Monday, November 20, 2017

கோரஸ்ஸும் ரெஜினா டீச்சரும்.

கோரஸ் பாடுவோர் நிற்கும் விதத்தைப் பற்றி எழுதியதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உண்மையில் கோரஸுக்குப் பாடுவோரை வரிசையாக நிறுத்தும் சடங்கு அரசியல், ஜால்ரா, பாலியல் வசீகரம் எனப் பல உள்ளடுக்குகளைக் கொண்டது.
ஏழாம் கிளாஸ் என நினைக்கிறேன். பள்ளிக்கு சில முக்கியஸ்தர்கள் , குழந்தைகள் தினவிழாவிற்கு வருகிறார்கள் என பெரிய டீச்சர் சொல்ல, வகுப்புகள் திமிலோகப் பட்டன.
”ரோசம்மா டீச்சர், உங்க பிள்ளேள் எக்ஸர்ஸைஸ். செவன் ஏ, வளையம் வைச்சு போனவருசம்மாதிரி பெர்பார்மென்ஸ். 6 ஏ, பி, ஸி ’கயவனுக்கும் கதிமோட்சம்’ டிராமா... விக்டோரியா டீச்சர், நீங்க ஸ்க்ரிப்ட் வைச்சிருக்கீங்கள்ளா?”
படுவிரைவாக யார்யார் என்ன செய்யவேண்டுமெனச் சொல்லி வந்த பெரிய டீச்சர் ‘ரெஜினா டீச்சர், நீங்க கோரஸ் தயார் பண்ணுங்க. ஒரு நேரு பாட்டு கடைசில வைச்சிருங்க. ஆண்டவர் தோத்திரம் முதல்ல. வெளங்கா?”
ரெஜினா டீச்சரை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பல் துருத்தி, எப்பவும் கடுவென இருப்பார். அவர் வாயில் எங்களைப் பற்றி மனித விளிகளே வராது
“ நாயே, எங்கிட்டுலா ஓடுத? கிளாஸுக்குப் போ. ஒண்ணுக்கெல்லாம் ரீஸஸ்லதான் போணும். ஏலே, வெள்ளப்பன்னி.. ஒனக்குத் தனியாச் சொல்லணுமோ?”
என்னை அவர் “ வெள்ளைப் பன்னி “என்றோ “கண்ணாடி” என்றோதான் அழைப்பார். 6ம் கிளாஸில் கண்ணாடி போட்டதன் பட்டப்பெயர் அது. கூட இரூப்பவர்கள் படுகறுப்பாக இருக்கையில், மாநிறம் - வெள்ளை.
ரெஜினா டீச்சர் , “ரோசம்மா, ஒரு நிமிசம்” என்று க்ளாஸ் டீச்சரிடம் கேட்டுவிட்டு “ பிள்ளேளா, யாரெல்லாம் பாட வாரீய?” என்றார். ஒருவரும் பேசவில்லை.
“நீயாச் சொல்லுதியா, இல்ல கூப்பிடட்டா? நாயிங்க ஒழுங்காச் சொன்னா கேக்கா பாரு?”
அதற்கும் மவுனம்.
“சரி, வள்ளி, செல்வி, கலைவாணி, மரிய ரோஜா, ஆறுமுகம், செல்வன், விக்டர், சுதாகர் ..லே கண்ணாடி -உன்னியத்தான். எந்திரி”
அனைவரும் பெரியடீச்சர் ரூம் வாசலில் நிறுத்தப்பட்டு “ எங்கே இறைவா இருக்கின்றாய்? எனை நீ எதற்கு அழைக்கின்றாய்?” என்று பாடினோம்.. கைகளை முன்னே சேர்த்து , மர்மஸ்தானத்தை மறைத்தபடி வைத்து நிற்கவேண்டும். ஒரே மாதிரி சட்டை வேண்டும். இறுதியில் ஸ்கூல் யூனிபார்ம் போதுமென அறிவிக்கப்பட்டது.
உயரவரிசைப்படி நிறுத்தப்பட்டதில் நான் கடைசிக்கு முந்திய வரிசை. ஓரங்களில் பசங்கள். நடுவில் பெண்கள். செல்வி, முத்துராணி பக்கம் நான். கொஞ்சம் மகிழ்வான வெக்கமாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
” முண்டக்கண்ணி, ஒழுங்காப் பாடுவியாட்டி?” கிசுகிசுத்தேன் முத்துராணியிடம்.
’போல கண்ணாடி”
சில்வியா டீச்சர் அடுத்தநாள் காலையில் எங்கள் அணியைப் பார்த்தார். பெரிய டீச்சரிடம் எதோ சொல்ல அவர் அவசரமாக வெளியே வந்தார்.
“ரெஜினா டீச்சர்? எங்க டீச்சர்?”
ரெஜினா டீச்சர் கையில் பிரம்புடன் வந்தார். பாலகணேசன் ஒழுங்காகப் பாடாமல் சிரித்ததால் அவனுக்கு அடிகொடுக்க ஏழு ஸியில் பிரம்பு வாங்கிவரப் போயிருந்தார்.
“டீச்சர், என்ன இப்படி நிறுத்தி வச்சிருக்கீங்க? பொட்டப் பிள்ளேளா நிறுத்துங்க. செவத்த புள்ளேள் முன்னாடி நிறுத்தணும். ஏ,செல்வகுமாரி, நீ கடைச் வரிசைக்குப் போ. செல்வி, நீ மரிய ரோஜா இடத்துல வா.”
திருடர்களைப் பிடித்து வைத்த வரிசையில் போலீஸ் நோட்டமிடுவது போல பெரியடீச்சர் வரிசையை வலம் வந்தார்.
” பசங்கள எதுக்கு வச்சிருக்கறீங்க?”
“மேல் வாய்ஸ் வேணும் டீச்சர். நல்ல பிட்ச் போற பசங்களத்தான் எடுத்திருக்கம்”
“பசங்க வேணாம். பொம்பளப் பிள்ளேள மட்டும் நிறுத்துங்க. வர்ற கெஸ்ட் எல்லாம் இந்த கருமூஞ்சிகளப் பாக்க வேண்டாம்.வெளங்கா ஒங்களுக்கு?”
சில்வியா டீச்சர் “ வேணா எங்கிளாஸ்ல இருந்து மூணு பிள்ளேள அனுப்பட்டா டீச்சர்? வசந்தி, பரிமளா, ஜோஸஃபைன்...”
பெரியடீச்சர் போனதும், ரெஜினா டீச்சர் “சில்வியா டீச்சர், கொஞ்சம் இரிங்க” என்றார்.
“அவதான் சொல்லுதான்னா நீங்களும் சேந்து பாடுதீங்க? பிள்ளைகளை பாட்டுப்பாட கூப்புடுதோமா, இல்ல வந்திருக்கறவன் வக்கிரமாக்ப்பாக்க குளுகுளுன்னு செவத்தபொண்ணுகளா முன்னாடி நிறுத்துறோமா?”
சில்வியா டீச்சர் அதிந்து போனார் “இல்ல, நான் என்ன சொல்லுதேன்னா..”
“ நம்ம வேலை என்ன? என்ன தொழில் செய்யச் சொல்லுதாக? பாடுற பாட்டு எங்கே இறைவா?ன்னு , செய்யறது சாக்கடை வேலை. தூ”
சில்வியா டீச்சர் கண்களைத் துடைத்துக்கொண்டு விரைந்தார்.
ரெஜினா டீச்சர் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார் .

