Saturday, February 13, 2016

கரடிக் காமம்



                               
மாலை ஆறுமணியானது, அந்திக்கருக்கலில் தெரியாமற்போனது. சந்திரசேகர், பதட்டத்துடன் செருப்பை அணிய முயல , அது சறுக்கி விலகி எங்கோ போனது. அவசரமாக அதைத் துரத்தி அணிந்து, சரக் சரக்கென வேகமாய் நடந்தான் சேகர். வேதநாயகம் உரையாடலைத் தொடங்கியிருப்பாரோ?

 “வா, சேகர்” என்றார் வேதநாயகம்,பொய்ப்பல் செட் பளீரெனத் தெரிய, ”லேட்டு போலிருக்கு இன்னிக்கு?”

“சாரி. கல்யாணிகூட ஒரு சின்ன சண்டை. டிஸ்டர்ப் ஆயிட்டேனா, மறந்துபோச்சு” ப்ளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் சிரிப்பதாக நினைத்து, குதிரை போல கனைத்தார். பாலாமணி டீச்சர் இன்னும் வரலை என்பதை, சேகர் உணர்ந்தான்.

“இன்னிக்கு நாம மூணுபேர்தான் இருக்கம். ரசூல்  ஒருவாரம் வரமுடியாதுன்னுட்டான். டூர் போறானாம்.” வேதநாயகம் மூன்று பீங்கான் குவளைகளில் டீயை நிரப்பினார்.

“எந்த கதாநாயகனாவது பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டதா இலக்கியம் சொல்லுதா அய்யா? அப்ப, அது எப்படி காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன்?” ஜேம்ஸ் தொடங்கி வைத்தான்.
“அதென்ன ஜேம்ஸ்? சிலப்பதிகாரத்துல, கானல் வரிப்பாடல் சொல்லுதே?, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும் பிரிவு வந்தது? “

“ஹ..” என்றார் ஜேம்ஸ், முன் நெற்றியைத் தடவியபடி “ அவங்க கணவன் மனைவியாய்யா? சும்மா சேந்து வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா சொல்லணும்?”

“அட, மாதவிகிட்ட சண்டை போட்டுப் போனதுலானதான அவன் கொலையுண்டு போனான்?” என்றான் சேகர்.

“ அப்ப கீப்புகிட்ட கூட சண்டை போடக்கூடாதுங்கீங்க?” ஜேம்ஸ் சீண்டினான். 

சேகர் ஜேம்ஸை ஆழமாகப் பார்த்தான். ஜேம்ஸுக்கு இலக்கியமெல்லாம் பரியச்சமில்லை. சும்மா ஒரு வெட்டிப்பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொள்கிறான். கடும் உழைப்பில், அலைச்சலில் முப்பது வயதிற்கு அவன் நாற்பதாகத் தெரிந்தான். இரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமண மண்டபத்தில்,  எஸ்தர் இவனுக்கு மகள் போலிருந்தாள். வேதநாயகத்தின் அண்டை வீடு என்பதால் , நெருக்கம் அதிகம்.

வேதநாயகம் தில்லியில் ஏதோ செண்ட்ரல் கவர்மெண்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். மதுரையில் சொந்த வீட்டில் குடிவந்த இரு மாதத்திலேயே , அவர் மனைவி இறந்துவிட, தனியராக வசித்துவந்தார். பேஸ்புக்கில் பழக்கமான நண்பர்களை சந்திப்பது, அவர்களோடு இலக்கியம் பேசுவது என்று பொழுதைக்கழிப்பவர். வாராவாரம் அவர் வீட்டில் இலக்கிய உரையாடல் நடக்கும்.

வேதநாயகம் புன்னகைத்தார் “ ஜேம்ஸ், சும்மா மேலோட்டமா இலக்கியம் பேசக்கூடாது. கொஞ்சம் உள்ள போனாத்தான், அதிலுள்ள உளவியலெல்லாம் புரியும். மணிமேகலையில ஆதிரை பிச்சையிட்ட காதைன்னு படிச்சிருக்கியா?”

“இல்ல” என்று தலையசைத்தான் ஜேம்ஸ். சேகர் நெளிந்தான். இதோட ரெண்டு தடவை செல்போனில் கல்யாணி அழைத்துவிட்டாள். ஜேம்ஸுக்கு ப்ரச்சனையேயில்லை. அவன் வீடு அடுத்த வீடுதான் என்பதால் எந்த நேரம் எஸ்தர் அழைத்தாலும் போய்விட முடியும். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு இப்பவே எழுந்து போய்விடலாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கையில் வேதநாயகம் பேசத் தொடங்கினார்.

“மணிமேகலைக்கு கிடைச்ச அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போடறது ஒரு கற்புக்கரசியா இருக்கணும். அப்பத்தான் பாத்திரம் எப்பவும் உணவு கொடுத்துகிட்டே இருக்கும். மணிமேகலா தெய்வம் ஆதிரைன்னு ஒருத்தி கதையச் சொல்லுது. அவ புருசன், சாதுவன் என்கிறவன் அவளை விட்டுப் பிரிஞ்சு பணத்தையெல்லாம் தொலைச்சு, பொருளீட்டுவதற்கு கப்பல்ல போறான். கப்பல் முங்கிருது. இதெல்லாம் , நல்ல மனைவியைப் பிரிஞ்ச பாவத்தின் சம்பளம் இல்லையா?”

“அவ கற்புக்கரசியா இருந்தா, அவன் பிழைச்சிருக்கணும்ல?”

“ஜேம்ஸ். நல்லாயிருக்கே! அவன் பிழைக்கணும்னா அவ கற்போட இருக்கணும். ஆனா அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், என்ன?!” விவாதம் சூடாவதை உணர்ந்த சேகர் இடைமறித்தான்.

“இதப்பத்தி அப்புறம் பேசுவம் சார். சாதுவன் என்னானான்?”

“சாதுவன் நீந்தி, காட்டு மனுசங்க வாழற ஒரு தீவுல ஒதுங்கறான். அவனை அவங்க பிடிச்சு, தலைவன்கிட்ட கொண்டு போறாங்க. அந்த இடம் எப்படி இருந்துச்சின்னா....

”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளை ஒரு குடுகையில நிரப்பி வைச்சிருக்கான். பச்சை இறைச்சியின் நாற்றம் வருது. இறந்த விலங்குகளின் உலர்த்தப்பட்ட வெண்மையான எலும்புகள் போடப்பட்ட இருக்கை - அதுல அந்த தலைவன் அமர்ந்திருக்கான்.”

“அங்.! அவங்க இருக்கற இருப்பை மட்டும் சொல்லிட்டு விட்டா எப்படி? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமுல்ல? அவனுக்குன்னு ஒரு  ஒழுங்கு இருக்கும். அதத்தான் பேசணும்.” என்றான் ஜேம்ஸ்.

“ஹ.ஹ..” சிரித்தார் வேதநாயகம். “. இந்த ஒழுக்கமெல்லாம் அவரவர் பார்வைக்கு ஏத்தபடி மாறும். எனக்கு ஒழுக்கமாத் தெரியறது, உனக்கு ஒழுங்கீனமாத் தெரியும். அந்த தலைவன் இருப்பைச் சொன்னாத்தானே, உனக்கு அவன் கூட்டம் ஒழுங்கீனமா, அருவெறுப்பாத் தெரியும்? அந்த இருக்கையில,   தலைவன் , ஒரு பெண்ணோட இருக்கான். அதுவும் எப்படி... ஆண்கரடி, காமத்துல பெண்கரடியோட கூடி இருப்பதைப்போல’ங்கறாரு.

