Tuesday, October 01, 2013

கைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு

கைசிக நாடகம் குறித்து மிக வித்தியாசமான அணுகுமுறையுடன் திரு. வெளி ரங்கராஜன் Veli Rangarajan அவர்கள் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் தரவேற்றியிருக்கிறேன்.

கைசிகி நாடகம் பத்து வருடங்களுக்கு மேலாக திருக்குறுங்குடியில் செம்மப்படுத்தப்பட்ட வடிவில் நடந்து வருகிறது. பேராசிரியர் செ. இராமானுஜர் அவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக இதில் தீவிரமாக உழைத்து வருகிறார். டி.வி.எஸ் நிறுவனத்தின் டாக்டர். அனிதா ரத்தினம் அவர்களின் உறுதியான ஆதரவும், அக்கறையும் இல்லாவிட்டால் இது துர்லபம்.  மிகவும் சிதைந்திருந்த ஒரு வடிவை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் கைசிகி நாடகம் என்றால் என்ன? தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒருவனால் , உயர்த்தப்பட்ட குடியில் இருப்பவர்களும், பிரம்ம ராட்சசனும் மோட்சமடையும் ஒரு வினோதமான கதை. பகவானுக்கு பாகவதன் மிக முக்கியம் என்பதும் அதில் ஜாதி ஒரு தடையேயில்லை என்பதையும் வலியுறுத்திய புரட்சிகரமான புராணம். இதை கைசிகி புராணம் என்று அழைப்பார்கள். இதன் சிறப்பை விளக்கி கைசிகி மஹாத்மியம் என்ற வடமொழி நூல் உள்ளது. இதனை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்ற அற்புத நூலின் ஒன்றாம் ப்ரகரணத்தில் ஒரு சூத்திரத்தில் ”நிலையார் பாடலாலே, ப்ராமணன் வேள்விக் குறை முடித்தான்” என்று  கொண்டாடியிருக்கிறார்.

கைசிகி புராணம் வருடம் ஒருமுறை கைசிக ஏகாதசி அன்று  திருவரங்கத்தில் அரையர் சேவையாகவும், திருக்குறுங்குடியில் நாடக நிகழ்வாகவும்  பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வந்திருந்தது. கைசிக புராணத்தின் நிகழ்வாக்கத்தை, விரதமிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து அனுபவித்தால் முக்தி கிட்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

இதில் திருக்குறுங்குடி நாடக நிகழ்வாக்கம் 1900களின் முற்பகுதியில் ( ‘30களில் தொடக்கமாக என என் ஊகம்) நலிவடையத் தொடங்கி, ‘80களில் முற்றும் மறைந்து போன நிலையில் , வெறும் சாஸ்திரம் காரணமாக தவறுதல்களோடு, ஒரு முனைவின்றி, திருக்குறுங்குடிக் கோயில் வளாகத்தில் மிகக் குறைவான பக்தர்களின் எண்ணிக்கையில் நடைபெற்று வந்தது. அதனை மீட்டெடுக்க பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் ஈடுபட்டார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இது பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.

அப்படி என்ன இந்நாடகத்தில் சிறப்பு?
கைசிக நாடகத்தில் அன்றைய வழக்கத்திற்கு எதிரான ஒரு பெரும் புரட்சி இருந்தது. நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அப்போதெல்லாம் பெண் கதாபாத்திரத்தைக் கூட ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்த காலம். அதுவும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள் அன்றைய சமூகக் கொடூரத்தால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தேவதாசிகள் சமூகத்தினர். பகவானான நம்பிக்கிழவரிலிருந்து, நம்பாடுவான் (ப்ரம்ம ராட்சசன் தவிர) வரை அத்தனைப் பாத்திரங்களும் தேவதாசிப் பெண்கள் ஏற்று மண்டபத்தின் மேலேறி  நடத்த, உயர் சாதியினர்கள்  கீழே தரையில் , பயபக்தியுடன் அமர்ந்து பார்த்த ஒரு சாதித் தளங்கள் திருப்பப்பட்ட நிலை உருவாயிருந்தது!

அது மட்டுமல்ல, பக்தி என்பது ஜாதியைத் தாண்டியது என்பது , நாங்குநேரியில் ஒரு மூதாட்டியிடம் பேராசிரியர் இராமானுஜம் எடுத்த பேட்டியின் குறிப்பிலிருந்து விளங்கும் “ தேவதாசிகளெல்லாம் மேடையில வேஷம் கட்டி ஏர்றப்போ, கூட்டத்துக்குள்ளே இருந்துதான் மேடைக்குப் போவா. உக்கார்ந்து இருக்கறவா,அவாளை அப்படியே கால்ல விழுந்து சேவிப்பா. நம்பி, நம்பாடுவானா வேஷம் கட்டியிருக்கிறவாளை, நாடகம் முடிஞ்சதும், வயசான ப்ராமணர் முதக்கொண்டு, எல்லாரும் சேவிப்பா. பாத்திருக்கேன். வயசோ, ஜாதியோ பாக்கப்படாது. அப்போ அவ வெறும்  மனுஷியில்லை. சாக்‌ஷாத் நம்பாடுவான், நம்பி-ன்னா?”

ஜாதிகள் அற்ற , பெண் அடிமைத் தளை அற்ற, சமூக சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் கைசிக நாடகத்தை நீங்களும் திருக்குறுங்குடி சென்று அனுபவியுங்கள்.

"எங்ஙனேயோ அன்னைமீர்காள்
      என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
      தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
      செல்கின்றது என் நெஞ்சமே" நம்மாழ்வார். திருவாய்மொழி.




No comments:

Post a Comment