Sunday, September 03, 2017

‘ஒரு நொடி.. ஒரே நொடி ..

‘ஒரு நொடி.. ஒரே நொடி சற்றே யோசித்திருந்தால்…’
இந்த உணர்வு நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். சிகரெட்டால்  புற்றுநோய் முற்றியவருக்கு,  வீட்டை விட்டு ஓடிப்போய்க்  கைபிடித்தவன் ஒரு தறுதலை என்பதை உணர்ந்தவருக்கு, போலி ஃபைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தவருக்கு,தன் ஓய்வூதியத் தொகையெல்லாம்  மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் கொடுத்தவருக்கு என வாழ்வில் பல தருணங்கள் வாய்ப்பதுண்டு.
’ஏன் அப்ப,  இப்படி யோசித்தேன்?’ என்பதை வருத்தத்துடன் வியக்காதவர்கள் இதில் இல்லை. ”நான் எப்பவுமே ஒரு நாள் போகட்டும் என தள்ளிப்போட்டு விட்டுத்தான் முடிவெடுப்பேன். ஆனால் அன்னிக்குன்னு பார்த்து…  சே, விதி”
இது விதியின் விளையாட்டா? விதியை நம்பாதவர்கள் ஏமாற்றப்படும்போது என்ன சொல்லிக்கொள்ள வேண்டும்?
பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுவாகச் சொல்வது ஒன்றுதான் ” சட்டுனு ஒரு முடிவெடுக்கணும்னு ஒரு உந்துதல் வந்தது.  சரி, கொடுத்துருவோம்னு தோணிருச்சு. ஏன்? தெரியாது. ஆனா என்னையும் மீறி ஒரு எச்சரிக்கை  உணர்வு வந்தது உண்மை. அதைக் கவனிக்காமப் போயிட்டேன்”
அதன்பின்பும் அந்த  ‘செய்” என்ற உந்துதல்  உணர்வு நீடித்ததா?  என்றால், இல்லை என்றுதான் பெரும்பாலும் சொல்லுவார்கள் . ஒரூ இனம்புரியாத அச்ச உணர்வு, தயக்கம்  தப்பு பண்ணிட்டமோ? என்ற பயம் ‘ என்பது அதன்பின் நெருடிக்கொண்டிருந்திருக்கும் ( இதற்கு ஆதார பூர்வமான புள்ளியியல் கணக்கு இல்லை. பெரும்பாலும் சொல்வது என்பது என் அனுபவத்தின் தகவல் மட்டுமே)
தனது முடிவுகளை மாற்றிக்கொள்ள 60%க்கு மேல் தயாராக இருந்திருக்கிறார்கள். ஆனால் மாற்றத் தயக்கம். பிறர் என்ன சொல்வார்களோ? என்ற பயமும், சமூக அழுத்தமும் முக்கிய காரணிகள்.
இந்த எச்சரிக்கை உணர்வு,  முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது,  ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். “எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா…”  என்பதில் உள்ள ’ஆனா”வை விமர்சிப்பவர்கள், அதன் பின்னிற்கும் அச்ச உணர்வின் அடிப்படையை தன்னிலைபோல் உணர்வதில்லை ( Lack of Empathy ). ஒருவருக்குக் கீற்றாகத் தோன்றி உள்ளிருக்கும் சந்தேகம், அச்சம், தவிர்த்து விலகும் உணர்வு ஏன் மற்றவருக்கு அதே நேரம் தோன்றுவதில்லை?
இதனை ஆராயுமுன் அறிவின் இருநிலைகளைப் பார்த்துவிடுவோம்.
மால்கம் க்ளேட்வெல் தனது blink ப்ளிங்க் புத்தகத்தில் பொறியாகத் தோன்றும் உள்ளூணர்வு கட்டளைகளைப் பற்றிச் சொல்கிறார்.  1/10 வினாடிக்குள் நமது உள்மனம், பொறிகளின் வாயிலாக நாம் அறியும் தகவலை உள்வாங்கி, ஒரு கருத்தும் தந்துவிடுகிறது. அதனைத் தாண்டியே, பெருமூளையின் தருக்கப்பகுதி, தகவலை அசை போட்டு முடிவெடுக்கிறது. இது பல நேரம் தகவலின் அடிப்படையிலேயே முடிவெடுக்கிறது. இதன் பின்னணியில் அனுபவமும், அந்நேரத் தகவலின் சூழ்நிலையுமே நிற்கின்றன..
