Sunday, April 30, 2017

எல்லாம் மோடியாலத்தான்


சில விசயங்களை மனதால் கூட நினைத்துவிடக்கூடாது. பேய் எங்க போச்சு ?ன்னு யோசிச்சோம்னா, பிசாசு வந்து நிக்கும்-னுவாங்க. இன்னிக்கு இப்படித்தான்.
சவத்தெளவு சங்கக் காரியதரிசியைக் காணோமே? என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வாசல் மணி் அடித்தது. ’உர்’ என்ற முகத்தோடு நின்று கொண்டிருந்தார்.
“உள்ளாற வாங்கன்னு கூப்பிட்டுற மாட்டீளே? வாயி வெந்துருமோ?”
”வேலில போற ஓணான், வீட்டு வாசல்ல நிக்கறப்போ, வா-ன்னு வேட்டியிலயாவே கட்டிக்கிட முடியும்? வந்து தொலையும்”
கடுகடுத்தவாறே வந்து அமர்ந்தார் “ ஒரு காபி போடுங்க” என்றார் உரிமையாக.
“சீனி இருக்காது, பரவாயில்லயா?”
“வாயில வக்க வெளங்குமாவே? ஒண்ணுமே வேணாஞ்சாமி. தண்ணி தவிக்கி. ஒரு டம்ளர் தண்ணி கொடுங்க”
’களக் களக்” என்று குடித்து முடித்தார். “ வாட்ஸப் பாக்கவே மாட்டீயளோ? ஒரு முக்கியமான விசயம் அனுப்பியிருந்தேன்” என்றார்.
“நீரு அனுப்பினா எப்படி முக்கியமா இருக்கும்? பாக்கல. சாரி”
“என்னா வெயிலடிக்கி?” என்றார் வியர்வை வழிய. எனக்கே பாவமாக இருந்தது.மின்விசிறியைச் சுழலவிட்டேன்.
”யய்யா” என்றார் , ”இம்புட்டாச்சும், வந்தவனுக்கு ஒபகாரஞ் செய்தீரே? புண்ணியமாப் போவும்”
“ஃபேனு உமக்கில்லவே, எனக்கு வெக்கையடிக்கி.” - உண்மையைச் சொன்னேன். அவர் கடுப்பாவதை அறிந்து, பேச்சை மாற்றி
“வெயிலு இம்புட்டு அடிக்கே? இன்னும் அக்கினி நட்சத்திரம் வரல, பாத்துகிடுங்க” என்றேன்.
” எல்லாம் மோடியாலத்தான்”
‘வே, வெயிலுக்கும் அந்தாளுக்கும் என்னவே சம்பந்தம்? ”
“பொறவு? சகட்டுமேனிக்கு தொழிற்சாலை தொடங்குங்கான். பொறவு வெயிலு ஏறாம என்ன செய்யும்?”
“திருனவேலில எந்த தொழிற்சாலை இருக்கு? அங்குட்டும் இப்படி வெயிலு ஆளைத் தூக்குது”
“அத விடும். காய்கறி விலையெல்லாம் பாத்தியளா?” என்றார் அவர், பேச்சை மாற்றி.
“ ரெண்டு தக்காளி வேங்கி, ஷோ பீஸா வச்சிருக்கன். நாளைக்கு தக்காளின்னா என்னப்பா?ன்னு பிள்ளேள் கேட்டிச்சின்னா, காட்டணும் பாருங்க. காலம் கெட்டுப் போச்சி”
“இதுவும் மோடியாலத்தான்”
“சரி, விடும். வேற என்னவாச்சும் பேசுவம். என்னாத்துக்கு இப்படி வேகாத வெயிலுல வந்தீரு? ஒரு போன் அடிச்சிருக்கலாம்லா?”
“அதான் நேர்லயே கேட்டுறலாம்னு வந்தேன். வாட்ஸப் வச்சிரிக்கீயளா இல்லயா?”
“இருக்குவே. பாக்கறதில்ல. ஒருநிமிசம் “ என்றவாறே மொபைலைத் துழாவி, வாட்ஸப்பை உயிர்ப்பித்தேன். அட, மனிதரின் தம்பி அப்பாவாகியிருக்கிறார்!

“அட, அட! இது எப்ப?”

அதற்கு  அவர் சொல்வதை இருகாதாலும் கேட்டேன்.

“எல்லாம் மோடியாலத்தான்”

பழக்கங்கள் கொடியன.