Saturday, December 29, 2012

டெல்லி நிகழ்வு - சில சிந்தனைகள்


டெல்லியில் நடந்த கோரமான வன்புணர்வு ஏதோ டெல்லியில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த தீங்காக எண்ணிவிடமுடியாது. இது சமுதாயப்பிரச்சனை. பண்பாட்டின் இழை  சமூகத்தில் வெட்டப்பட்டிருக்கிறது. யார் வெட்டினார் என்பதல்ல. எதனால் வெட்டுப்பட்டது என்பது அறியப்படவேண்டும். சிலர், பெருகிவரும் பாலிவுட் கலாச்சாரம், வெளிநாட்டு மோகம், மேற்கத்திய நாகரிகப் பாதிப்பு எனக் காரணங்கள் கூறுகிறார்கள். அது முழுமையான தீர்வாகப் படவில்லை. ஒரு முகம் மட்டுமே.

பண்பாடு என்பது வீட்டிலிருந்து , தெருவில் நடந்து மீண்டும் வீட்டிற்கு வரும்வரையான நடத்தையும் அடங்கியது. ஏதோ  விருந்தினர் முன்பு காட்டும் மரியாதையும், அடக்கமும் என்ற அளவிலே நாகரிகம் காட்டப்படுமானால், அது போலி பொய் வேஷமாகிறது. ஸ்டீபன் கோவே கூறுகிறார் “சோதனைக் காலங்களில் மன உறுதியை விடாமல் , தான் வாழும் தத்துவங்களில் பிடிப்பு உள்ளவனாக நடத்தல் , மிக முக்கியமானது”. இதுதான் அடிப்படைக் கல்வி என நான் நினைக்கிறேன்.
ஊடகங்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடக் கட்டுமானங்களும் வளர்க்கப்பட்டுவிடலாம். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறும் புள்ளி விவரங்களும் நாம் பெருமிதப்படும் அளவுக்குப் பெருகிவிடலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் மனிதத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய்விடும். மிகச் சிறந்த அறிவாளிகளும், பெரும் செல்வம் பொங்கி வரும் நகரங்களும், சிறந்த பள்ளிகளும், கல்லூரிகளும், தூய வீதிகளும், சுகாதாரமான உள்கட்டமைப்பும் இருந்தும் , மனிதன் மனிதத்தனத்தோடு வாழாவிட்டால் என்ன பயனாய் அவை இருக்கும்?

அடிப்படையில் நமது கல்விமுறையிலும், சமுதாயத் தட்டமைப்பிலும் பிறழ்வுகள் இருக்கின்றன. மும்பையில் பார்க்கிறேன். ஆட்டோ டிரைவரும் ரோட்டில் துப்புகிறான். ஆடி காரில் பயணிப்பவனும் ரோட்டில் துப்புகிறான். இது செல்வம் , வாழ்க்கைத் தரம் சார்ந்ததன்று. அவன் உள்வாங்கிய பண்பாடு, சமூகப் பொறுப்புணர்வு, தன்னாளுமை முதலியன , அவன் மனிதனாக நடக்கிறானா? என்பதைத் தீர்மானிக்கின்றன. பள்ளிகளை மட்டும் தனித்து  இதனை வளர்ப்பதில் தோல்வியடைந்ததாகக் கொண்டுவிட முடியாது. வீட்டில் பெற்றோருக்கு முதலில் பண்பாடு குறித்த பொறுப்புணர்வும் சுய அறிதலும் தேவை. குழந்தைகளிடம் அவர்கள் அறியும் வகையில் நாகரிகம் குறித்தான பகிர்தல்கள், உரையாடல்களைப் பெற்றோர் முன்னின்று நடத்த வேண்டும். முக்கியமாக, சோதனைக்காலங்களில் மன உறுதியுடன் , பண்பாட்டுக் கொள்கைகளில் பிடித்துநிற்க வலுவூட்டவேண்டும்.

டெல்லியில் நடந்தது , பிற இடங்களில் நடக்காமல் இருக்க வேண்டுமானால்,  நமது பண்பாடு மரபுகளை மீட்கொண்டு வர நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.  “ தெரியற மாதிரி ட்ரெஸ் போடாதே, சும்மா கண்டவங்க கூட சுத்தாதே” எனக் கட்டுப்பெட்டித் தனமாக இருப்பதுதான்  மரபு எனத் தவறாகப் புரிந்து கொண்டு அறிவுறை செய்யப்போனால், இளைய தலைமுறையால்  நாம் தவறாகக் கணிக்கப்படுவோம். நமது அக்கறைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்.
எது வேண்டுமென நாம் சிந்திக்கவேண்டியது மட்டுமல்ல, செயலாற்றவும் அவசியமன சூழலில் இருக்கிறோம்.