Saturday, February 24, 2018

சுய இரக்கம்.


“நல்லா நினைவிருக்கு. ஸ்கூல் படிக்கறப்போ ஒரேயொரு தேய்ஞ்சுபோன செருப்பு மட்டும்தான் உண்டு. அதுவும் அண்ணன் போட்டுப் போட்டு ,குதிகால் பக்கம் ஓரமா ரொம்பத் தேஞ்சுபோன ரப்பர் செருப்பு. அப்பாகிட்ட, ஒரு புதுச் செருப்பு கேட்டேன்.” நண்பர் நிறுத்தினார். அவர் கண்கள் சற்றே இளகி  ஈரமாக இருந்தன.  பூனா போகும் வழியிலொரு ரெஸ்டாரண்ட்டில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க அமர்ந்திருந்தோம்.
“கண்டபடி திட்டிப்போட்டார். சே, ஒரு செருப்புக்கு இவ்வளவு திட்டு தேவையா?ன்னு அன்னிக்கு நினைச்சேன் சுதாகர். இன்னிக்கு வரை எனக்குன்னு நான் ஒரு செருப்பு எடுக்கறதில்ல”
அவர் கால்களைப் பார்த்தேன். ஷு பளபளத்தது
“ஆபீஸுக்கு ஷூ போட்டுப் போறேன். அது என் பொண்டாட்டி வாங்கித் தந்தது. என் பணத்துல , எனக்குன்னு ஒரு செருப்பு வாங்க மாட்டேன்.:”
மெல்ல எழுந்தபோது, அவருக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அய்யோ பாவம் என்றா? அல்லது “உங்க உறுதியை நினைச்சு பெருமையா இருக்கு என்றா? அல்லது “இப்படித்தான் நானும் சின்ன வயசுல..என்று தொடங்கி என் கதையைச் சொல்லி அழுவதா?

மனிதர் தொடர்ந்தார் “ என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்னு இப்ப நினைச்சாலும் கண்ணீர் வந்துரும். தனியா சில நேரம் படுக்கையில படுத்திருக்கறச்சே, அப்படியே கண்ணீர் வழிஞ்சு தலையணையை நனைக்கும். என் பொண்டாட்டி, எதுக்கு இப்ப அழறீங்க?ன்னுவா. நான் ஓண்ணுமிலன்னுருவேன். என் கஷ்டம் என்னோட போகட்டும்”

நிஜத்தில் அவர் கஷ்டம் , பலரோடு போகிறது. என் நண்பர்கள் பலரும் “அந்த செருப்பு கதையைச் சொல்லியிருப்பாரே?”என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர், தன் கதையைக் கேட்டு அனைவரும் ப்ச் ப்ச் என்றூ அனுதாபப்படுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார். நினைப்பு ஒன்று, நடைமுறை ஒன்று.

இது பலருக்கும் புரிவதில்லை. “ நான் படிக்கறச்சே ஒன்பது கிமீ நடந்தே போவேன். சைக்கிள் வாங்க காசுகிடையாது.” என்பது, இக்காலத்து இளைஞர்களிடம் புரிதலையோ, empathyஐயோ ஏற்படுத்திவிடாது. ஏனெனில், ஒன்பது கிமீ நடப்பதன் வலியை அவர்கள் உணர்திருக்கும் சாத்தியம் குறைவு. ஏதோ அழுமூஞ்சி சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்வுடன் , நம்முன் கஷ்டப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கும் இந்த விபரீத பகிர்வுணர்வு உண்டு. தான் காதலிக்கும் பெண்ணிடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா?என்பதாக இது போன்ற கதைகளைச் சொல்லி அவளை ஓடியே போக வைத்த பலரை எனக்குப் பெர்சனலாகத் தெரியும்!

ஏன் இப்படி சுய இரக்க உணர்வோடு  சொல்கிறோம்?  ”‘நான் கடந்து வந்த பாதை கரடுமுரடானது’ என்று சொல்வது,”நான் வீரன். அவ்வளவு கஷ்டத்திலும் விடாமுயற்சியுடன் முன்னேறி வந்திருக்கிறேன்”  என்று சொல்வதை ஒக்கும்” என்ற தவறான நினைப்பு. ’பாதை கடினம், நான் கஷ்டப்பட்டேன்’ என்பது யதார்த்தமான ஒன்று. அதில் ’என் வெற்றிக்கு இப்படி வழி வகுத்தேன்’ என்பது மறைமுக தற்பெருமை.  இது தற்பெருமையோ? என்ற சந்தேகம், சொல்பவரின் கவனத்திலிருந்து மறைந்து, கேட்பவரின் நினைவில் உதிக்கும்.  விளைவு?, கேட்பவரின் உணர்வு நிலை, சொல்பவரின் உணர்வு நிலையில், அதன் ஆழத்திலிருந்து பெரிதும் வேறுபட்டது. 

