Sunday, February 12, 2012

செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3



மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.

Saturday, December 31, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson
தெளிவான சிந்தனைகளுக்காவும், செயலாற்றல்களுக்காகவும் பாராட்டப்பட்ட அனைவரும் , வாழ்வின் அனைத்து முகங்களிலும் தெளிவாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் மனிதர்கள். மனிதர்க்ளின் சிந்தனைகள் காலத்திலும் தளங்களிலும் மாறுபடுகின்றன. தளங்களும், நேரமும் மாறும் பயணங்கள், அனுபவங்களை சாத்தியமாக்குகின்றன. அனுபவங்கள் மனதில் தாக்கங்களை சாத்தியமாக்குகின்றன. சிந்தனைத் தாக்கங்கள் , முன்பு எடுத்திருந்த முடிவுகளை மாற்றவும்,வேறு முடிவுகளைக் கைக்கொள்ளவும் தைரியம் ஊட்டுகின்றன.

எர்னெஸ்ட்டோ குவாராவுக்கும் இதுதான் நடந்தது. தென் அமெரிக்கப்பயணத்தின் பின், மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார். 40 பேப்பர்களை ஒரே வருடத்தில் வெறியோடு எழுதி முடித்துவிட்டு டாக்டர் பட்டம்பெற்றவர் , வெனிசூவேலா சென்று, நண்பன் அல்பெர்ட்டோவுடன் தங்கியிருந்து பணம் சேர்த்து, ஐரோப்பா செல்ல, நண்பன் கலீக்காவுடன் திட்டமிடுகிறார். ஒரு உரையாடலில் கலிக்காவிடம், தான் இறுதியில் இந்தியா செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். அவர் இந்தியா வந்திருந்தால் அவரது கொள்கை நிலைப்பாடு மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

இப்படி மிகத் தெளிவாகத் தனது மருத்துவ வாழ்வை வெனிசுவேலாவில் தொடரத் தீர்மானித்தவர், பொலிவியா, பெரு வழியே ஈக்குவடார் சென்று அதன் கடற்கரை நகர் ஒன்றில், அடுத்த வேளைச் சோற்றுக்கே திணறிக்கொண்டு,பனாமா செல்லக் கப்பலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர் “குட்டமாலா நாட்டில் அரசாங்கத்தின் சுரண்டலுக்கு எதிரே போராளிகள் ஆயுதங்கள் தூக்குவது “குறித்துக் கூறிக்கொண்டிருக்க, அங்கேயே , அப்போதே தனது மருத்துவ வாழ்வுத் தீர்மானத்தை அம்போவெனக் கைவிடுகிறார். சில தீர்மானங்கள் கைவிடப்படுவது, அதிலும் பெரிய தீர்மானங்களை கைகளில் ஏந்துவதற்காகத்தான் போலும். இந்தப் பகுதி, எர்னெஸ்ட்டோவின் தெளிவற்ற, தடுமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பகுதியைக் காட்டினாலும், அதனினும் பெரிய ஆவல் அவர் மனத்தில் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாகத்தான் எனக்குப் படுகிறது. அது குட்டமாலாவாகட்டும்,இந்தியாவாகட்டும்..எங்கெல்லாம் சுரண்டலின் பிடியிலிருந்து தப்ப முயற்சிகள் நடக்கின்றனவோ, அடிமட்டத்திலிருக்கும் சமூகங்கள் முன்னேற அரசாங்க அமைப்புகள் தடையாயிருக்கின்றனவோ, அங்கு சென்று போராட அவரது அடிமனதில் வெறி கனன்றுகொண்டிருப்பதை அவருடன் இருந்தவர்கள் அப்போது உணரவில்லை.


கோஸ்ட்டோ ரிக்காவின் ஸான் ஓசேயில் நாடுகடத்தப்பட்டு மறைந்து வாழும் லத்தீன் அமெரிக்க தலைவர்களை சந்திக்கிறான் எர்னெஸ்ட்டோ. அதில் மார்க்ஸிஸத்தில் உறுதியாக இருப்பவர்களை மிகவும் மதிப்பதாகச் சொல்கிறான். அங்கிருந்து குட்டமாலா சென்று சேர்ந்தபின்னரே, எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளில் ஒரு தெளிவும் உறுதியும் பிறக்கிறது. இங்குதான் மருத்துவம் படித்து, தெளிவற்று ஊர் சுற்றும் அர்ஜெண்டின இளைஞன், மனித உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கும் போராளியாக, புரட்சிக்காரனாகப் பரிணாமிக்கிறான். எர்னெஸ்ட்டோ குவாரா டி லா ஸெர்னா, “செ’ குவாராவாக அழைக்கப்படுவதும், மாறுவதும் இங்குதான்.

கலங்கிய மனங்கள், தெளிவுற்று உறுதிபெற ஒரு உந்துதல் எங்கிருந்தோ கிடைப்பதை வரலாற்றில் பல இடங்களில் பார்க்கலாம். Zen and The Art of Motor Cycle Maintenance புத்தகத்தில் பிர்ஸிக் இவ்வாறு கூறுகிறார். “ ஆழ்ந்த சிந்தனைகளில் மனம், பெரும் செறிவை அடைந்த கரைசல்(super saturated solution) போன்றதாகிறது. அதில் கரைந்திருக்கும் உப்புக்கள் படிவமாகதற்கு சிறு சலனம் தேவைப்படுகிறது. மிக மெல்லிய தீண்டல்..வேண்டாம்.. வீச்சு மிக்க ஒரு ஒலி போதும் அதற்கு. " இந்த உந்துதலை ஒரு “தெய்வீகக் காட்சி(Divine Vision)”யாகவோ அல்லது வேறுதளத்தில் உணரப்படுகிற ஒரு அனுபவமாகவோ பல தலைவர்களின் வாழ்க்கையில் வரலாறு ஆவணப்படுத்துகிறது. அன்னை தெரசாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்யும்போது கிடைத்த “தெய்வீக காட்சி அனுபவம்” அவரை தொண்டு செய்வதில் உறுதி கொள்ளச் செய்தது போல.

எர்னெஸ்ட்டோ, இதுபோன்ற ஒரு விவரிக்க முடியாத ஆழ்ந்த உணர்வை குட்டமாலாவில் அனுபவிக்கிறான். பின்னாளைய பயணக்குறிப்பினில், காகிதத்தின் மார்ஜின் பகுதியில் இந்த அனுபவத்தை எழுதிச் செல்கிறான். Notes On the Margin (NOM) நோம் என்று மிகவும் கொண்டாடப்படுகிற இந்த குறிப்பு, அளவில் குறுக்கப்பட்டு இப்புத்தகத்தில் இரு பத்திகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அருமையான பொருள் செறிந்த வரிகள் இவை. மொழிபெயர்க்கப்பட்டு, குறுக்கப்பட்டதே இத்தனை உயிர்ப்புடனும், உணர்ச்சிப் ப்ரவாகமுமாக இருக்குமானால், மூலத்தைக் குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. பின்னாளில் வரப்போகிற நிகழ்வுகளை, அவை தரப்போகின்ற வலிகளையும், ஏமாற்றங்களையும் சேர்த்து அப்படியே தெள்ளத்தெளிவாக முன்கூட்டியே கண்ட பின்னும் தான் செய்யவேண்டிய தியாகங்களை வரையறுத்து, அவற்றை ஏற்றெடுக்கத் துணிவும், மன முதிர்வையும் எர்னெஸ்ட்டோ கொள்வதற்கு அக்காட்சி அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. காட்சியில் கண்டதை , உணர்ந்ததை வார்த்தைகளில் வடிப்பதென்பது இயலாததென்றாலும், ‘நோம் " நம்மை அங்கேயே தளம் பெயர்க்கும் இழுப்பு நிறைந்த காட்டாறு. எர்னெஸ்ட்டோ ,”செ “ குவாராவாக மாறியதின் காரணங்களை, முன் பின் நிகழ்வுகளின் தேவையின்றி உணர வைக்கிறது ‘நோம்”.

ஜோன் லீ ஆண்டர்சனின் வெற்றி, எர்னெஸ்ட்டோவின் அன்றாட வாழ்வை ஆவணப்படுத்துவதில் இல்லை. மாறாக, எர்னெஸ்ட்டோ , “செ” என்னும் போராளியாக மாறும் களங்களை விவரிப்பதில் இருக்கிறது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க “ வாழைப்பழ குடியரசுகள்” குறித்து இரு பக்கங்களுக்கு விவரிக்கிறார். இதில் கலங்கலான அக்கண்டத்தின் அரசியல் , அதன் பின்புலங்கள் , கொடுங்கோலர்களின் அமெரிக்க சார்புக் கொள்கைகள் ஏன் ஏற்பட்டன என்பன மிகத் தெளிவாக விளங்குகிறது. 1930-1954 வரையான தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலை, எர்னெஸ்ட்டோ ஒரு புரட்சியாளனாக மாற வைத்திருக்கிறது.

கலங்கலான அக்கால அரசியலை ஊன்றிக்கவனிக்கிறான் எர்னெஸ்ட்டோ. காதலியுடன் குட்டமாலாவில் வாழ்கிறான். சரியான வேலை கிடைக்காமல் அவளது சார்பில் வாழ்க்கை நடத்துகிறான். இதன் சில வருடங்கள் முன்பு குட்டமாலாவின் அதிபர் அர்பென்ஸ், சக்தி வாய்ந்த அமெரிக்கக் கம்பெனி “ யுனைட்டர் ஃப்ரூட்ஸ்”-ஐ வெளியேற்றி,அதன் மற்றும் அமெரிக்க அரசின் பகையினை சம்பாதித்துக்கொண்டார். . யுனைட்டட் ப்ரூட்ஸ், பல நாடுகளில் பெருமளவில் நில ஆக்ரமிப்பு செய்து, கொத்தடிமைகளாக அங்கிருக்கும் விவசாயிகளை வேலை வாங்கி, வேளாண்மைப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டும் கொள்ளை நிறுவனம். அதன் சக்தி, வாஷிங்டனிலும், சி.ஐ.ஏவிலும் பரவியிருந்தது. அமெரிக்க அரசு சி.ஐ.ஏ மூலமும், யுனைட்டட் ப்ரூட்ஸ்ஸின் பண உதவி கொண்டும், குட்டமாலாவின் அரசை போர் செய்து கவிழ்க்கிறது. அதிபர் அர்பென்ஸ் நாடு விட்டுச் செல்லும் நாள், ஏர்ப்போர்ட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டு , அவமானப்படுகிறார்.
எர்னெஸ்ட்டோ இதெல்லாம் நேரில் கண்டு குமுறுகிறான். தெளிவாக ஒரு முடிவு எடுக்கிறான். “ ஏகாதிபத்தியத்தை பூண்டோடு ஒழிக்க போரிடுவேன். நான் கம்யூனிஸத்தில் சேருகிறேன். ஒரு முடிவுக்கு வருவதற்கு இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று அதன் கொள்கையில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இல்லை, பிற கொள்கைகளில் நம்பிக்கை அற்றுப் போகவேண்டும். நான் இரண்டாவது வழியில் வருகிறேன். ஏன் இந்த அமெரிக்கர்கள் மத்திய, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை துச்சமாக நடத்துகின்றனர் என ஆராய்ந்து பார்த்ததின் விடையும், என் குட்டமாலா, பெரு, பொலிவிய அனுபவங்களும் என்னை கம்யூனிசக் கொள்கையில் சேர வைத்திருக்கின்றன.” எனப் பிரியமான அத்தை பீட்ரைஸ்க்கு மடல் எழுதுகிறான். எர்னெஸ்ட்டோ ஒரு கம்யூனிஸ்டாக பரிணாமிக்கிறான். இந்த பின்புல விவரணம் மிக முக்கியமானது எனப் படுகிறது. இல்லாவிட்டால் அர்ஜெண்டினாவில் ஒரு பணக்காரனாக ,ஒரு புகழ்பெற்ற மருத்துவனாக மிக சொகுசாக வாழ வேண்டியவன், வேறு எதோ நாட்டில் ஏன் போரிட்டு மடியவேண்டும்?

தொடரும்

Friday, December 30, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson

வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர்.

ஜோன் லி ஆண்டர்சனின் “செ”குவாரா , புரட்சிகரமான வாழ்வு’’ , நிஜமான நடுநிலையில் இயங்குகிறது. அவருக்கு செ குவாரா-வை போற்றவோ, தூற்றவோ வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. முன் முடிவுகள் அற்ற ,”இப்படித்தான்யா இருந்திருக்காரு” என தைரியமாக அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது. இது அத்தனை எளிதான வேலையில்லை. க்ம்யூனிசக் கொள்கை தாங்கிய போராளிகளளாலும், குறிப்பாக க்யூபா, தென் அமெரிக்க நாட்டு கம்யூனிச ஆதரவாளர்களாலும், கிட்டத்தட்ட ‘கடவுள்’ நிலையில் வைத்துக் கொண்டாடப்படும் செ குவாரா-வைக்குறித்து “ அவர் சில வெள்ளை வெறித்தன சிந்தைகளில் எழுதினார்” எனச் சொல்லவும், ஆதாரங்கள் காட்டவும் தலைப்படுதல் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது.
’ தலைவன் முதலில் மனிதன்’ என ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருந்தாலொழிய, அவன் சிறு வயதிலோ அல்லது தலைவனாகுமுன் தனக்குள் நடத்திய சுய போராட்டத்திலோ , செய்த தவறுகளை தவறுகள் என அடையாளம் காணும் பக்குவம் வந்துவிடமுடியாது. இது , அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் பொருந்துவது மட்டுமல்ல, கம்யூனிச, போராளிகளின் தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த ‘சனநாயக”ச் சிந்தனை என்னும் பதம் முரணாக இருந்தாலும் “பொதுவுடமை”வாதிகளுக்கும் பொருந்துவது இயல்பு.

எனவே ஆண்டர்சன் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மறைந்து போயிருந்த ஆவணங்களை மீண்டெடுத்தல், மனிதர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிலிருந்து உண்மையை வெளிக்கொணர்தல் என்பன 70களில் சாத்தியப்படாதவை. காலம் ,சிறிது ஓடிக் களைத்ததில், ஆண்டர்சனின் முயற்சிக்கு சற்றே விட்டுக்கொடுத்து பொலிவியக் காடுகளிலும், க்யூபாவிலும், சில மனிதர்களின் நினைவுகளிலும் புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது.

முப்பது வருடங்கள் கழித்து பொலிவியக் காடுகளினூடே ஒரு ஏர்ஸ்ட்ரிப்பின் அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு, புதைக்கப்பட்டிருந்த சில சடலங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணிக்கட்டிலிருந்து கைகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்த ஒரு சடலம் சற்றே மரியாதையாக புதைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே ஆறு சடலங்கள் அப்படியே வீசியெறியப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. செ குவாராவின் கைகள் அவர் சுடப்பட்டபின் வெட்டியெடுக்கப்பட்டு, பார்மால்டிஹைட்டில் மூழ்க வைத்து பொலிவியா அரசால் ரகசியமாக காக்கப்பட்டிருந்தன. இறந்தவர் செ குவாராதான் எனக் கண்டறிய, விரல் ரேகைப்பதிவுகளுக்கு வேண்டி, கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி ஒரு முன்னுரையோடு புத்தகம், மெல்ல அவரது பிற்ந்த நாளினைக்குறித்தான சர்ச்சையோடு தொடங்குகிறது. திருமணமாகுமுன்னே கர்ப்பம் தரித்த அவரது தாய், ப்யூனே அயர்ஸிலிருந்து கிளம்பிப் போய் காட்டுப்பகுதியில் கணவரோடு வாழ்ந்து, எர்னெஸ்டோ பிறந்த சில மாதங்கள் கழித்து, பிந்திய ஒரு நாளைப் பிறந்த தேதியாகப் பொய்யாகப் பதிவு செய்கிறார். முதலிலிருந்தே சர்ச்சையோடு வாழத் தொடங்கிய எர்னெஸ்டோ குவாராவின் இளமைக்காலம் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெற்று வளர்கிறது. ஹிட்லரை வெறுக்கும் எர்னெஸ்ட்டோ, அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தையும் வெறுக்கிறான். அவனது அசுரத்தனமான புத்தகப் வாசிப்பு, பல கண்ணோட்டங்களை அவனது சிந்தனையில் புகுத்துகிறது. அர்ஜெண்ட்டினப் புத்தகங்கள் மட்டுமன்றி, ப்ரெஞ்சுப் புத்தகங்களிலும் அவன் நாட்டம் விரிகின்றது. நேருவின் கொள்கைகள் அவனுக்குப் பிடித்திருப்பதாக தனது நண்பர்களிடம் சொல்கிறான். எங்கோ அர்ஜெண்டினாவில் , தனது நாட்டு அரசியலை மட்டுமன்றி உலகளாவிய மனித வளர்ச்சி நோக்கு கொண்ட ஒருவன் , ஒரு புரட்சியாளனாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஏனெனில், பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்க்ண் பார்வை வைத்தாள் “ எனப்பாடியதும் “பெல்ஜிய நாட்டின்” நிகழ்வுகளைக் குறித்துப் பாடியதும் ஒரு புரட்சி வாழ்வின் அடையாளமே.