“ செவத்த பிள்ளேளா முன்னாடி நிறுத்தினாத்தான் ஸ்கூலுக்கு காசு கிடைக்கும்னா, அது வேற தொழிலுட்டீ. பாவி மக்களா. சேசு மன்னிக்கமாட்டாருட்டீ உங்கள. கறுப்பு ஆடு..எல்லாம் கறுப்பு ஆடு.”
நாங்கள் கோரஸில் இருந்தோம். விழா முடிந்த இரு நாட்களில் ரெஜினா டீச்சரைப் பள்ளியில் காணவில்லை. வேலையை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றார்கள்..

நான் ரெஜினா டீச்சரின் மாணவன் என்பதில் ஒரு பெருமை இருக்கிறது.

Monday, November 13, 2017

6174 - மின்நூல் வடிவில்

6174 புத்தகம் இப்போது இ புக் வடிவில் கிண்டிலில் வெளிவந்துள்ளது.
ஆரம்பகாலத் தள்ளுபடி விலையாக ரூ 150 வைக்கப்பட்டிருக்கிறது . (420+ சொச்சம் பக்கங்கள்).
amazon.in கிடைக்கிறது. உலகில் பல நாடுகளின் அமேசான் தளத்தில் அந்தந்த கரன்ஸியில் விற்பனைக்கு இருக்கிறது.
kindle unlimited பயனாளர்களுக்கு இலவசம்.
அமேசான் தளத்தில் தேடுவதற்கு sudhakar kasturi என்றோ 6174 tamil book என்றோ இட்டு, e book வகையைத் தேர்ந்தெடுக்கலாம்.
படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி.