அதோடு, தன்னைப் பற்றிக் கேட்கத் தானே சொல்லும் வாய்ப்பு இது என்கிறார்கள் உளவியலாளர்கள். என் கடந்தகாலத்தை நான் மட்டுமே அறிவேன். அதை எவரும் பாராட்ட இல்லாத்த்தால், நானே சொல்லிக்கொள்கிறேன்’ என்பதை மறைபொருளாகக் கொண்டு வெளிவரும் பகிர்வுகள் இவை. எத்தனைக்கு இதனைத் தவிர்க்கிறோமோ, அத்தனைக்கு நம்மை இயல்பாகப் பிறர் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சொல்பவரின் உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள இயலாத கேட்பவர், அவரது கவனக்குறைவை ஏதேனுமொரு வகையில் வெளிக்காட்டினால் ( உடல் மொழியாகவோ, கேட்கின்ற நேரத்தில் வேறொரு உரையாடலில், வாசிப்பதில், செய்துகொண்டிருக்கும் வேலையில் , தொலைபேசிப் பேச்சில் ஈடுபட்டாலோ), சொல்பவருக்கு அக்கவனக் குறைவு ‘என்னை அசட்டை செய்கிறார்” என்பதாகத் தோன்றி, மேலும் ஏமாற்றத்தில், கோபத்தில் துவளச்செய்யும். மேலும் ஒரு குறை அவரது கணக்கில்  சேர, இன்னும் தீவிரமான குறைசொல்லும் வாய்ப்பு வளர… இது ஒரு விஷச் சுழற்றி.

சுய இரக்கமென்பது ஏதோ ஒருவர் கேட்கும்போது சொல்லும் கதையிலோ, படம் பார்க்கும்போது, அதன் காதாபாத்திரத்துடன் தன்னை இணைத்துப்பார்ப்பதிலோ மட்டும் வருவதல்ல. இயல்புவாழ்க்கையில், அடித்தளத்தினின்று செயல்படும் சுய இரக்கம், நம் சிந்தனையையும், செயலையும் மாற்றும் சக்திவாய்ந்த்து. இதனைத் தவறாக “இரக்கம், உணர்வுபூர்வமான புரிதல்” ( Empathy, sympathy) என்று வகைப்படுத்திவிடுகிறோம்.
உதாரணமாக, வேலைக்கு ஆளெடுக்கிறீர்களென வைத்துக்கொள்வோம். தகுதி படைத்த சிலர் இருக்கையில், ஒருவர் உங்களைபோன்றே சிறுவயதில் பல சிரமங்களை அனுபவித்தவர்.. அல்லது உங்கள் இனத்தவர். ‘என்னை மாதிரி கஷ்டப்படிருக்கிறாரே” என்ற எண்ணம் அவருக்குச் சாதகமாக முடிவை எடுக்கத் தூண்டுகிறது. இந்த வேலையைப் படித்தெடுக்க அதிகம் நாளாகாது. கொடுத்த்தால் தவறில்லை” என்ற எண்ணம், தகுதிபடைத்த பலரை ஒதுக்கிவைக்கும். உங்கள் முடிவு ஒரு வகையில் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் சரியல்ல.

அனைவருக்குமே, குறைந்தது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், அதில் சுய இரக்கம் சார்ந்த, நம் கவலைகள், இடர்கள் சவால்கள் சார்ந்த பக்கங்கள் உண்டு. அவற்றைச் சொல்வதில் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.  எப்படி, யாரிடம் , எந்த சூழ்நிலையில், எந்த மனப்பக்குவத்தில் இருந்து சொல்கிறோம்? என்பதைப் பொறுத்து, நமது கதையின் தாக்கம் வளர்கிறது.

ஒரே வார்த்தையில் ஒரே செயலில் பலத்த தாக்கத்தை உருவாக்கிய பலர் உண்டு. நமக்குத் தாக்கம் உண்டாக்கிய கதைகளும் நிகழ்வுகளும் உண்டு.  அப்படித்  தாக்கம் உண்டாக்குமளவிற்கு நம் கதை முக்கியமானதா? என்ற ஒரு கேள்வி வெகு நேராக யோசித்துக் கேட்டுக்கொண்டபின், நம் கதையைச் சொல்லத் தொடங்குவது நல்லது. நம் கதைகளை மிக ரசிப்பவர் உண்டு. அவரிடம் கூட யோசித்தே சொல்லவேண்டும். அந்த ரசிகர்- நாம்.