அமெரிக்க வெறுப்பு சிறு வயதிலேயே மனதில் ஏறிய எர்னெஸ்டோ , அக்காலத்தில் வாழ்ந்த வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகள் செய்யும் அநியாயங்களைத் தானும் செய்கிறான். வீட்டு வேலைக்காரியாக இருக்கும் இந்தியப் பழங்குடிப்பெண்ணுடன் பாலினத் தொடர்பு, பல பெண்களுடன் தொடர்கிறது. இடையில் மலர்ந்த காதல் நொறுங்கிப்போக.... எர்னெஸ்டோ குவாரா ஒரு போராளியாக மாறியதில் வியப்பில்லை.

மகாத்மா காந்தி இந்தியாவை அறிய ரயில் பயணம் மேற்கொண்டது போல, எர்னெஸ்ட்டோவின் அமெரிக்கப் பயணம் அமைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. பயணங்கள் நமது கொள்கைகளை மாற்றிவிடக் கூடியவை. ஒரு புதிய கொள்கையின் வித்துக்கள் விழுந்து விட சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுப்பவை. எர்னெஸ்ட்டோ, பெருவிலும், பொலிவியாவிலும் பழங்குடி இந்தியர்கள் படும் பாட்டை நேரில் காண்கிறான். நில ஆக்ரமிப்பு செய்து பெரும் பணம் ஈட்டும் நிலச் சுவாந்தார்கள் மீதும், அமெரிக்க சுரங்கக் கம்பெனிகள் மீதும் அவனது வெறுப்பு பன்மடங்காகிறது. எர்னெஸ்ட்டொவுன் அவனது நண்பன் வும் மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயண அனுபவங்கள் “மோட்டார் சைக்கிள் டைரிகள்” எனப் புத்தகமாக வந்திருக்கின்றது. அதனை கிட்டத்தட்ட இரண்டு அத்தியாயங்களாக ஆண்டர்சன் காட்டியிருக்கிறார்.

வெனிசுவேலாவில் கறுப்பர்களை முதன்முதலாக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எர்னெஸ்ட்டோவுக்குக் கிடைக்கிறது. அவர்களைக்குறித்தான அவரது கருத்துக்கள் , அக்காலத்திய அர்ஜெண்டீனிய வெள்ளை நிற வெறியைக் காட்டுவதாக அமைகிறது. இதனை ஆண்டர்சன் சர்வ சகஜமாக எழுதிப்போகிறார். இது கண்டிப்பாக க்யூபாவிலும், உலகளவில் செ குவாரா அபிமானிகளின் வட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்ககூடும்.

தொடரும்.

Saturday, April 09, 2011

அண்ணா ஹசாரே-ஏன் திடீரென பரபரப்பு?

உலகக்கோப்பை வெற்றிக்கூச்சலின் நடுவே எப்படி ஒரு எளிய மனிதனின் குரல் உரக்கக் கேட்கிறது என்பதே பலருக்கு வியப்பாக இருக்கிறது. அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் பரவலாகக் கேட்டபெயராக இருக்கலாம். பிற மாநிலங்களில் வெகு அரிது.

அவர் உண்ணா விரதத்தைத் தொடங்கியதும் சரியான நேரமில்லை தொலைக்காட்சி சேனல்கள் உலகக்கோப்பை முடிந்ததும் , ஐ.பி.எல், அஸ்ஸாம், தமிழ்நாடு தேர்தல்கள் என அங்கங்கே சென்றுவிட்ட நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதம் மேற்கொள்வ்து பெரிதாகக் காட்டப்பட காமிராக்களுக்குப் பஞ்சம்.அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் சத்தியாகிரகம் வென்றிருக்கிறது. சரத் பவார் கீழிறங்கினார் முதலில். பின் ஒரு நாள் முரண்டு பிடித்து, டெல்லி பணிந்தது. லோக் பல் தீர்மானம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு செவி சாய்க்காமல், அண்ணா அடம்பிடித்தது வீணாகவில்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பங்களூர், ஹைதராபாத்... எல்லா நகரங்களும் அன்ணாவுக்கு ஆதரவாக திரண்டபோதும், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய தளங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என இளைஞர்களும், முதியவர்களும் அசத்திவிட்டார்கள். நான் ஆவாஸ்.ஒர்க் -கில் எனது ஆதரவைப் பதிவு செய்த போது, ஒவ்வொரு நொடியிலும் பெயர்கள் வந்தவண்ணமிருந்தது கண்டு வியந்துபோனேன். நான் பதிவு செய்த ஒரு நிமிடத்தில் என் மகனும் பதிவு செய்தான். அவனது நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் செய்தி விசிறியடிக்கப்பட்டது. அண்ணா பேசியபோது “ இது இளைஞர்களின் வெற்றி” எனச் சென்னது சும்மாயில்லை.
ஏன் அண்ணா? இது நமது விரக்தியின், வெகுகாலமாக ஏமாற்றப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு. நாம் பல வருடங்களாகவே தூய்மையான ஒரு தலைவரை எதிர்பாத்து ஏமாந்து போயிருக்கிறோம். மன் மோகன் சிங் என்னும் மனிதருக்காவே ஓட்டுகள் விழுந்தனவேயன்றி காங்கிரஸ் என்னும் கட்சிக்கல்ல என்பது அக்கட்சிக்காரகளுக்கு நன்றாகவே தெரியும். அவரும் 2ஜி யில் வழுக்கிப் பேசியதும், வெறுப்படைந்து போயிருக்கின்றனர் இந்தியர்கள்.

ஒரே ஒரு குரல் நல்லாட்சிக்காக ஒலித்ததும், அக்குரலின் சொந்தக்காரனின் தூய்மை பற்றிக்கேள்விப்ப்பட்டதும், பல வருட ஏமாற்றத்தின் வெளிப்பாடு, அண்ணாவுக்கு ஆதரவாகப் பொங்கியது. சுய ஒழுக்கமும், உண்மையிலஉறுதியும், தூய்மைக்கேட்டை அகற்றத் தான் முன்னின்று போர் நடத்தும் தைரியமும் இருக்கும் ஒருவனை இன்னாடு பல ஆண்டுகளாக ஏங்கி எதிர்பார்த்து நின்றிருக்கிறது. அண்ணாவின் குரல் ஒலித்ததும், அவரை நோக்கித் தங்கள் எதிர்பார்ப்பைக் கொட்டிவிட்டார்கள் மக்கள். அதுவும் காந்திய வழியில் அவர் காட்டிய அமைதியான எதிர்ப்பு, மீண்டும் நமது கலாச்சாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.

இன்னொரு எகிப்து, துனீசியாவை தன் மண்ணில் இந்திய அரசு விரும்பவில்லை. லஞ்சத்துக்கு எதிரான இந்த இயக்கம் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்துவிடும் என்பதை அரசு அறிந்ததும், பணிந்து போனது. இதுபோல இயக்கங்கள் மேலும் வந்தால்தான் நமக்கு வாழ்வு.
தைரியமாக அண்ணாவுக்கு ஆதரவைத் தெரிவியுங்கள். நாளை இன்னொரு தீமையை எதிர்த்து மற்றொரு இயக்கம் வரலாம். அதற்கும் துணை நிற்கத் துணிவு நம்மிடத்தே வேண்டும்.

Sunday, November 29, 2009

சில கோபங்களும் அதன் பின்னணியும்

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

Monday, May 18, 2009

ஊடகங்களுக்கு பொறுப்புணர்வு தேவையில்லையோ?

“எங்கடா பிணம் கிடக்கும்?” என அலைவது வல்லூறுகள் மட்டுமல்ல, வீடியோ கேமெராவும், மைக்கும் , சாட்டிலைட் ஆண்டெனா பொருத்தப்பட்ட வேனுமாகத் திரியும் இந்த ஊடகக்காரர்களும்தான்...

பிரபாகரன் மரணம், புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர்களின் மரணம் என்பது அதிர்ச்சியான செய்தி, வலிமிகும் செய்தி - ஒரு இன மக்களுக்கு... அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ,ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது பின்னடைவுதான். தமிழ்மக்கள் குறித்து ஒரு பயலுக்கும் உணர்வில்லை- இந்திய ஆங்கில ஊடகங்கள் இதில் முன்னணி.

செய்தி தருவதிலும், ஆராய்வு செய்வதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அவசியமேயில்லாமல் சில பரபரப்பு வார்த்தைகள் தொலைக்காட்சியில்...
“ எல்.டி.டி.ஈ அழிந்தது”.
என்ன கேணக்கூத்து இது? இவன்களுக்கு டெல்லி, மும்பை தவிர ஒரு சாலையிலும் செல்லத் தெரியாது.. வட இலங்கையின் காட்டுக்குள்ளே வலியுடன் போரடுபவர்களைக்குறித்து ஏ.ஸியில் இருந்து “ அவன்களா, செத்துட்டாங்கடே.. லங்கா ஆர்மி அழிச்சேபோட்டுட்டான்” எனப் பேசுபவர்களை இழுத்து நாலு அறைவிடலாமா என ஆத்திரம் வருகிறது. தொழில் மரியாதை தெரியாத பதர்கள்...

ஓட்டு எண்ணும் இடங்களில் கூடியிருந்து, தலையைத் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, என்னமோ மிகப் பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தமாதிரி பேசும் பத்தாம்பசலிகளும், ஸ்டூடியோவில், கோட்டும் சூட்டும் மாட்டி, தெரிந்த மாதிரி புள்ளிவிவரங்களை அள்ளிவிடும் படுபுத்திசாலிகளும், இலங்கை மாதிரி மிக சென்சிடிவான விசயங்களை விவாதிக்காமல் இருப்பது நல்லது. அதான் தோத்த, ஜெயித்த கட்சிப்புள்ளிகள் இருக்காங்களே....அவங்ககிட்ட வழக்கம்போல “ எப்ப உ.பி கிராமங்கள்ல மின்சாரம் வரும்?” எனக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? இந்திய வடகிழக்கு மாகாணங்கள் எத்தனை உண்டு என்பதே இவர்களில் பலருக்குத் தெரியாது.
இருக்கிற தமிழர்களையே கண்டுகொள்வதில்லை ( ஓட்டு மட்டும் வேணும்). இவன்கள் எங்கே இலங்கை பத்தி உருப்படியா சொல்லப்போகிறான்கள்?
ஒரு வேளை இவர்களிடம் நான் ரொம்பவே எதிர்பார்த்துவிட்டேனோ?
ஒண்ணு நிச்சயம்.. இனி ஒரு விரிசல் இருக்கும்.... தமிழன் - தமிழல்லாதவன் என... குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை.

முடிவு?.....

இவர்களெல்லாம் மனிதர்களா?

பிரபாகரன் இறந்ததாக செய்தி வந்ததில் சிறிது குலைந்துதான் போனேன். புலிகள் கையாண்ட வன்முறையில் எனக்கு சம்மதமில்லை எனினும், ஒரு தமிழ் இயக்கம் என்ற அளவிலும், குறி நோக்கியே நகர்ந்து, பல உயிர்த்தியாகங்களில் வளர்ந்த அவ்வியக்கத்தில் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு இயக்கத்தின் ஒரு அங்கம் சோகமான முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு வருத்தம் உண்டு... இலங்கைத்தமிழர்களின் அவலநிலைக்கு இவ்வியக்கம் , சற்று நிதானித்திருந்தால் , பல குழுக்களுடன் கூடி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

செய்தியை வலைத்தளத்தில் படிக்கும் போது வருத்தம் கொதிப்பாக மாறியது. கமெண்ட்ஸ் இடுகைகள் ( ரிடிஃப்.காம்) பிரபாகரன் இறந்ததைக் கொண்டாடுவது கண்டு கோபம் மூள்கிறது. ஒருமனிதன்.. எத்தனை கொடுமைகள் சந்தித்திருந்தால் இப்படி ஒரு நாட்டையே குலை நடுங்க வைக்கும் அளவு மாறியிருப்பான்? எத்தனை பேர் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்? ஏன் இந்திய பஞ்சாபிகள், பெங்காலிகள் இன்னும் 1947 பிரிவினைக் கொடூரங்கள் குறித்து கொதிப்பது நியாயமென்றால், இலங்கையில் எரிவது கண்டு கொதிப்பது எந்த விதத்தில் குறைந்துபோனது.
ஒரு கமெண்ட்... “ இன்று கொண்டாடுங்கள்.. ஸ்டாக் மார்க்கெட் 14000, காங்கிரஸ் வெற்றி, பிரபாகரன் மரணம்..” சே! என்ன மனிதர்கள் இவர்கள்? ஸ்டாக் மார்க்கெட் ஏற்றம் போன்ற அல்ப காரணங்களும், ஒரு மரணமும் ஒன்றாகுமா?

ஒருவேளை, ராஜபக்சேக்குத் தெரிந்தேதான் இருநாட்கள் பொறுத்திருக்கும்படி இந்திய அரசு சொல்லிற்றோ? எங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெட்டுங்கள் என? அழுக்கான அரசியலில் எதுவும் சாத்தியம்.

இன்று மனம் கனத்திருக்கிறேன். ஒரு தமிழன் என்ற அளவில் எதையோ இழந்த சோகம்... இழந்தது இனத்தின் மானமா? வேதனை என் கையாலாகத்தனம் குறித்தா? வெட்கமா? தெரியவில்லை.
இறந்த தமிழ்வீரர்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
இனியாவது, கொஞ்சம் சுரணை சேர்த்து வாழத் தலைப்படுவோம்.

Sunday, May 17, 2009

அவர்கள் உறங்கவில்லை.

அந்த சப்தத்திற்கு நிச்சயமாக யாரும் உறங்க முடியாது. நான் விழித்திருந்தது வியப்பில்லை.

தாரை தப்பட்டைகளுடன் ஆடியபடி ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம். பின்னால் ஒரு சிறிய மாட்டுவண்டி., மின்விளக்குகள் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலமென பொருத்தமேயில்லாதபடி கன்னாபின்னாவென சொருகப்பட்டு, ஜெனரேட்டர் ( அல்லது பாட்டரி?) மின்சாரத்தில் அடிக்கவரும் நிறக்கலவையாக மின்னியபடி மெதுவாக அக்கூட்டத்தின் பின்னால் வந்துகொண்டிருந்தது. சிறுவர்களும் சிறுமியர்களும் அதிலிருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தனர்.

கணபதி பூஜை வருவதற்கு பல மாதங்களிருக்கின்றனவே? இது என்ன புதுசா இப்போது? என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், கீழிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர் அருகே வந்தார். “ அட, இவங்களா?” என்றார். நான் விழித்தேன்.

”இவர்கள் பூர்வீகக் குடியினர். முன்பு தாணே மலைப்பகுதியிலிருந்து பால்கர் கடற்கரை வரையிலிருக்கும் பரப்பளவில் வசித்தவர்கள். வேலை தேடி வந்தவர்கள் ,இப்போ சேரிப்பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்கள் பண்டிகைகள் வேறு காலங்களில் வரும். நம்ம பக்கமும் இருக்காங்களா? “ என வியந்தார். * வேண்டுமென்றேதான் அக்குடியினரின் பெயர் சொல்லாமல் விட்டிருக்கிறேன். கூகிளில் தேடினால் கிடைக்கும்.

நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்கர் ரயில் நிலையத்தில், இளநீர், சப்போட்டா , நாவல் பழம் என எதாவது காட்டில் விளைவதை விற்றுக் கொண்டிருப்பார்கள். பெண்களின் உடை சற்று வித்தியாசமாக இருக்கும். பெரிதாகப் பொட்டு நெற்றியில்...

சிவாஜி காலத்திலேயே சுதந்திரமாக இருந்த இம்மலைவாழ் மக்கள், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகம் பாதிக்கப்படவில்லை . சுதந்திரத்தின் பின்னே, அரசியல் வாதிகளால் அவர்கள் இருப்பிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு, வேலை தேடி வேறிடம் குடிபுக நேர்ந்தனர்.

காலப்போக்கில் மும்பை கலாச்சாரத்தில் இணையவும் முடியாமல், தங்கள் வாழ்வுமுறையை முற்றிலும் மாற்றவும் முடியாமல் திண்டாடி, சிலர் திருடுவதைத் தொழிலாகக் கொண்டனர். பலர் தொழிற்பட்டறைகளிலும், சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட, வெகு சிலரே படித்து முன்னேறினர். எங்கள் அலுவலகத்தில் பணியாளராக இருக்கும் இருவர் இந்தக் குடியினர். அதில் சந்திரா என்பவன் கொஞ்சம் சகஜமாகப் பேசுவான்.

மறுநாள் சந்திராவை அழைத்து “நேத்து என்ன விசேஷம்?” என்றேன்.முதலில் தயங்கினான்.
பின்னர் காபி குடிக்கப் போனபோது பேண்ட்டரியில் தனியாக இருப்பதை உறுதிசெய்தபின்னர் மெதுவாகப் பேசத்தொடங்கினான். “ அது எங்க கிராமங்கள்ல எங்க கடவுள்களுக்கு செய்யிற மரியாதை. கிராமங்களெல்லாம் காட்டுப்பக்கமா இருக்குமா? பூஜை முடிந்து திரும்பிப் போகும்போது , காட்டுல எதாச்சும் மிருகங்க தாக்கும். அதுக்காக நாங்க கூட்டமாக, சப்தம் எழுப்பியபடியே போவோம். இந்தப் பயலுவ இங்கயும் வந்து இதச் செய்யறானுக?” என தர்ம சங்கடமாகச் சிரித்தான். தனது இனத்தவர் ஏதோ தவறு செய்த குற்றவுணர்வு அவன் குரலில் ஒலித்தது.

“ கணபதி ஊர்வலம் போவது உனக்குச் சரியாகப் படுகிறதா?’ என்றேன். “என்னடா இப்படிக் கேணத்தனமாக் கேக்கிறான்?” என்ற கேள்வி தொக்கிநிற்க, வேகமாக “ ஆமா”
எனத் தலையாட்டினான். “ அது சரிதான் என்றால், சந்திரா, இதுவும் சரிதான்” . என்றேன். அவன் நம்பியதாகத் தெரியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மாலையில், சிறிது வேலையிருந்ததால் 7 மணி வரை அலுவலகத்தில் இருந்தேன். ஒவ்வொருவராகக் கிளம்பிப் போய்க்கொண்டிருக்க, எனது வேலையும் ஒருமாதிரியாக முடிந்தது. கிளம்பிக்கொண்டிருக்கையில் சந்திரா என் கேபின் வாசலில் மெதுவாக வந்து நின்றான்.

“ஸாப். ஒரு நிமிடம்.” என்றான். உள்ளே அழைத்தேன். அவன் அதிகம் வந்து தொல்லை செய்வதில்லை. கடன் கேட்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது.

“ நீங்கள் சொன்னதை யோசித்தேன். சரியென்றே பட்டது. கணபதிக்கு நாங்களும் ஆடிச்செல்வோம். பைசா பிரித்து பெரிதாகப் பந்தல் போடுவோம். பிரசாதம் வினியோகிப்போம். ஆனால்...” எனத் தயங்கினான். மெதுவாகத் தலைநிமிர்ந்தவன் , மெல்லிய குரலில் தொடர்ந்தான்.
“ எங்கள் பண்டிகையை நாங்கள் மட்டுமே கொண்டாடுவோம். வேறு சாதியினர் யாரும் வருவதில்லை. சாமி கும்புடுவதில்லை. ஏன் பிரசாதம் கூட வாங்கிக் கொள்வதில்லை. மலைசாதி மக்கள் நாங்கள் பாருங்கள்.”

நான் சற்று குலைந்துதான் போனேன். மும்பைச் சேரிகளிலும் வித்தியாசமுண்டா? பண்டிகைகள் , கிராமங்களில் வேண்டுமானால் சாதி பிரிவினால் வேறுபடலாம். இங்குமா?

”உங்க பண்டிகை பிரசாதம் இருக்கா ? இருந்தா எனக்கு நாளைக்குக் கொண்டுவா” என்றேன். அவன் தயங்கினான். “ இல்லை சார். அடுத்ததடவை கண்டிப்பாக் கொண்டு வர்றேன்” என்றான். பொய் சொல்கிறான் எனத் தோன்றியது. தயக்கம், மற்றும் எனது இந்தக் கேள்வி எனது அனுதாபம் மட்டுமே கொண்டதுயெனும் நினைப்புமாக இருக்கலாம். அவனது சிந்தனைக்கும் , கலாச்சாரத்திற்கும் எனது மதிப்பும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதால் நான் மேலும் வற்புறுத்தவில்லை.

“ நிச்சயமாக் கொண்டுவா. ரொம்ப தித்திப்பா இருக்காதுல்ல? எனக்கு சர்க்கரைவியாதி உண்டு. தெரியுமில்லையா?” எனச் சிரித்தேன். அவனும் சிரித்தான். இருவர் சிரிப்பிலும் ஒரு செயற்கை இருந்தது என் காதுகளுக்குக் கேட்டது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மேசையின் நாலு அடி அகலம் என்னவோ மிகப் பெரியதாகப் பட்டது.

Saturday, May 16, 2009

கல்வித்தரக் காமாலை

”பையன் இந்த வருசம் 75க்கு மேல மார்க் எடுத்திருக்கான். ஐ.சி.எஸ்.ஸி சிலபஸ் இருக்கிற நல்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒண்ணு இருக்கா?” கேட்ட நண்பரை அனுதாபத்துடன் பார்த்தேன்.
“இப்ப இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பேர் வாங்கினதுதானே? எதுக்கு மெனக்கெடறீங்க?” என்ற எனது கேள்வி அவருக்கு புரியவில்லை.

“ இந்த ஸ்கூல் மாநில சிலபஸ்... ஐ.சி.எஸ்.ஸி-ன்னா நல்ல தரம் இருக்கும்லா?” எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்ளவெனத் தெரியவில்லை.

மாநில சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் என்னமோ மட்டம் என்றும் , சி.பி.எஸ்.ஸி, ஐ.ஸி.எஸ்.ஸி சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்றும் ஒரு தவறான எண்ணம் - பெரும்பாலும் மத்தியதர , உயர் மத்தியதர மக்கள் மட்டத்தில்... இவர்களில் பலரும் மாநில சிலபஸ் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இதற்குமேல் ஒரு கேலிக்கூத்து...தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் பாடங்கள் படிக்கும் மாணவர்களை விட ஆங்கிலமொழியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்னும் பேச்சு. ஆங்கில மொழிக் கல்விக்கூடமென்றால் அடிதடி.. தமிழ், மராட்டிய மற்றும் பிற பிராந்திய மொழி வகுப்புகளுக்கு ஆளே இருக்காது இங்கெல்லாம்.


எனது மனைவி பணிசெய்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களைக்குறித்து சொல்வது நினைவுக்கு வருகிறது. ”தாய்மொழியில் கற்ற மாணவர்களும், ஐ.சி.எஸ்.ஸியில் படித்து வரும் மாணவர்களும் சேரும் வகுப்பில் பார்த்தால், அடிப்படை அறிவும், முயற்சியெடுக்கும் பண்பும் தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு அதிகம். ஐ.சி.எஸ்.ஸி , சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் “ இதெல்லாம் நாங்க ஸ்கூல்லேயே படிச்சுட்டமாக்கும்” என்ற மெத்தனப் போக்கு கொண்டு திரிந்துவிட்டு, கடைசியில் லபோ லபோவென அடித்துக்கொண்டு படிப்பார்கள்.”என்பார். என்ன, ஐ.சி.எஸ்.ஸி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. தைரியமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள். இந்த பேச்சுத்திறமை, தெளிவாகத் தனது வாதத்தை முன் வைத்தல் போன்ற மென் தொடர்புத் திறமைகள் (soft skills) அவர்களது பெரும் பலம்... தாய்மொழிக்கல்வி மாணவர்களின் பலவீனம்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இண்டர்வியூவுக்கு வரும் பல மென்பொருள் நிறுவன மனிதவள அதிகாரிகள் முன்பு சிலாகித்ததுண்டு.” தென்னிந்திய மாணவர்களுக்கு தொடர்புத் திறமை மிகக்குறைவு. ஆனால் அடிப்படை நுட்ப அறிவு அதிகம். மும்பை, டெல்லியில் வாய்ப்பந்தல் ஜாஸ்தி... ஆனால் நம்மை , அவர்களது தன்னம்பிக்கை, பேச்சுத்திறமையில் நம்ப வைத்துவிடுகிறார்கள்” என்பார்கள். இப்போது நிலமை மாறியிருக்கலாம்.

மாநிலக் கல்வித் திட்டம் பிற திட்டங்களைவிடத் தாழ்ந்தது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. எனது மகனை மாநிலக் கல்வித்திட்டம் சார்ந்த பள்ளியில்தான் சேர்த்திருக்கிறோம். அவனது நண்பர்கள் பலர் ஐ.சி.எஸ்.ஸி பள்ளிக்குப் போகிறார்கள். அதிகமான பாடச்சுமை... அடிப்படை புரியாதபடி வேகமாகப் போகும் வகுப்புகள்... அடிக்கடி தேர்வுகள் என சுமையில் அச்சிறுவர்கள் அழுந்துவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இப்போதும் எனது நிறுவனத்தில் சேரும் பல இளைஞர்/இளைஞிகளின் அடிப்படை அறிவியல் அறிவு சுமாராகத்தான் இருக்கிறது. முக்கியமாக கணக்கு... பெருக்குதல், வகுத்தல், சதவீதம் என்றால் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் முடிவதில்லை. கையில் கம்புடன் “ ம்..சொல்லுல... 84ஐ நாலால வகுந்தா என்ன வரும்?” என்று எட்டாம் வகுப்பின் கணித ஆசிரியர் குருமலை சாரிடம் படித்த என்போன்ற மாணவர்கள் என்ன குறைந்து போய்விட்டனர்? அரை நிமிடத்தில் பதில் வரவில்லையென்றால் பிரம்பு முட்டியில் பாயும்...நூறு முறை பதினாறாம் வாய்ப்பாடு எழுதிவர, பதினாறாம் வாய்ப்பாடு ஜென்மத்துக்கும் மறக்காது. அடிப்பதை நான் வரவேற்கவில்லை. வாய்ப்பாடு, மனக்கணக்கு என்பதெல்லாம், கூகிளை மேய்ந்து , பக்கம் பக்கமாக ” ஆர்க்டிக் பனிக்கரடிகளின் வாழ்வு முறை” என எழுதுவதை விட மிக முக்கியம் என்பது என் கருத்து.

தேர்தல் முடிவுகளும் இலங்கையும்

காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக “ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்” என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு “தனி ஈழம்”, உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... “அவங்க வூட்டுப் பிரச்சனை” என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் “நினைக்கமுடியாத பெரும் அழிவு” என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.

Tuesday, March 03, 2009

எங்கூரு பேப்பருலா!

போன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..

தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள் இருந்தாலும், தினத்தந்தி மேல் எனக்கு ஒரு தனிப் பாசம். எங்கூரு பேப்பருல்லா... சின்னவயதில்,காலங்கார்த்தாலே, அடுத்த தெரு மரக்கடைக்கு ஓடுவேன். நானும் என் நண்பர்களும் சேர்ந்து எழுத்துக்கூட்டி “சிந்துபாத்” படிப்போம்.(அதென்னமோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் லைலா ஒரு ஒற்றைக்கண் அரக்கன், பெரிய பாம்பு, பிரமாண்டமான கடல் விலங்கு என ஏதோ ஒரு கேணக்கிறுக்கிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாள்...). கூடுதலாக நீர்மட்டம் அட்டவணை பார்ப்பேன். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் எவ்வளவு அடி நீர் இருந்தா தூத்துக்குடி/அம்பாசமுத்திரத்தில் இருக்கும் எனக்கு என்ன? வாய்விட்டுப் படிப்பதால் பக்கத்தில் ஓசி பேப்பர் படிக்கவருபவர்களிடம் ஏச்சும் கிடைக்கும்.
“சவத்து மூதிகளா, சளம்பாம படிங்கலே..இன்னொரு தடவை சத்தம் வந்தது..**டியில ரெண்டு போடு போடுவம்” என தேவர் தாத்தா மரக்கட்டையை ஓங்கியதும்தான் அடங்குவோம். ”மூதிகளா, வெள்ளாமையா பண்ணுதீய? நீர்மட்டம் பாக்குறானுவ..கேணப்பயலுவ” எனச் சிரிப்பார்.இருந்தாலும் விடாமல் ஒவ்வொருநாளும் நீர்மட்டம் பார்க்கத் தவறுவதில்லை. எளிதில் புரியும் என்பதால் படித்தேன் என இன்று நினைக்கிறேன்.
ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என ஒரு கார்ட்டூன்.. அரைகுறை ஆடையோடு ஒரு பெண்...பக்கத்தில் ஒரு ஜொள்ளு.. எட்டிபார்த்தபடி ஆண்டியார்.. ஒரு விசயமும் இருக்காது.. இருந்தாலும் புரியாமலே சிரிப்போம். இப்ப அது ஆண்டியார் பாடுகிறார் என பரிமணித்திருக்கிறது.

ஆயினும் தினத்தந்தி எங்கள் தமிழ் படிப்பறிவை வளர்த்தது என்பது என்னமோ உண்மை. கொட்டையெழுத்தில் சிறு சிறு செய்திகள் படிக்க எளிது. நாலு வரி முதல்பக்கத்தில் படிக்குமுன்னேயே “ நாலாம் பத்தி பார்க்க” என வந்துவிடும். ஆர்வமும் போய்விடும். உடனே அடுத்த செய்திக்கு தாவுவோம். பள்ளியில் , படித்த செய்தியை பீற்றிக்கொள்வதும் நடக்கும். என்னமோ , வகுப்பில் சிறுமிகளுக்கு இதெல்லாம் ஒரு ஆர்வமாகப் படவில்லை. போங்கலே என சுளித்துவிட்டு “வாங்கடி, விளையாடுவம்” என கொடுக்காப்புளிக்கொட்டை, புளியாங்கொட்டைகளை வைத்துக்கொண்டு “ ஓரி உலகெல்லாம், உலகெல்லாம் சூரியன், சூரியன் தங்கச்சி, சுந்தரவல்லிக்கு..” என என்னமோ பாடிக்கொண்டு விளையாடுவார்கள். படிச்சதை வைச்சு பொண்ணுகளை இம்ப்ரஸ் பண்ணமுடியாது என்பதை அன்றே உணர்ந்திருந்தேன்.

”ஹிண்டு படிடே. இங்கலீஷ் நல்லாவரும்” என ஆசிரியர்களும், வீட்டில் பெரியவர்களும் வற்புறுத்தினாலும், ஆங்கிலத்தில் படிப்பது என்பது பெரும் அறுவையாக இருந்தது. ”ஒரு எழவும் புரியல மக்கா” என நண்பர்களுடன் மட்டுமே புலம்பித் தீர்த்துக்கொண்டிருந்தேன். சொன்னா அடிவிழும் “ சோம்பேறி மூதி. படிக்கணும்னா போர் அடிக்கோ?” என முதுகில் நாலு சாத்து சாத்துவார்கள் எனப் “பட்டறிவு” உணர்த்தியிருந்தது. என்ன செய்ய ? அதனாலேயே தினத்தந்தி ஒரு சொர்க்கமாக இருந்தது.

