Tuesday, October 01, 2013

தி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்

நேற்று காலை “தி லஞ்ச் பாக்ஸ்” சினிமா. காட்பரிஸ் சில்க் சாக்லேட் விளம்பரத்தில் வரும், லேசான மாறுகண் உள்ள நம்ரத் கவுர் இப்படத்தின் ஹீரோயின். இர்ஃபான் கான் முக்கிய கதாபாத்திரம். இவர்களோடு உலகப்பிரசித்தி பெற்ற , உணவுக் கேரியர்களைக் கொண்டுசெல்லும் மும்பை டப்பாவாலா-க்கள் அங்கங்கே. இப்படியொரு காஸ்டிங் வைத்துக்கொண்டு முழு நீளப் படத்தை எடுப்பதற்கு அசாத்தியத் துணிச்சல் வேணும்.

பெண்களின் மன அழுத்தம், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளின் சிதைவுகள் என இஸம் பேசி ஜல்லியடிப்பவர்களுக்கு இந்த்ப்படம் ஒரு ரெபெரென்ஸாக அமையலாம். அதையெல்லாம் தாண்டி, பிதுங்கும் நெரிசலில், தடங் தடங் என ஓடும் ரயில் வண்டியின் குலுக்கல்களுக்கிடையே சில மனித மனங்களைச் சந்தித்துவிடும் ஆச்சரியங்கள் மும்பை லோக்கல் ரயில்களில் நடந்துவிடுவது போலவே, இந்தப்படமும் வியப்பில் ஆழ்த்துகிறது. இர்ஃபானின் நடிப்பு என்பதைப் பற்றி மட்டுமே இரண்டு பக்கம் எழுதலாம். எல்லாரும் எழுதுவதால் அது க்ளிஷே என முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாலும், நம்ரதாவுக்கு நடிக்கவேண்டிய கட்டாயமே கொடுக்காததால் அது குறித்து ஒன்றும் எழுத வேண்டாததாலும், நடிப்பு என்பதிலிருந்து சற்றே நகர்கிறேன்.

வேலைப்பளுவில் உழன்று , மனைவியின் சுக துக்கங்களில் பங்கு பெறாத ஒரு கணவன், சிறு பெண்குழந்தை, மேல் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் அசரீரியான தேஷ்பாண்டே ஆண்ட்டீ என சிறு 1BHK குடும்பத்தலைவியாக “ஈலா” என்ற பெண், தன் கணவனுக்காக ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்துவிட்ட லஞ்ச்பாக்ஸ் இடம் மாறி , ரிடையர் ஆகப்போகும் சாஜன் பெர்னாண்டஸிடம் வருவதில் தொடங்குகிறது கதை. அந்த லஞ்ச்சில் இருந்து அவர்களது கடிதப் பரிமாற்றம் தொடங்குகிறது. தொடர்ந்து கணவன் தனது சிறு சிறு மாற்றங்களையும், வியர்வை பொங்க சிறப்பாகச் செய்து தந்த உணவைப் பாராட்டாமலேயே இருப்பதாலும், அவள் , தான் சந்தித்து அறியாத மூன்றாம் மனிதனிடம் தனது மன அழுத்தத்தை வெளிக்காட்டுகிறாள். அதற்கு , காலியாய்ப் போன டீக் குவளையில் மிச்சமிருக்கும் இளஞ்சூட்டில் , வீங்கிய கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போல , இதமான அறிவுறைகளை பெர்னாண்டஸ் வழங்குவது வரை கதை படு டீசண்ட்டாகப் போகிறது. அட, ஆஸ்கார் போயிருக்க வேண்டிய ஒன்றாச்சே இது, என்று புலம்ப வைத்துவிடுகிறது. இதற்குப் பிறகு டைரக்டருக்கு சனி பிடித்துவிட்டது போலும். அந்த இதமான புரிதல் சற்றே கோடு கடந்து, உன்னோடு நானும் பூட்டானுக்கு வரட்டா? என்று முதிய , முதிர்ந்த மனிதர் எழுதுவதும், அதற்கு அந்தப் பெண் சட்டெனக் காதல் வயப்பட்டு விடுவதும் ...ம்ம்ம்ம் “ பாப்கார்ன் வாங்கிட்டு வரட்டுமா?” என்று சால்ஜாப்போடு வெளியே வர மனசு எத்தனிக்கிறது.
இந்த இடத்தில் திரும்பவும் உட்கார வைத்துவிடுகிறார்கள். சட்டென ஒரு புரிதல் வர, இர்ஃபான் தன் உந்துதலைத் தடுக்கிறார். அவரைப் பார்க்க நினைத்த வேகத்தில் ,மகளுடன் ஆபீஸுக்கே அப்பெண் வந்துவிடுகிறாள், பின் பூட்டான் செல்ல எத்தனிக்கிறாள். ஒரு எதிர்பார்ப்போடு படம் முடிகிறது.

வேலை அழுத்தத்தில் மனைவி கொடுத்தனுப்பும் கத்திரிக்காய் கறிமது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் , மனைவி மாற்றானோடு, பூட்டானுக்கு ஓடிப் போய்விடுவாள் என்ற பயம் இனிமேலாவது கணவன்களுக்கு இருக்கட்டும் என்ற Moral of the story கணவன்மாருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறதோ?. வேலை அழுத்தத்துடன் வீட்டைக் கவனிக்காத ஆண்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்கள் என்ற புளித்துப் போன லாஜிக்கை இன்னும் எத்தனை கதைகளில் (பால குமாரனின் ”அடுக்கு மல்லி” யும் இதில் அடக்கம்), படங்களில் பார்க்கப்போகிறோம்? எனக்கு வேலை ஜாஸ்தி என்று சொல்லவே இப்போது தயக்கமாக இருக்கிறது. இந்தமு மிகைப்படுத்துதலும், வேண்டாத ஈர்ப்புக் கண்ணோட்டமும் இல்லாமல் ஒரு நட்பாகவே ஆரோக்கியமாகக் காட்டியிருந்தால் , ஆஸ்கர் கிடைக்காவிட்டாலும், நமது முழுக் கைதட்டல்களையும் லஞ்ச் பாக்ஸ் பெற்றிருக்கும்.

பாலிவுட், கோலிவுட் படங்களுக்கு இடையில் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை, இயக்கம்... பாராட்டவேண்டும். கொஞ்சம் உப்பு தூக்கல் என்பதை விட்டுவிட்டால், முழுதும் வளைச்சு அடிக்க வேண்டிய லஞ்ச்தான்.

கைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு

கைசிக நாடகம் குறித்து மிக வித்தியாசமான அணுகுமுறையுடன் திரு. வெளி ரங்கராஜன் Veli Rangarajan அவர்கள் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் தரவேற்றியிருக்கிறேன்.

கைசிகி நாடகம் பத்து வருடங்களுக்கு மேலாக திருக்குறுங்குடியில் செம்மப்படுத்தப்பட்ட வடிவில் நடந்து வருகிறது. பேராசிரியர் செ. இராமானுஜர் அவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக இதில் தீவிரமாக உழைத்து வருகிறார். டி.வி.எஸ் நிறுவனத்தின் டாக்டர். அனிதா ரத்தினம் அவர்களின் உறுதியான ஆதரவும், அக்கறையும் இல்லாவிட்டால் இது துர்லபம்.  மிகவும் சிதைந்திருந்த ஒரு வடிவை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் கைசிகி நாடகம் என்றால் என்ன? தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒருவனால் , உயர்த்தப்பட்ட குடியில் இருப்பவர்களும், பிரம்ம ராட்சசனும் மோட்சமடையும் ஒரு வினோதமான கதை. பகவானுக்கு பாகவதன் மிக முக்கியம் என்பதும் அதில் ஜாதி ஒரு தடையேயில்லை என்பதையும் வலியுறுத்திய புரட்சிகரமான புராணம். இதை கைசிகி புராணம் என்று அழைப்பார்கள். இதன் சிறப்பை விளக்கி கைசிகி மஹாத்மியம் என்ற வடமொழி நூல் உள்ளது. இதனை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்ற அற்புத நூலின் ஒன்றாம் ப்ரகரணத்தில் ஒரு சூத்திரத்தில் ”நிலையார் பாடலாலே, ப்ராமணன் வேள்விக் குறை முடித்தான்” என்று  கொண்டாடியிருக்கிறார்.

கைசிகி புராணம் வருடம் ஒருமுறை கைசிக ஏகாதசி அன்று  திருவரங்கத்தில் அரையர் சேவையாகவும், திருக்குறுங்குடியில் நாடக நிகழ்வாகவும்  பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வந்திருந்தது. கைசிக புராணத்தின் நிகழ்வாக்கத்தை, விரதமிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து அனுபவித்தால் முக்தி கிட்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

இதில் திருக்குறுங்குடி நாடக நிகழ்வாக்கம் 1900களின் முற்பகுதியில் ( ‘30களில் தொடக்கமாக என என் ஊகம்) நலிவடையத் தொடங்கி, ‘80களில் முற்றும் மறைந்து போன நிலையில் , வெறும் சாஸ்திரம் காரணமாக தவறுதல்களோடு, ஒரு முனைவின்றி, திருக்குறுங்குடிக் கோயில் வளாகத்தில் மிகக் குறைவான பக்தர்களின் எண்ணிக்கையில் நடைபெற்று வந்தது. அதனை மீட்டெடுக்க பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் ஈடுபட்டார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இது பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.

