Wednesday, February 14, 2018

தொட்டிற்பழக்கம்…


சுரேஷ் குமார் இப்படி உட்கார்ந்திருக்கும் ஆளில்லை.

கஃபே காஃபீ டே –யில் ஒரு லாத்தேயில் நுரையால் இதயம் வரைந்து வைத்திருந்த அழகையல்ல அவர் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது என்பது மட்டும் புரிந்தது.

“தங்கச்சி ஊர்லேந்து வந்திருக்கா”

அவருக்கு இரு தங்கைகள் ஒருத்தி சென்னையில் , மற்றொருத்தி போஸ்டனில். மிகப் பாசக்காரக்குடும்பம் என்பது தெரியும். அவர்களுக்குத் திருமணமாகி பதினைந்து வருட்ங்களானபின்பும், ஒவ்வொரு வருஷமும்  இருவருக்கும் நகை, புடவை, அல்லது ஒரு டூ வீலர் என்று பெரிதாகச் செய்துகொண்டேயிருப்பார். அவர் மனைவி சுனிதாவும் இந்தப் பாசத்தில் சளைத்தவரில்லை.

அவரே தொடர்ந்தார் “ அமிதா  சென்னையிலேர்ந்து  வந்த்துலேர்ந்தே எதோ நெருடுது.  காலேல ஆறுமணிக்கு ஸ்டேஷன்லேர்ந்து கூட்டிட்டுவந்தேன்.  காபி குடிக்கறீங்களா?ன்னா சுனிதா. ”பசங்க காம்ப்ளான் மட்டும்தான் குடிப்பாங்க.. காம்ப்ளான் இல்லையா?”

சுனிதா என்னை ஏறிட்டுப் பாக்கறா. நான் சொல்றேன்” அமிதா, பசங்க பால் குடிக்கட்டும்.”

“வேணாம்ணா. எம் பிள்ளைகள் காம்ப்ளான் இல்லேன்னா ஒண்ணும் குடிக்காதுங்க. கீழக் கடை எப்ப திறப்பான்? போய் வாங்கிட்டு வந்துடறேன்”

பிள்ளைங்களுக்கு ஏதோ நல்ல சத்துள்ள உணவு மட்டும்தான் கொடுக்கறா போலிருக்குன்னு விட்டுட்டேன்.  என் வீட்டுல எல்லாரும் ப்ளாக் டீ – இஞ்சி தட்டிப்போட்டு.. என் பையனுக்கும் அவ பொண்ணு வயசுதான். வெளியிடங்கள்ல போனா என்ன இருக்கோ அதுல அட்ஜஸ்ட் பண்ணிடுவான்.ஒண்ணும் இல்லன்னா, அவனுக்கு எதுவும் வேணும்னு அவசியமில்ல.”

“இதெல்லாம் ஒரு ப்ரச்சனைன்னு எடுத்துகிட்டு… அவங்க வீட்டுல ஒரு பழக்கம், உங்க வீட்டுல ஒண்ணு.  சட்டுனு மாத்த முடியுமா? ”

“ப்ரச்சனை அதில்ல சுதாகர்” என்றார் லாத்தேயை உறிஞ்சியபடி “ சொல்றவிதம்னு ஒண்ணு இருக்கு. கீழே கடை எப்ப திறப்பான்?ங்கறது வேற விதமான பேச்சு.”

சட்டென எனக்கும் அப்போதுதான் உறைத்தது. நான் தனி. எனக்கு வேண்டியது வேறு. நீ உன்பாட்டுக்கு இருந்துக்கோ. நான் என்பாட்டப் பார்த்துக் கொள்கிறேன். வீடுகளில் தீவுகள். 

