Saturday, August 27, 2005

காக்கைச்சிறகினிலே

அண்மையில் , அழகுசாதன மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் மூத்த அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்."போன வருடத்திலிருந்து வருவாய் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக மூன்றாவது, நாலாவது குவாட்டர் மாதங்களில் நல்ல விற்பனை"என மகிழ்ச்சியாகச் சொன்னவர், ஒரு வார்த்தையில் கடுப்பாக்கினார்.
" தெரியுமோ, புதிய சிகப்பழகு சாதனங்களை இந்த முறை நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்தது தென்ன்னகத்தில். அதில்தான் வருமானம் கூடியது. முக்கியமாக கறுப்பாக மக்கள் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவில் தான் வியாபாரம் அதிகம்.." கடுப்பானேன் நான்."கறுப்பு சிகப்பு எல்லாம் ஜாதி பார்ப்பது போல. இதில் என்ன இருக்கிறது?வேறு காரணங்கள் இருக்கலாம். சும்மா சொல்லாதீர்கள்."
" வியாபாரமே நிறத்தில்தான் சார்" என்றார்.
"எத்தனை முறை நீங்கள் சிகப்பாக இல்லையா? எனக்கேட்கிறோமோ, அத்தனைக்கு மக்கள் எங்கள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சிகப்பழககு கிரீம்,பவுடர் வாங்குகிறார்கள் "
ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், மேலும் மறுத்தேன். " இது அநியாயம். மக்களுக்கு இல்லாத ஒரு தாழ்வு மனப்பாங்கை வளர்த்து உங்கள் பொருளை விற்கிறீர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்"
சிரித்தார். "நாங்கள் வளர்க்கவில்லை. கண்டுபிடிக்கிறோம். முக்கியமாக ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுகிறேன். வெளியே சொல்லக்கூடாது "என்றவர் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரையைக் காட்டினார் ( confidential என்பதால் கம்பெனியின் பெயரையும், அவரது பெயரையும் குறிப்பிடவில்லை)

தமிழ்நாட்டில்,ஆந்திராவில் 14-18 வயது மாணவர்கள் மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் வருமான,போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மக்கள் நெருக்கம், பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை போன்ற பல அளவுகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்/பெண்கள், ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஆய்வுக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வளர்க்கிற, உங்களை தொய்யச் செய்கிற முக்கியமான காரணத்தைக் கூறுமாறு ஒரு கேள்வி. அதற்கு "ஆங்கிலத்தில் பேச இயலவில்லை " என 70% கூறியிருக்கின்றனர். "நான் கறுப்பாக இருக்கிறேன்" என்பதை 45% மாணவர்கள் குறையாகச் சொல்லியிருக்கின்றனர். ( சிலர் பல காரணங்களை வரிசைப்படுத்தியதால் இரு தரப்பிலும் அவர்களது காரணங்கள் சேர்க்க்பட்டிருகின்றன).
"சிகப்பாக இல்லை எனப் பெண்களைப்போலவே ஆண்களும் நினைக்கின்றனர். குறிப்பாக +2, கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம். " என்றார் நண்பர்.
"மாணவிகள் சிலர், தாங்கள் கறுப்பாக இருப்பதால் சில மாணவிகள் தங்களிடம் பேசுவதில்லை எனவும் , மேடைப்பேச்சு, நாடகம் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களைச் சேர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்" என்கிறது அந்த ஆய்வு.
கிராமச்சூழ்நிலையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இது அதிகமில்லை. நடுத்தரமான நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், விசாகப்பட்டினம், நெல்லூர் என வரும் நகரங்களில் இது அதிகம்.
"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெயர்நத குடும்பத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகளிடம் இம்மனப்பாங்கு அதிகம் காணப்படுகிறது. "குடும்பச் சூழ்நிலையும் நகரச் சூழலும் மாறுபடும் போது உண்டாகும் தடுமாற்றம் இது " என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
" முகப்பூச்சு பவுடர் உபயோகிக்கும் ஆண்கள் ( மாணவர்கள் ) தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகம் " என்கிறது ஆய்வு. "இது வாசனைக்கோ அன்றி வியர்வைக்கோ இல்லை. முகம் வெளுப்பாகத் தோன்றவேண்டும் என்ற அடிப்படை எண்ணமே இந்த உபயோகத்திற்குக் காரணம்" என்றார் நண்பர். விரைவில் ஆண்களுக்கு என விசேஷமாக முகப்பூச்சு பவுடர் கொண்டுவர சில கம்பெனிகள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. மார்க்கெட் அப்படி.

