Saturday, April 30, 2005

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததின் பின்னே இருக்கும் உலக வர்த்தக அரசியல் குறித்து பல விவரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.

ஏர்பஸ் கன்ஸார்டியம் இரண்டுதள அசுர விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றியானது குறித்து, ஷாம்பெய்ன் பாட்டில்களைத் திறந்த நேரத்தில் இந்த போயிங் ஆர்டர் , ஏர்பஸ் நிறுவனத்தை சற்றே ஆட வைத்துவிட்டது. வர்த்தகத்தின் மதிப்பு அப்படி..

கிளின்Tடன் அரசின் முக்கிய பொறுப்பிலிருந்த தாமஸ் பிக்கரிங், போயிங்-கில் வைஸ் ப்ரசிடென்Tட்டாக, புஷ் அரசு பொறுப்பேற்றதும், சேர்ந்தது நடந்தது 2001-ல். இதன் பின்னணி குறீத்து அமெரிக்கப் பத்திரிகைகள் "புது அரசு, தனக்கு ஆதரவாக உலக அரசியலில் பேசுவதற்காகவே, அரசியல் புள்ளியான பிக்கரிங்-கை போயிங் எடுத்திருக்கிறது" என்னுமளவிற்கு துக்கடாவாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, ஒதுக்கிவிட்டன.
இந்தப்பின்னணியில் சீனாவும், இந்தியாவும் விமானப் போக்குவரத்தில் பெருமளவில் முன்னேற்றமடையும் என்னும் எதிர்பார்ப்பில் இரு விமானக் கம்பெனிகளும் 2002-ல் இருந்தே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன. சீனாவின் விமானப் போக்குவரத்து , பலமடங்காகப் பெருகிவந்தாலும், 2008 ஒலிம்பிக் விளையாட்டிற்காக சீனா தனது விமானதளங்களை நவீனப்படுத்திப் பெரிதுபெரிதாகக் கட்டிவருகிறது. எனவே, முதல் கவனம் , இக்கம்பெனிகளுக்கு சீனாதான்.

திடீரென ஏர் இந்தியா போயிங்-கிற்கு ஆதரவாக முடிவெடுத்ததில் அண்மையில் அமெரிக்க போக்குவரத்து செக்ரட்டெரி நார்ம் மினேட்டா,இந்தியா வருகை என ஒரு பின்னணி இருக்கிறது. போயிங் , அவரது தேர்தலுக்கு பணம் கொடுத்திருந்தது எனச் சொல்லப்படுகிறது. நார்ம் மினேட்டாவின் வருகையின் பின்னும், கொண்டலீஸா ரைஸ் வந்திருந்த போதும்,போயிங் தனது விற்பனை நுட்பங்களை உச்சப்படுத்தியது.
ஏர்பஸ் சும்மாஇருக்கவில்லை எனினும், அதன் lobbying power சற்றே குறைந்திருந்தது எனவும், "இவர்கள் காலம் காலமாகப் பேசிவருகிறார்கள். எங்கே வாங்கப்போகிறார்கள்?" என்ற அலுப்பும் அலட்சியமும் அவர்கள் தரப்பில் சற்று மேலோங்கியிருந்ததெனவும், உள்நாட்டு விமானத் துறையில் கூறுகிறர்கள். இந்த நேரத்தில்.. ஏர் இந்தியா தனது முடிவை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.

ஏர் பஸ் கன்ஸார்டியம், " ஏர் இந்தியாவின் முடிவில் ஏதோ இருக்கிறது" என Central Vigilance Committee இடம் புகார் செய்திருக்கிறது.
அமெரிக்கா f16 விற்கிறது என்றால் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோரின் வேலை தக்கவைக்கப்பட்டிருக்கிறது என்னும் அமெரிக்க உள்நாட்டு அரசியல்தானே ஒழிய, சாதாரண டெக்ஸஸ் குடிமகனுக்கு, இந்தியா பாகிஸ்தான் யார் வாங்கினால் என்ன? யார் மேல் குண்டு போட்டால் என்ன?