”சுனிதா அன்னிக்கு சாயங்காலமே டி-மார்ட்லேந்து காம்ப்ளான் வாங்கிட்டு வந்துட்டா. அதுலயும் சாக்லேட் ஃப்ளேவர் வேணும், வனிலா பிடிக்காதுன்னு அமிதா பொண்ணு ஒரே அடம். அமிதா தானே போய் காம்ப்ளான் கலந்துகிட்டு வந்தா. மூணு குழந்தைகள் வீட்டுல. அவளோட பையன், பொண்ணு, எம் பையன். அவ தன் குழந்தைகளுக்கு மட்டும் காம்ப்ளான் கலந்துகிட்டு வர்றா. எம் பையன் அப்படியே அவளையும் சுனிதாவையும் பாக்கறான்”

“சுனிதாவுக்குள்ள ஒரு விரிசல் விழுந்த்தைத் தெளிவா உணர்ந்தேன்.” என்றார் சுரேஷ் பெருமூச்சுவிட்டவாறே “ காலேல நிறைய பருப்புப் போட்டு தால் கிச்சடி பண்ணிடறேன்னா சுனிதா. இவ அவசரமாச் சொல்றா “ என் பொண்ணுக்கு கிச்சடி பிடிக்காது. தோசை மாவு இருக்கா? நானே ரெண்டு தோசை அவளுக்குத் தனியாப் பண்ணிடறேன்”

இதுன்னு இல்ல, மும்பை தர்ஷன் கூட்டிட்டுப் போனேன். பஸ்ல எல்லாரும்தான் ரொம்ப நேரமா ஒக்காந்திருக்கோம். தன் பிள்ளைகளுக்குன்னு தனியா பிஸ்லரி பாட்டில் வாங்கறா. சுனிதா ரெண்டு பாக்கெட் பிஸ்கட் எடுத்துகிட்டு வந்திருந்தா , இவ சொல்றா “ஓ, என் பையனுக்கு குட் டே பிடிக்காது. க்ரீம் பிஸ்கட் இல்லையா?” பஸ் நிக்கிறப்போ, கீழ போய் ஒரேயொரு க்ரீம் பிஸ்கட் பாக்கெட் – தன் பையனுக்கு மட்டும்”

பல வீடுகளில் இதனைக் காண்கிறோம் தன் பிள்ளை, தன் பெண் என்று வரும்போது மிக்க் கேவலமாக, அநாகரிகமாக, பொதுவிலேயே அதிகச் செல்லம் காட்டி வரும் சுயநலப் பேய்களாக பலர் மாறியிருக்கிறார்கள். தன்னை வளர்த்த பெற்றோர், அண்ணன் தம்பி, அக்கா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதேயில்லை.

குடும்பமென்பது விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து மகிழ்தல் என்பதன் கோவில் என்பது ஏனோ இப்போது பலருக்குப் புரிவதில்லை. தான், தன் குடும்பம் ஒரு அசுகமும் இல்லாது இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

பகிர்தலில் கொஞ்சம்தான் கிட்டும் – பெருமாள் கோவில் சர்க்க்கரைப்பொங்கல் போல. அந்த சிறு அளவுதான் மிக அருமையாக இருக்கும், ரசிக்க முடியும். ஒரு அண்டா நிறைய சர்க்கரைப்பொங்கலைத் தனியே தின்று பாருங்கள். திகட்டும். கூடியிருந்து குளிர்தலைத்தான் ஆண்டாளே திருப்பாவையில் முன்னிறுத்துகிறாள்.

ஒவ்வொரு மனிதருக்கும், அவர் குடும்பத்திற்கும் ஒரு பழக்கங்களின்  தொகுப்புக் கணம் இருக்கும். அக்கணம் சூழலுக்கு ஏற்ப விரிந்து சுருங்கும். அந்த மாற்றம், காலத்தின் கட்டாயத்தில் சொந்த அளவில்  விட்டுக்கொடுத்தலாகவோ ( காலேல 8 மணிக்கு முன்னாடி எந்திருக்க மாட்டான்; இப்ப ஸ்கூல் 7 மணிக்கு. அதுனால..), அன்றி பிறருக்காக விட்டுக்கொடுத்தலாகவோ (அக்காவுக்கு பஸ் கஷ்டம். ஸோ, என் ஆக்டிவாவை அவகிட்ட கொடுத்துட்டேன்)பரிமணிக்கும். இது அவசியத்தின் பொருட்டு மட்டுமன்று, அவசியத்தினை உணர்தலின் வெளீப்பாடு. நான், என் வசதிகள் என்று இருப்பவர்களுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் சரிப்படுவதில்லை.

