Thursday, February 19, 2015

இயற்கை மருத்துவமென்பதின் பெயரில்..

வெகுநாட்கள் பிறகு நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு “ஷுகர் எப்படி இருக்கு?” என்று தொடங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடமாக அது தொடர்பாக வேறுவேறு கேள்விகள். சற்றே வியப்பு மேலிட, “ என்னடா விசயம்?” என்றேன். அவனுக்கும் அதீதமான அளவு சர்க்கரை ஏறிக்கிடந்ததை அறிவேன்.
“இப்ப எனக்கு ஷுகர் நார்மல் ஆயிருச்சு. ஃபாஸ்ட்டிங் 89.” என்றான். “அட” என்றேன். 250க்கு குறைவில்லாமல் எண்கள் சொல்லுவான் முன்பெல்லாம்.
“ஒரு புக் படிச்சேன். இயற்கை முறையில் எல்லா வியாதியையும் தீர்க்கிற மாதிரி. அதுலேர்ந்து ஒரு மாசமா சரியாயிட்டேன்”
சற்றே எச்சரிக்கையானேன். “எப்ப டெஸ்ட் பண்ணினே?”

“அத விடு. மாத்திரையெல்லாம் நிறுத்திட்டேன். ஒரு மயிரும் வேண்டாம் கேட்டியா. இவனுக பைசா புடுங்க நம்ம பலியாடாக்குறானுவ. டாக்டரைப்பாத்து நாக்கைப்புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கணும்னு இருக்கேன்”
“லே. கிறுக்குத்தனமா எதாவது செய்யாதே.”
“விடு மக்கா. நல்லா மென்னு திங்கணும், தேவைப்படற அளவு திங்கணும், நொறுக்குத் தீனி நிறுத்தணும். நல்லா நடக்கணும். இவ்வளவுதான்”
“இதத்தான் உன் டாக்டரும் சொல்லியிருப்பாரே? அவரை ஏன் கொல்லணும்னு நிக்கே இப்ப?”
”கேளுடே. இயற்கைன்னா என்ன?” என்று தொடங்கி ஒரு லெக்சர் அரைமணி நேரமாக.
“ஆக, ஏஸி கூடாது. ஃபேன் காத்து சூடு -கேட்டியா. வேணும்னா ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்திரு. இயற்கைக் காத்து வேணும். தரையில படு”
“மக்கா நடக்கறதப் பேசு” என்றேன் பொறுமையாக.
“கேளுல, மூதி. சொல்லறப்ப நடுவுல பேசாத. ஃபில்ட்டர் தண்ணி குடிக்கக்கூடாது. மினரல் எல்லாம் போயிருது. நேரா குழாய் தண்ணிய, ஒரு காப்பர் பானை இல்லை வெள்ளி சொம்புல வச்சி குடிச்சேன்னா,அதுல இருக்கிற பாக்டீரியாவெல்லாம் செத்துரும். நான் இப்ப அப்பிடித்தான் குடிக்கேன்.”
“வெளங்கும்.”
“இதான்.. இதான்ல உங்க மாதிரி ஆட்கள்கிட்ட. டாக்டர் எதோ நமக்குத் தெரியாத மொழியில பேசி ஒரு மருந்தை காலாகாலமாத் தின்னுடேன்னு தருவான். நீயும் விசத்தை திம்பே. அவனுக்கு கமிசன் கிடைக்கி”
“இந்த ஆளு எந்த ஊர்  டாக்டர்?” என்றேன்.
“அத்த விடு. அவரு நம்ம பழைய அறிவுரையெல்லாம்தான் ஒரு புக்கா, நமக்குப் புரியற மாதிரி போட்டிருக்காரு. புதுசா அவரா ஒண்ணும் சொல்லலை கேட்டியா? இந்த புக் படி”
என்றவாறே ஒரு மென்பிரதியை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.
”திருமூலர், வள்ளுவர் பழைய நீதிநூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களே இவை” என்று அதில் போட்டிருந்தது. எந்த திருமந்திரம், எந்த திருக்குறள் என்று ஒரு ரெபரென்ஸும் இல்லை. அவர் சொல்லியிருப்பதற்கு அறிவியல் பூர்வமாக ஒரு நிருபணமும் இல்லை. நம்புங்கள், செய்யுங்கள்.இது மரபு என்பது போன்ற கருத்தமைவு.