அப்படி என்ன இந்நாடகத்தில் சிறப்பு?
கைசிக நாடகத்தில் அன்றைய வழக்கத்திற்கு எதிரான ஒரு பெரும் புரட்சி இருந்தது. நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அப்போதெல்லாம் பெண் கதாபாத்திரத்தைக் கூட ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்த காலம். அதுவும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள் அன்றைய சமூகக் கொடூரத்தால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தேவதாசிகள் சமூகத்தினர். பகவானான நம்பிக்கிழவரிலிருந்து, நம்பாடுவான் (ப்ரம்ம ராட்சசன் தவிர) வரை அத்தனைப் பாத்திரங்களும் தேவதாசிப் பெண்கள் ஏற்று மண்டபத்தின் மேலேறி  நடத்த, உயர் சாதியினர்கள்  கீழே தரையில் , பயபக்தியுடன் அமர்ந்து பார்த்த ஒரு சாதித் தளங்கள் திருப்பப்பட்ட நிலை உருவாயிருந்தது!

அது மட்டுமல்ல, பக்தி என்பது ஜாதியைத் தாண்டியது என்பது , நாங்குநேரியில் ஒரு மூதாட்டியிடம் பேராசிரியர் இராமானுஜம் எடுத்த பேட்டியின் குறிப்பிலிருந்து விளங்கும் “ தேவதாசிகளெல்லாம் மேடையில வேஷம் கட்டி ஏர்றப்போ, கூட்டத்துக்குள்ளே இருந்துதான் மேடைக்குப் போவா. உக்கார்ந்து இருக்கறவா,அவாளை அப்படியே கால்ல விழுந்து சேவிப்பா. நம்பி, நம்பாடுவானா வேஷம் கட்டியிருக்கிறவாளை, நாடகம் முடிஞ்சதும், வயசான ப்ராமணர் முதக்கொண்டு, எல்லாரும் சேவிப்பா. பாத்திருக்கேன். வயசோ, ஜாதியோ பாக்கப்படாது. அப்போ அவ வெறும்  மனுஷியில்லை. சாக்‌ஷாத் நம்பாடுவான், நம்பி-ன்னா?”

ஜாதிகள் அற்ற , பெண் அடிமைத் தளை அற்ற, சமூக சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் கைசிக நாடகத்தை நீங்களும் திருக்குறுங்குடி சென்று அனுபவியுங்கள்.

"எங்ஙனேயோ அன்னைமீர்காள்
      என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
      தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
      செல்கின்றது என் நெஞ்சமே" நம்மாழ்வார். திருவாய்மொழி.




காந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்

ஆறு மணிக்குள்ளே ஆபீஸ் விட்டுக் கிளம்பியிருக்கணும். கொஞ்சம் கதைபேசி நின்றதில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியாகிவிட்டது. காரின் இரு புறமும் ஈக்களாய்ப் பறந்துபோகும் மோட்டார்சைக்கிள்கள். சர்ரக் என உரசிவிட்டு, லேசாகத் திரும்பி, ஹெல்மெட்டின் ப்ளாஸ்டிக் முகத் திரையை உயர்த்தி விட்டு யாருக்கும் கேட்காத குரலில் ‘சாரி’ என்றுவிட்டு சென்றுவிடுவார்கள். டெண்ட் எடுக்கவும், டச் அப் செய்யவும், பாஷா பாய் வீட்டையே எழுதிவைக்கச் சொல்லுவான்.

கொஞ்சம் எச்சரிக்க்கையோடுதான் முன்னேறினேன்.
இரு மோட்டார்சைக்கிள்கள். ஒன்று என் வலதுபுறம், மற்றது இடதுபுறம்- நேராக என் ஜன்னல்கள் அருகே. சிக்னல் போஸ்ட்டில் பச்சை எல் இடி தப்புத் தப்பாக நொடிகளைக்காட்டியது. இதுவும் நெரிசலுக்குக் காரணம் போலும்.

கண்ணாடியை இறக்கிவிட்டபோதுதான் கவனித்தேன். வலப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளின் பில்லியனில் ஒரு பெண், மடியில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். அதன் கன்னத்தை விடப் பெரிசாக கருப்புப் பொட்டு கன்னத்தில் ஈஷியிருக்க, நெற்றியில் பவுடர் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. சிறு உருளைகளாகக் கைகள், அதன் விரல் முட்டிகளில் சிறு பள்ளங்கள், மெத்து மெத்தென உப்பிய புறங்கைகள். லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது.

திடீரென அது என்னைப் பார்த்து “அய்ங்” என்று பொக்கைவாய் காட்டிச் சிரித்தது. ஹலோ என்றேன். அது சற்றும் மிரளாமல், மீண்டும் ஒரு சிரிப்பு. கையை சம்பந்தமில்லாமல் மேலும் கீழும் ஆட்டி, ஒரு நொடியில் என்னை விட்டுவிட்டு சாலையில் இருந்த கல்லைப் பார்க்க ஆரம்பித்தது. பத்து செகண்ட்களில் மீண்டும் என்னைப் பார்த்தது. அதே சிரிப்பு., அதோடு ’நங்கா மிங்கா’ என ஒரு குழறல். “சே கழுதை. என்ன சிரிப்பு?” என்றேன். இப்படிக் கூர்ந்து பார்க்கிற அளவுக்கு நம்ம மூஞ்சி அவ்வளவு பிரகாசமாக இருக்காதே என்ற சந்தேகத்தோடு, குழந்தை பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தேன். நினைத்தது சரிதான். என்னைத் தாண்டி, இடப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளில் பில்லியனில் இருந்த பொண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கிறது.

வண்டிகள் மெல்ல நகரத் தொடங்கியிருந்தன. இரு மோட்டார்சைக்கிள்களும் நகர்ந்து முன்னே என் வண்டியின் முன்னே பைலட் போலச் சென்றிருந்தன. இரு வண்டிகளும் மிக அருகில். நானும் காரை மெல்ல நகர்த்தினேன்.அந்தப் பெண் பக்கவாட்டில் திரும்பி குழந்தை தன்னைப் பார்ப்பதையும், குழறுவதையும் கவனித்துவிட்டாள். குழந்தை அவளை நோக்கிக் கையை நீட்டி, இரு விரல்கள் வானை நோக்க, இரு விரல்கள் அவளை நோக்க, கட்டைவிரல் எங்கேயோ நோக்க, அகல விரித்து , அம்மாவின் மடியில் துள்ளியது. அவள் தன்னிச்சையாக அதனை இறுகப் பிடிப்பது தெரிந்தது. இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்? என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ? கொஞ்சமாய்த்தான் அகலம். சற்றே பக்கவாட்டில் குனிந்து அதன் குஞ்சுக்கைகளை முத்தமிடலாம்.

அவள் வெடுக்கெனத் தலையை மறுபுறம் திருப்பினாள். பார்க்க விரும்பாதவளைப் போலே. ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் வியர்க்க வியர்க்க, வேகமாக கையை அசைத்து அனைவரையும் முன்னே போகச் சொல்லிக்கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் பாதையில் விரிந்து விரைந்தன.

ஒரு கோபம் என்னுள் விரிந்துகொண்டிருந்தது. சட்டென இறங்கி, அந்தப் பெண்ணைப் பிடித்து “ஏவுட்டி, ஒரு குழந்தை உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதை அலட்சியம் செயயுமளவுக்கு, அப்படியென்ன திமிரு?” என்று ஒரு வார்த்தை வாங்கலாம் என்று தோன்றியது.

இயலாமையில் கியரும் , கிளட்ச்சும் ஒரு சேராமல் வண்டி “வய்ய்ங்க்” எனத் திமிறி , சில நொடிகளின் பின் சீரானது. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும் ( என்னைத் தவிர. அவை அழுதால் டென்ஷனாகிவிடுவேன்.) அதுவும் பெண்கள் குழந்தைகளை வெறுக்க சான்ஸே இல்லை. முன்னே போனது ஒரு பெண்ணில்லை. அன்பென்னும் சுவை அறியாத மிருகம்..
மெல்லக் குறள் ஒன்று மனதுள் எழுந்தது.

காந்தள் விரல்நீட் டுமின்பறியா ளொத்தாளே
தீந்தேன் அறியாக் கவி

கவி - குரங்கு காந்தள் - விரல் போலிருக்கும் மலர்

ஸ்ரீவரமங்கை ,”அந்தப் பெண்ணுக்கு என்ன ப்ரச்சனைன்னு நமக்குத் தெரியுமா?. அதை ஏன் போய்த் திட்டணும்? இதான், மெல்லிய உணர்வுகளைக்கூட உங்களுக்கெல்லாம் வல்லியதாகத்தான் சொல்லத் தெரிகிறது” என்றாள். இது என் பழைய blunderகளை வெளிக்கொணரும் அபாயமிருப்பதால், அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

