Tuesday, November 01, 2016

மறதியும் வரதாச்சாரியும்

வெறுமே ‘சாரியைப் பார்த்தேன்’ என்று சொன்னால், உங்களுக்குத் தெரியாதாயிருக்கலாம். ஆனால், முத்துசாமிக்கு வெலவெலவென நடுங்கும்.

“அய்யோ” என்பார். ‘எங்க வந்திருக்கான்? கிளம்பறேன்’ என்பார் பீதியுடன். ஆனால் அவர்தான் இந்த பயங்கரத்தைத் தொடங்கி வைத்தது.

வரதாச்சாரி என்றால் எழுபது வயது, பெரீய திருமண் காப்புடன், அக்ரஹாரத்தில் இருப்பவர் என நினைத்துவிடாதீர்கள். மிஞ்சிப்போனால் நாற்பது வயதிருக்கும். சுருட்டை முடி, பாழ் நெற்றி, வாயில் ஒரு சிகரெட் என ஒல்லியான ஒரு உருவத்தை தென் மும்பையின்  ஜெய்ஹிந்த் காலேஜின் குறுகலான தெருவில் நடந்து அப்படியே மெரின் ட்ரைவ் வரை நடந்து போவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சும்மா நடக்காது அந்த உருவம். உயர்ந்த குரலில், “ஃப்ராயிட் என்ன சொல்லியிருக்கான்னா?” என்றோ “ ஷ்ரூடிங்கர் பூனை எப்ப செத்துப்போகும்?” என்றோ பேசிக்கொண்டே வருவான். நான் இரண்டுவருடமுன்பு வரை அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் ’உலகம் பிறந்தது எனக்காக’ என்று ஆனந்தமாக இருந்தேன்.்இந்த முத்துசாமிதான் அவனை சர்ச்கேட் ஸ்டேஷனில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஸ்பெஷல் தியரி ஆஃப் ரிலேடிவிடி முதல்ல வந்ததா? ஜெனரல் தியரி முதல்ல வந்ததா?”என்று தொடங்கினான். போரிவல்லி வரை போகும் வண்டியில் எதிரெதிராக அமர்ந்திருந்து, பேசிப்பேசியே, அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்தான் அவன். அந்தேரி தாண்டும்போது நான் ஒருவழியாக ஆகிவிட்டாலும், அவன் நிறுத்தவில்லை “அவோகேட்ரோ சொன்னான். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அணுக்கள்தான் மோல்-ங்கற அளவுல இருக்கும்.எல்லாவற்றிற்கும் இதுதான்னான். அவன் என்ன உக்காந்து எண்ணிகிட்டாயிருந்தான்? எப்படி சொன்னான் சொல்லுங்க பாப்போம்”
கோரேகான்வ் வரும்போது நான் ஓடிவிட்டேன். அடுத்த முறை பார்க்கையில் “ஹலோ, அவோகேட்ரோ..” இந்த முறை தப்பிக்க முடியவில்லை. அந்த லெக்சர் ஒருமணி நேரம் ஓடியது.

சாரி வேலைபார்ப்பது கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட்டில். அதனால் ஒரு பயனும் கிடையாது. ஒரு ஜானி வாக்கர் ரெட் லேபில் கூட அவனால் கிடைத்ததில்லை. எனவே அவோகேட்ரோவை சகிப்பதில் ஒரு சுகமும் இல்லை என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டிருந்தோம்.

பல மாதங்கள் முன்பு அவனை ஒரு திருமணத்தில் சந்தித்தேன். முத்துசாமியை அன்போடு நினைவுகூர்ந்தான். அதில் சொன்னதுதான் முதல்வரியின் ரியாக்‌ஷன்.

“எனக்கு அடிக்கடி மறதி வருகிறது” என்றேன் பொதுவாக. “பெயரெல்லாம் நினைவுல இருக்கமாட்டெங்கறது. ஏன்ன்னு தெரியல”

“ப்ராய்டு சொல்றான்” என்று தொடங்கினான் சாரி “ பிழைகளுக்குன்னு ஒரு மனோதத்துவ ஆய்வு செஞ்சிருக்கான் 1910லன்னு நினைக்கறேன். அமெரிக்காவுல ஒர் லெக்சர் கொடுத்திருக்கான். அதுல”
“போச்சுடா” என்று ஓட நினைத்து, மொய் எழுத நின்றவர் வரிசையில் புகுந்தேன். எனக்குப் பின்னாலேயே அவனும். திரும்ப வந்து தாறுமாறாகக் கிடந்த நாற்கலிகளில் அமர்ந்துகொண்டோம்.