உளவியலாளர்கள், சிறுபருவத்திலேயே இதன் பரிமாணம் தெரிந்துவிடுமென்கிறார்கள். லியோன் ஸெல்ட்ஜர் என்ற ஆய்வாளர் ‘சில மனிதர்கள் சொந்த வாழ்வில் சவால்களைச் சந்திக்க இயலாது, குற்றங்கள் செய்யுமளவு போவதற்கு , சிறுவயதில் ஏமாற்றங்களைத் தாங்காதவர்களாக வளர்வது காரணம்” என்கிறார்.  பின்னும் சொல்கிறார், “வளர்ந்தபின் தோல்வியையோ, ஏற்றுக்கொள்ளப்படாததையோ தாங்கிக்கொள்ள  அவர்களால் முடிவதில்லை. மன அழுத்தம், விரக்தி, தனிமைப்படுதல் எனப் பொதுவாக அவதிப்படுபவர்கள், சில நேரம் வன்முறையில் ஈடுபடுவதும் எதிர்பார்க்க வேண்டியவையே. “.

இது பொதுவாழ்விலும் நீடிக்கிறது. அலுவலகத்தில் “அந்தாளுக்கு நான் ஏன் அட்ஜ்ஸ்ட் பண்ணனும்? என் பாஸ் அவனுக்கு ஏன் ரெகமண்ட் பண்ணறான்? எல்லாம் பாலிடிக்ஸ்” என்றும், தனிவாழ்வில் “. இவ எப்படி என் காதலை மறுக்கலாம்?, எனக்கு ஏன் இந்த வேலை கிடைக்காது?”  என்றும் விகாரமாக வெடிக்கும். இவர்களில் முக்கியமாக இரு பலவீனங்கள் காணப்படுகின்றன.

ஒன்று - குழுவில் பணிசெய்யும் திறமை வளர்வதில்லை. இதனை மிக அதிக அளவில் இப்போதைய சூழலில் காண்கிறேன். திறமையான இளைஞர்கள் குழுவில் பணிசெய்ய முடியாது, விலகிச் செல்கின்றனர். இவர்களது எதிர்காலம் கேள்விக்குரியது.,

இரண்டு – தனிமனித வாழ்வில் ஏமாற்றங்களையும், சிறு இடர்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளப் பக்குவம் வருவதில்லை. இது சிக்கலானது.

 நீளமான வரிசையில் நிற்கப்பொறுமையின்றிக் கத்துவது ( எனக்கு வேணும்னா, உடனே கிடைக்கணும்),  விண்ணப்பத்தில் குறை இருக்கிறது என்று சொன்னால், சண்டை போடுவது, சினிமா டிக்கட் , பயணச் சீட்டு வாங்க முந்துவது முதல், பிடித்த வீடு கிடைக்கச் சண்டை போடுவது வரை பொறுமை, இடர் தாங்கி நிற்கும் பண்பு, தோல்வி என்ற முடிவை ஏற்றுக்கொண்டு, அமைதியாகச் சிந்திக்கும் முதிர்வு இல்லாத மனப்பாங்கு. நிராகரிப்பு என்பது உடல் உணரக்கூடிய வலியைப் போன்ற வலியை மூளை உணரச்செய்கிறது என்கின்ற்ன ஆய்வுகள். இவ்வலியை அவர்களால் தாங்க முடிவதில்லை. அவர்களைக் குடும்பமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது தனிமைப்படுத்துகிறது. பல விவாகரத்துகளூக்குக் காரணம் தனிமனித மன ஆளுமைக் குறைபாடுகளே என்பது பல ஆலோசகர்களும் சொல்லும் கருத்து.

