Monday, July 28, 2014

எல்லாம் தெரிந்தவன்

இப்பத்தான் சாட் செய்து முடித்தேன். சற்றே ஆயாசமாக இருக்கிறது. ஒரு இனம்புரியாத கனமும் கூடவே மனதில்...
மாலை பேஸ்புக்கில் ஒரு மெஸேஜ் வந்திருந்தது. ”உங்களுடன் பேசலாமா அண்ணா?” என்று. எனது நண்பர் வட்டத்தில் இருக்கிறார் என்றாலும் அதிகப் பழக்கமில்லை. ஒரு கமெண்ட்டும் அவர் இட்டதாக நினைவில்லை. சாட்டில் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
நண்பர் சற்று அதிகம் படிக்காதவர். வெளியுலக நடவடிக்கைகள் அதிகம் தெரியாதவர்/ தெரிந்துகொள்ள முயன்று கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம்.
இன்று காலை அவரது அலுவலக நண்பர் ஒருவர் “ எபோலா ஆப்பிரிக்காவுல பரவிருச்சாம். கடல் தாண்டிச்சுதுன்னா, நாம செத்தோம்” என்றிருக்கிறார்.
இவர் ‘எபோலா-ன்னா என்ன?” என்று கேட்டிருக்கிறார். நண்பர் எகத்தாளமாகப் பார்த்து சிரித்திருக்கிறார். இவ்வளவுதான் நடந்திருக்கிறது.
மனிதர் ஆக அப்செட்டாகி, பேஸ்புக்கில் நுழைந்தவர் எபோலா குறித்த எனது குறும்பதிவைப் பார்த்திருக்கிறார். அதன் விளைவுதான் இந்த சாட்.
”எனக்கு எபோலான்னு தெரியலண்ணா. இதுக்கு அவங்க சிரிக்கறாங்க. எனக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது. ஒரு முட்டாளா இருக்கேனோ?ன்னு ஒரு உணர்வு.” இப்படித் தொடங்கியது..
”எபோலான்னா என்னன்னு தெரியலைன்னா...தெரியலை. சரி, அதுக்கு நாம முட்டாளாயிருவோமா? ” எவ்வளவோ எழுதிப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அதே கேள்வி. என்ன எதிர்பார்க்கிறார் ? என்பது எனக்குப் புரியவில்லை.
“நீங்க என்னிடம் ‘ ஐயோ பாவம் சார் நீங்க. பரவாயில்ல’ என்று சொல்வேன் என எதிர்பார்க்கிறீர்களா?” நான் யாரு ஆறுதல் சொல்வதற்கு? ” என்றும் எழுதிவிட்டேன். மீண்டும் மீண்டும் அவர் அதே பாட்டு.....
ஒரு நிகழ்வு சாட் முடிந்ததும் நினைவு வந்தது.
1993 என நினைக்கிறேன். மும்பையில் ட்ரெயினி சேல்ஸ் இஞ்சினீயரிலிருந்து நிரந்தர பதவிக்கு வைக்கப் பட்டிருந்தேன். கம்ப்யூட்டர் என்று இரண்டு மாடுகள் எங்கள் ஆபீஸில் இருந்தன. ஒன்று இராமன் நாயரிடம். அவர் அதை விட்டுவிட்டு பாஸிட் டைப்ரைட்டரில்தான் அடிப்பார். “மட மடன்னு வேலை முடிக்கணும்னா இதுதான் சரி” என்பார்.
எங்கள் பிரிவு இரண்டாம் தட்டில் இருந்தது. மூன்றாம் தட்டில் அலுவலக நிர்வாகம், அக்கவுண்ட்ஸ் செக்‌ஷன். வவுச்சர் ஒன்றில் கையெழுத்து இடுவதற்கு அக்கவுண்ட்ஸில் போயிருந்தேன். ”நீலா தேசாய் தெரியுமா? ” என்றார் காவலாளி. இல்லை என்றேன். “மூணாவது கேபின், வவுச்சர் எல்லாம் அவங்கதான் பாப்பாங்க. “
எனது ப்ரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது. அப்போதுதான் வெகு சமீபத்தில் எனக்கு க்ரெடிட் கார்டு கிடைத்திருந்தது. பெரிய recognition அது அப்போதெல்லாம். உற்சாகத்தில் தலைகால் தெரியாமல் , கம்பெனியின் செலவு ஒன்றினை அந்த கார்டில் செய்துவிட்டிருந்தேன். ’எங்கிட்ட க்ரெடிட் கார்டு இருக்குடா’ என்று காட்டும் அல்ப அலட்டல்.
செலவுக்கான ரசீதைத் தொலைத்துவிட்டேன். க்ரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்ட்டை வைத்துக்கொண்டு வவுச்சர் பாஸ் செய்யலாம் என்று யாரோ சொல்ல, இப்போது நீலா தேசாய் இடம் சரணம்.
சும்மா இருந்திருக்கலாம். தெரியாத்தனமாக “ மேடம், இந்த க்ரெடிட் கார்டை ஏன் க்ரெடிட் கார்டுங்கறாங்க?” என்றேன்.