போயிங் விமானங்கள் அமெரிக்காவின் எந்த விமானதளத்திலிருந்து இந்தியாவின் எந்தப் பன்னாட்டு விமானதளத்திற்கும் நேரடி விமானப் போக்குவரத்து நடைபெற வழிவகுக்கும் எனவும் , குறைந்த எரிபொருள் செலவாக்கும் தொழில் நுட்பமுள்ளவை எனவும் ஏர் இந்தியா தரப்பில்சொல்லப் பட்டாலும்...
உலோகப்பறவை வர்த்தகம் , உலக( அமெரிக்க) அரசியல் நிலை கொண்டே அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Thursday, April 28, 2005

மனநலமும் காவல்துறையும்

மனநலமும் காவல்துறையும்
சாம்னாவில் வந்த சிவசேனாவின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கல்லூரி மாணவ/மாணவியர் "எங்கள் ஆடைகளை நோக்குவதை விட்டுவிட்டு உருப்படியாக எதாவது செய்யுங்கள்" எனச் சொல்லப்போக, வேண்டாத விவாதங்கள் பத்திரிகைகளை நிரப்புகின்றன. "கலாச்சாரச் சீரழிவு ஆடையின் குறைப்பில் தொடங்குகிறது" என்பது ஒரு கட்சி. "ஆடை குறைப்பு செய்யாத பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள்" என்கிறது இன்னொன்று. பத்திரிகைகளுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்குக் கவலையில்லை.
அடிப்படை நோயை விட்டுவிட்டு எங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

உளவியல் அடிப்படையான தேர்வு காவல் துறைக்கு அவசியம் கொண்டுவரவேண்டும் என்பது என் எண்ணம். வன்முறைகளை தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனதில் அதன் கறைபடியாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்கு , அத்தகைய மன நிலை அடித்தளத்தில் உண்டான மனிதர்களே தேர்வு செய்யப்படவேண்டும்.

உடல் நிலை கண்காணிப்பு எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மனநிலைக் கண்காணிப்பும் சீரமைப்பும். வருடம் ஒரு முறை மருத்துவச் சோதனை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் மேநிலை காவல்துறை அதிகாரிகள் , கட்டாய மனநிலை சோதனை குறித்து ஏனோ இதுவரை பேசவில்லை. மனநிலை ஆலோசனை என்பது காவல்துறையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

இரு நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய சர்வே யில் ,"பாதுகாப்பு/உதவிதேவையென்றால் நீங்கள் காவலர்களை அணுகுவீர்களா ?" என்ற கேள்விக்குப் பல பெண்கள் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளையும் தனியாக விளையாட விடுவதற்கு இப்போது தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு தனிமனிதனின் செய்கை காவல்துறையின் ஒழுங்கையே கேள்விக்குறியாக்கியிருக்கும் பட்சத்தில், அத்துறை, தனது நடப்பினையும், காவலர்களின் ஒருங்கிணைந்த நலப்பாதுகாப்பையும் குறித்து முழுக்கவனத்துடன் ஒரு மீள்பார்வை செய்யவேண்டியது அவசியம். இது போன்ற சÁÂங்களில காவல்துறை அதிகாரிகள் பேசுகிறார்களே ஒழிய, இன்னும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யக்காணோம்.

Wednesday, April 27, 2005

வேலியே பயிரை மேய்கையில்..

வேலியே பயிரை மேய்கையில்..

இதுகாறும் மும்பை பெண்களுக்கு மிகவும் பத்திரமான இடம் என்னும் கருத்து நிலவி வந்தது. இன்றும் பெருமளவு இது உண்மைதானெனினும், அண்மையில் ஒரு கல்லூரிப் பெண், பட்டப்பகலில், ஒரு காவலனால், காவல் நிலையத்தினுள்ளேயே கற்பழிக்கப்பட்ட செய்து, மும்பையின் பெருமிதத்தைத் தகர்த்து விட்டது.