Saturday, September 14, 2013

பல் பிடுங்கும் படலம்



“இதப் புடுங்கியே ஆகணும்” என்றார் டாக்டர் ஷோபா ஹெக்டே, ஆ வெனப் பிளந்திருந்த என் வாயில் கோணலாக வளர்ந்திருந்த கடைவாய்ப்பல்லை, நுனியில் கொக்கி போல வளைஞ்சிருந்த ஒரு கருவியால் தட்டி நோண்டி, தீர்மானமாக. ”அதெல்லாம் வேணாம்” என்று சிரித்து மழுப்பமுயன்றேன். “ அனாவசியமாப் பல்லைப் பிடுங்கறீங்களே? பல்லிடுக்குலே ஒரு சிறு தாணா மாட்டிக்கொண்டால் அதை எடுக்கறதுல என்ன சுகம் தெரியுமா? ஒண்ணுமே கிடைக்கலேன்னாக்கூட, ஒரு குச்சியை உடைச்சு, உரிச்சு, நோண்டற சுகம் இருக்கே?”  ஷோபா, என்னை கடுப்போடு பார்த்தார். “பக்கத்துல இருக்கற பல்லும் கெட்டுப் போகுது. அப்புறம் குத்தறதுக்குப் பல்லே இருக்காது. இதுவும் ஜோக்கா உங்களுக்கு?” எக்ஸ்ரேயில், படுத்தபடி இருந்த கடைவாய்ப்பல்லைக் காட்டினார். ”எப்பவோ பிடுங்கியிருக்கணும். மூணு வாரம் கழிச்சு வாங்க. வெளிநாட்டு டூர் போறேன். வந்ததும் கூப்பிடறேன்” . அவர் எழுதிக்கொடுத்த புதிதாக ஒரு மவுத் ரின்ஸ்ஸும் ( மண்ணு மாதிரி டேஸ்ட். மார்க்கெட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி டேஸ்ட் கூடப் பண்ணிப் பாக்க மாட்டீங்களாடா?) ,அஸித்ரோஸின் மாத்திரைகளுமாக, என் பல்புடுங்கும் படலத்தின் முதல் அடி எழுதப்பட்டது.
கிட்டத்தட்ட இதனை மறந்தே போயிருந்தேன். திடீரென அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று முந்தாநாள் வந்தது. ”நாளை மாலை 730க்கு வரவும்”  அதோடு ஓரு போன் வேறு “ சாப்பிட்டுட்டு வந்துருங்க. சுகர் எல்லாம் நார்மல்தானே?” இல்லையென்றால் விடப்போகிறார்களா? விதியே எனப் போனேன்.
“டூர் எங்க போயிருந்தீங்க?”டென்ஷனைக் குறைக்கத்தான் கேட்டேன்.          “ ஆஸ்ட்ரியா, செக் ரிப்பப்ளிக்.” என்றார். மரண வலி மேடையை அவரது அசிஸ்டெண்ட் சுத்தம் செய்துகொண்டிருக்க, பீதியை மறைத்தபடி “ ஆஸ்ட்ரியால எங்க?” என்றேன். “சால்ஸ்பெர்க். சரி , சேர்ல உக்காருங்க. மவுத்வாஷ் இருக்கு, யூஸ் பண்ணிக்குங்க”
சற்றே வியந்தேன். “ Sound of Music ஷூட் பண்ணின இடமெல்லாம் பாத்தீங்களா?” என்ன கேள்வி இது என்பதுபோலப் பார்த்தார். திருப்பதி போறவங்களை எங்க கோயிலுக்கா? என்றா கேட்பீர்கள்? “மொசார்ட் காம்போசிஷன்ஸ் எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும். அதான் குறிப்பா சால்ஸ்பெர்க். பத்து நாள்.” என்றார். எனக்கு அதுவரை அவர் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தில் ரசனை உள்ளவர் என்பது தெரியாது. அவரது கொடூரக் கருவிகள் தயாரகும் வரை, மொசார்ட்டின் இளமைக்கால வரலாறு குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ராணி தெரெசாவின் மடியில் அமர்ந்த சிறுவன், பெரும் புகழ் பெற்ற இசைக்கலைஞன் இறுதியில் ஒரு அனாதையாக மரித்த வரலாறு. ’நல்லடக்கம் கூடக் கிடைக்காமல், ஒரு வண்டியில் கொண்டுபோய் வீசப்பட்டது அவன் உடல்’ என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பலதும் சொல்லியபடியே  மின்விளக்கை என் வாய் நோக்கிச் சரித்தார். “கொஞ்சம் முதல்ல வலிக்கும். ஒரு பக்கமா வீங்கறமாதிரி, நாக்கு தடிக்கிறமாதிரித் தோணும்போது சொல்லுங்க. என்ன? ஆங். மொசார்ட் கடைசிகாலத்துல, குளிருக்கு கையுறை கூட இல்லாம, கால்ல கிடந்த சாக்ஸை கையில் போட்டுகிட்டு, அப்புறம், அதைக் கழட்டி கால்ல மாட்டிக்கிட்டு.. ரொம்ப்ப் பரிதாபம். அப்படியும் அவன் எழுதறத விடலை பாருங்க... அதான் டெடிக்கேஷன். வீங்குதா?”
“ஆஆங்” குழறினேன். இன்னும் இரு ஊசிகள் ஈறுகளில். ஜிவுஜிவு என ஒருபக்கம் வீங்கிவர, அவர் எலக்ட்ரிக் சுழல் ரம்பம் ஒன்றை எடுத்தார். இரும்புக் குழாய்களை அறுக்கும்போது, பால் மாதிரி ஒன்றை அறுக்குமிட்த்தில் ஊற்றிக்கொண்டேயிருக்க, ரம்பம் அறுத்துச் செல்லும். அதேபோல, கறுஞ்சிவப்பாய் ஒன்றை வாயில் ( ஆ. பால் ஊத்தறாங்களா?) அவரது அசிஸ்டெண்ட் ஊற்றி வர, ’சொய்ங்க்’ என்ற ஒலியுடன் வாயுள் ரம்பம் நுழைந்தது. சில நிமிட வலியின் பின் “ 10 பவுண்ட் அழுத்தம் கொடுத்துத்தான் பல்லை நெம்பி எடுக்கறேன். கொஞ்சம் தாடையை அகலமா வைச்சுக்குக்ங்க. மீனாக்‌ஷி, அந்த சி.டியைப் போடுங்க. “
இசை மெலிதாக இழைந்து வர, திடீரெனெ வயலின்கள் உச்சஸ்தாயியில் எகிற, அனைத்து இசைக்கருவிகளும் பித்துப் பிடித்தாற்போல் அலறத் தொடங்க... அட இதென்ன  அவர் கையில்?.. பெரிய குறடு.

“மிஸ்டர் சுதாகர். இப்படி காலையெல்லாம் உதைக்கக்கூடாது. கையைக் கட்டுங்க. உங்க பையன் கூட ஒழுங்காக் காமிச்சான். மீனாக்‌ஷி, அடுத்த ட்ராக் போடுங்க.”
மெதுவாக அது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். சவத்தெளவு மேற்கத்திய இசையில் எப்ப தொடங்குகிறது , மேலே போகிறது என்று சொல்லவே முடியாது.  இசை திடீரென உச்சஸ்தாயியை எட்டியது. அசிஸ்டெண்ட் ரப்பர் உறையிட்ட கைகளால், என் இரு கன்னங்களையும் தட்டிக்கொண்டிருக்க, “ முடிஞ்சிடுத்து. இப்ப உங்க பல்லு என் கையில. ஒரே நிமிஷம். இன்னும் கொஞ்சம் ஆ -ன்னு “ 
ஆ வென அலறினேன். எதோ என்னிலிருந்து பெயர்த்தெடுத்த உணர்ச்சியில். “ Good. keep that jaw opened".. இசை ஒரு முகட்டில் கீச்சிடும்போது, பாஸ் கருவிகள் அதிர, ,குறடு வெளியே வந்தது
”பல்லைப் பாக்கணுமா? ” ஏதோ பிரசவ வார்டில், குழந்தையைக் காட்டறா மாதிரியில்ல கேக்கறாங்க.? ரத்தம் தோய்ந்த அந்த வெள்ளை வஸ்துவை நான் பார்க்க விரும்பவில்லை. “ நீங்க கொண்டுபோறீங்களா? “
“ எனக்கு பல் தேவதைகளிடம் நம்பிக்கை இல்லை” என்றேன் தீனமாக. அப்படிச் சொல்லியதாக நினைத்துக்கொண்டு குழறினேன்.
அவர் சிரித்தார். ”டெண்ட்டல் மாணவி ஒருத்தி வந்து இதனை சேகரித்துச் செல்வாள். இந்த புடுங்கிய பற்களில் முதலில் படிப்பார்கள். நான் படிக்கும்போது ஒவ்வொரு பல் ஆஸ்பத்திரியாக நடந்திருக்கிறேன். “
அவர் முன் நாற்காலியில், ஒரு ஐஸ் பேக்கை கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்த போது, கேட்டார் “ மொசார்ட் சிம்பனி 40 எப்படி இருந்தது?”
முன்பிருந்த தாளில் எழுதிக்காட்டினேன். “முதலில் போட்ட ட்ராக், மொசார்ட் இல்லை. அது வில்லியம் டெல் ஓவர்ச்சர்.” ” “Good observation" என்றார். ” பல்லைப் புடுங்கும்போது  மொசார்ட்தான் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக ஒரு கோடா - குறடு புடுங்கியது கரெக்ட் டைமிங்” என்று எழுதினேன். அவர் புன்னகைத்தார்.
வீட்டுக்கு வந்தபின் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் “சைக்கோவ்ஸ்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  அவனுக்கு நிச்சயம் பல் பிடுங்கப் பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் இவ்வளவு ஆழமான வலியுடன் Symphony Pathetique இயற்றியிருக்க முடியாது. மொசார்ட் வாழ்வில் அனுபவித்த துயரங்களோடே பல்லும் பிடுங்கியிருந்தால் அவன் முடிக்காது விட்டிருந்த சிம்பனியை ஒரு pathetique ஆக முடித்திருப்பான்”

அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. 

Friday, September 06, 2013

டீ எப்ப வரும்?

டீ எப்ப வரும்?
_________

மூன்று மாதங்கள் முன்பு , நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் சர்வீஸ் எஞ்சினீயராகப் பணிபுரிந்த நண்பரை ஒரு கஸ்டமர் அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. நண்பரின் வீடு அருகிலேயே இருக்கிறதென்பதால், “ வாங்க ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போலாம்” என்றார். நல்ல மனிதர், தானுண்டு தன் வேலையுண்டு என்று , ஒரு அரசியலிலும் இறங்காத அப்பழுக்கற்ற அவரது வேண்டுகோளை மறுக்கமுடியாமல் , அவருடன் சென்றேன். மும்பையின் வழக்கமான சிறிய வீடு. படு புத்திசாலித்தனமாக சிறிய அறைகளிலும் அனைத்தையும் கச்சிதமாக வைத்திருந்தார்கள்.  அவன் மனைவியையும் , மாமியாரையும் அறிமுகப்படுத்தினான். மாமனார், பேரனுடன் வெளியே போயிருக்கிறார் என்று அறிந்தேன்.

