Thursday, December 14, 2017

க்ருஷ்ண சரண் தாஸின் குக்ரி

இருட்டில் “கோன் ஹை?” என்ற குரல் ,சுவர்க்கோழிகளின் சத்தத்தில் கேட்கவில்லை. முன்னே ஒரு உருவம் வழிமறித்தபோது, நடுங்கித்தான் போனேன். மலை வாசஸ்தலம் போன்ற இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ். வளைந்து செல்லும் பாதையில் சில நாட்கள் முன்பு பெரியதாக ஒன்று ஊர்ந்து சென்றதைப் பார்த்தில் இருந்தே சற்று நடுக்கம்தாம். “எங்கே போகிறாய்?” கோ வாடீஸ்?” என்ற தத்துவார்த்தக் கேள்விகளை உதிர்த்த அந்த உருவம் டார்ச்சை அடித்தபோது, சற்றே ஆசுவாசமானேன். “தாஸ் ஜி, இப்படியா பயமுறுத்துவது? சே..” என்றேன். “ஒரு வார்த்தை சொல்ல்யிருக்கலாம், சர்ஜீ” என்றார் கே.ஸி. தாஸ் , கெஸ்ட் ஹவுஸ் காவலாளி. சற்றே கால் வலிக்க, அவர் இருக்குமிடத்தின் அருகே ஒரு பாறையில் அமர்ந்தேன். “ஸர் ஜீ, அறைக்குப் போங்க. குளிர் தலையைத் தாக்கினால்...” “உங்களுக்கும்தான் தாக்குகிறது” ” இந்தத் தலை, லடாக்கில் இருந்து, ஃபல்காம் வரை குளீரைத் தாங்கியிருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை சர் ஜி. நாது லா, கார்டுங் லா, அங்கேயெல்லாம் இல்லத குளிரா?” “எந்தப் போரில் இரூந்திருக்கிறீர்கள் தாஸ்” தலைக்கு மேலே சொய்ங் என வட்டமடித்துப் பறந்த கொசுக்கூட்டத்டில் ஒரு அடியில் பத்து செத்திருக்கும். கதையின் ஆர்வத்தில் கொசுக் கடியை மறந்தேன். “ ஆ..” சைனா வார், அப்புறம் இஃம்பாலில் இருந்து பங்களாதேஷ் நுழைவு. என்ன. நான் நுழைந்த ஒரே நாளில் போர் முடிந்துவிட்டது. பெருத்த ஏமாற்றம். குறைந்தது 4 பாகிஸ்தானியர்களைக் கொன்றிருக்கவேண்டும்”
“அதென்ன நாலு கணக்கு?”
தாஸ் உள்ளே சென்று, ஒரு பாக்கெட்டை எடுத்து வந்தார். “ மசாலா பாக்கு” நீட்டினார். மறுத்ததில் அவருக்கு வருத்தமில்லை.
“ மால்டா பக்கம் எனது வீடு. அப்பா அடித்தது பொறுக்காமல் ஓடி வந்துவிட்டேன். ஆர்மியில் ஆளெடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு வரிசையில் நின்றேன்
அப்போதெல்லாம் அதிகம் சர்டிபிகேட் அது இது எனக் கேட்கமாட்டார்கள். 1960 ல் நடந்தது இது. பசி கண்ணை இருட்டிக்கொண்டு வருகிறது. படா ஸாப் ( பெரிய ஆபீஸர்) முன்னே நிற்கீறேன். கன்னா என்பது அவர் பெயர். கன்னா சாப் கேட்கிறார். ”ஆர்மியில் சேர்ந்து என்ன செய்வாய், க்ருஷ்ண சர்ண் தாஸ்?” எவனோ சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வந்தது. ” நாட்டுக்கு உயிரைக் கொடுப்பேன் சர் ஜீ” பளீர் என கன்னத்தில் ஒரு அறை . “ நீ செத்ததும் பீகிள் வாசிக்கவா என் படை இருக்கிறது? முட்டாளே. நீ சாக வேண்டுமானால் எங்கே வேணுமானாலும் போ. இப்போது சொல், ஆர்மியில் என்ன செய்வாய்?” இப்போது என் கண்கள் அவரை தீர்க்கமாக நோக்குகின்றன. நான் சொல்கிறேன். “ குறைந்தது நாலு பாக்கிஸ்தானிய