Saturday, November 11, 2017

ஆறுமுகம் அண்ணாச்சி

சுப்பிரமணி என்ற எஸ் எஸ், போன் செய்தபோது இரவு 9 மணி. “ஏ, தூங்கிட்டியா? ஒண்ணு பேசணுமே” என்றான். ந்யூஜெர்ஸியிலிருந்து அழைப்பதால் எதாச்சும் அர்ஜெண்ட் மேட்டர் இருக்குமெனவே நினைத்தேன். ”இல்லடே, சொல்லு”
”வாட்ஸப்ல ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன். யார்னு சொல்லு பாப்பம் ”
வாட்ஸப்பை உயிர்ப்பித்தேன். “ லே, மக்கா! இது ஆறுமுவம்லா?!”
அட, ஞாபகம் இருக்காடே?”
ஞாபகம் இருக்காவா? அவரிடமல்லவா நாங்கள் ஆங்கிலம் பேசிக்கற்றோம்? இன்று கற்பனை வளத்தைப் பெருக்கியதற்கு அவரல்லவா காரணம்?
“ஒரு நிமிசம் இருடே” என்றேன் “ குட்டியை லைன்ல எடுக்கேன். அவனும் கேக்கட்டு”
குட்டி என்ற சுந்தரராஜன் உறங்கியிருந்தான். எழுப்பவேண்டாமென நினைத்து பிற பேச்சுக்களைத் தொடர்ந்தோம். ஆனால் நினைவில் குடைந்து கொண்டே இருந்தது “ சே, குட்டியும் பேசியிருந்தா நல்லாயிருந்திருக்குமே?”
தூத்துக்குடி ஹார்பர் குவாட்டர்ஸில் இருந்த காலம் அது. மாணவப் பருவம்.
82ல் குட்டியும் நானும் எங்கள் தெருவில் ( இதே சுப்ரமணியின் வீட்டின் முன்னே) நடந்து கொண்டிருக்கும்போது “தம்பி” என்று குரல் கேட்டது. பரட்டைத் தலையும், ஒல்லியான உருவமுமாய் ஆறுமுகம் பின்னே வந்துகொண்டிருந்தார்.
“ஒரு சந்தேகம் தம்பிகளா, இந்தா இங்கிட்டு அய்யரு வீட்டுல ட்யூப்லைட்டு எரிதுல்லா? அது ஏன் நீலமா எரிது? அங்கிட்டு மேல பாக்கச்சே, மாடி வீட்டுல ( அது சுப்ரமணி வீடு), டீப்லைட்டு வெள்ளையா எரிது. ஏம்டே?”
எங்களுக்கும் வேறு வேலை வெட்டியில்லை. குட்டி என்னைப் பார்க்க...புரிந்துகொண்டேன்.
”அதுவா அண்ணாச்சி?, நீலமா எரிதுல்லா, அதுல அல்ட்ராவயலட் ரேடியேஷன் வருது. அவங்க வீட்டுல அதை வச்சித்தான் ஹால்ல டி.வி போடுதாங்க. அவங்க வீட்டுல ப்ரிட்ஜு இருக்குல்லா, அதுக்கும் அது வேணுமாங்கும். எல்லாம் அந்த நீல லைட்டுலேர்ந்துதான் வருது”
பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள நான் பாடுபட, குட்டி தொடங்கினான் “ மேல் வீடு இருக்கு பாத்தியளாண்ணாச்சி? அவங்க வீட்டுல வெள்ளை லைட்டுலயே டி.வி ஓடிருது. அதுக்கு இன்ஃப்ரா ரெட் லைட்னு பேரு ”
ஆறுமுகம் சந்தேகமாக எங்களைப் பார்த்தார்.
“வேணும்னா அவங்க வீட்டுப் பையனையே கேளுங்க. லே , எஸ் எஸ்ஸைக் கூப்பிடு. அவனே சொல்லட்டு” அவனையும் எங்கள் களவாணிதனத்தில் இழுக்க முயற்சித்தோம்.
அப்பவும் ஆறுமுகத்தின் கண்களில் சந்தேகம் மின்னியது.
”இதெல்லாம் இங்க்லீஷ்லல்லா இருக்கும்? தமிழ்ல சொல்லுதீயளே?”
ஆஹா.. இதுதான் சந்தேகமா?
ஆனால் ப்ரச்சனை எங்களுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியாது. தமிழ்மீடியப் பயல்கள் இருவரும்.
ஆங்கிலத்தில் சொல்லியே ஆகவேண்டும்.
எனக்கு ஆங்கிலப் பாடத்தில் டாகூரின் மனப்பாடக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
“அண்ணாச்சி, இத This is my prayer to Thee My Lord" ன்னுவாங்க”
குட்டி தொடர்ந்தான் “ அந்த வெள்ளை லைட்டுக்கு Strike strike at the root of penury in my heart ' ன்னுவாங்க. விடுறே நம போவோம். அண்ணாச்சி நம்மள நம்பமாட்டிக்காரு”