டீ க்கு சர்க்கரை வேணுமா? “ என்ற கேள்வியின் பின் அவர்கள் இருவரும்  சென்று விட , ஒரு கிழவர் உள்ளே நுழைந்தார். கூடவே ஒரு சிறுவனும்.

“என் மாமனார்” . கைகூப்பி வணக்கம் தெரிவித்தவருக்கு சுமார் எழுவது வயதிருக்கும். கணீரென்ற குரல். இஸ்திரி போட்ட வெள்ளைவெளேரென்ற சட்டை, பைஜாமா. “இந்தூரில்தான் வேலை பார்க்கத் தொடங்கினேன். பத்து இடமாற்றங்கள். அப்புறம் இந்தூர்லயே ரிடையராகிட்டேன். இவ ரெண்டாவது பெண். மூத்தவ ராய்ப்பூர்ல இருக்கா.” அதென்னவோ, ரிடையர் ஆகிவிட்டால், பயோடேட்டா, கேக்காமலேயே தந்துவிடுகிறார்கள்.

‘தாத்தா” என ஓடிவந்த பையன் என்னைக்கண்டதும், சற்றே வெட்கி, வளைந்து அவரது கால் முட்டைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தபடியே, அவரது பைஜாமாவைக் கடித்து நின்றான். “ முதல்ல கொஞ்சம் வெட்கப்படுவான். அப்புறம் கலகலன்னு... நாலு வயசுதான் ஆகிறது. ஆனாப் பாருங்க, அசாத்திய மூளை.டேய் சொல்லுறா...” நான் உஷாரானேன். விருந்தினர் எதிரே தங்கள் பிள்ளை,பேத்திகளின் மூளைத்திறனை எக்ஸிபிஷன் போட்டுக் காட்டும் காலமெல்லாம் எப்பவோ போயாச்சே? எனக்கு இந்த சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமெனத் தெரிவதில்லை. அசடு வழிந்துகொண்டு, ஒரு செயற்கைச்சிரிப்போடு “வெரிகுட்” என்பதோடு என் பதில்கள் நிற்கும். எப்படா இங்கிருந்து கிளம்புவோம் என்ற துடிப்பின் விளிம்பில் நிற்பேன். அத்தகைய சந்தர்ப்பமொன்று இது...

“ சூரஜ் பேட்டா, 459 ஸ்கொயர்  என்ன?” . என்ன இது மலேசிய அபாக்கஸ் கிளாஸுக்கு ஆள் சேக்கறாங்களா? ’விடுங்க , குழந்தையைப் போட்டு..” என்றேன்.

என் நண்பர் வாயெல்லாம் பல்லாக “ இவருக்கு இதெல்லாம் பிடிக்கும் மாமா. 6174 -ன்னு தமிழ்ல - தமிழ்லதானே? ஒரு கணக்கு புக் எழுதியிருக்காரு” . அடப்பாவிகளா, கணக்கு புக்கா? ஏண்டா எழுதினோம்னு நினைத்த பல தருணங்களில் ஒன்று கூடியது.  இவனிடம் இப்படிச் சொன்னவனை துருப்பிடித்த பழைய ப்ரின்ஸ் பிளேடால் கன்னத்தில் கிழிக்கவேண்டும்.

பையன் எதோ முணுமுணுத்தான். முகத்தை தாத்தாவின் மடியில் புதைத்துக்கொண்டான். அவர் மீண்டும் மீண்டும் நச்சரித்து, குனிந்து கேட்டு ஒரு எண்ணைச் சொன்னார். பெருமிதமாக ”கரெக்ட்” என்றார். ” இந்தூர் ரயில்வேஸ் குவாட்டர்ஸ்ல இருந்தப்போ எங்க சீஃப் அக்கவுண்டண்ட்  மதன்மோகன் மிஸ்ரான்னு ஒருத்தர். அவருக்கு கால்குலேட்டரே வேண்டாம். எல்லாம் மனக்கணக்குத்தான். ஒரு வருஷம் அவரை நச்சரிச்ச அப்புறம் ரகசியமா கணக்குல இருக்கிற குறுக்கு வழிகள்- ன்னு சில ட்ரிக்குகளைச் சொல்லிக்கொடுத்தார். காலங்காலமா அவர்கள் குடும்பத்துல பழகி வர்ற ஒரு வித்தை. வேதகாலத்துலேர்ந்து இருக்கிற வித்தை. அவர் குடும்பத்துக்கு அப்புறம் நாந்தான் வெளியாள் அதைக் கத்துகிட்டது. அடுத்த மாசம் பாருங்க, சூரஜ், ஸ்கொயர் ரூட் கத்துகிட்டிருவான் அதுவும் அஞ்சு டிஜிட் எண்களுக்கு. ”
ஒரு பிளாஸ்டிக் புன்னகையை முகத்தில் அப்பியபடி, தலையை ஆட்டி ‘க்ரேட்” என்றேன்.

 டீ எப்ப வரும்?

”இதெல்லாம் டை கட்டி, கோட் போட்டு இன்னும் வெளிநாட்டுக்காரங்களுக்கு வால் பிடிக்கிற உங்களுக்கெல்லாம் பிடிக்காது. தெரியும். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-ல போடவேண்டியதையெல்லாம் எதுக்கு மூளைல போடணும்? -னுவீங்க. நம்ம நாட்டு வித்தை.. அதெல்லாம் உங்களுக்கு மதிக்கத் தெரியாது. வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரி. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. வளர்ப்புதான்.  டேய். நீ எப்படி ஆன்ஸர் கண்டுபிடிச்சேன்னு மாமாக்கு சொல்லு”

நம்ம ஊர்களில் சிறுமிகளை “ இந்த மாமிக்கு, அலைபாயுதே பாட்டு தெரியாதாம். ஒருதடவை நீ பாடிக்காட்டுடி செல்லம்மா” என்று நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம்  என் மனைவியை முட்டாளாக்கி, தன் பெண்களை பிசிறும் குரலில் அலைபாயுதே பாடவைத்துப் பரவசப்பட்ட பெண்மணிகள் எனக்கு நினைவுக்கு வந்தனர். இப்போது நான். அவள் வெகு இயல்பாக நடந்து கொண்டு  விடுகிறாள். எனக்கு அதெல்லாம் வருவதில்லை. மூஞ்சியே காட்டிக்கொடுத்து விடுகிறது.

 டீ எப்ப வரும்?

ஆ. வந்து விட்டது. பத்து நிமிடம்  அந்த முதியவர், அமைதியாக டீ குடிக்கவிடாமல்,  வெளிநாட்டவரிடம் கைகட்டி வேலைசெய்யும் எனது வேலையெல்லாம் இழி தொழில் என்ற புதிய உண்மையை உணர்த்திவிட்டு, இந்தியாவின் பழம்பெரும் கல்விச் செல்வங்களை அறியாது வீணடிக்கும் அறிவிலிகள் நாட்டுப் பற்றும் , கலாச்சார உணர்வும் இல்லாத மடையர்கள் எனவும் அறிவுறுத்திவிட்டு, அவர் எழுந்து சென்றார்.

காரில் என்னை பஸ் நிறுத்தம் வரை கொண்டு விட வந்த நண்பர் தர்ம சங்கடமாகச் சிரித்தார். “ அவர் சொல்வதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாதீர்கள். என்னையும்தான் திட்டுவார் - அமெரிக்க கம்பெனியின் அடிமை என்று. ஆனால் , அந்த கணித சூத்திரங்கள்... அமேசிங் இல்லையா? உங்களுக்கு அடுத்த புத்தகத்துக்கு உதவும்”  நான் என்ன தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்குப்  பத்தாம் கிளாஸ் கணக்குப் புத்தகமா எழுதுகிறேன்? என்று வாய் வரை வந்தது. ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வந்த பேருந்தில் ஏறினேன்.

“அவர் சொன்னது ட்ராக்டென்பர்க் சிஸ்டம் ஆஃப் ஸ்பீட் மாத்தமேட்டிக்ஸ். சூரிச்-சில் விளைந்தது - இந்தூரில் இல்லை” 

Saturday, August 31, 2013

பேரு சொல்லக் கூடாது

திடீரென நண்பரிடமிருந்து காலையில் போன். “ வே , நீரு இன்னும் வண்டிய எடுக்கலேல்லா?. அந்தப்பக்கமாத்தான் வர்ரேன். ஆபீஸ்ல கொண்டு விட்டுடுதேன். என்னா?” மழையில் ஊர்ந்து கொண்டிருக்கும் நெரிசலில் க்ளட்ச்சுக்கும், ஆக்ஸிலரேட்டருக்குமாக அல்லாடும் கால்கள் நம்முடையதல்ல இன்றைக்கு என்னும் குஷியில் ‘ மெயின்ரோட்டுல நிக்கேன். அஞ்சே நிமிசம்” என்றேன். நண்பர் ரேடியோவில் பாடும் பாட்டோடு சேர்ந்து தானும் கர்ணகடூரமாக , இன்றாவது பாடாமல் இருக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு காத்திருந்தேன். “ஆடியோ ரிப்பேராயிட்டுல்லா. நாளைக்குத்தான் புதுசு மாட்டணும்” என்ற நற்செய்தியோடு மனிதர் கிளப்பினார். ஆண்டவரே,நன்றி. இன்று எனது நாள். 

”அந்தக் கோட்டிப்பய ராபின் வந்திருந்தான்லா போனவாரம்? என்னன்னு கேளும் கதய” என்றார். ராபின் அவரது இம்மீடியட் பாஸ் - மான்செஸ்டரில் இருக்கிறான். வருஷா வருஷம் “மும்பையில் மாதம் மும்மாரி பெய்கிறதா? கஸ்டமரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா?” என்ற சடங்குமயமான வருகை ஒன்று அவனுக்கு உண்டு. “ம்” என்றேன். நெரிசல் அதிகமாகவே இருந்தது. 