தினமணி.காம் மின் தாளில் ‘நேரா யோசி” தொடரின் 24/2/2018ல் வந்த 9-ம் அத்தியாயம் இது.

http://bit.ly/2FQXozf

Wednesday, February 14, 2018

தொட்டிற்பழக்கம்…


சுரேஷ் குமார் இப்படி உட்கார்ந்திருக்கும் ஆளில்லை.

கஃபே காஃபீ டே –யில் ஒரு லாத்தேயில் நுரையால் இதயம் வரைந்து வைத்திருந்த அழகையல்ல அவர் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது என்பது மட்டும் புரிந்தது.

“தங்கச்சி ஊர்லேந்து வந்திருக்கா”

அவருக்கு இரு தங்கைகள் ஒருத்தி சென்னையில் , மற்றொருத்தி போஸ்டனில். மிகப் பாசக்காரக்குடும்பம் என்பது தெரியும். அவர்களுக்குத் திருமணமாகி பதினைந்து வருட்ங்களானபின்பும், ஒவ்வொரு வருஷமும்  இருவருக்கும் நகை, புடவை, அல்லது ஒரு டூ வீலர் என்று பெரிதாகச் செய்துகொண்டேயிருப்பார். அவர் மனைவி சுனிதாவும் இந்தப் பாசத்தில் சளைத்தவரில்லை.

அவரே தொடர்ந்தார் “ அமிதா  சென்னையிலேர்ந்து  வந்த்துலேர்ந்தே எதோ நெருடுது.  காலேல ஆறுமணிக்கு ஸ்டேஷன்லேர்ந்து கூட்டிட்டுவந்தேன்.  காபி குடிக்கறீங்களா?ன்னா சுனிதா. ”பசங்க காம்ப்ளான் மட்டும்தான் குடிப்பாங்க.. காம்ப்ளான் இல்லையா?”

சுனிதா என்னை ஏறிட்டுப் பாக்கறா. நான் சொல்றேன்” அமிதா, பசங்க பால் குடிக்கட்டும்.”

“வேணாம்ணா. எம் பிள்ளைகள் காம்ப்ளான் இல்லேன்னா ஒண்ணும் குடிக்காதுங்க. கீழக் கடை எப்ப திறப்பான்? போய் வாங்கிட்டு வந்துடறேன்”

பிள்ளைங்களுக்கு ஏதோ நல்ல சத்துள்ள உணவு மட்டும்தான் கொடுக்கறா போலிருக்குன்னு விட்டுட்டேன்.  என் வீட்டுல எல்லாரும் ப்ளாக் டீ – இஞ்சி தட்டிப்போட்டு.. என் பையனுக்கும் அவ பொண்ணு வயசுதான். வெளியிடங்கள்ல போனா என்ன இருக்கோ அதுல அட்ஜஸ்ட் பண்ணிடுவான்.ஒண்ணும் இல்லன்னா, அவனுக்கு எதுவும் வேணும்னு அவசியமில்ல.”

“இதெல்லாம் ஒரு ப்ரச்சனைன்னு எடுத்துகிட்டு… அவங்க வீட்டுல ஒரு பழக்கம், உங்க வீட்டுல ஒண்ணு.  சட்டுனு மாத்த முடியுமா? ”

“ப்ரச்சனை அதில்ல சுதாகர்” என்றார் லாத்தேயை உறிஞ்சியபடி “ சொல்றவிதம்னு ஒண்ணு இருக்கு. கீழே கடை எப்ப திறப்பான்?ங்கறது வேற விதமான பேச்சு.”

சட்டென எனக்கும் அப்போதுதான் உறைத்தது. நான் தனி. எனக்கு வேண்டியது வேறு. நீ உன்பாட்டுக்கு இருந்துக்கோ. நான் என்பாட்டப் பார்த்துக் கொள்கிறேன். வீடுகளில் தீவுகள். 