“எண்குதன் பிணையோ டிருந்தது போல
பெண்ணுடன் இருந்த பெற்றி”

எண்கு-ன்னா ஆண் கரடி. பிணைன்னா பெண் கரடி. ஏன் கரடிக்காமம்? இதுதான் சூச்சுமம்.” வேதநாயகம் டீயை உறிஞ்சினார். சேகர் முன்னே குனிந்து அவரை ஆர்வமாகப் பார்த்தான்.

“அதென்ன கரடிக்காமம்?” என்றான் சேகர்.

“யானைப் புணர்வு, மான் புணர்வுன்னு சொல்லிப் போயிருக்கலாம். கரடி? அது பாடல்கள்ல வர்றது அரிது. அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே?, அது இனப்பெருக்க காலத்துல, பெண்கரடியோடு அடிக்கடி புணரும். சில நேரம் ஒரே நாள்ல இருபது தடவை... அன்றில்,அன்னம் போல காதல்னு சொல்லமுடியாது. தீராக் காமம். அடித்தள உணர்வான, வெக்கமற்ற காட்டுவெறி காமம். அதுமட்டும்தான்.  ’அதுமாதிரியான காமத்துல ஒரு பெண்ணோடு, அனைவரும் காண அவன் இருந்தான்’ங்காரு. இது ஒழுக்கமற்ற நிலைன்னு இல்லாம, கீழான ஒழுக்க நிலை-ன்னு எடுத்துக்கணும்.”

“சாதுவனுக்கு என்னாச்சு?” என்றான் ஜேம்ஸ், கதைகேட்கும் ஆர்வத்தில்.

” அவன் கடல்ல செத்துப்போயிட்டான்னு தப்பி வந்தவங்க சொல்ல, ஆதிரை தீக்குளிக்கப் பாக்கறா. தீ அவளச் சுடாம இருக்கு. சாதுவன் இன்னொரு கப்பல்ல ஊருக்கு வந்து சேர்றான். இப்படி திரும்பி வர்றதுக்கு ஆதிரையோட கற்பு நெறி காரணம்ங்கறாரு புலவர்”

எஸ்தர் அழைக்க, ஜேம்ஸ் எழுந்து போனான். ‘”என்னமோ மெட்ராஸ்ல பிலிம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத் திரியறாம்பா இந்த ஜேம்ஸு. நீயாச்சும் சொல்லிப் பாரு. நாஞ்சொன்னா கேட்கமாட்டான்” என்றார் வேதநாயகம்.

ரசூல் இரு வாரங்கள் கழிந்து வந்தபோது ‘ஜேம்ஸ்,  குடும்பத்தோட மெட்ராஸ் போயிட்டான் ”என்ற செய்தியைச் சொன்னான்.

ஆறு மாதம் கழிந்தபின், ஒரு மாலையில் அலைபேசி சிணுங்கியது. ரசூல் “ சேதி தெரியுமா? ஜேம்ஸ் ஓடிப்போயிட்டானாம்”

”என்ன?” திகைத்தான் சேகர் “மெட்ராஸ்லதான இருந்தான்.?”

”கடன் தொல்லை. எல்லார்கிட்டயும் பத்தாயிரம், ஐம்பதாயிரம்னு வாங்கி ஒரு பிலிம்ல போட்டிருக்கான். படம் முடங்கிப்போச்சு. ஆட்கள் பைசா கேக்கறாங்க. வேலைய எப்பவோ விட்டு நின்னாச்சு அவன். ஸோ..”

”அப்ப அவன் மனைவி? பிள்ளைங்க?”

“பிள்ளைங்க ஏது? எஸ்தர் அங்க ஏதோ ட்ராவல்ஸ் கம்பெனியில வேலை பாக்கறதாச் சொன்னாங்க. தெரியாது”

இருநாட்கள் கழித்து, உரையாடலை முடித்துக் கிளம்பும்போது வேதநாயகம் அவனை நிறுத்தினார்.

“ஜேம்ஸு, எங்கிட்ட இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுப் போயிருக்கான். நீ மெட்ராஸ் போனேன்னா, அவங்கிட்ட அனுப்பிவைக்கச் சொல்லு, அந்தப் பொண்ணுக்குத் தெரியவேண்டாம், என்ன? எஸ்தர்,கண்ணகி மாதிரி. செயினைக் கழட்டிக்கொடுத்தாலும் கொடுத்துறும். மானஸ்தி.”

“சரி”என்று தலையசைத்து வந்தான் சேகர். இவருக்கு ஜேம்ஸ் பத்தின உண்மை தெரியாதோ? சொல்லவேண்டாம்.

ஒரு வாரம் கழித்து அவன் சென்னை போக நேர்ந்ததில், ஜேம்ஸ் நினைவு வந்தது. அவனது பழைய அலைபேசி எண்ணுக்கு எங்க இருக்கப்போறான்? என்ற அவநம்பிக்கையிலேயே அழைத்தான்.

“ஹலோ” என்றது ஒரு பெண்ணின் குரலில். சேகர் தயங்கி “ இது ஜேம்ஸ் நம்பரா? நான் மதுரைலேர்ந்து சந்திரசேகர் பேசறேன்.”

தயங்கியது மறுமுனை “ நான் எஸ்தர். அவர் இல்ல. என்ன வேணும்?”

“இல்லம்மா” அவனும் தயங்கினான்...  எப்படிச் சொல்ல? அவளே கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா?”

.”இல்ல, வேதநாயகம் சார்கிட்ட”

“சார்கிட்டயா?” அவள் திகைத்தது தெரிந்தது.அவன் சொல்லச் சொல்ல அவள் அமைதியாகக்கேட்டாள். “ வீட்டு அட்ரஸை எஸ் எம் எஸ்ல நாளைக்கு காலேல அனுப்பறேன். சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. வேதநாயகம் சார் பைசாவை கொடுத்திடறேன் “

”இன்று இனிமே என்ன செய்யலாம்?”என்று சிந்தித்தபோது, ஹைதராபாத்தில் இருக்கும்போது கூட வேலை பார்த்த பவன் குமார் நினைவுக்கு வர, அலைபேசியில் அழைத்தான்.

“வீட்டுக்கு வந்துரு சேகர். ராத்திரி டின்னர்  எங்கவீட்டுல”

பவன்குமாருடன் கதைகள் பேசி , காலாற நடை செல்லலாமென லிஃப்டில் இறங்கியபோது, யாரோ இடிக்க, தள்ளாடி நிலைகுலைந்தான்.

“ஸாரி” என்ற அந்த மனிதன், தள்ளாடி லிப்டில் நுழைந்தான்..ஒரு பெண்ணை அணைத்தபடி. லிஃப்டின் கதவுமூடும் போது கண நேரம் பார்த்ததில்..இவள் ..இவள் ?

“பேரு தெரியாது. வீட்டு ஓனர் இவன். அவ இங்க தங்கியிருக்கா” கண் சிமிட்டினான் பவன்.

“என்ன வேலை தெரியாது. நேரம் காலம் இல்லாம வருவா, போவா. இவன் மட்டும் இங்க வருவான். ஒண்ணு கீப்பா இருக்கணும். இல்ல அயிட்டம் கேஸ்-ஸா இருக்கும். நமக்கென்ன, இந்த அபார்ட்மெண்ட்ல யார் யார் என்ன செய்ய்யறாங்க?ன்னு பாக்கறதா நம்ம வேலை?”
\
பவன்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது.காவலாளியிடம் துருவிக்கேட்டு, அவள் வீட்டை அறிந்தான். கொசுக்கடியைப் பொறுத்துக்கொண்டு பூங்காவின் பெஞ்ச்சில் காத்திருந்தான்.

பதினோரு மணியளவில் மேலும் பொறுக்கமுடியாமல், வீட்டின் கதவைத் தட்டினான்.