”சிறுவயதில் குழந்தைகள் கேட்டதையெல்லாம் கொடுப்பது, ’இவ்வுலகம் நான் விரும்பியதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது” என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடம் உருவாக்குகிறது. கிடைக்காவிட்டால், அது உலகின் தவறு, தராதவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணத்தை அக்குழந்தைகள் உருவாக்கிக் கொள்கின்றன. இது குற்றங்களைத் தூண்டுகிறது.“ என்கிறார், லோனி கூம்ப்ஸ் என்ற குற்றவியல் வழக்கறிஞர்.. இதனைத் தனது பேட்டிகளிலும், தொலைக்காட்சித் தொடர்களில் தரும் ஆலோசனளிலும் வெளிப்படையாகச் சொல்லிவருகிறார்.

இதனை எதிரொலிக்கிறார்கள் மும்பையில் பல மனநல ஆலோசகர்கள். ”முன்பெல்லாம் மன உளைச்சல், தளர்வு என்று வருபவர்கள் மண வாழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் இருந்தார்கள். இப்போது போதைப்பொருள், காதல் தோல்வி, நண்பர்களைப்போல் பணக்காரத்தனமாக வாழ இயலாத விரக்தி, படிப்பில் ஆர்வமின்மை என்று வருபவர்கள் பல இளைஞர்கள். இதில் எனக்கு வேண்டியது, எனக்கு நியாயமாக்க் கிடைக்கவேண்டியது – கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏமாற்றமாக மாறும் நிலையில் வருபவர்கள் அதிகம்” என்றார் , மும்பையில் சாந்தாக்ரூஸ் பகுதியில் ஒரு மன நல ஆலோசகர்.

முக்கியமாக இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள், ‘எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது –கிடைக்கவில்லை’.  அதாவது நான் ஒன்றை விரும்பிவிட்டால், அது கிடைத்துவிடவேண்டும். கொடுப்பதற்கு உலகம் கடமைப்பட்டிருக்கிறது. மறுத்தால், கோபம், வன்முறை.. இதுதான் தான் காதலித்த பெண், காதலிக்க மறுத்தால் அவள் முகத்தில் ஆஸிட் வீசும் ஆத்திரத்தைக் கொண்டு வரும் மனப்பாங்கு.

’எனக்குக் கிடைக்காதது, என் பிள்ளைகளுக்குக் கிடைக்கட்டும்” என்ற எண்ணம் தவறல்ல. ஆனால் அது அந்தக் குழந்தைகளை மோசமாகப் பாதிக்குமென்பது, இளம் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. “இருப்பதில் மிக நல்லதையே என் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டுமென்பதில், இதுமட்டுமே நல்லதல்ல, என்பதும் சிந்தனையில் உறைக்கவேண்டும். பகிர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், கிடைத்ததில் அட்ஜஸ்ட் செய்து சுகித்திருத்தல் என்ற்  நற்பண்புகள் தானே வந்திடா. அவற்றிற்குச் சிறுசிறு தியாகங்கள் அவசியம் என்பதை பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து காட்டுதல் அவசியம். ‘ஓ, இங்க காபி மட்டும்தானா? என் பொண்ணு காபியே குடிக்கமாட்டா. அது விஷம்” என்ற சொற்கள் , எண்பது வயது வரை காபி குடித்து வந்த பெரியோரை ஏதோ சிகரெட் குடிப்பவர்கள் போலச் சித்தரிக்கும்.