அனுபவம் இந்த நிலையில் இருதள அமைப்பாக மட்டுமே இருக்கிறது . அதன் விளைவு.  அனுபவத்தின் முக்கிய   மறை விளைவும் காரணியுமான உணர்வு மழுங்கடிக்கப் படுகிறது. ஏனெனில், உணர்வு பூர்வ முடிவுகள் ஆபத்தானவை ‘என்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
ஒரு எதிர்வினையாற்றுமுன், மனம் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது. “இது தேவையா? “ என்றோ,தீர்மானமாக “ வேணாம்” என்றோ வரும் அந்த உணர்வு ஒரு நொடிப்பொழுதினும் சற்றே அதிக அளவு மட்டுமே நீடிக்கிறது. இது எப்போதும் எதிர்மறையானதாகவே இருக்கவேண்டுமென்பதில்லை. “இதை வாங்கிவிடு” என்றோ “ ஆங். இவன்தான் உனக்குப் பொருத்தமான ராஜகுமாரன்” என்றோ குறக்களி அடிக்கும்.
மால்கம்  இதனை, slicing என்று சொல்கிறார். சிறு துண்டுகளாக தகவலை கிரகித்து,  அதனை மனத்தளவில், ஆழ்மனத்தின் அறிவுகொண்டு முழுமையுறச் செய்வது. உதாரணமாக,  15 வினாடி மட்டுமே காட்டப்படும்  ஒரு காணொளியில், வார்த்தைகள் தெளிவுறாதிருக்கும் நிலையிலும் மனம் அதனைப் புரிந்துகொள்கிறது. இதற்கு வீடியோ மெதுவாக, முழுமையாக இருக்கவேண்டுமென்பதில்லை. மனம் அதனை முழுமைபெறச் செய்துவிடுகிறது.  இதனை  உள்மன அறிவு என்று வைத்துக்கொள்வோம்.
இதனை மால்கம் க்ளாட்வெல் முதல் பலரும் பாராட்டி வந்தனர். அறிதல் என்ற பரப்பின் ஒரு பக்கம் மட்டுமே அது. மனம் சற்றே சிந்திக்குமானால், ப்ளிங்க் நிலையிலிருந்து நாம் தாண்டி விட்டோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இதன் அடுத்த நிலையாக, தெளிவாக சிந்திக்கும் தருக்க சிந்தனை நிலை. இதில் எல்லாமே நிதானித்து, அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமாக முடிவெடுக்கிறோம் என நினைத்தால் அது தவறு.  இந்த தருக்க நிலைச் சிந்தனையை இரண்டாகப் பிரிக்கிறார்கள்.
ஒன்றைப் பற்றிச் சிந்திக்கும்போது,  நமது சாய்வுநிலை சிந்தனைகளும், முன் அனுபவங்களும் முடிவெடுக்க முனைகின்றன. காலை பத்து மணிக்குக் கதவைத் தட்டுபவர் போஸ்ட்மேனாக இருக்குமென்பது நம் முன் முன் அனுபவத்தின் நீட்சி. “ஓ நீங்களா?!, போஸ்ட்மேன்னு நினைச்சேன்” என்பதின் முன் நிலை அது.  விமானத்தில் தாடியுடன் வந்த ஒருவரைப் பார்த்த்தும் “ஒரு தீவிரவாதி ப்ளேனில் இருக்கிறார், ஆபத்து!” என்று ட்வீட் செய்யும் நபரின் சிந்தனை இதன் வலிமையான பகுதியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
காரணம் , இதன் முன் அனுபவம். அரசியல் கட்சிகள் உருவாக்கிய தகவல் வலையில் அகப்பட்ட அவரது மூளை. இதனை கிடைத்த தகவல் நிலைச் சாய்வு Availability bias எனவும் சொல்ல்லாம். ஆனால் யதார்த்தம் வேறாக இருப்பின், “நிஜமாகவே தீவிரவாதியாக இருந்திருந்தால்? ” என்றே சமாதானம் சொல்லிக்கொண்டு போவார் அவர்.
