் மும்பைக்கு கிளம்பிவிவ்லையென்றால் அங்கேயே இருந்துவிடுங்கள். மும்பையில் பயங்கர மழை..நெடுஞ்சாலையில் போக்குவரத்து நின்றுவிட்டது.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது." என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையெனினும் கவலை தந்தது. எப்படிப் போயிச்சேரப்போகிறோம்? என்பதை விட, ஏங்கே, நடுவழியில் நின்று விடுவோமோ? என்ற பயம் தொத்திக்கொண்டது.
" ஒரு துளிக் கூடப் பெய்யலை சார். சும்மா பயமுறுத்தியிருக்காங்க" என்ற டிரைவர், விரார் என்ற இடம் வந்தபோது, மழையின் திடீர்த் தீவிரம் கண்டு பயந்துதான் போனான். " முன்னால ஒண்ணும் தெரியலை சார். நிறுத்திரலாமா? " என்றவனின் குரலில் அச்சம் தெரிந்தது. ராட்சத லாரிகள் பாறைகளில் முட்டிக்கொண்டு அங்கங்கே சுளுக்கி நின்றிருந்தன.
போரிவல்லி வந்தபோது நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகளும், கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. " சாயங்காலம் நாலு மணிக்கு இங்கே நிறுத்தினேன் " என்றார் ஒரு கார் ஓட்டுனர். நான் அவரிடம் கேட்டபோது இரவு பத்து மணி. ஓரமாக பல கார்கள் நிறுத்தப்பட்டு ப்லிங்கர்கள் அணைந்து எரிந்துகொண்டிருந்தன. உரிமையாளர்கள் வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு கால்நடையாகப் போயிருந்தார்கள். பேருந்துகள் மிகச்சிலவே இயங்கியிருந்தன. புறநகர் ரயில்கள் நின்றுவிட்டிருந்தன. மக்கள் அங்கங்கே இறங்கி சுமார் மூன்று நான்கு ரயில் நிலையங்கள் நிறுத்தத்திற்கான தொலைவு நடந்து வந்துகொண்டிருந்தார்கள் சாரை சாரையாய். ஒரு நபர் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்திருக்கக் கூடும்- அதுவும் கொட்டுகிற மழையில்.
"இப்படி ஒரு மழை பத்து வருசமாகப் பார்த்ததில்லை" என்றார் எங்கள் காலனி இரவுக் காவலாளி." இங்க வீட்டுப் பக்கம் கழுத்தளவு தண்ணி. குழந்தைகளைக் கூட்டிகிட்டு என் பொஞ்சாதி எங்க போயிருக்குன்னு தெரியலை. விடிஞ்சதும் தேடப் போணும்" என்றார் கவலையிடன்.
அலுவலகங்களில் பலர் தங்கிவிட்டனர். இதில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டுவிட்டது. பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளிலேயே தங்கியிருக்க, அம்மா ,அப்பாகள் அலுவலகங்களில்.
செல்போன்கள் வேலை செய்யவில்லை. மாட்டிக்கொண்ட மக்கள் வீடுகளுக்குத் தொடர்பு கொள்ள முயன்று வெறுப்புல் திட்டித் தீர்தார்கள். "அவசரத்துக்கு உதவலைன்னா இது எதுக்கு?" என்ற ஞனானோதயம் மழைச்சாரலின் அடியில் உதிக்க, பலரும் ஒரு ரூபாய் பி.சி.ஓ க்களைத் தேடிப் போனார்கள். ஆறுதலான செய்தி, எம்.டி.என்.எல் -இன் பொதுத் தொலைபேசிகள் இயங்கின என்பதுதான். வீடுகளில் கார்ட்லெஸ் போன் வைத்திருந்தவர்கள் மின்சாரம் இல்லாது , போன் இருந்தும் உபயோகமில்லாமல் தவித்தனர்.
ந்யூயார்க்கில் மின்சாரம் இல்லாது 2003-இல் மக்கள் தவித்தபோது, செல்போன்கள் நின்றூவிட, இதே நார்மல் தொலைபேசிகள் மட்டும் இயங்கின என்ற செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எம்.டி.என்.எல், பி.ஏச். என்.எல் இதை விளம்பரத்திற்கு பயன்படுதலாம்.
