Sunday, February 12, 2012

செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3



மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.

Saturday, December 31, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson
தெளிவான சிந்தனைகளுக்காவும், செயலாற்றல்களுக்காகவும் பாராட்டப்பட்ட அனைவரும் , வாழ்வின் அனைத்து முகங்களிலும் தெளிவாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் மனிதர்கள். மனிதர்க்ளின் சிந்தனைகள் காலத்திலும் தளங்களிலும் மாறுபடுகின்றன. தளங்களும், நேரமும் மாறும் பயணங்கள், அனுபவங்களை சாத்தியமாக்குகின்றன. அனுபவங்கள் மனதில் தாக்கங்களை சாத்தியமாக்குகின்றன. சிந்தனைத் தாக்கங்கள் , முன்பு எடுத்திருந்த முடிவுகளை மாற்றவும்,வேறு முடிவுகளைக் கைக்கொள்ளவும் தைரியம் ஊட்டுகின்றன.

எர்னெஸ்ட்டோ குவாராவுக்கும் இதுதான் நடந்தது. தென் அமெரிக்கப்பயணத்தின் பின், மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார். 40 பேப்பர்களை ஒரே வருடத்தில் வெறியோடு எழுதி முடித்துவிட்டு டாக்டர் பட்டம்பெற்றவர் , வெனிசூவேலா சென்று, நண்பன் அல்பெர்ட்டோவுடன் தங்கியிருந்து பணம் சேர்த்து, ஐரோப்பா செல்ல, நண்பன் கலீக்காவுடன் திட்டமிடுகிறார். ஒரு உரையாடலில் கலிக்காவிடம், தான் இறுதியில் இந்தியா செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். அவர் இந்தியா வந்திருந்தால் அவரது கொள்கை நிலைப்பாடு மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

இப்படி மிகத் தெளிவாகத் தனது மருத்துவ வாழ்வை வெனிசுவேலாவில் தொடரத் தீர்மானித்தவர், பொலிவியா, பெரு வழியே ஈக்குவடார் சென்று அதன் கடற்கரை நகர் ஒன்றில், அடுத்த வேளைச் சோற்றுக்கே திணறிக்கொண்டு,பனாமா செல்லக் கப்பலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர் “குட்டமாலா நாட்டில் அரசாங்கத்தின் சுரண்டலுக்கு எதிரே போராளிகள் ஆயுதங்கள் தூக்குவது “குறித்துக் கூறிக்கொண்டிருக்க, அங்கேயே , அப்போதே தனது மருத்துவ வாழ்வுத் தீர்மானத்தை அம்போவெனக் கைவிடுகிறார். சில தீர்மானங்கள் கைவிடப்படுவது, அதிலும் பெரிய தீர்மானங்களை கைகளில் ஏந்துவதற்காகத்தான் போலும். இந்தப் பகுதி, எர்னெஸ்ட்டோவின் தெளிவற்ற, தடுமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பகுதியைக் காட்டினாலும், அதனினும் பெரிய ஆவல் அவர் மனத்தில் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாகத்தான் எனக்குப் படுகிறது. அது குட்டமாலாவாகட்டும்,இந்தியாவாகட்டும்..எங்கெல்லாம் சுரண்டலின் பிடியிலிருந்து தப்ப முயற்சிகள் நடக்கின்றனவோ, அடிமட்டத்திலிருக்கும் சமூகங்கள் முன்னேற அரசாங்க அமைப்புகள் தடையாயிருக்கின்றனவோ, அங்கு சென்று போராட அவரது அடிமனதில் வெறி கனன்றுகொண்டிருப்பதை அவருடன் இருந்தவர்கள் அப்போது உணரவில்லை.