”சுனிதா அன்னிக்கு சாயங்காலமே டி-மார்ட்லேந்து காம்ப்ளான் வாங்கிட்டு வந்துட்டா. அதுலயும் சாக்லேட் ஃப்ளேவர் வேணும், வனிலா பிடிக்காதுன்னு அமிதா பொண்ணு ஒரே அடம். அமிதா தானே போய் காம்ப்ளான் கலந்துகிட்டு வந்தா. மூணு குழந்தைகள் வீட்டுல. அவளோட பையன், பொண்ணு, எம் பையன். அவ தன் குழந்தைகளுக்கு மட்டும் காம்ப்ளான் கலந்துகிட்டு வர்றா. எம் பையன் அப்படியே அவளையும் சுனிதாவையும் பாக்கறான்”

“சுனிதாவுக்குள்ள ஒரு விரிசல் விழுந்த்தைத் தெளிவா உணர்ந்தேன்.” என்றார் சுரேஷ் பெருமூச்சுவிட்டவாறே “ காலேல நிறைய பருப்புப் போட்டு தால் கிச்சடி பண்ணிடறேன்னா சுனிதா. இவ அவசரமாச் சொல்றா “ என் பொண்ணுக்கு கிச்சடி பிடிக்காது. தோசை மாவு இருக்கா? நானே ரெண்டு தோசை அவளுக்குத் தனியாப் பண்ணிடறேன்”

இதுன்னு இல்ல, மும்பை தர்ஷன் கூட்டிட்டுப் போனேன். பஸ்ல எல்லாரும்தான் ரொம்ப நேரமா ஒக்காந்திருக்கோம். தன் பிள்ளைகளுக்குன்னு தனியா பிஸ்லரி பாட்டில் வாங்கறா. சுனிதா ரெண்டு பாக்கெட் பிஸ்கட் எடுத்துகிட்டு வந்திருந்தா , இவ சொல்றா “ஓ, என் பையனுக்கு குட் டே பிடிக்காது. க்ரீம் பிஸ்கட் இல்லையா?” பஸ் நிக்கிறப்போ, கீழ போய் ஒரேயொரு க்ரீம் பிஸ்கட் பாக்கெட் – தன் பையனுக்கு மட்டும்”

பல வீடுகளில் இதனைக் காண்கிறோம் தன் பிள்ளை, தன் பெண் என்று வரும்போது மிக்க் கேவலமாக, அநாகரிகமாக, பொதுவிலேயே அதிகச் செல்லம் காட்டி வரும் சுயநலப் பேய்களாக பலர் மாறியிருக்கிறார்கள். தன்னை வளர்த்த பெற்றோர், அண்ணன் தம்பி, அக்கா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதேயில்லை.

குடும்பமென்பது விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து மகிழ்தல் என்பதன் கோவில் என்பது ஏனோ இப்போது பலருக்குப் புரிவதில்லை. தான், தன் குடும்பம் ஒரு அசுகமும் இல்லாது இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

பகிர்தலில் கொஞ்சம்தான் கிட்டும் – பெருமாள் கோவில் சர்க்க்கரைப்பொங்கல் போல. அந்த சிறு அளவுதான் மிக அருமையாக இருக்கும், ரசிக்க முடியும். ஒரு அண்டா நிறைய சர்க்கரைப்பொங்கலைத் தனியே தின்று பாருங்கள். திகட்டும். கூடியிருந்து குளிர்தலைத்தான் ஆண்டாளே திருப்பாவையில் முன்னிறுத்துகிறாள்.

ஒவ்வொரு மனிதருக்கும், அவர் குடும்பத்திற்கும் ஒரு பழக்கங்களின்  தொகுப்புக் கணம் இருக்கும். அக்கணம் சூழலுக்கு ஏற்ப விரிந்து சுருங்கும். அந்த மாற்றம், காலத்தின் கட்டாயத்தில் சொந்த அளவில்  விட்டுக்கொடுத்தலாகவோ ( காலேல 8 மணிக்கு முன்னாடி எந்திருக்க மாட்டான்; இப்ப ஸ்கூல் 7 மணிக்கு. அதுனால..), அன்றி பிறருக்காக விட்டுக்கொடுத்தலாகவோ (அக்காவுக்கு பஸ் கஷ்டம். ஸோ, என் ஆக்டிவாவை அவகிட்ட கொடுத்துட்டேன்)பரிமணிக்கும். இது அவசியத்தின் பொருட்டு மட்டுமன்று, அவசியத்தினை உணர்தலின் வெளீப்பாடு. நான், என் வசதிகள் என்று இருப்பவர்களுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் சரிப்படுவதில்லை.

