Saturday, December 29, 2012

டெல்லி நிகழ்வு - சில சிந்தனைகள்


டெல்லியில் நடந்த கோரமான வன்புணர்வு ஏதோ டெல்லியில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த தீங்காக எண்ணிவிடமுடியாது. இது சமுதாயப்பிரச்சனை. பண்பாட்டின் இழை  சமூகத்தில் வெட்டப்பட்டிருக்கிறது. யார் வெட்டினார் என்பதல்ல. எதனால் வெட்டுப்பட்டது என்பது அறியப்படவேண்டும். சிலர், பெருகிவரும் பாலிவுட் கலாச்சாரம், வெளிநாட்டு மோகம், மேற்கத்திய நாகரிகப் பாதிப்பு எனக் காரணங்கள் கூறுகிறார்கள். அது முழுமையான தீர்வாகப் படவில்லை. ஒரு முகம் மட்டுமே.

பண்பாடு என்பது வீட்டிலிருந்து , தெருவில் நடந்து மீண்டும் வீட்டிற்கு வரும்வரையான நடத்தையும் அடங்கியது. ஏதோ  விருந்தினர் முன்பு காட்டும் மரியாதையும், அடக்கமும் என்ற அளவிலே நாகரிகம் காட்டப்படுமானால், அது போலி பொய் வேஷமாகிறது. ஸ்டீபன் கோவே கூறுகிறார் “சோதனைக் காலங்களில் மன உறுதியை விடாமல் , தான் வாழும் தத்துவங்களில் பிடிப்பு உள்ளவனாக நடத்தல் , மிக முக்கியமானது”. இதுதான் அடிப்படைக் கல்வி என நான் நினைக்கிறேன்.
ஊடகங்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடக் கட்டுமானங்களும் வளர்க்கப்பட்டுவிடலாம். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறும் புள்ளி விவரங்களும் நாம் பெருமிதப்படும் அளவுக்குப் பெருகிவிடலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் மனிதத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய்விடும். மிகச் சிறந்த அறிவாளிகளும், பெரும் செல்வம் பொங்கி வரும் நகரங்களும், சிறந்த பள்ளிகளும், கல்லூரிகளும், தூய வீதிகளும், சுகாதாரமான உள்கட்டமைப்பும் இருந்தும் , மனிதன் மனிதத்தனத்தோடு வாழாவிட்டால் என்ன பயனாய் அவை இருக்கும்?

அடிப்படையில் நமது கல்விமுறையிலும், சமுதாயத் தட்டமைப்பிலும் பிறழ்வுகள் இருக்கின்றன. மும்பையில் பார்க்கிறேன். ஆட்டோ டிரைவரும் ரோட்டில் துப்புகிறான். ஆடி காரில் பயணிப்பவனும் ரோட்டில் துப்புகிறான். இது செல்வம் , வாழ்க்கைத் தரம் சார்ந்ததன்று. அவன் உள்வாங்கிய பண்பாடு, சமூகப் பொறுப்புணர்வு, தன்னாளுமை முதலியன , அவன் மனிதனாக நடக்கிறானா? என்பதைத் தீர்மானிக்கின்றன. பள்ளிகளை மட்டும் தனித்து  இதனை வளர்ப்பதில் தோல்வியடைந்ததாகக் கொண்டுவிட முடியாது. வீட்டில் பெற்றோருக்கு முதலில் பண்பாடு குறித்த பொறுப்புணர்வும் சுய அறிதலும் தேவை. குழந்தைகளிடம் அவர்கள் அறியும் வகையில் நாகரிகம் குறித்தான பகிர்தல்கள், உரையாடல்களைப் பெற்றோர் முன்னின்று நடத்த வேண்டும். முக்கியமாக, சோதனைக்காலங்களில் மன உறுதியுடன் , பண்பாட்டுக் கொள்கைகளில் பிடித்துநிற்க வலுவூட்டவேண்டும்.

டெல்லியில் நடந்தது , பிற இடங்களில் நடக்காமல் இருக்க வேண்டுமானால்,  நமது பண்பாடு மரபுகளை மீட்கொண்டு வர நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.  “ தெரியற மாதிரி ட்ரெஸ் போடாதே, சும்மா கண்டவங்க கூட சுத்தாதே” எனக் கட்டுப்பெட்டித் தனமாக இருப்பதுதான்  மரபு எனத் தவறாகப் புரிந்து கொண்டு அறிவுறை செய்யப்போனால், இளைய தலைமுறையால்  நாம் தவறாகக் கணிக்கப்படுவோம். நமது அக்கறைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்.
எது வேண்டுமென நாம் சிந்திக்கவேண்டியது மட்டுமல்ல, செயலாற்றவும் அவசியமன சூழலில் இருக்கிறோம்.