இதற்கும் ப்ளிங்க் நிலைக்கும் பல நொடிகளின் இடைவெளி இருக்கிறது. இந்த சாய்வுநிலை, முன் அனுபவ அறிவுகளின் தவறான வழிகாட்டல் என்பதை நிரூபித்த  டேனியல் கானேமான், அமோஸ் ட்வெர்ஸ்கியின் ஆய்வு ஒரு   சிந்தனைப் போக்கு குறித்த சிந்தனையில்  ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.  நேர்காணல் நிகழ்ச்சிகளில் சட்டெனப் பேசுபவரின் மனநிலையையும், அவரது சார்பு, சாய்வுநிலையையும் பொதுமக்கள் அவதானிப்பது தவறாகவே முடியும். அனுபவமிக்க பேச்சாளர்கள், இந்தச் சாய்வை, ஒரு தருக்க வெளிப்பாடாக்க் காட்டிப் பேசிவிடமுடியும்
ஒரு தூண்டுதலில், உணர்ச்சியுடன் உடனே பொங்குவது ஒரு இயக்க வகை. தருக்கத்தில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது மற்றொரு இயக்க வகை. ஆக்க நிலை அனிச்சைச் செயலில் தொடங்கி, ஒரு கெட்ட வார்த்தையில் பொங்கி, கத்தியைஎடுப்பது வரை முதல்வகை இயக்கம் வியாபிக்கிறது.  கரப்பான் பூச்சியைக் கண்டால் நாற்காலியில் ஏறி நிற்பதும், தெரு கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட பந்து நம்மை நோக்கி வரும்போது, சட்டெனக் குனிவதும் இதன் வெளிப்பாடு.
சில தூண்டுதல்களின் தகவல்களைப் புலன்களால் மெல்ல கிரகித்து, சிந்தனைக்கு நேரம் கொடுத்து, அனுபவமும், அதிகப்படியான தகவல்களும் கொண்டு முடிவெடுப்பது இரண்டாவது வகை இயக்கம். நண்பனின் மகளுக்காக, இன்சினீயரிங்கில் எந்தப் பிரிவை எடுப்பது? என்று ஆராய்வதும்,   பங்குச்சந்தையின் சரிவின் பின் இந்தப் பங்கிலிருந்து முதலீட்டை எடுக்கவா வேண்டாமா?என்ற  ஆலோசனை பிறருக்குக் கொடுப்பதுமான சிந்தைகள் இந்த வகையைச் சேர்ந்தது. (தனக்கென வரும்போது அதில் உணர்வும், சாய்வுச் சிந்தைகளும் கலந்துவிட வாய்ப்புகள் அதிகம். )
மேற்சொன்ன இரண்டையும் நாம் பல நேரங்களில் மாற்றித்தான் செய்து வைக்கிறோம். இதனை Thinking fast , thinking slow என்ற புத்தகத்தில் டேனியல் கானேமான் விளக்குகிறார்.
முதல் நிலைச் சிந்தை ப்ளிங்க் நேரத்தின் பின் நிகழ்வது. இரண்டாவது நிலைச் சிந்தை, அதன்பின் பல மணிகள் அவகாசத்தின் பின் நிகழ்வது. இரண்டாவது நிலைச் சிந்தை, மனக்குவியத்தால் பாதிக்கப்படுகிறது. மனம் வேறொரு சவாலில் ஆழ்ந்திருக்கும்போது , அதனால் வேறு தகவல்களைச் சேகரித்து தருக்கத்தில் ஆய்ந்து முடிவெடுக்க இயலாது. தகவல் மனதில் படியாது ,பொறிகளின் வழி உள்வந்து கடந்து போகும்.
இதனை கொரில்லா பரிசோதனை அழகாக விளக்கியது. ஒரு கால்பந்து விளையாட்டில் , பார்வையாளர்கள் சிலரை, ‘ஒரு குழு , எத்தனை பாஸ் செய்கிறார்கள் ?என்பதைக் கவனித்து வருமாறு பணித்த்ருந்தார்கள். அவர்களும் மிக்க் கவனமாக, எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்ட்து? என்பதைக் கணக்கிட்டு வந்தார்கள்.  விளையாட்டின் நடுவே, கொரில்லா போல் வேடமணிந்த ஒருவர், திடலில் ஓடினார்.  விளையாட்டு முடிந்தபின், அந்த பார்வையாளர்களிடம் “ விளையாட்டின் நடுவே, ஒரு கொரில்லா  போனதைக் கண்டீர்களா?” என்றபோது அவர்கள் கொரில்லாவா? அப்படி ஒன்று போகவே இல்லை” என்றார்கள் தீர்மானமாக. ஒரு ஒளீப்பதிவு அவர்களுக்குக் காட்டப்பட்டபோது அவர்கள் வியந்தார்கள். கொரில்லா , ஓடியதையே அவர்கள் மனம் பதிவு செய்யவில்லை. மூளை , ஒரு செயல்பாட்டில் ஆழ்ந்திருக்கும்போது, பிற அவயங்களின் மூலம் வரும் சமிக்ஞைகள் , தகவல்களை மூளை கவனிக்கத் தவறிவிடுகிறது.
