Sunday, May 25, 2014

லூர்துவின் லிரில் சோப்பு

கே.வி.ஆர் ட்ரவெல்ஸ்ஸின் புக்கிங் ஆஃபீஸ் பாரத் பெட்ரோல் பம்ப்பின் அருகில் இருப்பது, பலருக்கும் வசதி. “ஒரு லிட்டர்” என்று சொல்லியபடி ஒரு கத்து கத்தி எப்ப வண்டி வரும்? என்று கேட்டால், தெரிந்துவிடும்.
சூசை அப்படி அன்று குரலெடுத்துக் கேட்கவில்லை. மாறாக, புல்லட்டை உருட்டிக்கொண்டே கடை வாசல் வரை வந்தான். ஈரமான வாசல் மண்ணில் , டயர் தடம் பதிய, போட்டிருந்த கோலத்தின் ஒரு பகுதி லேசாக சிதைந்தது.
“அரைமணி லேட்டு சூச.. கோயில்பட்டி ரோட்டுல ட்ராபிக்னாங்க. இப்பத்தான் ட்ரைவரு போன் பண்ணாரு”
வண்டியை வேப்ப மர நிழலில் நிறுத்திவிட்டு, லுங்கியை நெகிழ்த்துக் கட்டினான் சூசை. அரை நாள் லீவு போட்டாச்சு. அரைமணி கூட குறைய ஆனா என்னா? வர்றது லூர்து. அவனுக்காக மாசக்கணக்காவே லீவு போடலாம்.
நாலு வருசமிருக்குமா? லூர்து ,தூத்துக்குடி பெரியகோயில் திருவிழா தொடங்க ரெண்டு நாள் முன்னாடி மும்பைக்கு ரயிலேறினான். அப்புறம் நாலு மாசம் கழிச்சு துபாயி. இப்பத்தான் முத தடவையா ஊருக்கு வர்றான்.
“லூர்து எங்கே?’ எனத் தேடுபவர்கள், ’சூச எங்கே?’ எனத் தேடினாலும் சரிதான். இருவரும் ஓரே இடத்தில்தான் இருப்பார்கள். லூர்தின் வீட்டில் அவனோடு சேர்த்து, அவன் தங்கை, அம்மா என்று மூன்றுபேர்கள். சூசையின் வீட்டில், அவன் பெற்றோரோடு தங்கை மேரியும், தம்பி இன்ஞாசியும் இருக்கிறார்கள். எப்போதும் மோதிக்கொள்ளும் குழுக்கள் இருக்கும் பகை கொண்ட இரு தெருக்களில் இரு நண்பர்கள்.
லூர்து பத்தாவது படித்த்தோடு நிறுத்திக்கொண்டான். இல்லை, நின்று கொண்டான். தையல்கார்ரான அப்பா மாரடைப்பில் போனபின், வீட்டைத் தூக்கி நிறுத்துவது அவன் தலையில் விடிந்தது. சூசை பி,காம் வரை படித்தபின், தூத்துக்குடியில் ஒரு ஷிப்பிங் ஏஜெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சிறுவயது நண்பர்கள். தெருக் குழுக்களிடையே பெரிய அளவில் சண்டை வந்து, போலீஸ் படை குவிக்கப் பட்டபோதும், இருவரும் ஒரு பயமுமின்றி ஒருவர் தெருவுக்கு மற்றொருவர் போய்வந்தனர். அவர்களைத் தெரிந்தவர்கள் , அவர்கள் நட்பைத் தெரிந்தவர்கள் எவரும் குறுக்கே வந்ததில்லை.
சூசை தெருவின் மறுபுறத்தைப் பார்த்தான். வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் பஸ் வரவில்லை. ஒரு பெண் விரைவாக புதுத்தெருவில் நுழைவது தெரிந்தது. ஒரு நொடியில் சூசை அடையாளம் கண்டுகொண்டான். மேரிதான்.. யார் வீட்டுக்குப் போகிறாள்?
சட்டென நினைவு வந்து, உஷ்ணமானான். அங்கதானே கிருஷ்ணன் வீடு இருக்கிறது? அவந்தான் மெட்ராஸ் போயிட்டானே? அடிச்ச அடிக்கு இனிமே வரவே மாட்டான். அவன் வீட்டுல இவளுக்கு என்ன வேலை?
அது நாலு வருசம் முன்பு...அப்போது லூர்து ஊரில் இருந்தான். மேலக்கரை தொம்மைதான் சொன்னான் “ லே சூச, ஒந்தங்கச்சி அந்த கிருஷ்ணனோட நின்னு பேசிக்கிட்டிருக்கா. ரெண்டுதடவ பஸ்ஸ்டாண்டுல வச்சிப் பாத்துட்டன். நல்லதுக்கில்ல, சொல்லிட்டேன்.”
லூர்துவும், சூசையும், கிருஷ்ணனை அன்று இரவு இடைமறித்து, அவனை முள்ளுக்காட்டில் புரட்டி எடுத்தார்கள். மேரி இருநாட்கள் அழுது கொண்டிருந்தாள்.
’அத்தோடு முடிஞ்சுபோச்சுனுல்லா நினைச்சிருந்தேன்? இது எத்தனை நாளா நடக்கு? ’ ஒரு வேளை கிருஷ்ணன் தங்கச்சிகிட்ட பேசிட்டிருப்பாளோ? அவளும் இவளுக்கு கூட்டாளியோ, அண்ணங்கிட்ட பேச வைக்க? . இன்னிக்கு மேரியைக் கேட்டுவிட வேண்டியதுதான்.’ சூசை நினைத்துக் கொண்டிருக்கும்போதே பஸ் புழுதியைக் கிளப்பி வந்து நின்றது.
லூர்து என்னமா மாறிட்டான்? வியந்தான் சூசை. தலை செம்பட்டை யாயிருச்சே? ஒல்லியாப் போயிட்டான்? சூசையை அணைத்துக் கொண்ட லூர்து விம்மினான். சூசையின் கண்களும் பனித்தன. இருவரும் ஏன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. இருவருக்கும் அழுகை இயலாமையால். ஒன்று வரமுடியாத இயலாமை, மற்றொன்று, கண் முன்னேயே, நண்பனின் காதலி கலியாணம் செய்து கொள்வதைக் கண்டும் ஒன்றும் செய்ய முடியாது நின்ற இயலாமை.
“ஏலெ, புல்லட்டுல இம்புட்டு சாமான் ஏத்த முடியாது சூச. ஒரு ஆட்டோ வச்சிருவம். வண்டிய இங்கனக்குள்ளயே விட்டுட்டு வா.” சூசை மறுக்காமல் புல்லட்டை நிறுத்திவிட்டு ஒரு ஆட்டோ பிடித்தான்.
இருவரும் ஊர் வரும்வரை மற்ற விசயங்களைப் பேசிவந்தனர். ’துபாய்ல என்ன திங்கே? அங்கிட்டு மாதா கோயில் இருக்கா? ஏப்பா, ஒரு வேளை துண்ணனும்னா 250 ரூவாயாவுமா? என்னலே, எப்படி கட்டுப்படியாவும்? ’
முக்கியமான ஒரு விஷயத்தை இருவரும் தவிர்த்தனர் - சில்வியா தாமஸ்.
லூர்துவின் எதிர் வீட்டு வரிசையில் இருந்த தாமஸ்ஸின் இரண்டாவது மகள் சில்வியா காலேஜ் படித்துக் கொண்டிருந்தாள். தாமஸின் பலசரக்குக் கடை லூர்துவின் வீட்டுக்கு நேர் எதிரே இருந்தது. அவர் இல்லாதபோது, சில்வியா கடையைக் கவனித்திருந்தாள். லூர்து, வாசலில் இரண்டு மெஷின் போட்டு தையலை தொடங்கியபோது, மெல்ல இருவருக்கும் காதல் துளிர் விடத் தொடங்கியது. சூசைதான், செயிண்ட் மேரீஸ் காலேஜுக்கும், லூர்து கடைக்கும் தூது போனவன். திருமணம் பத்தி பேசவும் லூர்துவுடன் சூசைதான் தாமஸிடம் போனான்.
“ஒங்கம்மா வராம நான் எப்படி பேசமுடியும்?” என்றார் தாமஸ். அதுவும் சரிதான் என்று நினைத்தார்கள் இருவரும்.
“லூர்து. ஒங்குடும்பம் எனக்குத் தெரியும். ஆனா, ஒஞ்சம்பளம் போதாது பாத்துக்க. அவ படிக்கணுங்கா-ன்னு வை. ஒங்கிட்ட பணமிருக்கா? சரி, வேற வீடு போகணுங்கா-ன்னு வை.சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.
போகமுடியுமா? முதல்ல சம்பாரி தம்பி. அப்புறம் பேசலாம்”
“சார்” லூர்து எழுந்து கை கூப்பினான். “ கொஞ்ச நாள் டயம் கொடுங்க. நான் சம்பாரிச்சுக் காட்டுதேன். அதுவர எனக்காக காத்திருங்க”
“பாப்போம். நீ சம்பாரிக்கற வழியப் பாரு” என்றார் தாமஸ்.
சூசையும், லூர்துவும் தீவிரமாக யோசித்தனர். தாமஸ் இருவதாயிரம் ரூபாய் கொடுத்தார். “எதுக்கு ?” என்ற லூர்துவிடம் “ துபாய்ல டெய்லர் வேணும்னு ஒரு விளம்பரம் வந்திருக்கு, இன்னிக்கு தினமலர் பாரு. போயி பணம் கட்டிட்டு சேர்ற வழியப் பாரு. அதுவரை, நீ சில்வியாகிட்ட பேசவோ, லெட்டர் எழுதவோ கூடாது, என்னா?”
லூர்து கிளம்பி பம்பாய் சென்றான். அதன் பின் மூன்று மாதம் தொடர்பு இல்லை. திடீரென அவனிடமிருந்து போன் வந்தது. “ஏமாத்திட்டானுவ சூச. நான் இங்க செத்து சீரழிஞ்சு, ஒரு மாதிரியா, இப்ப ஒர் ஏஜெண்ட் மூலமா துபாய் போறேன். நாளைக்கு காலேல ப்ளைட்டு. ஒரு வருசம் கழிச்சி லீவு கிடைக்கும். தாமஸ் ஸார், சில்வியாகிட்ட சொல்லிடுடே.”
தாமஸ் வீட்டில் , லுங்கி மட்டும் கட்டியபடி ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். “சொல்லுடே” என்றார்.
”லூர்து இன்னிக்கு போன் பண்ணான். துபாய் போறானாம் நாளைக்கு. ஒரு வருசத்துல வருவானாம்.”
“லேட் ஆயிட்டப்பா” என்றார் தாமஸ் போலியாக வருத்தப்பட்டபடி..
“இவன் எங்க திரும்பி வரப் போறான்னு, சில்வியாவுக்கு ஒரு சம்பந்தம் சரி பண்ணிட்டேனே? அவளும் சரின்னுட்டா”
சூசை இடிந்து போனான்.”என்ன சார் சொல்லுதிய? அப்ப லூர்து?”