மேலும் வரும்...

Sunday, August 14, 2005

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்
--------------------------------------

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நமது 70 களின் பசுமைப்புரட்சி பற்றி இன்றும் மார்தட்டிக்கொள்வதின் அபாயத்தை விளக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் சைக்கத் நியோகி. 70 களின் தீவிரம் இன்று இல்லை என்பது வருந்தத்தக்க நிதர்சனமான உண்மை. உணவுப் பொருட்கள் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறது அக்கட்டுரை.
CMIE -ன் உணவுப்பொருள் விளைச்சல் குறித்த 2004-05 -ன் புள்ளிவிவரங்கள் கவலைதருகிறது.
உதாரணமாக அரிச உற்பத்தி 1.3% குறைவாகவும், பருப்பு போன்றவைகளின் உற்பத்தி 1.4% குறைவாகவும் இருப்பது(2003-2004 உற்பத்தியுடன் நோக்கும்போது) குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சராசரி இந்தியனுக்கு கிடைத்த உணவுப்பொருள் 1990-ல் 510 க்ராம். இது 95-ல் 495 கிராம் ஆகவும், 2003-ல் 436 ஆகவும் குறைந்து வருகிரது. இதேபோல பருப்பு வகைகள் 91-ல் 41.6 கிராம் எனவும் 2003-ல் இது 29.1 கிராம் எனவும் குறைந்து வந்திருக்கிறது.
உணவுப்பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விளைநிலங்களின் அளவு கூடுவதில்லை எனவும், நிலங்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது எனவும் விவசாயத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விளைநிலங்கள் , ஒரு மனிதனுக்கு 1991 ல் 0.34 ஹெக்டேர்இருந்தது. இது 2001 -ல் 0.31 ஹெக்டேர் ஆகக் குறைந்திருக்கிறது. இருக்கும் நிலத்தில் அதிக மகசூல் தரும் விளை பயிர்களை வளர்ப்பதில் உள்ள பெரும் தடைகல் - விவசாயிகளுக்குத் தேவையான செய்திகள், சரியான ஊடகங்கள் வழியே சென்று சேருவதில்லை. விவசாயத் துறையில் வல்லுநர்கள் அளவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது (M.s.Swaminathanக்கு அடுத்த தள அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ). மேலும் ஊக்கத்தோடு புது முயற்சிகள் எடுப்பதில் உள்ள தயக்கம் ( இஸ்ரேலுடன் ஏற்பட்ட விவசாயத் தொழில் நுட்பப் பரிமாற்ற அமைப்புகளின் முயற்சிகள் என்னவாயிற்று?), உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலப்பாங்கும், அவற்றிற்கு எதிரான புரட்சிகளும் விவசாயத்துறையில் புதுக்காற்று வீசுவதற்கு நல்ல தளம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பண்பளவில் மாற்றப்பட்ட பயிர்கள் ( genetically modified குத் தமிழில் என்னவென தெரியவில்லை, மன்னிக்கவும்), பருத்தியைத் தாண்டி பிற பயிர் ரகங்களில் விவசாயிகளைக் கவரவில்லை. இதிலும் மோன்ஸோன்ண்டா நிறுவனத்தின் பண்புமாற்றப்பட்ட பயிர்களின் விதைகள் குறித்தான வாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
நோய்களையும், புழுக்களையும் எதிர்க்கும் புதுப்பயிர் ரகங்கள் பல பயிர்களில் இந்தியாவில் வருவதில் உள்ள சிரமங்களைக் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது.
நமது இளைய தலைமுறை, விவசாயத்திலும் ஈடுபாடு கொள்ள வேண்டிய தூண்டுதலை பள்ளிகளும், கல்லூரிகளும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் "இஞ்சினீயர், டாக்டர், மென்பொருள் வல்லுநர் " என்னும் கனவுகளோடு மட்டுமே இருப்பதில் "ஒரு தலைமுறையே தவறு செய்துவிட்டதோ?' எனத் தோன்றுகிறது.
விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு புதிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவற்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி வேண்டாத mms-ல் நின்றுவிடாமல், கிராமத்தில் வேளாண்மையின் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியுமானால், நமது வளர்ச்சி சீராக அனைத்துத் துறைகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.