Tuesday, October 01, 2013

தி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்

நேற்று காலை “தி லஞ்ச் பாக்ஸ்” சினிமா. காட்பரிஸ் சில்க் சாக்லேட் விளம்பரத்தில் வரும், லேசான மாறுகண் உள்ள நம்ரத் கவுர் இப்படத்தின் ஹீரோயின். இர்ஃபான் கான் முக்கிய கதாபாத்திரம். இவர்களோடு உலகப்பிரசித்தி பெற்ற , உணவுக் கேரியர்களைக் கொண்டுசெல்லும் மும்பை டப்பாவாலா-க்கள் அங்கங்கே. இப்படியொரு காஸ்டிங் வைத்துக்கொண்டு முழு நீளப் படத்தை எடுப்பதற்கு அசாத்தியத் துணிச்சல் வேணும்.

பெண்களின் மன அழுத்தம், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளின் சிதைவுகள் என இஸம் பேசி ஜல்லியடிப்பவர்களுக்கு இந்த்ப்படம் ஒரு ரெபெரென்ஸாக அமையலாம். அதையெல்லாம் தாண்டி, பிதுங்கும் நெரிசலில், தடங் தடங் என ஓடும் ரயில் வண்டியின் குலுக்கல்களுக்கிடையே சில மனித மனங்களைச் சந்தித்துவிடும் ஆச்சரியங்கள் மும்பை லோக்கல் ரயில்களில் நடந்துவிடுவது போலவே, இந்தப்படமும் வியப்பில் ஆழ்த்துகிறது. இர்ஃபானின் நடிப்பு என்பதைப் பற்றி மட்டுமே இரண்டு பக்கம் எழுதலாம். எல்லாரும் எழுதுவதால் அது க்ளிஷே என முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாலும், நம்ரதாவுக்கு நடிக்கவேண்டிய கட்டாயமே கொடுக்காததால் அது குறித்து ஒன்றும் எழுத வேண்டாததாலும், நடிப்பு என்பதிலிருந்து சற்றே நகர்கிறேன்.

வேலைப்பளுவில் உழன்று , மனைவியின் சுக துக்கங்களில் பங்கு பெறாத ஒரு கணவன், சிறு பெண்குழந்தை, மேல் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் அசரீரியான தேஷ்பாண்டே ஆண்ட்டீ என சிறு 1BHK குடும்பத்தலைவியாக “ஈலா” என்ற பெண், தன் கணவனுக்காக ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்துவிட்ட லஞ்ச்பாக்ஸ் இடம் மாறி , ரிடையர் ஆகப்போகும் சாஜன் பெர்னாண்டஸிடம் வருவதில் தொடங்குகிறது கதை. அந்த லஞ்ச்சில் இருந்து அவர்களது கடிதப் பரிமாற்றம் தொடங்குகிறது. தொடர்ந்து கணவன் தனது சிறு சிறு மாற்றங்களையும், வியர்வை பொங்க சிறப்பாகச் செய்து தந்த உணவைப் பாராட்டாமலேயே இருப்பதாலும், அவள் , தான் சந்தித்து அறியாத மூன்றாம் மனிதனிடம் தனது மன அழுத்தத்தை வெளிக்காட்டுகிறாள். அதற்கு , காலியாய்ப் போன டீக் குவளையில் மிச்சமிருக்கும் இளஞ்சூட்டில் , வீங்கிய கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போல , இதமான அறிவுறைகளை பெர்னாண்டஸ் வழங்குவது வரை கதை படு டீசண்ட்டாகப் போகிறது. அட, ஆஸ்கார் போயிருக்க வேண்டிய ஒன்றாச்சே இது, என்று புலம்ப வைத்துவிடுகிறது. இதற்குப் பிறகு டைரக்டருக்கு சனி பிடித்துவிட்டது போலும். அந்த இதமான புரிதல் சற்றே கோடு கடந்து, உன்னோடு நானும் பூட்டானுக்கு வரட்டா? என்று முதிய , முதிர்ந்த மனிதர் எழுதுவதும், அதற்கு அந்தப் பெண் சட்டெனக் காதல் வயப்பட்டு விடுவதும் ...ம்ம்ம்ம் “ பாப்கார்ன் வாங்கிட்டு வரட்டுமா?” என்று சால்ஜாப்போடு வெளியே வர மனசு எத்தனிக்கிறது.
இந்த இடத்தில் திரும்பவும் உட்கார வைத்துவிடுகிறார்கள். சட்டென ஒரு புரிதல் வர, இர்ஃபான் தன் உந்துதலைத் தடுக்கிறார். அவரைப் பார்க்க நினைத்த வேகத்தில் ,மகளுடன் ஆபீஸுக்கே அப்பெண் வந்துவிடுகிறாள், பின் பூட்டான் செல்ல எத்தனிக்கிறாள். ஒரு எதிர்பார்ப்போடு படம் முடிகிறது.

