Monday, May 18, 2009

ஊடகங்களுக்கு பொறுப்புணர்வு தேவையில்லையோ?

“எங்கடா பிணம் கிடக்கும்?” என அலைவது வல்லூறுகள் மட்டுமல்ல, வீடியோ கேமெராவும், மைக்கும் , சாட்டிலைட் ஆண்டெனா பொருத்தப்பட்ட வேனுமாகத் திரியும் இந்த ஊடகக்காரர்களும்தான்...

பிரபாகரன் மரணம், புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர்களின் மரணம் என்பது அதிர்ச்சியான செய்தி, வலிமிகும் செய்தி - ஒரு இன மக்களுக்கு... அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ,ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது பின்னடைவுதான். தமிழ்மக்கள் குறித்து ஒரு பயலுக்கும் உணர்வில்லை- இந்திய ஆங்கில ஊடகங்கள் இதில் முன்னணி.

செய்தி தருவதிலும், ஆராய்வு செய்வதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அவசியமேயில்லாமல் சில பரபரப்பு வார்த்தைகள் தொலைக்காட்சியில்...
“ எல்.டி.டி.ஈ அழிந்தது”.
என்ன கேணக்கூத்து இது? இவன்களுக்கு டெல்லி, மும்பை தவிர ஒரு சாலையிலும் செல்லத் தெரியாது.. வட இலங்கையின் காட்டுக்குள்ளே வலியுடன் போரடுபவர்களைக்குறித்து ஏ.ஸியில் இருந்து “ அவன்களா, செத்துட்டாங்கடே.. லங்கா ஆர்மி அழிச்சேபோட்டுட்டான்” எனப் பேசுபவர்களை இழுத்து நாலு அறைவிடலாமா என ஆத்திரம் வருகிறது. தொழில் மரியாதை தெரியாத பதர்கள்...

ஓட்டு எண்ணும் இடங்களில் கூடியிருந்து, தலையைத் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, என்னமோ மிகப் பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தமாதிரி பேசும் பத்தாம்பசலிகளும், ஸ்டூடியோவில், கோட்டும் சூட்டும் மாட்டி, தெரிந்த மாதிரி புள்ளிவிவரங்களை அள்ளிவிடும் படுபுத்திசாலிகளும், இலங்கை மாதிரி மிக சென்சிடிவான விசயங்களை விவாதிக்காமல் இருப்பது நல்லது. அதான் தோத்த, ஜெயித்த கட்சிப்புள்ளிகள் இருக்காங்களே....அவங்ககிட்ட வழக்கம்போல “ எப்ப உ.பி கிராமங்கள்ல மின்சாரம் வரும்?” எனக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? இந்திய வடகிழக்கு மாகாணங்கள் எத்தனை உண்டு என்பதே இவர்களில் பலருக்குத் தெரியாது.
இருக்கிற தமிழர்களையே கண்டுகொள்வதில்லை ( ஓட்டு மட்டும் வேணும்). இவன்கள் எங்கே இலங்கை பத்தி உருப்படியா சொல்லப்போகிறான்கள்?
ஒரு வேளை இவர்களிடம் நான் ரொம்பவே எதிர்பார்த்துவிட்டேனோ?
ஒண்ணு நிச்சயம்.. இனி ஒரு விரிசல் இருக்கும்.... தமிழன் - தமிழல்லாதவன் என... குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை.

முடிவு?.....

இவர்களெல்லாம் மனிதர்களா?