வயிறு என்பது ஏதோ ஒரு ரியாக்டர் போலவும், அதில் உணவு என்ற கெமிக்கல்கள் விழுந்து, அமிலத்தில் கபகபவென குமிழித்து வருவது போலவும் சித்திகரிக்கப்பட்டு, மென்று முழுங்குவது ஏன் நல்லது என்பதை சொல்லியிருந்தார்கள். மென்று முழுங்குவது, உமிழ்நீர் சுரப்பது எல்லாம் வரையிலும் சரி. பயோ கெமிக்கல் ரியாக்‌ஷனுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ரியாக்‌ஷனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலெழுந்த வாரியாக இவற்றை “பூ” என்று சொல்லிவிட்டுப் போவது சரியாகாதே என்று கவலைப்பட்டவாறே முழுதும் வாசித்தேன்.

என்னளவில், இவை நற்பழக்ககங்கள் என்று கொள்ள முடியும். Lifestyle change என்பது மட்டும் டயாபடீஸையும், ரத்த அழுத்தத்தையும் நீக்கிவிடாது. குறைக்க உதவும். நாளடைவில் இவை கட்டுப்பாட்டிற்குள் வரும். அது “சரியாகி விட்டது” என்று கொண்டாடிவிட முடியாது. முதலில் டயாபடீஸ் ஒரு நோயல்ல, சமனிலி விளைவு என்பதை அறிவதே பெரும்பாடாக நம்மில் பலருக்கும் இருக்கிறது.

சில அதீத விதிமுறைகள் காலத்துக்கு ஒத்துவருமா? என்று சிந்திக்க வேண்டும். இயற்கை உணவு என்ற பெயரில் இவன் நிலக்கடலையை அதிகமாகத் தின்று தலை சுற்றி அதன்பின் நிறுத்தியதும் சொன்னது நினைவுக்கு வந்தது.

புதிதாக மதம் மாறியவர்கள் , ஒரு உத்வேகத்துடன் தங்கள் புதிய மதக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும், பிறருக்கு பரப்புவதும் போன்ற செயல்களுக்கும், பழக்க வழக்க மாறுபாட்டில் சற்றே பயன்பெற்றவுடன் இதுதான் சரியான மருந்து என்று ஆனந்தத்தில் திளைப்பதற்கும் வித்தியாசமில்லை.

நண்பன், இதோடு 30 புத்தகங்களை வாங்கி தன் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு வினியோகித்திருக்கிறானாம். என்னையும் வாங்க வற்புறுத்தினான்.

இன்று ஒரு குறுஞ்செய்தி “ மக்கா, சூரிய நமஸ்காரம் செய்யி. இன்னா? அந்த புத்தகத்துலேயும் அதுதான் எழுதியிருக்காரு” .

 ஆயாசத்துடன் பதில் அடித்தேன் “ மக்கா, சூரிய நமஸ்காரெம்ல்லாம் புக்குல போட்டிருக்குன்னு தடபுடலா செய்யக்கூடாது. சுளுக்கிட்டி நிக்கும். ஒழுங்கா யோகா பயிற்சியாளரிடம் போய் கத்துக்கணும்”
“நீ இப்படித்தான் நம்பாம நடக்க. நல்லதில்ல கேட்டியா? ஒந் நன்மைக்குத்தான் சொல்லுதேன். அவரு என்ன சொல்லுதாருன்னா....”

ஒரேயொரு வார்த்தை பதில் என்னிடமிருந்து  “லே,சோலியப் பாருலே”