வேலை அழுத்தத்தில் மனைவி கொடுத்தனுப்பும் கத்திரிக்காய் கறிமது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் , மனைவி மாற்றானோடு, பூட்டானுக்கு ஓடிப் போய்விடுவாள் என்ற பயம் இனிமேலாவது கணவன்களுக்கு இருக்கட்டும் என்ற Moral of the story கணவன்மாருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறதோ?. வேலை அழுத்தத்துடன் வீட்டைக் கவனிக்காத ஆண்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்கள் என்ற புளித்துப் போன லாஜிக்கை இன்னும் எத்தனை கதைகளில் (பால குமாரனின் ”அடுக்கு மல்லி” யும் இதில் அடக்கம்), படங்களில் பார்க்கப்போகிறோம்? எனக்கு வேலை ஜாஸ்தி என்று சொல்லவே இப்போது தயக்கமாக இருக்கிறது. இந்தமு மிகைப்படுத்துதலும், வேண்டாத ஈர்ப்புக் கண்ணோட்டமும் இல்லாமல் ஒரு நட்பாகவே ஆரோக்கியமாகக் காட்டியிருந்தால் , ஆஸ்கர் கிடைக்காவிட்டாலும், நமது முழுக் கைதட்டல்களையும் லஞ்ச் பாக்ஸ் பெற்றிருக்கும்.

பாலிவுட், கோலிவுட் படங்களுக்கு இடையில் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை, இயக்கம்... பாராட்டவேண்டும். கொஞ்சம் உப்பு தூக்கல் என்பதை விட்டுவிட்டால், முழுதும் வளைச்சு அடிக்க வேண்டிய லஞ்ச்தான்.

கைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு

கைசிக நாடகம் குறித்து மிக வித்தியாசமான அணுகுமுறையுடன் திரு. வெளி ரங்கராஜன் Veli Rangarajan அவர்கள் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் தரவேற்றியிருக்கிறேன்.

கைசிகி நாடகம் பத்து வருடங்களுக்கு மேலாக திருக்குறுங்குடியில் செம்மப்படுத்தப்பட்ட வடிவில் நடந்து வருகிறது. பேராசிரியர் செ. இராமானுஜர் அவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக இதில் தீவிரமாக உழைத்து வருகிறார். டி.வி.எஸ் நிறுவனத்தின் டாக்டர். அனிதா ரத்தினம் அவர்களின் உறுதியான ஆதரவும், அக்கறையும் இல்லாவிட்டால் இது துர்லபம்.  மிகவும் சிதைந்திருந்த ஒரு வடிவை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் கைசிகி நாடகம் என்றால் என்ன? தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒருவனால் , உயர்த்தப்பட்ட குடியில் இருப்பவர்களும், பிரம்ம ராட்சசனும் மோட்சமடையும் ஒரு வினோதமான கதை. பகவானுக்கு பாகவதன் மிக முக்கியம் என்பதும் அதில் ஜாதி ஒரு தடையேயில்லை என்பதையும் வலியுறுத்திய புரட்சிகரமான புராணம். இதை கைசிகி புராணம் என்று அழைப்பார்கள். இதன் சிறப்பை விளக்கி கைசிகி மஹாத்மியம் என்ற வடமொழி நூல் உள்ளது. இதனை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்ற அற்புத நூலின் ஒன்றாம் ப்ரகரணத்தில் ஒரு சூத்திரத்தில் ”நிலையார் பாடலாலே, ப்ராமணன் வேள்விக் குறை முடித்தான்” என்று  கொண்டாடியிருக்கிறார்.

கைசிகி புராணம் வருடம் ஒருமுறை கைசிக ஏகாதசி அன்று  திருவரங்கத்தில் அரையர் சேவையாகவும், திருக்குறுங்குடியில் நாடக நிகழ்வாகவும்  பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வந்திருந்தது. கைசிக புராணத்தின் நிகழ்வாக்கத்தை, விரதமிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து அனுபவித்தால் முக்தி கிட்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

இதில் திருக்குறுங்குடி நாடக நிகழ்வாக்கம் 1900களின் முற்பகுதியில் ( ‘30களில் தொடக்கமாக என என் ஊகம்) நலிவடையத் தொடங்கி, ‘80களில் முற்றும் மறைந்து போன நிலையில் , வெறும் சாஸ்திரம் காரணமாக தவறுதல்களோடு, ஒரு முனைவின்றி, திருக்குறுங்குடிக் கோயில் வளாகத்தில் மிகக் குறைவான பக்தர்களின் எண்ணிக்கையில் நடைபெற்று வந்தது. அதனை மீட்டெடுக்க பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் ஈடுபட்டார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இது பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.