” லண்டன் ஒலிம்பிக்ஸ்ல நாங்க ஒரு பெரிய ஆர்டர் வாங்கியிருந்தோம் பாத்துக்கோரும். நம்மூர்ல, பெருசா ரெபரன்ஸ் சொன்னாத்தான கஸ்டமர் நம்புவான்? எல்லா எடத்துலயும் சொல்லிட்டேன். இவன் போன வாரம் வாரான். கேக்கீராவே?”

“ஆங்.கேட்டுகிட்டுத்தான் இருக்கேன். நீரு பாடறத விட நல்லாத்தான் இருக்கு. சொல்லும்”

“அங். ஒரு கஸ்டமர் விசிட் கொண்டுபோயிருந்தேன். அவரு புட்டு புட்டு வைக்காரு. ’ஒலிம்பிக்ஸ்ல பெரிய ஆர்டரு வாங்கினீயளாம். இந்த மாரி பெரிய இடத்துல வித்தீயன்னு சொன்னா , நமக்கும் ஒரு நம்பிக்க வருதுல்லா. சரி. என்ன டிஸ்கவுண்ட்டு ?’ன்னு நேரா அடிமடியில கை வச்சுட்டாரு. குஜராத்தியில்லா. முதல்ல டிஸ்கவுண்ட். அப்புறம்ந்தான் என்ன விசயமா வந்தீ?யன்னுவாரு. இவன் மூஞ்சி அப்படியே சிறுத்துட்டு. வெளிய வந்து எங்கிட்ட கறாராச் சொல்லுதான். இந்தா நமக்கும் ஓலிம்பிக்ஸ் கமிட்டிக்கும் ஒரு லீகல் உடன்படிக்கை இருக்கு. அவங்க பெயரை எந்த இடத்துலயும் இழுக்கக்கூடாது.இந்த மாதிரிச் சொல்லிட்டுத் திரிஞ்சீருன்னு அவனுக்குத் தெரிஞ்சிச்சீ, நாம காலி”ங்கான். “
“என்ன புதுக்கதயா இருக்கு? இங்கனக்குள்ள, வாங்கலைன்னாலும், டாட்டா, பிர்லா, ரிலயன்ஸுன்னு எல்லாப்பொரையும் போட்டுத்தான நாம பேசுவம்?”
“அந்தக் கூ**யானுக்கு விளங்கலவே! வேணும்னா “இங்கிலாந்துல ஒரு பெரிய விளையாட்டு நிகழ்ச்சியில போதைப்பொருள் டெஸ்ட் பண்ண எங்க கருவியும் பயன்படுத்தினார்கள்”ன்னு வெளக்கெண்ண கணக்காச் சொல்லுங்கான். பேரைச்சொன்னா அது சட்டப்படி உடன்படிக்கையை மீறுதாம். சவத்தெளவு”

“வுடும். உமக்கு எப்படியும் ஆர்டர் கிடைச்சுருமுல்லா?”

”அது போவட்டு. அவனுக்கு கடைசிநாளு, ஒரு ஓட்டல்ல எங்குடும்பத்தோட போயி விருந்து கொடுத்தேன். என்ன ஆச்சு.. ஓட்டல்ல எம்மவன் நிக்க மாட்டேக்கான். ஒரே முரண்டு. அங்க ஓடுதான்...இங்க ஓடுதான். அம்மா , இவளபபாத்து “ அவனப் பிடிடி”ன்னு அடிக்கடிச் சொல்லிக்கிட்டிருந்தாங்க. இவன் கடைசில ஒண்ணு கேட்டான் பாத்துகிடுங்க”

பாலம் கடந்தும் நெரிசல். சிக்னல் தாண்டும்வரை இப்படித்தான் என்னிக்கும்.

“ நாம் அப்பலேர்ந்து பாக்கேன். உங்கம்மா ஏன் அவனப் வேற பேர் சொல்லில்லா கூப்பிடறாங்க?". நாஞ்சொன்னேன் “ அவனுக்கு எங்கப்பா பேருல்லா விட்டிருக்கு. அதான் அவங்க கூப்பிடறது வேறபேரு.” “அதென்னா?”ன்னான். “ புருஷன் பேரு சொல்லிக் கூப்பிடமாட்டாங்கடே. லே சதாசிவம், வாரியா இல்லயா. சாத்திருவேன்” -ன்னு அவங்க சொல்ல முடியுமா ?”ன்னேன். கக்கேபிக்கே-ன்னு சிரிச்சான்”

சிக்னல் அருகே வந்துவிட்டோம். 

“நாஞ்சொன்னேன் “ முகமேயில்லாத, ஒரு ஒலிம்பிக்ஸ் கமிட்டி, அது சொன்னதுக்கு இவ்வளோ பம்மி, பேரச் சொல்லக்கூடாதுன்னு சொல்லிதியே? இத்தன வருசம் கூடவே இருந்த மனுசன், குடும்பத்தைக் காப்பாத்தின ஒரு ஆளுக்கு மரியாதை எவ்வளோ இருக்கணும்? அவர் பேரைச் சொல்லக்கூடாதுன்னு ஒருத்தங்க தனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக்கிட்டா, அது சிரிப்பா இருக்காடே?” -ன்னேன்”. 
பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

நான் கொஞ்சம் அசந்துதான் போனேன். சிக்னலைத் தாண்டியிருந்தோம். கார் வேகமெடுத்தது.

“ சரிவே. நல்லாத்தான் சொன்னீரு. ரோட்டைப் பாத்து ஓட்டும்வே. வல்லாத்த, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது”

“ நாம ஒழுங்காத்தான் ஒட்டிக்கிட்டிருக்கோம். வெளங்கா?. நடுவுல எவனாச்சும் கொழுப்பெடுத்து வந்து விழுந்தா, அது அவன் விதி. மடியில கனமில்லவே. வழியில எதுக்கு பயம்ங்கேன்?”

Monday, August 26, 2013

செங்கால் நாரை - சிறு கதை

இக்கதை தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் "சொளந்தர்ய சுகன்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்தது

செங்கால் நாரை
--------------------------

"ஹை! அது என்ன அங்கிள்? பெரிசா ஒரு க்ரேன்?" வைஷ்ணவி துள்ளிக் குதித்தாள். "ஸ்... கார் ஓட்டும்போது மாமாவைத் தொந்தரவு செய்யாதே"பின்னாலிலி
ருந்து அவள் அம்மா ப்ரேமா அடக்கினாள். சாலையோர மைல்கல்,காருகுறிச்சி இரண்டு கிலோமீட்டர் என்றது. எனது மாருதி அம்பாசமுத்திரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.சிங்கப்பூரிலிரிந்து குடும்பத்தோடு வந்திருந்த நண்பன் சுந்தரம், குலதெய்வத்திற்கு வழி பாடு செய்யவேண்டுமென்று சொன்னதால், எனது காரிலேயே கிளம்பியிருந்தோம்.
"கேட்கட்டும். விடும்மா. குழந்தைகளுக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்"
"அது கொக்கு இல்லேம்மா. நாரை. செங்கால் நாரை."
சாலையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் இருந்த நீர்த்தேக்கத்தில் நாரைகளும் இதர தொலைதூரத்திலிருந்து வந்திருந்த பறவைகளும் சோம்பலாக மீன்பிடித்துக்கொண்டிருந்தன.
"அங்கிள்.கொஞ்சம் பக்கத்துல போய்ப் பார்க்கலாமா?" வைஷ்ணவி கெஞ்சினாள்.
"ரொம்பத்தான் செல்லம் இவளூக்கு... காலாகாலத்துல கோயிலுக்குப் போனோமா,
வந்தாமான்னு இல்லாம.. இதுவரை கொக்கே பாக்காத மாதிரி" பொருமிய பிரேமாவை சுந்தரம் எரிச்சலாகப்பார்த்தான்.
காரிலிருந்து வைஷ்ணவியை இறக்கினேன். ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று முகத்தைத் தாக்கியது.
"ரொம்பத் தள்ளிப் போகாதே, வைஷ்ணவி.. கண்ட கண்ட தண்ணில எல்லாம் கால் வைச்சு, காய்ச்சல் வந்துடப் போகுது"
பறவைகளீன் வினேதமான சப்தங்களும்,ஒரு விதமான துர்நாற்றமுமாகப் பரவியிருந்த,பாசி நீர்ப்பரப்பில் மெதுவாக நடந்தோம்.

வைஷ்ணவியைப் பறவைகளுக்குப் பிடித்துவிட்டது போலும்.. அனாவசியாமாக ஒன்றும் பறந்து சலசலப்பை உண்டாக்கவில்லை.
ஒரு பெரிய நாரை எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தது. வைஷ்ணவி பிரமித்தாள்." இதுவா அங்கிள்,நீங்க சொன்ன நாரை?"
"ம்.. இதுதான் செங்கால் நாரை. அது காலைப்பாரு.. செகப்பாஇருக்குல்ல. அதுனாலதான் அந்தப்பேரு"
பக்கத்தில் வந்த நாரை,கழுத்தை வளைத்து எங்களைப் பார்த்தது. மெதுவாக தண்ணீரில் அலகு ஆழ்த்தி மீன் பிடிப்பது போல் பாசாங்கு செய்தது.
"அதுக்குப் பயமா இருக்காது? நம்ம எதாவது செய்திடுவோம்-னு"? குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..
" இல்லேம்மா. செங்கால் நாரைக்கும் மனுசனுக்கும் ரொம்ப காலமா நெருங்கின சினேகிதம்.அதுக்கு தாராள மனசு. அது கிட்டே எதாவதுஉதவி கேட்டேன்னா, செய்துட்டுதான் கிளம்பிப்போகும்"
வைஷ்ணவி நம்பாமல் என்னைப் பார்த்தாள்" சும்மா சொல்றீங்க. பறவைக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது"
" செங்கால் நாரைக்குத் தெரியும் வைஷ்ணவி. அது கிளி,புறா மாதிரி புத்திசாலிப் பறவையில்ல. ஆனா அதுக்கு ஈரமான இதயம் உண்டு.அதுனாலதான் அந்தக் காலத்துல, ஒரு புலவன் நாரை விடு தூது-ன்னு செங்கால் நாரைகிட்டே தன்னோட கஷ்டம் பத்தி, மனைவிக்குச் சொல்லறதுக்கு கவிதை பாடி அனுப்பினான்"
"நாரை போய் சொல்லிச்சா அங்கிள்?"
"அது தெரியாதும்மா. ஆனா,நெஞ்சு நிறைந்த அன்பாலேயே உயிரை விட்ட நாரையை எனக்குத் தெரியும்"
நினைவுகள் பின்னோக்கி ஓடின.

தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன், யதேச்சையாக, எதிரில் வருபவரைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் நோக்கிக் கத்தினேன்.
"அம்மா, மாமா வந்தாச்சு.ஹைய்யா... மாமா வந்தாச்சு" ஓடிப்போய் அவரது கையைப் பிடித்துத் தொங்கினேன்.தோதாத்திரி மாமா எனது சொந்தத் தாய் மாமா இல்லை. அம்மாவிற்கு, ஒன்று விட்ட தம்பி. ஆயினும், மாமா என்றாலே எங்கள் வீட்டில் நினைவிற்கு வருபவர் தோதாத்திரி மாமாதான்.
குட்டையான் உருவம். பின்னால் வழித்து வாரப்பட்ட தலைமுடி. வாயில் எப்பவும் மணக்கும் வெற்றிலை. . கையில் மடக்கப்பட்ட "கிளி மார்க் டீ வாங்கிடுவீர்". என்னும் மஞ்சள் பை. எப்போதும் சிரித்த முகம்.தீர்க்கமான நெற்றியில் பாதி கலைந்த ஸ்ரீ சூர்ணம்... இவைதான் மாமாவின் அடையாளங்கள். எப்பவும் சிகப்பாகவே இருக்கும் அவர் நாக்கைப் பார்த்து எனக்கும் பெரியவனானதும் அப்படி வரவேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.

"டேய்,,டேய்.. விடுடா..." அட்டகாசமாகச் சிரித்தார் மாமா.
"குரங்கு மாதிரி கையைப் பிடிச்சு தொங்காதே-ன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?" என்னும் மற்றவர்களிடமிருந்து மாமா மிகவும் விலகித் தெரிந்தார்.
உள்ளே வந்தவர், அம்மாவை "அக்கா, செளக்கியமா?" என்றார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தார்.
"நன்னா இருப்பா.. ருக்மிணி வரலையா?"
"இல்லேக்கா. பரீட்சையெல்லாம் நடந்துண்டிருக்கு. யாராவது ஒருத்தர் காருகுறிச்சியிலே இருந்தாகணும்" மாமாவும், மாமியும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்.
"என்ன தோதாத்திரி இந்தப்பக்கம்?" என்றர் அப்பா."ஒண்ணுமில்லே அத்திம்பேர். ஊர்க்காரன் ஒருத்தனுக்கு கிணறு வெட்ட கடன் பத்திரம் எழுதணும்னான். நம்ம சரவணன் தான் பொறுப்புல இருக்கான். அதான் நேர்ல வந்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு எட்டிப்பார்த்தேன். உம்மோட ப்ரஷர் எப்படியிருக்கு? திருநெல்வேலி போயிட்டு வந்தீராமே..உடம்பு முடியலைன்னு? நாணா சொன்னான். உடம்பைப் பாத்துக்கும்"
தோதாத்திரி மாமாவுக்கு சொந்தமாக ஒரு வேலைன்னு வரவேமாட்டாரோன்னு தோன்றும்.
"மாமா, எனக்கு லீவு விட்டாச்சு. உங்ககூட காருகுறிச்சி வரட்டா?"ஆர்வமாகக் கேட்ட என்னை,அண்ணன் முறைத்துப் பார்த்தான்."யாரும் வீட்டுக்கு வந்துடக்கூடாதே.. நான் வரட்டா-னு முந்திரிக்கொட்டையா கேட்டுறவேண்டியது. மூதேவி" அவன் கடுகடுப்பது தெரிந்தது.மனதுக்குள் அலட்சியமாக" போடா" என்றேன்.
" வாயேன். அக்கா.. இவனைக் கூட்டிண்டு போறேன். கொஞ்ச நாள் மாறுதலாக இருக்கட்டுமே"
"அவன் ராத்திரி அழுவான் தோதாத்திரி. போனதடவை இப்படிதான் தூத்துக்குடி கூட்டிண்டு போயிட்டு,வரதன் அடுத்த நாளே கூட்டிண்டு வந்துட்டான். ராத்திரி பூரா ஒரே அழுகை"
"நான் ஒண்ணும் அழ மாட்டேன்" என்றேன் வீராப்பாக."சரி அக்கா. இங்க இருக்கிற காருகுறிச்சிதானே. எதாவது ஏக்கமாயிருந்தான்னா ஒரு மணி நேரத்துல கொண்டு வந்துடலாம். என்னடா அழுவியா ?
"மாட்டேன் மாமா" என்றேன் உறுதியாக.

" மாமா, அங்கே பாருங்க. ஒரு பெரிய கொக்கு" மாமாவின் சைக்கிளில் முன் பாரில் உட்கார்ந்திருந்த எனது கத்தலில், சில பறவைகள் பயந்து பறக்க முயன்றன. மாமா ஒரு கல் மேல் கால்வைத்து, சைக்கிளை நிறுத்தினார்.
" அதோ ஒரு பழுப்பு கலர்ல தெரியறது பாரு... அது செங்கால் நாரை" என்றார் மாமா.
" அது ஏன் மாமா அசிங்கமா இருக்கு?"
"அசிங்கமா இல்லேடா. அது ரொம்ப நல்ல பறவை. மனுசங்க கிட்டே ரொம்ப பிரியமா இருக்கும். பாசமா இருக்கற பறவை அழகா இல்லேன்னா என்ன? "
ஒரு நாரை தாழப் பறந்து,எங்களருகே சாலையோரம் தண்ணீரில் இறங்கியது. தண்ணீரில் அலைமோதும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.மாமா மெதுவாகப் பாடினார்
"நாராய் நாராய். செங்கால் நாராய்.
பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன கூர்வேல்வாய்
செங்கால்நாராய்"
எனக்குப் புரியவில்லை. "என்ன மாமா சொன்னீங்க?"
"இந்த நாரையைத்தான் ஒரு ஏழைப் புலவன் தன் பொண்டாட்டிகிட்டே தூது அனுப்பினான். இந்த நாரையோட அலகு 'பனங்கிழங்கு பிளந்தமாதிரி இருக்கு'-ன்னு சொன்னான். எவ்வளவு அழகான உவமை பாரு.." மாமா தனக்குள் பாடி ரசித்தார்.உற்றுப்பார்த்தேன். அலட்சியமாகப் பார்த்துவிட்டு நாரை எங்கள் அருகே வந்து கழுத்தை உயர்த்தி போஸ் கொடுத்தது.
"இதுக்குக் கொஞ்சம்கூட பயமே கிடையாதா மாமா?"
" மனுசங்க ஒண்ணும் பண்ணமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கைதான். சரி போவமா?"
மீண்டும் அடுத்தநாள் அந்த நாரை குளக்கரையோரம் தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில்
நானும் அதுவும் மிகவும் பழகி விட்டோம். அதன் குச்சி கால்களும், பெரிய சிறகுகளும், சற்றும் பொருந்தாத மிகப்பெரிய அலகும் எனக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஒரு முறை,சிறகு விரித்து அலகு பிளந்து காட்டியது. சிவப்பாகத் தெரிந்தது.. அதுவும் வெற்றிலை போடுமோ?

ஒருவாரத்தில் எல்லாப் பறவைகளும் திரும்பிப் பறக்கத் தொடங்கின. எனது நாரை மட்டும் குளத்திலேயே திரிந்தது. மும்முரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது.
"இது ஏன் மாமா இங்கேயே இருக்கு? எல்லாம் பறந்து போயிட்டிருக்கு?"
"எதோ ஏழைப் புலவன் தூது இன்னும் கொடுக்கலை போலிருக்கு.." மாமா காவிப்பற்கள் தெரியச் சிரித்தார். இந்த முறை நான் நம்பினேன்.

நான் அம்பாசமுத்திரம் போகும்நாள் வந்தது. மாமா சைக்கிளில் முன் பாரில் இருந்து சாலையோரத்தில் பார்த்துக் கொண்டே வந்தேன்.நாரையைக் காணவில்லை.
மாமா சட்டென்று சைக்கிளை நிறுத்தினார். சாலையோரம் அவசரமாகச் சென்று தண்ணீரில் பார்த்தார்.
" அடப்பாவமே"
தண்ணீரில் அரைகுறையாக மூழ்கி மங்கலாக ,பிளந்த அலகுகள் தெரிந்தன. சில இறகுகள் மிதந்துகொண்டிருந்தன. கால்கள் சிவப்பான சாயம் பூசினது போல சிதறிக்கிடந்தன. வேதனையில் வளைந்திருந்தன.
"எவனோ அடிச்சிருக்கான். சே.. பாவம்."
எதிரே வந்த ஒருவன் மாமாவை நெருங்கினான்" என்னாச்சு வாத்தியாரைய்யா?"
"நாரையை எவனோ அடிச்சிருக்காம்பா.. ஒரு வாரமா கரையோரமா நின்னிட்டுருந்தது.. பாவம்"
"கொன்னவன் நம்ம ஊர்க்காரனா இருக்கமாட்டான்யா. எவனோ வெளியூர்க்காரன் வேலை... எப்ப பார்த்தீங்க?""இப்பத்தான். எடுத்து அடக்கம் பண்ணிருவோம். எடு முருகேசா"
முருகேசன் தண்ணீரில் இறங்கி, அலகுகளைப் பற்றி இழுத்தான். தண்ணீர் வழிய சாலையில் போட்டபோது, அதன் ஓரங்களில் ரத்தச்சிவப்பு தெரிந்தது...