மூன்று நாட்களுக்கு மக்களின் ஆத்திரம், கொந்தளிப்பு வீதியில் உணரப்பட்டது. மெரைன்லைன்ஸ் என்னும் பகுதியில்( இச் சோகச் சம்பவம் நிகழ்ந்த இடம்), பொதுமக்கள் சாலையை மறித்து காவல்துறையினரை, அக் காமுகனைத் தங்களிடம் விடுமாறு கோஷமெழுப்பினர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக,பொருளாதார மட்டத்தில் மிக மிக உயர்ந்த தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சரியான விளக்கம் அளிக்கத் திணறியது. "மிகவும் சீரியஸான விஷயம். தக்க தண்டனை வழங்கப்படும்" என்றெல்லாம் காவல்துறை மேலிடம் அறிக்கை விட்டது. துணை முதலமைச்சர்" அப்பெண்ணின் வீட்டில் தானே சென்று மன்னிப்புக் கேட்பதாகவும், அப்பெண்ணின் புனர்வாழ்விற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் " சொன்னார்.
இதிலெல்லாம் எவரும் சமாதானமானதாகத் தெரியவில்லைல்.

தலைவலியாக, சிவசேனாவின் சங்கப் பத்திரிகையான சாம்னா " பெண்கள் படு கவர்ச்சியாக ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்" எனச் சொன்னதோடு நிற்காமல் " இதெல்லாம்தான் ஒரு மனிதனை இவ்வாறு தவறான செயல்களுக்குத் தூண்டுகின்றன" என்றும் சொல்லிவைத்து, ஒர் விவாதத்தைக் கிளப்பி வைத்திருக்கிறது.
பெண்கள் கவர்ச்சியாக ஆடைஅணிவதால் ஒரு மனிதன் , அதுவும் காவல் துறையில் இருப்பவன் கற்பழிக்கும் அளவிற்குத் தூண்டப்படுகிறான் என்பது நியாயமல்ல. காவல்துறைக்கு இச்செயல் பெரும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால்,அடிப்படையில் அவன் அத்தொழிலுக்கே அருகதையற்றவன். காவல்துறையின் செலக்ஷன் முறைகளில் மாற்றம் வேண்டும்.
காவலர்கள் பணிநேரம் மிக அதிகமாக இருப்பதால், பெரும் மனச் சோர்வு, உடல் தளர்ச்சியும் அடைகிறார்கள் என்றும், அவர்களுக்கு இம்மனச்சுமைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை அளிக்கப்படவேண்டும் என மனவியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃ இண்டியா மும்பை கூறுகிறது. மனத்தையும் உடலையும் சீராக வைத்திருக்க கட்டாய உடற்பயிற்சி, யோகா, கட்டாய வார விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
உளவியல் வல்லுநர்களின் இக்கருத்துகள் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் காவல் துறை எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும், ராணுவம், அதிகரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் உளவியல் வல்லுநர்களைப் பயன்படுத்துவதை, காவலர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையிலும் பயன்படுத்தினால், மிருகங்கள், காவல்துறையில் சேர்வதைத் தடுக்கலாம்.

எது எப்படியோ, வேலி பயிரை மேய்ந்துவிட்டது. "இது முதல்முறையல்ல - முதல்முறை வெளிவந்த செய்தி என்கிறார்கள்" பெண்ணுரிமை வாதிகள்.
ஒரு கல்லூரிப் பெண்ணின் வாழ்வே குலைந்திருப்பதும் மும்பைக் காவல்துறையின் சீருடை கறைபட்டிருப்பதும் மட்டும் இப்போது நிதர்சனம்.

Sunday, April 24, 2005

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழி மூலம் கல்வி என்பது அரசியலாகிவிட்டது. எந்த காரணத்திற்காக கல்வியியல் வல்லுநர்கள் தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வியாவது வேண்டும் என அறிவுறுத்திக்கொண்டிருக்கிறார்களோ, அது விவாதங்களில் செறிவடையாமல் நீர்த்து வருவது வேதனைக்குரியது. சரி, கல்விக்கூடங்களில்தான் தமிழ் இல்லை... வீட்டிலாவது இருக்கவேண்டாமா என்னும் கேள்விக்கு " ஆங்கிலத்தில், ஹிந்தியில் பேசச்பேசத்தான் அதில் சரளமாக புழங்க வரும்" என்னும் வாதத்தை முன்வைக்கின்றனர் பெற்றோர். அவர்களின் கவலை, உலகமயமாக்கலில், ஆங்கிலம் பேச எழுதத் திணறினால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் சற்றுதான் உண்மையிருக்கிறது.