கதவைத் ஒரு பாதி திறந்தவள் முகம் சுருக்கினாள் “யெஸ்? யாருவேணும்?”

“நான் சேகர், எஸ்தர்”

வீட்டின் வரவேற்பறையில் ஐந்து நிமிடம் இருவரும் பேசாது அமர்ந்திருந்தனர்.

“கடன் நெருக்கடி, அதோட வீட்டுல வந்து அவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. என் நகை, அவரு பைக்கு...எல்லாத்தையும் வித்தாரு. அப்படியும் முடியல.வீட்டு வாசல்ல நின்னு கத்த ஆரம்பிச்சாங்க. அவமானம் பொறுக்க முடியாம, ஒருநாள் என்னையே அடமானம் வச்சுட்டேன்... வைக்க வச்சுட்டாங்க”

சேகர் பேசாது அவளை வெறித்துப் பார்த்திருந்தான்.

“வேற வழியில்ல. மானத்தைக் காப்பாத்த மானத்தை விக்கத்தான் வேண்டியிருந்துச்சு. விசயம் தெரிஞ்சு போய் ஜேம்ஸ் சொல்லிக்காம எங்கயோ போயிட்டாரு. அவரை நான் குத்தப்படுத்தல. எனக்கு அவர் நிலமை புரியுது” குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டு பேசியவள், நிமிர்ந்து அவனை நோக்கித் தொடர்ந்தாள்.

“கடன் இன்னும் இருந்துச்சு. பெரிய அமவுண்ட். ஏதோ ஒரு அழுகிய பொணத்தைக் காட்டி, இதுதான் ஜேம்ஸுன்னு என்னைச் சொல்லச்சொன்னாங்க. இன்ஷ்யூரன்ஸ் கொஞ்சம் வந்துச்சு. அதுல கடனை அடைச்சுட்டேன். ஆனா, மேற்கொண்டு வாழ்க்கைக்கு?. “

“ஜேம்ஸ் இன்னும் உயிரோட இருக்கானா?”

“ராஜமுந்திரி பக்கம் பாத்ததா யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரை அவர் செத்திருந்தா நல்லது. எவன் எவனோட காமத்தீக்கெல்லாம் என் உடம்பு இரையாக ஆயாச்சு. இனிமே அவரு வந்தாக்கூட வாடிக்கையாளராத்தான் வரணும்.” எழுந்து “வாங்க” என்றபடி உள்ளே போனாள்.

சேகர் வீட்டின் உட்புறம் புகுந்தான். திறந்திருந்த அறையொன்றில் மங்கலாக ஒளி படர...படுக்கையறை.. குப் என்ற மது நெடி. மெத்தையில் பீங்கான் தட்டுகள் பரந்து கிடக்க,  அதில் இறைச்சி கடித்து எடுக்கப்பட்ட, மீதி எலும்புத்துண்டுகள் நிறைந்து கிடந்தன. மெத்தையில், கரிய உருவமொன்று, தொப்பை மேலெழ மூச்சு விட்டு உறங்கிக்கிடந்தது..கரடி

”.எண்கு தன் பிணவோடு இருந்தது போல..”
”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளும், இறைச்சியும், பெண்ணும் நுகர்வதற்கே என்பதான கரடிக்காமத்தில், கற்புக்கு என்ன அடையாளம்?

  ”நான் சீதையோ, கண்ணகியோ, சார் அடிக்கடி சொல்கிற ஆதிரையோ இல்ல. “ எஸ்தரின் கிசுகிசுத்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவளது நீட்டிய கையில் பருமனான ஒரு  தங்கச்சங்கிலி.

“இத வித்து, நாளைக்கு சாரோட பணத்தைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.”
அவன் கையில் சங்கிலியைத் திணித்தாள். “சார்கிட்ட , நான் நல்லா இருக்கேன்னு சொல்லி வைங்க. அவர் நினைப்புல நான் ஆதிரையாகவே இருந்துட்டுப் போறேன். புருசன் செத்துப்போனான்னுகேட்டு தீயைச் சுட்டா அவ. சாகாத புருசன், செத்துட்டான்னு, காமத்தீயில சுட்டு கருகறேன் நான். ஒற்றுமை ரெண்டுபேருக்கும் ஒண்ணுதான் - புருசன் சரியில்ல”

 “ஜேம்ஸ் வெளிய போயிருந்தான், பணத்த எஸ்தர் கொடுத்தா” என்றான் சேகர் சுருக்கமாக வேதநாயகத்திடம்..

”அட! எஸ்தரைப் பாத்தியா? எப்படியிருக்கா?”என்றார் வேதநாயகம் ஆர்வமுடன்.

”காப்பியங்கள்ல வர்ற தம்பதிகள் மாதிரி “ என்றான் சுருக்கமாக.

“அஹ்! கோவலன் கண்ணகி துன்பமா முடிஞ்சுபோச்சு. அவன் சாதுவன் இல்ல. ஆனா அவ ஆதிரைதான். அவ போட்ட அட்சயபாத்திர பிச்சையா இத எடுத்துக்கறேன்” என்றார் வேதநாயகம், ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்தபடி.

சேகர்,கண்கள் கலங்கத் திரும்பி நின்றுகொண்டான்.. இருபதாயிரத்துக்கு ஒரு மொபைல் வாங்கித் தொலைத்தாக கல்யாணியிடம் சொல்லிக்கொள்ளலாம். சங்கிலி எஸ்தர் வீட்டுப் பூஞ்சாடியில் பத்திரமாக இருக்கும்.

Thursday, February 11, 2016

கர்ம யோகி



யா யா ஸாஹேப்,” வாஙக, வாங்க,”
இது ஏதோ  டை கட்டின , கோட் போட்ட மராட்டிய சேஸ்ல் மேனேஜரோ, லிப்ஸ்டிக் மிளிரும் ரிசப்ஷனிஸ்ட்டோ இல்லை..
கோகுல்தாம் மெடிக்கல் செண்ட்டர் என்ற பகல்வேளை மருத்துவமனையில்,வருபவர்களின் செருப்புகளை கூண்டுகளில் எடுத்து வைத்து, டோக்கன் தருகின்ற சந்திரகாந்த் கோட்டியன் என்கிற மனிதர்.
பலவருடங்களாக நான் வியந்ததுண்டு. இத்தொழிலில் என்ன உற்சாகம் இருப்பதாக இவர் இப்படி புன்னகையுடன் கூடிய முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறார்? அதுவும் வருபவர்கள் முக்காவாசிப் பேர், வலியில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் சொல்வதைக் கேட்காமலேயே, பதிலுக்கு முகமன் கூறாமலேயே செருப்பைக் கழட்டிப் போட்டுவிட்டு படியேறுவார்கள். கோட்டியன், ஒரு வார்த்தை முணுமுணுக்காமல், பொறுமையாக அவற்றை கூண்டுகளில் எடுத்துவைத்து, அவர்களுக்கு டோக்கனை கொடுப்பார்.