இரண்டு நாட்கள் நான் சரியாகத் தூங்கவில்லை. அம்மா,"எதையோ பாத்து பயந்திருக்கான்" என்றாள். விபூதி பூசினார்கள்.கோயில்யானையிடம் தும்பிக்கையில் தண்ணீர் கொடுத்து முகத்தில் பீச்சினார்கள்.எட்டாம் வகுப்பில் தாமஸ் சார் - "இருனூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக-"எனக்குப் பிடித்த விலங்கு அல்லது பறவை"" என்று கட்டுரைப்போட்டி வைத்தபோது எழுதினேன். "எனக்குப் பிடித்த பறவை அழகாகப் பேசும் கிளியோ, ஆடும் மயிலோ அல்ல.எனக்குப் பிடித்தது செங்கால் நாரை. ஏனெனில் அது மனிதர்களை நேசிக்கிறது, நம்புகிறது, உதவுகிறது. நாம்தான் நன்றி மறந்து அதனைக் கொல்கிறோம்" காருகுறிச்சிக்கு அதன்பிறகு நான் போகவில்லை.

கோயிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சுந்தரம் குடும்பம் உள்ளே நின்று கொண்டிருக்க, நான் காரில் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
"யாரு,சீனுவா? எப்படா வந்தே?"- கேட்டவனைப் பார்த்ததும் ஒரு கணம் குழம்பி னேன். இவன் கண்ணன்தானே? தோதாத்திரி மாமாவோட மூத்த பையன். இங்கே எப்படி? "இப்பத்தான் கண்ணா. சினேகிதன் குடும்பத்தோட வந்தேன். எப்படிடா இருக்கே? அம்மா அப்பாவெல்லாம் எப்படியிருக்காங்க?"
கண்ணன் ஒரு கணம் மொளனமனான்." அப்பா ஒரு மாசம் முன்னால இறந்துட்டார். .டெலிகிராம் அடிச்சோம். அப்புறம்தான் தெரிஞ்சது
உனக்கு மாத்தலாயிருச்சுன்னு.." நான் உறைந்தேன் " எப்படா? எப்படியாச்சு?" "நன்னாத்தான் இருந்தார். ரிடையர் ஆனதும், முத மாசப் பென்ஷன் வாங்கிட்டு
வர்றேன்னு போனார்.,இன்னொருத்தருக்கு பிராவிடண்ட் •பண்ட் •பாரம் வாங்கிண்டு வர்றதுக்கு நேரமாயிருச்சு. சாயங்காலம் ரொம்ப இருட்டிண்டு வந்ததுல எதிர்த்தாப்பல வந்த லாரி தெரியலை.அடிச்சுப்போட்டுட்டுப் போயிட்டான். ரோட்டிலேயே ரத்தவெள்ளத்துல கிடந்திருக்கார். ஒருத்தரும் உதவிக்கு வரலை. விஷயம் தெரிஞ்து.நாங்க போறதுக்குள்ள உயிர் போயிருச்சு" கண்ணன் மேலே சொன்னது எதுவும் கேட்கவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

ரோட்டில் ஒரு பெரிய நாரை இறக்கை விரித்துக் கிடந்தது. அதன் அலகுகள் பிளந்து ரத்தச் சிவப்பாக .. வெற்றிலை போட்டு உமிழ்ந்தது
போல்....நாரையின் உடலுக்குப்பதில் மாமா தெரிந்தார். கைகளில் பி.எ•ப் பாரம் சுருண்டிருக்க, சட்டைப்பையில் நூறு ரூபாய் நோட்டுகள்
மடக்கி வைக்கப்பட்டிருந்தன..

காரில் செல்லும்போது வைஷ்ணவி கேட்டாள்."அங்கிள், 'காட்டுல இருக்கிற நல்ல மிருகங்களெல்லாம், மனுசங்களாயிடும்'-ன்னு எங்க பாட்டி
சொன்னாங்க. அப்போ, நல்ல மனுசங்களெல்லாம் என்னவா ஆவாங்க? இப்ப பாத்த சாமி மாதிரி ஆயிடுவாங்களா?"
"நல்ல மனுசங்களெல்லாம் நாரை ஆயிடுவாங்கம்மா. அதுவும் செங்கால் நாரை "
சொன்ன எனது கண்கள் நிறைந்ததில், எதிரே சாலை மங்கலாகத் தெரிந்தது.

வீடு - சிறுகதை

குட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அதனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அது வந்திருக்கும் நேரமெல்ல்லம் என்னைக் கண்டவர்கள் " இவன் என்னல? காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்?" என்றும் "எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க?" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் வேறு மன அலைகளில் இருக்கிறேனென்றும், தனக்குள்ளே பேசுவதென்பது- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.
குட்டி என்னைவிட அறிவாளியில்லை. அது செய்யும் மிக உருப்படியான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். எதில் போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், குட்டியுடன் போவதால் நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்.

குட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜீரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்." வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது. 'வால,... ஒரு விசயம் சொல்லணும்' ' எங்க வரணும்? வெயில் கிடந்து பொரிக்கி.. இங்கனையே பேசுவம்' 'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..' 'எந்த ஆறுமுகம்?' 'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணியோட அண்ணன்.' 'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா?' 'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே? வாரும்வே, விசயமிருக்கு' குட்டி விடாது. கிளம்பினேன். வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.

வீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் .ரொம்பப் பழைய வீடு. ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில் 'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸில் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான். வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது. 'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு?' குட்டி கேட்டது 'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு?' "எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி" "இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்?" "கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்" வாசலில் யாரையும் காணலை. வேப்பமரத்தின் மேலே ஒரு காக்கா சோம்பலாகக் கத்திக்கொண்டிருந்தது. "சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா?" குட்டியிடம் சீறீனேன். "ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க"

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,"யாரு?" நின்றுகொண்டிருந்த இருவரில் இளையவனாக இருந்தவன் முதலில் பேசினான். "நாந்தாம்மா, மணிவண்ணன்" கூடவந்தவர் அடிக்குரலில் சீறினார்."மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு" குரலை உயர்த்தினார்."யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு" வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா? பேரு தெரியலை. அதான். வா தம்பி" செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்."தூங்குறவகளை எழுப்பிட்டமோ?" "இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்" வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர்.

ஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது. "வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப்போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா? இன்னும் வரலையே?" "மத்தியானம் வாரன்னான்" "அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா?" செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்."நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப .." அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,"ரத்னா நல்லாயிருக்காய்யா?" "வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்" "அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்-திருச்சிக்குப் போறேன்னு சொன்னாக-ன்னு"இதானா? நல்லது சாமி. கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன சொல்லிட்டிருந்த ராசா? வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல" செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார் வாசலில் நிழல் தெரிந்தது.

"ஆறுமுகம்தான். வந்துட்டான்" உள்ளே வந்தவன் சிரித்தபடி"வாங்க"என்றான்."கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ?" "சாப்புடுதியா ராசா? நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்" கிழவி பரபரத்தாள். "இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்?" "இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்" "அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட பேச வந்திருக்காங்க" கிழவி மெளனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் "எவ்வளவு கிடைக்கும் சார்?" "ஒரு லட்சம் போவும்" மீண்டும் மெளனம்.. செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்" வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள். "வீட்டை என்ன செய்வீங்க நாடாரே?"

மணிவண்ணன் முந்தினான்,"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்" செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மெளனம் நிலவியது. ஆறுமுகம்,"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்" வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். "அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு."செல்லமுத்து முடிக்கவில்லை; வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள். "அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க"

செல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது. "நான் அப்படியாம்மா சொன்னேன்?" வேலம்மாவின் குரல் உயர்ந்தது "நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே? உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்" செல்லமுத்து ஆடிப்போனார். "யம்மா" ஆறுமுகம் அதட்டினான்."என்ன பேசற/" "நீ சும்மாயிருல" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது. செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். "நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க? பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு" "குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை? கலைச்சுறு-ங்கறீங்க" "அதில்லம்மா" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது. தர்மசங்கடமான மெளனம் மீண்டும்.


"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்" "கை நனைக்காம போறீயளே? ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்" "காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்" வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார். "கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா?" அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் "சே! நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே" "இந்த வீட்டை விக்கச் சொல்லறியா?. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்" "புரியாம பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு" "அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்" "நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்" "பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்" திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள் நான் குட்டியை முறைத்தேன்." இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா? நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்" எழுந்து நடந்தேன். "ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு.."


ராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது. "எந்திரிலா..முக்கியமான விசயம்" "போல.. என்ன தலைபோற வேலை இப்ப? காலைல பாத்துக்கலாம்" "தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்" வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது. "மயங்கிக் கிடக்காளோ?" பரபரத்தேன் " நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி" "அரணை நக்கியிருக்குமோ?" "அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி" "தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல" "குடம் இடிச்சிருச்சோ,இடிச்சாங்களோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்"


என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்."ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது. ' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா?" "வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்"

குட்டியின் வரவை இப்போதெல்லாம் அறவே வெறுக்கிறேன்.