“நாங்க காத்துகிட்டிருந்தோம். அவரு வரலேல்லா. எத்தனை நாள் இருக்கறதுன்னு அப்பா , வரனை முடிச்சிட்டாரு. என்ன மறந்திரச் சொல்லிருங்க” சில்வியாவின் குரல் திரைக்குப் பின் தழுதழுத்தது.
“இங்கேருடே, நானும் பொண்ணு நிலமையப் பாக்கணும்லா? நாளைக்கு எனக்கு ஒன்னு ஆயிட்டுன்னா அவளுக்கு யாரிருக்கா? அதான்.... லூர்தோட தங்கமான மனசுக்கு ஏசு காப்பாத்துவாரு. அவனுக்கு நல்ல பொண்ணா நானே பாத்து முடிக்கேன்ன்னு சொல்லு, என்னா?”
சூசை அன்றிரவு லூர்துவிடம் சொன்னபோது , அடுத்த முனையில் ஒரு நிமிடம் மவுனம். அதன்பின் லூர்து பேசினான் “சரி. நான் கிளம்புதேன். வீட்டுல , அம்மா தங்கச்சிய பாத்துக்கடே சூசை. எனக்கு நீ மட்டுந்தான் இருக்க”
அதன்பின் இன்றுதான் அவர்கள் பேசுகிறார்கள்.
லூர்துவின் வீட்டில், சூசையின் தங்கை மேரியும், தம்பி இஞ்ஞாசியும் முன்னே வந்து காத்திருந்தனர். பத்து நிமிட உணர்ச்சி பிரவாகத்தின் பின், லூர்து, தனது பெரிய சிகப்பு சூட்கேஸைத் திறந்தான். இஞ்ஞாசிக்கு கூலிங்கிளாஸ், சூசைக்கு ஒரு தங்க வாட்சு, மோதிரம்... பெட்டிக்குள் துபாயே இருந்தது.
“யம்மா, ஒனக்கு தங்க செயினு.”
“எனக்கு எதுக்கடா ராசா? ஒன் தங்கச்சிக்கு போடு,. கலியாணத்து ஒதவும்”
”ரெண்டு தங்கச்சிக்கும் வாங்கியாந்திருக்கேன். ரெண்டு பவுனு செயினு” சூசை திகைத்துப் போனான்.
”டே, லூர்து. மேரிக்கு எதுக்கு?. வேணாம். விக்டோரியாக்கு வச்சிக்க.”
‘லே, நீ யாருல அவளுக்கு வேணாம்னு சொல்ல? அவளும் எந்தங்கச்சிதான். விக்டோரியாவுக்கு என்ன உண்டோ, அது மேரிக்கும் உண்டு. நீ இதிலெல்லாம் இடபடாதே,கேட்டியா?”
“போட்டும்டே மக்கா. சம்பாதிச்சு என்ன கிழிச்சேன்? எதுக்குப் போனேனோ அதுவே இல்லேன்னு ஆனப்புறம், எந்த அன்பு உண்மையோ அதுக்குதானெ செஞ்சிருக்கேன்?. நிறைவா இருக்கு மக்கா.”
சூசை பேச்சைத் தவிர்த்தான். என்ன சொல்லமுடியும்? அதே சில்வியா இப்போது , அடுத்த தெருவில்தான் இருக்கிறாள் என்பதையா ? இல்லை, ஒருமுறை அவளை மறித்து “இப்படி ஏமாத்திட்டயே?” என்று பொருமினபோது “ அவரு கிட்ட பணம் ஒண்ணுமே இல்லயே? அந்தாளக் கட்டிக்கிட்டு என்ன வாழுறது?”என்று எகத்தாளமாகச் சொன்னதையா?
“குளிச்சிட்டு வர்றேன்மா.” லுங்கியோடு கிணற்றங்கரைக்கு போனான் லூர்து.
“சரிய்யா. சோறு எடுத்து வக்கேன்.. சூசை நீயும் தின்னுட்டுத்தான் போவணும். எப்பிள்ளே விக்டோரியா, கோளி கொளம்பு ஆயிட்டான்னு பாரு. ”
கிணத்தருகே சாய்வாக இருந்த துணி தோய்க்கும் கல்லில் சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு , வாளியை கிணற்றில் தள்ள, தொபுக்கடீர் என்ற சத்தமும், களக் களக் என்று அது நீர் மொள்ளும் ஒலியும் கேட்ட்து.
“ஐ, என்ன சோப்புண்ணே இது?” இஞ்ஞாசி , பெரிதாக இளம் பச்சையிலிருந்த அந்த சோப்பை ஆர்வமுடம் எடுத்தான்.
“லே ,அத வையி. எடுக்காத”
இஞ்ஞாசி கவனிக்கவில்லை. கையிலெடுத்து மூக்கில் வைத்து உரக்க முகர்ந்தான். “ய்ய்யா! என்ன வாசனை?”
பளேரென அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்த்து. “ எடுக்கதலே, எடுக்காதலேன்னு சொல்லிட்டிருக்கேன். அதென்ன எடுக்கறது?” லூர்துவின் கோபத்தில் , கண்கள் வலியில் துடிக்க, வீங்கிய கன்னத்தை பிடித்தவாறு இஞ்ஞாசி சிலை போல் நின்றான்.
துண்டு கொண்டு வந்த மேரியும், அவள் பின் சப்தம் கேட்டு ஓடிவந்த விக்டோரியாவும் திகைத்து நின்றனர். இஞ்ஞாசி , வீறிட்டுக்கொண்டே “சூசை அண்ணே,” என்று அலறி வாசலுக்கு ஓட, விம்மல்களுக்கிடையே அவன் சொன்ன கதையை ஓரளவு புரிந்துகொண்ட சூசை பின்பக்கம் விரைந்தான். அவன் கண்கள் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.
”லே, லூர்து, எந்தம்பி இங்க வர்றது பிடிக்கலேன்னா சொல்லியிருக்கலாம். அவன வீட்டுக்குப் போயி திங்கச் சொல்லியிருப்பேன். ஏன் கைய நீட்டுனே? “
லூர்து துணி தோய்க்கும் கல்லில் சிலை போல் அமர்ந்திருந்தான்.
“சொல்லுலே, நாதியத்துப்போயி ஒன் வீட்டுல கோளி திங்க வரலைடே நாங்க. ஏட்டி மேரி, தம்பியக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ”
திரும்பிய சூசை, வெடித்துக் கதறிய கேவல் ஒலியில் திரும்பினான்.
“என் புத்திய செருப்பால அடிக்கணும்லே. புத்தியத்துப் போயி பிள்ள கன்னத்துல எவம்மேலயோ இருக்கிற கோவத்துல அறைஞ்சிட்டேன்.
ஊருக்குப் பொறப்பட நாளு, சில்வியா வந்து ஒரு லிரில் சோப்பு கொடுத்தா.”என் ஞாபகமா வச்சிக்க”ன்னா. முதல் தடவையா அவ உள்ளங்கையை மோந்து பாத்தேன். லிரில் சோப்பு வாசனை. சிரிச்சுகிட்டே போயிட்டா. லிரில் சோப்பை பத்திரமா வச்சிருந்தேன்.
மும்பையில என்ன மாதிரி நாலு ஆளுங்கள ஒரு ரூம்புல போட்டு அடைச்சு வச்சிருந்தானுவ. பைசா எல்லாம் பிடிங்கிட்டாங்க. தாராவியில ஒரு லெதர் கம்பெனியில தோல் பை தைச்சேன். அங்கிட்டு பொம்பளைகளும் உண்டு அதுல நஸ்ரின்னு ஒருத்திக்கு என்மேல ஆசை. எங்கூட வந்திரு-ன்னா. நான் மயங்கல. தினமும், அந்த லிரில் சோப்பு வாசத்துலயே எதிர்காலத்தை முகர்ந்துகிட்டிருந்தேன். சில்வியா கூட , மணமா வாழற ஒரு கற்பனை வாழ்க்கை. லிரில் சோப்பு எப்பவும் எங்கூட இருக்கும். அதுல மணம் போனப்புறம் இன்னொரு லிரில் சோப்பு. அது இருக்கற வரைக்கும் எப்படியும் துபாய் போயிறணும்னு வெறியில வேலைபாத்தேன். நாயா அலைஞ்சேன்.
நாலுமாசம் கழிச்சு வேலை கிடைச்சிச்சி. சில்வியா கலியாணம் பண்ணிக்கிட்டான்னு நீ சொன்னதும் உடஞ்சு போனேன். முத வேலையா சோப்பை முகந்தேன். லிரில் வாசனை , முன்னே போக உந்திச்சு. துபாய்ல லிரில் கிடைக்கல. அங்க ஃபா(Fa)ன்னு ஒரு சோப்பு, லிரில் மாரியே இருக்கும். அத வாங்கி வச்சிருந்தேன்.எப்பெல்லாம் சில்வியா நினைவுக்கு வர்றாளோ, அப்பெல்லாம் ஃபா சோப்பு எடுப்பேன். இன்னும் முன்னேறணும்னு தோணும்.
அந்த சோப்பைத்தான் ஒந்தம்பி எடுத்து மோந்து பாத்தான். பொறுக்கலடே எனக்கு.. இன்னும் எத்தன லூர்து, எத்தன சில்வியா, எத்தன லிரில் சோப்பு இருக்கோ? இவனாச்சும் நல்லாயிருக்கணும்டே. இவனுக்காச்சும் நல்ல சோப்பு கிடைக்கணும்”
முகத்தில் அறைந்து அறைந்து அழும் நண்பனைக் கண்ணீர் மல்கப் பார்த்த சூசை ஒன்றும் பேசாமல் வெளியேறினான்.
புதுத் தெருவில் கிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளி வந்த மேரி, வாசலில் புல்லட்டின் மேல் ஆரோகணித்திருந்த சூசையைப் பார்த்து விக்கித்து போனாள்.
“கிருஷ்ணனுக்கு விசுவாசமா காத்திருட்டி"
உயிர்த்த புல்லட், திரும்பி வேகமெடுத்து, படபடவென ஒலியெழுப்பி மறைந்தது.
பல நூறு ஆண்டுகள் முன்பு, காதலியைப் பிரிந்து பொருளீட்டச் சென்றவன், வழியில் வந்த துன்பத்தையெல்லாம் எவ்வாறு அவள் நினைவால் கடந்தான் என்று கண்ணீருடன் சொல்கிறான். பிற நாடு சென்று வாழும் ஒரு மனிதனின் உணர்வுத் தவிப்பினை படம்போட்டுக் காட்டிய குறுந்தொகைப் பாடல் இது.
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடம் சுரக்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே
குறுநடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்கித்
தளை அவிழ் பல்போது கமழும்
மைஇருங் கூந்தல் மடந்தை நடப்பே”

- பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.

”சுரவழியில் (போகின்ற கொடிய வழியில்) காணப்பட்ட நெல்லிக்காய்கள் கிடக்கின்ற இடத்தில் பதுங்கிக் கிடக்கின்ற புலிக்குட்டிகள் இருக்க, கடப்பதற்கரிய மலைபோன்ற கடின வழிகளில் நான் சென்றேன். அங்கு சற்றே ஆறுதல் தரும் இனிய குரலுடைய, த்த்தி நடக்கின்ற அழகிய பறவைகளின் ஒலியில் மயங்காது, என் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்த, காட்டின் வெட்சிப் பூ போல் மணம் கமழும் என் காதலியின் கூந்தலையும், அவள் காதலையும் மட்டுமே நினைத்திருந்தேன்.”

Saturday, May 24, 2014

செல்லத்தாயி


”இதுங்க சரிவரும்-ங்கறே? “ நல்லமுத்து , செல்லத்தாயிக்காக சற்றே நடை வேகத்தைக் குறைத்தார்.
“எல்லாம் சரியா வரும். கொஞ்சம் விட்டுப் பாப்பம்” செல்லத்தாயி , தனது ஆர்த்த்ரிடீஸ் கால்களில் இட வலமாக ஆடியபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நடந்தாள். வெயில் மாலையிலும் தீவிரமாக இருந்தது.
“ஊர்லேந்து வர்றப்போவே சொன்னேன். அந்த டாக்டரு வெளங்காதவன். அவன் சொன்னான்னு ஒரு புது செருப்பு.. இப்ப காலைக் கடிக்கி, கையக் கடிக்கின்னு சொல்லிட்டே நடக்கே. ஒனக்கெல்லாம் அந்த ரப்பர் செருப்புதான் சரி, செல்லி”
“சரி வுடுங்க. என்னமோ. செருப்பு வாங்கியாச்சு. ரொம்ப கடிச்சா, இங்கனக்குள்ள எதாச்சும் வேலைக்காரிக்கு கொடுத்துடுவம். சரி, இன்னிக்கு காலேல மருமவ முகம் அப்படியே வாடிக்கடந்துச்சு பாத்தியளா? ”
“ரெண்டு பேரும் இப்படி உம்-முனுதான, நாம வந்தன்னிலேந்து இருக்காவ? இன்னெக்கென்னா புதுசா வாடுதா, சாடுதான்னு கிளப்புற?” நல்லமுத்து குரலில் ஏமாற்றமும், விரக்தியும் , அடித்த வெயில் தாங்காது வெளிப்பட்டன.
மும்பைக்கு ஒரு மாதம் முன்பு பையன் முத்துக்குமார் வீட்டுக்கு வந்து இறங்கிய நல்லமுத்து, செல்லத்தாய் அம்மாள், போரிவல்லி பகுதியில் இரண்டு படுக்கையறை வீட்டில் இரு நாட்களில் இருக்கப் பழகிவிட்டனர். தூத்துக்குடியிலிருந்து வந்தவர்களுக்கு வெயிலும், வியர்வையும் பழகியிருந்தாலும், வீட்டில் மகனும், மருமகளும் பேசாமலேயே இருப்பது தர்ம சங்கடமாக இருந்தது.
முத்துக்குமார் ஒரு தனியார் வங்கியின் கிளை மேலாளர். மருமகள் லட்சுமி ஒரு மென்பொருள் உருவாக்கும் பெரிய கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். சம்பளத்துக்கு இருவருக்கும் குறைவில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு காலையில் கிளம்பிப் போவார்கள். மாலையில் வந்ததும், லாப்டாப்பும், மொபைலுமாக ஆளுக்கு ஒரு அறையில் அமர்ந்துவிடுவார்கள். ஹாலில் டி.வி யாருக்கோ வந்த வாழ்வாக ஓடிக்கொண்டிருக்கும்,. என்ன சேனல், யார் பார்க்கிறார்கள் என்பது இருவருக்கும் தெரியாது.
இது ஒரு மாதமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதில் நல்லமுத்துவின் கோபம் எகிறத் தொடங்கியது. “இதென்னா, வீட்டுக்கு அம்மையும் அப்பனும் வந்திருக்காவ? அவங்க கிட்ட ‘என்ன, சாப்டீயளா, எதாச்சும் வேணுமா?;ன்னு ஒரு வார்த்தை கேக்கப்படாது? ரெண்டும் அந்த பொட்டி முன்னாடி விடிஞ்சதுலேந்து கிடக்குதுவோ.” செல்லத்தாயிடம் பொருமினார். அவர்கள் வரும் நேரமாதலால், செல்லத்தாயி, அவரை மெல்லக் கிளப்பி வெளியே கூட்டி வந்துவிட்டாள்.
“இந்தாருங்க. சிறுசுங்க. கல்யாணமாயி ரெண்டு வருசம்தான் ஆவுது. என்ன சண்டையோ என்னமோ? இவனும் உச்சாணிக்கொம்புல ஏறி நிக்கான் -ஒங்கள மாரி. அவளும் இத்தனை ராங்கித்தனம் செய்யேண்டாம். சம்பந்தியம்மாவுக்கு ஒரு போன் போடுங்க. நான் பேசுதேன்”
“ஒனக்கு, என்னச் சொல்லலேன்னா தூக்கம் வராதே? அந்தம்மா என்ன செய்யும்?. ”நானுஞ்சொல்லுதேன். நீங்களும் மாப்பிளைக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க’ங்கும். இங்கிட்டு வந்தால்லா பொண்ணு வண்டவாளம் தெரியும் அவியளுக்கு?. நான் முடிவு பண்ணிட்டேன், செல்லி. செல்லி, கேக்கியாட்டி?”
“சொல்லுங்க. நல்லாத்தான் கேக்கு.” என்றாள் செல்லி, மூச்சிறைத்தபடி. நடக்க முடியவில்லை. செருப்பினுள் பாதம் வீங்குகிறது. உப்பைக் குறைக்கணும்.
“ நாளைக்கு நான் இங்கிட்டு போரிவல்லி ஸ்டேஷன்ல போயி ஊருக்கு டிக்கட் போட்டுடுதேன்.  இங்க இருந்தா நமக்கும் செரிப்பட்டு வராது, அதுக, தலைவிதி, என்னமோ அடிச்சிக்கட்டும், பிடிச்சிக்கட்டும், என்ன சொல்லுத?”
“க்கும். இப்படி விட்டேத்தியா சொல்லத்தான் நீரு இங்க வந்தீரோ? இல்ல கேக்கேன். அதுக பாட்டுக்கு விடறதுக்கு நாம என்ன சொல்லவேண்டியிருக்கு? கொஞ்சம் பாப்பம். பொறவு பைய்ய, ரெண்டுபேருக்கும் சொல்லுவம்”
“கோட்டி பிடிச்சுருச்சாட்டீ ஒனக்கு? என்னத்தன்னு சொல்லுவே? இதுகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு தெரியாம என்ன ராம கதை சொல்லச் சொல்லுத? போம்வே-ன்னுட்டான்னு வச்சிக்க... என் மூஞ்சிய எங்கன கொண்டு வைக்க? “
செல்லி கால் அகட்டி நின்றாள். மூச்சிரைக்க பேசினாள் “ இந்தாரும். சொல்லுதேன்னு நினைக்கப்படாது. இத்தன நாளு இருந்தீயளே, அதுகளுக்கு என்ன மனஸ்தாபம்னு ஒரு வார்த்த கேட்டிருப்பீயளா? இல்ல, நீங்களா கண்டுபிடிக்க பாத்திரிப்பீயளா? ஒண்ணும் செய்யாம, ஆ, ஊன்னு குதிச்சா எப்படி? எல்லாம் ஒங்கம்மா குணம்.. குத்தம் மட்டும் பாக்கத் தெரியும்.”
நல்ல முத்து வாய்க்குள் “ முண்ட, ஒன்ன  எப்பவோ கொன்னு போட்டிருக்கணும், எங்கம்மாவையா சொல்லுத?” என்று திட்டியபடி, அவளுடன் திரும்பி வீடு நோக்கி நடந்தார். நாளை எப்படியும் டிக்கட் எடுதுறணும். சீனியர் சிட்டிசன் -ன்னா தனி கவுண்ட்டர் உண்டுமா? கேக்கணும். இந்த நாய்ப்பய ஊர்ல எல்லாத்துக்கும்லா க்யூ-ங்கான்?
லட்சுமியும், முத்துக் குமாரும் வழக்கம்போல தனித்தனி அறையில் லாப்டாப்பில் முழுகியிருந்தனர். பாத்தியா? என்பது போல் ஒரு சிரிப்புடன் நல்ல முத்து ஹாலின் சோபாவில் அமர்ந்தார். “ஏட்டி, அது என்னா சீரியலு? அன்னிக்கு பாத்தமே? தாடிக்காரன், பொஞ்சாதிய விட்டுட்டு ஒரு பொண்ணோட இருக்கான்...அப்புறம்?”
“எல்லாம் ஒரே மாரித்தான் இருக்கும். சும்மா இரிங்க. நான் பாத்துட்டிருக்கேன்லா? தொணதொணங்கக் கூடாது, ஆமா.”
தனக்குள் முணுமுணுத்தவாறே புத்தக அலமாரியைத் தேடிப்போனார் நல்ல முத்து.
சாப்பிடும் நேரத்தில் நால்வரும் மேசையில் அமர்ந்திருந்தனர். லட்சுமி தனது மொபைலில் யாருக்கோ  செய்தி அனுப்பியபடி இருக்க, முத்துக்குமார் தனது ஐ பேட்-ல் ஏதோ படித்து சிரித்துக் கொண்டிருந்தான். நல்ல முத்து இருவரையும் பார்த்து தன் மனைவியைப் பார்த்தார். “ இதுக வெளங்குமா?” என்றது அவர் முகம். செல்லத்தாயி, இருவரையும் ஒரு முறை பார்த்தாள். மவுனமாக சோற்றைப் பரிமாறினாள்.
அடுத்தநாள், சனிக்கிழமை காலையில் லட்சுமி சமையலறையில் நுழைகையில் ஆச்சரியமானாள். “அத்தே, நீங்க என்ன செய்யறீங்க? உங்களுக்கு ஏன் சிரமம்?”
“இருக்கட்டும்மா. மாமாவுக்கு இன்னிக்கு பொறந்தநாள். வைகாசி விசாகம்”
“அட! மாமா சொல்லவே இல்ல பாருங்க! “
“அவருக்கே தெரிஞ்சிருக்காது. ஒரு பாயாசம் செஞ்சுருவம், என்னா?”
“ம்ம்ம். அவருக்கு ஷுகர் இருக்கே அத்தே.? “
“இருந்தா என்னா? ஒரு நாளு கொஞ்சம் குடிச்சா ஒன்னும் ஆவாதுட்டீ. மாத்திரை ஒன்னு கூடப் போட்டுகிடச் சொல்லுதேன். நாளைலேந்து திருப்பி கஞ்சி, நாலு நாளைக்கி”
டிக்கட் வாங்கி வந்த நல்ல முத்து, மதியம் சாப்பாட்டில் திகைத்தார். “ஏ, என்னா இன்னிக்கி? பாயாசமெல்லாம் தடபுடலா இருக்கு? இவனுக்கா, இவளுக்கா, யாருக்கு பொறந்த நாளு?”
“வெளங்கிச்சி. ஒங்களுக்குத்தான் இன்னிக்கு பொறந்தநாளு.”
“அங் “ வியந்தார் நல்ல முத்து. பாயாசத்தை கண்கொட்டாமல் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு பார்த்தார். “ நம்மூர் மண்டை வெல்லம் கிடைக்கா இங்க? இன்னொரு  டம்ப்ளர் ஊத்துட்டீ” என்றார் டம்ப்ளரை ஏந்தியபடி.
“ கால்வாசிதான் தருவேன். ஒடம்புக்கு ஆவாது.” என்ற செல்லத்தாய் இரு கரண்டி பாயாசத்தை அதில் ஊற்றினாள். லட்சுமி ஒரு சிரிப்போடு அந்த நாடகத்தைப் பார்த்திருந்தாள். முத்துக் குமார் மெல்ல தலையை நிமிர்த்தினான்.
“ஏட்டி, இதென்னா? கையில கட்டு? சுட்டுகிட்டியோ?” நல்ல முத்து சற்றே பதறி செல்லத்தாயியின் கையைப் பற்றினார்.
“அட , வுடுங்க. மண்டைவெல்லம் தட்டிப் போடப் போனேனா? ,கண் மறைச்சிட்டு... வெரல்ல நசுக்கிட்டேன். “
“ இதென்னா, புடவையில ரெத்தம்? என்னத்துக்கு  இப்படி கொலை வெறியில பாயாசம் செய்யோணும்? லே,முத்து , டாக்டரு இருப்பாரா? போவம்”
“அய்ய, அதெல்லாம் வேண்டாங்கேன்லா? வேணும்னா நானே சொல்லுவேன்.  புது எடம் பாத்தீயளா.? சில சாமான் எங்க இருக்குன்னு தெரிய மாட்டேங்கு. அதான். அவசரத்துல வெல்லம் தட்டிப் போடயிலே, கையில நசுக்கிட்டு. நீங்க குடிங்க.”
நல்ல முத்து எழுந்தார் -பாயாசம் குடிக்காமலே. உள்ளே சென்று டெட்டால் எடுத்து வந்தார். ”கையக் காட்டுட்டீ. கண்ணு மண்ணு தெரியாம எதாயாவது செஞ்சு தொலைக்கவேண்டியது. தானாவும் தெரியாது.சொன்னாலும் வெளங்காது உனக்கு.”
“ஒரு எழவும் இல்ல. அடிபட்டு ரெண்டு மணி நேரமாச்சு. இப்ப வந்து டெட்டால் போடுதாராம்!. அப்பவே, மஞ்சத்தூள் வச்சு , ரத்தம் நின்னுட்டு”
லட்சுமி அந்த பாசத்தின் வசை மொழிகளைக் கேட்டு நின்றிருந்தாள். இது நாள் வரை இந்த குமார் ஒரு முறையாவது கிச்சனில் என்ன செய்கிறாய்?  என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பானா?
சட்டென அவளுக்குள் ஒன்று உறைத்தது. முத்துக் குமாரின் பிறந்த நாளன்று கேக் வாங்கி வெட்டியிருக்கிறோமே தவிர, ஒரு முறையாவது நானாக ஒரு இனிப்பு தயாரித்ததுண்டா? இந்த அத்தை, முடியாத வயதில், சர்க்கரை கூடுதலாப் போட்டு, சாதம் கரிய விட்டு என்று ஏதோ செய்து, பாயாசம் என்று ஒன்று உண்டாக்க, அதனை ரசித்து குடித்து விட்டு “இன்னோன்னு கிளாஸ்” என்கிறாரே மாமாவும்? இந்த வசவுகளின் உள்ளிருக்கும் வாசம் என்ன?
சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் வந்தவள், லாப்டாப்பை மூடி வைத்தாள். கண்களை மூடி சிந்திக்கலானாள்.
முத்துக்குமாரும்,  நல்லமுத்துவும் போரிவில்லி காய்கறி மார்க்கெட் அருகில் நிறைந்த  காய்கறிப் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். ஆட்டோ இன்னும் வரவில்லை.
“லே முத்து. இங்கன பக்கத்துலதான் மீன் மார்க்கெட் இருக்கோ? கருவாடு வாடையடிக்கே?”
“ஆமா. ஆனா,ஒங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துகிடாதுல்லா? வேணாம்”
“எனக்கு பிடிக்காதுல. ஒங்கம்மாவுக்கு பிடிக்கும். ஆனா தனக்குன்னு வாங்கி,செய்ய மாட்டா. எனக்கு வேணும்னா செய்வால்லா? அதுல ரெண்டு மூணு துண்டு அதிகம் திம்பா. பாவம், அவளுக்கு வேற என்ன ஆசை இருக்கு? ஆச்சி, இன்னும் ரெண்டு வருசம் போச்சுன்னா,  என்னை, ’இதெல்லாம் நீரு திங்கவே கூடாது’ன்னு திட்டுவான், அந்த எழவெடுத்த டாக்டர். சரி, அதுக்குள்ள எதாச்சும் அவளுக்கு பிடிச்ச மாரி இருக்கட்டும். என்னா?”
ஒரு வாரத்தில் அம்முதியவர்கள் கிளம்பிப் போனபின், லாப்டாப்புகள் அதிகம் அந்த வீட்டில் திறக்கப் படவில்லை. சில நாள்களுக்குப் பின் ஒரு அறை அடைந்தே கிடந்தது.
பல நூறு வருடங்கள் முன்பு ஒரு பெண், கைவிட்டுப் பிசைந்த சோற்றில், புளியைக் கரைத்து விட்டு, புளிசாதமாக்க் கிளறி, அடுப்புப் புகை கண்ணில் ஏறி, முகமெல்லாம் வியர்க்க, சோற்றுக்கையை, தனது சேலையில் துடைத்து, அந்த நாற்றத்தோடே, கணவனுக்குப் பரிமாற, அவன் அந்த புளிச்சோற்றை “இனிது”என்று பாராட்டியபடி உண்கிறான். அதுகண்டு, அவள் நெற்றி, மகிழ்வின் நிறைவால் ஒளிர்ந்தது.
”முளிதயிர் பிசைந்த காந்தல் மெல்விரல்
கழுவுறு கலிங்கம்,கழாஅது, உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தன்றுழந்து அட்ட தீம்புளிப் பாகர்
“இனிது” எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
 - கூடலூர் கிழார்,  குறுந்தொகை.