முந்தாநாள்தான் , இத்தனை வருடங்கள் கழித்து, அவரிடம் பெயர் கேட்கத் துணிந்தேன். பெயரைச் சொல்லிவிட்டு, சட்டென ஒதுங்கிவிட்டார். பேச விருப்பமில்லாதவரைப் போல. எனக்கு அது புதிராக இருந்தது.. மருத்துவரின் அறைக்கு வெளியே, நீண்ட வரிசை... காத்திருக்கும் வேளையில், மெல்ல வாசலுக்கு வந்து, அவரை , அவர் அறியாமல் கவனித்தேன்.
இந்த உபசரிப்பு செயற்கையாக இருக்குமானால், அவரது முகபாவங்கள் , ஆட்கள் வராத போது மாறவேண்டும். மருத்துவமனையின் பிற தொழிலாளிகளிடமும், சிரித்த முகத்தோடே பேசினார். சிறு குழ்ந்தைகள் வீறிட்டு அலற அலற , விரைந்து கொண்டுவருபவர்களை முதலில் அனுப்பினார். “செருப்பை கீழே போட்டுட்டுப் போங்க.. வர்றப்போ நான் பாத்துக்கறேன்”.
பின்னஃபோர் யூனிஃபார்மில், அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு  அழுதபடி வந்த குண்டு சிறுமியைப் பார்த்து,
“அட்டே, பேட்டியா, எதுக்கு அழறே? நல்ல பிள்ளையில்ல நீ?” என்றவர், அதன் அம்மாவைப்பார்த்து “காய் ஜாலா?( என்ன ஆச்சு?)” என்றார்.
“புக்கார்...( காய்ச்சல்)” என்றபடி அந்தம்மா உள்ளே விரைந்தாள். அடுத்து வந்த ஒரு பணக்காரக் கிழவர், சிடுசிசு முகத்தோடு, செருப்பை உதறி, ஒரு வார்த்தை கேட்காமல் மேலே படியேறினார். சந்திரகாந்த் , புன்னகையுடன் செருப்பை ஒரு கூண்டில் வைத்துவிட்டு “ ஓ சாகேப், 74 டோக்கன். ஞாபகம் வச்சுக்குங்க” என்றார். அவரும் கேட்டதாகத் தெரியவில்லை, இவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்து வந்த இளம் தம்பதியினரின் கையில் சிறு குழந்தை டவலில் புதைந்து வைத்திருந்ததைக் கண்டு,
 செருப்பை விட்டுட்டுப் போங்க. நான் பாத்து எடுத்து வச்சுக்கறேன்”..

என் மகன் பலமுறை வியந்து போய் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். ஸ்கூலில் ‘நான் கண்ட நல்ல மனிதர்‘ என்பதாக அவரைப் பற்றிச் சொன்னதாக ஒரு முறை சொன்னான்.

மருந்துகளை வாங்கி வரும்வழியில் சாலையோரம் இஸ்க்கான் மக்கள் ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா என்று டேப் ஒலித்துக்கொண்டிருக்க, சிறு டேபிளில் பகவத் கீதையை மலிவு விலையில் கொடுத்துக்கொண்டிருந்தனர். மகனுக்கு ‘கீதை ஒரு அறிமுகம்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்தேன். அவன் படித்திருக்கிறான் என்றாலும், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் செறிவை உண்டாக்கும்.
அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவனிடம் ‘கர்ம யோகம், கர்ம யோகி ‘ பற்றி சிறிது விரித்துரைத்தார்.

"வலி, இன்பம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் சமமாக வைத்து, போரினில், போரின் நிமித்தம் மட்டும் கருதிப் போரிடுவாய். இவ்வாறு செய்தால் பாபம் ஏற்படாது”

 நன்றி சொல்லி மீண்டும் நடந்தபோது அவன் கேட்டான் “ கர்ம யோகி-ன்னு நாம யாரைச் சொல்லலாம்பா?”

இருவரின் மனதிலும் இருந்த பெயர் ஒன்றுதான்.

Friday, January 29, 2016

காரோட்டும் பெண்

”பொம்பளைங்க கோயில்ல அபிஷேகம் பண்ணக் கூடாதாம். எந்த காலத்துல இருக்கோம்?” எங்கள் கார் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. ஆரே மேம்பாலத்தில் எதோ லாரி பழுதடைந்து நின்றிருக்கிறது. பாலத்தின் கீழே சிக்னலில் பெரும் நெரிசல்.
“அங்?” என்றார் கண்ணன் ஐயர். ஓட்டுநரின் கவனமென்பது காரில் பேசுபவரின் சொற்களில் இருக்க வேண்டுமென்பதில்லை.
“அதென்ன பொம்பளைங்க கோயிலுக்குள்ள அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு பேச்சு? சிந்தனை முறைகள்ல மாற்றம் வரணும். இல்லன்னா நாம வளரவேயில்லன்ன்னு அர்த்தம்.” ஷரத் சவாண் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை மடித்தார்.
“யாரு சொல்றாங்க?” என்றார் அன்வர்.அவர் எப்பவுமே இடையில் புகுந்து முதல்லேர்ந்து வாங்க-ன்னுவார்.
“யோவ். ஷீர்டி பக்கம் சிங்னாப்பூர் சனீஸ்வரர் கோயில்ல பெண்கள் அபிஷேகம் பண்ண 175 வருஷமா தடைன்னு இருக்கு. இப்ப திடீர்னு சில பெண்கள் பூஜை பண்ணப்போக, ஊர்க்காரங்க தடுத்து, அதுக்கு பரிகாரமா இன்னொரு அபிஷேகம் பண்ணினாங்க. அங்க பிடிச்சது வினை. சில பெண்கள் போராட்டத்துல குதிக்க, பகுத்தறிவுவாதிகள் கூட்டம் நேத்திக்கு, போராடும் பெண்களுக்கு ஆதரவா அறிக்கை விட்டிருக்காங்க. அவங்க வேண்டி வந்தா, ஹெலிகாப்டர் வச்சி சிங்னாகாப்பூர் போய் இறங்கப் போறாங்களாம். ஊர்க்காரங்க எதிர்க்கறாங்க. ”
”ஆங்!” என்றார் அன்வர் வியந்து. “ஹாஜி அலி தர்காவுல பெண்கள் நுழைய அனுமதி வேணும்னு நேத்திக்கு போராட்டம்னு பேப்பர்ல படிச்சேன். என்ன திடீர்னு?”
“எவன் கண்டான்?”என்றார் கண்ணன், மேம்பாலத்தில் மெல்ல கார் ஏறிக்கொண்டிருந்தது. போலீஸ்காரர்கள் வாகனங்களை நின்றுபோயிருந்த லாரியிலிருந்து விலகிச் செல்லக் கைகாட்டிக்கொண்டிருந்தனர்.
“பகுத்தறிவுவாதிகளூக்குத்தான் தெய்வ நம்பிக்கை கிடையாதே? அப்புறம் கோயில்லயும், தர்காவுலயும் இவங்களுக்கு என்ன வேலை?”
”அன்வர்,இவர்கள் கேள்வி பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான். அது கோயிலோ மசூதியோ சர்ச்சோ இல்லை”
“பகுத்தறிவுவாதிகள் ஹாஜிஅலி போராட்டம் பத்திப் பேசவில்லை. ஒன்லி சனீஸ்வரன் கோயில்” என்றார் கண்ணன் சிரித்தவாறே.
“அதெப்படி பேசுவாங்க? இந்து மதம் மட்டும்தானே அவங்களோட இலக்கு?” என்றார் சவாண்.
திடீரென வண்டி குலுங்கியது. ஹார்ன்கள் இங்குமங்குமாக அலறத்தொடங்கின. வலது பக்கமாக , ஒரு ஹோண்டா சிட்டி கார் , பெரிதாக உறுமி, மெல்ல மேலும் வலது புறமாக நகர்ந்தது. அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள், பைக் ஓட்டுபவர்கள் காரை நோக்கி கை காட்டி திட்டிக்கொண்டிருந்தனர்.
ஹோண்டா சிடி மெல்ல உறுமி, மேலும் விலகி, சீராகி பாலத்தில் ஏறியது. கண்ணன் கண்ணாடியை இறக்கிவிட, அனைவரும் கவனித்தோம். நடுத்தர வயதினரான ஒரு பெண்மணி காரை டென்ஷனில் ஓட்டிக்கொண்டிருந்தார். இருபுறமும் வந்த வண்டிகளில் இருந்தவர்கள், அவரை நோக்கி கன்னாபின்னாவெனத் திட்டிக்கொண்டிருந்தனர்.
”அவ மேல தப்பில்ல. சரியாத்தான் ஓட்டியிருக்கா. பாருங்க, முன்னாடி பைக்ல ஒருத்தன் வழுக்கி விழுந்திருக்கான். இவ ப்ரேக்போட்டு, வலதுபக்கமா வண்டிய ஒடிக்கலைன்னா, அவன் காலி”
“அப்ப ஏன் மத்தவங்க கத்தறாங்க?” இந்த கேள்வி அன்வருக்கு மட்டுமே வரும்.
“ஏன்னா, அவ பொம்பள” என்றார் கண்ணன் உரக்க, எரிச்சலில் கிண்டலாக.
அன்வர் தன் கேள்வியைத் தொடர்ந்தார் “அட, பகுத்தறிவுவாதிங்களுக்கு இறை நம்பிக்கைன்னு ஒரு தொடர்பே இல்லைன்னா, சம்பந்தமேயில்லாம ஏன் இப்படி குதிக்கணும்? லாஜிக்காவே இல்லையே?”
“அன்வர், அவங்க ரேஷனலிஸ்ட் மட்டும்தான். லாஜிக் உள்ளவங்கன்னு சொன்னாங்களா?”
காரின் மிக அருகே ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர், ரோட்டில் சிவப்பாக வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்துவிட்டு “ பொம்பளை கார் ஓட்டறா சாப். அதான் இப்படி ஆகுது” என்று ஏளனமாகச் சிரித்து, விரைந்தார்.
“ஒரு பெண் வண்டியோட்டறதை இன்னும் நம்ம ஆட்களால பொறுத்துக்க முடியலை. இதுல மும்பை ஒரு மெட்ரோபொலிட்டன் சிட்டின்னு பேரு வேற” என்றார் கண்ணன் கொதித்து. “என் மனைவி சொல்றா. அப்பப்ப, இப்படி எவனாவது பக்கத்துல வந்து “நீயெல்லாம் ஆக்டிவா ஓட்டணுமா? பாத்துப்போ”ன்னு கத்திட்டுப் போவனாம். ரொம்ப டென்ஷனாயிருவா.”
ஜோகேஷ்வரி சிக்னலில் அந்த ஹோண்டா சிடி அருகில் நின்றிருந்தது. அந்தப்பெண்ணிற்கு நாற்பது வயதிருக்கலாம். இன்னும் படபடப்பில் இருந்தார். சட்டென ஒரு இரக்கம் தோன்றியது. என்ன அவசரமோ, அவருக்கு? சரியாக சாலை விதிகளை மதித்து ஓட்டுவதற்கே , அவர் ஒரு பெண் என்பதால் திட்டுகிற, ஏளனம் செய்கிற இந்த சமூகத்தை என்ன சொல்ல?
அன்வர் சொன்னார் “ மொதல்ல இந்த பகுத்தறிவுவாதிங்க, எல்லாருக்கும் பொதுவான இந்த சமூக இடர்களையெல்லாம் நீக்கறதுக்கு குதிக்கட்டும். அப்புறம் ஹாஜியலிக்கும், சிங்க்னாப்புர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர்ல்ல போயி குதிக்கலாம். வந்துட்டாங்க”
எங்களுக்கு பச்சை விளக்கு ஒளிர, எட்டிப்பார்த்தேன். அந்தப் பெண்ணின் கார் நின்றுகொண்டிந்தது. அவருக்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை.

