Monday, November 17, 2008

சில கோபங்கள் அர்த்தமுள்ளவை

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத்தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை, நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார் “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது. ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Wednesday, November 12, 2008

அனீமியா அபாயம்

முனைவர் பாகவத் எனக்கு தொழில் முறையில் பழக்கம் என்றாலும், எனது மானசீக ஆசிரியராகவே அவரை வணங்கி வந்திருக்கிறேன். எப்போதும் புன்னகையுடன், ஒரு தந்தையின் பரிவுடன் பேசும் அவர் மீது மரியாதையும் அன்பும் மிகுவது என்போன்று அறிவியல் பொறிகள் / மென்பொருட்கள் விற்பனையாளனாக மும்பையில் பணி செய்யத் தொடங்கிய அனைவருக்கும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இன்று அவரை சந்தித்தபோது மும்பையில் அனீமியாவின் ( ரத்தச்சோகை?) தீவிரம் குறித்து விளக்கினார்.
.இளைஞர்கள் - குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் 65% மாணவியரும் ஏறக்குறைய அதே விழுக்காடு மாணவர்களும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
. பள்ளிகளில் - குறிப்பாக வசதி படைத்த/ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவர்/சிறுமியர் படிக்கும் பள்ளிகளில அனீமியா 70%க்கு மேல்..
இது சிறிது அதிர்ச்சியான தகவல்.
மருத்துவத் துறை வல்லுநர்கள் ( மருத்துவர்கள், செவிலியர்) ,அனீமியா குறித்து அறிந்தவர்கள் மத்தியில் இது எத்தனை விழுக்காடு என நினைக்கிறீர்கள்?
100% செவிலியர்கள் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் - மும்பையில்.
60% மருத்துவ வல்லுநர்கள்களுக்கு அனீமியா உண்டு.
45000 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 2 வருடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதனை முனைந்த நடத்திய ஆய்வாளர் " குப்பை உணவு " கல்லூரி,பள்ளிகளின் அருகில் கிடைப்பதே காரணம் என்றார். முதலில் இந்த கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்றவர்கள் பலர்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் "முன் தயாரிக்கப்பட்ட உணவுகளின் ஊட்டச்சத்து விகிதத்தை பொய்யாகச் சித்தரிக்கின்றன" என முன்பு ஒரு முறை நுகர்வோர் அமைப்புக் குழு ஒன்றின் ஆய்வு மையத்தில் கேள்விப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். "இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை" என்ற ஒரு ஆய்வாளர் , பிரபலமான ஒரு ஊட்டச்சத்து உணவில் இடப்படும் மாவுப்பொருள் கிடைக்கும் விதத்தைச் சொன்னார். வேண்டாம்.. விடுங்கள். கேட்டால் , அந்த பானத்தைக் குடித்தவர்கள், வாயில் விரலை விட்டு வாயிலெடுத்து விட்டே மறு வேலை பார்ப்பீர்கள்.

ஒரு வாரம் முன்பு பங்களாதேஷில் எனது டீலரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பால் பவுடரில் மெலாமைன் கலப்படத்தைக் கண்டுபிடிக்கும் முறைபற்றிக் கேட்டார். " அது சீனாவில் அல்லவா வேண்டும்? உங்களுக்கு எதுக்கு?" எனக் கேட்டுத் தொலைத்தேன்... " அந்த சீனப் பால் பவுடர்கள் இங்கு படு சீப்பாக கிடைப்பதால் எளிய மக்கள் வாங்குகிறார்கள்- பாவம், தங்கள் குழந்தைகளுக்குத் தானே விஷம் கொடுப்பது தெரியாமல்.." என்றவர் சொன்ன விதம் நெடுநேரம் நெஞ்சைப் பிசைந்தது..