Sunday, May 19, 2013

6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் இருக்கும் அறிவியல் கருத்துக்களும், தமிழ்ப் புதிர்களும் அலசப்படுமானால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் திருத்திக்கொள்ளவும் பயனாக இருக்கும். கதைக் களம், போக்கு, கதையின் தொடர்ச்சி, தொய்வில்லாமல் போகுதல், திருப்பங்கள் போன்றவை குறித்துப் பல கருத்துக்கள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் கதைகளில் நான் இவற்றில் கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6174 கதையை அறிவியல் புனைகதை என்று வகைப்படுத்துவது சரியா என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எது அறிவியல் புனைகதை என்பது வரையறுக்கப்படுதல் முதலில் அவசியம். 6174 நாவல் குறித்தான உரையாடல்கள் , பரிந்துரைகள்,  ரிவ்யூக்கள் கீழ்க்கண்ட  சுட்டிகளில் இருக்கின்றன.

http://www.facebook.com/6174thenovel

http://discoverybookpalace.com/search.php?search_query=6174&x=31&y=11

http://udumalai.com/?page=search&serach_keyword=6174

பிரபல கதாசிரியர் ஜெயமோகன் “21012ன்  10 சிறந்த தமிழ் நாவல்கள்” என்ற பட்டியலில் 6174 நாவலுக்கும் ஓரிடத்தை அளித்தது அவரது பெருந்தன்மை.


அனுபவமிக்க, மரியாதைக்குரிய எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள், அவரது சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் 6174க்கு 20வது இடத்தை அளித்திருக்கிறார். அவர் தரும் ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் எனது வணக்கங்கள்.

http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

முனைவர் வேலுமணி அவர்களுடனான சந்திப்பு


தொழில் சார்ந்த வாழ்வில் பெருவெற்றி பெற்ற பலரும், தமது நேரத்தை வீணே செலவிடாமல் இருப்பதில் குறியாக இருப்பார்கள். அதுவும் விற்பனைத் துறையிலிருந்து போயிருக்கிறோமென்றால், நமது நேரத்தை விடுங்கள், நம்மை ஒரு மனிதனாகவே பலரும் மதிக்கமாட்டார்கள் வெகு சிலரே நாம் நமது நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும் அதைத் திறம்படப் பயன்படுத்தவும் நிஜமான அக்கறையோடு பேசுவார்கள், நடந்துகொள்வார்கள்.. இப்படிப்பட்ட யதார்த்த்த்தில்தான் போன வாரம் நான் முனைவர். திரு. வேலுமணி அவர்களைச் சந்த்தித்தேன்.
தைரோகேர் நிறுவனம், இந்தியாவில் , மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. 90களில் மிக சாதாரண நிலையில் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவின் பெரும் க்ளினிகல் டயாக்னாஸ்டிக் சங்கிலித் தொடர் ஆராய்வு நிலையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் தைரோகேர் நிறுவனத்தின் அதிபரான முனைவர். வேலுமணி அவர்களைக்குறித்து கேள்விப்பட்டிருப்பினும், அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. அவரைச் சந்திக்குமுன் எனது டெக்னிகல் உரையாடல்களும், டெமோவும் முடிந்துவிட்டிருந்தன. நாங்கள் பேசியதைச் சுருக்கமாக அவரிடம் ரெண்டு நிமிடத்தில் சொல்வதற்குத் தயாராகியிருந்தோம். ஒரு சராசரி சி.இ.ஓ எப்படி மேலோட்டமாக டெக்னிகல் விஷயங்களைக் கேட்பாரோ, அந்த அளவில் அவரிடம் உரையாடலை எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், அவரோ கருவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆழ அடிப்ப்படைகளை “நீ சொல்வதிலிருந்து இப்படித்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். “ என்று சொல்லியவாறே தொடங்கியபோது வியந்து போனோம். இவ்வளவு சுருக்கமாகவும், தெளிவாகவும், அந்த அளவு உயர்நிலையிலிருக்கும் ஒரு மனிதர் பேசுவது மிக அரிது. எனது முறை வந்தபோது ஆய்வுச்சாலை மென்பொருள் குறித்து நாங்கள் பேசினோம்என்றேன். அவர் சுவாதீனமாகத் தலையைத் தடவியவாறே “மென்பொருள் என்றால் என்ன? மூன்றே வார்தைகளில் சொல்லணும்என்றார். “சார். மூன்று மணி நேரம் பேச்ச்சொன்னால் பேசுவேன். மூணு வார்த்தைகளில் என்றால் ஐ ஆம் சாரி என்ற மூன்று வார்த்தைகள் மட்டும்தான் வருதுஎன்றேன். அவர் சிரித்தபடி “மிகவும் அடித்தளத்திலிருந்து யோசி. பயன்படுத்துபவனுக்கு என்ன வேணும்? பயன்படுத்த எளிதான திரையமைப்பு, அவனுக்கு வேண்டியதைத் தேடுவதற்கு எளிதான தேடல் இயந்திரம், மிக எளிதான அறிக்கை தயாரிக்கும்  ரிப்போர்ட்டிங்க் கருவி. இந்த மூணுதான் ஒரு ஆய்வுச்சாலையில் முக்கியமானது. இதுக்கு ஏற்றமாதிரி உன்னோட மென்பொருளில் என்ன இருக்குன்னு சொல்லு. எல்லாருக்கும் ஆர்வம் வரும். சும்மா, என்னோடது ஏ.எஸ்.பி டாட் நெட் ப்ளாட்ஃபார்ம்,பேக் எண்ட் ஆரக்கிள், க்றிஸ்டல் ரிப்போர்ட் கனெக்டிவிடி, ஆண்ட்ராய்ட் அப்ஸ்.ன்னு படம் போடறது ஒரு பிரமிப்பை, கவர்ச்சியைத் தருமே தவிர, ரொம்ப நேரம் பயன்படுத்துபவனை இழுத்துப் பிடிச்சு வைக்காதுஎன்றார். சற்றே யோசித்துப் பார்த்தேன். உண்மைதான். ஸ்பெஸிஃபிகேஷன் எண்களிலும், தொழில் நுட்பத்தின் வலைப்பின்னல்களின் அழகிலும் நாம் மயங்கலாம். பயன்படுத்துபவர்கள் அதில் நாட்டமுடையவர்களாவார்களா என்று சொல்லமுடியாது. பவர்பாயிண்ட் ப்ரெசெண்ட்டேஷன்களும், டெமோக்களும் நமது அறிவையும், அனுபவத்தையும் காட்டலாம். ஆனால், வாங்குபவனுக்குத் தேவையானதைக் காட்டுமா என்றால் சந்தேகம்தான். மிக அடிப்படையான அளவிலேயே வாங்குபவர்களின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அந்த்த் தளத்தை உதறிவிட்டு, நாம் தொழில்நுட்ப, அறிவியல் தளங்களில் இருந்து பேசுவது , அவர்களை நிறைவு கொள்ளச்செய்துவிடாது.மாறாக, அன்னியப்படுத்திவிடும் அபாயம் அதில் உண்டு.
அதன்பின், அவர் பேசுவதில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். கணிதம் படித்த அவர், கெமிஸ்ட்ரியும் , பயாலஜியும் புரிவதற்கு ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து தொடங்கி படிப்படியாக சொந்தமாகவே படித்து விற்பன்னராக ஆனதைச் சொன்னதைக் கேட்கையில், வியப்பாக இருந்த்து. அது எப்படிக் கைகூடியது? என்பதை மராத்தியில் இரு வார்த்தைகளில் சொன்னார் “நாம் எதிலும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் தடைகள் இரண்டு. ஒன்று “ எனக்கு நேரமில்லை , இரண்டாவது “ போகுது. போரடிக்குது” “

 ஊன்றிக் கவனியுங்கள். முதலாவது , நாம்  நம்மையே ஏமாற்றிக்கொள்ள சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு .   ’காலையில் எழுந்து ஆபீஸ் போவதற்கே நேரமில்லை. பின்னே ஆபீஸில் பிழியப்பிழிய வேலை. சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தா எப்படா படுக்கைல விழுவோம்னு இருக்கிற களைப்பு. ஞாயித்துக்கிழமை அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கறதுக்கும், சொந்த வேலைகளைக் கவனிக்கற்துக்குமே சரியாப்போகுது. இதுல எங்க மேல படிக்க.? உழைக்க?’ – நாம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் சால்ஜாப்பு. மிகச் சரியாக நாம் உறுதிப்படுத்தும் காரணங்கள். அவை பொய்யில்லை. மாயம். Not lies - just illusions. இதைத் தாண்டி முன்னேற உழைப்பவனே வெற்றியடைகிறான்.
இரண்டாவது, நமது மனம் விரும்பும் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. இனர்ஷியா(inertia) என்னும் பதம் இயற்பியலில் மிக முக்கியமானது. ஒரு பொருளுக்குக் கொடுக்கப்படும் ஆற்றல், இனர்ஷியாவிற்கு அதிகம் இருந்தால்தான் ஒரு இயக்கம் ஏற்படும். இது எட்டாம் வகுப்பு இயற்பியல். ஆனால் எண்பது வயதிலும் நமக்கு இது புரிவதில்லை. சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவை நாம் தாண்டும் வரையில் வெற்றி நோக்கிய இயக்கம் இருக்காது. ஒவ்வொருமுறையும் சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவைத் தாண்டி நமது உந்து சக்தி இருக்குமானால், வெற்றி நோக்கிய இயக்கம் நிச்சயம்.
மிகவும் சுவாரசியமான ஒரு பதத்தை அறிமுகப்படுத்தினார் முனைவர் வேலுமணி.. நமது நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதன் ஒரு அழகான அலகு அது .MAIH என்னும் அப்பதத்தைக் குறித்து அடுத்த வாரம் எழுதுகிறேன்.