Sunday, September 27, 2015

அனிச்சை இயக்கமும் ஆழ்வார் பாசுரமும்.

”கூரியர், ஸாப்” கூரியர் பையனோடு , எங்கள் அடுக்குமாடிக் கட்டிடக் காவலாளியும் வந்திருந்தான். கூரியர் என்று சொல்லிக்கொண்டு டிக்‌ஷனரி, என்ஸைக்ளோபீடியா விற்க சில யுவதிகள் நுழைந்துவிடுகிறார்கள். ஜன்னல் பத்திரிகையில் கடைசி அத்தியாயம் வந்திருந்த இதழ். Kasthuri என்று வழக்கம்போல பெயரில் th வந்திருந்தது.

உள்ளே மீண்டும் சென்று பத்துநிமிடத்தில் இறைவணக்கத்தை முடித்துவிட்டு வரவும் மகன் தயாராகக் காத்திருந்தான். “அப்பா, ஒன்னு கேட்கட்டுமா? கோபப் படக்கூடாது”

“சொல்லு”

“இல்ல, வாசல்ல கூரியர் வாங்க நீங்க எந்திச்சு வரணுமா? திருப்பாவை சொல்லிகிட்டிருந்தா, அதை முடிக்கவேண்டியதுதானே? தப்பு வந்ததுன்னா?  கான்ஸண்ட்ரேஷன் இருக்காதுல்ல?”
“திருப்பாவை தானா வந்துகொண்டிருக்கும். பழகிப்போச்சு பாரு. பெருக்கல் வாய்ப்பாடு மாதிரி. தூக்கத்துல கேட்டாலும் சொல்லணும்”

“அதுல என்ன கான்ஸ்டண்ட்ரேஷன் இருக்கும்? சும்மா சொல்லணும்னு சொல்றீங்க”
”இல்லடா” கொஞ்சம் யோசித்தேன். எங்கிருந்து தொடங்குவது?

“மூளை இருக்கு பாரு, முதல்ல ஒரு வேலையைச் செய்யறச்சே, பழகற வரை, படுத்தும். அதுவும் உடல் இயக்கமும் சேர்ந்து வரணும்னா, ரொம்பவே திமிறும். பொறுமையா ஒரு பழக்கத்துக்குக் கொண்டுவந்ததும், அது படு புத்திசாலித்தனமா, நினைவையும், உடல் இயக்க ஆணைகளையும் காங்கில்லியான்னு ஒரு பகுதிக்கு அனுப்பிடும். இது ,தானியங்கியா, நாம உணர்வோட முழிச்சிகிட்டிருக்கறச்சேயும், அந்த வேலைகளை சரியா செய்ய வைக்கும்.”

அவன் முழித்ததில், மேலும் விளக்கினேன். “ கார் ஓட்டக் கத்துக்கிறப்போ, கை கால், சிந்தனை எல்லாம் கார் ஓட்டறதுலயே இருக்கும். பழகினதுக்கு அப்புறம், மொபைல் எடுத்து பேசற அளவுக்கு, தானியங்கி வேலையா அது மாறிடறது இல்லையா? இது காங்கிலியாவோட வேலை ஆயிடுத்து. மூளையின் பிற பகுதிகள் மற்ற வேலையைச் செய்யப் போயிரும். இதே மாதிரிதான், பாசுரங்கள் படிக்கறப்போ முதல்ல கஷ்டமாயிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்துகிட்டா, காங்கிலியாவுக்கு அந்த இயக்கங்கள் போயிரும். நாம மத்த வேலையையும் பாக்கலாம்”

“ஆனா, அதுல என்ன பயன் இருக்குப்பா? கவனம் இல்லாம சொல்றது வீண்-ன்னு நீங்கதான் சொன்னீங்க”