சிறிது விழிப்புணர்வு நமக்கு அவசியம். பெரிய பெரிய மால்களில் கிடைப்பதாலும், பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என்பதாலும் மட்டுமே உணவு வகைகளை வாங்காமல், இது நமக்குத் தேவையா? எனப் பார்த்து வாங்குவது நலம். புரதச்சத்து வேண்டும் என்றால் செயற்கை புரதக்கலவைகளை டின் டின்னாக வாங்குவதை விட்டுவிட்டு, முளைகட்டின பயறுகளையும், பொட்டுக்கடலை போன்றவற்றையும் சிறிது சிறிதாக உணவில் சேர்க்கப் பாருங்கள்.

சோகைபற்றி பின்பு பார்ப்போம்..

Thursday, September 11, 2008

இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியா? - 2

தேசிய மொழிக்கும் அலுவலகத் தொடர்பு மொழிக்கும் உள்ள வேறுபாடு புரிபடுவது கடினமல்ல எனினும், இதை விளக்க மெனக்கெட வேண்டும். மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறை, மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் இந்தி பிரசார அமைப்புகள் செய்த LOBBY ( தமிழில் என்ன பதம் இதற்கு?) 50களில் தொடங்கி 90கள் வரை நீடித்ததும் இதற்கு ஒரு காரணமே.

நளன் சொன்னதுபோல வரலாற்றுத்துறையின் தவறு என்றாலும், அதற்கான முதலீடும் ஆதரவும் டெல்லியிலிருந்து கிடைக்கும்போது உண்மைகள் புதைபடுவது ஆச்சரியமல்ல. தமிழ் தமிழ் எனக் கூப்பாடு போடும் திராவிட அமைப்புகள் இதனை பொதுமக்களுக்கு ( தமிழ்நாட்டில் மட்டுமல்ல) கொண்டுசெல்ல,பிற மாநிலங்களின் மொழி வளர்ப்புகழகங்களுடன் தொடர்பு கொண்டு முனைந்திருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு இதெல்லாம் செய்ய எங்கே நேரம்? வெறுமே இந்தி மொழிப் பலகைகளில் தார் இட்டு அழிப்பது புரட்சியாகாது.

தெருவோர அரசியலுக்கும் மொழி ஆர்வத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 60களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பிற மாநிலங்கள் பார்த்த விதம் " தமிழ் வெறி/ இந்தி துவேசம்".

தெளிவாக பிற மாநிலங்களில் நம் நிலையை எடுத்துச் செல்லாதது எவர் குற்றம்? வங்கமும், வடகிழக்கும்கூட இந்தியை எதிர்க்கின்றன. அவர்களுக்கு இந்த அடைமொழி " வெறியர்கள் " இல்லை. நமக்கு மட்டுமே.

இந்தி எதிர்ப்பிற்கும் இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாகரீகமான, ஆரோக்கியமான அரசியல் நமது நிலையை ஜனநாயகமான மொழிச்சுதந்திரத் தேவை என நிரூபித்திருக்கும். நமக்கு பக்க பலமும் கிடைத்திருக்கும். தவறி விட்டோம்

Wednesday, September 10, 2008

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?

இந்தனை நாள் கழித்து எழுதவர்றவன் ஒழுங்கா வேற எதாச்சும் எழுதக்கூடாதா? எனக் கோபப்படுபவர்கள் சிறிது பொறுக்கவும்.

ஜெயா பச்சன் குண்டக்க மண்டக்க எதோ பேசப்போக, ராஜ் தாக்கரே வரிந்துகட்டிக்கொண்டு " உ.பி பையாக்களே, அலகாபாத் ரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும்" எனக் கையை காடியது நேற்றுத்தான் என்றாலும்...
"சரிடே, என்னதான் இருந்தாலும், இந்திதானே இந்தியாவின் தேசிய மொழி?" எனப் பலர் நேர்மையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, ஜெயாவுக்கு பரிந்துவரும்போது, தெரியாத்தனமாக எனது நண்பர்கள் குழாத்தில் கேட்டுவிட்டேன்
"யார் சொன்னது இந்தி , இந்தியாவின் தேசியமொழி என்று?" என...
அவனவன் அடிக்காத குறை...
"ஸ்கூலில் படிக்கலையாக்கும்? "
" நீ தமிழ்நாடுக்காரன்.. அதுதான் இந்தி வெறுப்பு.. தேசியமொழி இல்லை எனச் சொல்லும் அளவு வெறி"
என 'நான் இந்தியனே இல்லை, நாட்டுப்பற்றே கிடையாது' என்ற அளவுக்கு பேச்சு..

