Saturday, April 09, 2011

அண்ணா ஹசாரே-ஏன் திடீரென பரபரப்பு?

உலகக்கோப்பை வெற்றிக்கூச்சலின் நடுவே எப்படி ஒரு எளிய மனிதனின் குரல் உரக்கக் கேட்கிறது என்பதே பலருக்கு வியப்பாக இருக்கிறது. அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் பரவலாகக் கேட்டபெயராக இருக்கலாம். பிற மாநிலங்களில் வெகு அரிது.

அவர் உண்ணா விரதத்தைத் தொடங்கியதும் சரியான நேரமில்லை தொலைக்காட்சி சேனல்கள் உலகக்கோப்பை முடிந்ததும் , ஐ.பி.எல், அஸ்ஸாம், தமிழ்நாடு தேர்தல்கள் என அங்கங்கே சென்றுவிட்ட நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதம் மேற்கொள்வ்து பெரிதாகக் காட்டப்பட காமிராக்களுக்குப் பஞ்சம்.அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் சத்தியாகிரகம் வென்றிருக்கிறது. சரத் பவார் கீழிறங்கினார் முதலில். பின் ஒரு நாள் முரண்டு பிடித்து, டெல்லி பணிந்தது. லோக் பல் தீர்மானம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு செவி சாய்க்காமல், அண்ணா அடம்பிடித்தது வீணாகவில்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பங்களூர், ஹைதராபாத்... எல்லா நகரங்களும் அன்ணாவுக்கு ஆதரவாக திரண்டபோதும், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய தளங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என இளைஞர்களும், முதியவர்களும் அசத்திவிட்டார்கள். நான் ஆவாஸ்.ஒர்க் -கில் எனது ஆதரவைப் பதிவு செய்த போது, ஒவ்வொரு நொடியிலும் பெயர்கள் வந்தவண்ணமிருந்தது கண்டு வியந்துபோனேன். நான் பதிவு செய்த ஒரு நிமிடத்தில் என் மகனும் பதிவு செய்தான். அவனது நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் செய்தி விசிறியடிக்கப்பட்டது. அண்ணா பேசியபோது “ இது இளைஞர்களின் வெற்றி” எனச் சென்னது சும்மாயில்லை.
ஏன் அண்ணா? இது நமது விரக்தியின், வெகுகாலமாக ஏமாற்றப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு. நாம் பல வருடங்களாகவே தூய்மையான ஒரு தலைவரை எதிர்பாத்து ஏமாந்து போயிருக்கிறோம். மன் மோகன் சிங் என்னும் மனிதருக்காவே ஓட்டுகள் விழுந்தனவேயன்றி காங்கிரஸ் என்னும் கட்சிக்கல்ல என்பது அக்கட்சிக்காரகளுக்கு நன்றாகவே தெரியும். அவரும் 2ஜி யில் வழுக்கிப் பேசியதும், வெறுப்படைந்து போயிருக்கின்றனர் இந்தியர்கள்.

ஒரே ஒரு குரல் நல்லாட்சிக்காக ஒலித்ததும், அக்குரலின் சொந்தக்காரனின் தூய்மை பற்றிக்கேள்விப்ப்பட்டதும், பல வருட ஏமாற்றத்தின் வெளிப்பாடு, அண்ணாவுக்கு ஆதரவாகப் பொங்கியது. சுய ஒழுக்கமும், உண்மையிலஉறுதியும், தூய்மைக்கேட்டை அகற்றத் தான் முன்னின்று போர் நடத்தும் தைரியமும் இருக்கும் ஒருவனை இன்னாடு பல ஆண்டுகளாக ஏங்கி எதிர்பார்த்து நின்றிருக்கிறது. அண்ணாவின் குரல் ஒலித்ததும், அவரை நோக்கித் தங்கள் எதிர்பார்ப்பைக் கொட்டிவிட்டார்கள் மக்கள். அதுவும் காந்திய வழியில் அவர் காட்டிய அமைதியான எதிர்ப்பு, மீண்டும் நமது கலாச்சாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.

இன்னொரு எகிப்து, துனீசியாவை தன் மண்ணில் இந்திய அரசு விரும்பவில்லை. லஞ்சத்துக்கு எதிரான இந்த இயக்கம் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்துவிடும் என்பதை அரசு அறிந்ததும், பணிந்து போனது. இதுபோல இயக்கங்கள் மேலும் வந்தால்தான் நமக்கு வாழ்வு.
தைரியமாக அண்ணாவுக்கு ஆதரவைத் தெரிவியுங்கள். நாளை இன்னொரு தீமையை எதிர்த்து மற்றொரு இயக்கம் வரலாம். அதற்கும் துணை நிற்கத் துணிவு நம்மிடத்தே வேண்டும்.