அப்படி என்ன இந்நாடகத்தில் சிறப்பு?
கைசிக நாடகத்தில் அன்றைய வழக்கத்திற்கு எதிரான ஒரு பெரும் புரட்சி இருந்தது. நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அப்போதெல்லாம் பெண் கதாபாத்திரத்தைக் கூட ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்த காலம். அதுவும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள் அன்றைய சமூகக் கொடூரத்தால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தேவதாசிகள் சமூகத்தினர். பகவானான நம்பிக்கிழவரிலிருந்து, நம்பாடுவான் (ப்ரம்ம ராட்சசன் தவிர) வரை அத்தனைப் பாத்திரங்களும் தேவதாசிப் பெண்கள் ஏற்று மண்டபத்தின் மேலேறி  நடத்த, உயர் சாதியினர்கள்  கீழே தரையில் , பயபக்தியுடன் அமர்ந்து பார்த்த ஒரு சாதித் தளங்கள் திருப்பப்பட்ட நிலை உருவாயிருந்தது!

அது மட்டுமல்ல, பக்தி என்பது ஜாதியைத் தாண்டியது என்பது , நாங்குநேரியில் ஒரு மூதாட்டியிடம் பேராசிரியர் இராமானுஜம் எடுத்த பேட்டியின் குறிப்பிலிருந்து விளங்கும் “ தேவதாசிகளெல்லாம் மேடையில வேஷம் கட்டி ஏர்றப்போ, கூட்டத்துக்குள்ளே இருந்துதான் மேடைக்குப் போவா. உக்கார்ந்து இருக்கறவா,அவாளை அப்படியே கால்ல விழுந்து சேவிப்பா. நம்பி, நம்பாடுவானா வேஷம் கட்டியிருக்கிறவாளை, நாடகம் முடிஞ்சதும், வயசான ப்ராமணர் முதக்கொண்டு, எல்லாரும் சேவிப்பா. பாத்திருக்கேன். வயசோ, ஜாதியோ பாக்கப்படாது. அப்போ அவ வெறும்  மனுஷியில்லை. சாக்‌ஷாத் நம்பாடுவான், நம்பி-ன்னா?”

ஜாதிகள் அற்ற , பெண் அடிமைத் தளை அற்ற, சமூக சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் கைசிக நாடகத்தை நீங்களும் திருக்குறுங்குடி சென்று அனுபவியுங்கள்.

"எங்ஙனேயோ அன்னைமீர்காள்
      என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
      தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
      செல்கின்றது என் நெஞ்சமே" நம்மாழ்வார். திருவாய்மொழி.




காந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்

ஆறு மணிக்குள்ளே ஆபீஸ் விட்டுக் கிளம்பியிருக்கணும். கொஞ்சம் கதைபேசி நின்றதில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியாகிவிட்டது. காரின் இரு புறமும் ஈக்களாய்ப் பறந்துபோகும் மோட்டார்சைக்கிள்கள். சர்ரக் என உரசிவிட்டு, லேசாகத் திரும்பி, ஹெல்மெட்டின் ப்ளாஸ்டிக் முகத் திரையை உயர்த்தி விட்டு யாருக்கும் கேட்காத குரலில் ‘சாரி’ என்றுவிட்டு சென்றுவிடுவார்கள். டெண்ட் எடுக்கவும், டச் அப் செய்யவும், பாஷா பாய் வீட்டையே எழுதிவைக்கச் சொல்லுவான்.

கொஞ்சம் எச்சரிக்க்கையோடுதான் முன்னேறினேன்.
இரு மோட்டார்சைக்கிள்கள். ஒன்று என் வலதுபுறம், மற்றது இடதுபுறம்- நேராக என் ஜன்னல்கள் அருகே. சிக்னல் போஸ்ட்டில் பச்சை எல் இடி தப்புத் தப்பாக நொடிகளைக்காட்டியது. இதுவும் நெரிசலுக்குக் காரணம் போலும்.

கண்ணாடியை இறக்கிவிட்டபோதுதான் கவனித்தேன். வலப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளின் பில்லியனில் ஒரு பெண், மடியில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். அதன் கன்னத்தை விடப் பெரிசாக கருப்புப் பொட்டு கன்னத்தில் ஈஷியிருக்க, நெற்றியில் பவுடர் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. சிறு உருளைகளாகக் கைகள், அதன் விரல் முட்டிகளில் சிறு பள்ளங்கள், மெத்து மெத்தென உப்பிய புறங்கைகள். லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது.

