Thursday, October 19, 2017

தீபாவளிக்குத் துணி

வழக்கமாக ரெண்டு மணி நேரமெடுக்கும் பயணம் ஒன்றேகால் மணிநேரமே எடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். தீபாவளி என்றால் மக்கள் எங்கேதான் போவார்களோ? கார்காலம் கழிந்தபின் நீல வானம் காணும் நிறைவுபோல, கரிய தார் ரோடு தெரிவதும் ஒரு சுகம்தான்.
பகவதி நான் வருமுன்னே வந்திருந்தார். இன்னும் கஸ்டமர் வரவில்லை என்பதால் சற்றே வெளியேறி, காலார நடந்து பேசிக்கொண்டிருந்தோம்.
”தீபாவளி எப்படிக் கொண்டாடப் போறீங்க, பகவதி? ஊருக்குப் போறீங்களா?”
“சொந்த ஊரே பாம்பேதான். அப்பா ரகுவன்ஷி மில்ல வேலை பாத்தாரு. தாத்தா காலத்துலேர்ந்தே பரேல்-ல இருக்கம். நீங்க?”
”எனக்கு என்ன? ஒண்ணுமில்ல. பையனுக்கு ஒரு துணி எடுத்திருகேன். அவ்வ்ளவுதான். அதிகம்
தீபாவளி பர்ச்சேஸ் பிடிப்பதில்லை. ”
“பையனுக்கு, மனைவிக்கு எத்தனை தடவை ட்ரெஸ் எடுத்திருப்பீங்க?”
“யார் கணக்குல வைச்சிருக்காங்க? நான் வாங்குவதில்லை. மங்கை வாங்கினால் உண்டு.”
“வீட்டுக்குன்னு வாங்கறது ஒரு சுகம் சார்”
“இருக்கலாம். பசங்களுக்கு கொஞ்சம் நீளமான பேண்ட்டா வாங்கணும். டக்-னு வளர்ந்துருவானுங்க பையனுக்கு என்ன வயசு?”
“ பதினொண்ணு.”
“ உங்கள மாதிரி் உயரமா ?”
“தெரியாது”
விழித்தேன்.
பகவதி நடந்தார் “ நான் அவனைப் பாத்து ஆறு வருசமாச்சு. சமீபத்து போட்டோ கூடப் பாத்தது கிடையாது”
நான் தயங்கித் தொடர்ந்து ந்டந்தேன்.
“ என் பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் மொதல்ல கொஞ்சம் மனஸ்தாபம். பரேல் வீடு சின்னது. கூட்டுக் குடும்பம். தனியாப் போணும்னா. பைசா இல்ல. டெய்லி இது ஒரு ரோதனையாப் போச்சு. ”
“அன்னிக்கு நான் கையை ஒங்கியிருக்கக் கூடாது. அவ கிளம்பி அம்மா வீட்டுக்குப் போனப்போ கூட, சரி, வந்திருவான்னு நினைச்சேன். வரல. அம்மாவும் நானுமாப் போனோம். அவ அண்ணன் அவமரியாதையாப் பேசிட்டாரு. கிளம்பி வந்துட்டோம். “
“சின்ன கோபமெல்லாம், தூண்டி விடத் தூண்டி விடப் பெரிசாகுது. குரங்குக்குப் புண்ணு வந்தா சொறிஞ்சு சொறிஞ்சு பெரிசாக்கி அதுலயே சாகற மாதிரி... . அவ ஷோலாப்பூர்லயே டீச்சர் வேலைக்குச் சேந்துட்டா. டைவர்ஸ்னு ஒண்ணு ஆகல. வீட்டுல பெரியவஙகளா பாத்து, பையன் அவகிட்ட இருக்கனும். பாக்க வரக்கூடாதுன்னுட்டாங்க. நானும் வேற கலியாணம் பத்தி யோசிக்கல. துபாய் போயிட்டேன்.
ஆறு வருசமுன்னாடி இந்தியா வந்தப்போ, பையனை ஒரு கலியாணத்துல பாத்தேன். சட்டுனு என்னமோ உள்ளே ஏதோ உடைஞ்சு போய், அவள் பக்கத்துல போய் கையைப் பிடிச்சிட்டேன். அவளும் ஒண்ன்ணும் சொல்லல. விருட்டுனு கிளம்பிப் போயிட்டா.
ரெண்டுபேர் வீட்டுலயும் விட்டுக்கொடுக்கல. போனவருடம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி பேச்சு எடுத்து, இப்பத்தான் சரி, டோம்பிவிலில புது வீட்டுல வந்து இருக்கேன்ன்னு சொல்லியிருக்கா. இந்த தீபாவளில போய் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன். ”
உணர்வு ஒருபுறம் இருந்தாலும், வேலை இருக்கிறதே? மணியைப் பார்த்தேன். கஸ்டமர் வந்திருப்பார். திரும்பி நடந்தோம். பழைய டெமோ சிஸ்டம்தான். நூறுதடவை இந்த பயாஸ்கோப் காட்டியிருப்பேன்.
பகவதி பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தார் “ பதினோரு வயசுப் பையனுக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியலை சார். என்ன வாங்கிட்டுப் போலாம்? அவளுக்கு என்ன வாங்கலாம்? எப்பவோ ப்ளூ கலர் பிடிக்கும்னு சொன்னது நினைவிருக்கு. இந்த தவிப்பு கொடுமை . நீங்க அதிர்ஷ்டசாலி சார்”
நானா ?
டெமோ கொஞ்சம் சுமாராகத்தான் போச்சு என்றே நினைக்கிறேன்.
வெடிகளில் திடீரென திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தீபாவளி நன்று.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.