“உனக்கு கடன் கொடுத்திருக்காங்கல்ல. அதான்”
“அப்ப ஏன் ஸ்டேட்மெண்ட்ல ‘உன் கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டிருக்கிறது.”ன்னு போடறாங்க.? க்ரெடிட்னா கணக்குல பைசா கூடறதுதானே? நான் செலவுல்ல பண்ணியிருக்கேன்?”
நீலா தேசாய் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள்.
“உன் க்ரெடிட் கணக்குல ஏறியிருக்கு. “
எனக்குப் புரியவில்லை “ அதெப்படி? கடன்னா செலவுதானே? அவங்க கடன் கொடுத்திருக்காங்க. நான் செலவு பண்ணினதுக்கு அவங்க டெபிட்ன்னுல்ல போடணும்?”
அவள் தலையில் கைவைத்துக் கொண்டாள். “ அர்ரே. உனக்கு க்ரெடிட் டெபிட்ன்னா என்னன்னு தெரியுமா?” சட்டென அவள் கத்தியதில் திடுக்கிட்டுப் போனேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். அதன் பின் அவள் பேசவில்லை. என் வவுச்சரில் கையிஎழுத்துப் போட்டுவிட்டு, ஒரு மூலையில் வைத்துவிட்டு, தன் வேலையில் உம் என்ற முகத்துடன் மும்முரமாக இறங்கினாள்.
எனக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. ஒரு அசட்டுச் சிரிப்புடன் , அவமானத்தில் முகம் சிறுக்க திரும்பினபோது, அருகில் இராமன் நாயர். இவரும் பார்த்துவிட்டாரோ? கீழே டிபார்ட்மெண்ட்டில் இதைச் சொல்லிச் சிரிப்பார்களோ?
நாயர் என்னுடன் படியில் இறங்கினார். “ இந்த கம்ப்யூட்டர் இருக்கே.. அதான் என் டேபிள்ள ..? அதுக்குள்ள என்னவெல்லாமோ சாஃப்ட்வேர் இருக்கு. எனக்கு ஒன்னும் புரியலை. ஆனா, ASDFGF :LKJHJ ன்னு என் டைப்ரட்டர் மாரியே இருக்கு. ஒரு லெட்டர் டைப் பண்ண அது போதும் இல்லையா? ”
நான் ஒன்றும் பேசாமல் இறங்கினேன். நாயர் தொடர்ந்தார்.
“ஒரு பெரிய்ய கம்ப்யூட்டரை வச்சு எப்படி லெட்டர் அடிக்கணும்னு மட்டுந்தான் எனக்குத் தெரியணும். அது போறும். உங்கிட்ட க்ரெடிட் கார்டு இருக்கு. அதுல வாங்கறதுக்கும், அதுக்கு பைசா கட்டறதுக்கும் தெரிஞ்சாப் போறுமே உனக்கு? க்ரெடிட் டெபிட் எல்லாம் அக்கவுண்ட்ஸ் காரங்களுக்கு அரிச்சுவடி. அதுல வீணா கேள்வி கேட்டா கோவம் வரத்தான் செய்யும். உங்கிட்ட அவ mass spectrometer பத்தி கேணத்தனமாக் கேட்டா நீ என்ன செய்வே?”
நான் மவுனமாயிருந்தேன். இன்னும் இரு படிகள் பாக்கியிருக்கின்றன.
நாயர் என் தோளைத் தொட்டார் “ எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு ஒன்ணுமே இல்லை. தெரிஞ்சவன் எல்லாம் உன்ன விட புத்திசாலியும் இல்லை. மேனேஜர் டே இருக்காரே. அவருக்கு டிக்டேஷன் பண்ண மட்டும்தான் தெரியும். ஒரு லெட்டர் அடிக்கச் சொல்லிப் பாரு. தவிடு தாங்கும். அதுக்காக நான் பெரியவன் என்று அர்த்தமில்ல. நீ வேற, நான் வேற நீலா வேறெ... முக்கியமா அக்கவுண்ட்ஸ் ஒரு வேற உலகம். அவங்க வேறு கிரக மக்கள்” சிரித்தார்.
டிப்பார்ட்மெண்ட் கதவு திறந்தது. மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்குகளின் குளிர் ஒளியில் அலுவலகமே எதோ வித்தியாசமாகத் தெரிந்தது.
இன்றும் அக்கவுண்ட்ஸ் தெரியாது. இன்கம்டாக்ஸ் வரிகள் புரிவதில்லை. ஏதோ இன்னும் கட்டவேண்டும் என்பார்கள். நானும் மரியாதையாக கட்டிவிட்டு செல்லான் கொண்டு வந்து சேர்ப்பேன். அதற்கும் என் அறிவியலுக்கும் எட்டாம் பொருத்தம்.
நண்பரே , நீங்கள் படிக்கிறீர்களா என்று தெரியவில்லை. இது புரியவில்லை என்றால்... வருத்தப்படாதீர்கள். நீங்கள் ஒன்றும் இழந்துவிடவில்லை. உயிர்க்கொல்லி எபோலா உங்கள் மனதில்தான் இருக்கிறது.