Friday, May 23, 2014

சிகப்பு இன்னோவா

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

நான் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தேன். என்ன சொல்வது இவளுக்கு? இவளது தாய் சுஷ்மாவுக்கு?

சுஷ்மா என்ற பெயர் சொன்னால்,  நீங்கள் அவள் ஏதோ கால் செண்ட்டரில்,  ஏதோ பன்னாட்டு நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீ அல்லது ஃபிலிம் ஸிட்டியில் ஒரு துணை நடிகை என்ற அளவிலாவது எதிர்பார்த்திருப்பீர்கள்.

சுஷ்மா எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டுப் பணியாளர். வட பிஹாரில் ஏதோவொரு கிராமத்தில் கோசி நதி வெள்ளத்தில்  வாழ்வாதாரம் அடித்துச் செல்லப்பட, மஹாநகர் மும்பைக்கு வந்து  தனக்குத் தெரிந்த ரொட்டி , சப்ஜி செய்வது, வீட்டை பெருக்கி மொழுகுவது என்று உபரி வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, தாக்கரேக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் வட நாட்டு முகமற்ற அகதிகளில் ஒருத்தி.

பிஹாரி உச்சரிப்பில் ’நமக்’ ( உப்பு ) என்பதற்கு நிம்பாக்கு என்று சொல்வதில் ஆரம்பித்து, அனைத்திற்கும் ஏதோவொரு புதுப் பெயர் சூட்டினாள். இரண்டு வீடுகளில் வேலையை ஆரம்பித்து மெள்ள மெள்ள ஐந்து ஆறு வீடுகளில் அமர்ந்தாள். இடுப்பில் பல வீடுகளின் சாவிகள் தொங்க, அவள் கிலுங்க் கிலுங்க் என்ற ஒலியோடு சப்பாத்தி இடுவது ஏதோ மாட்டுவண்டியில் இரட்டை மாடுகள் ஒலியெழுப்பி ஓடுவது போலிருக்கும்.

இரு மாதம் முன்பு ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். பதினாறு பதினேழு வயதிருக்கும். கருத்த , சற்றே குண்டான உடல்வாகு. மிரண்ட கண்களுடன் அவள் அப்போதுதான் பிடித்து அடைக்கப்பட்ட கரடி போல் பயந்திருந்தாள். “பைட் ரே பேட்டியா” என்று அவளை ஹாலில் அமர வைத்து விட்டு, உள்ளே சப்பாத்திக்கு மாவு பிசையச் சென்றவள் வேலைமுடிந்ததும் ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள்.

அது அவளது இரண்டாவது பெண்ணாம்” என்றார்   304லிருக்கும் பாஸ்கர் ராவ். ”கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைப் பழக்கிக் கொடுக்கப்பார்க்கிறாள். என் மனைவி சொல்லிவிட்டாள் ‘சிறுமிகளை வேலை வாங்காதே. செஞ்சே, நானே போலீஸ்ல சொல்லிடுவேன்.’ அதுலேந்து வர்றதில்லை. படிக்க வைக்காதுகள் இதுகள்”

அந்தப் பெண் , சுஷ்மா வராத நாட்களில் வந்து வீட்டு வேலை செய்து போனாள். சிறுமி என்பதால் பாவமாக இருந்தது. எங்கள் ஓரிருவர் வீடுகள் தவிர பிறர் ‘ வேலை நடந்தால் போதும்’ என்று விட்டுவிட்டனர். மராட்டி வேலைக்காரிகள் சுஷ்மாவின் வளர்ச்சியில் கொதித்தனர்.

ஒரு மாதமுன்பு, திடீரென சுஷ்மா வரவில்லை. வீடுகளில் ரெண்டு வேளை பாத்திரங்கள் அப்பப்படியே கிடந்து நாறின. வீட்டு எஜமானிகள் போனிலும், கீழே பார்க் பெஞ்சுகளிலும் ஆத்திரத்தோடு அவள் சொல்லாமல் கொள்ளாம போனதைக் கடுமையாக விமர்சித்து, அரைப்பதற்கு அடுத்த அவல் வந்ததும் சுஷ்மாவை மறந்தனர். ’பையாணிகளை (பிஹார், உ.பி பெண்களை) வேலைக்கு அமர்த்தினால் இப்படித்தான்’ என்று சில தீவிர மராட்டியர்கள் சொசைய்ட்டி மீட்டிங்கில் பேச, புதிய மராட்டிய வேலைக்காரிகள் அமர்த்தப் பட்டனர். சுஷ்மா மறைந்து போனாள்.

ஒரு வாரம் முன்பு பெங்களூர் நிம்ஹான்ஸ் மன நல மருத்துவமனையில் ஒரு கருவியின் டெக்னிகல் மீட்டிங்கிற்காக  நானும் என் தென்னிந்திய ப்ராந்திய கிளை மேலாளரும் போயிருந்தோம். வேலையை முடித்துக் கொண்டு காருக்குக் காத்திருக்கும் வேளையில் மரத்தடியில் ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் பிசிறியடித்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணின் கோபக் குரலும், யாரோ கையால் அடிக்கும் ஒலியும் கேட்டது. வேடிக்கை பார்க்க மெதுவே கூடிய கூட்டம், காவலாளி விலக்க, அசட்டுச் சிரிப்புடன் கலைய, அசுவாரஸ்யமாக திரும்பிப் பார்த்தேன்.

தலையைச் சுற்றி புடவையால் முட்டாக்கு அணிந்தவாறு சுஷ்மா நின்றிருந்தாள். அருகில் குந்தி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கையால் முதுகில் கோபத்தில் அறைந்து கொண்டிருந்தாள். “சனியனே. செத்துப் போயிருக்க வேண்டியதுதானே? என்னையும் சேத்துக் கொல்லு”

சுஷ்மா என்று நாலு முறை அழைத்தபின்னரே அவள் திரும்பிப் பார்த்தாள் “சாஹீப்” என்றவள் கை கூப்பினாள். “ மாஃப் கரியே.: காலில் விழப்போனவளை நிறுத்தினேன். “மேரி பேட்டிக்கோ தேக்கியே சாஹப்” ( என் பெண்ணைப் பாருங்கள்) என்று அழ ஆரம்பித்தவளை நிச்சலனமாக அண்ணாந்து வெறித்த அந்தப் பெண்ணை எளிதில் அடையாளம் கண்டு கொண்டேன்.

“இவள்.. உன் பெண்தானே?”

”இவளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம். கட்டிக்கப் போறவன், டெல்லியில கட்டிடம் கட்டற ஒரு கம்பெனியில இருந்தான். இவகிட்ட அடிக்கடி போன்ல பேசியிருக்கன். இதெல்லாம் கூடாதுன்னு எச்சரிச்சு வச்சேன். இவளும், சரி கட்டிக்கப் போறவந்தானேன்னு,  எனக்குத் தெரியாம நிறைய தடவ பேசியிருக்கா. ஒரு மாசம் முன்னாடி, டெல்லியில, அவங்க பாட்டி பொண்ணைப் பாக்கணும்கறான்னு, இவளை டெல்லி கூட்டிட்டுப் போனேன். ” ஒரு நிமிடம் நிறுத்தினாள்.

அவளது பெண் மெல்ல முணுமுணுத்தாள் “ கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த இன்னோவா வண்டி சாட்சி. வண்டியில ஏ.ஸி இருந்துச்சு.”

“என்ன சொல்கிறாள்?”

சுஷ்மா பெருமூச்சுடன் தொடர்ந்தாள் “  கலியாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க காஃபர் கான் மார்க்கெட்டுக்கு போயிருந்தோம். அங்க குஜ்ரால்ஸன்ஸ் கடைப் பக்கம் மாப்பிள்ளைப் பையனும்.  அவங்கூட மாமா மகன், சித்தப்பா பையன், நண்பன்னு மூணுபேரும் சந்திச்சாங்க. இவள வெளிய அவங்கிட்ட பேசவிட்டுட்டு, நான் ஒரு கடையில துணி பாத்திட்டுருந்தேன். மாப்பிள்ள, இவ கிட்ட வெளியெ பேசிட்டிருந்தது கேட்டுச்சு. கேக்காத மாதிரி உள்ளே புடவை பாத்திட்டிருந்தேன்.

“எங்கூட வர்ரியா ? உனக்கு நான் ஒரு புடவ எடுத்துத் தர்றேன்”
“அய்யோ, அம்மா இருக்காங்க. திட்டுவா.”

“பத்தே நிமிசந்தான். மெட்ரோ ஸ்டேஷனுக்குப் பக்கத்துலதான் இருக்கு.”

”நஹிஜி. நான் வரலை. கல்யாணம் ஆனப்புறம்தான்”

“சரி கல்யாணம் பண்ணிடுவோம்”

“ஆ?”