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த சிறுவர் நாடகப் பயிற்சி முகாமிற்கு சென்று வந்த பேராசிரியர் இராமானுஜம் ,குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் பேசிவரும் தமிழ்+ஆங்கிலம் கலந்த "இரண்டும் கெட்டான்" மொழி பெரும் தடையாக இருப்பதாகச் சொன்னார். சென்னை நகரிலிருந்து வந்திருந்த குழந்தைகளைக் குறித்துக் கூறுகையில் "குழந்தைகள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயல்பாக தாய்மொழி உதவும். வேற்று மொழியில் அவர்களால் ,சொற்செறிவில் தங்கள் உணர்வுகளைத் தோய்க்க இயலுவதில்லை. அவ்வாறு வலுவான வேறுமொழிச் சொற்களைக் கையாடினாலும், அவை தனது உணர்வுகளைச் செய்தியாகச் சுட்டும் வார்த்தைக் கோர்வையாக மட்டுமே காணப்படுகின்றன. உணர்வுகளின் உயிர் அதிலில்லை. இது அக்குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் உணர்வதில்லை " என்றார். முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த தாத்தா,பாட்டிகள் இதனைப் பெரிதும் ஆமோதித்து வரவேற்றனர் என்றும், மாறாக,குழந்தைகளின் பெற்றோர் இதிலிருக்கும் சிரமங்களை முன் வைத்தனர் என்றும் சொன்னார்.அதே நேரத்தில், தான் கிராமங்களில் நடத்திய நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் , தமிழ் சொற்றடர்களையும் அதிலூடும் உணர்வுகளையும் உள்வாங்கி, தமிழில் தனக்குத் தெரிந்த அளவில் உயிரோடு வெளிப்படுத்துகின்றனர் என்றார்.

நமது குழந்தைகள் நம்மிடம் சொல்லுவதின் செய்தி மட்டும் அறிகிறோம். அவர்கள் தங்கள் சிறிய உலகத்தில் சேர்த்துவைத்திருக்கும் வார்த்தைகளின் வெளிப்பாடுகள், உடல் மொழி வெளிப்பாடுகள் முதலியனவற்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம். அவர்கள் சரியாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அறியவேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு பெரும் சுமையல்ல. குழந்தைகள் வெகு விரைவாக வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ளூம் சக்திபெற்றவர்கள் என சிறுவர் மன நல வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்மொழிச் சொற்கள் மிக விரைவாக அவர்களின் மூளைக்கும், நெஞ்சிற்கும் சென்றடைகின்றன. பிற மொழிச் சொற்கள் மூளையைச் சென்றடைந்து, வெறும் லாஜிக்-கில் பேசும்போது பிரயோகிக்கப்படுகிறது. இதுவே உயிரற்ற சொற்றொடர்கள் உமிழப்படுவதின் காரணம் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்குத் தாய்மொழியில் சரியான வார்த்தைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில்(வடக்குப்பட்டு) நான் நேராகக் கண்ட அனுபவம் இது. உலையில் இருக்கும் நெருப்பு "தீ" என்று அழைக்கப்படுவதில்லை. "அனல்" என்கின்றனர். அது"அணைக்க"ப் படுவதில்லை. "இறக்கப்" படுகிறது. மீண்டும் " ஏற்றப்" படுகிறது. அடுப்பின் இருக்கும் நெருப்பு உயிரைக் காப்பதால் "அணைக்கப்" படுவதில்லை. மீண்டும் "மூட்டவும்" படுவதில்லை. அருமையான வாழ்வியல் தத்துவங்களை தீ, நெருப்பு, அனல் போன்ற சொற்களைப் பயன்படுத்துபவர் தமிழ்ப் புலவர்களோ, அறிஞர்களோ இல்லை. கிராம மக்கள். இது ஏன் நகரக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படக் கூடாது?
தாய்மொழியில் வீட்டில் பேசுவது என்பது, குழந்தைகளின் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடும்.
தொலைக்காட்சி சீரியல்களிலிருந்து சற்றே மீண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதென்பது சிரமமானாலும், இயலாததில்லை.