Wednesday, July 16, 2014

மழையும் மனிதமும்

அடைமழை நேற்று மும்பையில். ஆபீஸை விட்டுக் கிளம்பும்போது லேசாகத் தூறிக்கொண்டிருந்ததால், நிதானமாகக் கிளம்பினேன். ஜோகேஷ்வரி லிங்க் ரோடு தொடக்கத்தில் பிடித்த மழை நிற்கவேயில்லை. மனைவி வேறொரு ஆட்டோவில் அந்த வழியாக வருகிறார் என்று தெரிந்ததும், காத்திருக்கலாம் என்று, வண்டியை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அலுவலகமருகே ஓரம் கட்டினேன். எனக்கு முன்னே ஒரு I 20 மினுக் மினுக்கென விளக்கைப் போட்டபடி நின்றிருக்க, புத்திசாலித்தனமாக அதற்கும் ஓரமாக வண்டியைக் கொண்டு போனேன். அவ்வளவுதான் தெரியும்.
திடீர் என்று முன்னே வண்டி இடப்புறம் சாய, என்ன என்று தெளியுமுன்... ஒரு சாக்கடையில் இறங்கிவிட்டது. பின்புறம் வடிவேலு மாதிரி தூக்கி இருந்தது. இத்தனைக்கும் வங்கியின் வளாக வாசல் கேட் அருகே. ... ஒரு எச்சரிக்கைப் பலகை ஒன்றுமில்லாமல் எப்படித்தான் இதை தினமும் சமாளிக்கிறார்களோ என்று எரிச்சலும் கோபமுமாகத் திட்டிக்கொண்டே மழையில் முழுக்க நனைந்து வெளியே வந்தபோது, ரோட்டில் போய்க்கொண்டிருந்த பஸ், ஆட்டோவில் இருந்த பயணிகள் எட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சிலர் சாய்ந்து நின்றிருந்த வண்டியைப் பார்த்து சிரித்தபடி சென்றனர்.
ஒருவரும் உதவ வரவில்லை.
வளாகத்தினுள் இருந்த காண்ட்ராக்ட் பேருந்துகளின் ஓட்டுநர்கள்,க்ளீனர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவன் பஸ்ஸினுள் பார்த்துக் கூவினான். “ அபே,,, ரெண்டாவது வண்டி.”
அடப் பாவிகளா. என்னடா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே மற்றொரு I20 காரைக் காட்டியபடி சொன்னான்.“பாய் ஸாப், பத்து நிமிஷம் முன்னாடிதான் இந்தக் காரை வெளியே எடுத்தோம்.”
இது வழக்கமான ஒன்றா? என்றெல்லாம் யோசிக்க மழை விடவில்லை. வண்டி கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் சரிந்து கொண்டிருந்தது.
யாரும் ஏன் முனைப்பாக வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒருவன் கண்ணாடியில் தட்டினான். “ஸாப், ஐநூறு ரூபாய் தருவீங்கன்னா, நாங்களே எடுக்கறோம்”
இது ஒரு சம்பாதிப்பா? என்று திகைத்திருக்க , சரியென்றேன். வண்டி வெளியே வந்தாப் போதும் இப்போதைக்கு. மனைவியின் ஆட்டோ வேறு மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது. வண்டி சாக்கடையில் இறங்கியிருப்பது தெரிந்ததும், அவர் வேறு படபடப்பிலிருந்தார்.
ஐந்து பேராக வந்து வண்டியை, சாக்கடையிலிருந்து வெளியே தூக்க, ரிவர்ஸ் கியரில் மெல்ல எடுத்தேன். வெளி வந்ததும், பையில் துளவிப் பார்த்தேன்.
எழுபது ரூபாய், பத்து பத்தாக முழுக்க நனைந்த நோட்டுகள்.
ஐநூறு கேட்டவனிடத்தில் , எழுவது ரூபாயா?
மீண்டும் சாக்கடையில் வண்டியைத் தள்ளி விட்டுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையில் வண்டியை வளாகத்தினுள் கொண்டு போய் நிறுத்தினேன்.
பக்கத்தில் ஏ.டி.எம் இருக்கிறதா ? என்றேன். பாலத்துக்கு அடுத்த பக்கம் என்றார்கள். அதுவரை நடக்க என்னோடு வந்தவன், மரியாதையாக எனக்கு ஒரு குடையைப் பிடித்தான். முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற நினைப்பில் மழையில் முன்னே நடந்தேன்.
எதிர்பார்த்தபடியே, அந்த SBI ATM வேலை செய்யாமலிருந்தது. சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாது...
விரக்தியில் அவன் குடையை தனக்கு மட்டும் பிடித்தபடி முன்னே திரும்பி நடந்தான். உள்ளூற சிரித்தபடி மழையில் திரும்பி நடந்தேன்.
பஸ்ஸினுள் அமர்ந்திருந்தவர்கள் ஏமாற்றத்தில் “அரே...”என்றனர். டிரைவர் சீட்டில் இருந்தவன், “ பரவாயில்லை. அடுத்ததடவை..”
“விழணும்னு சொல்றீங்களா?” என்றேன்.
சிரித்தபடி “ இல்ல சார். இந்தப் பக்கமா வரும்போது, நினைவில வச்சிருந்து ஏதோ முடிஞ்சதக் கொடுங்க போதும்” என்றார்
.
“யாருங்க, சாக்கடையில இறங்கி தூக்கினது?” என்றேன்
“நான் சார்” என்றான் உள்ளிருந்து ஒருவன்.
“ என் பையில எவ்வளவு இருந்தாலும் அதை உனக்குத் தந்துடறேன். சாரி. எழுவது ரூபாய்க்கு மேல தேறாது. “ என்றேன்.
“அட பரவாயில்ல.சார்.” என்றான் சிரித்தபடி. அதிலிருந்து ஒரு பத்து ரூவாயை , கூட நடந்து வந்த பையனுக்குக் கொடுத்தான். “சூடா ஒரு சாய் குடி” என்றான். இந்த இயல்பான கொடையை வியந்து பார்த்தபடி நின்றிருந்தேன்.
” மழை பெய்யறப்போ, ரோடு ஓரமா என்னிக்கும் நிறுத்திடாதீங்க. மும்பை மழை ,எங்களையே சில நேரத்துல காவு வாங்கிரும். நடு ரோட்டுல போங்க. இல்ல, நிப்பாட்டிருங்க. தண்ணி வடிஞ்சப்புறம் போங்க” என்றான் டிரைவர்.
மனைவி , பாலத்தைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தி பதட்டமாக விரைந்து வர, நான் ஜோராக வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினேன். நிதானமாக 2ம் கியரில் ஓட்டியபடி வந்தபோது , பார்க்கும் தூரம் 50 மீட்டர் வரை குறைந்திருந்தது.
சாக்கடை அருகிலிருக்கிறது என்ற எச்சரிக்கை பலகை வைக்காதது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் குற்றமா?, முனிசிபாலிடியின் குற்றமா? விழுந்த காரில் இருப்பவர்கள் 500 ரூபாய் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்,புடுங்கலாம் என்ற நினைப்பு அந்த மனிதர்களுக்கு வந்தது தவறா? அல்லது செய்த வேலைக்கு கூலி கிடைக்காததைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருந்தது அவர்கள் பெருந்தன்மையா?
வெளியே பேய் மழை... உள்ளேயும்.