மும்பையில் வேலை பார்க்கும்போது தினத்தந்தி தேடினேன். கிடைக்கவில்லை. “ரெண்டுநாள் முந்தின பேப்பரு வரும் சார்” என்றனர் மாதுங்காவில். விட்டுவிட்டேன். இப்போது மும்பைப் பதிப்பு கிடைக்கப்போகிறது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
முதல்நாள் எங்கள் பேப்பர்காரன் கொண்டுவரவில்லை. “ ஆமா சார் என்னமோ தமிழ் பேப்பர் வந்திருக்கு.. வேணும்னா சொல்லுங்க” என வியாபரமாகப் பேசிச் சென்றுவிட்டான். நான் விடவில்ல. பேப்பர் பிரித்து கட்டுக்கட்டாக சைக்கிளில் வைக்கும் இடங்களில் சென்று தேடினேன். கிடைக்கவில்லை. மலாட் ரயில் நிலையம் அருகே மதியம் செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு கடையின் உள்ளே... ஒரேயொரு தமிழ்பேப்பர்.. தினத்தந்தியா?
கேட்டால் அவனுக்குப் புரியவில்லை. “மதராஸிப் பேப்பர் ஏக் ஆயா ஹை” என்றான் சுரத்தில்லாமல். எடுக்கசொல்லி பார்த்தேன். ஆகா.. நம்மூரு பேப்பருல்லா கிடக்கு?!

படு விவரமாக, நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக்காரர்களைக் குறிவைத்தே அச்சடித்திருக்கிறார்கள். ஒரு முழுப்பக்கம் இந்த ஊர்க்காரர்களுக்கென்றே.. அந்த ஊர்ச் செய்திகள்.
“பணகுடி அருகே தந்தை மகன் வெட்டிக்கொலை. போலீசார் தீவிர புலன் விசாரணை”
“பாளை பேருந்து நிலையத்தில் பயங்கரம். ஓடஓட அருவாளால் வெட்டினர்”
“ஏரலில் பட்டதாரி இளம்பெண் காதலனுடன் ஓட்டம். போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்”
என நாட்டுக்கு மிக முக்கியமான, நல்ல செய்திகளுடன் உங்கள் காலை தொடங்கினால்... வெளங்கினாப்போலத்தான்.

“முடிவைத்தானேந்தல்ல நேற்று என் மருமவன் பால்குடம் எடுத்தான்லா” என்னுமளவுக்கு சிறுசெய்திகளின் கலவையாக ஒரு முழுப்பக்கம். என்னமோ கோஸு தின்றுகொண்டு, டீ கிளாசை கையில் பிடித்தவாறு , பெஞ்சில் ஹாய்யாக கால்மேல கால்போட்டு உட்கார்ந்து , பக்கத்துல இருப்பவரிடம் “ இந்த ஊரு வெளங்குமாடே?” என அரட்டை அடிக்கும் அனுபவம்,மும்பையில் உங்கள் வீட்டில் கிடைக்கும்போது “செய்தி என்னவா இருந்தா என்ன?” எனத் தோன்றி , அந்த அனுபவத்திற்காகவே படிக்கும் கோஷ்டியில் நானும் ஒருவன்.

என் மகனையும் எழுத்துக்கூட்டி படிக்க வைத்திருக்கிறேன். தமிழ்ப் புத்தகங்களை விட அவனுக்கு இது எளிதாகவும் இருக்கிறது. “இண்ட்ரஸ்டிங்க்” என்கிறான். முதல் பக்கத்தை விட்டு அவன் செல்வதில்லை. அதற்குள் எனது தணிக்கை வந்துவிடும்.. இல்லையென்றால் அதென்ன இதென்ன என ஆயிரம் கேள்விகள் வரும். நாயை அடிப்பானேன்...*யைச் சொமப்பானேன்? ( ”திரிஷாவின் கைகளில் என்ன? இதயத்திலேயே குடியிருக்கிறேன் என்கிறார் விஜய் ”என என்னமாவது சினிமா சில்மிஷங்களுக்கு நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது). இப்போது கொஞ்சம் வேகமாக வாசிக்கிறான்.

எனது அலுவலக மேலாளர் தேஷ்பாண்டே தனது கணனியில் மராத்தி பேப்பர் வாசிப்பவர். நான் வீட்டில் தினத்தந்தி வாங்குவதைச் சொன்னதும் “இணையதளத்தில் தமிழ்ப் பேப்பர்கள் இருக்குமே? எதுக்கு பேப்பர் வாங்குற?” என்றார். கையில் பேப்பர் வைத்து, காலையில் நம்மவூர் செய்திகளைப் படிப்பது சுகம் என்றேன். ஒத்துக்கொண்டார். ”அதெதுக்கு இந்த பேப்பர் செலக்ட் பண்ணினே?” என்றார். ஒரே பதில்தான்.

எங்கூரு பேப்பருல்லா!

Saturday, February 28, 2009

உலகத் தமிழன்?

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?”
கேட்டவன் தமிழனில்லை.
ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.. தமிழ்நாடு என்றாலே ”இராமேஸ்வரம் தெரியும்” என்னும் வகை. எல்லா தென்னிந்தியனும் மதராஸி என்று கேட்டு வளர்ந்தவன்.
இலங்கை, அதன் தவிப்பு எல்லாம் அவனுக்கு வெகுதூரம்.
அவன் இப்படிக்கேட்டதும் வியந்துபோனேன். “ இலங்கை பிரச்சனை இன்று நேற்றதல்ல. பிரணாப் முகர்ஜிக்கு முன்பே பலர் இதில் அரைகுறை மனசோடு கைவைத்ததின் விளைவு இன்று இப்படி..” என விளக்கத் தொடங்கிய என்னை நிறுத்தினான்.
“ எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன, . புலிகள் என்று ஒரு அமைப்பு ஒரு பக்கம். ராணுவம் ஒருபக்கம். மாட்டிகிட்டு பாவம் மக்கள் சாகிறாங்க. இது சரியாகப் படலை. ஃபிஜித் தீவுல பீஹாரிகளுக்கு சளி புடிச்சா, டெல்லி தும்மும்.. இங்கே செத்தாலும் ஒண்ணுமில்லன்னா என்னமோ மாதிரியிருக்கு” என்றான்.
மனிதாபிமானம் என்பது மொழி, இனம், மீடியா கடந்தது. இங்கு ஊடகங்கள் என்ன காட்டுகின்றன?
“புலிகளின் கடைசி இருப்பிடத்தை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேற்றம்”. “ பிரபாகரனின் சொகுசு பதுங்குகுளி கைப்பற்றப்பட்டது’ “பிரபாகரன் தப்பி ஓட்டம்”. -ஹிண்டுஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ( ஹிந்துவை விடுங்கள்)வின் கடைசி பக்கச் செய்திகள் கொசுறு போல இலங்கைப் போர் பற்றி. இதுவா நிஜச் சித்தரிப்பு?
”அகதிகளின் நிலை அரசியலாக்கப்படுகிறது - தமிழகத்தில்”- இதுதான் செய்தி சிறப்புப் பார்வைகளில். இம்மேதாவிகள் தி.மு,க, வை,கோ, அ.தி,மு.க தவிர தமிழர்களே இல்லை என்கிறார்களா? தமிழரின் கருத்துக்கள் என்ன? தமிழன் என்றால் யார்?

தமிழன் என்பது ஒரு இனம். உலகின் பல மூலைகளில் பெருமையுடனோ/தவித்தோ உயிருடன் இருக்கத் தவிக்கும் ஒரு தனி இனம். தமிழன் என்பவன் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல. தமிழ் என்னும் பெரும் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காக்கத் தவறிய முட்டாள் மனிதர்களின் மொத்த அடையாளம். சினிமாவில் தன்னைத்தொலைத்து, தொலைந்ததும் தெரியாமல் வாய் பிளந்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்கும் ஒரு மந்தை மனிதர்கள்.

”யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒரு முறை நியூ ஆர்லியன்ஸில் எனது பிற நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். “ உலகமயமாக்குதலின் தீர்க்கதரிசனத்தின் உச்ச கட்டம் இது” என்றனர் பலர் வியந்து. ”இத்தனை பரந்த மனப்பான்மை படைத்த உங்கள் இனம் ஏன் ரோமானியர் போல புகழ் பெறவில்லை?” என்றார் ஒருவர். “ அடக்கியாள்வதும், பிற கலாச்சாரத்தினை அழித்து தன்னுடையதைப் பரப்புவதும் தமிழனின் பண்பாடில்லை” என்றேன். முன்பு படித்த வரலாறு கைகொடுத்தது. “வியப்பாக இருக்கிறது.நாங்கள் என்னமோ அடிமட்ட நிலையில் சுரண்டப்படும் ஒரு இனம் என்றல்லவா நினைத்தோம்?” என்றனர். அது அமெரிக்க அசட்டுத்தனம்.. விடுங்கள்.”
ஒரு புலம் பெயர்ந்த தமிழருடன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அங்கு வந்த எனது அமெரிக்க நண்பர் “உங்கள் மொழியில் எப்படி வித்தியாசம் கண்டுகொள்வீர்கள்?” என்று கேட்டார். நான்”“ தமிழ்நாட்டில இருந்து வந்தவங்க தமிழ்ல பெரும்பாலும் ஆங்கிலம் இருக்கும்- படிச்சவங்க என்று காட்டிக்கிற அடையாளம். இலங்கைத்தமிழர் பேசினா அது தமிழா மட்டுமே இருக்கும்” என்று விளக்கினேன். ”ஆக உலகத்தமிழர் என்று இல்லை. பிராந்திய அளவில் வேற்றுமை கண்டுகொள்ளலாம் இல்லையா?” எனக் கேட்டு சிந்தித்தார். சிந்திக்க வைத்தார்.
உலகத்தமிழர்கள்? இந்த பதத்திற்கு என்ன பொருள்? நாம் இப்படிச் சிந்தித்திருக்கிறோமா? இலங்கைத் தமிழர்/ சிங்கைத் தமிழர்/மலேசியத் தமிழர்/ மும்பைத்தமிழர்.....போகிற போக்கில் மதுரைத்தமிழர்/சென்னைத்தமிழர்/ நெல்லைத்தமிழர் எனவும் வருமோ? நெல்லையில் எவனாவது புகுந்து அடித்தாலும்( ”எவம்ல எங்க ஊர்ல புகுந்து அடிப்பான்னு சொல்றது? ”என நெல்லைக்காரர்கள் அருவாளுடன் எனக்காகக் காத்திருக்கவேண்டாம்) இப்படித்தான் நாம் புலம்புவோமா? ப்ரணாப் முகர்ஜியை எதிர்நோக்கிக் காத்திருப்போமோ?

உணர்ச்சி வசப்பட்டு, தான் மரிப்பதால் எவனுக்கும் லாபமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமலே தீக் குளிப்பதும், அத்தழலில் அரசியல்கட்சிகள் குளிர்காய்வதும் முதல் பக்க செய்திகளாயிருந்து இப்போது கடைசிப்பக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, இலங்கையில் இருக்கும் நாலு தமிழனும் தினமும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்க, நாம் இன்னும் நயன் தாராவுக்கும், அசினுக்கும் கலைமாமணி கொடுத்து கவுரவித்துக்கொண்டிருப்போம். தமிழனது கலை உணர்வை உலகம் அறியவேண்டாமா?

”நிஜமான” ஸ்லம்டாக் மில்லியனர்

டொமினிக் லாப்பியர்-ன் ”சிட்டி ஆப் ஜாய்” புத்தகம் படித்த நண்பர்கள் ”ஸ்லம்டாக் மில்லியனர்” குறித்து என்ன சொல்கிறார்கள் எனக் கேட்க ஆவலாயுள்ளேன்.
எனக்கு இப்படிப் படுகிறது.
நடைமுறை வாழ்க்கை குறித்தது ஒன்று, மற்றொன்று சல்மான் ரஷ்டி சொன்னதுபோல “கற்பனைக்கும் எட்டாத நடக்கவியலாத” மற்றொன்று. உண்மையான ஏழ்மையையும் அடிமட்ட சுரண்டலையும் , வாழ்க்கைப் போராட்டத்தையும் காட்டியது ஒன்று;பணக்காரக்கனவுகளையும், நிதர்சனத்தையும் குழப்பியடித்த கொலாஜ் மற்றொன்று. இரண்டும் ஆழமானவை. மனத்தைத் தாக்கக்கூடியவை.
ஸ்லம்டாக், திரைக்கதைக்கான தகுதியைப் பெற்றிருந்தது. 2 மணிநேரத்திற்குள் ஒரு போராட்டத்தைச் சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தை சுளுவாக சமாளித்தது. சிட்டி ஆப் ஜாய்- அப்படியல்ல. மெதுவாக உள்வாங்கி அசைபோடவேண்டும். பொறுமையும், நிதானமும் வேண்டும். அது கதை. ஸ்லம்டாக்- திரைக்கதை. டொமினிக் லாப்பியர் கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்தபோது மனத்தை அசைத்த அதிர்வுகளின் உண்மை வெளிப்பாடு .மற்றொன்று மும்பையின் வாழ்வுத்தாக்கத்தில், ஓடிய கற்பனையில் உருப்பாடு. கற்பனையின் படிவம் இருப்பதால் சினிமா உருவாகியதில் ஆச்சரியமில்லை.

இதற்கு ஆஸ்கார்? ஹாலிவுட் வேறு உலகம். ரகுமானுக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்ததற்கு சந்தோசப்படலாம். அவ்வளவுதான். ரெண்டு மணிநேரம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்தப்படம் உண்மையான தாராவிச் சேரியையும் சித்தரிக்கவில்லை.. “என்ன ஆக்டிங் பாரு!” என ஆச்சரியப்படுமளவு யாரும் நடிக்கவும் இல்லை. சேரித்தனம் வியாபாரமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா “வாவ்” என ஆச்சரியப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். பேசாமல் எதாவது அழுவாச்சி சீரியலைப் பாருங்கள். ”நேரத்தை வீணே செலவழித்தேன்” என்ற உண்மை தெரிந்த நிறைவோடாவது உறங்குவீர்கள்.

ஏழ்மையையும், வறுமையையும் குறுகுறுப்பாகப் பார்க்கும் மேல்நாட்டுப் பழக்கம் இன்று நேற்றதல்ல. மதர் இந்தியா புத்தகத்தில் “ இந்தியா ஒரு திறந்தவெளி கழிப்பிடம்” என காதரின் மேயோ எழுதியதற்கு, காந்தி “ இப்புத்தகம் ஒரு சாக்கடை மேலாய்வாளரின் அறிக்கை” எனக் கண்டனம் தெரிவித்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உண்மை வேறு.. உண்மையை குழியாடி/குவியாடிகளால் ஒளியியல் பம்மாத்து செய்து விகாரமாக எதிரொளித்து “இதாண்டா ரியலிஸம்” எனச் சொல்வது வேறு.ஸ்லம்டாக் இரண்டாவது வகை.
மும்பைக்கு வரும் பல முதல்முறை சுற்றுலாப் பயணிகள் “ தாராவிக்கு எப்படிப் போகணும்?” எனக் கேட்பது வழக்கம். அங்கு சென்று வருவது ஒரு சுற்றுலா ஆக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மையை ரசிப்பது கொடூரமா இல்லையா என்பதல்ல எனது கேள்வி.. இந்தியாவில் எத்தனையோ பார்க்கவும், பழகிக்கொள்ளவும் இருக்க... இது என்ன கேணத்தனம்? என்ற எண்ணம் எனக்கு எழுவதில் எந்தத் தவறும் இல்லையெனவே நினைக்கிறேன்.
சேரிகள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றவைகளும்தான் சேரிகளைக் கொண்டுள்ளன. அங்கு இல்லாத எந்த அதிசயத்தை இங்கே கண்டுவிட்டனர்? ஒரே வித்தியாசம்... மும்பை சேரிகள் வெறும் ஏழ்மை வலிக்கோடுகளல்ல. முயற்சியும், வலியும், சொந்தங்களும், நட்புகளும், மத, இன வெறிக் கொலைகளும், அதன் நடுவே உயிரைக்கொடுத்தாவது மற்றவனைக் காப்பாற்றும் உணர்வுகளும் கூடிய ஒரு கலவை. ஒரே சமயத்தில் சாக்கடை நாற்றமும், அத்தரும், குல்கந்தும், ரத்த வாடையும் வீசும் விபரீத கலவை. இந்த நவீன சித்திரத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது நமது சாமர்த்தியம். அமெரிக்கா தவறாமல், 1900களில் பார்த்ததுப்போலவே இன்றும் பார்த்திருக்கிறது.