Thursday, September 13, 2012

எனது முதல் தமிழ் புனைகதை 6174 வெளியீடு

  எனது முதல் தமிழ் புனைகதை 6174 செபடம்பர் 3 2012 ன்று வெளியாயிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள், திரு. பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு. இரா.முருகன் அவர்களின் வாழ்த்துக்களுடனும் நல்லாசிகளுடனும் கதை வெளி 
வந்திருக்கிறது .உங்கள் ஆதரவை நாடுகிறேன். கதை குறித்தான உங்களது கருத்துக்களைத் தயங்காமல் இப்பக்கத்தில் தெரிவியுங்கள்.

http://www.facebook.com/6174thenovel

புத்தகம், ஆன் லைனில்  கீழ்க்கண்ட வலைத் தளங்களிலும் கடையிலும் 


பெற்றுக்கொள்ளலாம்
 .

http://discoverybookpalace.com/products.php?product=6174

1. Discovery book palace, No. 6, Munusamy road, First floor, Mahaveer Complex,West k.k. nagar, 
Chennai - 78
Contact person : Mr. Vediyappan
Contact number : 9940446650
2.   http://udumalai.com/?prd=6174&page=products&id=11731

3.The New Booklands,52, C North Usman Road, T. Nagar, 
Chennai - 600 017
Contact person : Srinivasan
Contact number : 9840227776

செ குவாரா (Che Guevara) எழுதி முடித்ததும் இதனைக் குறித்து அறிவிக்கலாம் என இருந்தேன். அது முடியப் பல மாதங்களாகும் என்ற நிலையில் 6174-ன் வெளியீடு இத்தருணத்தில் வர வேண்டியதாயிற்று. 
நண்பர்களின் ஆதரவையும், படித்தபின் மேலான கருத்துக்களையும் நாடுகிறேன். 

Saturday, April 28, 2012

முழுச் சுதந்திரம் - ஒரு முரண் பார்வை

சுதந்திரம் என்பதற்கு “ இரு எல்லைகளையும் பொருட்படுத்தாதிருப்பது சுதந்திரம்” (Liberum adversarium indifferentiae) என்றொரு விளக்கம் உண்டு. இது ஸ்காப்பன்ஹோயர் காலத்தது என்று நினைக்கிறேன். விருப்பு வெறுப்பு என்ற இரு எல்லைக்ளைச் சேராது, ஒன்றைக் குறித்து கவனிப்பதைத் தவிர்ப்பது சுதந்திரம் என்றால் , சமூகத்தின் பல சவால்களைச் சந்திக்கத் தயங்கி ஒதுங்கி இருப்பது சுதந்திரம் என்று அபத்தமான பொருள் புரிந்து கொள்ளமுடியும். தனிமனித சுதந்திரம் என்பது ஒதுங்கி இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற பொருள் வருமானால் சுதந்திரம் குறித்தான சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒரு ‘தளை’ என்று சொல்லிவிடமுடியும். இது அதனிலும் அபத்தம்.


பெண்ணியம் என்பதனை எடுத்துக்கொள்வோம். அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுக்காமல், பெண்ணியம் என்பது முழுச்சுதந்திரம் என்று பொருள் கொண்டால். எதிலிருந்து சுதந்திரம் என்பதை வரையறுக்கவேண்டும். மேற்கூறியபடி ஒதுங்கியிருத்தல் எனக்கொண்டால், சமூகத்தில் பெண்ணியம் என்பதன் பொருள் புரிவதென்பது இயலாது. இது முரண்.

பெண்ணியம் என்பது பெண்களின் இருத்தல் குறித்தான உணர்வு எனக் கொள்வது ஒரு எல்லை. பெண்ணியம் என்பது ஆண்களை வெறுத்தல் எனக்கொள்வது மற்றொரு எல்லை. இப்படிப் பல எல்லைகள் கொண்ட வரையறுத்தல், பெண்ணியம் என்பதன் கோட்பாட்டை ஒரு வட்டத்தில் அடைக்கிறது. வட்டத்தில் அடைபடுதல் சுதந்திரமன்று என்பது மற்றொரு வரையறை. இப்படிப்போனால் ’வரையறுத்தல் இல்லாதது சுதந்திரம்’ என்பதே ஒரு வரையறுத்தல் ஆவதால், அது சுதந்திரத்தின் வரையறுத்தல் என்ற கோட்பாடே முரணாகிறது. இது வரையிலி (infinity)ஐ வரையறுத்தல் போன்றது.

ஆக, ’எது பெண்ணியம்?’ என்ற கேள்வி சுதந்திரம் என்ற பதத்தை ஒரு singularity போலக் கவனமாகத் தாண்டவேண்டும். வரையறுத்தல் என்பது பலருக்கும் அவரவர் கணிப்பின்படி மாறுவதால், விவாதத்திற்குரியதாகிற்து. இவ்வாறு விவாதிப்பது என்பதே சுதந்திரம் என்று பொருள்கொண்டால், கருத்துப் பரிமாற்றங்கள் ஏதுவாகிறது. இலகுவாகிறது. ஆயினும், அவ்விவாதங்கள் பெண்ணியத்தை வரையறுப்பதில்லை. அதனை விரும்பலாம், வெறுக்கலாம். உதாசீனப்படுத்துவது என்பது தனிமனித சாய்ஸ் என்றாலும், அச்சுதந்திரம் ஆரோக்கியமானதன்று.

வரையறைகளுக்குள் நின்று , எல்லையற்றதைக் காண்பதே ஒரு நிஜமான அனுபவமாக இருக்கமுடியும். எல்லைகளற்ற வெளியில் முதலிலிருந்தே  நின்று, ’எல்லையற்றதை ரசிக்கிறேன்’ என்று சொலவது இயலாது. ஏனெனில், எல்லை என்பதை உணர்ந்தவனாலே மட்டுமே, எல்லையற்றதை வேறுபடுத்திக் காணவும் , உணரவும் இயலும்.

இதைத்தான் ஒரு சுஃபி கவிஞன் சொன்னான்.

“ எல்லைகளற்ற வெட்டவெளியில், சட்டங்களாலான கதவைத் திறந்து வைத்து உனக்காகக் காத்திருக்கிறேன்”.

இதனை சுதந்திரமாக முழுமையாக அனுபவியுங்கள்.

Sunday, February 12, 2012

செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3



மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.