Saturday, July 12, 2014

ஆர்.சூடாமணி அவர்களின் கதைகள் - ஒரு வாசிப்பு


ஆர். சூடாமணி அவர்களின் கதைகள் மிக நுட்பமான உணர்வுகளை, இயல்பான கதையோட்டத்தில் , அவற்றின்  நுட்பம் குறையாத வகையில் வெளிக்கொணர்வன.  ஓடும் ஆறாக கதை ஒழுகிச்செல்ல, படுகையில் கூழாங்கற்களாக உணர்வுகளும், உறவுகளும் உட்பாதங்களை நெருடுவதாகப் படைப்பதில் தனி ஆற்றல் கொண்டவர் அவர்.  அவரது கதைகளை பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், மனித உணர்வுகளை, கதையின் தொடக்கக் காட்சிகளில் அறிமுகப்படுத்தி, நடுவே கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியாகவோ, சுய அலசல்களின் வழியாகவோ வெளிப்படையாக வரவைத்து , இறுதியில் அவ்வுணர்வுகளின் தாக்கத்தை கதையின் இயக்கத்தில் ஏற்றி. உணர்வுகள், உறவுகள் இவற்றின் தொடர்புகள், அலசல்கள் என்பவற்றிலேயே அவர் கதைகளை நகர்த்தி வந்தார் என்றளவில் பொதுமைப் படுத்தலாம்.

மூன்று கதைகள் அழியாச்சுடர்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்நியர்கள், பூமாலை, இணைப்பறவை.. மூன்று தலைப்புகளும் சற்றே நேரடித் தொடர்பு என்றளவில் கதையில் ஏறவில்லை. கதையைப் படித்தபின்னரே, தலைப்பின் தொடர்பை அறிந்து உணர முடியும்.  1960களில் அருமையான உத்தி அது.

அன்னியர்கள் கதையில் இரு சகோதரிகள், தங்களது பொதுமையான வளர்ப்பையும், அதன்மூலமாகவோ, அதில்லாமலோ கிடைத்த பொதுக்க்குணங்களை வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் கண்டெடுத்து அதில் திளைத்திருக்கையில், தனித்துவம் என்ற பண்பு எவ்வாறு இருவரையும் வேற்றுமைப் படுத்துகிறது என்பதை பல நிகழ்வுகளில் உணர்கிறார்கள்.  யதார்த்தம் என்பதும், உறவின் வழி, வளர்ப்பின் வழி வருகின்ற எதிர்பார்ப்புகளும் வேறுபட்டவை என்பதை சிறு அதிர்ச்சிகளில் உணர்வதை மிக அழகாக உணர்த்தும் கதை “அந்நியர்கள்”

”பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக்காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.”
இப்படி ஆழமான அழுத்தமான உறவும், புரிதலும் கொண்ட சகோதரிகள் இறுதியில் சிந்திக்கும்பொழுது,
”ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல...”
என்பது உறவுகளின் பொது அலசலை சுயத்தில் ஏற்றிச் சிந்திக்க வைத்த சூடாமணியின் அபார சாதுர்யம். 
சிறுவயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்த பெண் , திருமணமான பின் முழு அன்பினை எதிர்பார்த்து, கணவன் ஒரு அழகான பெண்ணை ரசித்ததில் வெகுண்டு, தன் ஏமாற்றங்களில் வெந்த எதிர்ப்பார்ப்புகளை மனத்தில் வைத்து வாழ்கிறாள். ஒரு கடிதம் மூலம் அந்த விஷ விதைகளை வெளியேற்றச் சொல்லும் உத்தியை லாகவமாக சூடாமணி கையாண்டிருக்கிறார். பழைய புண்களை இன்றும் சுமந்து, நிகழ்கால நிக்ழ்வுகளை அப்புண்களின் வலியின் எதிர்ப்பாக வெளிப்படுத்துவதை இடித்துரைக்கும் கடிதம் முற்றுப் பெறுவதும்,ஒரு எதிர்பார்ப்புடனே...

“அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.”

வாழ்வில் இன்பத்தை அனுபவிக்காது, பழங்கால துன்பத்தை நினைவு கூர்ந்தே வலியில் கழிப்பதை அழகாக எடுத்துக்காட்டிய வரிகள் இவை.


உறவின் வலிமை, அதனை இழக்கும் போதுதான் தெரிகிறது என்பதைக் காட்டுகிறது இணைப்பறவை என்ற கதை..   வீட்டில் பாட்டி இறந்துவிட, அவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணங்களையும், இழப்பினைத்  தாங்கும் விதத்தையும் காட்டிய கதை இது. தன் மனைவி இறந்தபோது அழாத முதியவரின் அழுத்தம் அனைவரையும் திகைக்க வைக்கிறது, கவலை கொள்ள வைக்கிறது. ஓவ்வொருவரும் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் முதியவர் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாகக் காட்டிய விதம் சூடாமணி அவர்களின் எழுத்துத் திறனுக்கு ஒரு சான்று.

வாழ்வினைப் பாட்டி எப்படி எடுத்துக் கொண்டாள் என்பதை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக இப்படிச் சொல்கிறார்

“ நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு”

ஆர். சூடாமணி அவர்களின் கதைகளின் மூலம் மனிதர்களின் உணர்வை வாசிக்கிறோம்.

நன்றி அழியாச்சுடர்கள்   http://azhiyasudargal.blogspot.in

Friday, July 04, 2014

ஃப்ளெக்ஸ் பேனர் அநாகரிகங்கள்.

”எல்லாத்தையும் விட்டுட்டு அதென்ன நம்மூர் ஃப்ளெக்ஸ் பேனர் பின்னாடி போய் ஒரு போஸ்ட்டு? என்றார் நண்பர் ஒருவர். ரொம்ப நாளாவே உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் அது. இது போன்ற அசிங்கங்கள் நம்மூரில் மட்டும்தான் நடக்கின்றனவா? என்று அறிய நான் செல்லும் சில ஊர்களில் தேடினேன். அரசியல் வாதிகளின் பிறந்தநாள் வாழ்த்துகள், நல்வரவு பேனர்கள் கர்நாடகாவில் ஆந்திராவில் தெரிந்தன.

 நம்மூரில் மட்டும்தான் இந்த பூப்புனித நீராட்டுவிழாவுக்கு எல்லாம் பேனர் வைக்கும் பழக்கம் இருக்கிறது.  அந்தச் சிறுபெண்ணின் போட்டோவை வேறு போட்டு வைப்பார்கள். அதைச் சுற்றி அவள் அண்ணன், அண்ணனின் தோழர்கள் என ஒரு படையின் போட்டோ...

வாழ்வில் உடல்ரீதியான ஒரு மாற்றமடையும், ஒரு சிறுபெண்ணின் பயங்களையும், வினோத தர்மசங்கடமான உணர்வுகளையும் சற்றும் புரிந்து கொள்ளாமல் தெரு முக்குகளில் வைக்கப் படும் இந்த வெளிப்படையான விளம்பரங்கள் அவள் மனத்தில் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் புரிந்துகொள்கிறார்களா?

தெருவில் போகிறவர்கள் தற்செயலாகப் பார்த்தால் கூட ’என்னை அதனால்தான் விசித்திரமாகப் பார்க்கிறார்களோ? ’ என்ற எண்ணம் அச்சிறுமிகளுக்கு எழும். இந்த உள உளைச்சல்களை அவள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்னும் நம் சமுதாயம் பண்பட்டு விடவில்லை. இது நிதர்சனம். இதற்காகவாவது பள்ளிகளில் செக்ஸாலஜி வகுப்புகள் நடத்தப் படவேண்டும். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு,  பேனர் ப்ரியர்களாக தெருவில் சோவாறும் தறுதலைகளுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

இந்த பேனர்கள் ஒரு சமூக வழக்கத்தின் கால மாறுபாட்டின் வெளிப்பாடல்ல. தன்னை ரசிக்கும் ஒரு நார்சிஸிஸத்தின் (Narcissism) குரூர வெளிப்பாடு. இல்லையென்றால் எதற்கு அந்த நிகழ்வுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஆண்களின் போட்டோக்கள் அதில் நிறைந்து வரவேண்டும்?

