Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

No comments:

Post a Comment