பிரபாகரன் இறந்ததாக செய்தி வந்ததில் சிறிது குலைந்துதான் போனேன். புலிகள் கையாண்ட வன்முறையில் எனக்கு சம்மதமில்லை எனினும், ஒரு தமிழ் இயக்கம் என்ற அளவிலும், குறி நோக்கியே நகர்ந்து, பல உயிர்த்தியாகங்களில் வளர்ந்த அவ்வியக்கத்தில் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு இயக்கத்தின் ஒரு அங்கம் சோகமான முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு வருத்தம் உண்டு... இலங்கைத்தமிழர்களின் அவலநிலைக்கு இவ்வியக்கம் , சற்று நிதானித்திருந்தால் , பல குழுக்களுடன் கூடி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

செய்தியை வலைத்தளத்தில் படிக்கும் போது வருத்தம் கொதிப்பாக மாறியது. கமெண்ட்ஸ் இடுகைகள் ( ரிடிஃப்.காம்) பிரபாகரன் இறந்ததைக் கொண்டாடுவது கண்டு கோபம் மூள்கிறது. ஒருமனிதன்.. எத்தனை கொடுமைகள் சந்தித்திருந்தால் இப்படி ஒரு நாட்டையே குலை நடுங்க வைக்கும் அளவு மாறியிருப்பான்? எத்தனை பேர் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்? ஏன் இந்திய பஞ்சாபிகள், பெங்காலிகள் இன்னும் 1947 பிரிவினைக் கொடூரங்கள் குறித்து கொதிப்பது நியாயமென்றால், இலங்கையில் எரிவது கண்டு கொதிப்பது எந்த விதத்தில் குறைந்துபோனது.
ஒரு கமெண்ட்... “ இன்று கொண்டாடுங்கள்.. ஸ்டாக் மார்க்கெட் 14000, காங்கிரஸ் வெற்றி, பிரபாகரன் மரணம்..” சே! என்ன மனிதர்கள் இவர்கள்? ஸ்டாக் மார்க்கெட் ஏற்றம் போன்ற அல்ப காரணங்களும், ஒரு மரணமும் ஒன்றாகுமா?

ஒருவேளை, ராஜபக்சேக்குத் தெரிந்தேதான் இருநாட்கள் பொறுத்திருக்கும்படி இந்திய அரசு சொல்லிற்றோ? எங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெட்டுங்கள் என? அழுக்கான அரசியலில் எதுவும் சாத்தியம்.

இன்று மனம் கனத்திருக்கிறேன். ஒரு தமிழன் என்ற அளவில் எதையோ இழந்த சோகம்... இழந்தது இனத்தின் மானமா? வேதனை என் கையாலாகத்தனம் குறித்தா? வெட்கமா? தெரியவில்லை.
இறந்த தமிழ்வீரர்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
இனியாவது, கொஞ்சம் சுரணை சேர்த்து வாழத் தலைப்படுவோம்.

Sunday, May 17, 2009

அவர்கள் உறங்கவில்லை.

அந்த சப்தத்திற்கு நிச்சயமாக யாரும் உறங்க முடியாது. நான் விழித்திருந்தது வியப்பில்லை.

தாரை தப்பட்டைகளுடன் ஆடியபடி ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம். பின்னால் ஒரு சிறிய மாட்டுவண்டி., மின்விளக்குகள் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலமென பொருத்தமேயில்லாதபடி கன்னாபின்னாவென சொருகப்பட்டு, ஜெனரேட்டர் ( அல்லது பாட்டரி?) மின்சாரத்தில் அடிக்கவரும் நிறக்கலவையாக மின்னியபடி மெதுவாக அக்கூட்டத்தின் பின்னால் வந்துகொண்டிருந்தது. சிறுவர்களும் சிறுமியர்களும் அதிலிருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தனர்.

கணபதி பூஜை வருவதற்கு பல மாதங்களிருக்கின்றனவே? இது என்ன புதுசா இப்போது? என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், கீழிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர் அருகே வந்தார். “ அட, இவங்களா?” என்றார். நான் விழித்தேன்.

”இவர்கள் பூர்வீகக் குடியினர். முன்பு தாணே மலைப்பகுதியிலிருந்து பால்கர் கடற்கரை வரையிலிருக்கும் பரப்பளவில் வசித்தவர்கள். வேலை தேடி வந்தவர்கள் ,இப்போ சேரிப்பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்கள் பண்டிகைகள் வேறு காலங்களில் வரும். நம்ம பக்கமும் இருக்காங்களா? “ என வியந்தார். * வேண்டுமென்றேதான் அக்குடியினரின் பெயர் சொல்லாமல் விட்டிருக்கிறேன். கூகிளில் தேடினால் கிடைக்கும்.

நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்கர் ரயில் நிலையத்தில், இளநீர், சப்போட்டா , நாவல் பழம் என எதாவது காட்டில் விளைவதை விற்றுக் கொண்டிருப்பார்கள். பெண்களின் உடை சற்று வித்தியாசமாக இருக்கும். பெரிதாகப் பொட்டு நெற்றியில்...

சிவாஜி காலத்திலேயே சுதந்திரமாக இருந்த இம்மலைவாழ் மக்கள், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகம் பாதிக்கப்படவில்லை . சுதந்திரத்தின் பின்னே, அரசியல் வாதிகளால் அவர்கள் இருப்பிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு, வேலை தேடி வேறிடம் குடிபுக நேர்ந்தனர்.

காலப்போக்கில் மும்பை கலாச்சாரத்தில் இணையவும் முடியாமல், தங்கள் வாழ்வுமுறையை முற்றிலும் மாற்றவும் முடியாமல் திண்டாடி, சிலர் திருடுவதைத் தொழிலாகக் கொண்டனர். பலர் தொழிற்பட்டறைகளிலும், சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட, வெகு சிலரே படித்து முன்னேறினர். எங்கள் அலுவலகத்தில் பணியாளராக இருக்கும் இருவர் இந்தக் குடியினர். அதில் சந்திரா என்பவன் கொஞ்சம் சகஜமாகப் பேசுவான்.

மறுநாள் சந்திராவை அழைத்து “நேத்து என்ன விசேஷம்?” என்றேன்.முதலில் தயங்கினான்.
பின்னர் காபி குடிக்கப் போனபோது பேண்ட்டரியில் தனியாக இருப்பதை உறுதிசெய்தபின்னர் மெதுவாகப் பேசத்தொடங்கினான். “ அது எங்க கிராமங்கள்ல எங்க கடவுள்களுக்கு செய்யிற மரியாதை. கிராமங்களெல்லாம் காட்டுப்பக்கமா இருக்குமா? பூஜை முடிந்து திரும்பிப் போகும்போது , காட்டுல எதாச்சும் மிருகங்க தாக்கும். அதுக்காக நாங்க கூட்டமாக, சப்தம் எழுப்பியபடியே போவோம். இந்தப் பயலுவ இங்கயும் வந்து இதச் செய்யறானுக?” என தர்ம சங்கடமாகச் சிரித்தான். தனது இனத்தவர் ஏதோ தவறு செய்த குற்றவுணர்வு அவன் குரலில் ஒலித்தது.

“ கணபதி ஊர்வலம் போவது உனக்குச் சரியாகப் படுகிறதா?’ என்றேன். “என்னடா இப்படிக் கேணத்தனமாக் கேக்கிறான்?” என்ற கேள்வி தொக்கிநிற்க, வேகமாக “ ஆமா”
எனத் தலையாட்டினான். “ அது சரிதான் என்றால், சந்திரா, இதுவும் சரிதான்” . என்றேன். அவன் நம்பியதாகத் தெரியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மாலையில், சிறிது வேலையிருந்ததால் 7 மணி வரை அலுவலகத்தில் இருந்தேன். ஒவ்வொருவராகக் கிளம்பிப் போய்க்கொண்டிருக்க, எனது வேலையும் ஒருமாதிரியாக முடிந்தது. கிளம்பிக்கொண்டிருக்கையில் சந்திரா என் கேபின் வாசலில் மெதுவாக வந்து நின்றான்.

“ஸாப். ஒரு நிமிடம்.” என்றான். உள்ளே அழைத்தேன். அவன் அதிகம் வந்து தொல்லை செய்வதில்லை. கடன் கேட்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது.

“ நீங்கள் சொன்னதை யோசித்தேன். சரியென்றே பட்டது. கணபதிக்கு நாங்களும் ஆடிச்செல்வோம். பைசா பிரித்து பெரிதாகப் பந்தல் போடுவோம். பிரசாதம் வினியோகிப்போம். ஆனால்...” எனத் தயங்கினான். மெதுவாகத் தலைநிமிர்ந்தவன் , மெல்லிய குரலில் தொடர்ந்தான்.
“ எங்கள் பண்டிகையை நாங்கள் மட்டுமே கொண்டாடுவோம். வேறு சாதியினர் யாரும் வருவதில்லை. சாமி கும்புடுவதில்லை. ஏன் பிரசாதம் கூட வாங்கிக் கொள்வதில்லை. மலைசாதி மக்கள் நாங்கள் பாருங்கள்.”

நான் சற்று குலைந்துதான் போனேன். மும்பைச் சேரிகளிலும் வித்தியாசமுண்டா? பண்டிகைகள் , கிராமங்களில் வேண்டுமானால் சாதி பிரிவினால் வேறுபடலாம். இங்குமா?

”உங்க பண்டிகை பிரசாதம் இருக்கா ? இருந்தா எனக்கு நாளைக்குக் கொண்டுவா” என்றேன். அவன் தயங்கினான். “ இல்லை சார். அடுத்ததடவை கண்டிப்பாக் கொண்டு வர்றேன்” என்றான். பொய் சொல்கிறான் எனத் தோன்றியது. தயக்கம், மற்றும் எனது இந்தக் கேள்வி எனது அனுதாபம் மட்டுமே கொண்டதுயெனும் நினைப்புமாக இருக்கலாம். அவனது சிந்தனைக்கும் , கலாச்சாரத்திற்கும் எனது மதிப்பும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதால் நான் மேலும் வற்புறுத்தவில்லை.

“ நிச்சயமாக் கொண்டுவா. ரொம்ப தித்திப்பா இருக்காதுல்ல? எனக்கு சர்க்கரைவியாதி உண்டு. தெரியுமில்லையா?” எனச் சிரித்தேன். அவனும் சிரித்தான். இருவர் சிரிப்பிலும் ஒரு செயற்கை இருந்தது என் காதுகளுக்குக் கேட்டது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மேசையின் நாலு அடி அகலம் என்னவோ மிகப் பெரியதாகப் பட்டது.

Saturday, May 16, 2009

கல்வித்தரக் காமாலை

”பையன் இந்த வருசம் 75க்கு மேல மார்க் எடுத்திருக்கான். ஐ.சி.எஸ்.ஸி சிலபஸ் இருக்கிற நல்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒண்ணு இருக்கா?” கேட்ட நண்பரை அனுதாபத்துடன் பார்த்தேன்.
“இப்ப இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பேர் வாங்கினதுதானே? எதுக்கு மெனக்கெடறீங்க?” என்ற எனது கேள்வி அவருக்கு புரியவில்லை.

“ இந்த ஸ்கூல் மாநில சிலபஸ்... ஐ.சி.எஸ்.ஸி-ன்னா நல்ல தரம் இருக்கும்லா?” எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்ளவெனத் தெரியவில்லை.

மாநில சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் என்னமோ மட்டம் என்றும் , சி.பி.எஸ்.ஸி, ஐ.ஸி.எஸ்.ஸி சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்றும் ஒரு தவறான எண்ணம் - பெரும்பாலும் மத்தியதர , உயர் மத்தியதர மக்கள் மட்டத்தில்... இவர்களில் பலரும் மாநில சிலபஸ் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இதற்குமேல் ஒரு கேலிக்கூத்து...தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் பாடங்கள் படிக்கும் மாணவர்களை விட ஆங்கிலமொழியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்னும் பேச்சு. ஆங்கில மொழிக் கல்விக்கூடமென்றால் அடிதடி.. தமிழ், மராட்டிய மற்றும் பிற பிராந்திய மொழி வகுப்புகளுக்கு ஆளே இருக்காது இங்கெல்லாம்.