“நிஜமாத்தான்”

ஒரு நிமிஷம் புடவை பாக்கறதுல லயிச்சிட்டேன். திரும்பிப் பாக்கறேன். இவளக் காணோம்.”

சுஷ்மா சற்றே மவுனித்தாள். அந்தப் பெண் மரத்தடியில் இருந்த புல்லைப்  பிடுங்கி தூக்கிப் போட்டபடியே பேசினாள் “ மந்திர்ல சிந்தூர் எடுத்தியே? நெத்தியில குங்குமம் வச்சு நமக்கு கல்யாணம் இப்ப ஆயிட்டுன்னு சொன்னியே?”

சுஷ்மா தொடர்ந்தாள்.” அப்புறம், ஒரு புடவையையும் வாங்கிக் கொடுத்துட்டு “கல்யாணம் முடிஞ்சாச்சு. சாட்சிக்கு என் அண்ணன், தம்பி, நண்பனெல்லாம் இருக்காங்க பாரு. இப்ப உங்கம்மா இருக்கற கடைக்குப் போவோம்.”ன்னு சொல்லியிருக்கான்.”

“மெட்ரோ, ஆங், கரோல்பாக் மெட்ரோ ஸ்டேஷன்தான்.. அது தாண்டி, சிகப்பு கலர் இன்னோவா வண்டில ஏறினோமே? மறந்துடுச்சா?”  அந்தப் பெண் மீண்டும் திடீரென  பேசவும் சற்றே திடுக்கிட்டேன்.

”இவளும் அவனும் ஏறினதும் வண்டிய எங்கயோ கொண்டு போயிருக்காங்க. ஓடற வண்டியில இவள....” சுஷ்மா முடிக்கமுடியாமல் திணறினாள்.

“ இன்னோவா நின்னிட்டிருந்துதே? கல்யாணம் முடிஞ்சுபோச்சு. அம்மா கிட்ட போவோம்.ஏய். ஏன் தொடற? நீயும் ஏண்டா தொடறே? ஏய். நான் கத்துவேன். சில்லாவுங்கீ..ஈஈஈஈ”

“ கடையில இவளைக் காணாமத் தேடி , எங்க வீட்டுக்கு, அவங்க வீட்டுக்குன்னு போன் மேல போன் பண்ணி, ஆட்கள் டெல்லி முழுக்கத் தேடித்தேடி, குர்கான்வ் தாண்டி மனேஸர் போற வழியில ரோடு ஓரமா இவ கிடந்ததை ராத்திரி எட்டு மணிக்கு கண்டு பிடிச்சோம். சஃபதர்ஜங் ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு ஒருவழியா இவ கண்ணு தொறந்தப்போதான்  இவளுக்கு சித்தம் கலங்கியிருக்கறது தெரிஞ்சுது."

"மாப்பிள்ளப் பையன், இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா மானக்கேடு-ன்னு ’நான்  செய்யலே”ன்னு சொல்லிட்டான். அவங்க வீட்டுலயும் ’உங்க பொண்ணு எவன்கூடயோ ஓடிப்போனதுக்கு என்வீட்டுப் பையனச் சொல்லாதீங்க’ன்னு சண்டைக்கு வந்தாங்க.  இவ இப்படி உளர்றதைத் தவிர, அவந்தான் இவளைக் கெடுத்தான்னு நிரூபிக்க ஒரு ஆதாரமும் இல்லே. நிம்மான்ஸ்க்கு வந்து பாத்தா எதாவது தெரியுமான்னு பாக்கறோம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காரு பெரிய டாக்டர். “

“அவன் மாமா மகன், சித்தப்பா மகன்.. அந்த இன்னோவா? அதெல்லாம் சாட்சியா பிடிக்கலாமே? போலீஸ்ல சொன்னியா?“

“ அவங்க எல்லாரும் நாங்க யாரும் இவன்கூட அங்க வரவேயில்லங்கறாங்க. அதுக்கு பொய்யா சில ஆதாரங்களும் வச்சிருக்காங்க. அவங்க ஆட்கள். விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அந்த  சிவப்பு இன்னோவா.. அது பொய் சொல்லாது சாஹேப்.. அது கிடைக்கணுமே சாஹிப்.?”

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

அழுதவாறே சுஷ்மா, ‘எழுந்திரு” என்று ஜடமாக அமர்ந்திருந்த அவளை எழுப்பி நடத்திச் செல்வதை சில நிமிடம் பார்த்து நின்றேன்.

ஜடப் பொருட்கள் பொய் சொல்வதில்லை.

பல நூறு வருடங்களுக்கு முன் , தன்னை மணமுடிப்பதாக ஏமாற்றிய ஒருவனைக் குறித்து ஒருத்தி திகைப்பில் பாடுகிறாள்.

”யாரும் இல்லை, தானே கள்வன்:
தான் அது பொய்ப்பின் , யான் எவன் செய்கனோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்காலின்
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டே, தான் மணந்த ஞான்றே?”
- குறுந்தொகை.

என்னை ஏமாற்றியது நீயன்றி வேறொருவரில்லை. திருமணம் செய்து கொள்வதாகச் சொன்ன உனது வார்த்தைகளை நீயே பொய்த்தால், நான் என்ன செய்வேன்.? யாருமற்ற பொழுதில்,  நீ என்னைத் திருமணம் புரிந்த போது, தினைப்பயிரின் மெல்லிய இலை போன்ற மெலிந்த பசுமையான கால்களை உடைய , நாரை ஒன்று , ஓடிக்கொண்டிருந்த நீரில், ஆரல் மீன்களை உண்ணக் காத்திருந்ததே? அதுவே சாட்சி. ”

Sunday, May 18, 2014

அஜிதாவீன் காதல் என்ற கிறுக்குத் தனம்.