சான்றுக்கு நான் விக்கிப் பீடியாவை அழைத்தாலும், பல இணையதளங்கள் இன்னும் "இந்தி இந்தியாவின் தேசிய மொழி" என எழுதியிருக்கவே, அங்கும் தகறாறு.

இந்திய அரசியல் கோட்பாடு 343 இந்தி மொழி, தேவனாகரி எழுத்தில், யூனியன் அரசின் அலுவல் மொழி" என மட்டுமே சொல்லியிருக்கிறது.
தேசிய மொழி என எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை என எனக்குப் பண்டு படித்தாக நினைவு.

தெரிந்தவர்கள் கூறவும்... இந்தி தேசிய மொழியா?

Saturday, March 08, 2008

சமூக இடைவெளி ( முடிவு)

சில நாட்கள் முன் மீண்டும் ரோஷனை சந்தித்தேன். சட்டென வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
" அந்தப் பையனை வேலைக்கு எடுத்த்தீர்களா? " என்றேன். சுத்தமாக அந்த நேர்முகத்தேர்வு நிகழ்ச்சியை மறந்தே போயிருந்தான்.
"ஆங்.. ஞாபகமில்லையே" என்று சிரமித்தவன், " அவன் பேர் தெரியுமா?" என்றான்.
"தெரியாது" என்றேன். "எத்தனையோ பேர் வர்றாங்க. யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறது" என்று அவன் முணுமுணுக்கவே, விட்டுவிட்டேன்.
அவன் விடவில்லை. கோப்புகளை வருவித்து ஒவ்வொரு படிவமாகப் பார்த்தான்.
இறுதியில் "இல்லை" எனத் தலையாட்டினான். "டெக்னிகல் அறிவு போறவில்லை" என அப்பையனது பயோடேட்டாவின் மேல் ஸ்டாப்லெர் செய்யப்பட்டிருந்த படிவத்தில் வேலை மறுப்பு காரணங்களில் டிக் செய்யப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் மனது சங்கடமாக இருந்ந்தது.
இதையும் கேட்கப் போனால் ,"டெக்னிகல் அறிவு இல்லைன்னு சொன்னா, எப்படிவே எடுக்க முடியும்?" என வாக்குவாதம் வளரும்.

ஆனால், எனக்கு என்னமோ , அவனுக்கு கேள்விகள் புரிந்திருக்காது எனவே பட்டது. ஆங்கில உச்சரிப்பு புரிந்திருக்காது போயிருக்கலாம். அல்லது ஏற்கனவே ரோஷன் "வள்" என விழுந்திருந்ததில் நடுங்கிப் போயிருக்கலாம். எதுவோ, அவன் அங்கு வேலையில் இல்லை...

நடுத்தர நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரிடும் தடைகள் பெரும்பாலும் புரியப்படாமலே போகின்றன. அவர்களது சமூக, பொருளாதார சிக்கல்களும், வந்த பாதைகளும் மறைக்கப்பட வேண்டியவையாக நகர வாழ்க்கை அழுத்தும்போது, அவை உணரப்படுவதில்லை.

நான் முன்பு பணியாற்றிய கம்பெனிகளில் பலர் சிறுநகரங்களில் இருந்து வந்து, மும்பையில் "நானும் உங்களில் ஒருவன் பார்" எனக் காட்டுவதில் திரிந்து வாழ்க்கையே போலியாக வாழ்ந்தது இன்னும் நினவிருக்கிறது. அவர்களின் பலரது வாழ்வு வெறுமையானதை இன்றும் பார்க்கிறேன் - வருத்ததோடு.

