Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

No comments:

Post a Comment