Tuesday, January 26, 2016

கண்ணன் என்ற ஆசான்

மே 1992. மும்பை
அந்த பெரிய கான்ஃபரென்ஸ் ரூமில் நுழைந்ததுமே எனக்கு நடுக்கம் வ்ந்துவிட்டது. நாற்காலிகள் நிறைந்து ஆட்கள். அனைவரும் அந்த பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் மேலதிகாரிகள். ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 20வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர்கள்.
நான் எனது கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது. எங்கள் கருவியின் தொழில்நுட்பம் குறித்துப் பேசி, விற்பனையை சாதகமாக்கவேண்டும். போட்டியாளர்கள் சீனியர்களைக் கொண்டு வந்திருந்தார்கள். நான்மட்டும் என் கம்பெனியின் சார்பாகப் போயிருக்கிறேன்.
“ஹலோ” என்றார் ஒரு அதிகாரி “சீனியர் யாரும் வரலையா? எங்க மிஸ்டர் அஞ்சன் டே?”
“அவர்..அவர் வேற இடத்துக்குப்போயிருக்கார். அதான் நான்..” மென்று விழுங்கினேன். இவர்கள் முன்னே எப்படி ஒரு மணி நேரம் பேசப்போறேன்?
முதலில் வந்த இருவர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அடிப்படை அறிவியலில் தொடங்கி, மாதிரிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த அறிக்கைகள் எனத் தூள் கிளப்பிக்கொண்டிருந்தனர். என்னிடம் சில ஸ்லைடுகள் , ட்ரான்ஸ்பேரன்ஸி ஷீட்டுகள் இருந்தன. பவர்பாயிண்ட் எல்லாம் வராத 1990களின் முதன் வருடங்கள்...
”அடுத்தாக ஹிண்டிட்ரான் ஸர்வீஸஸ். சுதாகர்” அறிவிப்பு வந்தது. எழுமுன் டீ வந்துவிட, ஐந்து நிமிடம் அவகாசம் கிடைத்தது. உதடுகள் உலர்ந்து, கால்கள் நடுங்கி நின்றேன். பேசுவது புதிதல்ல. என்னிடம் இருப்பதை பேசிவிடுவேன். கேள்விகள் கேட்டால்? அனுபவமின்மையின் ஆட்டம் தெரிந்துவிடுமே?
சற்றே சலசலப்பு கேட்டது. “மிஸ்டர் கண்ணன்” என யாரோ முணுமுணுத்தார்கள். திரும்பினே. அவரேதான். எனது கம்பெனியின் டெக்னிகல் டைரக்டர். எனது பிரிவின் மேலதிகாரி.
“இவரா?” என்று வியப்புடன் திகைப்பும் எழ, அவரிடம் விரைந்து சென்றேன். தோளில் தட்டினார் “ நீ தனியாக வந்திருப்பதாக அறிந்தேன். அதான் வந்தேன்”
“சார்...இதுக்கெல்லாம் நீங்க வரணுமா?” என்றாலும், என் உற்சாகம் தைரியம் மேலெழுந்தது என்னமோ உண்மைதான்.
“கண்ணன். நீங்க பேசப்போறீங்களா?’ என்றார் நிறுவனத்தின் ஒரு மேலதிகாரி.
“இல்லை” என்றார் கண்ணன். “ My boy would talk. பசங்க பேசட்டும். ”
கண்ணனுக்கு அப்பொழுது ஐம்பது வயதிருக்கும்.பெரிய நெற்றி. அதில் ஒல்லியாக தீர்க்கமாக ஸ்ரீசூர்ணம் எப்போதாவது மின்னும். சிரித்த முகம். கனத்த குரல். அவரது அறையில் குறிப்பிட்ட ஊதுபத்தி ஒன்றின் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டிருக்கும். மேசையில் ஒரு பகவத் கீதை.
என் பிரிவின் பெரும் அதிகாரிகள் அவரது செக்ரட்டரியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நிற்பதைக் கண்டிருக்கிறேன். என் அளவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை. இப்போது ஏன் திடீரென வந்திருக்கிறார்?
ஒரு உத்வேகத்துடன் எழுந்தேன். ஒரு மணி நேரம் பேச்சு. முடிவில் ஏதோ உளறப்போக, போட்டியாளர் ஒருவர் அதைக் கிடுக்கிப்பிடி போட நான் வாதிக்க ஒரு அமளி. கண்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார். அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனப் பார்த்திருந்தனர். இறுதி வரை அவர் பேசவில்லை.
நான் அந்த ஒரு பாயிண்ட்டில் மாட்டினேன் என்றாலும், அங்கிருந்த போட்டியாளர்களில் சீனியர்களால் பாராட்டப்பட்டேன். பெரும் ஊக்கமூட்டிய தினமாக அது அமைந்தது.
வெளியே வந்தபோது, கண்ணனின் டிரைவர் அழைத்தார் . “ சார் உன்னையும் வண்டியில வரச்சொன்னாங்க”
கண்ணனின் நீல நிற ஃபியட் காரில் அவருடன் பின் சீட்டில் அமர்ந்து வருவது எனக்குக் கனவு போலிருந்தது. “சார்” என்றேன் மிகத் தயங்கி. “ எப்படிப் பேசினேன்ன்னு சொன்னீங்கன்னா...”
“குட்” என்றார் சுருக்கமாக. பல நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் கரைந்தன.
திடீரென “ நீ அந்தப் பாயிண்ட் சொன்னது சரின்னு உனக்குத் தோணுதா?” என்றார்.
“ஆமா” என்றேன் திடமாக “ இன்னும் தகவல் கிடைச்சிருந்தா எதுத்தாப்புல நின்னு கேட்டவனை ஒரு வாங்கு வாங்கியிருப்பேன்.”
“இதப்பார்” என்றார் “ நீ போனது எதுக்கு?”