வேலைக்கு வெளியிடம் வரும் மாணவர்களுக்கு ஆயத்தப் பயிற்சிகள் கொடுக்கப் படாதவரை, அவர்கள் தங்கள் பொறுப்புகள் இன்னவென அறிந்து கொள்வது மட்டுமல்லாது, ஒரு நிஜ கார்டியனிடத்து தங்கள் கவலைகளை கலந்து ஆலோசிக்காதவரை இப் புண்படுதல்களும், அழுத்தங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

Friday, February 29, 2008

சுஜாதா - சில எண்ணங்கள்

சுஜாதாவின் மரணம் குறித்து மரத்தடியில் அறிந்தேன்.
ஒரு மானசீக வழிகாட்டியை தொலைத்திருக்கும் கனத்தில் மனசு இடறியதில் கொஞ்சம் எழுதத் தோன்றியது.

அவரது கதைகளின் மூலமே கொஞ்சம் தரமான கதைகள் பக்கம் கால்வைத்த பலர் உண்டு.குறிப்பாக 70, 80களில் "அட, இப்படியும் போகுமா கதை?" என ஆச்சரியமாக சிறுகதைகள் படித்தவர்களில் நானும் ஒருவன்.
"ராகினி என் வசமாக' என்ற கதையின் இறுதியில் " நான் இறங்கி நடந்து போவதை நானே பார்த்தேன்" என வரும்.. இது கொஞ்சம் குழப்பமாக் இருந்தது முதலில். சிறிது சிறிதாக உணரத் தொடங்கியதும், நூலகத்தில் சுஜாதா கதைகளை காத்துக்கிடந்து படிக்கலானேன். சில புரிந்தது - சில புரியாமல் சீண்டியது. இது அவரது பெரும் வெற்றி எனலாம்.மேலும் பல புத்தகங்களைப் படிக்கவும், ரெஃபரன்ஸ் பார்க்கவும் தூண்டியது.

இதனால் நான் என்னமோ இலக்கியவாதியாக ஆகிவிடவில்லை. "பேயாகத் திரிந்த பங்காரு, ரத்தக்காட்டேரியின் பழி" போன்ற கதைகளையும், ராஜேந்திர குமார்-இன் கதைகளையும் படித்து புளகித்த என்னைப்போல் பலருக்கும் ,' அறிவியல் கதைகள் என ஒன்று உண்டுடே ' என அவர் அறிமுகப் படுத்தியது உண்மை.
தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி எனலாம் அவரை - தைரியமாக.

சில அறிவியல் உண்மைகளை அவர் சரி பார்க்காதது தவறாக இருக்கலாம். லேசர், ஹோலோகிராஃபி என்பதெல்லாம் "கொலையுதிர் காலங்கள் " வரும் வரை பலரும் அறிந்த வார்த்தைகள் இல்லை. அறிவியல் புனைக்கதைகளில் அவர் மேலும் கவனம் செலுத்தி இன்னமும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கலாம். தமிழகத்தின் துரதிருஷ்டம்- அவருக்குப் பின் அப்படி எழுத எவரும் வரவைல்லை இன்னும்.

ஜனரஞ்ஜகத்தில் இருந்து இலக்கியவாதியாக பரிமளிக்க முடியாது என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அவரது அறிவியல் புனைக்கதைகள் மூலம் தனி இடத்தை இன்னும் மேலாகவே அவர் பெற்றிருக்க முடியும்.தமிழகம் அவரது எழுத்தை கணேஷ் வசந்த் , வைணவர் ,ஜனரஞ்சகம் என்பதாகவே சிலாகித்தது. அவரும் நாமும் ஒரு வேலிக்கு இரு புறமும் நின்று ஒருவரை ஒருவர் ரசித்திருக்கிறோம்.