’அடடே ’ என்றார் ஆறுமுகம் நெகிழ்ந்து போய் “ என்னமா இங்க்லீசு பேசுதுக, நம்ம ஹார்பர் பிள்ளேள்? நீங்க கெட்டிக்காரப் பயலுவடே.”
ஆறுமுகம் ஒரு நடமாடும் பல்வினை வித்தகர். முக்கியமாக நடமாடும் முடிதிருத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் போய், தோட்டத்தில் நாற்காலி போட்டு, முடி திருத்துவார். சிறியதாகக் குழிபறித்து, முடியை அதில் போட்டு மூடிவிடுவோம். ஹார்பர் குவாட்டர்ஸ்ஸில் 80களின் இறுதி வரை இது இருந்தது.
எங்கிருந்து வந்தார், அவருக்கு யார் சொந்தம்? யாருக்கும் தெரியாது. எங்கே தங்கியிருப்பார் என்பதும் தெரியாது. ஹார்பர் குவாட்டர்ஸில் அங்குமிங்கும் நடமாடுவார். ஏதோ சில்லறைப் பணிகள் செய்துபோவார் என்பதுதான் பலருக்கும் அவர் குறித்துத் தெரிந்த செய்திகள்.
டவுணுக்குச் சென்றோ,அல்லது கடைகள் வளாகத்திலோ முடிவெட்டுவதை விட ஆறுமுகத்தை அழைத்து வெட்டிக்கொள்வதை நாங்கள் விரும்பினோம்.
”ஏம்டே லேட்டு? ” என்பார், முடியை நீரில் நனைத்து விட்டவாறே. “அதா? ஒரு சுறாமீன் நம்ம வீட்டுல புல்லு திங்க வந்திச்சில்லா?, வெரட்டி விட நேரமாயிட்டு..”
“அப்டியா?! கழுத்த நேர வையி தம்பி. தலையாட்டாத. ஆங் அப்படித்தான். பொறவு?”
“பொறவென்னா? நானும் குட்டியும்தான் கொண்டுபோய் கடல்ல விட்டுட்டு வந்தம். அண்ணாச்சி சொறா மீன் பாத்திருக்கீயளா?”
“இல்லயடே? அண்ணாச்சிய ஒரு கொரலு கூப்டிருக்கலாம்லாடே? ரெண்டுபேரும் என்னை மறந்துட்டீய. ஆ.. கொஞ்சம் தலைய குனிஞ்சிக்க. அங் அங்கனயே வச்சிரி. கவனம் தம்பி. கத்தி வெட்டிரும். இந்தா ஒரே நிமிசம்..ஆங்.ஆயிட்டு. அப்புறம்?”
இப்படியெல்லாம் பேச்சு, ஸ்டெப் கட்டிங் புகழ் சலூன்களில் சாத்தியமில்லை.
அவருக்கு நாங்கள் விடும் புருடாக்கள், கட்டுக்கதைகள் என நன்றாகவே தெரிந்திருந்தும், வெள்ளந்தியாகவே நடித்தார்.
“ இந்த கேணப்பயலுவோ சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடுதீயளே அண்ணாச்சி? “ என்று அண்ணன் கேட்டபோது “ சின்னப் புள்ளேள். நம்மள வச்சி சிரிக்குது. சிரிச்சிட்டுப் போட்டு.என்ன இப்ப?” என்பார் கண்சிமிட்டிச் சிரித்து.
சில இளைஞர்களிடம் கிளுகிளுப்பான கதைகள் சொல்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களிடம் அதே அறியா வெகுளி நடிப்பு மட்டும். 86ன்பின் அவரை நான் பார்க்கவில்லை.
எஸ் எஸ், “இந்த போட்டோவை நம்ம ஆனந்து Joseph Sugananth 5 வருசம் முன்னாடி எடுத்திருக்கான். அது இப்ப வாட்ஸப்ல எங்கிட்ட வந்திச்சி” என்றான். இப்போது ஆறுமுகம் இருக்கிறாரா ? தெரியாது.
எம்.பி.ஏ வகுப்பில் ஒரு முறை Transactional analysis ல் Eric Berneன் Games People Play பற்றிப் பேசுகையில் ஆறுமுகத்தின் நடிப்பு பற்றிச் சொன்னேன். Transactional Analysis expert ஒருவர் “அது விளையாட்டு என்பதாக வராது’ என்றார். ஆனாலும், 'இது மிக சுவாரஸ்யமான பரிமாற்றம்”' என்றார்.
பல முகங்கள் நமக்கு. ஆறுமுகத்துக்கு எங்களிடம் ஒரே முகம். அது ஏமாற்றுவதும் ஏமாறுவதாக நடிப்பதிலும் பொய்யில்லாத முகம்.
பி.கு : குட்டி நேற்று அழைத்திருந்தான் “ அதென்னடே மனப்பாடப் பாட்டு? ..This is my prayer. ஆறுமுகத்துகிட்ட பாடிப் பாடி, படிச்சதுல இப்ப அது ஒண்ணுதான் ஞாபகத்துல இருக்கு”
தாகூர் , ஆறுமுகத்திற்கு நன்றி சொல்லியிருப்பார்.