“டெக்னிகல் பேச்சு, விற்பனை”
“அதை விட்டுட்டு ஒரு பாயிண்டப் பிடிச்சு விவாதம் பண்றது கேலிக்கூத்து இல்ல?
விழித்தேன். அவர் தொடர்ந்தார் “ என்ன கர்மம் செய்ய வந்திருக்கமோ, அதுல குறியா இருக்கணும். துரோணன் ஒர் பிராமண உடலில் இருந்த சத்ரியன். விதுரன் ஒரு சூதன் உடலிலிருந்த பிராமணன். நான் ஜாதியச் சொல்லலை. கர்ம வாசனையைச் சொன்னேன். நீ இங்க வந்தது ஒரு வைஸ்ய தருமத்திற்காக. விவாதம் செய்யும் வேதசிரோன்மணியாக இல்லை.. புரியுதா?”
அவர் இதிகாசப் புராணங்களிலிருந்து உவமைகாட்டி மேலாண்மை நெளிவு சுளிவுகளை விளக்குவார் எனக் கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு முதல் தடவை. அது என்னமோ மனதில் சட்டெனப் பதிந்து போனது. ஆனாலும், அவர் ஏன் வந்தார் என்பது புரியாமலே இருந்தது.
அடுத்தநாள் அவரது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். கண்ணன் முன்பு என் மேலதிகாரி அமர்ந்திருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது.
கண்ணன் தொடங்கினார் “ அஞ்சன் டே, இந்த வியாபரம் ஒரு போர். தெரியும்ல?”
தெரியும்” என்றார் அஞ்சன் தீனக்குரலில்.
“ தான் சுகமாக இருந்து கொண்டு, படைவீரர்களை மட்டும் போரில் அனுப்பி ஜெயித்த ஜெனரல்கள் இல்லை அஞ்சன்.. அபிமன்யு சக்ரவ்யூகத்தை உடைக்கறேன் -ன்னு போனது அவனுடைய தைரியம். பாண்டவர்கள் அவனைக் காக்காமல் விட்டது , அவர்களது தவறு. “கண்ணன் நிறுத்தினார்.
“அஞ்சன், இவன் கூட நீயும் போயிருக்கணும். . நான் போனது இவனுக்கு தைரியமூட்ட மட்டுமில்ல, மத்தவங்க”இந்த ஆள் ஏன் வந்தான்?”ன்னு கொஞ்சம் குலைஞ்சு போயிருப்பாங்க. அது முக்கியம்.”
கண்ணன் நிறுத்தினார் “வியாபாரம்ங்கற போருக்குன்னு சில தருமங்கள் இருக்கு. அவங்கவங்க தன் நிலையில தன் கருமம் என்னன்னு தெரிஞ்சு இயங்கணும்.” மேசையில் ஹோல்டரில் தலைகுத்தி நின்றிருந்த ஒரு மையூற்றிப் பேனாவால் , சதுரமான சிறிய காகிதத்தில் எதோ எழுதினார்.
“இந்த புஸ்தகம் வாங்கிப்படி” என்றார் இருவரிடமும்.
"The Art of War"-என்று எழுதியிருந்தது.
போரில் சாரதியாக வந்த கண்ணனுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று உணர்ந்த தருணம் அது. கண்ணன் சார், ஓய்வு பெற்ற பின்னும் எப்போதாவது பார்க்கும்போது அனைவரைப் பற்றியும், அவர்களது குடும்பங்கள் பற்றியும் கேட்பார். எப்போதாவது தொழில் முறையில் குழப்பங்கள் ஏற்படும்போது அவரிடம் ஆலோசனை கேட்பேன். சமீபத்தில் தொடர்பு விட்டுப் போனது.
இன்று கண்ணன் சாரின் திருமண நாள். எத்தனையோ மேலதிகாரிகள் இருந்திருப்பினும், குருவாக அமைபவர்கள் மிகச் சிலரே. இன்று கிடைக்கும் தூற்றுதல்களும், போற்றுதல்களும்.. போகட்டும் கண்ணனுக்கே.
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.

Thursday, January 14, 2016

மற்றையெம் காமங்கள் மாற்று

“ அண்ணே, இவருக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. மனுசன்னா ஒரு அன்பு வேணும். பையன் இப்ப காலேஜ்ல இருக்கான். அப்பா மாரி நான் ஆயிடக்கூடாதும்மா-ங்கறான். பொண்ணு பேசறதுக்கே பயப்படுது.” சேகரின் மனைவி கலங்கிய கண்களோடு எங்களிடம் சொல்வாள் என நானும் நண்பர்களும் எதிர்பார்க்கவில்லை.

சேகர் நல்லாத்தான் எங்ககிட்ட பேசுவார். வேலையில் சுத்தம். ஆனால் அலுவலகத்தில் சில மேலதிகாரிகளிடமும்,அவர் தம்பி, தங்கைகளிடமும், வீட்டிலும் வேறொரு முகம். சமீபத்தில் எங்கள் வட்டத்தில் ஒருவர் பதவி உயர்வு பெற்ற விருந்துக்கு அவர் வரவில்லை. அழைத்ததற்கு தட்டிக்கழித்துவிட்டார். அதே நேரத்தில், வேறொரு நண்பருடன் ஏதோவொரு உடுப்பி ஓட்டலில் இட்லி தின்றார். 

சமீபத்தில் பெங்களூரில் அடுத்த ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். ரூமிலிருந்து வெளியே போய்விட்டிருந்தார். திரும்பிவரும் வழியில், ஜனார்த்தன் ஹோட்டல் வாசலில் அவரைப் பிடித்தேன். ”ரூமுக்கு வரச்சொல்லிட்டு எங்க போனீங்க? செல்லுல அடிச்சடிச்சுப் பாக்கறேன். எடுக்கவேயில்ல?”

“ம்ம்”என்றார் ஒரு தர்மசங்கடத்துடன். அவர் முகத்தில் ஏதோவொரு தட்டிக்கழிப்பு தெரிந்தது.

“சேகர்... என்ன ப்ரச்சனை? உங்க மனைவி கிட்டத்தட்ட அழற நிலையில உங்களைப் பத்திச் சொல்றா. கலியாணமானப்போ நீங்க ரெண்டுபேரும் இருந்த அன்னியோன்னியமென்ன.. இப்ப ..”


‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா எதையோ நினைச்சுகிட்டு சொல்றா. மெனோபாஸ் நேரம்.. அதான்”

இருவரும் , வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் ஓரமாக நடந்தோம். “ஊராய்யா இது? கொஞ்ச வருசமுன்னால, ரோட்ல நடக்க முடிஞ்சது. இப்ப ப்ளாட்பாரத்துலயும் டூ வீலர் நிறுத்திவச்சிருக்கான். இங்க பாரு.” பேச்சை மாற்ற முயல்கிறார் என்பது புரிந்தது.


“என்ன ப்ரச்சனை சேகர்? நல்லா இருந்த வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கிறீங்க? உங்க தம்பி, தங்கையெல்லாம் உங்கமேல உயிரையே வச்சிருக்காங்க”

“ஏறிப்போன எவனும், ஏணிக்கு மரியாத செய்வானா? நான் அப்பிடியேதான இருக்கேன்?” 

திகைத்தேன். “ யார் என்ன சொன்னாங்க இப்ப?”

“ஒண்ணா ரெண்டா?நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர இருந்த பைசாவுல, தம்பியச் சேத்துவிட்டேன். அவன் இப்ப யு.எஸ்ல இருக்கான். தங்கச்சிக்கு, அமுதாவோட ரெண்டு சங்கிலியப் போட்டுத்தான் கலியாணம் செஞ்சு வச்சேன். அவ இப்ப அபுதாபில. எப்பவாச்சும் எங்கிட்ட’யும்’ பேசுவாங்க. நன்றிகெட்ட உலகம் சார் இது. பேசாம, அப்பாகிட்ட ‘நீங்க உங்க பிள்ளகளைப் பாத்துக்கோங்க. என்னை எப்படி கொஞ்சமா படிக்க வைச்சீங்களோ, எப்படி என் ஸ்காலர்ஷிப் பணத்துல தீபாவளிக்கு துணி எடுத்தீங்களோ, அந்தமாதிரி இவங்களையும் நடத்துங்க”ன்னு சொல்லியிருக்கணும். இப்ப நான் கீழ இருக்கேன். அவங்க எல்லாம் மேல போயாச்சி. அண்ணன் எல்லாம் ரெண்டாம் பட்சம்தான்”

“அப்படியெல்லாம் இருக்காது சேகர். வேற உலகம். வேற முக்கியங்கள். ”அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தனது உக்கிரமான சிந்தனைகளில் முழுகியிருந்தார். 

திடீரென “ இஸ்க்கான் கோவில் போலாமா?” என்றார். “இப்பவா?” தயங்கினேன். திரும்பி வர நேரமாயிடுமே? நான் எதுவும் சொல்லுமுன்னே ஒரு பச்சைக்கலர் ஆட்டோவை அழைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் ,ஆட்டோவின் ஒலியை மீறி சத்தமாக தனது ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டு வந்தார். 

“.... இப்படி மச்சினன் சொல்றான். அங்? இவன் படிப்புக்கு எம்புட்டு செலவு பண்ணியிருப்பேன்? அமுதா அழுதான்னு, என் ம்யூச்சுவல் ஃபண்டு பைசாவெல்லாம் எடுத்து மூணே நாள்ல அவனுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன். படிடா-ன்னு. இப்ப ? அவன் கொழுந்தியா கலியாணத்துல “வாங்க”ன்னு சுருக்கமா ஒரு வார்த்தை சொல்லிட்டு என் தம்பி தங்கச்சிகிட்ட பேசப்போறான். ஸ்டேட்டஸ் வேண்டியிருக்கு ஆட்களுக்கு”

“சேகர்” என்றேன் பொறுக்க முடியாமல். “இதுல பலதும் நீங்க சித்தரிச்சுகிட்டதுதான் இருக்கும். அவங்க செஞ்சிருக்கலாம். மறுக்கலை. வெளிப்படையா அவங்ககிட்ட பேசிடறது நல்லது. மனசுல வைச்சு மறுகாதீங்க”

“என்ன மறுக? என் பையன்கிட்டயும் அதான் தள்ளி நிக்கறேன். இவனாச்சும் புத்திசாலித்தனமா பிழைச்சுகிடட்டும்”

“ஆனா, அவன் உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கான். தெரியுமா உங்களுக்கு?” அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒரு விதமான பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும் உங்ககிட்ட வந்திருக்கு. தவறுன்னு சொல்லலை. இயல்புதான். நாம வளத்தது மேல போய், கண்டுக்க மாட்டேங்கறது, அவங்களோட குறைபாடு. உங்களோடது இல்ல.”

“எவன் எவனெல்லோமோ ஜி.எம் ஆறான்...”

“ உங்களுக்கு ஆகணும்னா நீங்க இந்த வெறியை வேலைல காட்டுங்க. வீட்டுல நல்லாயிருங்க. .”

மெல்ல மெல்ல நூற்று எட்டுப் படிகள் ஏறத்தொடங்கினோம். ஒரு பேச்சு பேசாமல் ஏறுவது நல்லது என்பதால் அமைதியாக இருந்தோம்.
ஆரத்தி தொடங்கியிருந்தது. சேகர் இறுகி நின்றிருந்தார். துளசிமணி மாலையை யாரோ கொடுக்க, சப்பளமிட்டு அமர்ந்தோம். 

“அவன் கிட்ட விட்டிறுங்க. பழையசோறு தின்னு காலேஜுக்குப் போன நம்மள இன்னிக்கு சுடுசோறு திங்க வச்சதும் அவந்தான். நடந்து போன நம்மை கார்ல போகவச்சவனும் அவந்தான். நீங்களும், அவனுமான உறவுமட்டுமே நிஜம். “
“அப்ப மற்றெதெல்லாம்?” என்றார் கிண்டலான வறண்ட குரலில்.

“காமங்கள்.. ஆசைகள். எதிர்பார்ப்புகள்..”

“இதை என்ன செய்யணும்ங்கறீங்க? மனுசன்னா எதிர்பார்ப்புகள் இருக்கும். உங்களுக்கும் இருக்கு. “

“ஆமா இருக்கு” என்றேன் திடமாக “எல்லாருக்கும் இருக்கு. இங்க ஒன்றேயொன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள். இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்” வேறெந்த உறவும் உற்றமும் நிஜமல்ல. அதுல வர்ற கஷ்டங்களை ஏன் நினைக்கணும்? “

“இந்த எதிர்ப்பார்ப்புகள் தப்புங்கறீங்களா?”

“இல்ல. ஆனா இவை மாறணும்..அவன் மாற்றுவான்.. மற்றையெம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்”

“போகலையே சுதாகர்? நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்குது. என்ன உறவுன்னு தோணுது. நன்றிகெட்ட ஜென்மங்க:”

“விடுங்க. ” என்றேன். “ இந்த எண்ணங்களையும், இனிமே வர்றதையும் அவன் அழிச்சுப்பான். அதான் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினிற் தூசாகும்” அவங்கிட்ட உங்களுக்கு இருக்கிற பக்தியென்னும் தீ அதையெல்லாம் அழிச்சிறும். “

அவர் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. “ஏன் திடீர்னு இங்க வரணும்னு கேட்டேன்னு தெரியலை. என்னமோ தோணிச்சு. நான் ஒண்ணும் சாமியை வேரோடு புடுங்கற ரகம் இல்லை. அப்படியும்..ஏன்?”

நான் ஏதோ சொல்லுமுன் அவரே தழுதழுத்த குரலில் சொன்னார். 


“இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்” 

சில நிமிடங்கள் கழித்து ஓரக்கண்ணால் பக்கத்தில் பார்த்தேன். அவர் கண்கள் மூடியிருந்தன.