இழப்பு பெரிது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Sunday, January 13, 2008

சமூக இடைவெளி (4)

சமூக இடைவெளி (4)
அடிப்படையில் கிராம, ரெண்டுங்கெட்டான் நகர வளர்ப்பில் ஒரு பிழை.
அடக்கம் என்பது கோழைத்தனம் இல்லை. கர்வத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்கிறது. நல்ல பையன் என்றாலே நாம் என்ன சொல்லிக் கேட்டிருக்கிறோம்?. "அடக்கமா இருக்கணும். கேட்டால் மட்டுமே பதில் சொல்லணும். கீழ்ப்படியணும்" இது விபரீதமானது.

தைரியத்தைக் குறைத்த மாணவன் நல்ல பையனாகிறான். பள்ளியிலும், வீட்டிலும் அடக்கமானவன், அதிகம் பேசாதவன் - நல்ல பையன். நல்ல மார்க் வாங்குபவன் -புத்திசாலி. சிந்திப்பதை மழுங்க அடிப்பது படிப்பாகிறதா? நல்ல பொம்மைகளை உண்டாக்குவதைத் தவிர இந்த கல்வித்துறையும், சமூக அழுத்தமும் என்ன சாதித்துவிட்டது?

நகர மாணவர்களின் அழுத்தங்கள் வேறு. தன்னுடன் படிக்கும் மாணவர்களை விட முன்னே நின்றுகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவன் பல நுணுக்கங்களை வளர்ந்துக்கொள்கிறான். அவனுக்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறது. கிராமத்து கல்லூரி மாணவர்களுக்கு வெளியுலகம் காண என்.சி.சி தவிர எந்த எக்ஸ்போஷர் இருக்கிறது? நல்ல அழுத்தத்திலும் உள்வெப்பத்திலும் நகரத்து கரிக்கட்டை கூட வைரமாக ஜொலிக்கிறது. கெடுக்கும் அழுத்தத்திலும் வெப்ப்பத்திலும் கிராமத்து கட்டை கிராபைட்டாக மட்டுமே ஆகிறது. இது கட்டையின் குற்றமா? அழுத்தம் கொடுப்பவனின் குற்றமா?
தொடரும்

சமூக இடைவெளி (3)

சமூக இடைவெளி (3)

இண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....

இரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் எங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.
சென்னையிலிருந்து - தெரியாத எண். " உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்" பலான வங்கியின் கால்? எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் தொடருமுன் " எனக்கு கடனட்டை வேண்டாம்" என்றேன் அவச்ரமாக.. அவர் சிரித்தார் " இல்லை சார். இது உங்கல் ப்ளாக்க் குறித்தது".. குழம்பினேன். மீண்டும் விளிப்பதாகக் கூறி வைத்தேன். மறந்தும் போனேன்.

சாயங்காலம் மீண்டும் அழைத்தார். நான் மன்னிப்புக் கேட்டதைப் பொருட்படுதாமல் தொடர்ந்தார்" நீங்கள் சொன்ன இடைவெளியின் வலி நானும் அறிவேன்." என்றார். இளநிலை பொறியியல் மெக்க்கானிகல் படித்துவிட்டு நேர்முகத் தேர்வுகளில் திணறி ஒருவழியாக வேலை கிடைத்தட்ச் சொன்னவர் தொடர்ந்தார்." என்னுடன் படித்த பலரும் இன்னமும் சரியான வேலை இல்லாமல் திணறுகிறார்கள். எப்படி தன்னைக் காட்டிக்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நகரங்களில் படித்த மாணவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டுக்கெட்டான் நகரங்களிலிருந்து வந்த நாங்கள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் திண்டாடுகிறோம்" என்றார்.