கோஸ்ட்டோ ரிக்காவின் ஸான் ஓசேயில் நாடுகடத்தப்பட்டு மறைந்து வாழும் லத்தீன் அமெரிக்க தலைவர்களை சந்திக்கிறான் எர்னெஸ்ட்டோ. அதில் மார்க்ஸிஸத்தில் உறுதியாக இருப்பவர்களை மிகவும் மதிப்பதாகச் சொல்கிறான். அங்கிருந்து குட்டமாலா சென்று சேர்ந்தபின்னரே, எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளில் ஒரு தெளிவும் உறுதியும் பிறக்கிறது. இங்குதான் மருத்துவம் படித்து, தெளிவற்று ஊர் சுற்றும் அர்ஜெண்டின இளைஞன், மனித உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கும் போராளியாக, புரட்சிக்காரனாகப் பரிணாமிக்கிறான். எர்னெஸ்ட்டோ குவாரா டி லா ஸெர்னா, “செ’ குவாராவாக அழைக்கப்படுவதும், மாறுவதும் இங்குதான்.

கலங்கிய மனங்கள், தெளிவுற்று உறுதிபெற ஒரு உந்துதல் எங்கிருந்தோ கிடைப்பதை வரலாற்றில் பல இடங்களில் பார்க்கலாம். Zen and The Art of Motor Cycle Maintenance புத்தகத்தில் பிர்ஸிக் இவ்வாறு கூறுகிறார். “ ஆழ்ந்த சிந்தனைகளில் மனம், பெரும் செறிவை அடைந்த கரைசல்(super saturated solution) போன்றதாகிறது. அதில் கரைந்திருக்கும் உப்புக்கள் படிவமாகதற்கு சிறு சலனம் தேவைப்படுகிறது. மிக மெல்லிய தீண்டல்..வேண்டாம்.. வீச்சு மிக்க ஒரு ஒலி போதும் அதற்கு. " இந்த உந்துதலை ஒரு “தெய்வீகக் காட்சி(Divine Vision)”யாகவோ அல்லது வேறுதளத்தில் உணரப்படுகிற ஒரு அனுபவமாகவோ பல தலைவர்களின் வாழ்க்கையில் வரலாறு ஆவணப்படுத்துகிறது. அன்னை தெரசாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்யும்போது கிடைத்த “தெய்வீக காட்சி அனுபவம்” அவரை தொண்டு செய்வதில் உறுதி கொள்ளச் செய்தது போல.

எர்னெஸ்ட்டோ, இதுபோன்ற ஒரு விவரிக்க முடியாத ஆழ்ந்த உணர்வை குட்டமாலாவில் அனுபவிக்கிறான். பின்னாளைய பயணக்குறிப்பினில், காகிதத்தின் மார்ஜின் பகுதியில் இந்த அனுபவத்தை எழுதிச் செல்கிறான். Notes On the Margin (NOM) நோம் என்று மிகவும் கொண்டாடப்படுகிற இந்த குறிப்பு, அளவில் குறுக்கப்பட்டு இப்புத்தகத்தில் இரு பத்திகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அருமையான பொருள் செறிந்த வரிகள் இவை. மொழிபெயர்க்கப்பட்டு, குறுக்கப்பட்டதே இத்தனை உயிர்ப்புடனும், உணர்ச்சிப் ப்ரவாகமுமாக இருக்குமானால், மூலத்தைக் குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. பின்னாளில் வரப்போகிற நிகழ்வுகளை, அவை தரப்போகின்ற வலிகளையும், ஏமாற்றங்களையும் சேர்த்து அப்படியே தெள்ளத்தெளிவாக முன்கூட்டியே கண்ட பின்னும் தான் செய்யவேண்டிய தியாகங்களை வரையறுத்து, அவற்றை ஏற்றெடுக்கத் துணிவும், மன முதிர்வையும் எர்னெஸ்ட்டோ கொள்வதற்கு அக்காட்சி அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. காட்சியில் கண்டதை , உணர்ந்ததை வார்த்தைகளில் வடிப்பதென்பது இயலாததென்றாலும், ‘நோம் " நம்மை அங்கேயே தளம் பெயர்க்கும் இழுப்பு நிறைந்த காட்டாறு. எர்னெஸ்ட்டோ ,”செ “ குவாராவாக மாறியதின் காரணங்களை, முன் பின் நிகழ்வுகளின் தேவையின்றி உணர வைக்கிறது ‘நோம்”.