Wednesday, November 08, 2017

ஏழும் நம்பிக்கையும்

திருமண வரவேற்பு இன்னும் தொடங்கவில்லை. ட்ராஃபிக் இருக்குமே என விரைவாகக் கிளம்பியதால், விரைவாக மண்டபத்தை அடைந்து வருபவர்களை வெறுமே வேடிக்கை பார்த்திருந்தேன்.பலரும் அறியா முகங்கள். வாழ்வில் ஒரே முறை அணியப்போகும் வேஷத்துக்காக ,தொளதொளவென ஜிப்பாவும் டைட்டான பைஜாமாவும் பழகாத சிலர் , கைகளை அகட்டி வைத்துத் தடுமாறி, கோமாளிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
”ஹலோ” என்ற குரலில் ஆசுவாசமடைந்தேன். தியாகராஜன் பின்னால் நின்றிருந்தார். “ எங்க மாமனார் “ என்று அவருக்கு அருகில் நின்றிருந்த பெரியவரை அறிமுகம் செய்துவைத்தார். “ ஊர்ல இருந்து வந்து பத்து நாளாவுது. போரடிக்குதுன்னாரு. சரி, இங்க வந்தா நம்ம ஆட்களாப் பாக்கலாமேன்னு”
பெரியவர் கை கூப்பினார். பேசவில்லை . பெரிய விபூதிப்பட்டை, நடுவே பெரிய குங்குமப் பொட்டு என சிவப்பழமாக நின்றிருந்தார். கொஞ்சம் பெண் முகக் கட்டு.
அப்படியே பவுடர் போட்டு, காவி கட்டி விட்டிருந்தால் “அரியது கேட்கின் வரிவடி வேலா” என்று பாடும் கே.பி.சுந்தராம்பாள் போல இருந்திருப்பார்.
”பெரியவளுக்கு நாளைக்கு எக்ஸாம். அதான் வீட்டுல விட்டுட்டு வந்துட்டோம். சாப்டதும் உடனே கிளம்பணும்” தியாகராஜன் அவர்பாட்டுக்கு எதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்னமோ ஒரு பிடிப்பு வரவில்லை. எல்லாம் பகட்டாகத் தெரிந்தது.
”எல்லாச் சடங்குகளுக்கும் ஏதாச்சும் காரணம் இருக்கும். ஆனா இந்த வரவேற்புக்கு பணமும், ஆடம்பரமும்தான் காரணமாயிருக்க முடியும்” என்றார் தியாகராஜன். முன் வரிசையில் இருந்த முரளி திரும்பிப் பார்த்தார். “ எல்லாத்துக்கும் காரணம் இருக்காது சார். சிலதெல்லாம் அப்படியே ஃபாலோ பண்ணியிருப்பாங்க. கேட்டுப்பாருங்க , பெரியவங்களூக்கே தெரியாது” என்றார் முரளி.
தியாகராஜன் ஆமோதித்தார். நான் “ தெரிஞ்சிருக்காதுங்கறதுனால காரணம் இல்லேன்னு சொல்லிட முடியாது இல்லையா?” என்றேன்.
முரளி எழுந்து எங்கள் வரிசையில் அமர்ந்தார் “ எங்க மாமி, எண்பது வயசாகுது. இப்பவும் அதச் செய்யாதே, இதச்செய்யாதேன்னு சொல்லிகிட்டே இருப்பா. கேட்டா” இப்படித்தான் எங்கம்மா சொல்லுவா” என்பாள். பாருங்க போனமாசம் ஊருக்குப் போயிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்துல ராமர் கோயில். அன்னிக்கு என்னமோ விசேஷம். சாயங்காலமா, எல்லாரும் போயிட்டு ஒரு அர்ச்சனை செஞ்சுடலாம்னு போனோம். நடை திறக்கலை. சன்னதிப் படியில உக்கார்ந்திருந்த அர்ச்சகர் , எங்கம்மா கிட்ட “ மூத்தவன் வரலையா?”-ன்னார். அம்மா பதில் சொல்றதுக்குள்ளே எம்பொண்ணு “ பெரியப்பா ஏழுநாள்ல வருவார்”ன்னுது.”
கே.பி சுந்தராம்பாள் சலனமின்றி அமர்ந்திருந்தார்.
“ மாமி அவள் தலையில சின்னதாக் குட்டினாள் “ அசடு. ஆறு நாள்னு சொல்லு” “இல்ல பாட்டி, ஏழுநாள்னுதான் இமெயில் எழுதியிருந்தார்”
மாமியின் கண்களில் லேசாக் கோபம் எட்டிப் பார்த்தது “டீ, இவளே, ஒண்ணு ஆறுன்னு சொல்லு, இல்ல எட்டுன்னு சொல்லு. சாரங்கன் சந்நதியாக்கும்”
சுந்தராம்பாள் சற்றே தலையைத் திருப்பினார். முரளி தொடர்ந்தார்.
“ என் பொண்ணுக்குக் கோபம். எல்லார் முன்னாலயும் குட்டிட்டுத் திட்டவும் செய்யறா இந்த மாமிப்பாட்டி. “ பாட்டி, வாட்ஸ் ராங் இன் ஸேயிங் செவன்? அவர் எழுதினதைத்தான் சொன்னேன். ஏன் ஏழு சொல்லக்கூடாது?”
” சார்ங்கம் விடாதுடீ. பாத்துண்டே இருக்கும். யாராச்சும் ஏழுன்னா அது எழுந்துடும். பாரு நடை திறந்தாச்சு. ஸ்வாமிகிட்டே வேண்டிக்கோ.” என்றவள் கன்னத்தில் போட்டுக்கொண்டு “ ராமா ராமா, குழந்தை தெரியாமச் சொல்லிடுத்து. க்‌ஷமிக்கணும்” ன்னா.” முரளி நிறுத்திச் சிரித்தார் “ ஏழுக்கும், சாரங்கபாணிக்கும் என்ன ஏழாம் படையா? ஆகாதுன்னுட்டு . கேட்டா, எங்கம்மா சொன்னா”ன்னுவா
சுந்தராம்பாள் முன்னே குனிந்தார். முரளியைப் பார்த்து “ உங்க மாமி இங்க வந்திருக்காங்களா?”
“இல்ல. ஊர்ல இருக்கா” என்ற முரளி சற்றே கலவரமடைந்தார்.
“இங்க இருந்திருந்தா, கால்ல விழுந்து வணங்கியிருப்பேன். என் துரதிருஷ்டம்” என்றார் மனிதர். நான் வியப்புடன் ஏறிட்டேன்.
“அவங்க சொன்னது கம்பராமாயணத்துல வர்ற காட்சி. வாலியுடன் போர் செய்யப்போகுமுன் சுக்ரீவன் ராமனின் பலத்தைச் சோதிக்கிறான். ஏழு பெரிய மராமரங்களை அம்பால் அடித்துக் காட்டச் சொல்கிறான். ராமன் தன் பாணத்தை விடுமுன் “ ஏழு தன்னை துளைத்து வா” என்று ஏவுகிறான். ராமபாணம் அந்த ஏழு மரங்களைத் துளைத்து , அதன்பின் கீழுலகங்கள் ஏழையும் ஊடுருவிப் பின் மற்ற ஏழு என்ற எண்கொண்டவற்றைக் காணாது ராமனின் அம்புறாத் தூளியில் வந்து நின்றது. ஏழு என்றால் அப்போது கிளம்பும் எத்தனிப்புடன் அது காத்திருக்கிறது” என்கிறான் கம்பன்.
“ஏழு மரா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்,ஒழிவது அன்று, இன்னும்.”.