இதனைக் குறைக்க முதல் அடி, பெற்றோர்களே எடுக்கவேண்டும். குழந்தைகள் கேட்ட்தையெல்லாம் வாங்கிக்கொடுக்காது இருப்பது ஒரு புறம்; கிடைக்கும்னெறாலும், கால தாமதம் ஏற்படுமென்றால் அதனைச் சகித்துக்கொள்ளும் பக்குவத்தைக் கற்றுத்தருதல் அவசியம். பிறர் இருக்கையில், தேவைக்கேற்ப தன் தேவைகளுக்குச் சமரசம் செய்துகொள்ளுதல் அவசியம். தனது தேவைக்கென பெருங்குரலெடுத்து அழுது, கை காலை உதைத்து நாடகமிடும் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். பலர் முன்னே அடம்பிடிக்கும் குழந்தையால் அவமானப்படுவதாக நினைக்கும் பெற்றோர், குரலை அடைக்க, அவை கேட்டதை வாங்கிக்கொடுத்துவிடுவது, அந்த நேரத்தில் வேண்டுமானல் அமைதியைத் தரலாம். பின்னாளில் அக்குழந்தைக்கே கேடு என்பதை யோசித்து, பொறுமையுடன் அந்நிகழ்வைத் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் பெற்றோருக்கு வேண்டும்.

’தன் வரலாற்றை மறப்பவர்கள், அதனை மீண்டும் அனுபவிக்க விதிக்கப்படுவர்’ என்றார் ஜார்ஜ் சாண்ட்யானா என்ற தத்துவஞானி. நாம் வந்த பாதையை மறந்து, மிகச் செயற்கையான பாதையை, பாதுகாப்பானது, சுகமானது என்ற பொய்யான கற்பிதத்தில் அடுத்த தலைமுறையை வளர்ப்பது, தீவுகளையே வளர்க்கும் -  குடும்பத்தையல்ல.

சுரேஷ் , தனது அதீதமான பாசவெளிப்பாடு, தங்கைகளிடம் நீடிக்கிறது என்ற கசப்பான உண்மையை சுனிதாவிடம் வெளிப்படையாகப் பேசியதில் உணர்ந்தார். திருமணமான பின்பும், தங்கைகளிடம், பாசத்தில் பலதும் செய்த்து, அவர்களைத் தேவையில்லா பாசப்பொழிவைப் பிள்ளைகளிடம்  சுயநலத்தோடு காட்டத் தூண்டியிருக்கிறது என்பது அவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ‘. இந்தப் பண்புத் தொகுதியை வளர்த்தது தானே’ என்ற பொறுப்பினை உணர்ந்தபின்,  தன் தங்கையுடன் தனித்துப் பேசினார். குழந்தைகளுக்கு பாசத்தில் கெடுதலையே விளைவிக்கிறாள் என்பதைப் பொறுமையாக எடுத்துச் சொன்னதில் அவள் திகைத்துப் போனாள். அமிதா மாறியிருக்கிறாளா? என்பதை அக்குழந்தைகள் பலவருடங்கள் கழித்து எப்படி வாழ்க்கையைச் சந்திக்கிறார்கள் என்பது காட்டும்.

Reference:

“Child Entitlement Abuse”  - series 1 to 5 by Leon F Seltzer,Ph.D https://www.psychologytoday.com/blog/evolution-the-self/200909/child-entitlement-abuse-part-1-5



Why Modern Parents Pamper and Spoil Kids?  - Praveen Kumar 

https://www.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-modern-parents-pamper-and-spoil-the-child-073790.html



Spoiled rotten: Why you shouldn't coddle your kids

http://www.sheknows.com/parenting/articles/980979/why-you-shouldnt-spoil-your-kids

How Rejection turns men violent ?- Diana Tourjee

https://broadly.vice.com/en_us/article/bjg8dz/how-rejection-turns-men-violent

Rejection is more powerful than you think -  Guy Winch

https://www.salon.com/2013/07/23/rejection_is_more_powerful_than_you_think/


1 comment:

  1. மிகவும் உண்மையான வெளிப்பாடு! தன்னுடைய, மற்றும் தன்னைச்சார்ந்த்வர்களின் சுகமே முக்கியம் என்ற மனோபாவம் பெற்றவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது!

    ReplyDelete