” இன்னிக்கு சாயங்காலம் மீட்டிங் அஞ்சு மணிக்கு. வரியா?” கேள்வியில் சற்றே பரபரப்பானேன். நண்பர்கள் குழுவின் அடுத்த சந்திப்பு. விட மனமில்லை.
“யாரு பேசறாங்க? என்ன தலைப்பு?”
“சங்ககாலக் காதல் உணர்வும், புதுக்கவிதைகளில் காதலும்”னு ரெண்டு பேர் பேசறாங்க. ஒருத்தர் எம்.கே.தாமஸ் இன்னொருத்தர்.. அப்புறம் சொல்றேன்” நிர்மலா வெங்கெட்ராமன் மெல்ல பீடிகை போட்டார்.
“தாமஸ்? போனதடவை மைக்கைப் பிடிச்சுட்டு முடிக்க மறந்தே போனாரே? அவரா?”
“டோண்ட் பி க்ரூயல். அவருக்கு மெதுவா சொல்ற விதத்துல சொல்லிட்டோம். இந்த தடவை கடிகாரம் பாத்துத்தான் பேசுவார். அடுத்த ஆள் யாருன்னு தெரிஞ்சா, நீங்க கண்டிப்பா வருவீங்க. செல்வன் வேலாயுதம்”
செல்வன்? வியப்பு மேலோங்கியது எனக்கு. பல வருடங்களாக பழக்கம் என்றாலும், அதிக நெருக்கமில்லை. அருமையாகப் பேசுவான். ஆழமான அலசல்கள் , தெளிவான சிந்தனை. மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு, கேள்வி பதில்களில் நேரம் செலவிடுவான்.
“ரைட்டு. கண்டிப்பா வர்றேன். நிர்மலா. எங்க வரணும் சொல்லுங்க.”
நிர்மலா வெங்கட்ராமனின் அலுவலக கருத்தரங்க அறையை, வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலை வரை  தமிழ் நண்பர்கள் தமிழ்ப் புத்தகம், இலக்கியம் என்று பேசுவதற்கு பெரியமனத்தோடு ஒதுக்கித் தருவார். எப்போதெல்லாம் முடியுமோ அப்போது கூடுவோம். மிஞ்சிப் போனால் பத்து பேர் இருப்போம். ஆனால் தரமான, கண்ணியமான  விவாதங்களாக இருக்கும்.
அன்று அவர் அழைத்தது ஒரு கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு. ‘இத்தனை பெரிய நிகழ்ச்சியா?” என்று கேட்டேன்.
“செல்வம் வழக்கமா  வெள்ளிக்கிழமை இன்னொரு குழுவுல பேசுவாராம். அவங்க எல்லாரையும் இங்க அழைச்சிருக்கார். அறுவது பேர் இருப்போம் மொத்தமா பாத்தா”
நிர்மலா என்னை விட இரண்டு வருடம் , பல்கலைக்கழகத்தில்  சீனியர். அப்போதெல்லாம் அவரைத் தெரியாது. அவர்  எம்.பி.ஏ படித்துவிட்டு சிங்கப்பூரில் இருந்துவிட்டு, இங்கு சொந்தமாக ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்றை நடத்திவருகிறார். பைசாவுக்குக் குறைவில்லை எனினும் இலக்கிய அறிவுக்கும் ஒரு குறையுமில்லை. பேஸ்புக் மூலம் எதிர்பாராவிதமாகக் கிடைத்த நட்பு அவர்.
சீக்கிரமாகவே போய்விட்டேன். நாற்காலிகளை அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்துப் போட்டு, வரிசையாக வைத்துக்கொண்டிருந்த தன்னார்வலர்களோடு சேர்ந்து நானும் நாலு நாற்காலிகளை இழுத்துப் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து அமரத் தொடங்கினர். பலரும் தெரியாதவர்கள்.
“உங்களத்தான் தேடிக்கிட்டிருந்தேன். “ நிர்மலாவின் குரலில் திரும்பினேன். “மீட் டாக்டர். அஜிதா.”  அறிமுகம் செய்யப் பட்ட பெண்மணி நடுத்தர வயதினர். கருத்த மெலிந்த உடல். கோபிப்பொட்டு அணிந்த , பெரிய நெற்றி. டிப்பிக்கல் தென்னிந்தியப் பெண் என்று சொல்லிவிடலாம். ஏதோ வங்கி மேலாளர், ரயில்வேஸ் ஆபீஸர் போன்ற மாற்றல்கள் உள்ள வேலையில் இருப்பார் எனத் தோன்றியது.
“அஜிதா எனது க்ளாஸ்மேட். எம்.பி.ஏ முடிச்சப்புறம் தவறாக ஆராய்ச்சி வழியில் செல்ல முட்டள்தனமாக முடிவெடுத்த புத்திசாலி. “ அஜிதா புன்னகையுடன் ஏதோ குறுக்கிட ,நிர்மலா தொடர்ந்தார் “ ஒரு சின்ன ஹெல்ப் வேணும் அஜிதாவுக்கு சில தமிழ் சொற்றொடர்கள் புரியாது. தாமஸ் வேணும்னே தன் மொழி வளத்தைக் காட்டணும்னு பேசுவார். நீங்க அஜிதாவுக்கு எளிய தமிழ்ல விளக்கணும். ப்ளீஸ்”
வியப்புடன் நான் அஜிதாவை ஏறிட்டேன். அவர் எப்போதும்போல புன்னகை பூத்து நின்றார். “ சரி. ஆனா, வளவளன்னு நடுவுல நான்  பேசினா, இடைஞ்சலா இருக்குமே ?”  “ ஒரு ஓரமா ஒக்காந்துக்கோங்க. எப்பவாவதுதான் அவங்களுக்கு உங்க விளக்கம் தேவையிருக்கும்.”
வலது புறம் தூணுக்கு மறுபுறம் இரு நாற்காலிகளை இட்டு அமர்ந்தோம். மேடை தெளிவாகத் தெரிந்தது. முதலில் தாமஸ் ஏறினார். நிர்மலா  சிரித்தபடி ஒரு மேசைக் கடிகாரத்தை உயர்த்திக் காட்டினார். தர்மசங்கடமாகச் சிரித்த தாமஸ் முதலில் தன் உரையைத் தொடங்கினார்.
மூன்று நிமிடங்களின் பின் பக்கவாட்டில் பார்த்தேன். அஜிதா.. நம்மூர்ப் பெயர் மாதிரி இல்லை. மலையாளப் பெயர். இந்தப் பெண் நாயர், மேனன் , குறுக்கில் என்று ஒரு இரண்டாவது பெயரும் வைத்துக்கொள்ளவில்லை. கருத்த , சற்றே மெலிந்த கையில் ஒரு தங்கவளையல் கோணலாக மணிக்கட்டில் சற்றே மேலெழுந்திருந்த எலும்பில் தட்டி நின்றிருந்தது. அதே சிரிப்பு மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரேஒரு முறை என்னை நோக்கி சற்றே சரிந்து “ குரீஇ-ன்னா என்ன?” என்றார். “அது,குருவி-ங்க.” “ ஓ. தான்க்ஸ்” என்று மீண்டும் கவனிக்கத் தொடங்கினார்.
செல்வன் மேடையேறியதும் அரங்கில் , நாற்காலிகள் முன்னோக்கி இழுபடும் சப்தம் கேட்டது. பல சங்ககாலப் பாடல்களிலிருந்தும் , சிலம்பு , மணிமேகலையிலிருந்தும் அவன் வார்த்தைஜாலத்தை நிகழ்த்தினான். கேள்வியுடன் அஜிதாவைத் திரும்பிப் பார்த்தேன். இவருக்கு குரீஇ புரியாதபோது நள்ளி, என்பது பெண் நண்டு என்ற பொருள் விளங்கியிருக்குமா? அவர் மேற்கொண்டு ஒரு கேள்வி கேட்கவில்லை. முடியுமுன்னரே, எழுந்து, மெதுவான குரலில் “நன்றி” என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து, ஓரமாய் நகர்ந்து, வெளியேறினார்.
நிர்மலாவிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொள்ளவில்லை? எதாவது குடும்ப காரணங்களால் வெளியேறுகிறாராயிருக்கும் என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்தபின், ஆடிட்டோரியத்தின் செலவுக் கணக்கை முடித்துக் கொண்டிருந்தபோது நிர்மலா வந்தார்.
“ரொம்ப தாங்க்ஸ். அஜிதா போன் பண்ணினாள். அவருடைய உதவிக்கு நன்றி சொல்லிடுன்னா சொல்லிட்டேன். ”
“என்ன உதவி செஞ்சேன்னு தாங்க்ஸ் சொல்றாங்க? குரீஇ -குருவின்னேன். அவங்களுக்கு எப்படி மத்த சொற்கள் புரிஞ்சது? “
“அவளுக்குப் புரிஞ்சிருக்காது. புரியவும் முடியாது. அவ மலையாளி. தமிழெல்லாம் சுத்தமா படிக்கலை”
அவரை ஏறிட்டேன். இன்னும் பில் ரெடியாகவில்லை.
“ அஜிதா, செல்வன் , நான் எல்லாரும் எம்.பி.ஏ க்ளாஸ்மேட்.  செல்வத்தை அவ காதலிச்சா. சொல்ல சங்கடப் பட்டா. நான் போய் அவங்கிட்ட சொன்னேன். அவன் நான் அவளை காதலிக்கலை-ன்னான். ஆனா அதுக்கு அப்புறமும் நண்பனாகவே நடந்துகிட்டான்.  ஆனா இவ தீவிரமாக் காதலிச்சா. ஒரு தடவை செல்வனோட அக்காவைப் போய்ப் பாத்தோம். ’நான் உங்க குடும்பத்துல நல்ல மருமகளா இருப்பேன்’னு திறந்து பேசினா அஜிதா. அவங்களுக்கு இவ ஜாதி , மொழி தடையா இருந்தது.  கல்ச்சரும் வேறு. செல்வனோட அக்கா , வீட்டுல மேற்கொண்டு பேசத் தயங்கினாங்க. அந்த முயற்சி அப்படியே நின்னு போச்சு.
“அப்ப அஜிதா,  செல்வன் கிட்ட இது பத்தி பேசவே இல்லையா? ”
“பேசினா. அவன் அவளை ஒரு காதலியா நினைக்கலைன்னு நேராவே சொல்லிட்டான். பெங்களூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டான். இவ அவனைத் தவிர யாரையும் நினைக்கவே மறுத்துட்டா”
“அப்போ.. இப்பவும்.. ?”
“யெஸ். இதுவரை கல்யாணமே பண்ணிக்கலை. ரிசர்ச்ன்னு அமெரிக்கா போனா. திரும்பி வந்து ஒரு பெரிய மேனேஜ்மெண்ட்  கல்லூரியில நல்ல பொஸிஷன்ல இருக்கா. செல்வத்தை அவ இன்னும் மறக்கல. எப்பவெல்லாம் அவன் நிகழ்ச்சி நடக்குதோ,அவனைப் பாக்கறதுக்கு வருவா. அவன் கண்ணுல படாம முதல்லயே போயிடுவா.”
“இதென்ன கிறுக்குத்தனம்?” திகைத்தேன் நான். ‘’அவங்க வாழ்க்கையையே வீணாக்கிட்டிருக்காங்க. அவங்களை விரும்பாத ஆளுக்கு, அவனுக்கே தெரியாம இன்னும் உருகறது, பைத்தியக்காரத்தனம். சினிமாவுல, டீன் ஏஜ் வயசுல இதுமாதிரி கேணத்தனம் சாத்தியம். அதோட விட்டுறணும்.”
“எவ்வளவோ சொல்லியாச்சு.  கேட்கலை.  ஒரு விதமான மாய மகிழ்வு. போதை. ஒரு பழமொழி சொல்வங்களே?.. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட மாதிரி. இவ முடவனும் இல்லை, செல்வம் கொம்புத் தேனும் இல்லை. ஆனா இவ அப்படி நடந்துக்கிறதுக்கு காதல் என்கிற பைத்தியக்காரத்தனத்தைத் தவிர எதுவும் எனக்குத் தோணலை. விடுங்க. யார்கிட்டயும் சொல்லவேணாம்.  ஓ.கே , ஃபைனல் அமவுண்ட் ஒரு தடவை செக் பண்ணிட்டு, பேமெண்ட் கொடுத்துருங்க. “
வெளிவரும்போது எல்லாரும் சென்றுவிட்டிருக்க, எனது வண்டி மட்டும் நின்றிருந்தது. படித்த, பொறுப்பான பதவியில், சமூகத்தில் உயர்தட்டில் வசிக்கும் பண்பான அஜிதாவின் இந்த செய்கைக்குக் காரணமென்ன?. உள்ளிருந்தே அவரை மெழுகாக  உருக்கும் ஒரு தீ.  அதன் ஒளி விரும்பப் படாதது. அதன் பயன் எவருக்குமில்லை.
குறுந்தொகையில், தன்னை ஏற்காத காதலனை விட்டுவிடுமாறு சொல்லும் தோழிக்கு ஒரு தலைவி சொல்கிறாள்.
“குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கை சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுப நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆகிலும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே”
  –  குறுந்தொகை
“கூதளி மரத்தின் சிறிய இலைகள் ஆடும் பெருமலையிலுள்ள  மரத்தில் இருக்கும் தேன் கூட்டினடியே, கால் நடக்க இயலாது, இருக்கையில் இருக்கும் முடவனொருவன், உள்ளங்கையை, சிறு குடைபோல குவித்து, தேன் சொட்டைச் சேகரிப்பது போன்ற பாவனையில், கூட்டைக் கையால் சுட்டியபடி, கையில் இல்லாத தேனை நக்கிச் சுவைப்பது போல, காதலர் எனக்கு அன்பை தரமாட்டார், என்னோடு வாழமாட்டார் என்று தெரிந்திருந்தும், அவரை மீண்டும் மீண்டும் பார்த்திருப்பது ஒன்றே என் உள்ளத்துக்கு இனிதாயிருக்கிறது”
இந்த கேணத்தனத்தின் பேர் காதலா?