தாராவியில் இருந்து உயர்ந்த மனிதர்கள் ஏராளம். நானே பார்த்திருக்கிறேன். இன்று ஒருவர் ஒரு பெரும் அமெரிக்க நிறுவனத்தில் , ஜப்பானிய ஆய்வு சாலையின் தலைவர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விஞ்ஞனிகள், தொழிலதிபர்கள் பலர் தாராவியில் இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் தாராவி என்றால் வெறும் ஏழ்மையல்ல. அச்சுத் தொழில், தோல் பொருட்கள் ஏற்றுமதி என்று பல தொழில்கள் பெருகிய, துடிப்பான ஒரு பகுதி. என்ன துரதிருஷ்டம் என்றால்... இவர்களைக் குறித்து உண்மையையும் எவரும் எழுதவில்லை... திரைக்கதையையும் ஒருவரும் எழுதவில்லை.

நமது இளைய தலைமுறை எதைப் பார்க்கும்? தாராவியின் வறுமையும், வலியுமாக ஓடும் சாக்கடையாக இப்புத்தகம், தொலைக்காட்சி காட்டியவை கண்டு முகம் சிறுக்கும் அவர்களுக்கு, இவ்வூடகங்கள் தெரிந்தே விட்டுப்போன மாணிக்கங்கள் அச்சாக்கடையின் உள்ளே அழுந்திக் கிடப்பதைப் பார்க்க இயலாது. சாக்கடையை யார் கிளறுவது? எவருடைய பணி இது?

Sunday, January 11, 2009

பசுத்தோல் போர்த்திய..

பசுத்தோல் போர்த்திய..
இந்தியாவில் பிறந்த ஆங்கிலப் புத்தகௌலகில் சிறப்பாகப் பேசப்படுமொரு பெண்மணி எழுதிய புத்தகங்களை இதுவரை படிக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்து வந்தது. இப்போது இல்லை..மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவர் கார்டியனில் எழுதியபோது நான் இங்கிலாந்தில் இருந்தேன். "சே, என்ன மனிதர்கள் இவர்கள் ?"என்று தோன்றிவிட்டது.

அவர் எழுதியபோது பல தகவல்கள் வெளிப்படவில்லை. தாக்குதல் தீவிரவாதத்தனமானது என்பது மட்டும் டெளிவு. இது போதாதா, தீவிரவாதத்தைக் கண்டிக்க?

இதுபோன்றவர்களின் அதிமேதாவித்தனத்தை மெச்சாமல் அவர்களுக்கு உரிய இடத்தைக் காட்டுவது நல்லது என நினைக்கிறேன். எதற்காக இவர்கள் இப்படி எழுதிகிறார்கள்? புகழ்... மற்றவன் சாவிலும் சலசலப்பை ஏற்படுத்தித் தன் பெயர் வரவேண்டும் என்னும் தாரள குணம். இவர்கள் எழுதியது எவ்வளவு நல்ல கதையாக இருந்தால் என்ன ?ஏன் புலிட்சர் & புக்கர் பரிசு கிடைத்தல் என்ன? மனிதத்துவம் இல்லாதவர்களின் வார்த்தைகளைக் படிக்காமல் போனால் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை என நினைக்கிறேன்.

எனது நண்பர்களில் சிலர் இதனை ஏற்கவில்லை.
"குளத்தோடு கோவிச்சுகிட்டு கழுவாமப் போனா.."
" கலை, இலக்கியம் நாடு கடந்தது"
இது போன்ற வார்த்தைகள் வந்தாலும், வருமானாலும், நான் கவலைப்படப் போவதில்லை.

தன் வீட்டின் ஒரே வருமானமும் தனது பணி ஓய்வுக்குப் பின் நின்றுவிட, "தனது மகன் வேலைக்குப் போய்விட்டான், இனிமே கவலையில்லை" என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தந்தை, மகனின் ரத்தம் தோய்ந்த உடலைப் பெற்றுக்கொள்ளும்போது உதடு துடிக்க மராட்டியில் எதோ சொல்வது தொலைக்காட்சி அறிவிப்பாளரின் ஓசையில் கேட்கவில்லையெனினும்...

வலித்தது, உணர முடிகிறது. எந்த இலைக்கியம் அவருக்கு ஆறுதல் கூறிவிட முடியும்? எந்த இலக்கியம் இதைவிட பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும்?

பிற மனிதனின் வலியறியாது பேசுபவர்களை முற்றிலும் புறக்கணிப்பது, அவர்களுக்கு மரியாதை ( பெயர்/ நினைவு) தர மறுப்பது என்பது பைதியக்காரத்தனமாகப் படலாம். ஆனால், அவர்கள் முய்ற்சியே , நாம் அவர்களைப் பற்றி பேசுவதும், நினைப்பதும்தானே? அதனை தர மறுத்தால் அவர்கள் முயற்சியை முறியடித்ததாக ஆகுமல்லவா?

ஒரு வரம் முன்பு ஒரு வினாடி வினாவுக்கு தயார்செய்து கொண்டிருந்த என் மகன் இப் பிரபல ஆசிரியரது நாவல்கள் குறித்துக் கேட்டான். "தெரியாது" என்றேன். அவனையும், இக்கேள்விக்கு தெரியாது எனவே பதில் சொல்லவும் சொன்னேன். வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. இத்தீவிரவாதத்டை முறியடிக்கவேண்டும்.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர், மற்றும் பெயர்தெரியாத வீரர்களுக்கும், உயிர்துறந்த அப்பாவி மனிதர்களுக்கும் நாம் செய்யும் சிறு முட்டாள்தனமான வீரவணக்கம்.

மும்பை குறித்த பதிவுகள்

மும்பை குறித்து 26/11க்குப் பிறகு எழுதப்பட்ட வலைப்பதிவுகளை முழுதும் படிக்கவில்லையெனினும் சில பதிவுகளைக் காண நேர்ந்தது.
வீடு தீப்பிடித்து எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாய் சிறிதும் சிந்திக்காமல் எழுதப்பட்ட சில பதிவுகளைக்குறித்து சில வார்த்தைகள்.
மும்பையில் சில வருடங்கள் இருந்ததால் அதன் வாழ்க்கையைக் குறித்து அறிந்ததாக எழுதும் இவர்கள் பார்வை வருந்தத்தக்கது.
சில கருத்துக்களைக் கவனிப்போம்.
1. விலைவாசி அதிகம். அதனால் "பெங்களூரில் சில ஆயிரங்களில் வசதியாக இருந்த என்போன்ற மத்திய தர வர்க்கங்கள் வீடு கிடைக்காமல் திண்டாடியதற்கு" மும்பைக்காரர்கள் ஏளனமாகப் பார்த்தனராம். என்ன கதை யிது? மும்பையில் பெரும்பாலும் மத்திய தர மக்கள்தான் வசிக்கின்றனர். பெங்களூரிலும், சென்னையிலும் இல்லாத ஆடம்பர வாழ்வா இவர்கள் இங்கு எல்லாரிடமும் கண்டுவிட்டனர்? மும்பை ரயிலில் அனுதினமும் செல்லும் மக்களைப்பார்த்தால் தெஇரியும் - எவரிடம் பணம் கொழிக்கிறது என்று. மக்கள் நெருக்கடி, இடமில்லாமை, பில்டர்களின் லாபி... மும்பையில் அதிகம். சென்னையில் இப்போது வேளச்செரியிலோ, பெங்களூரிலோ இப்போது இவர்கள் முன்பு போல வீடு வாங்கமுடியுமா?
2005 யில் மழை கொட்டியபோதும் பங்குச்சந்தை குறித்து மட்டும் பேசினராம்... மக்கள் எழுதுமுன் கொஞம் யோசிக்கவேண்டும். சராசரி மும்பைக்கர் மனித நேயம் என்பதை உலகிற்குக் காடிய நாட்கள் அவை. சான்றுகள் ஆயிரம். மீண்டு உயிர்த்து வருவது என்பது மும்பைக்கே உரிய தனித்தன்மை. 1993 குண்டு வெடிப்பிலும் சரி, 2005 மழையிலும் சரி, 2007 ரயில் குண்டு வெடிப்பிலும் சரி, மும்பை அடிபட்ட அளவு எந்த நகரும் அடிபடவில்லை. அகமதாபாத்-ஐ சேர்க்கலாம் ஒரு வகையில்.மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளையும் மும்பையில் இருந்து பார்த்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

"தாஜ் ஓட்டலில் உயர்மட்டத்தினர் மட்டும் அடிபட்டதற்கு இன்ன குதி குதிக்கின்றனர்" ஹலோ, என்ன கதை யிது? பழரசம் விற்பவன் சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் மரிக்கவில்லையா?எத்தனை ஏழைமக்கள் ரயில் நிலையத்தில் அநியாயமாகச் சாகவில்லையா? இவர்கள் எல்லாம் உயர் மட்டத்தினரோ?
தாஜ் குறிவைக்கப்பட்டது. அத்தோடு நரிமன் இல்லமும்...
என்ன பாதுகாப்பு மும்பையில்? மும்பையில் மத்தியதர மனிதன் கட்டும் வரி அதிகம். அடிப்படையான பாதுகாப்பு கேட்பது தவ்றாகப் பட்டது என்றால் என்ன சொல்ல?
மும்பை கட்டும் தனிநபர் , கார்பொரேட் வரிக்கு, அதற்கு என்ன கிடைத்திருக்கிறது?

காஷ்மீரத்தையும், குஜராத்தையும் கண்டுகொள்வதில்லையாம்... கார்கில் போர் நடந்த போது மும்பை மக்கள் செய்ததும் சிந்தித்ததும் தினசரி ரயில் பயணங்களில் நான் அறிவேன். கார்கில் சண்டையின்போது , விராரில் புதிதாக வந்த ராணுவ வீரர் குடும்பத்தை, அந்தனை நெரிசலிலும், இடம் கொடுத்து, மரியாதையுடன் தாதரில் இறக்கிவிட்ட எனது நண்பர்கள் கூட்டம் இன்னும் விரார் 7.40 மணி ரயிலில் செல்கிறது. ஒருசேரச் சென்று மும்பை சென்ட்ரல் நிலையத்தில் ரத்ததானம் செய்ய நின்றதும், கம்பார்ட்மென்டில் உண்டியல் குலுக்கி( அவர் ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மேல் அதிகாரி), இராணுவ வீரகள் குடும்பத்தினருக்கு கணிசமான தொகை அனுப்பியதும் இன்றும் நினவிருக்கிறது. என்னால் அவர்களைக் காட்டவும் முடியும். ரயில் சினேகம் என்பது எதுவரை என்பதை மும்பை வாழ்வு காட்டும்.சராசரி மும்பை மனிதன் நெரிசலில் நசுங்கி மாள்கிறான் எனினும், மனிதநேயம் இங்கு இன்னும் இருக்கிறது, மும்பை குப்பையில்- மற்ற சுத்தமான நகர்ங்களை விட..
நான் இங்கு 20 வருடங்களாக வாழ்பவன். மும்பையை பல காரனங்களுக்காக வெறுக்கவும் முடியும். மதிகவும் முடியும்.
பணம் சும்மா கொட்டவில்லை இங்கு. உழைக்கிறார்கள். உழைக்க விடுகிறார்கள்.

மும்பையை வெறுக்கப் பலகாரண்க்கள் இருக்கலாம். அதற்காக, ஒரு நகரம் ரத்தம் சிந்தும்போது, இந்தியன் அல்லது ஒரு மனிதன் என்ற அளவிலாவது நின்று உதவிகரம் நீட்டாமல் இது நொட்டை இது நொள்ளை எனக் குற்றம் சொல்வது கீழ்த்தரமானது.

பி.கு. சராசரி மும்பைக்கர் இதையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ரயிலில் தொத்தி போய்க்கொண்டே யிருப்பான். அதுதான் அவனது வெற்றி.

Monday, November 17, 2008

சில கோபங்கள் அர்த்தமுள்ளவை

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத்தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை, நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார் “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது. ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Wednesday, November 12, 2008

அனீமியா அபாயம்

முனைவர் பாகவத் எனக்கு தொழில் முறையில் பழக்கம் என்றாலும், எனது மானசீக ஆசிரியராகவே அவரை வணங்கி வந்திருக்கிறேன். எப்போதும் புன்னகையுடன், ஒரு தந்தையின் பரிவுடன் பேசும் அவர் மீது மரியாதையும் அன்பும் மிகுவது என்போன்று அறிவியல் பொறிகள் / மென்பொருட்கள் விற்பனையாளனாக மும்பையில் பணி செய்யத் தொடங்கிய அனைவருக்கும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இன்று அவரை சந்தித்தபோது மும்பையில் அனீமியாவின் ( ரத்தச்சோகை?) தீவிரம் குறித்து விளக்கினார்.
.இளைஞர்கள் - குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் 65% மாணவியரும் ஏறக்குறைய அதே விழுக்காடு மாணவர்களும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
. பள்ளிகளில் - குறிப்பாக வசதி படைத்த/ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவர்/சிறுமியர் படிக்கும் பள்ளிகளில அனீமியா 70%க்கு மேல்..
இது சிறிது அதிர்ச்சியான தகவல்.
மருத்துவத் துறை வல்லுநர்கள் ( மருத்துவர்கள், செவிலியர்) ,அனீமியா குறித்து அறிந்தவர்கள் மத்தியில் இது எத்தனை விழுக்காடு என நினைக்கிறீர்கள்?
100% செவிலியர்கள் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் - மும்பையில்.
60% மருத்துவ வல்லுநர்கள்களுக்கு அனீமியா உண்டு.
45000 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 2 வருடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதனை முனைந்த நடத்திய ஆய்வாளர் " குப்பை உணவு " கல்லூரி,பள்ளிகளின் அருகில் கிடைப்பதே காரணம் என்றார். முதலில் இந்த கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்றவர்கள் பலர்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் "முன் தயாரிக்கப்பட்ட உணவுகளின் ஊட்டச்சத்து விகிதத்தை பொய்யாகச் சித்தரிக்கின்றன" என முன்பு ஒரு முறை நுகர்வோர் அமைப்புக் குழு ஒன்றின் ஆய்வு மையத்தில் கேள்விப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். "இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை" என்ற ஒரு ஆய்வாளர் , பிரபலமான ஒரு ஊட்டச்சத்து உணவில் இடப்படும் மாவுப்பொருள் கிடைக்கும் விதத்தைச் சொன்னார். வேண்டாம்.. விடுங்கள். கேட்டால் , அந்த பானத்தைக் குடித்தவர்கள், வாயில் விரலை விட்டு வாயிலெடுத்து விட்டே மறு வேலை பார்ப்பீர்கள்.

ஒரு வாரம் முன்பு பங்களாதேஷில் எனது டீலரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பால் பவுடரில் மெலாமைன் கலப்படத்தைக் கண்டுபிடிக்கும் முறைபற்றிக் கேட்டார். " அது சீனாவில் அல்லவா வேண்டும்? உங்களுக்கு எதுக்கு?" எனக் கேட்டுத் தொலைத்தேன்... " அந்த சீனப் பால் பவுடர்கள் இங்கு படு சீப்பாக கிடைப்பதால் எளிய மக்கள் வாங்குகிறார்கள்- பாவம், தங்கள் குழந்தைகளுக்குத் தானே விஷம் கொடுப்பது தெரியாமல்.." என்றவர் சொன்ன விதம் நெடுநேரம் நெஞ்சைப் பிசைந்தது..

சிறிது விழிப்புணர்வு நமக்கு அவசியம். பெரிய பெரிய மால்களில் கிடைப்பதாலும், பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என்பதாலும் மட்டுமே உணவு வகைகளை வாங்காமல், இது நமக்குத் தேவையா? எனப் பார்த்து வாங்குவது நலம். புரதச்சத்து வேண்டும் என்றால் செயற்கை புரதக்கலவைகளை டின் டின்னாக வாங்குவதை விட்டுவிட்டு, முளைகட்டின பயறுகளையும், பொட்டுக்கடலை போன்றவற்றையும் சிறிது சிறிதாக உணவில் சேர்க்கப் பாருங்கள்.

