Thursday, December 31, 2015

கம்பனை ரசித்தல் - 4

“சார், கம்பராமாயணம் படிக்காம, புரியாம அதனோட சாரத்தை உள்வாங்கி, மனம் மயங்கின நேரத்துல சொல்ல முடியுமா? இது சாத்தியமா?” நான் கேட்ட மனிதர் ,ஓய்வு பெற்ற எஞ்சினியர். தமிழில் ஆழ்ந்தவர்.

“என்ன விசயம்?”

“கோவீந்த ராஜு-ன்னு ஒரு நண்பன்..” கோவிந்துவின் கம்பராமாயண நிகழ்வை நினைவு கூர்ந்தேன். பேஸ்புக்கில் எழுதியதையும் அவரிடம் சொன்னேன். (அவர் பேஸ்புக்கில் இல்லை.)

ஒரு முறை இருமினார் “ இங்கிட்டு குளிர் ரெண்டு நாளாப் பிடிச்சு ஆட்டுதுல்லா? தடுமம் பிடிச்சிருச்சு. ஆங், என்ன கேட்டிய? கம்பராமாயணம் குடிவெறில வருதா? இல்லயே? அவஞ்சொன்னது உண்மையான உணர்ச்சி வெளிப்பாடுல்லா?”

“இல்ல சார். அவன் என்னிக்கோ சீவில்லிபுத்தூர்ல ரோட்டுல நின்னு கேட்ட ஒரு சொற்பொழிவை, குடி வெறில சொல்லுதானே? இது கம்பனோட வெற்றின்னுதான சொல்லணும்? சுத்தமான கம்பராமாயண நாடக நிகழ்வுல்லா, அது? அனுமன் ராமனை வணங்காம, லங்கா நோக்கி வணங்கினான்னு சொல்லறது கம்பன்லா?”

“டே” என்றார் மீண்டும் இருமியபடி “ இதான் நீ வெளங்கிக்கிடலைங்கறது. அவனுக்கு கம்பனை விட ஆழமாப் பதிஞ்சு போனது, தாயாரை முதல்ல வணங்கணும்னுதான். அவனுக்கு் கம்பன் ஒரு ஊடகம்தான் கேட்டியா? உனக்கு அங்கிட்டு கம்பன் தெரியறான். அவனுக்கு தாயார் தெரியறா. இதுல யார் உணர்வு பெரிசு, சிறிசு? கம்பன் அவனுக்கு புரிஞ்சா என்ன புரியாமப் போனா என்ன, அவஞ் சொல்ல வந்தது மனசுல நின்னுபோச்சுல்லா?, அவன் ரூம்ல உளர்றச்சே, அங்கிட்டு கம்பன் கை தட்டி நின்னிருப்பான், அவன் நிக்கறது, ஒங்கண்ணுக்கு, புத்திக்குத் தெரியாதுடே”

சற்றே சிறுமைப்பட்டாற்போல் உணர்ந்தேன். அப்போ என் அனுபவம் சிறியதுதானா? கம்பனை விட, கம்ப ராமாயணத்தை விட, அதன் பொருள் அனுபவிப்பது எப்படியிருப்பினும் பெரிதுதானோ?

கேட்டும்விட்டேன். இதற்கிடையில் ‘பிப் பிப் ‘ எனப் பல மிஸ்டு கால்கள் வந்து போன ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

“நிச்சயமா. ஒரு அழகான பெட்டி இருக்கு. அதுக்குள்ள ஒரு முத்து. நீ பெட்டியப் பாத்து மலைச்சுப் போற. அவன் அதுக்குள்ள இருக்கிற முத்தைப் பாத்து அசந்து போறான். உனக்கும் முத்து பெரிசுதான். ஆன உன் மலைப்பு பெட்டியோட நின்னிறக்கூடாதுங்கேன். பெட்டிய பாராட்டாதவன் எப்படி முத்தப் பாப்பான்னு நீ நெனக்கறது தப்புங்கேன். வெளங்கா?”

என் மவுனம் அவரை சற்றே அசைத்திருக்க வேண்டும்.

”டே, ராமாயணம், ஒரு பாகவதன் உயிரைக்கொடுத்து பன்னிப்பன்னி நல்லாச் சொல்லட்டும், ஒரு குழந்தை மழலையில, தப்பு தப்பாச் சொல்லட்டும். ரெண்டு இடத்துலயும் கண்ணீர் பெருகியபடி, கைகூப்பியபடி அனுமான் நிக்காந்ன்னு சொல்லுவாக. இது ஒரு சம்ஸ்க்ருத சுலோகம் பாத்துக்க. அனுமான் என்ன, பாகவதன் சொன்னாத்தான் ராமாயணம்னு நிக்கானா? அவனுக்கு ராமாயணம்தான் முக்கியம். “

‘இருந்தாலும்...”

“சரி, தமிழ்ல வாரேன். இந்த பாசுரம் கேட்டிருக்கியா?

”தவம்புரிந்த சேதனரை சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை -உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே”


அஷ்டப் பிரபந்தம்னு ஒண்ணு. ஃபர்ஸ்ட் கிளாஸ் பாத்துக்க. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்னு 12ம் நூற்றாண்டுல ஒருபெரியவர் எழுதினது. கிட்டத்தட்ட ராமானுஜர் காலம்தான்.
என்ன சொல்லுதாரு பாரு. பக்தர்களை சந்தோசமா தேவர்களா பெருமாள் ஆக்குதாராம்.. யாரால? ”தன்மார்பு இருப்பாள் தகவு உரையாலே”. அவ சொல்லித்தான் அவன் செய்தான். இதப் படிக்க நீ வைணவனா இருக்கேண்டாம். தாயார் எப்பவும் தகுந்த மொழிகளைத்தான் தன் பிள்ளைகளுக்காகப் பேசுவா. அவன் சந்தோசமாக் கேப்பான்.. இது புரியும்லா எல்லோருக்கும்? அது போதும்லாடே? “

இந்த வருடத்தை ,  தாயாரின் தகவு உரையால், அவன் உவந்து அனைவருக்கும் அளிக்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்