Friday, February 06, 2015

மின்னூலும் மனப்பாங்கும்

கடல் முரடாகக் கோபமாக இருந்தது.
விமானம் கிளம்பி , ஜூஹூ கடற்கரையைத் தாண்டும்போது வெள்ளைக்கோடுகளாக கீழே அலைகள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. சிறு சோப்பு டப்பா சைஸில் கப்பல்கள். அலைகள் பெரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
மெல்ல சாய்ந்து, கிண்டிலை எடுத்து உயிர்ப்பித்தேன். Selfish Gene - நாலாவது அத்தியாத்தில் இருக்கிறேன். பயணம் முடியுமுன் முடித்துவிடவேண்டும். சட்டென நினைவு வர, 6174ன் மின்னூலை தேர்ந்தெடுத்தேன். இதனை திருத்தவேண்டுமென்று நினைத்து இரண்டு மாதமாகிறது. அடுத்த சீட்டில் வைத்துவிட்டு, பென்ஸிலையும் பேப்பரையும் , லாப்டாப் பையிலிருந்து எடுக்கக் குனிந்தேன்.
“யூ கேன் ரீட் லோக்கல் ஸ்டஃப் இன் கிண்டில்?”
ஓர சீட்டில் இருந்தவர் எனது கிண்டிலை எடுத்து வியப்புடன் கேட்டார்.
என்னைப்போலவே சற்றே நரைத்த குறுந்தாடி ( சரி, எனக்கு நிறையவே நரைத்திருக்கிறது..போதுமா?). சுருட்டை முடி. கருப்பு கோட் அணிந்திருந்தார். முகத்தை வைத்து எந்த ஊர்க்காரர் என்று சொல்ல முடியவில்லை.
“இல்லை” என்றேன். “அமேசான் இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனால் நன்றாகவே தமிழ் தெரிகிறது. “
”அப்புறம் எப்படி இ புக் கிடைக்கிறது?” என்றவருக்கு விளக்கினேன்.
“’ஒ. உங்க புக்கா?” என்றவர் “ ஐ ஆம் அஸ்லம்” என்றார். மறுபடி பெயர் வைத்து ஊர் சொல்ல முடியாத நிலை.
டெல்லிக்காரராம். ஹாங்காங் போய் அங்கிருந்து லாஸ் ஏஞ்ஜெலஸ். நான் பீஜிங் போகவேண்டும்.
”தமிழ் புத்தகத்துக்கு அமேசான் போட்ட தடை உத்தரவு” என்றேன். தடை பற்றி மேலும் பேச்சு வளர்ந்தது.
“ஹாங்” என்உக்கு ஒரு எதையோ நினைத்தபடி. “ இப்போ உங்க மொழியில வந்த ஒரு புத்தகத்தை தடை பண்ணியிருக்காங்களாமே? அதுனோட இ புக் என் நண்பர் ஒருவரிடம் இருக்கிறது. வேணுமா? சொல்லுங்க”
“வேண்டாம்” என்றேன்.
“ஏன்?” என்றார். புருவத்தை உயர்த்தியபடி.. இவன் ஒருவேளை அந்த புத்தகத்தை எதிர்க்கும் கட்சியோ? என்பதுபோல ஒரு பார்வை.
“ தவிர்த்து விடுகிறேன். வேறு புத்தகம் என்றாலும், பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறேன். டிவிடி பைரஸி போலவே புத்தகங்களும் பைரஸியில் பல கோடி நாசம் விளைவிக்கின்றன”
“ஓ” என்றார் சற்றே எகத்தாளமாக. “எனிவே, இந்த புத்தகம் கிடைக்காது. திருட்டுத்தனமாக ப்ரிண்ட் போட்டு ப்ளாட்பார்மில் விற்பார்கள். அல்லது பிடிஎஃப் , ஒரு டாரெண்ட் ஸைட்டில் கிடைக்கும். உங்கள் ஒருவரால் நிற்கப்போவதில்லை”
“ டெல்லியில் பல இடங்களில் பெண்களிடம் வன்புணர்வு , அதற்காக நானும் அப்படி திரிய முடியாது.”
சிரித்தார் “ என்னமோ நாங்க டெல்லியில காலேல முதல்வேலையா ரேப் பண்ணத்தன் கிளம்பறோம்னு மாதிரியில்ல சொல்றீங்க?”
நானும் சிரித்தேன். “மும்பைக் காரன் இல்ல. அப்படித்தான் டெல்லி பத்தி சொல்லுவோம். இது ஆரோக்கியமான தாக்குதல்கள்”
“ நீங்க என்னை மாதிரி புத்தகம் படிக்கறீங்க. சந்தோஷம். நிஜமாவே உங்களுக்கு அந்த புத்தகம் வேண்டாமா? “என்றார்.
“வேண்டாம். அது கிடைத்துக் கொண்டிருக்கும் போதே நான் வாங்கவில்லை. அது தடையும் செய்யப் படவில்லை. மார்க்கெட்டிலிருந்து எழுத்தாளரே எடுத்துக்கொண்டார். கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற ஒரு பிடிஃப் இலவசமாகப் படிக்கப்ப் போவதில்லை” என்றேன்.