எனது மனைவி பணிசெய்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களைக்குறித்து சொல்வது நினைவுக்கு வருகிறது. ”தாய்மொழியில் கற்ற மாணவர்களும், ஐ.சி.எஸ்.ஸியில் படித்து வரும் மாணவர்களும் சேரும் வகுப்பில் பார்த்தால், அடிப்படை அறிவும், முயற்சியெடுக்கும் பண்பும் தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு அதிகம். ஐ.சி.எஸ்.ஸி , சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் “ இதெல்லாம் நாங்க ஸ்கூல்லேயே படிச்சுட்டமாக்கும்” என்ற மெத்தனப் போக்கு கொண்டு திரிந்துவிட்டு, கடைசியில் லபோ லபோவென அடித்துக்கொண்டு படிப்பார்கள்.”என்பார். என்ன, ஐ.சி.எஸ்.ஸி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. தைரியமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள். இந்த பேச்சுத்திறமை, தெளிவாகத் தனது வாதத்தை முன் வைத்தல் போன்ற மென் தொடர்புத் திறமைகள் (soft skills) அவர்களது பெரும் பலம்... தாய்மொழிக்கல்வி மாணவர்களின் பலவீனம்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இண்டர்வியூவுக்கு வரும் பல மென்பொருள் நிறுவன மனிதவள அதிகாரிகள் முன்பு சிலாகித்ததுண்டு.” தென்னிந்திய மாணவர்களுக்கு தொடர்புத் திறமை மிகக்குறைவு. ஆனால் அடிப்படை நுட்ப அறிவு அதிகம். மும்பை, டெல்லியில் வாய்ப்பந்தல் ஜாஸ்தி... ஆனால் நம்மை , அவர்களது தன்னம்பிக்கை, பேச்சுத்திறமையில் நம்ப வைத்துவிடுகிறார்கள்” என்பார்கள். இப்போது நிலமை மாறியிருக்கலாம்.

மாநிலக் கல்வித் திட்டம் பிற திட்டங்களைவிடத் தாழ்ந்தது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. எனது மகனை மாநிலக் கல்வித்திட்டம் சார்ந்த பள்ளியில்தான் சேர்த்திருக்கிறோம். அவனது நண்பர்கள் பலர் ஐ.சி.எஸ்.ஸி பள்ளிக்குப் போகிறார்கள். அதிகமான பாடச்சுமை... அடிப்படை புரியாதபடி வேகமாகப் போகும் வகுப்புகள்... அடிக்கடி தேர்வுகள் என சுமையில் அச்சிறுவர்கள் அழுந்துவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இப்போதும் எனது நிறுவனத்தில் சேரும் பல இளைஞர்/இளைஞிகளின் அடிப்படை அறிவியல் அறிவு சுமாராகத்தான் இருக்கிறது. முக்கியமாக கணக்கு... பெருக்குதல், வகுத்தல், சதவீதம் என்றால் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் முடிவதில்லை. கையில் கம்புடன் “ ம்..சொல்லுல... 84ஐ நாலால வகுந்தா என்ன வரும்?” என்று எட்டாம் வகுப்பின் கணித ஆசிரியர் குருமலை சாரிடம் படித்த என்போன்ற மாணவர்கள் என்ன குறைந்து போய்விட்டனர்? அரை நிமிடத்தில் பதில் வரவில்லையென்றால் பிரம்பு முட்டியில் பாயும்...நூறு முறை பதினாறாம் வாய்ப்பாடு எழுதிவர, பதினாறாம் வாய்ப்பாடு ஜென்மத்துக்கும் மறக்காது. அடிப்பதை நான் வரவேற்கவில்லை. வாய்ப்பாடு, மனக்கணக்கு என்பதெல்லாம், கூகிளை மேய்ந்து , பக்கம் பக்கமாக ” ஆர்க்டிக் பனிக்கரடிகளின் வாழ்வு முறை” என எழுதுவதை விட மிக முக்கியம் என்பது என் கருத்து.

தேர்தல் முடிவுகளும் இலங்கையும்

காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக “ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்” என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு “தனி ஈழம்”, உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... “அவங்க வூட்டுப் பிரச்சனை” என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் “நினைக்கமுடியாத பெரும் அழிவு” என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.