70களில் தீவிர  எம்.ஜி.ஆர் ரசிகர்கள், சிவாஜி படத்தின் போஸ்டர்களில் சாணி அடித்து தன் வெறுப்பைக் காட்டுவதும், அது திரும்பிக் கொடுக்கப் படுவதும் வழக்கமாக சிறு நகரங்களில், கிராமங்களில் இருந்தன. இவை சில சமயங்களில் பெரும் கலகமாகவே வெடித்த வரலாறுகள் உண்டு.

இந்த சாணி அடித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும்  பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவேண்டுமோ?  

Wednesday, July 02, 2014

லாரா கோம்ஸ்


குஜராத் எக்ஸ்ப்ரஸ் ப்ளாட்பார்ம் நாலுக்குப் பதிலாக இன்று ப்ளாட்பார்ம் ஆறில் வருகிறது. பயணிகளுக்கு...” இயந்திர கதியில் போரிவல்லி ரயில்வே நிலையத்தில்  ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருக்க, நான் வேகமாக படிகளில் ஏறினேன். ஆறாம் ப்ளாட்பார்ம் அடுத்ததுதான் என்றாலும், இந்த வேகம் இல்லாவிட்டால், அடுத்த லோக்கல் ரயிலில் வரும் கூட்டம் , சிதறிய நெல்லி மூட்டையைப் போல் ப்ளாட்பாரத்தில் வழிந்து, முழு படிக்கட்டையும் ஆக்ரமித்துவிடும். அதற்குள் நாம் ஏறாவிட்டால் நமது ரயில் போவதைப் பார்க்கலாம். மும்பையில் எதையெல்லாம் கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கு?

லேசான மூச்சிரைப்புடன் எனது கம்ப்பார்ட்மெண்ட் வரும் இடத்தருகே நிற்கையில். ‘எக்ஸ்க்யூஸ்மி, 3rd AC இங்கதான வரும்?” என்றது ஒரு சன்னமான குரல். “ ஆம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே தலையசைத்துவிட்டு அதன் பின் நிதானமாக யார் என்று பார்த்தேன்.

இவள்...?

“நீங்க, நீங்க லாரா... லாரா கோம்ஸ் தானே?”

அவள் கண்களை இடுக்கி என்னைப் பார்த்தாள். சற்றே புஜங்கள் பெரிதாகியிருக்கின்றன. முகம் சற்று ஊதியிருக்கிறாள். ஆனால் என்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது புரிந்தது. அறிமுகப்படுத்தியும் தெரியவில்லை. இறுதியில் அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினேன்.

முகம் மலர “ மை காட்... நீங்க..” என்றவள் வியப்பில் விரிந்த வாயைக் கைகளால் பொத்திக்கொண்டாள்.

”இப்பவும் கால் வலிக்குது” என்றேன் புன்னகைத்தபடி.

“ ஹ ஹா... Wow, so sorry, though fifteen years late" என்றாள் லாரா பெருத்த சிரிப்பினூடே.

பதினைந்து வருடம் முன்பு, நானும் என் நண்பனும், அந்தேரி ஸீப்ஸ் அருகே இருக்கும் துங்கா ரெஸ்டாரண்ட்டில் ஒரு மாலையில் நுழைந்து கொண்டிருந்தோம். சட்டென அவன் யாரையோ பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றான்.

 “ தோஸ்த், பொறுங்க”

புரியாமல் அவனருகே நின்றேன். “ என் பைக் -ஐ எடுத்துட்டு சக்காலா சிக்னல் வந்துடுங்க. அங்கயே வி.ஐ.பி ஷோரூம் பக்கம் நில்லுங்க. நான் பதினைஞ்சு நிமிசத்துல வந்துடறேன்” என்றவன் நான் மேற்கொண்டு எதுவும் கேட்குமுன், சாவியை கையில் திணித்துவிட்டு சாலையின் மறுபுறம் கடந்து ஸாங்கி ஆக்ஸிஜன் கம்பெனி வளாகத்துள் நுழைந்தான்.
விழித்தபடி நின்றிருந்த நான் பைக்-ஐ கிளப்பும்போதுதான், அந்தப் பெண் அவனருகே வந்து நின்றாள். இருவரும் வளாகத்தின் உட்புறம்  மரங்கள் அடர்ந்த கார் பார்க்கிங் பகுதியில் சென்று மறைந்தார்கள்.