21 மணி நேரத்திற்குள் சான்டாகுரூஸ் விமான தளத்தில் 833 மிமீ மழை பதிவாகியிருந்தது. புற நகர் கட்டுமானங்கள் தாங்கும் சக்திக்கு இது மிக மிக அதிகம். இருப்பினும், மக்கள் பீதியடையாமல் பொறுமையாக சாலையில் வரிசையாக்ச் சென்றனர் என்பதும், கார்கள், லாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்களை யார் எவரென்ப் பார்க்காது செல்லும் அளவு தூரத்திற்கு ஏற்றிச் சென்றனர் என்பதும், சில கடைகளி, வெளியே போகமுடியாமல் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு டீ, ரொட்டி தந்து உதவினர் என்பதும் மும்பையில் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சான்று.
இதையெல்லாம் விட, இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.
Saturday, May 21, 2005
விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்
இந்திய நாடக உலகில் நவீன நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர் விஜெய் டென்டுல்கர்.மராத்தியிலும், இந்தியிலும் அவர் எழுதிய நாடகங்கள் நாடக உலகை ஒரு கலக்கு கலக்கின. ஐம்பது வருட சாதனையாக அவர் முப்பதுக்கும்மேற்பட்ட நாடகங்களையும், 23 ஓரங்க நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இது தவிர 11 குழந்தைகள் நாடகங்களையும் மராத்தியில் எழுதியுள்ள அவருக்கு பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.
மராத்தி நாடக உலகில் பெரும் புகழும் மரியாதையும் வழங்கப்பெற்ற டென்டுல்கர், பு.லெ. தேஷ்பாண்டேயின் சக கால படைப்பாளியாக இருந்ததில் , மராத்தி நாடகம் செழித்தது. துணிவாகவும் நேரடியாகவும் ஜொலிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட அவரது நாடகங்கள் சமூக எதிர்ப்பையும் சிலசமயங்களில் பெற்றன.
சாக்காராம் பைண்டர் ( Sakharam Binder) என்ற நாடகம் 1974ல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டதும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.நாடகக் கருவும், பேசப்பட்ட மொழியும் அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அமெரிக்கா "விஜெய் டென்டுல்கர் விழா" என 2004-ல் அவரது படைப்புகளை மேடையேற்றி கெளரவித்தது. இதனை இந்திய அமெரிக்க கலைக்குழு ( Indo American Art Council) மற்றும் South Asian Theater Group,American Theater Grop, Queeen's Museum of Art, the Pan Asian Repoertory, The Play Company போன்ற குழுக்கள் செப்டம்பர் 04- நவம்பர் 04 வரை அமெரிக்காவில் பல இடங்களில் நடத்தி சிறப்பித்தன.
விஜெய் டென்Tடுல்கரை இந்தியாவில் விட பிற நாடுகளில் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். முக்கிய காரணம், அவரது நாடகங்களை பிற இந்திய மொழிகளில் உருவாக்கப் பலரும் தயக்கம் காட்டியமையே.
அவரது காதம்பரி II என்ற சமீபத்திய நாடகத்திற்கு அண்மையில் ப்ரியதர்ஷினி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தனது நாடகங்களுக்கு தற்போது கிடைத்துவரும் சிறப்பான இயக்கங்களுக்கும், நாடக நிகழ்வுகளின் தரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இம்முன்னோடி,"இவ்வாறான சிரத்தை காணப்பெறும்போது, 50 வருடங்களாக நாடகங்கள் இயற்றிவரும் என்போன்றவர்களும் மேலும் ஊக்குவிக்கப்படுவது ஆச்சரியமில்லை" என்கிறார் மனநிறைவோடு.
தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால் , தமிழுலகம் வி.சி. காண்டேகர் என்னும் எழுத்தாளரை முன்பு அறிந்ததோடு தேங்கி நிற்காமல், பு.லெ. தேஷ்பாண்டே என்னும் பெரும் நாடக ஆசிரியரை பெயரளவில் அறிந்ததோடு நிற்காமல்,நவீன நாடகங்களில் புது ஓட்டத்தோடு பொலிவு பெறும்.