உளவியலாளர்கள், சிறுபருவத்திலேயே இதன் பரிமாணம் தெரிந்துவிடுமென்கிறார்கள். லியோன் ஸெல்ட்ஜர் என்ற ஆய்வாளர் ‘சில மனிதர்கள் சொந்த வாழ்வில் சவால்களைச் சந்திக்க இயலாது, குற்றங்கள் செய்யுமளவு போவதற்கு , சிறுவயதில் ஏமாற்றங்களைத் தாங்காதவர்களாக வளர்வது காரணம்” என்கிறார்.  பின்னும் சொல்கிறார், “வளர்ந்தபின் தோல்வியையோ, ஏற்றுக்கொள்ளப்படாததையோ தாங்கிக்கொள்ள  அவர்களால் முடிவதில்லை. மன அழுத்தம், விரக்தி, தனிமைப்படுதல் எனப் பொதுவாக அவதிப்படுபவர்கள், சில நேரம் வன்முறையில் ஈடுபடுவதும் எதிர்பார்க்க வேண்டியவையே. “.

இது பொதுவாழ்விலும் நீடிக்கிறது. அலுவலகத்தில் “அந்தாளுக்கு நான் ஏன் அட்ஜ்ஸ்ட் பண்ணனும்? என் பாஸ் அவனுக்கு ஏன் ரெகமண்ட் பண்ணறான்? எல்லாம் பாலிடிக்ஸ்” என்றும், தனிவாழ்வில் “. இவ எப்படி என் காதலை மறுக்கலாம்?, எனக்கு ஏன் இந்த வேலை கிடைக்காது?”  என்றும் விகாரமாக வெடிக்கும். இவர்களில் முக்கியமாக இரு பலவீனங்கள் காணப்படுகின்றன.

ஒன்று - குழுவில் பணிசெய்யும் திறமை வளர்வதில்லை. இதனை மிக அதிக அளவில் இப்போதைய சூழலில் காண்கிறேன். திறமையான இளைஞர்கள் குழுவில் பணிசெய்ய முடியாது, விலகிச் செல்கின்றனர். இவர்களது எதிர்காலம் கேள்விக்குரியது.,

இரண்டு – தனிமனித வாழ்வில் ஏமாற்றங்களையும், சிறு இடர்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளப் பக்குவம் வருவதில்லை. இது சிக்கலானது.

 நீளமான வரிசையில் நிற்கப்பொறுமையின்றிக் கத்துவது ( எனக்கு வேணும்னா, உடனே கிடைக்கணும்),  விண்ணப்பத்தில் குறை இருக்கிறது என்று சொன்னால், சண்டை போடுவது, சினிமா டிக்கட் , பயணச் சீட்டு வாங்க முந்துவது முதல், பிடித்த வீடு கிடைக்கச் சண்டை போடுவது வரை பொறுமை, இடர் தாங்கி நிற்கும் பண்பு, தோல்வி என்ற முடிவை ஏற்றுக்கொண்டு, அமைதியாகச் சிந்திக்கும் முதிர்வு இல்லாத மனப்பாங்கு. நிராகரிப்பு என்பது உடல் உணரக்கூடிய வலியைப் போன்ற வலியை மூளை உணரச்செய்கிறது என்கின்ற்ன ஆய்வுகள். இவ்வலியை அவர்களால் தாங்க முடிவதில்லை. அவர்களைக் குடும்பமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது தனிமைப்படுத்துகிறது. பல விவாகரத்துகளூக்குக் காரணம் தனிமனித மன ஆளுமைக் குறைபாடுகளே என்பது பல ஆலோசகர்களும் சொல்லும் கருத்து.

”சிறுவயதில் குழந்தைகள் கேட்டதையெல்லாம் கொடுப்பது, ’இவ்வுலகம் நான் விரும்பியதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது” என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடம் உருவாக்குகிறது. கிடைக்காவிட்டால், அது உலகின் தவறு, தராதவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணத்தை அக்குழந்தைகள் உருவாக்கிக் கொள்கின்றன. இது குற்றங்களைத் தூண்டுகிறது.“ என்கிறார், லோனி கூம்ப்ஸ் என்ற குற்றவியல் வழக்கறிஞர்.. இதனைத் தனது பேட்டிகளிலும், தொலைக்காட்சித் தொடர்களில் தரும் ஆலோசனளிலும் வெளிப்படையாகச் சொல்லிவருகிறார்.

இதனை எதிரொலிக்கிறார்கள் மும்பையில் பல மனநல ஆலோசகர்கள். ”முன்பெல்லாம் மன உளைச்சல், தளர்வு என்று வருபவர்கள் மண வாழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் இருந்தார்கள். இப்போது போதைப்பொருள், காதல் தோல்வி, நண்பர்களைப்போல் பணக்காரத்தனமாக வாழ இயலாத விரக்தி, படிப்பில் ஆர்வமின்மை என்று வருபவர்கள் பல இளைஞர்கள். இதில் எனக்கு வேண்டியது, எனக்கு நியாயமாக்க் கிடைக்கவேண்டியது – கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏமாற்றமாக மாறும் நிலையில் வருபவர்கள் அதிகம்” என்றார் , மும்பையில் சாந்தாக்ரூஸ் பகுதியில் ஒரு மன நல ஆலோசகர்.

முக்கியமாக இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள், ‘எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது –கிடைக்கவில்லை’.  அதாவது நான் ஒன்றை விரும்பிவிட்டால், அது கிடைத்துவிடவேண்டும். கொடுப்பதற்கு உலகம் கடமைப்பட்டிருக்கிறது. மறுத்தால், கோபம், வன்முறை.. இதுதான் தான் காதலித்த பெண், காதலிக்க மறுத்தால் அவள் முகத்தில் ஆஸிட் வீசும் ஆத்திரத்தைக் கொண்டு வரும் மனப்பாங்கு.

’எனக்குக் கிடைக்காதது, என் பிள்ளைகளுக்குக் கிடைக்கட்டும்” என்ற எண்ணம் தவறல்ல. ஆனால் அது அந்தக் குழந்தைகளை மோசமாகப் பாதிக்குமென்பது, இளம் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. “இருப்பதில் மிக நல்லதையே என் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டுமென்பதில், இதுமட்டுமே நல்லதல்ல, என்பதும் சிந்தனையில் உறைக்கவேண்டும். பகிர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், கிடைத்ததில் அட்ஜஸ்ட் செய்து சுகித்திருத்தல் என்ற்  நற்பண்புகள் தானே வந்திடா. அவற்றிற்குச் சிறுசிறு தியாகங்கள் அவசியம் என்பதை பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து காட்டுதல் அவசியம். ‘ஓ, இங்க காபி மட்டும்தானா? என் பொண்ணு காபியே குடிக்கமாட்டா. அது விஷம்” என்ற சொற்கள் , எண்பது வயது வரை காபி குடித்து வந்த பெரியோரை ஏதோ சிகரெட் குடிப்பவர்கள் போலச் சித்தரிக்கும்.

இதனைக் குறைக்க முதல் அடி, பெற்றோர்களே எடுக்கவேண்டும். குழந்தைகள் கேட்ட்தையெல்லாம் வாங்கிக்கொடுக்காது இருப்பது ஒரு புறம்; கிடைக்கும்னெறாலும், கால தாமதம் ஏற்படுமென்றால் அதனைச் சகித்துக்கொள்ளும் பக்குவத்தைக் கற்றுத்தருதல் அவசியம். பிறர் இருக்கையில், தேவைக்கேற்ப தன் தேவைகளுக்குச் சமரசம் செய்துகொள்ளுதல் அவசியம். தனது தேவைக்கென பெருங்குரலெடுத்து அழுது, கை காலை உதைத்து நாடகமிடும் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். பலர் முன்னே அடம்பிடிக்கும் குழந்தையால் அவமானப்படுவதாக நினைக்கும் பெற்றோர், குரலை அடைக்க, அவை கேட்டதை வாங்கிக்கொடுத்துவிடுவது, அந்த நேரத்தில் வேண்டுமானல் அமைதியைத் தரலாம். பின்னாளில் அக்குழந்தைக்கே கேடு என்பதை யோசித்து, பொறுமையுடன் அந்நிகழ்வைத் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் பெற்றோருக்கு வேண்டும்.

’தன் வரலாற்றை மறப்பவர்கள், அதனை மீண்டும் அனுபவிக்க விதிக்கப்படுவர்’ என்றார் ஜார்ஜ் சாண்ட்யானா என்ற தத்துவஞானி. நாம் வந்த பாதையை மறந்து, மிகச் செயற்கையான பாதையை, பாதுகாப்பானது, சுகமானது என்ற பொய்யான கற்பிதத்தில் அடுத்த தலைமுறையை வளர்ப்பது, தீவுகளையே வளர்க்கும் -  குடும்பத்தையல்ல.

சுரேஷ் , தனது அதீதமான பாசவெளிப்பாடு, தங்கைகளிடம் நீடிக்கிறது என்ற கசப்பான உண்மையை சுனிதாவிடம் வெளிப்படையாகப் பேசியதில் உணர்ந்தார். திருமணமான பின்பும், தங்கைகளிடம், பாசத்தில் பலதும் செய்த்து, அவர்களைத் தேவையில்லா பாசப்பொழிவைப் பிள்ளைகளிடம்  சுயநலத்தோடு காட்டத் தூண்டியிருக்கிறது என்பது அவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ‘. இந்தப் பண்புத் தொகுதியை வளர்த்தது தானே’ என்ற பொறுப்பினை உணர்ந்தபின்,  தன் தங்கையுடன் தனித்துப் பேசினார். குழந்தைகளுக்கு பாசத்தில் கெடுதலையே விளைவிக்கிறாள் என்பதைப் பொறுமையாக எடுத்துச் சொன்னதில் அவள் திகைத்துப் போனாள். அமிதா மாறியிருக்கிறாளா? என்பதை அக்குழந்தைகள் பலவருடங்கள் கழித்து எப்படி வாழ்க்கையைச் சந்திக்கிறார்கள் என்பது காட்டும்.