Saturday, April 23, 2005

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்
--------------------------------

ரசனை என்பது ஒரு தனி மனித தளம். ஆயின் எவ்வாறு தமிழ் நாடகங்கள் தொய்வுற்றிருக்க பிற மாநிலங்களில் நாடகங்கள் வலுவடைந்திருக்கின்றன?
இக்கேள்வியை சற்றே திரித்து "மராத்தியில் எவ்வாறு நாடகம் இன்னும் வலுவாக இருக்கிறதென?" எனது நண்பரும், நாடக ரசிகருமான திரு.சி.ºÅ¡ñ அவர்களுடன் கேட்டிருந்தேன். அவர் சொன்னதில் இùவிடயங்கள் முக்கியமானதாகப் பட்டது.
1. நாடக ஆசிரியர்கள், அவர்களது படைப்புகள் பள்ளிகளிலேயே சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கல்லூரிக்கு வரும்போது மாணவர்கள் குறைந்தபட்சம் பு.லெ. தேஷ்பாண்டே குறித்து அறிந்திருக்கின்றனர். பலர் டென்Tடுல்கரின் நாடகங்கள் படித்திருக்கின்றனர் அல்லது பார்த்திருக்கின்றனர். எனவே, தற்கால நாடகம் குறித்து அவர்களால் இயல்பாகப் பேச முடிகிறது.
2. மகாராஷ்டிராவில் மராத்தி சினிமா அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. பாலிவுட் ஆசீர்வாதம்.. ஆயின், மராத்திய கலாச்சார,மொழிக்கு ஏற்ப இயல்பாக மராத்தி நாடகங்கள் அமைந்துவிட்டன. ஒரு சீரியலைவிட, பொதுஜன மராட்டியானவன், நாடகத்தை பார்க்கவும், அது குறித்துப் பேசவும் விரும்புகிறான். அவ்வாறு உரையாடப் பலர் கிடைக்கின்றனர். இது மும்பையிலிருந்து , ஓஸ்மனாபாத் மாவட்ட கிராமம் வரை பொதுவானது.
3. மராத்திய மொழி அறிவாளர்கள், எழுத்தாளர்கள், மராத்திய பத்திரிகைகள் மராட்டிய நாடகங்களைப் பற்றி பேசுகின்றனர். விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் இலக்கியத்துறையில் ஒரு செங்குத்துப் பிளவு (verticalization) காணப்படுகிறது. எழுத்தாளர்கள், கலை இலக்கியத்துறை சார்ந்தவர்கள் எத்தனைபேர் நாடகம் குறித்து பேசுகின்றனர் மக்களிடம்?
4. நாடகம் பார்ப்பதென்பது தனிமனித அளவில் மட்டுமல்லாமல், சமூக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பமாக நாடகம் பார்க்கச் செல்வதும், நண்பர்களூடன் செல்வதும் சகஜமாகப்போனதால், நாடகத்திற்கு வருமானம் அவ்வளவு பஞ்சமில்லை. புது நாடக முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இது குஜராத்தி நாடகங்களுக்கும் பொருந்தும்.

நாடக நடிகர்கள் சீரியலில் செல்வது இங்கும் உண்டு. குஜராத்தி நாடகங்களில் முக்கியமான நடிகை அபாரா மேத்தா ,பல ப்ரபலமான ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.ஆனால், அவர் குஜராத்தி நாடகமேடையை இன்னும் விட்டுவிடவில்லையே? தின்யார் கான்Tட்ட்ராக்டர், வர்ஷா உஸ்காங்கர்,ஷபானா ஆஸ்மி ,தமிழில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே... பலரைச் சொல்லலாம்.