சந்தேகித்துச் சும்மா இருக்கறதை விட, அறியாது நல்லது செய்து போவதில் என்ன தவறு? எப்போவாவது உண்மை ஒரு தேரில் ஏறி வரும். அன்று நாம் தரிசிக்க, இன்றும் தேரின் வடத்தை விடாது பிடித்து இழுக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் வணங்கத்தக்கவர்கள்”
சுந்தராம்பாள் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.
எழுந்து, நீண்ட வரிசையில் அடங்கினோம்.
மேடையில் ஏதோ ஒரு முதிய தம்பதிகள் ஏறிவர, மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினர். முன்னே ஒரு வரிசையில் ஒரு இளைஞன் அதைப் பார்த்து சிரித்தபடி அருகிலிருந்தவளிடம் ஏதோ சொன்னான்.
அரங்கம் இப்போது செயற்கையாகத் தெரியவில்லை. இதற்கென எதாவது பாடல் இருக்கும். ஒரு சுந்தராம்பாள் இருப்பார்.
ஒரு மாமியும் இருப்பாள்.

வாடகை சைக்கிள்


பஸ்ஸ்டாண்டில் இருந்து சிவன்கோவில் ஐந்து நிமிட நடை. திருநெல்வேலிக்காரர்கள் பாஷையில் ”ரெண்டு எட்டு எடுத்து வச்சா வந்துரும்.”
“என்ன மெதுவா நடக்கீங்க? வேல கெடக்கு. நைட்டு சோறு யாரு பொங்குவா?” சீதாலட்சுமியின் குரலைப் பொருட்படுத்தாது வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்துப் பின்னே நடந்தான் சிவராமன். கோபத்தில் அவன் மூச்சு சீரற்று வந்தது.
சீதா ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேகத்தில் கோவிலை நோக்கி நடந்தாள். “இந்தாளு எப்பவுமே இப்படித்தான். மத்தியானம் பேசினோம்லா? அதான் வேதாளம் முருங்க மரம் ஏறிக்கெடக்கு. விடுடி. வருவாரு” அருகில் நடந்த தங்கையிடம் கடுப்புடன் பேசியபடி நடந்தாள்.
சிவராமன் தனிச்சையாகத் தலை திருப்பினான். முன்பு இங்கு தனராஜ் அண்ணன் கடை இருந்தது. ஆறுமுக நாடார் வாடகை சைக்கிள் கடை. என்று போர்டு போட்டு “ கடம் அன்பை முரிக்கும்” என்று இலக்கணத்தை முறித்துப்போட்ட சாக்பீஸ் எழுத்து எச்சரிக்கையுடன் போர்டு தொங்கியது
பச்சைக்கலர் ஹெர்குலிஸ், டபுள் பார் ராலே, முன் வீல் பக்கம் ட்புள் ஸ்ப்ரிங், காரியர் வைச்சது , வைக்காதது எனப் பல சைக்கிள்கள், பெயிண்ட்டால் எண் இடப்பட்டு வரிசையாக நின்றிருக்கும்.
சிறுவர்களுக்கு இரு குட்டையான சைக்கிள்கள் இருந்தன. “ஐஞ்சு பைசாக்கு அரை மணி நேரம்- சிகப்பு சைக்கிள், ரெண்டு பைசாவுக்கு - ஊதா சைக்கிள்” என்று தனராஜ் தன் இச்சைக்கு விலை வைத்திருந்தார். சில பசங்களுக்கு அரைமணி நேரம் முடிந்திருந்தாலும் அதிகம் வாங்க மாட்டார் .
சிலநேரம், பெரிய சைக்கிள் ஓட்டும் மிதமிஞ்சிய ஆசையில், சின்ன சைக்கிளை வைத்துவிட்டு, “அண்ணாச்சி இன்னும் ரெண்டு நிமிசம் இருக்குல்லா?. ஒரேயொருவாட்டி, அந்த திருப்பம் வரை அரைப்பெடல் போயிட்டு வந்துர்றேன்” என்று கெஞ்சினாலும் “போடே, ? பெரிய சைக்கிளெல்லாம் மீசை இல்லாத பயலுவளுக்குக் கிடையாது. ” என்று இரக்கமே இல்லாமல் மறுத்துவிடுவார். அவரை , இசக்கி ஆச்சியின் கெட்ட வார்த்தை வரிகளில் திட்டிக்கொண்டே சிறுவர்கள் திரும்பிப் போவார்கள். . (இசக்கி ஆச்சியின் கொடுவாய் மொழியை இங்கு பதிவு செய்ய முடியாது).
தனராஜ் அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் மொபைல் கடை ஒன்று முளைத்திருந்தது. சிவராமன் நின்று உள்ளே கவனித்தான். அந்த முதியவர்...தனராஜ்... தனராஜ் அண்ணாச்சியேதான்.