“ஏன்?” என்றார் சற்றே இடது புறம் என்னோக்கிச் சாய்ந்தவாறே. விமானம் ஒரு வட்டமடித்து அரபிக்கடல் மீது தெற்கு நோக்கிப் பயணித்திருந்தது. இறக்கை பக்கம் சீட் என்பதால் இரைச்சல் அதிகமாயிருந்தது.
“பல வருடம் முன்பு Satanic verses என்று ஒன்று வந்தது. லஜ்ஜா என்று ஒன்று அதன்பின் இரண்டும் அரசால் தடைவிதிக்கப்பட்டன. இரண்டும் ப்ளாட்பாரத்தில் படு சீப்பாக விற்கப்பட்டன. அவற்றையும் வாங்கவில்லை. படிக்கவில்லை.”
“அதான் ஏன் ? என்கிறேன்” என்றார்.
”ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரியவந்தால், அவனுக்கு என்ன ப்ரச்சனை என்பதை அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு ,கீழ்த்தரமான ஆர்வம் மட்டுமே அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டுமே தவிர அதிலிருக்கும் இலக்கியமோ, அதன் கதைக்களன், கதை சொல்லிய பாங்கு என்பதெல்லாம் தோன்றாது. இது அடிமட்ட உணர்வுக்கு விலை போகும் சமாச்சாரம்.”
”பிறருக்கு துன்பம் என்பது அவரவர் மனப்பாங்கு. வாசித்தல் என்பது ரொம்ப சப்ஜெக்டிவ்.. எனக்கு வருத்தமளிப்பது , உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி அதனைப் படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்வதுதான் சரியானது. நீங்கள் சொல்வதும் ஒரு வகை சாய்வு நிலைதான்”
“ஓ.கே” என்றேன் சற்றே சாய்ந்தவாறே “ ரோட்டில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எதிரே ஒரு ஸ்கூட்டரில் ஒரு குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்த பெண் நிலைகுலைந்து விழுகிறாள். சேலை சற்றே உயரத் தூக்கிப் போய்விடுகிறது. சிராய்த்து, ரத்தம் வழிய அவர்கள் கிடக்கிறார்கள். சிலர் அப்பெண்ணின் சேலையைச் சரிசெய்ய முனைகிறார்கள். நிலைகுலைந்து கிடப்பவளை வேடிக்கை பார்ப்பவர்களை என்ன சொல்வீர்கள்?”
“சொல்ல என்ன இருக்கிறது. Bunch of uncivilized animals" என்றார் கோபத்தோடு. டெல்லிக்காரர்களிடம் இது ஒரு வசதி.எளிதில் கோபமூட்டி விடலாம்.
“ஒரு சமுதாயம் , ஒரு புத்தகத்தில் வரும் வார்த்தைகளால் அவமானமாக உணர்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. சேலையில் என்ன மறைத்திருக்கிறாள் என்று குறுகுறுப்பாகப் பார்ப்பதற்கும், அந்த புத்தகத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறர்கள்? என்று படிக்க குறுகுறுப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, அஸ்லாம்?”
அவர் மவுனித்தார்.
தொடர்ந்தேன் “கீழே கிடக்கும் பெண்ணிற்கு உதவாவிட்டாலும், குறைந்த பட்சம் விகாரமாக பார்க்காமலாவது நாம் இருக்கலாம் இல்லையா? அதுதான் நான் செய்வது. நான் கருத்துச் சுதந்திரம் என்றோ, டெமாக்ரஸி என்றோ ஜல்லியடிக்கவில்லை. திருட்டுத்தனமாகப் படிக்கும் ஒரு கயவானித்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. அது ஸாட்டானிக் வெர்ஸசாக இருந்தாலும், லொஜ்ஜாவாக இருந்தாலும், மாதொரு பாகனாக இருந்தாலும் சரி. என் நிலைப்பாடு என்பது எனது கேரக்டரில் இருக்கிறது. “
முன்னே ஸ்க்ரீனில் அவர் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று “ இன்னும் ரொம்ப தூரம் போகணும். இல்ல?” என்றார்.
நான் ஜன்னலின் வழியே கீழே பார்த்தேன்.கடல் மிக அமைதியாக ஒரு நீலப் போர்வையை விரித்தது போல இருந்தது. அலைகள், பொங்குதல் எல்லாம் கரையில் மட்டும்தான். கொஞ்சம் உள்ளே போனால் எல்லாம் அமைதியாகி விடுகிறது.