“கரெக்ட். இது்ல என்ன ஆச்சரியம்னா, காங்கிலியா அந்த வேலையைச் செஞ்சாலும், மூளையின் பிற பகுதிகள் அதே பாசுரத்தை அனுபவிக்கவும்,உணரவைக்கவும் இயங்கும். வயலுக்கு தண்னீர் இறைக்கிற ஏற்றப்பாட்டுக்கும், தாலாட்டுக்கும்,  பெருமாளை வீதிக்குப் புறப்பாடு பண்ணறப்போ  மந்திரங்களும், பாசுரங்களும் சொல்றதுக்கும் இதே நிலைதான்.
 ஆனா, “ ஏனமாய் நிலங்கீண்ட என் அப்பனே கண்ணா!” ந்ன்னு வானமாமலைப் பதிகம் சொல்றப்போ, ஆதிமூலமேன்னு அந்த யானை கத்தினமாதிரி நாம கத்தறதா மனசு நினைக்கறது பாரு, கண்ல கண்ணீர் துளீர்க்கறது பாரு, இதெல்லாம், உணர்வோடு மூளை அனுபவிக்கறதைக் காட்டறது. ஆனா, பாசுரம்? அது காங்கிலியாலேர்ந்து வர்ற ஆணையில வருது. நீ எப்படி உன் மூளையை வைச்சிருக்கே-ங்கறது முக்கியம். தானியங்கியா சொல்வதோ, புத்தகம் பாத்துச் சொல்வதோ முக்கியம் இல்ல. உணர்வு, அனுபவம்.. அது முக்கியம்”

“ஏன்ப்பா எனக்கு இதெல்லாம் வரமாட்டேங்குது? ஸம்திங் ராங் வித் மி?” பையனின் உளைச்சல் புரிந்தது எனக்கு.

அவன் தோளைத் தட்டினேன் “இந்த கேள்வி இருக்கு பாரு.இப்போதைக்கு அது போதும். என்னிக்கோ ஒரு நாள் திடீர்னு உன் மூளை உணர்தலில் முதிர்ச்சியைக் காட்டும். அதுவரை , பாசுரம் என்பது, நிலத்துல விழுந்த விதை மாதிரிதான். சிலது, உடனே முளைக்கும். சிலது நாளாகும், சிலது முளைக்காது. இதெல்லாம் உன் கையில் இல்ல.”

”அப்ப என்னதான் நாம செய்யணும்ப்பா?”

“ விதையை விதைக்கறது மட்டும்தான் உழவனோட வேலை. வளர்றது விதையோட வேலை.  அது முளைக்கலைன்னா, மீண்டும் விதைக்கணும். நிலத்தைப் பக்குவப்படுத்தணும். உழவன் மறுபடி மறுபடி வியர்வை சிந்த உழணும்.  எது உன் கையில் இல்லையோ, அதுக்குக் கவலைப்படாதே.”
அவன் எழுந்து போய்விட்டான்.

ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தேன். பின்னர் மெல்ல திருவாய் மொழி புத்தகத்தை எடுத்தேன் “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆயினும் உனை விட்டகன்றி ஆற்றகிற்கொன்றிலேன் , அரவிணனை அம்மானே” வானமாமலைப் பதிகம்.

எனக்கு நோன்புகள் , சடங்குகள் கொண்ட கர்மயோக வழி தெரியாது. அறிவு மயமான ஞான வழியும் தெரியாது. ஆயினும் உன்னை விட்டு ஒன்றும் செய்ய இயலாது. “  சரணாகதி பாசுரங்களின் தொடக்கம்.  எதுவும் தனக்கு இல்லை என்ற ஆழ்வார், தன் முயற்சியை மட்டும்  விடவில்லை. அவனின்று அதுவும் செய்ய முடியவில்லை என்பதையே சொல்கிறார். முயற்சி என்பது செரபரல் கார்ட்டெக்ஸுக்கும், காங்கிலியாவுக்கும் வினைகளை ஒழுங்குபடுத்துகிறது.