குவியம் என்பது மட்டுமல்ல இச்சோதனை முன்னிறுத்தும் செய்தி. எதைக் கவனிக்க மனம் விழைகிறதோ, அதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்துமாறும், பிற அவயன்ங்களின் வழி வரும் செய்திகளை பதிவு செய்யாமல் / பதிவு செய்தாலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க பெருமூளையின் முற்பகுதிக்குக் கட்டளைகள் செல்கின்றன. அந்த நிலையிலும், உறங்காது உள்ளிருந்து தன் பணியைத் தவறோ/சரியோ செய்துவருவது   அமைக்டலா போன்ற மிகப்புராதானமான உணர்வுப்பகுதிகள்தாம்.
உணர்வுகொண்டு தோன்றும் எச்சரிக்கைகளில் பல இன்று பெரிய ஆபத்தினைக் குறிப்பதில்லை. ஆனால் அவற்ரிற்குப் பல ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளை தருக்கமின்றி உணர்ந்து , கலவையான ஒரு சூழலில் உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இதன் மூலகாரணம் ஒன்றல்ல, பல. எதிரே இருப்பவரின் பேச்சு, உடல் மொழி, இட்த்தின் அமைப்பு, வேண்டிய தகவல்கள் நேரத்தில் கிடைக்காமை போன்றவை.
இப்படி பல காரணிகளின் கூட்டுத் தொகையாக , உணர்வு சார்ந்த முடிவுகள், எதிர் இயக்கங்கள் தூண்டப்படுவதால், காரணிகள் பலருக்கும் பலவிதமாக இருக்குமென்பதால், ஒரே சூழ்நிலையில் இருவருடைய உணர்வு சார்ந்த இயக்கங்கள் ஒரே போல இருப்பதில்லை.
5+5 =10 என்பதை அனைவராலும் சொல்ல முடியும். “அந்த ஓவியத்தில் தென்னை மரம் அழகா இருக்குல்ல?” என்று ஒருவர் சொல்லும்போது “ அது யானையோட தும்பிக்கை சார்” என்று மற்றொருத்தர் சொல்ல சாத்தியமுண்டு. உணர்வுகள் அடிப்படையில் பற்காரணிதூண்டல் கொண்டது.
ஒருவரது உணர்வை, அதன் விளைவைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதா? ஓரளவு சாத்தியம். பற்காரணிகளின் தாக்கத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலமும், உணர்வை தருக்க ரீதியாக விளக்க முயற்சிப்பதன் மூலமும் இரு உணர்வு அறிவின் இடைவெளியைக் குறைக்க முடியும். எனவேதான் உறவுகள் பலவீனப்பட்ட தம்பதியரை,  அதிகம் சிந்தனை கவரப்படாத இடத்தில் , தெளிவாக ஒருவருக்கொருவர் பேசுங்கள் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். மிகவும் குழம்பிய நிலையில் இருப்பவர்கள்,தங்களைத் தாங்களே புரிந்துகொள்வதற்கு, ஒரு ஜர்னல் போல எழுதி எழுதிக் கிழித்துப் போடவும் அறிவுறுத்துவார்கள். எழுத்து தருக்கம் சார்ந்த்து. உணர்வு தருக்க ரீதியாக வெளிப்படுகையில் அதன் தாறுமாறான ஓட்டம் குறைந்து நீரொழுக்குப் போல வரும் சாத்தியமிருக்கிறது.
வீட்டில் இருக்கும்போது அலுவலகக் கவலைகளிலோ, அல்லது சந்தேகம், பொறாமை போன்ற எதிர்மறைச் சிந்தனைகளிலோ ஆழும்போது , பிற தகவல்களைக் கவனிக்க, பதிந்துகொள்ள மூளை தவறுகிறது. இதனாலேயே, ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டுமே சிந்திப்பது ,செயல்படுவது நல்லது என்கிறார்கள் உளநிலை ஆய்வாளர்கள்.
நமது சிந்தை, பெருமளவு  சாய்வுகளையும், நாம் சந்தேகிக்காத முன் அனுபவ முடிவுகளையும் கொண்டது என்பதை உணர்ந்தாலே, இவை இரண்டில் எதனைக் கொண்டு ,எப்படிச் சிந்திக்கவேண்டுமென்பதற்கான வழி புலப்படும். அதன்பின், பழக்கமாக இந்தச் சிந்தனைமுறையை நடைமுறை வாழ்வில் கொண்டுவரவேண்டும்.
எங்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும், எங்கு சிந்திக்காது, உள்மனத்தின் வழிகாட்டலில் இயங்கவேண்டுமென்பது ஒரு கலை மட்டுமல்ல, ஒரு அறிவியலும் கூட.
மிக முக்கியமாக அது  ஒரு நற்பழக்கம் .
நன்றி www.solvanam.com
http://solvanam.com/?p=50145