”தெரியுதா அண்ணாச்சி?” கேட்டு அறிமுகப்படுத்திக்கொண்டான். “ டே, நீ முரளி தம்பில்லா?! எப்படி இருக்க? ஒங்கண்ணன் எங்கிட்டிருக்கான்? முப்பது வருசமாச்சேய்யா பாத்து?!” அண்ணாச்சியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
”ஒக்காருடே, அப்பா எங்கிட்டிருக்காரு?”
”அப்பா, போயாச்சி அண்ணாச்சி. பத்து வருசமாவுது”
தனராஜ் சற்றே மவுனித்தார் “அவர மாரி ஆட்களையெல்லாம் இனிமேப் பாக்க முடியாது. கடைமேல ஒரு கேஸ் வந்தப்ப, அவர்தான் முன்னாடி நின்னு முடிச்சுக்கொடுத்தாரு. இல்லேன்னா, வள்ளிசா கடை போயிருக்கும், கேட்டியா? ”
”ஆமா” என்றவர் தயங்கியபடி தொடர்ந்தார் “ ஒனக்கு முன்னாடி போச்சே, ரெண்டு பொம்பளேள்? அது ஒன் சம்சாரமும், அவ தங்கச்சியுமா?”
“ஆமாண்ணாச்சி. வடக்குத்தெருவுலதான் அவங்க அப்பா வீடு”
“தெரியும்டே” சிரித்தார் அவர் “ மணிகண்டன் சாரோட மூத்த மவ. கலியாணத்துக்குக் கூப்டிருந்தாரு பாத்துக்க. நான் அப்பப் பாத்து தென்காசிக்குப் போயிருந்தன். நீதான் மாப்பிளைன்னு தெரியாமப் போச்சே. சரி, எல்லாம் இந்தூர்ல நமக்குச் சொந்தந்தானேய்யா, என்ன சொல்லுத?”
சட்டென முகம் சீரியசானார் “ அதென்னா முகம் வாடி இருக்கே? அவளும் கோபமால்லா போனா? என்ன விசயம்? அண்ணாச்சிகிட்ட சொல்லலாம்னா சொல்லு”
“ஓண்ணுமில்லண்ணாச்சி. அவ தம்பிக்கு புல்லட்டு வேங்கணும்னா. நா ’இப்ப வேணாம். அவனா, கடன அடைக்கற புத்தியோட வர்றப்போ வேங்கித்தாறன்னேன். அதாம் கோபம். பயல்னா ஒரு பொறுப்பு வேணாமாண்ணாச்சி? சும்மா வேங்கிக்கொடுத்து குட்டிச்சுவராக்குதாங்க”
அண்ணாச்சி மவுனமாக இருந்தார் “நீ சொல்றது நியாயந்தான்.” சட்டென நிறுத்தி “ டே, ரெண்டு டீ போடுறே, தம்பி யாருன்னு தெரிதா? நம்ம முரளி தம்பி. சின்ன சைக்கிள் கேப்பாம்லா? ஆங், அவந்தான்!”
டீக்கடை அண்ணாச்சி வாயெல்லாம் பல்லாக “ டே, ஒம்பேரு மற்ந்திட்டு. முரளி நல்லாருக்கானா? நம்ம கடைல திருட்டு தம் அடிச்சு, கடம் வச்சில்லா டீ குடிப்பான் ஒங்கண்ணன்? அவ்னக்கிட்ட ”செல்லையாவப் பாத்தேன். ஒங்கணக்குல இன்னும் அம்பது ரூவா கடனா நிக்கி”ன்னாருன்னு சொல்லு. என்ன சொல்லுவியாடே?” இருவரும் சிரித்தார்கள்.
அண்ணாச்சி “ டே, நீ சொல்ற மாரி பயலுவளுக்குப் பொறுப்பு வரணும்தான். ஆனா, பொம்பளேள் புத்தி இருக்கே, அதுல பாசம் கண்ணக் கட்டிரும் பாத்துக்க. எந்தம்பிக்கு இல்லேன்னா சொல்லுதீரு?ன்னுதான் அவளுக்கு முதல்ல வருமே தவிர, நீ என்னத்துக்குச் சொல்லுதே?ன்னு தோணாது. இதெல்லாம் பதவிசா எடுத்துச் சொல்லணும்டே”
“என்னண்ணாச்சி சொல்ல? எளவு ஒண்ணும் புரியாம கத்துதாளுவோ. போட்டி-ன்னு வந்துட்டேன்.’ கோயிலுக்கு வேங்க’-ன்னு இழுக்கா இப்ப”
”மரியாதைக்கி அவ கூடக் கோயிலுக்குப் போயிட்டு வா. அதான் முறை”
“எப்படீண்ணே? மனசு கொதிச்சுக் கிடக்கு. என்னத்தையாச்சும் சொன்னாள்னா, இடம் காலம் பாக்காம, களுத கன்னத்துல ஒரு இளுப்பு இளுத்துருவேன்”
“டே” என்றார் அண்ணாச்சி “ அடங்கி இரி” கையைக் காட்டி அமர்த்தினார். ஒரு நிமிடம் மவுனமாயிருந்தனர் இருவரும்.
“டே, இப்ப நான் தனியாளு. ஒனக்குத் தெரியுமான்னு தெரியல. எம்பொண்டாட்டி பரமேஸ்வரி கண்ணாலம் கட்டி ஒருவருசத்துல பிரிஞ்சி போனா. அப்ப, நீயெல்லாம் சின்னப் பய. முரளிக்குத்தெரியும். அவம் பாத்திருக்கான்.
