Thursday, September 11, 2014

எதிர்பார்ப்புகள்

”அதான் சொன்னேன், இதுக்கெல்லாம் முக்கியத்துவமே கொடுக்கக் கூடாது” ப்ரேம் சொல்லிக்கொண்டே வண்டியை ஓரம் கட்டினார். வெளியே மழை தொடங்கியிருந்தது. வைப்பர்கள் மெல்ல அசையத் தொடங்கியதில்,கண்ணாடியின் ஓரத்தில் ஒரு கோடாக அழுக்குப் படலம் சேர்ந்தது.
என்னை , எனது அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டு, அவர் மேற்கொண்டு செல்லவிருந்தார். வண்டியை பராமரிப்பிற்குக் கொடுத்திருந்ததால், பேருந்திற்குக் காத்திருந்த என்னை, நிறுத்தத்தில் அடையாளம் கண்டுகொண்டு, ஏற்றிக் கொண்டு வந்திருந்தார் அவர். பேச்சு , சமீபத்தில் எனக்கு ஒரு நண்பர் அவமரியாதையாகப் பேசியதில் தொடங்கி சுனில் என்ற பழைய நண்பனைப் பற்றி விரிந்தது. அந்த உரையாடலின் முடிவுதான் மேலே அவர் சொன்ன வரிகள்..
சுனிலைப் பற்றி பேசியபோது எனக்கு நினவு வந்து “ப்ரேம், உங்க கம்பெனியிலயா அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கீங்க?” என்றேன்.
சுனில் நல்ல வேலையில் இருந்தான். நல்ல சம்பளம். ஹோண்டா சிடி, பன்வேல் அருகே ரெண்டாவது வீடு என்று வளர்ந்து வரும் மும்பைக்கரின் செல்வாக்கு வெளியே தெரியுமளவுக்கு வளர்ச்சி. நல்ல உழைப்பாளி. திடீரென்று அவனது அமெரிக்கக் கம்பெனி இந்தியாவின் தனது இயக்கத்தைக் குறைத்துக் கொண்டது. அதில் வேலையிழந்தவர்களில் சுனிலும் ஒருவன்.
“ஆமா.. பத்து வருஷத்துக்கு அப்புறம் திடீர்னு ஒரு போன். ’ப்ரேம், ஒரு ஹெல்ப்’ -ன்னான். ரெண்டு குழந்தைகளும் பெரிய ஸ்கூல்ல சேத்திருக்கான். மனைவி வேலைக்குப் போகலை. இவனுக்கு அளவுக்கு மீறிய லோன் . இ.எம்.ஐ மட்டுமே மாசத்துக்கு ஒரு லட்சம் வருதாம்.. ”
”அடேயப்பா” என்றேன். இதெல்லாம் தேவையா? என்று ஒரு கேள்வி வந்தாலும் அடக்கிக் கொண்டேன். அவனனவன் விருப்பம். ஹோண்டா சிட்டி தேவையா, அல்ட்டோ போதுமே? என்பது ஒரு சிந்தனை. அல்ட்டோவே தேவையா? என்பது மற்றொரு சிந்த்னை. இருக்கும் நிலைக்கு ஏற்றாற்போல் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கலாம்.
“அவனோட தகுதிக்கு என் கம்பெனியில வேலை இல்லை. என் காம்பெடிட்டர் கம்பெனியில ஷம்பு ஜா இருக்கான். ஞாபகமிருக்கா. உசரமா இருப்பானே.. கன்னத்துல பெருசா ஒரு மச்சம்.."
“ஷம்பு நினைவிருக்கு. “ என்றேன்.
“ ஆங். அவன் கம்பெனியில ஆள் சேர்ப்புக்கு அனுமதி கிடைக்கலை. ஹெட் கவுண்ட் இல்லேன்னான். நம்ம ஃப்ரெண்டு சுனில்.. ரைட்டுன்னு ஷம்பு கூட அவன் எம்.டியைப் பாத்து பேசிட்டு, ஸ்பெஷலா இவனுக்குன்னு ஒரு ப்ரொபைல் உண்டாக்கி, சேத்து விட்டேன். “
எனக்கு உள்ளூற ஒரு குறுகுறுப்பு. சுனில் அப்படியொன்றும் நல்ல நண்பனில்லை-, எனக்கும், ப்ரேமுக்கும்..ஏன் எவருக்குமே. சுயநலக் காரன் என்று ஏசப்பட்டவன். தனக்கு காரியம் ஆகும் வரை குழையப் பேசிவிட்டு, அதன்பின் அம்போவென விட்டுப் போகிற ரகம். ஏற்கெனவே ப்ரேம் ஒரு முறை அனுப்வப்பட்டிருக்கிறார். நானும் ஒரு முறை கையைச் சுட்டுக்கொண்டிருக்கிறேன்.