தமிழ் மக்கள் நாடகம் பார்க்க வருவார்களானால், பொருளாதாரச் சிக்கல் இக் குழுக்களுக்குக் குறையும். போட்டியில் நல்ல நாடகங்களூம் காணக் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், மக்கள் பிற மாநிலங்களில் நாடகத்தை சமூகத்திலிருந்து விலக்கிவிடவில்லை. இந்த ஆதரவு இருக்குமானால் தமிழ்நாடகங்கள் மேலும் வளரும்.

The world will never starve for want of wonders; but only
for want of wonder. G.K.Chesterton

இந்த மேற்கோளைத் தமிழ் நாடகத்திற்குப் பொருத்தி எழுதினால்..
The Tamil world will never starve for want of Good plays ; but only
for want of play.
மக்களிடம் நல்ல நாடகத்திற்கான விருப்பம் வளரவேண்டும். Who will bell the cat and how?

Thursday, April 21, 2005

தமிழ் நாடகங்கள் (தொடர்ச்சி)

ஊக்கப்படுத்திய நண்பர்கள அனைவருக்கும் நன்றிகள். மக்களிடம் ரசனை குறைந்து விட்டது எனச்சொல்லவில்லை. எதுநாடகம்எதுதிரைக்கதையின்அரங்கச் செயலாக்கம்
என்பதில் உள்ள மனப்பிறழ்வே நமது நாடகங்களின் இந்நிலைக்குக்காரணம் எனவே சொல்லியிருக்கிறேன்.
ரசனை என்பது தனிமனித தளத்தைச் சேர்ந்தது.
பாய்ஸ் கம்பனியின் நாடக நடிகர்கள் திரையுலகில் எவ்வாறு பரிமளித்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அன்று திரையுலகு நாடக வசனங்களையும், காட்சியமைப்பையும் பெரிதும் உள்வாங்கியது. இன்று நாடகத்தில் நாம் திரையுலக சிரிப்புக் காட்சி அங்கங்களையும், வெள்ளித்திரையின் காட்சியமைப்பு தாக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். நாடகம், முப்பரிமாணத்தில் நடிக்கப்படும் சினிமா அல்ல என்பது நம் மக்கள் உணரவேண்டும். அதன் வீச்சு அலாதியானது.

கதகளிக்கும், யக்ஷகானத்திற்கும் கிடைக்கும் மரியாதையும் தனி அந்தஸ்தும் தமிழ்நாடக வடிவங்களுக்குக்கிடைப்பதில்லை. பெரும்பாலானோர்க்கு எது நமது மரபுக்கலை என்பதும் தெரியாது. மரபுக்கலைக்கும் நாடகத்ற்கும்தொடர்பு
இருப்பினும் இரண்டும் வேவேறு தளங்களைச் சேர்ந்தவை.

நாடகங்களின் தொய்விற்கு பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்குமென நான் நம்பவில்லை.நாடகக் குழுக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள, அனுமதிச்சீட்டின் விலையை நம்பியிருக்கின்றன.
சினிமா போல ஒரே நேரத்தில் பல இடங்களில் ஒரு நாடகக் குழு நடத்த முடியாது.எனவே அவற்றின் வருமானத்திற்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு எல்லை இருக்கிறது. டி வி டி கலாச்சாரம் நாடகத்தில் எடுபடாதது. நரைன் சொன்னது போல
ஒரு சீசன் முயற்சி செய்துபார்க்கலாம்.