சோகைபற்றி பின்பு பார்ப்போம்..

Thursday, September 11, 2008

இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியா? - 2

தேசிய மொழிக்கும் அலுவலகத் தொடர்பு மொழிக்கும் உள்ள வேறுபாடு புரிபடுவது கடினமல்ல எனினும், இதை விளக்க மெனக்கெட வேண்டும். மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறை, மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் இந்தி பிரசார அமைப்புகள் செய்த LOBBY ( தமிழில் என்ன பதம் இதற்கு?) 50களில் தொடங்கி 90கள் வரை நீடித்ததும் இதற்கு ஒரு காரணமே.

நளன் சொன்னதுபோல வரலாற்றுத்துறையின் தவறு என்றாலும், அதற்கான முதலீடும் ஆதரவும் டெல்லியிலிருந்து கிடைக்கும்போது உண்மைகள் புதைபடுவது ஆச்சரியமல்ல. தமிழ் தமிழ் எனக் கூப்பாடு போடும் திராவிட அமைப்புகள் இதனை பொதுமக்களுக்கு ( தமிழ்நாட்டில் மட்டுமல்ல) கொண்டுசெல்ல,பிற மாநிலங்களின் மொழி வளர்ப்புகழகங்களுடன் தொடர்பு கொண்டு முனைந்திருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு இதெல்லாம் செய்ய எங்கே நேரம்? வெறுமே இந்தி மொழிப் பலகைகளில் தார் இட்டு அழிப்பது புரட்சியாகாது.

தெருவோர அரசியலுக்கும் மொழி ஆர்வத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 60களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பிற மாநிலங்கள் பார்த்த விதம் " தமிழ் வெறி/ இந்தி துவேசம்".

தெளிவாக பிற மாநிலங்களில் நம் நிலையை எடுத்துச் செல்லாதது எவர் குற்றம்? வங்கமும், வடகிழக்கும்கூட இந்தியை எதிர்க்கின்றன. அவர்களுக்கு இந்த அடைமொழி " வெறியர்கள் " இல்லை. நமக்கு மட்டுமே.

இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான அரசியல் நமது நிலையை ஜனநாயகமான மொழிச்சுதந்திரத் தேவை என நிரூபித்திருக்கும். நமக்கு பக்க பலமும் கிடைத்திருக்கும். தவறி விட்டோம்

Wednesday, September 10, 2008

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தனை நாள் கழித்து எழுதவர்றவன் ஒழுங்கா வேற எதாச்சும் எழுதக்கூடாதா? எனக் கோபப்படுபவர்கள் சிறிது பொறுக்கவும்.

ஜெயா பச்சன் குண்டக்க மண்டக்க எதோ பேசப்போக, ராஜ் தாக்கரே வரிந்துகட்டிக்கொண்டு " உ.பி பையாக்களே, அலகாபாத் ரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும்" எனக் கையை காடியது நேற்றுத்தான் என்றாலும்...
"சரிடே, என்னதான் இருந்தாலும், இந்திதானே இந்தியாவின் தேசிய மொழி?" எனப் பலர் நேர்மையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, ஜெயாவுக்கு பரிந்துவரும்போது, தெரியாத்தனமாக எனது நண்பர்கள் குழாத்தில் கேட்டுவிட்டேன்
"யார் சொன்னது இந்தி , இந்தியாவின் தேசியமொழி என்று?" என...
அவனவன் அடிக்காத குறை...
"ஸ்கூலில் படிக்கலையாக்கும்? "
" நீ தமிழ்நாடுக்காரன்.. அதுதான் இந்தி வெறுப்பு.. தேசியமொழி இல்லை எனச் சொல்லும் அளவு வெறி"
என 'நான் இந்தியனே இல்லை, நாட்டுப்பற்றே கிடையாது' என்ற அளவுக்கு பேச்சு..

சான்றுக்கு நான் விக்கிப் பீடியாவை அழைத்தாலும், பல இணையதளங்கள் இன்னும் "இந்தி இந்தியாவின் தேசிய மொழி" என எழுதியிருக்கவே, அங்கும் தகறாறு.

இந்திய அரசியல் கோட்பாடு 343 இந்தி மொழி, தேவனாகரி எழுத்தில், யூனியன் அரசின் அலுவல் மொழி" என மட்டுமே சொல்லியிருக்கிறது.
தேசிய மொழி என எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை என எனக்குப் பண்டு படித்தாக நினைவு.

தெரிந்தவர்கள் கூறவும்... இந்தி தேசிய மொழியா?

Saturday, March 08, 2008

சமூக இடைவெளி ( முடிவு)

சில நாட்கள் முன் மீண்டும் ரோஷனை சந்தித்தேன். சட்டென வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
" அந்தப் பையனை வேலைக்கு எடுத்த்தீர்களா? " என்றேன். சுத்தமாக அந்த நேர்முகத்தேர்வு நிகழ்ச்சியை மறந்தே போயிருந்தான்.
"ஆங்.. ஞாபகமில்லையே" என்று சிரமித்தவன், " அவன் பேர் தெரியுமா?" என்றான்.
"தெரியாது" என்றேன். "எத்தனையோ பேர் வர்றாங்க. யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறது" என்று அவன் முணுமுணுக்கவே, விட்டுவிட்டேன்.
அவன் விடவில்லை. கோப்புகளை வருவித்து ஒவ்வொரு படிவமாகப் பார்த்தான்.
இறுதியில் "இல்லை" எனத் தலையாட்டினான். "டெக்னிகல் அறிவு போறவில்லை" என அப்பையனது பயோடேட்டாவின் மேல் ஸ்டாப்லெர் செய்யப்பட்டிருந்த படிவத்தில் வேலை மறுப்பு காரணங்களில் டிக் செய்யப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் மனது சங்கடமாக இருந்ந்தது.
இதையும் கேட்கப் போனால் ,"டெக்னிகல் அறிவு இல்லைன்னு சொன்னா, எப்படிவே எடுக்க முடியும்?" என வாக்குவாதம் வளரும்.

ஆனால், எனக்கு என்னமோ , அவனுக்கு கேள்விகள் புரிந்திருக்காது எனவே பட்டது. ஆங்கில உச்சரிப்பு புரிந்திருக்காது போயிருக்கலாம். அல்லது ஏற்கனவே ரோஷன் "வள்" என விழுந்திருந்ததில் நடுங்கிப் போயிருக்கலாம். எதுவோ, அவன் அங்கு வேலையில் இல்லை...

நடுத்தர நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரிடும் தடைகள் பெரும்பாலும் புரியப்படாமலே போகின்றன. அவர்களது சமூக, பொருளாதார சிக்கல்களும், வந்த பாதைகளும் மறைக்கப்பட வேண்டியவையாக நகர வாழ்க்கை அழுத்தும்போது, அவை உணரப்படுவதில்லை.

நான் முன்பு பணியாற்றிய கம்பெனிகளில் பலர் சிறுநகரங்களில் இருந்து வந்து, மும்பையில் "நானும் உங்களில் ஒருவன் பார்" எனக் காட்டுவதில் திரிந்து வாழ்க்கையே போலியாக வாழ்ந்தது இன்னும் நினவிருக்கிறது. அவர்களின் பலரது வாழ்வு வெறுமையானதை இன்றும் பார்க்கிறேன் - வருத்ததோடு.

வேலைக்கு வெளியிடம் வரும் மாணவர்களுக்கு ஆயத்தப் பயிற்சிகள் கொடுக்கப் படாதவரை, அவர்கள் தங்கள் பொறுப்புகள் இன்னவென அறிந்து கொள்வது மட்டுமல்லாது, ஒரு நிஜ கார்டியனிடத்து தங்கள் கவலைகளை கலந்து ஆலோசிக்காதவரை இப் புண்படுதல்களும், அழுத்தங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

Friday, February 29, 2008

சுஜாதா - சில எண்ணங்கள்

சுஜாதாவின் மரணம் குறித்து மரத்தடியில் அறிந்தேன்.
ஒரு மானசீக வழிகாட்டியை தொலைத்திருக்கும் கனத்தில் மனசு இடறியதில் கொஞ்சம் எழுதத் தோன்றியது.

அவரது கதைகளின் மூலமே கொஞ்சம் தரமான கதைகள் பக்கம் கால்வைத்த பலர் உண்டு.குறிப்பாக 70, 80களில் "அட, இப்படியும் போகுமா கதை?" என ஆச்சரியமாக சிறுகதைகள் படித்தவர்களில் நானும் ஒருவன்.
"ராகினி என் வசமாக' என்ற கதையின் இறுதியில் " நான் இறங்கி நடந்து போவதை நானே பார்த்தேன்" என வரும்.. இது கொஞ்சம் குழப்பமாக் இருந்தது முதலில். சிறிது சிறிதாக உணரத் தொடங்கியதும், நூலகத்தில் சுஜாதா கதைகளை காத்துக்கிடந்து படிக்கலானேன். சில புரிந்தது - சில புரியாமல் சீண்டியது. இது அவரது பெரும் வெற்றி எனலாம்.மேலும் பல புத்தகங்களைப் படிக்கவும், ரெஃபரன்ஸ் பார்க்கவும் தூண்டியது.

இதனால் நான் என்னமோ இலக்கியவாதியாக ஆகிவிடவில்லை. "பேயாகத் திரிந்த பங்காரு, ரத்தக்காட்டேரியின் பழி" போன்ற கதைகளையும், ராஜேந்திர குமார்-இன் கதைகளையும் படித்து புளகித்த என்னைப்போல் பலருக்கும் ,' அறிவியல் கதைகள் என ஒன்று உண்டுடே ' என அவர் அறிமுகப் படுத்தியது உண்மை.
தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி எனலாம் அவரை - தைரியமாக.

சில அறிவியல் உண்மைகளை அவர் சரி பார்க்காதது தவறாக இருக்கலாம். லேசர், ஹோலோகிராஃபி என்பதெல்லாம் "கொலையுதிர் காலங்கள் " வரும் வரை பலரும் அறிந்த வார்த்தைகள் இல்லை. அறிவியல் புனைக்கதைகளில் அவர் மேலும் கவனம் செலுத்தி இன்னமும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கலாம். தமிழகத்தின் துரதிருஷ்டம்- அவருக்குப் பின் அப்படி எழுத எவரும் வரவைல்லை இன்னும்.

ஜனரஞ்ஜகத்தில் இருந்து இலக்கியவாதியாக பரிமளிக்க முடியாது என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அவரது அறிவியல் புனைக்கதைகள் மூலம் தனி இடத்தை இன்னும் மேலாகவே அவர் பெற்றிருக்க முடியும்.தமிழகம் அவரது எழுத்தை கணேஷ் வசந்த் , வைணவர் ,ஜனரஞ்சகம் என்பதாகவே சிலாகித்தது. அவரும் நாமும் ஒரு வேலிக்கு இரு புறமும் நின்று ஒருவரை ஒருவர் ரசித்திருக்கிறோம்.

இழப்பு பெரிது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Sunday, January 13, 2008

சமூக இடைவெளி (4)

சமூக இடைவெளி (4)
அடிப்படையில் கிராம, ரெண்டுங்கெட்டான் நகர வளர்ப்பில் ஒரு பிழை.
அடக்கம் என்பது கோழைத்தனம் இல்லை. கர்வத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்கிறது. நல்ல பையன் என்றாலே நாம் என்ன சொல்லிக் கேட்டிருக்கிறோம்?. "அடக்கமா இருக்கணும். கேட்டால் மட்டுமே பதில் சொல்லணும். கீழ்ப்படியணும்" இது விபரீதமானது.

தைரியத்தைக் குறைத்த மாணவன் நல்ல பையனாகிறான். பள்ளியிலும், வீட்டிலும் அடக்கமானவன், அதிகம் பேசாதவன் - நல்ல பையன். நல்ல மார்க் வாங்குபவன் -புத்திசாலி. சிந்திப்பதை மழுங்க அடிப்பது படிப்பாகிறதா? நல்ல பொம்மைகளை உண்டாக்குவதைத் தவிர இந்த கல்வித்துறையும், சமூக அழுத்தமும் என்ன சாதித்துவிட்டது?

நகர மாணவர்களின் அழுத்தங்கள் வேறு. தன்னுடன் படிக்கும் மாணவர்களை விட முன்னே நின்றுகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவன் பல நுணுக்கங்களை வளர்ந்துக்கொள்கிறான். அவனுக்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறது. கிராமத்து கல்லூரி மாணவர்களுக்கு வெளியுலகம் காண என்.சி.சி தவிர எந்த எக்ஸ்போஷர் இருக்கிறது? நல்ல அழுத்தத்திலும் உள்வெப்பத்திலும் நகரத்து கரிக்கட்டை கூட வைரமாக ஜொலிக்கிறது. கெடுக்கும் அழுத்தத்திலும் வெப்ப்பத்திலும் கிராமத்து கட்டை கிராபைட்டாக மட்டுமே ஆகிறது. இது கட்டையின் குற்றமா? அழுத்தம் கொடுப்பவனின் குற்றமா?
தொடரும்

சமூக இடைவெளி (3)

சமூக இடைவெளி (3)

இண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....

இரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் எங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.
சென்னையிலிருந்து - தெரியாத எண். " உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்" பலான வங்கியின் கால்? எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் தொடருமுன் " எனக்கு கடனட்டை வேண்டாம்" என்றேன் அவச்ரமாக.. அவர் சிரித்தார் " இல்லை சார். இது உங்கல் ப்ளாக்க் குறித்தது".. குழம்பினேன். மீண்டும் விளிப்பதாகக் கூறி வைத்தேன். மறந்தும் போனேன்.

சாயங்காலம் மீண்டும் அழைத்தார். நான் மன்னிப்புக் கேட்டதைப் பொருட்படுதாமல் தொடர்ந்தார்" நீங்கள் சொன்ன இடைவெளியின் வலி நானும் அறிவேன்." என்றார். இளநிலை பொறியியல் மெக்க்கானிகல் படித்துவிட்டு நேர்முகத் தேர்வுகளில் திணறி ஒருவழியாக வேலை கிடைத்தட்ச் சொன்னவர் தொடர்ந்தார்." என்னுடன் படித்த பலரும் இன்னமும் சரியான வேலை இல்லாமல் திணறுகிறார்கள். எப்படி தன்னைக் காட்டிக்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நகரங்களில் படித்த மாணவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டுக்கெட்டான் நகரங்களிலிருந்து வந்த நாங்கள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் திண்டாடுகிறோம்" என்றார்.

இது நான் அறிந்ததுதான். என் மனைவி நக்ர்ப்புறக் கல்லூரிகளில் லெக்சரராக இருந்துவிட்டு இப்போது மும்பையின் ஒரு "ஹை-ப்ரொஃபைல்" கல்லூரியில் வேலைபார்க்கிறார்.நகர்ப்புற மாணவர்கள் நல்ல திறமை இருந்தும், தெளிவாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, கொஞ்சம் தெரிந்தாலே மிக தைரியமாக "விட்டு அடிக்கும்" நகர மாணவர்கள் திறமை குறித்து அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
" நான் பட்டது என் ஜூனியர்ஸ் படக்கூடாது சார்" என்றார் சென்னை அன்பர். " என் கல்லூரியில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் போய் எப்படி நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் செய்யவேண்டும் ,எப்படி உடை அணியவேண்டும், எப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் எனப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இதுபோன்ற பயிற்சி முகாங்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் முக்கிய அம்சங்களையும், எனது அனுபவங்கலையும் சேர்த்து அவர்களிடம் சொல்கிறேன்" என்றார். பாராடப்பட வேண்டிய விஷயம். தனது செல்போன் நம்பரைத் தந்தவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் ( நிறுவனத்திலிருந்து எதேனும் தடை வருமோ?).
தொடரும்

Sunday, January 06, 2008

சமூக இடைவெளி-2

சமூக இடைவெளி-2


1985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.
ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு வினாடி வினா நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்ததால் அவரைக் குறித்து சிறிது அறிந்திருந்தோம்.
ஜீன்ஸும், டீ ஷர்டும்மாய் ஒரு ஞாயிறு மாலை, துறைமுக பள்ளியில் ஒரு வகுப்பில் "எப்படி நேர்முகத்தேர்வுகளை சந்திப்பது?" என்பது குறித்து அவர் பேசினார். எப்படி உடை அணியவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து அவர் சொன்னது எங்களுக்குப் புதியதாக இருந்தது.

இது நடந்து சில நாட்களில் கல்லூரி அளவிலான "சிறந்த மாணவ/மாணவியர்" தேர்வு ஸ்பிக் ரோடராக்ட் நடத்தியது. நானும் போயிருந்தேன். நேர்முகத் தேர்வு ... எனது முறை. எனக்கு முன் சென்ற பெண் சிரித்தபடி வெளியேறினாள். நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து நுழைந்தேன்... தட்டாமலே.. "உள்ளே வரலாமா? என்று கேட்காமலே..

ஷர்மா என்ன்னைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கியது. " வெளியே போய் , கதவைத் தட்டிவிட்டு, "உள்ளே வரலாமா?" எனக்கேட்டு விட்டு, அனுமதித்தால் மட்டும் நுழை.." என்றார். அவமானத்தில் சுண்டிப்போனேன். சுதாரித்தபடி வெளியேறி, மீண்டும் நுழைந்தேன், கதவைத் தட்டி, அனுமதி கேட்டபின்...

என்னை எவரும் இருக்கச் சொல்லுமுன் ஒருவர் எனது கால்களைக் கவனித்தார். " இண்டர்வியூ-ன்னு தெரியுமில்லே? பாத்ரூம் செருப்பு போட்டுட்டு வந்திருக்கே?"
ஷர்மா அவரை உடனே அடக்கினார்." இந்த தேர்வு நடத்துவதின் நோக்கம், இவர்களைக் குற்றம் சொல்வதற்கு இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு . முழுமனிதனாக உருவாக்குவதற்கு" என்று கடிந்தவர், புன்னகையுடன் என்னைப்பர்த்தார். "இண்டர்வியூவில் உன் திறமையை மட்டுமில்ல, நீ உன்னை எப்படி மதிக்கிறாய், எப்படிக் உன்னைக் காட்டிக்கொள்கிறாய் என்பதும் முக்கியம். சும்மா அலட்டச் சொல்லலை. எளிமையாக , அதேசமயம் சுத்தமாக உன்னைக் காட்டவேண்டும். புரியுதா?" என்றார். மேற்கொண்டு கேட்ட பல கேள்விகள் நினைவில்லை. தோல்வியுடன் திரும்பியபின் என் நண்பன் குட்டியிடம் எல்லாம் சொன்னேன். கடற்கறை மணலில் கைகளைத் தலைக்கடியில் வைத்து அண்ணாந்து படுத்திருந்த சிறிது நேர அமைதியின் பின் கேட்டேன் " மக்கா, பாத்ரூமுக்கெல்லாம் செருப்பு போட்டு போவாங்களாடே?"
அவனுக்கும் அக்கேள்வி எழுந்திருக்கும்.
எழுந்து நடக்கையில், கடற்கரை மணல் உள் புக செருப்பு உறுத்தியது.
இன்னும் உறுத்துகிறது.

சமூக இடைவெளி -1

சமூக இடைவெளி-1

ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக.

நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென செல்போன் சிணுங்கியது. நண்பன் ராகேஷ்.
" எப்படி இருக்கிறாய்? நான் அடுத்தவாரம் அமெரிக்கா போகிறேன். இன்று என் ஆபீஸ் வருகிறாயா?பார்த்து நாளாகிறது." அழைப்பைத் தட்டமுடியாமல் அவன் அலுவலகம் விரைந்தேன்.

சிலர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகேஷ் கான்ஃபெரன்ஸ் அறையில் இருந்தான். " இன்னும் அரைமணி நேரம் வேலை. ஒரு நேர்முகத்தேர்வு. நீயும் உட்கார். உனது தனிப்பட்ட அனுமானங்கள் எனக்கு உதவும்." நானும் அமர்ந்தேன். இளம்பொறியாளர்களுக்கான தேர்வு. ஒரு வருடம் , 2 வருடம் அனுபவம் கொண்ட இளைஞர்கள்....
ஒரு நபரின் தேர்வு முடிந்ததும், நானும் ராகேஷும் அவ்விளைஞனைக் குறித்து சிறிது பேசிக்கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு திறத்நது. அடுத்த நபர் நுழைந்தார்... சொல்லாமலே.
ராகேஷ் முகம் கோபத்தில் சிவந்தது. "வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?". அவ்விளைஞன் தடுமாறிப்போனான். "சார்" என்றான் புரியாமல். ராகேஷ் இம்முறை கத்தினான்.."ஐ ஸே, கெட் அவுட்"
அவ்விளைஞன் அவமானத்தில் சிறுத்தான். "சாரி" என்றவாறே வெளியேறினான்.
" யார் இவன்?" ராகேஷ் கோபம் தணியவில்லை. " கதவைத் தட்டிவிட்டு நுழையவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள்..."

நான் அவனது பயோடேட்டாவைக் கவனித்தேன். பெயர் தெரியாத சிற்றூரில் இருக்கும் பொறியியல் கல்லூரி, நாந்தேட் என்னுமிடம் அருகே, (மராத்வாடா பல்கலைக்கழகம்?)
"சரி விடு" என்றேன் ராகேஷிடம். "அவனை அழைத்து தேர்வு நடத்து". " முடியாது" என்றான் ராகேஷ் முறைத்தபடி. "இவனையெல்லாம் வைத்துக்கொண்டு என்னால் குப்பை கொட்ட முடியாது.வேலை பயிற்றிக்கலாம். எதெல்லாம் சொல்லித் தருவதென்று ஒரு அளவு இல்லையா?"
"அவன் அவனது சூழ்நிலையின் கைதி." என்றேன். " இது இம்மாணவர்களுக்கு புது அனுபவம். அவன் வாழும் ஊரில் யார் இதெல்லாம் சொல்லித்தருவர்கள்?"
ராகேஷ் ஒரு கணம் நிதானித்தான்.
"இது நீ படித்து வந்த காலம் இல்லை சுதாகர்" என்றான். அவனுக்கு எனது அனுபவம் தெரியும்..

தொடரும்

Tuesday, November 28, 2006

கைசிகி நாடகம் -டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி

கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச் செறிவும், சமுதாயப் பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.
1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து , அனிதா ரத்னம், பேராசிரியர். செ.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று ,கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகலில் கிடைத்த பாடல்களைக் கொண்டு,பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டு வந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. "கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம் "என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.
கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ் -இல் இருக்கும்.


"எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே"
என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை ,கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

Sunday, September 17, 2006

ஹீரோ பேனா

ஹீரோ பேனா

" ஏல, ஜான்சன் சட்டைப்பையில பாத்தியால?" கிசு கிசுத்தான் சரவணன். ஒன்பதாம் வகுப்பில் சரவணன் மிக நெருங்கிய தோழன். ரெண்டாம் பெஞ்சில் பெருமிதமாக ஜான்சன் அமர்ந்திருந்தான். அவன் சட்டையை உற்றுப்பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"என்னலா பாக்கச்சொல்லுத?" என்றேன் சரவணனிடம்.
'சட்' என புடதியில் ஒன்று போட்டான்." மூதி. கண்ணாடி போட்டும் கண்ணு தெரியாது உனக்கு. பளபளன்னு மின்னுது பாரு ஒரு பேனா -அவன் சட்டைப்பையிலெ"
அப்போதுதான் கவனித்தேன். ஜான்சனின் வெள்ளைச் சீருடை சட்டைப்பையில் தங்கமென மின்னியது ஒரு பேனாவின் கிளிப்.
"அது ஹீரோ பேனா- டே. நம்ம ஜஸ்டின் சார், ஹெட்மாஸ்டர் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஜான்சன் அப்பா கப்பல்ல வேலைபாக்கார்லா? அதான் வாங்கிவந்திருக்காரு அவனுக்கு" சரவணனின் குரலில் அந்தப் பேனாவின் மதிப்பும், அது நம்மிடமெல்லாம் இருக்காது என்னும் தாழ்வு மனப்பான்மையும் வழிந்தன.

ஹீரோ பேனாவை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். ஜான்சன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு எல்லாரையும் தொட்டுப்பார்க்க அனுமதித்தான். நானும் தொட்டுப்பார்த்தேன்.
"என்னலா இதனோட நிப்பு உள்ளேயே இருக்கு? நம்ம பேனா மாதிரி வெளிய இருந்தாத்தானே எடுத்து கழுவிப்போட முடியும்? என்ற கணேசனை ஜான்சன் ஏளனமாகப் பார்த்தான்.
"மூதி. இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு உள்ளதுல. நிப்பு, நாக்கட்டை எல்லாம் கழுவ தனி ஆட்களே இருப்பாங்க"
நம்பினோம்.
ஜான்சன் பெரிய ஆளாக அன்று கருதப்பட்டான். மரியதாஸ் சார் கூட " எங்கடே வாங்கின?" என்று எடுத்துப் பார்த்ததும், நான் சத்தியமாக ஜான்சன் பெரிய ஆள்தான் என முடிவே கட்டிவிட்டேன்.

அதன் தங்க நிற மூடியை சட்டையில் தேய்க்கத் தேய்க்க பளபளப்பு ஏறிக்கொண்டே போனது கண்டு ப்ரமித்தேன். அதில் ஜான்சனின் முகம் விகாரமாக வளைந்து தெரிந்தது. " கண்ணாடி கணக்கால்லா தெரியுது?' என்றேன் வாயைப் பொளந்த படி.
"போதும்ல. கொடு" என்றான் ஜான்சன் அலுத்தபடி. பேனாவை என் கண்ணிலிருந்து மறைத்தான் -சட்டைப்பையின் உள்ளே இட்டவாறே.

ஒரு உத்வேகம் எழுந்தது.
வாழ்க்கையில் எப்படியும் ஒருநாள் இந்த ஹீரோ பேனா கொண்டு எழுதவேண்டும்.

பேனா மேலும் எழுதும்.

Saturday, September 16, 2006

எனக்கும் ஒண்ணு வேணும்

வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது ஒன்பது வயது மகனை
ஈர்த்திருக்கிறது. தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்
உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
http:\\abhijeetthoughts.blogspot.com

சிறுபிள்ளைகள் தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவு
நல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இது அவனது வலைத்தளம்.
தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..

Friday, September 15, 2006

எண்ணித் துணியும் கருமம்...(கல்விக்கூடத்தில் லினக்ஸ்)

அண்மையில் ஒரு மின்மடல் காணும் வாய்ப்புக்கிடைத்தது ( எனக்கு வந்ததில்லை). திறந்த மூல மென்பொருட்களைக் கல்லூரிகளில் பயன்படுத்துவது குறித்த ஒரு புள்ளியியல் ஆய்விக்கான அழைப்பு அது. மாஸ்ட்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சி.டாக் (C.DAC) அமைப்பு (இப்போது வேறு பெயர்... நினைவில் இல்லை) நடத்தும் இயக்கத்திற்கான முன் ஏற்பாடுகள் குறித்தானது. மென்பொருள் தயாரிக்கும், பயன்படுத்தும் நிறுவனங்களின் முதுநிலை அதிகாரிகள், முதுநிலைக் கல்லூரி (கணனி, செய்தி தொழில்நுட்பம்)ஆசிரிய/ஆசிரியைகள் என கணனித்துறையில் பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களை விளித்து விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வுக்கேள்விப்பட்டியல் அது.
சில கேள்விகள் ஆய்வில் கலந்துகொள்பவர்களின் இயங்குநிலை, அவர்களது பணி குறித்துக் கேட்கப்பட்டிருந்தன. தொழில்நுட்பரீதியில் அமைந்திருந்த கேள்விகள்
1. தற்போது உபயோகிக்கும் மென்பொருட்கள்
2. அவற்றினைக்குறீத்தான மதிப்பீடு
3. வாய்ப்புக் கிடைத்தால், திறந்த நிலை மென்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்த மதிப்பீடு.
4. திறந்த மூல மென்பொருட்கள் குறித்தான மதிப்பீடு/ கருத்து
5. மென்பொருட்கள் வாங்குவது குறித்தான முடிவெடுக்கும் தகுதி, சிபாரிசு செய்யும் வலிமை
6. எந்த அளவில் திறந்த மூல மென்பொருள் மற்றும் Proprietary மென்பொருட்கள் பயன்படுத்த திட்டமிடுதல், எந்த விகிதத்தில் இரண்டும் கலந்திருக்க வேண்டும் என்பது குறித்த எண்ணம்

என நீண்டுசென்றது. கவனிக்கவேண்டும். இது வெறும் கருத்துக் கணிப்பல்ல. திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்த தற்போதைய இடர்கள், தடைகள் முதலியனவும் சில கேள்விகளில் வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்கள்.
இச்சுட்டியில் மேலும் விவரங்கள் காணலாம்.
http://www.cdac.in/HTmL/press/3q05/prs_rl170.asp

சர்வதேச அமைப்பான flossworld மற்றும் சி.டாக் இன் பணி குறித்து இச்சுட்டிகளில் காணலாம்.
http://www.hoise.com/primeur/05/articles/monthly/AE-PR-09-05-55.html
http://www.flossworld.org/

இதன் பலன் சிறிது வருடங்களில் தெரியலாம். தற்போது திறந்த மூல மென்பொருள் பயன்பாடு வளர்ந்து வருகிறது என்பது உண்மை.. ஆயின் மிகத் திறம்பட வந்திருக்கிறதா என்றால் இல்லை. H.P, IBM சில சர்வர்களை லினக்ஸிற்காக சந்தையில் விற்பது அவர்களது brand image, வளர்ந்து வரும் சந்தையிலும் வலுப்படலாம் என்னும் எண்ணம்தானே தவிர, லினக்ஸை வளர்க்கும் நல்லெண்ணம் எல்லாம் இல்லை. இதில் தவறும் இல்லை.

இந்த ஆய்வின் பின் சில சுவையான தகவல்கள் வெளிப்படலாம். எந்த அளவில் கல்லூரிகளும், தொழிற்பேட்டைகளும் திறந்த மூல மென்பொருட்களுக்காகத் தயாராக இருக்கின்றன என்றும், எத்தனை வருடங்களில் அவை லாபகரமான தொழிலிற்குத் தயாராகும் என்பதும் சிறிது விளங்கும். இதன் மூலம் பாடத்திட்டங்கள் அமைக்கமுடியும். இந்த முயற்சி திருவினையாகும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் - இதில் அரசியல் இல்லை.

கேரள அரசு எடுத்திருக்கும் முடிவிற்கும், இந்த முயற்சிக்கும் உள்ள வித்தியாசம் .....

Sunday, September 03, 2006

மற்றொரு மாநிலம்- மற்றொரு கல்விக்கூட மென்பொருள் அரசியல்

கேரளா கல்வித்துறை மென்பொருளில் கை வைத்தால், காங்கிரஸ் அரசு சும்மாயிருக்குமா? மஹாராஷ்டிரா இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் இச்சுட்டியில் (http://epaper.hindustantimes.com/default.aspx) மும்பை பதிப்பில் மூன்றாம் பக்கம் (metro) பார்க்கவும்.

கல்வித்துறையில் கணனி மயமாக்குவதற்கும், இணையம் மூலம் கல்விக்கும் உள்ள திட்டங்களை செயல்படுத்த, மென்பொருள் வல்லுமையும் , ஆளுமையும் கொண்ட TCS நிறுவனத்தை வெளியேறச் சொல்லிவிட்டு, ஊழலும் ஆளுமைக்குறைவும் கொண்ட ஒரு அரசு சார்ந்த நிறுவனத்திடம் மஹாராஷ்டிர அரசு கொடுத்திருக்கிறது.
இத்தனைக்கும் மஹாராஷ்ட்டிராவின் கணனித் தொழில் மேம்பாட்டிற்காக இத்துறை வல்லுநர்களும்,உயர்நிலை ஆசிரியர்களும் பலமுறை அரசுக்குத் தங்கள் சேவையைத்தர முன்வந்திருக்கின்றனர். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பல கணனித்துறை வல்லுநர்களும் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் அறிவித்த ஒன்று.

எனக்கு TCS மீது என்ற சார்பும் இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும் "நாங்கள் சீரழித்தே தீருவோம்" என கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் கட்சிகள் பகிரங்கமாக செயல்படுவதை , இக்கட்சிகளின் தலைமை பீடம் கண்டுகொள்ளுமா? கணனித்துறையில் செல்வாக்குப் பெற்ற அதிபர்களூம், வல்லுநர்களும் பேசவேண்டிய நேரம் இது. வாய் மூடி நிற்பது ஒரு தலைமுறையையே சீரழிக்கும்.

Saturday, September 02, 2006

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ் - செய்திச் சுட்டிகள்

கேரள அரசும் லினக்ஸும் குறித்தான அரசியல் பின்னணி இந்த சுட்டியில் காணவும். Open Source Code குருவான ஸ்டால்மன் கேரள அரசின் ஆலோசகர் என்னுமளவிற்கு சொன்னது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது தூண்டுதல் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது என்பது தெளிவு. இந்த அளவில் ஒரு பெரும் வல்லுநரை ஆலோசித்தது முறையானதே. ஆனால் , தொழிற்நிறுவனங்கள் , பிற கணனி தொழில்நுட்ப வல்லுநர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
http://in.rediff.com/money/2006/sep/02microsoft.htm

கணனி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏன் கேரள அரசின் இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதற்கு சுவையான காரணம் இச்சுட்டியின் இறுதிப்பத்தியில் காண்க! லினக்ஸ் இலவசம் என்பதால் ஒவ்வொரு கணனி விற்பனையிலும் இவர்களின் லாப சதவீதம் கூடுகிறது. இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் ஈட்டிக்காரன் மாதிரி தன் பங்கைக் கேட்டு நிற்கும். திருட்டுத்தனமாக pirated மென்பொருள் இட்டுத்தந்தால், சட்டம் சும்மாயிருக்காது...
கேரள அரசின் முடிவில் இந்த ஹார்ட்வேர் விற்பனையாளர்களின் லாபி இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!
"எலி ஏண்டா அம்மணமா ஓடுது-ன்னு இப்பல்லா புரியுது?" http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=138464

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்(contd)

( போன பதிவில் மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கம். மிக நீண்டதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.)
எனது வாதம் லினக்ஸுக்கு எதிர் அல்ல. லினக்ஸ் பயன்படுத்துவதைப் வரவேற்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த கேரளா எடுத்திருக்கும் அரசியல் போக்குதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளியில்"லினக்ஸ் பயன்படுத்துவோம்" என்பதன் பின்புலம் மைக்ரோஸாஃப்ட் மென்பொருளை பயன்படுத்துவது குறித்தான எதிர்ப்பு என்பதுதான். மாநில அளவில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமுன் சரியான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். எந்த pilot project ம் கேரளா நடத்தி அதன் புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
நான் லினக்ஸ் ஆதரவாளன். ஆனால் பள்ளிகளில் கொண்டு வருமுன் அதனை சரிவர நடைமுறைப்படுத்த சில கேள்விகளுக்கு பதில் தேவையாயிருக்கிறது. லினக்ஸுக்கு தற்போது கேரளாவில் பயிற்சி infrastructure இருக்கிறதா?, அரசு இயந்திரம் இதனை சரிவர புழக்கத்தில் கொண்டுவர பயிற்சி அளிக்க எத்தனை வல்லுநர்கள் தேவைப்படுவர்? எத்தனை காலம் ஆகும்? இது குறித்த அச்சுதானந்தன் அரசின் விளக்கம் என்ன?
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவதோடு, பிரபலமான மென்பொருள்கள் குறித்தான exposure பள்ளிகளில் கொடுக்கவேண்டும். மைக்ரோசாஃப்ட் நாம் வெறுத்தாலும் விருப்பப்பட்டலும் சரி, உலகளவில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதனைப் படிப்பிக்க மறுப்பது வர்த்தக ரீதியில் ஒரு competitive disadvantage நிலையை கேரளாவில் ஏற்படுத்தும்.
லாபி என்பது மைக்ரோசாஃப்ட்டுக்கு மட்டுமல்ல, லினக்ஸூக்கும் உண்டு! லினக்ஸ் ஆதரளவாளர்கள் பாராட்டியதில் நான் ஆச்சரியப்படவில்லை.

IT Parks & பள்ளிக்கல்வி:
IT Parkகள் அந்தந்த பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கின்றன. ஆனால், IT Park கள் வியாபார ரீதியில் செயல்படவேண்டியவை. இதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமல்ல. வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் தங்களுக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட்க்ளின் தேவைகளை ஆராய்ந்து வல்லுநர்களை எடுப்பர். இதில் எத்தனை ப்ரோஜெக்ட்கள் பிரபலமான மென்பொருட்களை ( மைக்ரோசாஃப்ட்/ ஆராகிள்/ ஐ.பி.எம்) சார்ந்து இருக்கின்றன ? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அச்சுதானந்தன் அரசு கணித்துள்ளதா? எந்த அளவில் இது வருங்கால லினக்ஸ் மட்டும் கற்ற கேரள மாணவ /மாணவியருக்கு வேலை வாய்ப்பிற்கு அனுகூலமாக இருக்கும் - என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றனவா? முக்கியமாக , அங்கு முதலீடு செய்ய முன்வரும் தொழில் வல்லுநர்கள், கம்பெனிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா?

கொச்சி இன்னும் பெங்களூர்/ஹைதராபாத்/ சென்னை போல hot location இல்லை. அதன் வியாபார uniqueness இப்போது என்ன? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் அதிகம் வந்திருக்குமானால், பெங்களூர், ஹைதராபாத் எப்பவோ அதில் குதித்திருக்கும்.

லினக்ஸ் பயன்படுத்துவது வளர்ந்துவருகிறது. மறுக்கவில்லை. மேலே குறித்த கேள்விகளுக்கு பதில் அது வளரும் வேகமென்ன, எந்த அளவில் வல்லுநர்களின் தேவை இருக்கும் என்னும் ஆய்வில் இருக்கிறது. இந்த ஆய்வுகள் நடத்தினார்களா/ என்ன முடிவு என்பது வெளிவராத நிலையில் , கேரள அரசின் போக்கினை ஒரு அரசியல் சார்ந்த முடிவாகவே எண்ண வாய்ப்பு இருக்கிறது.
பெப்ஸி/ கோக் பூச்சிக்கொல்லி விவகாரம் அமெரிக்க முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை நானும் ஒத்துக்கொள்ளவில்லை! ஆனால் இங்கு நிலை வேறு. எனது வாடிக்கையாளர்களுக்கு லினக்ஸ் வேண்டுமானால் நான் அதில் மகிழ்ச்சியாகச் செய்யலாம். அவருக்கு மைக்ரோசாஃப்டின் மென்பொருள் அடிப்படையில் வேண்டுமானால் நான் செய்ய முடியாவிட்டால் வேறொருவன் செய்துபோவான். எது தேவையென நான் முடிவு செய்யவேண்டும். அரசு என் கையைக் கட்டிப்போட உரிமையில்லை.

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரள மார்க்சிஸ அரசு, பள்ளிகளில் மைக்ரோஸாஃப்ட் மென்பொருள்களை அகற்றி இலவச லினக்ஸ் மென்பொருளை உபயோகிக்கும் படி ஆணையிட்டிருக்கிறது.

ஓப்பன் சோர்ஸ்கோட் ( open sourcecode software) லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது வரவேற்கப்படவேண்டியதுதான்.. ஆனால் இதன் அரசியல் பின்னணிதான் உதைக்கிறது.

மைக்ரோசாஃப் மென்பொருள்களை அரசு உபயோகிப்பதை தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடுமையாக எதிர்த்தவர் அச்சுதானந்தன். இப்போது லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது மைக்ரோசாஃப்டை துரத்தத்தானே என்பது "கடைஞ்செடுத்த அரசியல். என்னல கேணத்தனமா கேக்க?" என ஐந்து வயது பயல் கூடக் கேட்டுவிடுவான். எதில்தான் அரசியல் கொண்டு விளையாடுவது என்பது இல்லை. ஏற்கெனவே கேரளா மென்பொருள் உற்பத்தியில் அப்படியொன்றும் பேர் எடுத்துவிடவில்லை. இப்போதுதான் கொஞ்சமாக கொச்சியில் காக்கநாடு பகுதியில் I.T Park வர ஆரம்பித்திருக்கிறது.

முதலில் கோக், பெப்சி, இப்போது மைக்ரோசாஃப்ட் . சும்மாவே வெத்து வாயை மெல்லும் கேரள இடது சாரி அரசுக்கு பொரி கிடைச்சது போல... "இந்தியாவின் லினக்ஸ் மென்பொருள் திறம் கொண்ட மையமாக கேரளாவை உருவாக்குவதே என் லட்சியம்" என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது..:)

லினக்ஸ் வளர்ந்து வருவது உண்மை. ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு அரசு IT park வரும்படி பற்றி சற்று யோசிக்கவேண்டும். இந்த டெக்னாலாஜி சண்டையெல்லாம் வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அரசியல் வாதிகள் திறப்பு விழாவில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி, மாலை வாங்கிக்கொண்டு அம்பாசிடர் காரில் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. டெக்னாலஜி பத்தி அரசியல்வாதிகள் அதிகம் பேசுவது ஆபத்து..


சேட்டம்மாரே.. ஜமாயுங்கள்.

Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம்(concluded)

விற்பனைப்பகுதியில் பணிசெய்வதால் , "போடா" எனக் கஸ்(ஷ்)டமர்கள் கழுத்தைப்பிடித்துத் தள்ளினாலும், உறுதி குலையாமல் இருக்கும் பக்குவம் எனக்கு வந்திருந்தது. எனவே இதில் நான் பின்னடையவில்லை.
பத்து நிமிடம் கழிந்து மீண்டும் தொடர்புகொண்டேன்.
" உன்னோடு ஒரு நிமிடம் நான் பேசலாமா? " என்றேன்.
மவுனம். " இதோ பார். எனக்கும் தலைக்கு மேல் வேலையிருக்கிறது. வேலையத்துப் போய் உனக்கு போன் செய்யவில்லை. உன்னோடு பேசும் நேரத்தில் எனது வாடிக்கையாளர்களிடம் பேசினால் பணம் குவியும். இருந்தும் ஏன் உனக்குப் போன் செய்கிறேன் தெரியுமா?" எனது குரலில் இருந்த அழுத்தம் அவனைச் சிறிது அயர்த்தியிருக்கவேண்டும்.
" உன்னைப் பற்றி உன் காதலி கவலைப்படுகிறாள். உன் நண்பன் கவலைப்படுகிறான். முன்னேப்பின்னே காணாத பலரும் உன் பேரில் இன்று காலையிலிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிர்ஷ்டக்காரன் டா நீ"
" என்ன அதிர்ஷ்டம் எனக்கு? எல்லாம் போயாச்சு"
" என்ன போச்சு உனக்கு? "
" உனக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி. கெட் லாஸ்ட்" கத்தினான்.
" என்ன தெரியணும்? காலேஜ் படிக்கிற பையன் என்ன போச்சுன்னு இப்படி கத்துகிறாய் எனப் புரியலை" என்றவன் தொடர்ந்தேன்.." உனக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். இது நானாக தேர்ந்து எடுத்துக்கொண்ட விருப்பம். புரிகிறதா?. "
அவன் சட்டென விசிப்பது கேட்டது. " நான் ஒரு தோல்வி. எல்லாம் நஷ்டப்பட்டுவிட்டேன். வாழ்க்கையில் இனி ஒன்றுமில்லை"
" நீ படு புத்திசாலி என உன் நண்பன் சொன்னான். மராத்தி கவிதைகள் எழுதுவியாமே? எனக்கு கவிதைகள் என்றால் பிடிக்கும்" என்றேன்.
" கவிதைகளை உடைப்பில் போடு. என்ன ப்ரயோஜனம். வேலை கிடைக்குமா?"
" கவிதை எழுதினால் வேலை கிடைக்கும் என யாராவது சொன்னார்களா? நீ கவிதை எழுதுவது உனது விருப்பம். உனது தேர்வு இல்லையா?
"ஆம் . அது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
பலதும் பேசினோம். என்ன பேசினாலும் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கையின்மை, சோர்வு இருப்பதை உணர முடிந்தது. சிறுவயதில் கிட்டிய சிறு சிறு ஏமாற்றங்கள், தவறான அனுமானங்கள் அழுத்திக்கிடப்பதை உணர்ந்தேன்.
" பெற்றோர் உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள்" என்றபோது சிரித்தான்.
" அவர்கள் வேண்டாமென்றுதானே , சோலாப்பூர் விட்டு மும்பைக் காலேஜில் படிக்கிறேன். அங்கேயே கிடைச்சது. இவங்க சங்காத்தமே வேணாம்"
அடிப்படையான காரணம் புரிந்தது. பெற்றோர் அடித்தது தன்னை தண்டிக்க அல்ல, திருத்தவே என்பது புரியாத வயதில் வாங்கிய ரணங்கள் இறுகி இன்று வெடிக்கிறது.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தேன் . அவன் தன் எண்ணச் சுழற்றலிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பணி கூடவே, மதியம் பேசுவதாக இருவரும் உடன்பட்ட பின், போனை வைத்தேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் அன்பளிப்பாக அனுப்பியிருந்த ஒரு சிறு புத்தகம் என் அலுவலகப் பையில் தட்டுப்பட்டது. வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மதியம் இவனுக்கு என்ன சொல்லுவது?
மதியம் சொன்னபடியே மீண்டும் தொடர்பு கொண்டேன். நிறையப் படித்திருந்தான்.
வாழ்வு இன்றுமட்டும் வாழ்ந்து பார்க்கலாம் என டேல் கார்னீஜ் சொன்னதைப் படித்ததாகவும் சொன்னான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என அடித்து வாதிட்டான்.
லியோ பஸ்காலியா (Leo Buscaglia) எழுதிய Personhood புத்தகம் பற்றி அவன் சொன்னதும், சட்டென எனக்கு ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.. காலையில் புரட்டிக்கொண்டிருந்த personal excellence என்னும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அனுப்பிய இலவசப் புத்தகத்தில் அவரது வார்த்தைகள்...
" நீ கவிதை ரசிப்பாயல்லவா? ஒரு நல்ல சொற்றொடர் சொல்கிறேன். எப்படியிருக்கிறது எனச் சொல்"என்றவாறே அப்புத்தகத்தில் இருந்து வாசித்தேன்.
" வாழ்வு என்பதும் , அதைச் சோதனை செய்துநோக்க வாழ்வு நேரம் என்பதும் நம்மிடம் இருக்கையில், நமக்கு வெற்றி கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகம்"
"Armed with life on our side and a lifetime to experiment, the odds are in our favor"
" Good one" என்றான்.
" வாழ்க்கை வாழ நேரம் இருக்கையில் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு ஓடுவது கவிதையா?" என்றேன்.
மீண்டும் சில நிமிடங்கள் பேசியதும், " என் பெற்றோர் வந்து பேசும்வரை எதுவும் விபரீதமாகச் செய்யமாட்டேன்" என அவனிடம் உறுதிவாங்கியபின் போனை வைத்தேன்.
பெங்களூர் , பின் மும்பையென அலுவலக அழுத்தத்தில் இதனை மறந்தே போனேன்.
சில நாட்கள் முன்பு எனது மொபைல் போனில் தெரியாத நம்பர் மீண்டும்.
" நான் தான்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். " இப்போது சோலாப்பூரில் இருக்கிறேன். பெற்றோரோடு. மகிழ்ச்சியாக என்றெல்லாம் சொல்லமாட்டேன். " வறட்டு கவுரவம்.. தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.
" அப்பாவுடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். படிப்பை அடுத்தவருடம் தொடரலாம் என இருக்கிறேன்.." எனப் பலதும் சொல்லிவந்தவன் தயங்கினான்.
" சார்.." என்றான் மரியாதையோடு " இப்போது வாழ்வும், அதற்கான நேரமும் என்னிடம் இருக்கின்றன. அனைவருக்கும் என் நன்றி" சட்டென போனை வைத்துவிட்டான்.
புன்னகையுடன் நான் மொபைலைப் பார்த்தேன். அவன் நம்பர் பதிவாயிருந்தது. வேண்டாம் . இதைத் தொடர்ந்து பழசெல்லாம் நினைவு படுத்தவேண்டாம். அவனுக்கு அவனது வாழ்வும் , அதனை அனுபவிக்கும் நேரமும் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அவன் ஜெயிக்கட்டும்.