இது நான் அறிந்ததுதான். என் மனைவி நக்ர்ப்புறக் கல்லூரிகளில் லெக்சரராக இருந்துவிட்டு இப்போது மும்பையின் ஒரு "ஹை-ப்ரொஃபைல்" கல்லூரியில் வேலைபார்க்கிறார்.நகர்ப்புற மாணவர்கள் நல்ல திறமை இருந்தும், தெளிவாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, கொஞ்சம் தெரிந்தாலே மிக தைரியமாக "விட்டு அடிக்கும்" நகர மாணவர்கள் திறமை குறித்து அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
" நான் பட்டது என் ஜூனியர்ஸ் படக்கூடாது சார்" என்றார் சென்னை அன்பர். " என் கல்லூரியில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் போய் எப்படி நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் செய்யவேண்டும் ,எப்படி உடை அணியவேண்டும், எப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் எனப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இதுபோன்ற பயிற்சி முகாங்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் முக்கிய அம்சங்களையும், எனது அனுபவங்கலையும் சேர்த்து அவர்களிடம் சொல்கிறேன்" என்றார். பாராடப்பட வேண்டிய விஷயம். தனது செல்போன் நம்பரைத் தந்தவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் ( நிறுவனத்திலிருந்து எதேனும் தடை வருமோ?).
தொடரும்

Sunday, January 06, 2008

சமூக இடைவெளி-2

சமூக இடைவெளி-2


1985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.
ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு வினாடி வினா நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்ததால் அவரைக் குறித்து சிறிது அறிந்திருந்தோம்.
ஜீன்ஸும், டீ ஷர்டும்மாய் ஒரு ஞாயிறு மாலை, துறைமுக பள்ளியில் ஒரு வகுப்பில் "எப்படி நேர்முகத்தேர்வுகளை சந்திப்பது?" என்பது குறித்து அவர் பேசினார். எப்படி உடை அணியவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து அவர் சொன்னது எங்களுக்குப் புதியதாக இருந்தது.

இது நடந்து சில நாட்களில் கல்லூரி அளவிலான "சிறந்த மாணவ/மாணவியர்" தேர்வு ஸ்பிக் ரோடராக்ட் நடத்தியது. நானும் போயிருந்தேன். நேர்முகத் தேர்வு ... எனது முறை. எனக்கு முன் சென்ற பெண் சிரித்தபடி வெளியேறினாள். நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து நுழைந்தேன்... தட்டாமலே.. "உள்ளே வரலாமா? என்று கேட்காமலே..

ஷர்மா என்ன்னைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கியது. " வெளியே போய் , கதவைத் தட்டிவிட்டு, "உள்ளே வரலாமா?" எனக்கேட்டு விட்டு, அனுமதித்தால் மட்டும் நுழை.." என்றார். அவமானத்தில் சுண்டிப்போனேன். சுதாரித்தபடி வெளியேறி, மீண்டும் நுழைந்தேன், கதவைத் தட்டி, அனுமதி கேட்டபின்...

என்னை எவரும் இருக்கச் சொல்லுமுன் ஒருவர் எனது கால்களைக் கவனித்தார். " இண்டர்வியூ-ன்னு தெரியுமில்லே? பாத்ரூம் செருப்பு போட்டுட்டு வந்திருக்கே?"
ஷர்மா அவரை உடனே அடக்கினார்." இந்த தேர்வு நடத்துவதின் நோக்கம், இவர்களைக் குற்றம் சொல்வதற்கு இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு . முழுமனிதனாக உருவாக்குவதற்கு" என்று கடிந்தவர், புன்னகையுடன் என்னைப்பர்த்தார். "இண்டர்வியூவில் உன் திறமையை மட்டுமில்ல, நீ உன்னை எப்படி மதிக்கிறாய், எப்படிக் உன்னைக் காட்டிக்கொள்கிறாய் என்பதும் முக்கியம். சும்மா அலட்டச் சொல்லலை. எளிமையாக , அதேசமயம் சுத்தமாக உன்னைக் காட்டவேண்டும். புரியுதா?" என்றார். மேற்கொண்டு கேட்ட பல கேள்விகள் நினைவில்லை. தோல்வியுடன் திரும்பியபின் என் நண்பன் குட்டியிடம் எல்லாம் சொன்னேன். கடற்கறை மணலில் கைகளைத் தலைக்கடியில் வைத்து அண்ணாந்து படுத்திருந்த சிறிது நேர அமைதியின் பின் கேட்டேன் " மக்கா, பாத்ரூமுக்கெல்லாம் செருப்பு போட்டு போவாங்களாடே?"
அவனுக்கும் அக்கேள்வி எழுந்திருக்கும்.
எழுந்து நடக்கையில், கடற்கரை மணல் உள் புக செருப்பு உறுத்தியது.
இன்னும் உறுத்துகிறது.