மும்பையில் என் சி பி ஏ என்னும் அரங்கு, வருடம் தோறும் பன்னாட்டு நாடகங்களை செயலாக்கச் செய்கிறது. இதே போல ப்ருத்வி தியேட்டர் ( ப்ருத்வி ராஜ் கபூர் நினைவாக) பன்னாட்டு நாடக வாரம் கொண்டு வருகிறது மும்பையில், வருடம் தோறும். நம்நாட்டின் சிறுவர் நாடக முயற்சிகளும் இங்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலிருந்து பல குழுக்கள் இதனை நல்ல மேடையாக பயன்படுத்தியிருக்கின்றன. .இது போல ஒரு வலுவான அமைப்பு தமிழ் நாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

Tuesday, April 19, 2005

¾Á¢Æ¢ø ¿¡¼í¸û Tamil Theater

தமிழில் நாடகங்கள்

நவீன நாடங்கள் என்றாலே நம்மிடையே பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. அது என்னமோ அறிவு ஜீவிகளுக்காக ( அல்லது அவ்வாறு நடந்துகொள்பவர்களுக்காக), அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும் மக்களுக்காகவே ,அம்மக்களால் இயற்றப்படும் நாடகங்கள் என. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரிகிறது - அவை அப்படியில்லை.

நாடகமென்பது இப்போது திடீர் நகைச்சுவை வசனங்களும், மேடையில் திரைப்படக் கதைத் துணுக்குபோல ஒன்றை நடித்துக் காட்டும் காட்சியமைப்புகளுமாக மட்டுமே என நமது எண்ணம் சுருங்கிவிட்டது. இதில் திரைப்படத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று வெறுமே குற்றப்படுத்துவது மட்டும் போதாது. மக்களிடம் "எது நாடகம், எது திரைப்படம்" என்னும் பிரித்தறியும் ஆற்றல் குறைந்துவிட்டது. ஏதோ பார்த்தோம் வந்தோம் என்பது மட்டுமல்ல நாடகம்.
பார்ப்பவரின் பங்களிப்பு நாடகத்தின் இயல்பில் முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான நாடக நிகழ்வு, அவையினரின் பங்களிப்பில் பரிணமிக்கிறது என்கின்றனர் நாடக மேதைகள். தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் அவையினரின் பங்கு பார்ப்பதில் மட்டுமே. நாடகத்தை இவ்வாறு பார்க்க நினைப்பது தவறெனவே நினைக்கிறேன். இதுவே அடிப்படையில் தமிழ் நாடகத்தின் தொய்வுநிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

நவீன நாடகங்கள் நம்மை பன்னாட்டு சமுதாயத்தில் பிணைக்கின்றன. தமிழ் நாடகம் என்பதை விட தமிழில் நாடகம் என்பது மேலும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளம். தமிழில் நல்ல நாடகங்கள் இருக்கின்றன. ஆயின், நவீன நாடகத்தில், ப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்றவர்களின் நாடகப் பாங்குகள் நம்மில் வந்தடைவதை நாம் ஏன் அறியாமல் தள்ளுகிறோம்? "போப்பா. எவனுக்கு இந்த அளவு நேரமிருக்கு?" என்பது ரசனைக்குறைவு என்பதாக மட்டும் ஆகாது... ஒரு மனித வளர்ச்சியின் சீரழிவு எனவே கொள்ளவேண்டும்.

திரு. அண்ணாமலை அவர்கள்(பி.பி.சி சென்னை) தினமணியில் 25.3.2005 அன்று எழுதிய கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. இருவது வருடங்களாக ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை எவ்வாறு அவர்கள் அடைக்கலம் புகுந்த சுவிட்சர்லாந்து மக்கள் நாடகமெனும் ஊடகம் மூலம் அறிந்துகொள்கின்றனர் என்பதை விவரித்திருக்கிறார். இது ஒன்று போதும் "நாடகம் , பிற ஊடங்களைவிட எவ்வாறு மனிதன் ,மற்றொரு மனிதனைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்பதைக் காட்டுவதற்ற்கு.ஒரு interactive media ஆக இருப்பதால், நாடகம் மனிதனை மனித நேயத்தின் அருகிலேயே வைக்கிறது.
தினமணி கட்டுரையினைக்கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். எழுத்துரு தேவைப்படின்,தினமணி தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.dinamani.com/news.asp?ID=DNE20050325104518&lTitle=R%FBXVeLm&Title=Editorial+Page