“ப்ராய்டு சொல்றான்.. “தொடர்ந்தான் சாரி “ பிழைகள் errorன்னு சொல்றதுல சிலதுதான் நிஜமாவே பருப்பொருட்களின் தொடர்பு பற்றியது. ஒரு பொருள் கை மாறிப் போகுதுன்னோ, தொலைஞ்சு போகுதுன்னோ வைச்சுக்குவம்.. அதுல அதோட பருப்பொருளோட பங்கு கொஞ்சம்தான். பேனாவா, நம்மள கட்டிலுக்கு கீழே போட வைச்சு, அலமாரில தேடச்சொன்னது?”

“மறதிங்க்றது தற்காலிக நினைவுக்கூடத்திலிருந்து நழுவும் ஒரு நினைவு மலர். இதுக்கு நாம நினைவு படுத்திக்கொள்ளூம் முறையும், மனப்பதட்டமும் காரணங்கள்தாம்”
“ஆ!” “அப்படிப் போடுங்க. மனப்பதட்டம்ங்க்றீங்க. தேடும்போது கிடைக்கணுமே என்று ஒரு மனமும், கிடைக்காது போயிருமோ/ அல்லது கிடைக்ககூடாது’ என்றோ நினைக்கும் இரண்டாவது மனமும் பொருதும் போரில் இறக்கும் நினைவுதான் மறதி என்கிறோம்”

“சாரி” என்றேன் “ கிடைக்கக்கூடாதுன்னு நாம யாரவது நினைப்போமா? ஒரு மனம்தான் இருக்கும், அதுவும் தேடலில் குவிந்திருக்கும்”
“ மனம் என்பது ஏதோ ஒரு பொருண்மைப் பொருள் என நினைக்கிறீர்கள். அது எங்கும் கிடையாது.  மூளையின் நினைவுப் படுகைகளில்,உணர்வுகளின் தேடலில் கிடைக்கும் விடைகள்தாம் நினைவுகள். இந்த தேடலும், அந்த டேட்டா பேஸ்-ஸும் இணைந்த ஒரு கணம் என்பதைத்தான் மனமென்கிறோம். ஒரே நிகழ்வு இருவரின் மனதில் பதியும் விதம் அந்த டேட்டாபேஸ்களில் போய்ச் சொருகிக்கொள்ளும் விதத்தின் மாற்றத்திலும், அதனைத் தேடுவதில் இடப்படும் கட்டளைகளின் மாற்றத்திலும் வேறுவேறானப் பதிலாக வெளிவரும். பொதுப்பொருளாக வேறு கணங்களில் இருப்பதை நம்மால் மற்றொரு கணத்தின் பொருளாக மட்டுமே உணரமுடியும். ஏனெனில் ஒரு பொருளைத் தனியாக அதாக மட்டுமே நம்மால் உணர முடியாது. நமது டேட்டாபேஸ், நமது தேடல் கட்டளை... அதுதான் பொருளைத் தீர்மானிக்கிறது”

தலைவலி வந்தது போலிருந்தது.

“வரதாச்சாரி. ஏன் மறக்கிறது? என்று கேட்டேன். எப்படி பதிவாகிறது என்றோ, எப்படி மீட்டெடுக்கப்படுகிறது என்றோ கேட்கவில்லை. அதிலும் குழப்பமாக திட்டம் போட்டே மறக்கிறோம் என்கிறீர்கள்”

“மனம் ஒன்று இல்லை. பல மனங்கள்.அது பல தேடல்களின், பல விளைவுகள். நீங்கள் “பேனா எங்கே?” என்று கேட்பதில் ‘எனக்கு கிடைத்த, வாங்கிய பேனா, அது தொலையக்கூடாது’ என்ற கட்டளையுடன் ஒரு தேடல் கேள்வி மூளைக்குச் செல்கிறது. உஙகளுக்குத் தெரியாமலேயே, அந்த பேனாவுடன் மறைமுகமாக நீங்கள் தொடர்பு படுத்திய ஒரு நிகழ்வு, அல்லது உங்கள் அனுமானம் மற்றொரு தேடல் கட்டளையாக மூளைக்குச் செல்கிறது. எது வலியதோ அதன்படி மூளை பதில் கொடுக்கும்”

உதாரணமாக... நான் என் சங்கிலியைத் தொலைத்துவிட்டேன் என வைத்த்கொள்வோம். என் மனம் அது தொலையட்டும் என நினைத்திருக்குமா?”

“இருக்கலாம்” என்றான் சாரி அமைதியாக.

”லுக் சுதாகர். தேடல் கேள்வி எதாக இருக்குமென்று தெரியாது. ஆனால் உங்களுக்கு சங்கிலி போடுவது பிடிக்காமல் போயிருந்தால், வேறு ஒரு சங்கிலி தொடர்பான கசப்பான அனுபவம் இருந்தால், மூளை அதனைத் தேடுவதை மட்டுப்படுத்தும். ஒரு பெண் திருமணத்திற்கு அடுத்த நாள் தனது திருமண மோதிரத்தைத் தொலைத்துவிட்டாள். எத்தனை முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள ஆராய்ச்சியில் அவளுக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை பின்னர் கண்டுபிடித்தனர். இந்த் திருமண நிகழ்வினின்றி, தங்கதின் மதிப்பு என்று மட்டும் பார் என்று அவளுக்கு அறிவுறுத்தியதன் பின் அவள் கண்டெடுத்தாள்.

ஒருவனுக்கு தன் தொழில் பார்ட்னரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. பின்னர் உளவியல் ஆய்வில், அவர் மனைவிக்கும் அந்த பார்ட்னருக்கும் முன்பு இருந்த தோழமை அவருக்குத் தெரியவந்ததில், அவர், அந்த பார்ட்னரை விலக்க நினைத்தது தெரியவந்தது. இதை கார்ல் யூங் சொல்றான்.

எத்தனையோ இருக்கு, இப்படி.”
“அப்ப எனக்கு ஒருத்தர் பெயர் மறந்துபோச்சுன்னு சொன்னா,அவரை எனக்கு உள்ளில் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகுமா?”

“இருக்கலாம். இல்லையென்றால், வெறுப்பில் அவரைப் பற்றி மிகவும் நினைத்துக்கொண்டிருந்தால், அப்பெயர் மறக்காமல் போகலாம். கவனமாயிருங்க. உங்க்பெயரை ஒருத்தர் சரியாகச் சொல்றார் என்றால் அவர் உங்களை விரும்புகிறார் என்றூ அர்த்தமில்லை”

சில நாட்கள் கழித்து மற்றொரு கூட்டத்தில் இதனைச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். “ சாரி, ஃபராய்ட்டுன்னு பெயரை மாத்திக்கலாம்” என்றார் சண்முக சுந்தரம். “இப்படி எல்லாத்தையும் விட்டேத்தியா, அறுவை சிகிக்சை செஞ்சு பாத்தா, வாழ்க்கையில மணம், உணர்வு ஒன்றுமே இருக்காது. அப்பப்படியே இருக்கிற நிறை குறையோடு வாழ்ந்து போகணும்”

“ எனக்கு பிடிக்காதவஙகளை நான் மறக்கணும்னா மூளை முதல்ல என் பாஸை மறக்க வைச்சிருக்கணும்” என்றேன். சாரி பின்னே நின்று கேட்டிருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன்.
“ஓகே” என்றான் சாரி அமைதியாக... “லெட்ஸ் லீவ் இட்.” என்று வெளியேறினான்.

தீபாவளி இலக்கியக்கூட்டத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. சண்முக சுந்தரம் தனது சகோதரரை அழைத்து வந்திருந்தார். “அண்ணன் கும்பகோணத்துல இருக்காரு. தீபாவளிக்கு நம்ம கூட இந்த வருசம்..” என்றவர் , “ சார், அண்ணனுக்கு நம்ம ஆட்களை அறிமுகப்படுத்துங்க,ப்ளீஸ். கூட்டத்துக்கு ரெண்டு பொன்னாடை வாங்கி வச்சிருந்தேன். எடுத்துக் கொடுத்துட்டு வந்துர்றேன்” என்றவாறே மேடையின் பின்புறம் நோக்கிவிரைந்தார்.

சாரி எதிரே வந்து ”ஹலோ” என்றான் . பெரியவர் அவனை நோக்கி வணக்கம் என்றார். நான் “ இவர்..இவர்.. கஸ்டம்ஸ்ல வேலை பாக்கறார். நிறைய வாசிப்பார். புத்திசாலி”என்று ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் பெயர் மறந்து போனது...

சாரி புன்னகையுடன் “ ஐ ஆம் வரதாச்சாரி. சுதாகர் கஸ்தூரிக்கு ரொம்ப ஃப்ரெண்டு. நானும் அவரும் நிறையவே விவாதிப்போம். நல்ல நண்பர் “என்றான், என்னை கண்ணோரமாகப் பார்த்தவாறே.

 சாரியையும், ப்ராய்ட்டையும் மதிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

உசாத்துணைகள்:
Psychology of Errors - Sigmund Freud lectures.