வீரர்களைக் கொல்வேன் சர்ஜி. இது மாகாளி மேல் சத்தியம்” கன்னா சாப் என்னை நேராகப் பார்க்கிறார். வலப்புறம் செல்லக் கை காட்டிவிட்டு “ நெக்ஸ்ட்” அதன் பின் பங்களாதேஷ் போர். இம்ஃபாலில் இருந்து எல்லை வரை பயணம். அதன்பின் காட்டினூடே குன்றின் மீது ஏறுகிறோம். தவழ்ந்து ... எதிரிகள் குன்றின் மறுபுறம் இருக்கிறார்கள். முன்னே காட்டுப் பன்றிகள் ஓடுகின்றன. அப்படியே கிடக்கவேண்டும். பன்றிகள் ஓடுவது, பாகிஸ்தானியர்களை இங்கே கவனிக்க வைக்கும். கன்னா சாப் - இடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். குறைந்தது 4 எதிரி வீரர்களைக் கொல்வேன். மெல்ல மறுபுறம் தவழ்ந்து இறங்குகிறோம். தலை கீழாக. இது கடினமாக இறங்குதல் முறை. எவனோ பார்த்துவிட்டான். துப்பாக்கிச் சத்தம். மெல்ல சுழன்று திரும்புகிறேன். கால் கீழ்ப்பக்கம். தலை மலைப்பக்கம். மெல்ல மெல்லத் தவழ்ந்து பாறையில் ஒதுங்கி காத்திருக்கிறேன். நாலுபேர் மலை மேல் ஏறி வருகிறார்கள். என் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. இடுப்பில் தடவுகிறேன். குக்ரி கனக்கிறது. எவனாவது ஒருத்தன் பார்த்தாலும் நான் தொலைந்தேன். ஆனால் , சர் ஜீ, சாவதற்கு அல்ல நான் ஆர்மியில் நுழைந்தது. கொல்வதற்கு., எதிரிகளைக் கொல்வதற்கு. குக்ரியுடன் பாய்கிறேன். முதலாவது எதிரியின் விலாவில் குக்ரி பாய்கிறது. மற்றவன் திரும்பிச் சுடுமுன் அவனை நோக்கிப் பாய்கிறேன்.. அவன் வயிற்றில் அமரந்தபடி, ஓங்கி நெஞ்சில் ... குக்ரி மீண்டும் ரத்தம் பார்க்கிறது.. என் மடங்கிய உள்ளங்கையில் வெம்மையாக ரத்தப் படலம். மூன்றாமவன் என்னைச் சுடுமுன், அவன் என்னுடன் வந்த ஒருவனால் சுடப்படுகிறான்.. நான்காமவனை யார் சுட்டதெனத் தெரியவில்லை. கீழ்நோக்கி உருண்டு, சறுக்கி விரைகிறோம். சிராய்ப்பில் கைத் தொலி உரிந்து எரிகிறது.. துப்பாக்கி கையில் இருப்பது வீண் சுமை. குக்ரியை வைத்துக்கொண்டு, மேல் நோக்கி விரைந்து வந்த மற்றொரு குழுவில் பாய்கிறேன்.. எத்தனை பேர், எங்கு குத்தினேன் ... தெரியவில்லை. அவர்களைக் கடந்து மற்றொரு குழு. கீழே வந்ந்து சேர்ந்ததும் குன்றில் சுற்றி வந்த படையுடன் சேர்ந்துகொள்கிறோம். இனி அந்த டாக்கா.. கன்னா ஸாப் எங்கே எனத் தெரியவில்லை. அவரிடம் சொல்லவேண்டும். சர்ஜீ, நான் நான்கு பேரைச் சாய்த்துவிட்டேன்” தாஸ் எங்கோ பார்த்தபடி சொல்லிக்கொண்டே இருந்தார். நிறுத்தும்படி பல முறை சொல்லியும் பேச்சு தொடர்ந்தது. ” போரில் காது செவிடானது போகட்டும். எங்கோ மூளை கலங்கி விட்டது. அல்லது மிக அதிகமான மன அழுத்தம்.. நம் படை வீரர்களுக்கு மன நிலை ஆரோக்கியம் அவசியம் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும். “ தாஸின் தலைமை அதிகாரி , இரவு உணவின்போது காண்ட்டீனில் சொல்லிக்கொண்டிருந்தார். இரவுகள் இப்போதெல்லாம் கனக்கின்றன.