Friday, May 16, 2014

சொர்ண முத்துக் குமாரி

”ஸாரி சார்”
     திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே சாந்தி அல்வாக்கடைவாசலில் “நூறு அல்வா, திங்க, காக்கிலோ பார்ஸல்” என்ற குரல்களுக்கு இடையே., வாழையிலையில் வழுக்கிக் கொண்டிருந்த அல்வாத் துண்டை வாயிலிட்டு, கையில் பளபளத்த நெய்யை ’பச்சக்’ என என் முன்கைகளில் இடமாற்றிவிட்டு ,இளித்த ஆளை எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தேன்.
     “கூட்டம் தள்ளிட்டு..கேட்டியளா.வேணும்னு செய்யலே” என்றார் மேலும் சாய்ந்தவாறே. சட்டென விலகி , வெளிவந்து,  கையை ஒரு துண்டு பேப்பரால் துடைத்துக் கொண்டிருக்கையிலே அவள் கண்ணில் பட்டாள்.
     “நீங்க சொர்ண முத்துக் குமாரிதானே?” அவள் திகைத்துப் போய்த் திரும்பினாள். முகம் அறிந்ததும், வியப்பில் கையிலிருந்த பிக் ஷாப்பர் பைகளைத் ’தொப்’ என்று  கீழே வைத்துவிட்டு ”எய்யா, யாரைப் பாக்கேன்? நல்லாருக்கியாலே?” என்றாள்.கூட்டம் நெருக்க, நான் பைகளை எடுத்துக் கொள்ள,  அல்வாக்கடையின் அடுத்திருந்தும் ஒரு மனிதனும் தவறிப்போய்க்கூட நுழைந்துவிடாத சைவசித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தின் புத்தக விற்பனைக் கடை வாசலில் தள்ளி நின்றோம்.
     சொர்ணா என்னோடு பள்ளியில் படித்தவள். முதல் ராங்க் எடுப்பதிலிருந்து, பேச்சுப்போட்டி வரை, அவள்தான் அனைத்திலும் வருவாள். ஏழாம் வகுப்பிலிருந்து பெண்கள் வேறு வகுப்பில் வைக்கப்பட்டனர். அப்போதுதான் என் வகுப்பிலிருந்து அவள் பிரிந்தாள்.
     “லே, முப்பது வருசமிருக்குமா பாத்து? எங்கிட்டிருக்கே?” என்றாள் வியப்பு அடங்காமல். RmKV  என்று பெரும் கடைகளைப் பைகள் பறைசாற்றினாலும், அவள் கழுத்திலிருந்த அழுக்கேறிய மஞ்சள் கொடியும், ஓரிரு கண்ணாடி வளையல்களும், அவள் நிதி நிலையைப் பறைசாற்றின. “ அக்கா மவ முடியிறக்கம்,. அதான் ஊருக்கு வந்திருக்கேன், சொர்ணா. பம்பாயில இருக்கேன். நீ எப்படியிருக்கே?”
     “எனக்கென்னா? இருக்கேன். அவுக கடை வச்சு நசிச்சுப் போச்சி. இப்ப பெங்களூரு பக்கம் எதோ வீட்டு வளாகத்துல செக்யூரிட்டியா இருக்காக. சரி, ஒம்பொஞ்சாதி எங்க? காங்கலயே? வரலியோ?”
     “வீட்டுல இருக்கா. நான் இங்கிட்டு பாளயங்கோட்டை  வரப் போயிட்டு இப்பத்தான் வாறன். தூத்துக்குடி பஸ் இங்கிட்டு நிக்கும்லா? ” கேட்டதில் அவள் முகம் சட்டென மாறியது.
     “பாளையில   யாரு இருக்காங்க ஒனக்கு?”
     “அங்கிட்டு  ஒரு ஆளை” பேர் தவிர்த்தேன். “அத விடு.   நீ பாளைலதான இருந்தே? இப்பவும் அங்கிட்டுத்தானா? வாய்க்காப் பக்கமால்லா முந்தி ஒங்க வீடு இருந்திச்சி,என்ன?”
     “இப்பம் ஊசிகோபுரம் தாண்டி உள்ளாற இருக்கம்” என்றாள் சுரத்தில்லாமல். இவளுக்கு அவனைத் தெரிந்திருக்குமா? கேட்டுப் பார்த்துவிடுவோம் எதற்கும்.
     “ஒனக்கு குமாரைத் தெரியுமா? ஊசி கோபுரத்துப் பக்கந்தான் வீடு அவிங்களுக்கு. அவ தங்கச்சி வள்ளி-ன்னு நம்ம கிளாஸுல இருந்தா. ஒனக்கு அப்பெல்லாம் பெரிய ஃப்ரெண்டுல்லா அவ?” நினைவுபடுத்த சீண்டினேன். வள்ளியின் வனப்பான உடல் வாகிற்கு எட்டம் கிளாஸ் பையன்கள் ஜொள்ளு விட்டிருந்த காலம் அது. குமாரை நான் தேடுவதற்குக் காரணம் இருந்தது.
     அவள் குனிந்து தன் பைகளை எடுத்துக்கொண்டு விறுவிறுவென அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு நடந்தாள். சற்றே திகைப்புடன் அவளைத் தொடர்ந்தேன்.
     குமார் மும்பையில்தான் எனக்குப் பரியச்சமானான். நான் இண்டர்வியூ சென்ற காம்பெடிஷன் கம்பெனி ஒன்றில் அக்கவுண்ட்ஸில்  இருந்தான். சந்தித்தபோது, பாளையங்கோட்டை சொந்த ஊர் என்றதில் பாசம் மிகுந்து ஊர் விசயங்களைப் பேசி நண்பனாகி விட்டான். அவன் தங்கைதான் என் வகுப்பில் படித்த வள்ளிஎன்பது தெரிந்ததும் எச்சரிக்கையானேன். வள்ளிக்கு தப்புத் தப்பான தமிழில் லூர்து எழுதிய காதல் கடிதத்தை, அவளது ப்ளாஸ்டிக் புத்தகக் கூடையில் வைத்தது நான்தான் என்பதும், சில்வியா டீச்சர் அதற்கு ஆரோக்கியசாமியைப் பிரம்பால் பின்னி எடுத்ததும் அவனுக்குத் தெரியாததால், நானும் சொல்லவில்லை.
     திடீரென ஒரு நாள் அவன் போனில் அழைத்தான். “அர்ஜெண்ட்டா ஊருக்குப் போணும். அம்மாக்கு சொகமில்ல. பத்தாயிரம் தரியா? ஒரு மாசத்துல திருப்பிருவேன்” வள்ளியின் அம்மா என்ற குற்ற உணர்வால் பத்தாயிரத்தை அவனுக்குக் கொடுத்தேன். ஊருக்குப் போனவன் பல மாதங்களாகத் தொடர்பில்லை. அவன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டபின் அவன்  ஆபிஸுக்கு நேராகச் சென்றேன். ” குமார்? அவன் ராஜினாமா பண்ணிட்டுப் போயிட்டானே? மஸ்கட் போறதாச் சொன்னான்”
     பத்தாயிரம் போனதை மறந்திருந்தேன். இடையில் ஒருவன் குமார் பாளையங் கோட்டைக்குத் திரும்பியிருப்பதாகவும், அங்கு ஊசிகோபுரம் அருகே ஒரு பெரிய பங்களாவில் வசிப்பதாகவும்  சொன்னதன் அடிப்படையில் இங்கு வந்து பார்த்தால் அவன் இல்லை, அலுவலக டூர் போயிருக்கிறான் என்கிறார்கள், இந்த கேணச்சி சொர்ணாவும் சொல்லாமல் எங்கோ ஓடுகிறாள்.
     ஓட்டலில். “ரெண்டு காபி. சக்கரை போடாம ஒண்ணு” என்று ஆர்டர் கொடுத்து, வெயிட்டரை அனுப்பி விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் நிறைந்திருந்தன.
     “நீ சொல்ற குமாரை எனக்கு நல்லாத் தெரியும். ஒங்கிட்ட பணம் வாங்கியிருந்தானா?”
     “ஆமா” வியப்புடன் ஏறிட்டேன்.
     “மறந்திரு, கேட்டியா? நிறையப் பேருகிட்ட இப்படி பைசா வாங்கி ஏமாத்தியிருக்கான். கேட்டா, ’உன்னைப் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லே’ம்பான். அரசியல்வாதிங்க, லோக்கல் ரவுடின்னு அவனுக்கு பலம் , வீச்சு ஜாஸ்தி. ஒழுங்கா ஊரு போய்ச்சேரு, வெளங்கா?”
     “சொர்ணா, இதெல்லாம் உனக்குத் தெரியும்?”
     “நான் அவங்கூட சின்ன வயசுல ஓடிப்போனேன்.”
     திகைப்பில் வாயைத் திறந்தேன். அவள் தொடர்ந்தாள் “ கெட்ட நேரம், கெட்ட புத்திம்பாங்கள்லா? அதான்.  அவனோட ஒரு விடிகாலேல கிளம்பிட்டென். மும்பையில ரெண்டு மாசம் இருந்தோம். அவங்க அப்பா ஆட்கள் பிடிச்சுட்டாங்க. என்னிய எங்க வூட்ல விட்டுட்டு ‘ இவ இனிமே அவனப் பாத்தா.. கொன்னுருவோம்”ன்னாங்க. அப்பா அந்த அதிர்ச்சியிலேயே போயிட்டாரு. “ காபி வரவே நிறுத்தினாள். வெயிட்டர் போகவும் தொடர்ந்தாள்.
     “ இந்த ஊர்ல ஒருத்தி ஓடிப்போனா , பொறந்த பிள்ளைக்குக் கூடத் தெரிஞ்சுபோவும். எங்க சாதியில என்னைக் கட்ட ஆளு இதுனால கிடைக்கல., கடைசியில, மிலிடரில இருந்த மாமாக்கு ரெண்டாந்தாரமா கட்டி வச்சாங்க. அவரு ஆஸ்த்துமா, குடி… என் விதி-ன்னு வையி.”
     “குமார் என்ன சொன்னான்?”
     “தாழ்ந்த சாதிப் பொண்ணயெல்லாம் கட்டாதல’-ன்னு மிரட்டி , அவங்க ஜாதியிலேயே ஒரு பொண்ண கட்டி வச்சாங்க..அவகூட இருந்தா, மாமனார் பிசினெஸ பாத்துகிட்டு சொகமாயிருக்கலாம்னு அவனுக்கு புரிஞ்சி போச்சி . மாறிட்டான். இப்ப அவன் காரு, பங்களான்னு சொகமாயிருக்கான். “ காபியை அவசரமாகக் குடித்தாள்.
     “எப்பவாச்சும் தெருவுல அவனப் பார்ப்பேன் பாத்துக்க. யாரோ, எவளோன்னு கண்டுக்காத மாரி போவான். இவனாலதான நான் சீரழிஞ்சேன்?ன்னு ஆத்திரமா வரும். என் பீத்தப் புத்தி. என்னைத்தான் செருப்பால அடிக்கணும்.” அவள் குரல் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கினாள்.
     “என் நகை பத்து பவுனு, அவங்கிட்ட இருந்திச்சி. இதுவர திருப்பித் தரலை.கேக்கப் போனேன்.. தெருவே நார்ற மாதிரி திட்டி விரட்டினாங்க.  நான் இருக்கிற நிலமை தெரியும் அவனுக்கு. தெரியாத மாதிரி நடிக்கான். சாதி , சமூகம் எல்லாம் அவன் கண்ண மறைச்சிட்டு. நாளைக்கே நான் செத்தேன்னா, யார் பொணமோ எரியுதுன்னு கடந்து போவான் பாத்துக்க. அதான் அவன் புத்தி. நீ போயி அவமானப்பட வேண்டாம். ஒம்பணத்த மறந்திரு”
     எழுந்தாள். நான் மறுத்தும் கேளாமல், காபிக்கு பணம் செலுத்திவிட்டு, பைகளை எடுத்துக் கொண்டு நெல்லையின் நெரிசலான தெருக்களில் காணாமல் போனாள்.
     ஓட்டலின் உள்ளே உறைந்து அமர்ந்திருந்தேன். காதல் என்பது சாதி, மதங்களைக் கடந்த்து என்பதெல்லாம் ஒரு மாயையோ? எத்தனை சொர்ண முத்துக் குமாரிகள் இன்னும் இருக்கிறார்கள்?. அவர்களது வெம்மூச்சுக் காற்றில் இந்த காதல் பற்றி எரியட்டும். எவனுக்கு வேண்டும் இந்தக் காதல்?
     பல நூறுவருடங்களுக்கு முன் ஒரு சேரிப்பெண் தன்னைக் காதலித்த உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன் அலட்சியமாகத் தவிர்ப்பதைத் வெதும்பிப் போய்ச் சொல்கிறாள்.
”ஓர்ஊர் வாழ்கினும் சேரி வார்கிலார்.
சேரி வரகிலும் ஆர முயங்கார்’
ஏதிலார் சுடலை போலக்
காணக் கழிப மன்னே – நாண் அட்டு
வில்உமிண் கணையின் சென்று சேண் படவே”
-பாலை பாடிய பெருங்கடுங்கோ,  குறுந்தொகை
     ” என்னைக் காதலித்தவன் இதே ஊரில் வாழ்பவனாயிருந்தும் நான் வாழும் சேரிக்கு வரமாட்டான். இங்கு வந்தாலும், என்னைச் சேரமாட்டான். அயலார் சுடுகாட்டில் எதோ ஒரு பிணம் எரிவதைப் பார்த்துச் செல்பவருக்கு எப்படி ஒரு உணர்வும் வராதோ அதுபோல என்னைக் கண்டு செல்கிறான். பிற பெண்,  செல்வத்தில் அவன் கொண்ட, நல்லறிவு இழந்த வெட்கமற்ற காமம்,   வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு இலக்கைச் சேர்வதைப்போல அத்தீயவற்றையே சென்றடையட்டும். ”