லாரா என்பது அவள் பெயர் என்று அவன் சொல்லியிருக்கிறான். அவள் மும்பையின் வஸாய் என்ற புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எங்கள் அலுவலகத்தை அடுத்த ஒரு நடுத்தர அளவிலான மருந்து உற்பத்திக் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் என்ற அளவில் எனக்குத் தெரியும். ஒரு முறை அலோ என்றிருக்கிறோம். அவ்வளவுதான்.
எனது நண்பன் வேறு மதத்தைச் சார்ந்தவன். உத்தரப் பிரதேசத்தில் அவனது பெற்றோர், விரிவான , வசதியான குடும்பம். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து இரு வருடங்களாயிற்று .இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கிறது  என்றான் ஒரு முறை
பைக்-கில் சக்காலா சிக்னல் சேரும்போது, போலீஸ் “தாம்பா ( நில்லு)” என்ற போதுதான் நினைவு வந்தது. ஹெல்மெட் போடவில்லை. நாசமாப் போனவன் ஹெல்மெட் தர மறந்திருக்கிறான்.

போலீஸ் “இன்ஸ்யூரன்ஸ் குட்டே(எங்கே)?” என்றபோது இன்னும் விழித்தேன். அனைத்து பேப்பர்களும் அவனது பையில். திருட்டு பைக் என்று பிடித்து வைத்தார் அவர். நண்பனின் வண்டி என்று விளக்கியும், கெஞ்சியும் பார்த்துவிட்டேன். மசிவதாகத் தெரியவில்லை.
அப்போதெல்லாம் செல்போன் பரவலாகக் கிடையாது. அவனை எப்படி அழைப்பது? அங்கேயே வண்டியோடு கால் கடுக்க நின்றிருந்தேன். ஒரு மணி நேரமானது, இரண்டு மணி நேரமானது. அவனைக் காணவில்லை.

போலீஸ்காரர் முகத்தில் இப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அங்கிருந்து மெல்ல அவரோடு வண்டியை உருட்டியபடியே காவல் நிலையத்துக்குச் சென்றேன். கால் விண் விண் எனத் தெறித்தது. பசியும் கோபமும் சேர்ந்து சற்றே அழுகையும் வந்தது.

இருட்டிய பின்  நண்பனும் அவனோடு அந்தப்பெண் லாராவும் நுழைந்தனர். “சார் இது என் வண்டி. இது என் நண்பன்” என்று அவன் விளக்கி, படிவங்களைக் காட்டி நூறு ரூபாய் கொடுத்தபின்னே என்னை விட்டார்கள்.

‘சாரி, சாரி” என்றான் பலமுறை. கோபத்தில் ஒன்றும் பேசாதிருந்தேன்.

அவள் “ என் சார்பிலும் ஸாரி”என்றாள். அருகே ஒரு ஓட்டலில் அமர்ந்தோம்

“லெட் மி எக்ஸ்ப்ளெய்ன். லாராவுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். அவள் வீட்டில் காதலைச் சொல்லிவிட்டாள். அண்ணன்கள் மதம் மாறி கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. வேற வழியில்லை. நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ்..”

வியப்புடனும் ஆயாசத்துடனும் அவனை ஏறிட்டேன். “ நோ வொர்ரிஸ். நான் எங்க அண்ணனை சரிக்கட்டி வைச்சிருக்கேன். அவர் பாத்துக்குவார். “

இரு வார விடுப்பின் பின் ஆபீஸில் சேர்ந்த நண்பன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான். ‘துபாய்ல வேலை கிடைச்சிருச்சு, லாராவுக்கு கொஞ்ச நாளாவும்” என்றான். அன்று போன அவனும், லாராவும்  மெல்ல மெல்ல நினைவிலிருந்தும் தேய்ந்து போனார்கள்.

ரயில் விரார் தாண்டி , பெரிய பாலத்தில் தடங் தடங் என்று சென்றுகொண்டிருக்க, சன்னலோரம் அமர்ந்திருந்த லாரா வெளியே பார்த்தபடி இருந்தாள். அவள் அருகே  இருக்கை காலியாயிருக்க, ’அமரலாமா?’ என்று கேட்டு அமர்ந்தேன்.

“ அவன் எங்கே? “ என்றேன்.

”மும்பையிலதான். எதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி பேரு” என்றாள். விசித்திரமாகப் பார்த்தேன்.

என்னை ஏறிட்டாள் “ நாங்க  பிரிஞ்சுட்டோம். டைவர்ஸ் இன்னும் வாங்கலை”
திகைத்துப்போனேன். எத்தனை சிரமப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பொசுக்கென்று ‘ பிரிஞ்சுட்டோம் ’ என்றால் ?