ஜோன் லீ ஆண்டர்சனின் வெற்றி, எர்னெஸ்ட்டோவின் அன்றாட வாழ்வை ஆவணப்படுத்துவதில் இல்லை. மாறாக, எர்னெஸ்ட்டோ , “செ” என்னும் போராளியாக மாறும் களங்களை விவரிப்பதில் இருக்கிறது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க “ வாழைப்பழ குடியரசுகள்” குறித்து இரு பக்கங்களுக்கு விவரிக்கிறார். இதில் கலங்கலான அக்கண்டத்தின் அரசியல் , அதன் பின்புலங்கள் , கொடுங்கோலர்களின் அமெரிக்க சார்புக் கொள்கைகள் ஏன் ஏற்பட்டன என்பன மிகத் தெளிவாக விளங்குகிறது. 1930-1954 வரையான தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலை, எர்னெஸ்ட்டோ ஒரு புரட்சியாளனாக மாற வைத்திருக்கிறது.

கலங்கலான அக்கால அரசியலை ஊன்றிக்கவனிக்கிறான் எர்னெஸ்ட்டோ. காதலியுடன் குட்டமாலாவில் வாழ்கிறான். சரியான வேலை கிடைக்காமல் அவளது சார்பில் வாழ்க்கை நடத்துகிறான். இதன் சில வருடங்கள் முன்பு குட்டமாலாவின் அதிபர் அர்பென்ஸ், சக்தி வாய்ந்த அமெரிக்கக் கம்பெனி “ யுனைட்டர் ஃப்ரூட்ஸ்”-ஐ வெளியேற்றி,அதன் மற்றும் அமெரிக்க அரசின் பகையினை சம்பாதித்துக்கொண்டார். . யுனைட்டட் ப்ரூட்ஸ், பல நாடுகளில் பெருமளவில் நில ஆக்ரமிப்பு செய்து, கொத்தடிமைகளாக அங்கிருக்கும் விவசாயிகளை வேலை வாங்கி, வேளாண்மைப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டும் கொள்ளை நிறுவனம். அதன் சக்தி, வாஷிங்டனிலும், சி.ஐ.ஏவிலும் பரவியிருந்தது. அமெரிக்க அரசு சி.ஐ.ஏ மூலமும், யுனைட்டட் ப்ரூட்ஸ்ஸின் பண உதவி கொண்டும், குட்டமாலாவின் அரசை போர் செய்து கவிழ்க்கிறது. அதிபர் அர்பென்ஸ் நாடு விட்டுச் செல்லும் நாள், ஏர்ப்போர்ட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டு , அவமானப்படுகிறார்.
எர்னெஸ்ட்டோ இதெல்லாம் நேரில் கண்டு குமுறுகிறான். தெளிவாக ஒரு முடிவு எடுக்கிறான். “ ஏகாதிபத்தியத்தை பூண்டோடு ஒழிக்க போரிடுவேன். நான் கம்யூனிஸத்தில் சேருகிறேன். ஒரு முடிவுக்கு வருவதற்கு இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று அதன் கொள்கையில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இல்லை, பிற கொள்கைகளில் நம்பிக்கை அற்றுப் போகவேண்டும். நான் இரண்டாவது வழியில் வருகிறேன். ஏன் இந்த அமெரிக்கர்கள் மத்திய, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை துச்சமாக நடத்துகின்றனர் என ஆராய்ந்து பார்த்ததின் விடையும், என் குட்டமாலா, பெரு, பொலிவிய அனுபவங்களும் என்னை கம்யூனிசக் கொள்கையில் சேர வைத்திருக்கின்றன.” எனப் பிரியமான அத்தை பீட்ரைஸ்க்கு மடல் எழுதுகிறான். எர்னெஸ்ட்டோ ஒரு கம்யூனிஸ்டாக பரிணாமிக்கிறான். இந்த பின்புல விவரணம் மிக முக்கியமானது எனப் படுகிறது. இல்லாவிட்டால் அர்ஜெண்டினாவில் ஒரு பணக்காரனாக ,ஒரு புகழ்பெற்ற மருத்துவனாக மிக சொகுசாக வாழ வேண்டியவன், வேறு எதோ நாட்டில் ஏன் போரிட்டு மடியவேண்டும்?

தொடரும்

Friday, December 30, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson

வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர்.

ஜோன் லி ஆண்டர்சனின் “செ”குவாரா , புரட்சிகரமான வாழ்வு’’ , நிஜமான நடுநிலையில் இயங்குகிறது. அவருக்கு செ குவாரா-வை போற்றவோ, தூற்றவோ வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. முன் முடிவுகள் அற்ற ,”இப்படித்தான்யா இருந்திருக்காரு” என தைரியமாக அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது. இது அத்தனை எளிதான வேலையில்லை. க்ம்யூனிசக் கொள்கை தாங்கிய போராளிகளளாலும், குறிப்பாக க்யூபா, தென் அமெரிக்க நாட்டு கம்யூனிச ஆதரவாளர்களாலும், கிட்டத்தட்ட ‘கடவுள்’ நிலையில் வைத்துக் கொண்டாடப்படும் செ குவாரா-வைக்குறித்து “ அவர் சில வெள்ளை வெறித்தன சிந்தைகளில் எழுதினார்” எனச் சொல்லவும், ஆதாரங்கள் காட்டவும் தலைப்படுதல் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது.
’ தலைவன் முதலில் மனிதன்’ என ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருந்தாலொழிய, அவன் சிறு வயதிலோ அல்லது தலைவனாகுமுன் தனக்குள் நடத்திய சுய போராட்டத்திலோ , செய்த தவறுகளை தவறுகள் என அடையாளம் காணும் பக்குவம் வந்துவிடமுடியாது. இது , அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் பொருந்துவது மட்டுமல்ல, கம்யூனிச, போராளிகளின் தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த ‘சனநாயக”ச் சிந்தனை என்னும் பதம் முரணாக இருந்தாலும் “பொதுவுடமை”வாதிகளுக்கும் பொருந்துவது இயல்பு.

எனவே ஆண்டர்சன் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மறைந்து போயிருந்த ஆவணங்களை மீண்டெடுத்தல், மனிதர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிலிருந்து உண்மையை வெளிக்கொணர்தல் என்பன 70களில் சாத்தியப்படாதவை. காலம் ,சிறிது ஓடிக் களைத்ததில், ஆண்டர்சனின் முயற்சிக்கு சற்றே விட்டுக்கொடுத்து பொலிவியக் காடுகளிலும், க்யூபாவிலும், சில மனிதர்களின் நினைவுகளிலும் புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது.

முப்பது வருடங்கள் கழித்து பொலிவியக் காடுகளினூடே ஒரு ஏர்ஸ்ட்ரிப்பின் அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு, புதைக்கப்பட்டிருந்த சில சடலங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணிக்கட்டிலிருந்து கைகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்த ஒரு சடலம் சற்றே மரியாதையாக புதைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே ஆறு சடலங்கள் அப்படியே வீசியெறியப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. செ குவாராவின் கைகள் அவர் சுடப்பட்டபின் வெட்டியெடுக்கப்பட்டு, பார்மால்டிஹைட்டில் மூழ்க வைத்து பொலிவியா அரசால் ரகசியமாக காக்கப்பட்டிருந்தன. இறந்தவர் செ குவாராதான் எனக் கண்டறிய, விரல் ரேகைப்பதிவுகளுக்கு வேண்டி, கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி ஒரு முன்னுரையோடு புத்தகம், மெல்ல அவரது பிற்ந்த நாளினைக்குறித்தான சர்ச்சையோடு தொடங்குகிறது. திருமணமாகுமுன்னே கர்ப்பம் தரித்த அவரது தாய், ப்யூனே அயர்ஸிலிருந்து கிளம்பிப் போய் காட்டுப்பகுதியில் கணவரோடு வாழ்ந்து, எர்னெஸ்டோ பிறந்த சில மாதங்கள் கழித்து, பிந்திய ஒரு நாளைப் பிறந்த தேதியாகப் பொய்யாகப் பதிவு செய்கிறார். முதலிலிருந்தே சர்ச்சையோடு வாழத் தொடங்கிய எர்னெஸ்டோ குவாராவின் இளமைக்காலம் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெற்று வளர்கிறது. ஹிட்லரை வெறுக்கும் எர்னெஸ்ட்டோ, அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தையும் வெறுக்கிறான். அவனது அசுரத்தனமான புத்தகப் வாசிப்பு, பல கண்ணோட்டங்களை அவனது சிந்தனையில் புகுத்துகிறது. அர்ஜெண்ட்டினப் புத்தகங்கள் மட்டுமன்றி, ப்ரெஞ்சுப் புத்தகங்களிலும் அவன் நாட்டம் விரிகின்றது. நேருவின் கொள்கைகள் அவனுக்குப் பிடித்திருப்பதாக தனது நண்பர்களிடம் சொல்கிறான். எங்கோ அர்ஜெண்டினாவில் , தனது நாட்டு அரசியலை மட்டுமன்றி உலகளாவிய மனித வளர்ச்சி நோக்கு கொண்ட ஒருவன் , ஒரு புரட்சியாளனாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஏனெனில், பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்க்ண் பார்வை வைத்தாள் “ எனப்பாடியதும் “பெல்ஜிய நாட்டின்” நிகழ்வுகளைக் குறித்துப் பாடியதும் ஒரு புரட்சி வாழ்வின் அடையாளமே.

அமெரிக்க வெறுப்பு சிறு வயதிலேயே மனதில் ஏறிய எர்னெஸ்டோ , அக்காலத்தில் வாழ்ந்த வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகள் செய்யும் அநியாயங்களைத் தானும் செய்கிறான். வீட்டு வேலைக்காரியாக இருக்கும் இந்தியப் பழங்குடிப்பெண்ணுடன் பாலினத் தொடர்பு, பல பெண்களுடன் தொடர்கிறது. இடையில் மலர்ந்த காதல் நொறுங்கிப்போக.... எர்னெஸ்டோ குவாரா ஒரு போராளியாக மாறியதில் வியப்பில்லை.

மகாத்மா காந்தி இந்தியாவை அறிய ரயில் பயணம் மேற்கொண்டது போல, எர்னெஸ்ட்டோவின் அமெரிக்கப் பயணம் அமைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. பயணங்கள் நமது கொள்கைகளை மாற்றிவிடக் கூடியவை. ஒரு புதிய கொள்கையின் வித்துக்கள் விழுந்து விட சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுப்பவை. எர்னெஸ்ட்டோ, பெருவிலும், பொலிவியாவிலும் பழங்குடி இந்தியர்கள் படும் பாட்டை நேரில் காண்கிறான். நில ஆக்ரமிப்பு செய்து பெரும் பணம் ஈட்டும் நிலச் சுவாந்தார்கள் மீதும், அமெரிக்க சுரங்கக் கம்பெனிகள் மீதும் அவனது வெறுப்பு பன்மடங்காகிறது. எர்னெஸ்ட்டொவுன் அவனது நண்பன் வும் மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயண அனுபவங்கள் “மோட்டார் சைக்கிள் டைரிகள்” எனப் புத்தகமாக வந்திருக்கின்றது. அதனை கிட்டத்தட்ட இரண்டு அத்தியாயங்களாக ஆண்டர்சன் காட்டியிருக்கிறார்.

வெனிசுவேலாவில் கறுப்பர்களை முதன்முதலாக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எர்னெஸ்ட்டோவுக்குக் கிடைக்கிறது. அவர்களைக்குறித்தான அவரது கருத்துக்கள் , அக்காலத்திய அர்ஜெண்டீனிய வெள்ளை நிற வெறியைக் காட்டுவதாக அமைகிறது. இதனை ஆண்டர்சன் சர்வ சகஜமாக எழுதிப்போகிறார். இது கண்டிப்பாக க்யூபாவிலும், உலகளவில் செ குவாரா அபிமானிகளின் வட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்ககூடும்.

தொடரும்.

Saturday, April 09, 2011

அண்ணா ஹசாரே-ஏன் திடீரென பரபரப்பு?

உலகக்கோப்பை வெற்றிக்கூச்சலின் நடுவே எப்படி ஒரு எளிய மனிதனின் குரல் உரக்கக் கேட்கிறது என்பதே பலருக்கு வியப்பாக இருக்கிறது. அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் பரவலாகக் கேட்டபெயராக இருக்கலாம். பிற மாநிலங்களில் வெகு அரிது.

அவர் உண்ணா விரதத்தைத் தொடங்கியதும் சரியான நேரமில்லை தொலைக்காட்சி சேனல்கள் உலகக்கோப்பை முடிந்ததும் , ஐ.பி.எல், அஸ்ஸாம், தமிழ்நாடு தேர்தல்கள் என அங்கங்கே சென்றுவிட்ட நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதம் மேற்கொள்வ்து பெரிதாகக் காட்டப்பட காமிராக்களுக்குப் பஞ்சம்.அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் சத்தியாகிரகம் வென்றிருக்கிறது. சரத் பவார் கீழிறங்கினார் முதலில். பின் ஒரு நாள் முரண்டு பிடித்து, டெல்லி பணிந்தது. லோக் பல் தீர்மானம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு செவி சாய்க்காமல், அண்ணா அடம்பிடித்தது வீணாகவில்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பங்களூர், ஹைதராபாத்... எல்லா நகரங்களும் அன்ணாவுக்கு ஆதரவாக திரண்டபோதும், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய தளங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என இளைஞர்களும், முதியவர்களும் அசத்திவிட்டார்கள். நான் ஆவாஸ்.ஒர்க் -கில் எனது ஆதரவைப் பதிவு செய்த போது, ஒவ்வொரு நொடியிலும் பெயர்கள் வந்தவண்ணமிருந்தது கண்டு வியந்துபோனேன். நான் பதிவு செய்த ஒரு நிமிடத்தில் என் மகனும் பதிவு செய்தான். அவனது நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் செய்தி விசிறியடிக்கப்பட்டது. அண்ணா பேசியபோது “ இது இளைஞர்களின் வெற்றி” எனச் சென்னது சும்மாயில்லை.
ஏன் அண்ணா? இது நமது விரக்தியின், வெகுகாலமாக ஏமாற்றப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு. நாம் பல வருடங்களாகவே தூய்மையான ஒரு தலைவரை எதிர்பாத்து ஏமாந்து போயிருக்கிறோம். மன் மோகன் சிங் என்னும் மனிதருக்காவே ஓட்டுகள் விழுந்தனவேயன்றி காங்கிரஸ் என்னும் கட்சிக்கல்ல என்பது அக்கட்சிக்காரகளுக்கு நன்றாகவே தெரியும். அவரும் 2ஜி யில் வழுக்கிப் பேசியதும், வெறுப்படைந்து போயிருக்கின்றனர் இந்தியர்கள்.

ஒரே ஒரு குரல் நல்லாட்சிக்காக ஒலித்ததும், அக்குரலின் சொந்தக்காரனின் தூய்மை பற்றிக்கேள்விப்ப்பட்டதும், பல வருட ஏமாற்றத்தின் வெளிப்பாடு, அண்ணாவுக்கு ஆதரவாகப் பொங்கியது. சுய ஒழுக்கமும், உண்மையிலஉறுதியும், தூய்மைக்கேட்டை அகற்றத் தான் முன்னின்று போர் நடத்தும் தைரியமும் இருக்கும் ஒருவனை இன்னாடு பல ஆண்டுகளாக ஏங்கி எதிர்பார்த்து நின்றிருக்கிறது. அண்ணாவின் குரல் ஒலித்ததும், அவரை நோக்கித் தங்கள் எதிர்பார்ப்பைக் கொட்டிவிட்டார்கள் மக்கள். அதுவும் காந்திய வழியில் அவர் காட்டிய அமைதியான எதிர்ப்பு, மீண்டும் நமது கலாச்சாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.

இன்னொரு எகிப்து, துனீசியாவை தன் மண்ணில் இந்திய அரசு விரும்பவில்லை. லஞ்சத்துக்கு எதிரான இந்த இயக்கம் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்துவிடும் என்பதை அரசு அறிந்ததும், பணிந்து போனது. இதுபோல இயக்கங்கள் மேலும் வந்தால்தான் நமக்கு வாழ்வு.
தைரியமாக அண்ணாவுக்கு ஆதரவைத் தெரிவியுங்கள். நாளை இன்னொரு தீமையை எதிர்த்து மற்றொரு இயக்கம் வரலாம். அதற்கும் துணை நிற்கத் துணிவு நம்மிடத்தே வேண்டும்.

Sunday, November 29, 2009

சில கோபங்களும் அதன் பின்னணியும்

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?