 முயற்சி மட்டும் மீண்டும் மீண்டும். என்றாவது திருவாய்மொழி எனக்கும் புரியும். அதுவரை காங்கிலியாவும், கார்ட்டெக்ஸும் தம்மில் அடித்துக்கொள்ளட்டும்.

Friday, September 18, 2015

கம்பனும் கத்திரிக்காயும்

“ கத்திரிக்காயா?” அபி முகம் சுருங்கி முணுமுணுத்தான்.  இரவு உணவு மேடையில் நாங்கள் அனைவரும் ஒருசேர அமர்வதென்பது அபூர்வம். அதில் இன்று அபூர்வமாக அவனுக்குப் பிடிக்காத கத்திரிக்காய்.
“அன்னம் , லக்‌ஷ்மி தெரியுமா? முகத்தச் சுருக்காம சாப்பிட்டுப் போ” மங்கை சொல்வது எனக்கும் சேர்த்துத்தான். கத்திரிக்காய் பிடிக்காதது என்பதல்ல, அது இல்லாம இருந்திருந்தா நல்லா இருக்குமே? என்று கமல் ரேஞ்சுக்கு வசனம் பேச உணவு மேடை இடமல்ல.

அப்பா, நேத்திக்கு சிந்திப்பது பத்தி சொல்லிட்டிருந்தீங்களே?” . பிடிக்காததைத் தவிர்க்கும் உத்திகளில் ஒன்று அதனினின்று குவியத்தை , உணர்வை மாற்றுவது.
“என்ன சொன்னேன்?”
“ ஒரு நிகழ்வு , அதை நம் அறிவால், முன் அனுபவத்தால் தன்போக்கில்  அறிவது - பெர்ஸப்ஷன், அதுக்கு அப்புறம் அந்த நிகழ்வை ஆழ்மனத்துல வைச்சுக்கறது, அதுல இருந்து நினைவை, சுய உணர்வோடு, வடிகட்டிகளால் திருத்தி, எதிர்வினையாக வெளிப்படுத்துவது, ஃப்ராய்டு கொண்டுவந்த மாடல்-ன்னு சொன்னீங்க”
“ஆங்! கரெக்ட்” நினைவு வந்தது. அது Interpretation of Dreamsல இருந்து சொன்னதில்லையோ?
“இதை கொஞ்சம் மாத்தி, பெர்ஸப்ஷனுக்கு முன்னாடியே சுய உணர்வு ,தருக்கம் வந்தா, உள்வாங்கற உணர்வு முதல்லிலேயே வடிகட்டப்பட்டு, மனசைப் பாதிக்காமலேயே ஆழ்மனசுல இருக்கும்னீங்க”
“கரெக்ட். அது ஒருவகையிலநிகழ்வுகளால் பாதிப்பதைத் தடுக்கும் உத்தி. சிலரால இடர் வரும் காலத்துலயும் பதறாம எப்படி தெளிவா முடிவெடுக்க முடியுது-ங்கறதுக்கு ஒருகோணத்து விளக்கம்னு வைச்சுக்கலாம்”
“இந்த மாதிரி அதிர்ந்து போறது ஒரு பலவீனமாப்பா?”
“நிதானித்தேன். ஆமா என்றால் உணர்ச்சி வெளிப்படுத்துதலை அவ மதிப்பதாகும். இல்லையென்றால் தருக்க முடிவுகளை அவமதிப்பதாகும்.
“ரெண்டுமே சரிதான். ஆட்களையும், இடத்தையும் பொறுத்தது அது. கம்பராமாயணத்துல ரெண்டு இடம். இரண்டு பெண் கேரக்டர்கள். ரெண்டு பேருக்கும் சூழ்நிலை ஒண்ணுதான். கணவன் செத்துக் கிடக்கறான். அதிர்ச்சில அவங்க புலம்பறாங்க”  