Saturday, May 14, 2005
ஏட்டில் எழுதாக் கவிதைகள்-4
தாய்மை எவ்வளவுக்கு முக்கியமாக மதிக்கப்படுகிறதோ, அத்தனைக்கு, மறைமுகமாக தந்தைப்பேறும் சமூகத்தில் கவனிக்கப்படுகிறது. இதற்காகவே, குழந்தைப்பேறில்லா மனிதன் பல புண்ணியம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவனது பரிவு கண்டு மனைவி, தன் கணவனின் அரும்பணிகளை ,தாலாட்டில் தன் பிள்ளைக்குச் சொல்வது போல, தன் பாராட்டையும் ,நன்றியையும் தெரிவிக்கிறாள்.
"மைந்தன் பெற வேண்டுமென்று
வருந்திய பாண்டியர்கள்
சாலைகள் போட்டுவைப்பார்
சத்திரம் கட்டிவைப்பார்"
எனத் தொடங்கிய வரிகளில்,அறப்பணிகளுக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
"நெல்லியிலை பிடுங்கி
நேர்த்தியாய் தொன்னை தைத்துப்
பசியறிந்து அன்னமிடும்
பாண்டியர்."
எனப் புகழ்பவள் ,அடுத்த வரிகளில் அவரது அறச்செயலின் ஈடுபாட்டைப் பாடுகிறாள் - ஒரு சிறு கதை மூலம்.
ஊரில் கடும்பஞ்சம். மக்கள் வெளியூர்களுக்கு புலம்பெயர்கின்றனர். வருபவர்க்கெல்லாம் சோறிடுகிறான் தலைவன். அத்தோடு நிற்கவில்லை. பசித்தவர்களைத் தேடி, விளக்கோடு செல்கிறான். உணவின்றி உறங்குபவர்களை,அவர் முகம்பார்த்து, எழுப்பி உணவிடுகிறான். இச்செயலை
"கொப்பரையில் சோறும்
குடத்தில் இளநீரும்
பந்தம் கொளுத்திவந்து
பசித்தார் முகம்பார்த்து
அந்த நகர்ச் சோலையிலே
அமுதிடுவார்"
எனப்பாடுகிறாள் தாய்.தந்தையின் அறச்செயலைக் கேட்டு உறங்குகிறது குழந்தை.
"சீக்கிரம் தூங்கலே... பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்" என மிரட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கும் தாய்மார்கள் படிக்கவேண்டிய வரிகள் இவை.
கடவுளுக்கு மாலை சார்த்துகிறான் தலைவன்.மிக்க கவனத்துடன் பூக்களைப் பறித்து மாலை செய்கிறான். அதில் பூக்களை எவ்வாறு கொய்கிறானென்பதை விவரிக்கிறாள்
"கையாலே பூவெடுத்தா
காம்பழுகிப் போகுமின்னு..
விரலாலே பூவெடுத்தா
வேரழுகிப் போகிமின்னு
பொன்னூசி கொண்டு
பூத்த மலரெடுத்து
வெள்ளூசி கொண்டு
வெடித்தமலரெடுத்து
செடிசெடியாய்ப் பூவெடுத்து
செண்டு செண்டாய் மாலைகட்டி"
சார்த்துகிறானாம் தலைவன். அவனது கவனத்தையும் சிரத்தையையும் உறங்கும் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிறாள்.
"தாமரையின் நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
போட்டாரே நெய்விளக்கு -உங்கய்யா ஒரு
புத்திரனே வேணுமின்னு"
தன் தந்தையின் அறச்செயல்களையும், அவர் பட்ட பாடுகளையும் கேட்டு உறங்குகிறது குழவி. இதல்லவோ பிற்காலத்தில் "மகன் தந்தைக்குச் செய்யும் உதவி" யை செவ்வனே செய்ய உந்துதலாகும்?. இவ்வாறு தான் பிறந்த வரலாறையும், தன்பெற்றோர் செய்த நற்செயல்களையும் கேட்டு வளரும் குழந்தைகள் இருந்த காலத்தில் கண்டிப்பாக "முதியோர் இல்லம்" தேவைப்படவில்லை.
