Tuesday, October 01, 2013

காந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்

ஆறு மணிக்குள்ளே ஆபீஸ் விட்டுக் கிளம்பியிருக்கணும். கொஞ்சம் கதைபேசி நின்றதில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியாகிவிட்டது. காரின் இரு புறமும் ஈக்களாய்ப் பறந்துபோகும் மோட்டார்சைக்கிள்கள். சர்ரக் என உரசிவிட்டு, லேசாகத் திரும்பி, ஹெல்மெட்டின் ப்ளாஸ்டிக் முகத் திரையை உயர்த்தி விட்டு யாருக்கும் கேட்காத குரலில் ‘சாரி’ என்றுவிட்டு சென்றுவிடுவார்கள். டெண்ட் எடுக்கவும், டச் அப் செய்யவும், பாஷா பாய் வீட்டையே எழுதிவைக்கச் சொல்லுவான்.

கொஞ்சம் எச்சரிக்க்கையோடுதான் முன்னேறினேன்.
இரு மோட்டார்சைக்கிள்கள். ஒன்று என் வலதுபுறம், மற்றது இடதுபுறம்- நேராக என் ஜன்னல்கள் அருகே. சிக்னல் போஸ்ட்டில் பச்சை எல் இடி தப்புத் தப்பாக நொடிகளைக்காட்டியது. இதுவும் நெரிசலுக்குக் காரணம் போலும்.

கண்ணாடியை இறக்கிவிட்டபோதுதான் கவனித்தேன். வலப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளின் பில்லியனில் ஒரு பெண், மடியில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். அதன் கன்னத்தை விடப் பெரிசாக கருப்புப் பொட்டு கன்னத்தில் ஈஷியிருக்க, நெற்றியில் பவுடர் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. சிறு உருளைகளாகக் கைகள், அதன் விரல் முட்டிகளில் சிறு பள்ளங்கள், மெத்து மெத்தென உப்பிய புறங்கைகள். லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது.

திடீரென அது என்னைப் பார்த்து “அய்ங்” என்று பொக்கைவாய் காட்டிச் சிரித்தது. ஹலோ என்றேன். அது சற்றும் மிரளாமல், மீண்டும் ஒரு சிரிப்பு. கையை சம்பந்தமில்லாமல் மேலும் கீழும் ஆட்டி, ஒரு நொடியில் என்னை விட்டுவிட்டு சாலையில் இருந்த கல்லைப் பார்க்க ஆரம்பித்தது. பத்து செகண்ட்களில் மீண்டும் என்னைப் பார்த்தது. அதே சிரிப்பு., அதோடு ’நங்கா மிங்கா’ என ஒரு குழறல். “சே கழுதை. என்ன சிரிப்பு?” என்றேன். இப்படிக் கூர்ந்து பார்க்கிற அளவுக்கு நம்ம மூஞ்சி அவ்வளவு பிரகாசமாக இருக்காதே என்ற சந்தேகத்தோடு, குழந்தை பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தேன். நினைத்தது சரிதான். என்னைத் தாண்டி, இடப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளில் பில்லியனில் இருந்த பொண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கிறது.

வண்டிகள் மெல்ல நகரத் தொடங்கியிருந்தன. இரு மோட்டார்சைக்கிள்களும் நகர்ந்து முன்னே என் வண்டியின் முன்னே பைலட் போலச் சென்றிருந்தன. இரு வண்டிகளும் மிக அருகில். நானும் காரை மெல்ல நகர்த்தினேன்.அந்தப் பெண் பக்கவாட்டில் திரும்பி குழந்தை தன்னைப் பார்ப்பதையும், குழறுவதையும் கவனித்துவிட்டாள். குழந்தை அவளை நோக்கிக் கையை நீட்டி, இரு விரல்கள் வானை நோக்க, இரு விரல்கள் அவளை நோக்க, கட்டைவிரல் எங்கேயோ நோக்க, அகல விரித்து , அம்மாவின் மடியில் துள்ளியது. அவள் தன்னிச்சையாக அதனை இறுகப் பிடிப்பது தெரிந்தது. இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்? என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ? கொஞ்சமாய்த்தான் அகலம். சற்றே பக்கவாட்டில் குனிந்து அதன் குஞ்சுக்கைகளை முத்தமிடலாம்.

அவள் வெடுக்கெனத் தலையை மறுபுறம் திருப்பினாள். பார்க்க விரும்பாதவளைப் போலே. ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் வியர்க்க வியர்க்க, வேகமாக கையை அசைத்து அனைவரையும் முன்னே போகச் சொல்லிக்கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் பாதையில் விரிந்து விரைந்தன.

ஒரு கோபம் என்னுள் விரிந்துகொண்டிருந்தது. சட்டென இறங்கி, அந்தப் பெண்ணைப் பிடித்து “ஏவுட்டி, ஒரு குழந்தை உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதை அலட்சியம் செயயுமளவுக்கு, அப்படியென்ன திமிரு?” என்று ஒரு வார்த்தை வாங்கலாம் என்று தோன்றியது.

இயலாமையில் கியரும் , கிளட்ச்சும் ஒரு சேராமல் வண்டி “வய்ய்ங்க்” எனத் திமிறி , சில நொடிகளின் பின் சீரானது. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும் ( என்னைத் தவிர. அவை அழுதால் டென்ஷனாகிவிடுவேன்.) அதுவும் பெண்கள் குழந்தைகளை வெறுக்க சான்ஸே இல்லை. முன்னே போனது ஒரு பெண்ணில்லை. அன்பென்னும் சுவை அறியாத மிருகம்..
மெல்லக் குறள் ஒன்று மனதுள் எழுந்தது.

காந்தள் விரல்நீட் டுமின்பறியா ளொத்தாளே
தீந்தேன் அறியாக் கவி

கவி - குரங்கு காந்தள் - விரல் போலிருக்கும் மலர்

ஸ்ரீவரமங்கை ,”அந்தப் பெண்ணுக்கு என்ன ப்ரச்சனைன்னு நமக்குத் தெரியுமா?. அதை ஏன் போய்த் திட்டணும்? இதான், மெல்லிய உணர்வுகளைக்கூட உங்களுக்கெல்லாம் வல்லியதாகத்தான் சொல்லத் தெரிகிறது” என்றாள். இது என் பழைய blunderகளை வெளிக்கொணரும் அபாயமிருப்பதால், அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

No comments:

Post a Comment