அவரிடம் கேட்க எத்தனித்தபோது அவரது செல் போன் அதிர்ந்தது “ அலோ” என்றவரின் முகம் சற்றே இறுகியது. “ம்..ம்.. ஓகே. ஆல் தி பெஸ்ட்” என்று இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு போனை வைத்தார்.
“ஷம்பு ஜா” என்றார் எங்கோ பார்த்தபடி
“என்னவாம்?”
“சுனில் வேலையை விட்டுட்டானாம். அவங்களோட காம்பெடிட்டர் கம்பெனி சிங்கப்பூர்ல வேலை கொடுத்திருக்காங்களாம். நாளைக்குக் கிளம்பறான். ரெண்டு முக்கியமான ப்ராஜெக்ட். அம்போன்னு விட்டுட்டு இவங்களுக்கே எதிரா அந்த ப்ராஜெக்டுகளை எடுக்கறதுக்கு வேலை பாக்கப்போறான். “
“ஓ” என்றேன் என்ன சொல்வதென்று தெரியாமல்.
“ ஷம்புவோட எம்.டி ரொம்ப அப்செட் ஆயிட்டாராம். இவ்வளவு பெரிய பதவியில இருக்கறவன் திடீர்னு முதுகுல குத்தறது நியாயமில்லன்னு சொல்றார். அது கரெக்டுதான். நம்பிக்கை துரோகம் இது. சின்ன பொசிஷன்ல இருக்கறவன் விட்டுப் போறான்னா புரிஞ்சுக்கலாம். “
“நோட்டீஸ் பீரியட் இருக்குமே?”
“அவன் அதுக்கெல்லாம் நிக்க மாட்டேங்கறான். மூணுமாசம் சம்பளத்தை அவன் போற கம்பெனி கட்டிடறேன்னு சொல்லுது. இவன் இங்க இருந்துகிட்டே அதுக்கு வேலை பாத்தானான்னும் தெரியலை.” ஒரு நிமிடம் மவுனமாக இருந்தோம்.. காரின் கூரையில் மழை தம் தம் என விழும் சப்தம் உரக்கக் கேட்டது.
“ நான் தான் அவனை சிபாரிசு பண்ணினேன்னு ஷம்புவும் மறைமுகமா குற்றம் சாட்டறான். இதெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல.. ஆனா வருத்த்மா இருந்தது. இப்படி நம்பிக்கை துரோகம் செஞ்சிருக்கானே?ன்னு கோபமாக்வும் வந்தது. “ சிறு நிறுத்தத்தின் பின் மீண்டும் தொடர்ந்தார்.
“ ஏங்கிட்ட கூட சொல்லல. இப்பத்தான் ஷம்பு சொல்லி தெரியுது. சேத்துவிட்டவன் என்கிற அளவுக்கு ஒரு மரியாதைக்காவது சுனில் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்”
எனக்கு நன்றாகவே புரிந்தது. இது ஏமாற்றம் மட்டுமல்ல, பயன்படுத்திக்கொண்டு விட்டு, பின் உதாசீனமாக எறிகிற உத்தி.
“சுனிலுக்கு போன் போட்டு பேசலாமா?”என்றேன்.
“விடுங்க. இது எனக்கு ஒரு பாடம். இனிமே எச்சரிக்கையா இருக்கணும். பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு சொல்லுவாங்களே , அதுமாதிரி”
“இருந்தாலும் இது நம்பிக்கை துரோகம் இல்லையா? ரெண்டு வார்த்தை நாக்கைப் புடுங்கற மாதிரி கேட்டுடுங்க. இல்லேன்னா வருத்தம் போகாது. நினைக்க நினைக்க கோபமா வரும். பட்டதுனால சொல்றேன்”
ப்ரேம் என்னை ஊடுருவுவது போலப் பார்த்தார்.