திடீரென அது என்னைப் பார்த்து “அய்ங்” என்று பொக்கைவாய் காட்டிச் சிரித்தது. ஹலோ என்றேன். அது சற்றும் மிரளாமல், மீண்டும் ஒரு சிரிப்பு. கையை சம்பந்தமில்லாமல் மேலும் கீழும் ஆட்டி, ஒரு நொடியில் என்னை விட்டுவிட்டு சாலையில் இருந்த கல்லைப் பார்க்க ஆரம்பித்தது. பத்து செகண்ட்களில் மீண்டும் என்னைப் பார்த்தது. அதே சிரிப்பு., அதோடு ’நங்கா மிங்கா’ என ஒரு குழறல். “சே கழுதை. என்ன சிரிப்பு?” என்றேன். இப்படிக் கூர்ந்து பார்க்கிற அளவுக்கு நம்ம மூஞ்சி அவ்வளவு பிரகாசமாக இருக்காதே என்ற சந்தேகத்தோடு, குழந்தை பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தேன். நினைத்தது சரிதான். என்னைத் தாண்டி, இடப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளில் பில்லியனில் இருந்த பொண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கிறது.

வண்டிகள் மெல்ல நகரத் தொடங்கியிருந்தன. இரு மோட்டார்சைக்கிள்களும் நகர்ந்து முன்னே என் வண்டியின் முன்னே பைலட் போலச் சென்றிருந்தன. இரு வண்டிகளும் மிக அருகில். நானும் காரை மெல்ல நகர்த்தினேன்.அந்தப் பெண் பக்கவாட்டில் திரும்பி குழந்தை தன்னைப் பார்ப்பதையும், குழறுவதையும் கவனித்துவிட்டாள். குழந்தை அவளை நோக்கிக் கையை நீட்டி, இரு விரல்கள் வானை நோக்க, இரு விரல்கள் அவளை நோக்க, கட்டைவிரல் எங்கேயோ நோக்க, அகல விரித்து , அம்மாவின் மடியில் துள்ளியது. அவள் தன்னிச்சையாக அதனை இறுகப் பிடிப்பது தெரிந்தது. இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்? என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ? கொஞ்சமாய்த்தான் அகலம். சற்றே பக்கவாட்டில் குனிந்து அதன் குஞ்சுக்கைகளை முத்தமிடலாம்.

அவள் வெடுக்கெனத் தலையை மறுபுறம் திருப்பினாள். பார்க்க விரும்பாதவளைப் போலே. ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் வியர்க்க வியர்க்க, வேகமாக கையை அசைத்து அனைவரையும் முன்னே போகச் சொல்லிக்கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் பாதையில் விரிந்து விரைந்தன.

ஒரு கோபம் என்னுள் விரிந்துகொண்டிருந்தது. சட்டென இறங்கி, அந்தப் பெண்ணைப் பிடித்து “ஏவுட்டி, ஒரு குழந்தை உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதை அலட்சியம் செயயுமளவுக்கு, அப்படியென்ன திமிரு?” என்று ஒரு வார்த்தை வாங்கலாம் என்று தோன்றியது.

இயலாமையில் கியரும் , கிளட்ச்சும் ஒரு சேராமல் வண்டி “வய்ய்ங்க்” எனத் திமிறி , சில நொடிகளின் பின் சீரானது. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும் ( என்னைத் தவிர. அவை அழுதால் டென்ஷனாகிவிடுவேன்.) அதுவும் பெண்கள் குழந்தைகளை வெறுக்க சான்ஸே இல்லை. முன்னே போனது ஒரு பெண்ணில்லை. அன்பென்னும் சுவை அறியாத மிருகம்..
மெல்லக் குறள் ஒன்று மனதுள் எழுந்தது.

காந்தள் விரல்நீட் டுமின்பறியா ளொத்தாளே
தீந்தேன் அறியாக் கவி

கவி - குரங்கு காந்தள் - விரல் போலிருக்கும் மலர்

ஸ்ரீவரமங்கை ,”அந்தப் பெண்ணுக்கு என்ன ப்ரச்சனைன்னு நமக்குத் தெரியுமா?. அதை ஏன் போய்த் திட்டணும்? இதான், மெல்லிய உணர்வுகளைக்கூட உங்களுக்கெல்லாம் வல்லியதாகத்தான் சொல்லத் தெரிகிறது” என்றாள். இது என் பழைய blunderகளை வெளிக்கொணரும் அபாயமிருப்பதால், அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.