“ம். சொல்லுங்க” ஆர்வத்துடன் முன்னே குனிந்தான். நேரம் சரியாக அமைந்த திருப்தியில் அவன் தட்டில் கத்திரிக்காய் பொறியலை வைத்தாள் என் மனைவி. கதை கேக்கிற ஆர்வத்துல என்ன திங்கறோம் என்ற நினைவே இன்றி முழுங்கிவிடுவான்.
“வாலி செத்துக்கிடக்கறான். தாரை ஓடி வர்றா. இராமன் உன்னைக் கொன்னுடுவான்ன்னு சொன்னேனே? கேக்காம போனியே? ‘என்று புலம்பறா. அதுக்கப்புறமும் அதிர்ச்சியில மீளாம சொல்றா,
“நீறாம் மேருவும் நீ நெருக்கினால். மேறோர் வாளியுன் மார்பையீவதோ?
தேறேன் யானினி, தேவர் மாயமோ? வேறோர் வாலிகொலோ விளிந்துளான்”
நீ நெருக்கிப் பிடிச்சா, மேருமலையே பொடிப்பொடியாகிவிடுமே? அப்படிப்பட்ட உன் மார்பை ஒருத்தன் அம்பு கிழிப்பதோ? என்னால நம்ப முடியலை. தேவர்கள் செய்த மாயம்தானோ? நீ சாகலை, வேறொரு வாலி செத்துப் போயிருக்கான்”
அவளால உணர்ச்சியின் அதிர்ச்சியைத் தாங்க முடியலை. அவன் இறந்ததை நம்ப மறுக்கிறா. இதை disbelief ரியாக்‌ஷன்னு ஹோரோவிட்ஸ்-ன்னு ஒரு சைக்கியாட்ரி சயண்டிஸ்ட் சொல்றார்”
”சரி, இன்னொரு இடம்? “ அவன் கதை கேட்பதில் குறியாயிருந்தான்.
“இராவணன் செத்துக்கிடக்கறான். மண்டோதரி ஓடி வர்றா. அவ புலம்பறப்போ,
“வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடலெங்கும் தடவியதோ ஒருவன்வாளி?”
வெள்ளெருக்கம் பூச் சூடிய சிவனது மலையைத் தூக்கிய வலிமையுடைய உனது உடலில் அம்புகள் துளைத்திருக்கிறதே? இது அந்த சீதையின் மீது வைத்த தவறான காதல் உடல் எங்கேயோ இருக்கிறதோ? என்று தேடியிருக்கிறதோ அந்த ராமபாணம்?”
நல்லா கேட்டுக்கோ அபி, மண்டோதரி, ராவணனோட வீரத்தைச் சொல்கிற அதே இடத்துல, அவனது இறப்புக்குக் காரணம் ஒரு தவறான காதல் என்கிற தருக்கத்தை , ஒரு காரணத்தை முன்னாடி வைக்கிறா, பாரு. இதுலதான் , உணர்ச்சிகளுக்கு முன்னாடி சுய அறிவை, தருக்கத்தை முன்னாடி வைக்கிற உத்தி. இது சாதாரண விஷயமில்லை”

அபி மவுனமாக இருந்தான். கதை அசைத்திருக்க வேண்டும்.
“என்னடா, எமோஷனலான சீன் அழுத்தமா இருக்கோ?”
“இல்லப்பா, என்னமா  இந்த கம்பர் ஒரு சைக்காலஜியை எழுதிவைச்சிருக்காரு, இல்ல? ஸ்டன்னிங்”
“சரி, அம்மா கத்திரிக்காய்தான் போட்டிருக்கேன். உணர்ச்சிப் படாம, இது நல்லதுக்குத்தான்ன்னு லாஜிக்கா நினைச்சுட்டு சாப்பிடு.ஹலோ, நீங்களும்தான். ஏன் கத்திரிக்காய்னா மூஞ்சி சுருங்கறது?”
நினைப்பதையும், அதை மாற்றும் வேலையையும் எப்படி பெண்கள் புரிந்துகொள்கிறார்கள்? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?