Saturday, April 28, 2012

முழுச் சுதந்திரம் - ஒரு முரண் பார்வை

சுதந்திரம் என்பதற்கு “ இரு எல்லைகளையும் பொருட்படுத்தாதிருப்பது சுதந்திரம்” (Liberum adversarium indifferentiae) என்றொரு விளக்கம் உண்டு. இது ஸ்காப்பன்ஹோயர் காலத்தது என்று நினைக்கிறேன். விருப்பு வெறுப்பு என்ற இரு எல்லைக்ளைச் சேராது, ஒன்றைக் குறித்து கவனிப்பதைத் தவிர்ப்பது சுதந்திரம் என்றால் , சமூகத்தின் பல சவால்களைச் சந்திக்கத் தயங்கி ஒதுங்கி இருப்பது சுதந்திரம் என்று அபத்தமான பொருள் புரிந்து கொள்ளமுடியும். தனிமனித சுதந்திரம் என்பது ஒதுங்கி இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற பொருள் வருமானால் சுதந்திரம் குறித்தான சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒரு ‘தளை’ என்று சொல்லிவிடமுடியும். இது அதனிலும் அபத்தம்.


பெண்ணியம் என்பதனை எடுத்துக்கொள்வோம். அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுக்காமல், பெண்ணியம் என்பது முழுச்சுதந்திரம் என்று பொருள் கொண்டால். எதிலிருந்து சுதந்திரம் என்பதை வரையறுக்கவேண்டும். மேற்கூறியபடி ஒதுங்கியிருத்தல் எனக்கொண்டால், சமூகத்தில் பெண்ணியம் என்பதன் பொருள் புரிவதென்பது இயலாது. இது முரண்.

பெண்ணியம் என்பது பெண்களின் இருத்தல் குறித்தான உணர்வு எனக் கொள்வது ஒரு எல்லை. பெண்ணியம் என்பது ஆண்களை வெறுத்தல் எனக்கொள்வது மற்றொரு எல்லை. இப்படிப் பல எல்லைகள் கொண்ட வரையறுத்தல், பெண்ணியம் என்பதன் கோட்பாட்டை ஒரு வட்டத்தில் அடைக்கிறது. வட்டத்தில் அடைபடுதல் சுதந்திரமன்று என்பது மற்றொரு வரையறை. இப்படிப்போனால் ’வரையறுத்தல் இல்லாதது சுதந்திரம்’ என்பதே ஒரு வரையறுத்தல் ஆவதால், அது சுதந்திரத்தின் வரையறுத்தல் என்ற கோட்பாடே முரணாகிறது. இது வரையிலி (infinity)ஐ வரையறுத்தல் போன்றது.

ஆக, ’எது பெண்ணியம்?’ என்ற கேள்வி சுதந்திரம் என்ற பதத்தை ஒரு singularity போலக் கவனமாகத் தாண்டவேண்டும். வரையறுத்தல் என்பது பலருக்கும் அவரவர் கணிப்பின்படி மாறுவதால், விவாதத்திற்குரியதாகிற்து. இவ்வாறு விவாதிப்பது என்பதே சுதந்திரம் என்று பொருள்கொண்டால், கருத்துப் பரிமாற்றங்கள் ஏதுவாகிறது. இலகுவாகிறது. ஆயினும், அவ்விவாதங்கள் பெண்ணியத்தை வரையறுப்பதில்லை. அதனை விரும்பலாம், வெறுக்கலாம். உதாசீனப்படுத்துவது என்பது தனிமனித சாய்ஸ் என்றாலும், அச்சுதந்திரம் ஆரோக்கியமானதன்று.

வரையறைகளுக்குள் நின்று , எல்லையற்றதைக் காண்பதே ஒரு நிஜமான அனுபவமாக இருக்கமுடியும். எல்லைகளற்ற வெளியில் முதலிலிருந்தே  நின்று, ’எல்லையற்றதை ரசிக்கிறேன்’ என்று சொலவது இயலாது. ஏனெனில், எல்லை என்பதை உணர்ந்தவனாலே மட்டுமே, எல்லையற்றதை வேறுபடுத்திக் காணவும் , உணரவும் இயலும்.

இதைத்தான் ஒரு சுஃபி கவிஞன் சொன்னான்.

“ எல்லைகளற்ற வெட்டவெளியில், சட்டங்களாலான கதவைத் திறந்து வைத்து உனக்காகக் காத்திருக்கிறேன்”.

இதனை சுதந்திரமாக முழுமையாக அனுபவியுங்கள்.