லாரா இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

“துபாய்ல அவன் போனப்புறம் நான் அங்க போய்ச் சேர்றதுக்கு  ஒரு வருசம் ஆயிருச்சு. கல்யாணம் ஆனவுடனேயே என்னை வீட்டுல துரத்திட்டாங்க. ஒரு ப்ரெண்டு வீட்டுல ஒரு வாரம், அப்புறம் லேடீஸ் ஹாஸ்டல்...னு ஒரு பாதுகாப்பில்லாத  வாழ்க்கை.ரொம்பக் கஷ்டப்பட்ட காலம் அது.
 அவங்க விட்டுக்காரங்க வந்து மிரட்டினாங்க. விவாகரத்து பண்ணிரு.இல்லேன்னா கொன்னுருவோம்னாங்க. எல்லாம் தாண்டி ஒரு வருசம் கழிச்சு அவன்கூடப் போயி சேர்ந்துட்டேன்.
முதல்ல ரெண்டு வருசம் நல்லாத்தான் இருந்தான். எங்கயோ மதப் ப்ரச்சாரம் கேட்டவன், மெல்ல மெல்ல அதுல ரொம்ப ஈடுபாடு கொள்ள ஆரம்பிச்சான். முதல்ல நானும் அத ரொம்பக் கண்டுக்கலை. எனக்கு மத ஈடுபாடு எல்லாம் கிடையாது. அது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம்னு விட்டுட்டேன்.அவன்  கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வந்ததை கவலையோடு பாத்துட்டிருந்தேன். ஒரு நாள் “ நான் தப்புப் பண்ணிட்டேன். உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டது என் மதக் கொள்கைக்கு மீறினது.” ன்னான். திடுக்கிட்டுப்போயிட்டேன். அதுக்குப் பரிகாரமா என்னை மதம் மாறச் சொன்னான். முடியாது ன்னுட்டேன். ஒருவரின் மத நம்பிக்கைக்கும் , காதலுக்கும், குடும்பத்துக்கும்  சம்பந்தமே இல்லைன்னு என் எண்ணம். கொஞ்சம் கொஞ்சமா சண்டை வர ஆரம்பிச்சது. அடிக்க ஆரம்பிச்சாரு.

பொறுத்து பாத்து, ஒரு நாள் கிளம்பி மும்பை வந்துட்டேன். வீட்டுல ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க. திரும்ப லேடீஸ் ஹாஸ்டல். வேலை தேடல். இப்ப ஒரு மருந்து கம்பெனியில தர நிர்ணயத்துறையில இருக்கேன். கம்பெனி ஆடிட்க்குத்தான் வாபி போயிட்டிருக்கேன்.”

லாரா சற்றே நிறுத்தினாள். சூரியன் கீழ்வானில் செஞ்சாந்தைத் தீற்றியிருந்தது. ஒளிதான் எவ்வளவு அழகு? அனைத்து இருட்டையும் அழித்து விடுகிறது, ஒரு கணத்தில். 

லாரா தொடர்ந்தாள்.

”அப்புறம் அவனும் மும்பைக்கு வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். இப்ப அவங்க மத்த்துலயே ஒரு பெண்ணைக் கட்டி வைச்சிருக்காங்க. நல்ல சம்பளம், ஊர்ல சொத்து, பணக்கார பொண்டாட்டி. அவன் உண்டு, அவனை வாழ வைச்ச மதம் உண்டுன்னு இப்ப அவனும் நிம்மதியா இருக்கான்.

நானும் இப்ப நிம்மதியா இருக்கேன் சுதாகர். யோசிச்சுப் பாத்த்துல , எனக்குமே அது காதல்தானான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. மெல்ல மெல்ல என் அன்பும் அவன்மேல குறைஞ்சுகிட்டே வந்துருச்சு. இப்ப ஒண்ணுமே இல்லை. அவனும், இந்த ரயில்ல வர்ற ஏதோ ஒரு சக பயணிபோல,முகமறியாத ஒருவன் இப்ப, அவ்வளவுதான்.”

இருவரும் வெளியே பார்த்தபடி இருந்தோம். காலை சூரியனை மேகம் சூழ , கம்பார்ட்மெண்ட் சற்றே இருண்டது.

சூரியன் என்னதான் ஒளி பொருந்தியதாக இருந்தாலும், மேகங்கள் பூமிக்கு அதனை மறைத்துவிடுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தன்னைக் காதலித்தவன், காதலை விடுத்து, தீவிரமாக வேறு ஒன்றில் ஈடுபடுவது போன்று வாழ்ந்திருப்பதைக் கண்டு வெதும்பி, தன் காதலை அழித்தவாறே ஒரு பெண்  சொல்கிறாள்.

”மலை இடைஇட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊர்ரும் அல்லர்,
கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்.
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓரீஇ ஒழுகிய என்னைக்குப்
பரியிலமன் யான் பண்டொரு காலே
       - நெடும்பல்லியத்தனார்,  குறுந்தொகை

”என்னைச் சேர்ந்தவன் மலைகள் சேர்ந்த மலைநாடனும் அல்லன். மரங்கள் அடர்ந்து செழித்த காடுவளமுடைய ஊரனும் அல்லன். இந்த ஊரிலேயே, என்னைக் கண்ணில் காணும் வழியிருந்தும், கடவுள் சிந்தனை பெருகிய ஒருவன் எவ்வாறு பிறரைக் காணாது தனது வழிபாட்டில் குறியாயிருப்பது போல, என்னை அறியாது போல பாசாங்கு செய்து வருகின்றான். அவன் மேல் நான் கொண்டிருந்த காதலும் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது”