Sunday, November 29, 2009

சில கோபங்களும் அதன் பின்னணியும்

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?