Reference:

“Child Entitlement Abuse”  - series 1 to 5 by Leon F Seltzer,Ph.D https://www.psychologytoday.com/blog/evolution-the-self/200909/child-entitlement-abuse-part-1-5



Why Modern Parents Pamper and Spoil Kids?  - Praveen Kumar 

https://www.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-modern-parents-pamper-and-spoil-the-child-073790.html



Spoiled rotten: Why you shouldn't coddle your kids

http://www.sheknows.com/parenting/articles/980979/why-you-shouldnt-spoil-your-kids

How Rejection turns men violent ?- Diana Tourjee

https://broadly.vice.com/en_us/article/bjg8dz/how-rejection-turns-men-violent

Rejection is more powerful than you think -  Guy Winch

https://www.salon.com/2013/07/23/rejection_is_more_powerful_than_you_think/


Monday, February 12, 2018

திக்குவாய் - முயற்சி திருவினையாக்கும்

மூன்று மாதகாலமாக எனக்கு அதிகம் வரும் உள்பெட்டி உரையாடல்கள் திக்குவாய் சார்ந்தவை.
நான் திக்குவாயால் சிரமப்பட்டவன் என்பதை பொதுப்படையாகவே சொல்லி வருகிறேன். இதில் எந்த வெட்கமோ, அவமானமோ இல்லை. எனக்குத் திக்குவாய் மிக மோசமாக இருந்தது. 1ம் வகுப்பிற்குப் பின் , 12 வகுப்பு வரை ஒரு பேச்சுப்போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. வகுப்பில் 3ம் 4ம் பெஞ்சில் ஓரத்தில் இருந்துவிடுவேன். டீச்சர் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாலும்.. எதுக்கு வம்பு?
மெல்ல மெல்ல சில பயிற்சிகளாலும், ஜோசப் ஜெயராஜ் என்ற எனது 10 வகுப்பு ஆசிரியரின் ஊக்குவிப்பாலுமே அது நீங்கியது என்பதை “தூத்துக்குடி தெய்வங்கள்” என்ற ப்ளாக்பதிவில் எழுதியிருக்கிறேன்.
மிகச் சிறுவயதில் அடிக்கடி தாக்கிய காய்ச்சல்களில், வலிப்பு வரும். அது மூளையைத் தாககியிருக்கும். அன்றைய மருத்துவர்கள் இப்படிச் சொன்னார்கள் “ இவனுக்குக் கணக்கு சரியா வராது. கேட்டிங்களா? கொஞ்ச்ம் மந்தமாத்தான் இருப்பான். போகப்போக செரியாகலாம். நல்லதே நினைங்க”
அக்கா சொல்லித்தான் இது தெரியுமென்றாலும், சிறுவயதிலேயே எனக்குக் கணக்கு வராது என்ற நினைவுத் தடங்கலே, பெருந்தடையாக இருந்தது. உண்மையான நரம்புத் தளர்ச்சியோ, மூளைப் பாதிப்போ அதிகம் பாதிக்கவில்லை.
இப்போதும் சில நேரங்களில் திடீரென சிந்தனை சிதறும். பல வகையிலும் சிந்தனை மின்னலைகள் தாறுமாறாகப் பாய்ந்து வர, நிதானமாக கண்களை மூடி சாய்ந்துவிடுவேன். அந்த தாறுமாறான மின்னலைப் புயல்கள் மூளையைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்களே ஆகும். அதன்பின் ஒரு சோர்வு ஒரு மணிநேரமிருக்கும். அவ்வளவுதான். “ இது தாண்டும்வரை பொறுமையாக அமைதியாக இரு” என்பதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பேன். அதன்பின் எல்லாம் அமைதி.