Wednesday, May 14, 2014

ஜூலி

                   தோளில் யாரோ தட்டியது போலத் தோன்ற திரும்பிப் பார்த்தேன். சுருட்டியிருந்த பேப்பரால் தலையில் ஒரு அடி இம்முறை “ இடியட், இவ்வளவு பக்கத்துல இருந்து எத்தனை தடவை உன்னை கூப்பிடறேன்.? திரும்பியே பாக்காம அப்படி என்ன சிந்தனை?” நட்ட நடு ரோட்டில் இப்படி ஒருத்தி நிறுத்தி வைத்து, உரத்த குரலில் கேட்கிறாள் என்றால் அது ஜூலியாகத்தான் இருக்கவேண்டும். என் ஊகம் தப்பவில்லை.
                “அதென்ன மேன், ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் உன்னைக் கூப்பிடறது கூடத் தெரியாம எங்கயோ பாத்துகிட்டுப் போறே?” பஸ் ஸ்டாப்பில் இருவர் வியப்பாக அவளை ஏறிட்டனர். ஜூலியின் கேள்விகளைப் புதிதாகக் கேட்பவர்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம். அவளுடன் பத்து வருடம் பணி புரிந்த எனக்கு அல்ல.
               “ ஸ்கர்ட் போட்ட பெண், பாக்கிற மாதிரி இருந்தா திரும்பிப் பாப்போம். பெண் மாதிரி ஒன்று இருந்தா?” என்றேன். இடி இடியெனச் சிரித்த ஜூலியின் பெருவுடல் குலுங்கியது. கழுத்துக்குக் கீழே ஒரு உடல் பாகத்துக்கும் ஒரு வஞ்சனையுமில்லாமல், சீரான உருளை போலிருப்பாள் அவள், இருவது வருடங்கள் முன்பும், அன்றும் அப்படித்தான். பத்து வருடங்களுக்கு முன்பே அவளுக்கு வயது நாற்பது.
                 “நாட்டி ராஸ்கல்ஸ். எல்லாப் பயல்களும் இன்னும் இப்படித்தான் இருக்கிறீர்களா? மனோஜ் துபாய் போயிட்டான். சொன்னானா?…” பழைய ஆட்களின் கதைகளை தான் சொல்லியும், கேட்டும் பரவசப்பட்டாள் ஜூலி.
                90களில் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் தெரிந்தவர்கள் கம்ப்யூட்டருக்கு மாறுகிற நிலை வந்தபோது தடுமாறிய பழங்கால செக்ரட்டரிகளில் ஒருத்தி ஜூலி பர்னாந்து. அவளது ஃபேஸிட் டைப் மெஷினை ஒருத்தர் தொடவிடமாட்டாள். துடைத்துத் துடைத்து, தானே , சிவப்பு நிற ஸிங்கர் எண்ணெய் ட்ராப்பர் மூலம் தினமும் இரு சொட்டு எண்ணெய் விட்டு, டைப் மெஷின் ரிப்பன்களைத் தானே மாற்றி…என எல்லாம் தானே செய்து வந்தாள். கம்பெனியில் அனைத்து ஸேல்ஸ், சர்வீஸ் எஞ்சினீயர்களிடமும் உணவு வேளையில் வாயடிப்பாள். சற்றே பச்சையாகப் பேசுவாள் என்பதாலும், டைப்பிஸ்ட் இராமன் நாயரை வம்பிழுப்பதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தாலும், எப்போதும் அவள் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும்.
               “இவளு ஸ்த்ரீயல்லா கேட்டோ மோனே? யட்சியானு. காம யட்சி. பர்த்தாவு ஷிப்-பிலா. எப்போழெங்கிலே வருள்ளு. அதுகொண்டாணு காமாக்னி இங்கன தகிக்குண்ணு” என்பார் இராமன் நாயர், தினமும் அவளிடம் வாக்குவாதத்தில் தோற்றபடி.
               ”ஐ மெட் ராமன் நாயர் லாஸ்ட் இயர் சுதா. அவன் மகள் கல்யாணம்னு கொஞ்சம் கடன் கேட்டான். கொடுத்தேன். ஒரு லட்சம்”
நான் அவளை ஏறிட்டேன்.
              “ஐ நோ. அவன் திருப்பிக் கொடுக்க சான்ஸ் இல்லை. பாவம், என்ன செய்வான்? மூத்தபையனுக்கு காக்காவலிப்புல வேலை போச்சு.. ப்ரெட் வின்னர் வேற யாரு இருக்காங்க ராமனுக்கு?. பூவர் ஃபெல்லோ”
              இருவரும் பேசியபடியே உடுப்பி ரெஸ்டாரண்ட்டில் நுழைந்தோம். அந்தேரி ஸ்டேஷனுக்கு அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்ததால், நெரிசல் அதிகம். இருவருக்கும் பஸ் இன்னும் வரவில்லை.
              ஜூலியின் கணவர் கப்பல் வேலையிலிருக்கும்போதே வீட்டுக்கு அருகே ஒரு மருந்துக் கடை ஒன்று வைத்திருந்தார் ஜூலியின் தம்பி ஃபார்மஸி படித்திருந்த்தால், வீட்டோடு அந்த வியாபரம் ஜோராக நடந்து வந்தது. கணவன் கான்ஸரில் மரித்தபின், அவள் மூத்தபெண்ணுக்கு கலியாணம் செய்து கொடுத்தாள். கல்யாணத்துக்குப் போயிருந்தேன். டீயை உறிஞ்சியவாறே ‘அவள் துபாயில் இருக்கிறாள்’ என்றாள்..
             “ எங்கே இருக்கிறாய் ஜூலி? ஹோலிக்ராஸ் ஹாஸ்பிடல் பக்கம் இருந்த அதே வீடுதானா? ”
            “ஆமா.” என்றாள் திடீர்த் தயக்கத்தோடு. அவள் முகம் சற்றே மாறியதைக் கவனித்தேன். பத்து நிமிடத்தில் வெளி வந்தபோது, பயணிகள் வரிசை பஸ் நிலையத்தில் பாம்பாக நீண்டிருந்தது. பஸ் நிலையத்தில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம், பஸ்கள் ஓடாது என்று வதந்தி பரவியது. ஆளாளுக்கு ஆட்டோக்களை நிறுத்தி ரெண்டு மூன்று பேர்களாக, பல்லிகளைப் போல் ஒட்டிக்கொண்டு விரைந்துகொண்டிருந்தனர்.
           சட்டென ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். அவளை ஏற்றி விட்டு, நானும் ஏறிக்கொண்டு, நான் போகுமிடத்தைச் சொன்னேன். நடுவில் சற்றே விலகி, ஜூலியை அவள் வீட்டில் விட்டுவிடலாம்.
“ரெண்டாவது பெண் என்ன செய்கிறாள்?நிஷா?/நிக்கி..” பேர் நினைவுக்கு வர முயற்சித்தேன்.
          “நிகிதா. அவள் செத்துவிட்டாள் “ என்றாள் ஜூலி உணர்ச்சியற்று.
“எப்போ, எப்படி?” திகைத்துத் திணறினேன். நான் பத்து வருடம் முன்பு பார்க்கும்ப்போது அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
          “எனக்கு செத்துவிட்டாள். காலேஜ் படிக்கும்போது, எங்க கடைக்கு செண்ட்டு சப்ளை பண்ணின ஒரு பையனோட ஓடிப்போயிட்டா.. அவன் அபுதாபியில சொந்தமா பிஸினஸ் பண்ணறதா என்னமோ இவ கிட்ட கதை விட்டுருக்கான். இன்னும் பணம் இருந்தா பெருசா வியாபாரம் பண்ணலாம்னு சொல்லி இவள நம்ப வச்சிருக்கான். இவ வீட்டுலேர்ந்து நகை, பணம்னு ஒன்றரை லட்சத்துக்கும் மேல எடுத்துக்கிட்டுப் போயிட்டா”
           ஆட்டோ சத்தத்திலும், அவள் லேசாக அழுவது கேட்டது. டிரைவர், கண்ணாடியில் பின்னாடி நடப்பதைப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது. அவன் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர்க்க, “ஹோலிக்ராஸ் ஹாஸ்பிடல் பக்கம் போங்க” என்றேன்.
“பணம் போனது ஒரு பெரிய விஷயமில்ல மேன். நாயருக்கு ஒர் லட்சம் கொடுக்கறவ, பெண்ணுக்குக் கொடுக்க மாட்டேனா? இத்தன வருஷம் வளத்தவ பத்தி ஒரு நிமிசம் யோசிச்கலையே அந்த பொண்ணு? ஆபீஸ்ல பழகின நாயர் ‘ஜுலி, ஒரு லட்சம் வேணும்’னு கேட்ட நம்பிக்கைகூட,பெத்த பொண்ணுக்கு இல்லையே?. நான் அவ்வளவு மோசமானவளா, சொல்லு?”
         “இல்லை” என்று தலையாட்டினேன். தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது.
“எவ்வளவோ தேடினோம். அட்வர்ட்டைஸ்மெண்ட், போலீஸ், எங்க சர்ச் ஆளுங்க… அபுதாபில யார் யாரையோ தொடர்புகொண்டு மூத்த பொண்ணு தேடினா. இது வரை கிடைக்கலை” கர்ச்சீப்பை வாயில் வைத்துக்கொண்டு ஜூலி குலுங்கினாள்.
“ப்ளீஸ் ஜூலி, கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என்று சொன்னாலும், அந்தச் செயல் அபத்தமாகவே எனக்குப் பட்டது. நான் யார் அவளை அழாதே என்று சொல்ல? பிரிவின் வலி அவளுக்கல்லவா தெரியும்.?
          சட்டென டிரைவரின் தோளைத் தட்டி,” அந்த பச்சை நிற பில்டிங் வாசல்ல நிறுத்து” என்றாள்.
“ஜூலி, உன் வீட்டுலயே இறக்கி விட்டுடறேன். இங்கேருந்து நீ ஒரு கிலோமீட்டர் நடக்கணுமே?”
“பரவாயில்ல. நீ …நீ .. வீட்டுக்கு வரவேணாம்”
            அதிர்ந்துபோனேன். ஒரு கோபம் பொங்கியெழ “ உன் நன்மைக்குச் சொன்னேன். நான் ஒண்ணும் உன் வீட்டுக்கு வரணுங்கற எண்ணத்துல சொல்லலே” என்றேன்.
            “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. நீ என் பையன் மாதிரி. ஆனா, ப்ளடி சொசயிட்டி அப்படி நினைக்காது. எல்லார்கிட்டயும் வெளிப்படையா நான் பேசறதுனாலதான் எம்பொண்ணு ஓடிப்போனா-ன்னு என் காதுபடவே சொல்றாங்க. சர்ச்சுல நான் உக்கார்ற இடத்துக்கு முன்னாலயும் பின்னாலயும், கிசுகிசுன்னு பேச்சு.. வேணாம். இன்னும் நான் கேக்க விரும்பலை.”
           நான் இயந்திரம் போல இறங்க, பின்னே இறங்கிய ஜூலி, நடுங்கும் கைகளால் என் கைகளைப் பற்றினாள்.அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
         “ என் பொண்ணு என்னிக்காவது வருவாங்கிற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டிருக்கு. நம்பிக்கைகளிலிருந்து நான் விலகிக் கிட்டிருக்கேன். இந்த சமூகத்தின் பேச்சைக் கேட்டு வாழ்கிற தெம்பு சுத்தமா அழிஞ்சு போறதுக்கு முந்தி நான் ஒரு பெட்டிக்குள்ள போயிறணும். அதான் இப்போதைக்கு ஒரே ஆசை. நல்லா இரு.” திரும்பிப் பார்க்காமல், விருவிருவென நடந்தாள் ஜூலி.
           காதல், ஓடிப்போதல் என்பதை உயர்த்திக் காட்டும் பெரிய பாலிவூட் போஸ்டர்கள் சாலையோரம் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவற்றின் பின்னால், இருளில் கருநிழல் கவிந்து அடர்ந்திருந்தது,பல பெற்றோர்களின் புலம்பல்களைத் தன்னுள் அடக்கியதாக.
         “ஓடிப் போன பொண்ணு கேஸா சாப்”?” என்றான் டிரைவர் மேற்கொண்டு செல்கையில்.நான் மவுனமாயிருந்தேன். அவன் தொடர்ந்தான். “ அவள வித்திருப்பான் சார்.. லோக்கல்ல விட மாட்டனுங்க. டெல்லி பக்கம் எங்கயாச்சும் ஒரு பார்ம் ஹவுஸ், துபாய்ல அபார்ட்மெண்ட்டுன்ன்னு வச்சு ஒரு மேடம் பாத்துக்குவா. பாஸ்போர்ட்டு அவ கையில இருக்கும். இங்க மீரா ரோடு பக்கம் இப்படித்தான் ஒரு கேஸு..” அவன் சொல்லச் சொல்ல கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. தாக்கம் தனக்கு இல்லையென்றால் என்னெவெல்லாம் ஊர் பேசுகிறது?
           இதைக் கேட்பதற்குப் பதில் ஜூலி சவப்பெட்டிக்குள் போகலாம்.
பல நூறு வருடங்களுக்கு முன் ஒரு தாய், ஓடிப்போன தன் மகளைக் குறித்துப் புலம்புகிறாள்.
இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பஒந்தாது எருவின் வகு துயில் மடியும்
செழுந்தண் மனையொடு எம் இவண் ஒழியச்
செல்பெரும் காளை பொய் மருண்டு…
…………
குவளையுண்கண் என் மகளோர் அன்ன,
செய்போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு
மாயிருந்து தாழி கவிப்பத்
தாஇன்று கழிக என் கொள்ளாக் கூற்றே.”
- நற்றிணை
          ”புதிதாக ஈன்றப்பட்ட பெரிய காதுகளை உடைய எருமைக்கன்று தொழுவில் உறங்கும் செழிப்பு உடைய என் வீட்டிலிருந்து , தாமரை போன்ற கண்களுள்ள என் மகள், ஒருவன் சொன்ன பொய்களில் மயங்கி ஓடிப்போனாள். தேடிச்சென்றவர்கள் அவளுடன் திரும்பிவருவதைக் காணவிடாமல் இந்த விதி தடுக்கிறதே? யமன் என் உயிரை பறித்து, உடல் விரைவில் ஒரு தாழியில் இட்டு, புதைக்கப்படட்டும்”