Thursday, May 12, 2005
ஏட்டில் எழுதாக் கவிதைகள் -3
பெண்கள் தாய்மையில் முழுமையடைவதாக சமூகம் எண்ணுகிறது. இது தலைமுறை வளர்ச்சிக்காக சமூகத்தின் அக்கறை என்னுமளவில் ஆரோக்கியமான எண்ணம். ஆயின் தாய்மையடையும் வரை , மணமாண பெண் ஒரு நெரிசலில் உட்படுத்தப்படுகிறாள். "மலடி" என்னும் அடைமொழி, அவள் நினைக்கமுடியாத பயங்கரமான சமூக அங்கீகாரம். இதற்காக அவள் பல வழிமுறைகளையும், சம்பிரதாயங்களையும் கைக்கொள்கிறாள். அவ்வாறான திணறல்களை அவள் வெளிப்படுத்தப் பாடல்களை நாடுகிறாள். அவளது மேலான சமூக அழுத்தங்களைப் பாருங்கள்,
"மலடி மலடியென்னே
வையத்தார் ஏசாதே
மலடியென்ற பெயரை
மாற்றிவைக்க வந்த கண்ணோ?
இருசி இருசியென்றே -என் அப்பா!
என்னைத் தேசத்தார் ஏசாதே
இருசியென்ற பெயரை
எடுத்துதைக்க வந்த கண்ணோ?
இத்தகைய அழுத்தங்களை போக்குவதற்காகவே பிள்ளைக்கலி தீர்க்கச்சொல்லி தெய்வங்களை வேண்டுகிறாள். சடங்குகளையும், விரதங்களையும் மேற்கொண்டு,உடல் வருத்தி மனவருத்தத்தைத் தவிர்க்கப் படாதபாடு படுகிறாள். எப்படியென்றால்,
"காணாக் கோவிலுக்கு
கற்பூரத் தீபமிட்டு
தூரத்துக் கோவிலுக்கு
சுடர்விளக்கு நேர்ந்தாளோ?"
"தை ஆறு மாசமா
தரைமொழுகிச் சாதமுண்ண
நிச்சயமா ஆறுமாசம்
நிலமொழுகிச் சாதமுண்ண
மாசமுடிவிலே மனமொடிஞ்சி நிக்கையிலே..."
"வெள்ளி முழுகி வெகுநாளாத் தவசிருந்து
ஊசி முனையிலே உனக்கே தவசிருந்தேன்"
"விளக்கிலிட்ட நெய்போலே நான் வெந்துருகி நிக்கையிலே"
என்னும் சொல்லில் பிள்ளைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் வேதனையடர்ந்த ,எதிர்பார்ப்புச் சுமைகளுடன் நம் நோக்கி நீள்வது நிஜம்.
பிள்ளையில்லாத பெண்களை நமது சமுகம் எவ்வாறு நடத்துகிறது என்பதின் அழுத்தத்தை இந்நாட்டுப்புறப் பெண்கள் தாலாட்டிலேயே சொல்லிவைத்தது, நமது சசமுதாயத்தில் பெண்களைக் குறித்தான கண்ணோட்டம் தெளிவாகிறது.
Sunday, May 08, 2005
ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2
கடவுள் துதி
பெரும்பாலான பாடல்கள் மதுரை மாவட்டத்தில் கம்பம்பள்ளத்தாக்குப் பகுதியில் சேகரிக்கப்பட்டவை.சுருளியாறு, மலைப்பகுதி, முல்லை நிலப்பகுதி,வேளாண்மையாகும் மருதநிலப்பகுதியென நிலப்பகுதிக்கான தெய்வங்கள் வணங்கப்பட்டன. கணபதியும்,முருகனாரும், அம்மனும், விஷ்ணுவும் வணங்கப்படுவதில் இப்பாடல்களின் பரவல்களை உணரலாம்.
"முந்திமுந்தி விநாயகரே
முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே முன் நடவாய்" ( பக் 32)
"மந்தையிலே மாரியாயி
மலைமேல மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப வரவேணுமய்யா" ( பக் 32)
இப்பாடல் "தண்ணீர் தண்ணீர்" படத்தில் ஒரு பாடலில் வந்துள்ளது.
சுருளி மலைவளம் குறித்து இப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது.
"இஞ்சி படருமலை
ஏலக்கா காய்க்குமலை
மஞ்சி படருமலை
மகத்தான சுருளிமலை"
பொதுவாக நாட்டுப்புறப்பாடல்கள் எளிமையானவை. நேராக விசயத்திற்கு வந்துவிடுபவை. எளிய பதங்கள், எளிய இசை. ஆயின் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் அவற்றின் ரத்தினச் சுருக்கமான பொருள்கள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
"எட்டடிக் குச்சுக்குள்ளே- சுப்பைய்யா
எப்படி நானிருப்பேன்
தங்கமயிலேறி-சுப்பைய்யா
வந்திட வேணுமைய்யா"
எட்டடிக் குச்சு என்பது ஒரு மாளிகையல்ல. எண்சாண் உடம்பு எனக் கொள்க. சுப்பைய்யா என்பது சுப்பிரமணிய கடவுளைக் குறிக்கிறது.