திக்குவாயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் நான் பார்த்தது - மனத் திடமின்மை. நான் திக்குவதில் மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற முன் முடிவு, என்னால் ஒழுங்காகப் பேச முடியாது எ ன்ற எதிர்மறை கருத்து நாக்கைப் பிடித்து இழுப்பது, மூளையிலிருந்து வரும் தவறான சிக்னலை விட மோசமானது. தவறு செய்துவிடுவோமோ என்ற பதட்டத்தில் மேலும் படபடவென சொற்களை உதிர்க்க முயல, வாய்க்கும், மூளைக்குமான தவறான தகவல் தொடர்பில், வாய் தோற்கும்.
அதோடு “ பாத்தியா? சொன்னேன்ல, உன்னால ஒழுங்காப் பேசமுடியாது” என்ற முடிவு , நம் எதிர்மறை எண்ணத்தை உறுதி செய்கிறது. இது ஒரு விஷச் சுழற்றி.
இதனை உடைக்க, மெல்லப் பேசும் பயிற்சியும், பதட்டப்படும்போது “அமைதி அமைதி” என்று அமைதிப்படுத்தும் கட்டளையும், என்னால் பேச முடியும் என்ற நிதானமான உறுதியும் பழக வேண்டும். ஊக்கப்படுத்தும் நண்பர்களும், வீட்டினரும், மனது வைத்தால் எனக்குத் தெரிந்து 75% பேர் திக்குக்வாயிலிருந்து விடுபடலாம்.
மருத்துவரை அணுகிக் கேட்பது மிகப் பலன் தரும்.
ஓவ்வொரு உள்பெட்டி உரையாடலிலும் சொல்வதை மீண்டும் சொல்கிறேன்.
1.நீங்கள் அறிந்தவருக்குத் திக்குவாய் இருந்தால் இயல்பிலிருந்து மாறி அநியாயத்திற்கு இரக்கம் காட்டாதீர்கள். அவர்கள் விரும்புவது இரக்கமல்ல ,இயல்பாக அவர்களை நடத்தும் பாங்கு.
2.அவர்கள் திக்கும்போது, வேறு பேச்சு மாற்றாதீர்கள். “என் திக்குவாயால், இவர்களுக்குப் போர் அடித்துவிட்டது போலும்” என நினைப்பு வந்து, மேலும் சுய பச்சாதாபத்தில் சுருங்குவார்கள்.
3.பொறுமையாக அவர் பேசு அனுமதியுங்கள். வார்த்தைகளை நீங்கள் முன் சொல்லி எடுத்துக் கொடுக்காதீர்கள். அது அவர்களை மேலும் சுருங்க வைக்கும். அவர்களுக்கு அந்த வார்த்தைகள் தெரியும். சொல்ல மட்டுர்மே. தடங்கல்.
4.அவர்கள் திக்கும்போது , எக்காரணம் கொண்டும் சிரிக்காதீர்கள். வேறு ஒரு ஜோக்கிற்கு நீங்கள் சிரித்திருக்கலாம். அது அவர்களைச் சொன்னதாகவே அந்த நேரத்தில் படும்.
5. அவர் திக்கிச் சொல்லி முடித்தபின், அதனை வரவேற்று அதன் தாக்கமாக உரையாடலைச் சிறிது நேரம் தொடருங்கள். வேறு வகையில் உரையாடலை உடனே மாற்றினால், ’என் பேச்சு இவர்களுக்குப் பிடிக்கவில்லை போலும்’ என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கும்.
உங்களூக்குத் திக்குவாய் இருந்தால்.
1. பயப்படாதீர்கள். திக்குவது இயல்பு. என்ன, நமக்குக் கொஞ்சம் இயல்பு அதிகமா இருக்கு. அவ்வளவுதான். சட்டென பேச்சை நிறுத்தி, அமைதி அமைதி என மனதுக்குள் சொல்லுங்கள். மெல்ல மெல்ல ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல முயலுங்கள். நண்பர்கள் எடுத்துக் கொடுக்க முன்வந்தால், தடுத்து, சொல்வதைத் தொடர முயலுங்கள்.
2.சில இடங்களில் இது யதார்த்தமாக இல்லாது போகலாம். டிக்கட் எடுக்கும்போது, கான்ஃபெரன்ஸில் பேச வேண்டிய போது ... அங்கு “சாரி, எனக்குத் திக்கும்” என்று புன்னகையுடன் சொல்லீவிடுங்கள். எதிரே இருப்பவரும் மனிதரே. புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு இறுதியில் ஒரு நன்றி சொல்லுங்கள் . நாமும் மனிதரே என்று காட்டுவது முக்கியம். இது நமது சுயமரியாதையை வளர்க்கும்.
3. தினமும் பயிற்சி செய்யுங்கள். தளரவேண்டாம்.
திக்குவாய் உங்களிடமிருந்து திக்கித் திணறி ஓடும் நாள் வெகுதொலைவி்லில்லை .