சமூக இடைவெளி -1

சமூக இடைவெளி-1

ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக.

நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென செல்போன் சிணுங்கியது. நண்பன் ராகேஷ்.
" எப்படி இருக்கிறாய்? நான் அடுத்தவாரம் அமெரிக்கா போகிறேன். இன்று என் ஆபீஸ் வருகிறாயா?பார்த்து நாளாகிறது." அழைப்பைத் தட்டமுடியாமல் அவன் அலுவலகம் விரைந்தேன்.

சிலர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகேஷ் கான்ஃபெரன்ஸ் அறையில் இருந்தான். " இன்னும் அரைமணி நேரம் வேலை. ஒரு நேர்முகத்தேர்வு. நீயும் உட்கார். உனது தனிப்பட்ட அனுமானங்கள் எனக்கு உதவும்." நானும் அமர்ந்தேன். இளம்பொறியாளர்களுக்கான தேர்வு. ஒரு வருடம் , 2 வருடம் அனுபவம் கொண்ட இளைஞர்கள்....
ஒரு நபரின் தேர்வு முடிந்ததும், நானும் ராகேஷும் அவ்விளைஞனைக் குறித்து சிறிது பேசிக்கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு திறத்நது. அடுத்த நபர் நுழைந்தார்... சொல்லாமலே.
ராகேஷ் முகம் கோபத்தில் சிவந்தது. "வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?". அவ்விளைஞன் தடுமாறிப்போனான். "சார்" என்றான் புரியாமல். ராகேஷ் இம்முறை கத்தினான்.."ஐ ஸே, கெட் அவுட்"
அவ்விளைஞன் அவமானத்தில் சிறுத்தான். "சாரி" என்றவாறே வெளியேறினான்.
" யார் இவன்?" ராகேஷ் கோபம் தணியவில்லை. " கதவைத் தட்டிவிட்டு நுழையவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள்..."

நான் அவனது பயோடேட்டாவைக் கவனித்தேன். பெயர் தெரியாத சிற்றூரில் இருக்கும் பொறியியல் கல்லூரி, நாந்தேட் என்னுமிடம் அருகே, (மராத்வாடா பல்கலைக்கழகம்?)
"சரி விடு" என்றேன் ராகேஷிடம். "அவனை அழைத்து தேர்வு நடத்து". " முடியாது" என்றான் ராகேஷ் முறைத்தபடி. "இவனையெல்லாம் வைத்துக்கொண்டு என்னால் குப்பை கொட்ட முடியாது.வேலை பயிற்றிக்கலாம். எதெல்லாம் சொல்லித் தருவதென்று ஒரு அளவு இல்லையா?"
"அவன் அவனது சூழ்நிலையின் கைதி." என்றேன். " இது இம்மாணவர்களுக்கு புது அனுபவம். அவன் வாழும் ஊரில் யார் இதெல்லாம் சொல்லித்தருவர்கள்?"
ராகேஷ் ஒரு கணம் நிதானித்தான்.
"இது நீ படித்து வந்த காலம் இல்லை சுதாகர்" என்றான். அவனுக்கு எனது அனுபவம் தெரியும்..

தொடரும்