”அவனை நான் நண்பனா மதிக்கமாட்டேன். சரி, அவனை வெறுப்பேன். கரெக்ட். ஆனா அவனப் பத்தி நினைச்சு மருகுவேன்னு யார் சொன்னது?”
“இல்லையா பின்னே? திடீர்னு ராத்திரி முழிப்பு வர்றப்போ இந்த நினைவு வந்தா அப்புறம் தூங்கின மாதிரிதான். நாலு வார்த்தை கேட்டுட்டு போடா-ன்னு விட்டுருங்க”
“அது ரொம்ப கஷ்டம் சுதாகர். நாலு வார்த்தை கேக்கறதுக்கு நீங்க தயார் பண்ணறப்போ கோபம் கொப்புளிக்கும். அது இன்னும் மோசம். விடுங்க. அவன் என் நண்பனில்ல. ஒரு அறிமுகப்பட்டவன் என்கிற அளவுல இனிமே அவங்கிட்ட் நடந்துக்குவேன்”
“ இது சாத்தியமா?”
“ சாத்தியப் படுத்திக்கணும். வேற வழியில்ல. எவனோ செஞ்ச தீமையினால, நினைச்சு நினைச்சு உங்க ரத்த அழுத்தத்தை ஏத்திக்கறதுல என்ன லாபம்?”
“மன்னிக்க முடியாது ப்ரேம். சொல்லறதுக்கு ஈஸி. நடைமுறைக்கு சாத்தியமில்ல. இவங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சுக்கணும்னு ஒரு ப்ரொஃபைலிங்க் பண்ணி வச்சு நடந்துக்க முடியாது. யதார்த்தத்துக்கு வாங்க”
“இப்ப நீங்க என்னையும் ஒரு ப்ரொஃபைலிங்தானே பண்ணி வச்சுருக்கீங்க? மன்னிச்சு விட்டுடற கடவுளர் டைப்-ன்னு” என்றார் சூடாக.
சற்றே ஆடிப்போனேன். இவர் சொல்வது சரிதான். வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைன்னு , ஒன்று குரோதம் கொண்டவரகளாக , இல்லை கடவுளாக மட்டுமே ஏன் மக்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறோம்.? இன்னா செய்தாரை ஒறுத்தல் என்பது போன்ற நல்வரிகள் நம்மை இரண்டு எல்லைகளில் மட்டுமே சிந்திக்கச் செய்துவிட்டதோ? தவறு செய்தவன் வில்லன், அவர் செய்த தவறுகளால் வருத்தப்படுபவர்கள், குரோதம் கொள்ளாமல், தீயவர்களை மன்னித்துவிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கடவுளர் நிலை மட்டுமே சாத்தியமாகக் காட்டப்படுகிறது. கோபம் கொள்ள அவர்களுக்கு அனுமதியில்லை.
“ஹலோ, அவனை மன்னிக்கவே வேணாம். வெறுப்பே வைச்சுக்குங்க. கடவுள் மாதிரி உங்கள ஆகச் சொல்லலை. அவனை தரத்துல கீழிறக்குங்க. அப்புறம், இதோ, ரோட்டோரம் ஒருத்தன் கிடக்கிறானே, அவனப்பத்தி என்ன நினைப்பீங்களோ, அவ்வளவுதான் இவன்களையும் நாம நினைப்போம்.”
சற்றே உள்வாங்கினேன். இது ஒரு சாத்தியமான வழியோ? மனிதர்கள் தங்கள் இயல்பான உணர்ச்சிகளை அடக்காமல், அதே நேரம் பழியுணர்வில் வெறிகொள்ளாமல், மனிதன் மனிதனாக வாழும் ஒரு நிலை.
“I don't forgive who hurt me. Neither I forget; but, I don't lose my sleep over them." எங்கோ படித்த வரிகள்...யார் சொன்னது?
மழை மேலும் வலுவாகப் பெய்தது. குடையை விரித்து சென்றவர்களும் சற்றே நனைந்திருந்தனர். குடை ,ஓரளவுக்குத்தான் நனைவதைத் தடுக்கும். சாரல்துளிகளால் நனைவதை பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருக்கவேண்டும். அதுதான் நடை.