"போலீஸ்காரன்மகள்" படத்தில் வரும்
" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி" என்ற பாடலின் உந்துதல் இங்கிருக்கிறது.
"ஆறும் பெரியாறு- சுப்பய்யா
ஆறுமுகனாறு
இந்த ஆறு கடந்து -சுப்பய்யா
எப்படி நான் வருவேன்" (பக் 40)
இதில் ஆறு என்பதற்கு வழி எனப் பொருள்கொண்டு பார்க்கையில், பக்தியின் உச்ச நிலை புலப்படுகிறது.
நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்தும் எளிமையெனவும் நேராகவே பொருள்கொள்ளலாம் எனவும் நாம் இதுகாறும் நினைத்திருந்ததற்கு நல்ல பாடம்! மிகக் கூர்மையான, பெரும்புலமைகொண்ட புலவர்களின் பாடல்களை மட்டுமே இதுவரை இவ்வாறு அலசியிருந்தவர்கள், கொஞ்சம் நாட்டுப்புறப்பாடல்களை அக்கண்ணோட்டத்தில் காண்பின் பல கவிதை விந்தைகள் வெளிவரும்.
Saturday, May 07, 2005
ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1
சில வாரங்களுக்கு முன்பு 1947 முதல் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய அமரர் திரு. அன்னகாமு அவர்களின் முயற்சி குறித்து எழுதியிருந்தேன். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்" என அவரது திரட்டு வெளியிடப்பட்டது. மிகக்குறைவாகவே பதிக்கப்பட்ட அந்நூலினைப் படித்த அனுபவம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நூலின் தோற்றுவாய்ப் பாடல் நாம் வெகுவாக அறிந்த திரைப்படப்பாடலாக வெளிவந்தது.
"பாடறியேன், படிப்பறியேன்,
பள்ளிக்கூடம் தானறியேன்.."
"நாட்டுப்புறப்பாடலென்னும் பாற்கடலை நக்கிக்குடிக்கத் துணிந்த பூனையின் கதை" இது என ஆசிரியர் அன்னகாமு தன் முயற்சி பற்றிக் கூறுகிறார். அவருடன் இருந்து நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய மாணவர்கள் அவரது அவையடக்கம், மென்மையான பண்பு முதலியவற்றை இன்னும் நினைவுகூறுகின்றனர்.
இந்நூலிற்கு சிறப்புரை திரு.கிவா.ஜ தந்திருக்க, தலையுரை திரு. அவினாசிலிங்கம் தந்திருக்கிறார்.
திரட்டிய பாடல்களை பதினாறு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் பொருள் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் துதியிலிருந்து, மாழை,நாட்டுச்சிறப்பு, பிறப்பு வளர்ப்பு, திருமணம், தொழிற்பாட்டு, திருமணம், குழந்தைகளின் விளையாட்டு, நவீனங்கள், களியாட்டங்கள், கதைப்பாட்டுக்கள், சோதனைகள், வேதாந்தப்பாடல்கள், ஆதிவாசிப்பாடல்கள் , முடிவில் மங்களம் என வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு வகைப்பாடலுக்கும், ஆசிரியர் தனது விளக்கங்களையும், அப்பாடலின் தோற்றக்கதையினையும் இயன்றவரை வழங்கியிருக்கிறார்.
நாட்டுப்புறப்பாடல்கள் /கருப்பொருளை ஏதோவொரு நிகழ்வின் அடிப்படையிலும் சொல்ல முயற்சிப்பதால், தோற்றப்பின்னணி அறியப்படின்,பாட்டின் அறிதலின் சுவை கூடுகிறது.
இப்பாடல்களைக் குறித்து மேலும் காண்போம்
Tuesday, May 03, 2005
மரவெட்டு விழா
Grow trees,Chop cars என அலறுகிறது ஒரு விளம்பரப் பலகை, மும்பையின் மேற்கத்திய விரைவுச்
சாலையின் ஓரம். காரணமில்லாமல் இல்லை.
மும்பையின் மேற்குவிரைவுச் சாலை புறநகர்ப்பகுதியில் அழகன மரங்களின் வரிசை இருபுறமும்
கொண்டது. சாலையை விரிவுபடுத்தவேண்டி, மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டிச் சாய்க்கிறார்கள்.
மரங்களை மீண்டும் நடும் முயற்சியில் செய்வதாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் பருவமழை
தொடங்குமுன்னே சாலையின் விரிவாக்கப்பணிகளை முடிக்கவேண்டிய அவசரம் மட்டுமே தெரிகிறது.
இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்குமென பல தன்னார்வலக் குழுக்கள் கொடிபிடித்தும் பயனில்லை.
எதிர்ப்பு மிகக் குறைந்து பிசுபிசுத்துப்போனது. இதே போல இரு மழைக்காட்டு மரங்கள் , மும்பை
நகருள், சாலையின் நடுவே இருந்தனவற்றை வெட்ட முயன்றபோது எழுந்த எதிர்ப்பு, பல மரங்கள்
வெட்டப்படும்போது இல்லை. மும்பை நகருள் நடப்பதென்றால் ஒரு வித கவனிப்பும்,
நகர்ப்புறமென்றால் ஒருவித கவனிப்புமாக தன்னார்வலக் குழுக்களும் செயல்படுவது பெரும் அவலம்.
இங்கும் மழைக்காட்டு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்கிறது டைம்ஸ் ஆஃப்
இந்தியா(புகைப்பட ஆதாரங்களுடன்).
சாலை விரிவாக்கம், முன்னேற்றம் வேண்டியதுதான். ஆயின் அது எந்த விலை கொடுக்கப்பட்டு
பெறப்படுகிறது என்பதையும் நோக்கவேண்டும். இந்த மரங்களை சாலையோரம் மீண்டும் நடுவதற்கும்
பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் முன்வரலாம்.
மும்பையின் மர அடர்வு குறைந்துகொண்டே வருகிறது எனக் கவலைப்படுகின்றனர் mமும்பை
சுற்றுப்புறசூழல் சங்கத்தினர். அவர்களுடனாவது கலந்து ஆலோசித்து, தக்க அனுபவமும், திறமையும்
வாய்ந்த நிறுவனங்களிடம், மரம் பெயர்த்து மீண்டும் நடுவதின் கான்டிராக்ட் அளித்திருக்கலாம்.
ராவோடு ராவாக மரங்கள் சாய்க்கப்பட்ட மர்மம் புரிபடவில்லை.
முனிசிபாலிடி அலுவலர்கள் என்றேனும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடல் குறைப்பு போன்றவற்றில்
அடிப்படை அறிவு பெறுவரா? என்ற ஆதங்கத்துடன் நான் அனுதினமும் செல்லும்
விரைவுச்சாலையின் இடப்புறம் தெரியும் மரங்களைப்பார்க்கிறேன்.
கடைசி தடவையாக(?)
Monday, May 02, 2005
கோடை - கவிதை
------
தேனீர்க்கடை பெஞ்சுகளை
நனைத்துச் சொட்டி, சாலையோரம்
சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர்
அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில்
சகதியாய்ச் சிதறிப் பயணிக்க,
நாக்கில் நீர்சொட்டி,
நக்கிக் குடிக்கவந்த
கறுப்பு நாய்
தொங்கிய முலைகள்
கோபமாய் ஊசலாட,
பேருந்தின் பின்னோடி
எழுப்பிய குரைப்புகள்.
மின்வெட்டில் தயங்கி நின்ற
மின்விசிறிகளின்
அழுத்திய மொளனத்தில்
மூடிய கதவுகளினின்றும்
மிதந்து நீளும்
வியர்வைப்
பெருமூச்சுகள்..
இவைபோதும்
கோடைவந்ததென்று
அறிவிக்க.
சூரிய உதயங்களின் அவசியமேயின்றி.
Sunday, May 01, 2005
HIV-யும் சமூக விழிப்புணர்சியும்
அண்மையில் கேரளாவில் , எயிட்ஸ்-ஆல் இறந்த மனிதர்களுக்கு சர்ச்சுகளில் இறுதி வழிபாடும் , சாதாரண சவ அடக்க உரிமையும் மறுக்கப்பட்டது என்னும் செய்தி பெரிதாக வந்திருந்த பொழுதும் ,அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
100% படிப்பறிவு பெற்ற கேரளத்திலேயே இந்த நிலையென்றால், சமூக விழிப்புணர்விற்கும், படிப்பறிவிற்கும் உள்ள தொடர்பு ஆரம்பகால நிலையிலேயே இன்னும் உள்ளது என்றே தோன்றுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை புரட்சியால் மீற எத்தனித்த கேரளம் இன்று, ஒரு நோயாளிக்கு அவன் மனிதன் என்னும் அடிப்படை உரிமை மறுதலிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காதது மிக்க ஏமாற்றமளிக்கிறது.
எனது இல்லத்திலிருந்து இரு கி.மீ தொலைவில் இருக்கிற மோட்டார் ரிப்பேர் கடையில் வேலை செய்து வந்த மார்வாடி இளைஞனுக்கு HIV positve என தெரியவர, முதலாளி அவனது தந்தையை ராஜஸ்தானிலிருந்து கூப்பிட்டனுப்பினார். மிகவும் பின் தங்கிய கிராம மனிதனார அவர், மும்பையில் வந்ததும் பலர் ' இவனை இங்கேயே எப்படியோ பிழைக்கட்டும் என விட்டுவிட்டுப் போங்கள்" என அறிவுறுத்தினர். மனிதர் குனிந்த தலை நிமிராமல் இருந்துவிட்டு இறுதியில் மகனை அழைத்துப்போனார். அவர்கள் சமூக ஆட்கள் எதிர்த்துக் கேட்டதில் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் " இன்நோய் வருமுன்னேயே இவன் எனது மகன்."
மிகப் பின் தங்கிய கிராமத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப் படும் சூழ்நிலை இருப்பினும், அவரது அரவணைப்பு, எயிட்ஸ் நோயாளிகளை விலக்கிவைக்கும் நமது சமூகத்திற்கு ஒரு பாடம்.
எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும் நாம் எயிட்ஸ் என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதைப் போல ஒதுங்குகிறோம். எத்தனை பேர் எயிட்ஸ் நோய் குறித்த விளம்பரங்களையும் , தகவல்களையும் கவனித்து உள்வாங்குகிறோம்? இது குறித்து பேசினாலே " வேற எதாவது சொல்லுங்க சார்" என்னும் பதில் வருகிறது.
அடிப்படையில் நமக்கு ஒரு எண்ணம்- ஏதோ நாம் படு புனிதமானவர்களென்றும், நமது சமூகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லையென்றும். எயிட்ஸ் நோயாளியென்பவன் நம்து சமூகத்தின் களங்கமெனவும், இருக்கவே கூடாதென்னும் புனிதப்படுத்தும் முயற்சியில் நமக்குப் பாத்தியதை இருக்கிறதெனவும் ஒரு purging &cleaning attitude எங்கிருந்தோ போலியாக வந்துவிடுகிறது. இது சமுதாயத்தைக் குறித்தும், செக்ஸ் குறித்தும் நாம் கொண்டுள்ள கறுப்புப் படிவங்கள். இதிலிருந்து சற்றே மாறுபட்டுப் பேசினால் முத்திரை குத்தப்படுகின்றனர்
" இத் தன்னார்வலக் குழுக்கள் புகழ் தேடி இவ்வாறு செய்கின்றன" அல்லது " இவனுக்கும் இருக்கிறதோ?" இதெல்லாம் படுசாதாரணமாகக் கேட்கப்படுகின்றன.
பஞ்சாப் போலீஸ் தனது படையில் HIV infected ஆக இருக்கும் காவலாளிகளை அடையாளம் கண்டபின், சற்றும் பெரிதுபடுத்தாமல், அடித்தளத்தில் பெருமளவில் பரிசோதனை செய்யச் உத்தரவிட முயற்சியெடுத்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய செயல். அக்காவலாளிகள் விலக்கிவைக்கப் படவில்லை.
HIV மற்றும் AIDS குறித்து தடுப்புக் காப்புகள் அவசியம். எனினும், தாக்கப்பட்டவர்களை எவ்வாறு சமூகத்தில் நடத்தவேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் மும்பையின் பிரபலமான மருத்துவமனைகளில் Hiv infected மனிதர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.