கோபம் இருக்கு பாரு, மோசமான குணம் பாத்துக்க. நாம என்னதான் நல்லது பண்ணி ஒரு்குடம் பால் மாரி இருந்தாலும், ஒரு நிமிச கோபம், அதுல ஒரு கள்ளிச் சொட்டா விழுந்துரும். பின்னென்ன, குடம் பூரா வெசம் தானே?
பரமேஸ்வரி அன்பாத்தான் இருந்தா பாத்துக்க.
ஒரு நாள் அவ கடைக்கு வந்து “ மாமா, தம்பி வந்திருக்கான். அம்பது ரூவா கொடுங்க. ” அன்னிக்கின்னு பாத்து எனக்கு என்னமோ சின்ன கோபம் .
“எதுக்குட்டீ?” ந்னேன்.
“கோளியடிச்சி குளம்பு வச்சிருதேன். கறி வேணும்னா, கடைல சும்மாவா தருவாக?”ன்னா. இவ்வளவுதான் சொன்னா பாத்துக்க.
எனக்கு வந்திச்சே கோபம் “ செருக்கியுள்ள, எனக்கா சொல்லித்தாரே? நானே இங்க ஓட்டாண்டியா நிக்கேன். நீயென்னன்னா, தம்பிக்கு கோழி குழம்பு வக்கணும்னு வந்து நிக்க, என்னட்டீ? நாயே, பிச்சிருவேம் பிச்சி”
சொன்னவன் சொன்னதோட நின்னிருக்கணும். கையை ஓங்கிட்டேன். அவ அழுதுகிட்டே என்னமோ சொல்ல, நான் அவளைக் கடையிலேர்ந்து தரதரன்னு தெருவுல , இந்தா இங்கதான், ஒரு மூங்கில் கம்பு இருக்கும்லா, நம்ம கடைக் கூரைக்கி? அதுல மோதவிட்டு அடிச்சிட்டேன்.
அன்னிக்கு அவ அம்மா வீட்டுக்குப் போனவதான். நான் போயிக் கூப்பிடல, எங்காத்தா அப்பா, மாமா.. யாரு பேசப் போவல சொல்லு? அவ அந்த மிருகத்தோட வாழ மாட்டேன்னுட்டா. நானும் ‘பொட்டச் சிறுக்கிக்கு இம்புட்டு கோவம், அங்? நான் போயிக் கூப்பிடமாட்டேன். வந்தா வீட்டுல இருந்து வாழட்டும் இல்ல, சிவம்பாறைலேர்ந்து ஆத்துல விழுந்து சாவட்டு” ந்னு விட்டுட்டேன்.
இருவத்தைஞ்சு வருசம் ஓடிட்டு. அவளுக்கு என்னமோ மார்ல கட்டின்னாங்க. புத்து நோய்னு மெட்ராஸ் கூட்டிட்டுப் போனாவ. அப்பத்தான் எனக்கு விசயம் தெரீயுது. அங்க போயிப் பாத்தம் பாரு.”
அண்ணாச்சியின் குரல் நடுங்கியது. “ லே, “ சட்டென அழுகையில் வெடித்தார் “ லே, ரெண்டு பேருக்கும் மத்தியில கிடந்த ஒரு சீலை கிழிஞ்சி தொங்கிச்சி அங்கிட்டு. “ஏம்மாமா, என்ன முன்னாலயே பாக்க வரல?”னு அவ கேக்கா... என்ன சொல்ல?
”சிறுக்கி மவளே, இந்த கூறுகெட்டவன் மனசுல நீதாண்டி இருந்த... ஆனா அதோட விசமா வீம்பு ஒண்ணு நின்னு போச்சே?”ன்னு விம்முதேன்.
அவ கண்ணுல நீரா வடியுது “ நாந்தான் மாமா தப்பு செஞ்சிட்டேன். ஒங்கள ஒ்க்காத்தி வச்சி, ஒரு வாய்ச் சோறு சமச்சிப் போடலயே ? எனக்கும்லா வீம்பு வளந்துகிடக்கு? அதான் ஆத்தா , ஈரமில்லா நெஞ்சுல ஒனக்கு எதுக்குட்டீ உசிரு?ன்னு எடுக்கா போலுக்கு. எல்லாம் என் பாவம். என்னோட போவட்டு”ன்னா. ரெண்டு வாரத்துல போயிட்டா.
இப்ப எனக்கு வீம்பு பிடிக்கக்கூட ஆளில்ல தம்பி. ஒங்கூட சண்டை போட பொண்டாட்டி இருக்கா. போ.. அவகூட சண்ட போட்டு, சமரசமா இரி.

வாடகை சைக்கிளை ஒருநாள் போட்டுட்டுத்தான் எல்லாரும் போவணும். நேரம் முடியறதுக்குள்ள வண்டி ஒட்டி வேலையப் பாக்கறவன் புத்திசாலி. அத விட்டுட்டு, ரோட்டுல சண்டை போட்டு நின்னு, சோலி முடிக்காம, வண்டியத் திருப்பிக் கொடுக்கறவன என்ன சொல்ல? வண்டி ஓட்டறப்ப அடிபடாம, சந்தோசமா ஓட்டணும். அதான் சூச்சுமம். 
சிவராமன் எழுந்து வீடு நோக்கி நடந்தான் . ஒரு நிமிடம் கழித்து அதே தெருவில் கோயிலைப் பார்த்துத் திரும்பி நடந்தான். அண்ணாச்சி கடை விளக்கு அணைந்திருந்தது.
கதையா? நிஜமா ? என்று கேட்காதீர்கள்.உங்கள் மனம், இது கதை என்றால் கதை. நிஜமென்றால் நிஜம்.