Saturday, January 02, 2016

பாட்டி சொன்ன பிரபந்தம்



"மார்கழின்னா திருப்பாவை, திருவெம்பாவைன்னு எல்லாச் சேனல்கள்லயும் காலேல காட்டறாங்க. கேக்கறப்ப புரியுது , ஆனா அப்புறம் மற்ந்து போவுது”

குருநாதன் என்னை விட சில வருடங்கள் இளையவன். ஆனாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகிய நல்ல தோழன். இப்படி அவன் சொன்னதும் சற்றே வியந்துபோனேன். 

ஏனெனில், குருநாதன் படித்து வளர்ந்தது தமிழகச் சூழலிலல்ல. ஆந்திராவில் , அவனது அப்பா மின்சார உற்பத்தி ப்ராஜெக்டுகளில் பணி செய்தவர். அதன்பின் ஹைதராபாத் வாழ்க்கை. திருப்பாவையெல்லாம் கேட்டிருக்ககூட சாத்தியங்கள் குறைவு. எனவே, மண்ணின் கலாச்சாரம் பற்றிய உரைகளில் மெல்ல நகர்ந்து போய்விடுவான், தவிர்த்துவிடுவான். 

“இன்னிக்கென்ன திடீர்-னு?” என்றேன். 

“இல்ல, சரோஜா சொன்னா.. என்ன இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்க,பிள்ளைங்க நம்மப் பாத்து வளருதுங்க. அதுகளூக்கு வேர்ப்பற்று வரணும்னா நாமதான சொல்லணும்?” சட்டுனு இந்த வார்த்த என்னமோ உள்ள அசைச்சிருச்சு, சுதாகர். நாம மேலோட்டமா, சினிமா, அரசியல், ட்விட்டர், பேஸ்புக்குனு வாழ்ந்து போறோமோ? யோசிச்சுப் பாத்தா, வார விடுமுறை கழிக்கிற பழக்கங்கள்ல ஒரு வெறுமைதான் தெரியுது.”

அவன் தொடர்ந்தான். “நேத்தி ராத்திரி, பொண்ணுகிட்ட  ஏன் வாட்ஸப்புல பழியாக் கிடக்கற?ன்னு குரல் உசத்திக் கேட்டுட்டேன் . நீயும்தான சாட்ல இருக்கே?-ங்கறா. சரோஜா அவள அதட்டப்போக.. அப்படி இப்படி விவாதம்.. அதுல வந்த உணர்வுதான் இது”

“சரி. இதெல்லாம் படிக்க நாளாகும்ப்பா. மெதுவா ஒண்ணொண்ணா ஆரம்பிச்சுப் பாரு. பொறுமை வேணும் ஆனா”

“எனக்குத் தமிழே  படிக்க வராதே?” அவனது இயலாமையின் அடித்தளம் புரிந்தது.

“சரி, நிறைய சொற்பொழிவுகள், சி.டிலயே கிடைக்குது. இல்ல காலேல டி.வில வருது. கேட்டுப்பாரு. பிள்ளைங்களும் ஒரு பழக்கம் வர்றதுல கேட்டுப்பழகும்”

“சி.ஏ இண்ட்டெருக்கு எப்படிப் படிக்கணும், மேத்ஸ் பேப்பருக்கு எப்படி தயார்பண்ணனும்ங்கற லெவல்லதான் நான் நிக்க முடியும். ஆனா, அதை ஒரு கோச்சிங் கிளாஸ்ல என்னை விட நல்லாச் சொல்லிக்கொடுத்துருவாங்க. எனக்கு...” நிறுத்தினான்.

“ஒரு தகப்பனா, என்னால் மட்டும் காட்ட முடிகிற வாழ்க்கை, வேர்ப்பற்று எல்லாம் காட்டத் தவறிட்டேனோ? இனிமே முடியுமா? என்ன மரியாதை இருக்கும் என் பிள்ளைகளுக்கு எங்கிட்ட? ஸ்கூலும், காலேஜும் அவங்களை வாழ்க்கைக்குத்  தயார் பண்ணிடுது. ஆனா எப்படி வாழணும்ங்கறத நாமல்ல எடுத்துக்காட்டா நின்னு காட்டியிருக்கணும்? எனக்கு.. எனக்கு முதியோர் இல்லம்தான் சுதாகர். தெளிவா தெரியுது” 

“இல்லப்பா” என்றேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு விரக்தியின் நீட்டலில் எதையோ சிந்திக்கிறான். நல்லதல்ல. 

“உனக்கு எதாவது பழைய செய்யுள், பாட்டுன்னு தெரியுமா? அறஞ்செய விரும்பு,, ஆறுவது சினம்.. இந்த மாதிரி”

இல்லையெனத் தலையசைத்தான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தான். கை நீட்டி குலுக்கி “சரி பாப்போம்” என்று சொல்ல எத்தனித்தவன் எதையோ நினைத்து நின்றான்/

“எங்க பாட்டி ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. சமயபுரம் பக்கம் எங்க கிராமம். எப்பவாச்சும் பாக்கப் போவோம். பாட்டி உக்கார வைச்சு இந்த பாட்டு பாடுவாங்க..அம்ம்ம்.. “ நினைவு கூர்ந்து, பிறர் கேட்டுவிடாதவாறு வெட்கத்துடன் ஒரு புன்சிரிப்புடன் வரிகளைச் சொன்னான். சொன்னான் அல்ல, இழுத்துப் பாடினான். சொற்கள் அந்த ராகத்தில் மட்டுமே நினைவில் நின்றிருக்கின்றன. 

“கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....ஏஏஏ
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவேஏஏ”

“அப்புறம்.. மறந்துபோச்சே. வரிகள் கிடைச்சா மடமடன்னு ஞாபகம் வந்துரும். இத எங்கபோய்ப் பிடிக்க?” என்றான் அயர்வுடன். எனக்கு அப்பாடல் வரிகள் பிடித்துப் போயின. பின்னாளில் பல சொற்கள் மறந்தும்போயின.இது நடந்து  ஒரு வருடமாகிவிட்டது என்பதே மறந்து போனது.

அண்மையில் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்களது புத்தக அலமாரியிலிருந்து எடுத்து வந்த அஷ்டப்பிரபந்தம் புத்தகத்தை கவனமாக இருநாள்முன் கையிலெடுத்தேன். 1957-ல் முர்ரே & கம்பெனி, ராஜம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட புத்தகம்.. அங்கங்கே காகிதம் ஒடிந்து போயிருந்தது.
அதில் திருவரங்கக் கலம்பகம் பகுதியிற் புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது.

”கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....
ஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதோர் அஞ்சன மலையே
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே
அரவிந்த வனந்தொறும் அதிசயம் உளவே”

”குரு” என்றேன் போனில் பதட்டமாக ““வாட்ஸப்ப்ல உனக்கு ஒரு போட்டோ அனுப்பறேன் உங்க பாட்டி சொல்லிக்கொடுத்த வரிகள். அத மட்டும் படிச்சுக்கோ. போதும். ”

“அஹ்?!” என்றான் ஒரு வியப்புடன். ”இது என்ன? திருப்பாவையா?”

“அஷ்டப் பிரபந்தம். எதுவா இருந்தா என்ன? இதப் பிடிச்சு , மெள்ள மெள்ள மேல ஏறிடலாம். “

“ஆமா, என்ன?” என்றான் குரு. அவன் குரலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. 

பாட்டிகள் இறந்தபின்னும், வேரைத் தேடிப்பிடிக்க துணை நிற்கிறார்கள். நாம கொஞ்சம் நினைவுகளை தோண்டி, நடப்பில் புத்தகங்களைப் புரட்டினால் போதும். அதைவிட.. அனுபவத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.