Thursday, March 24, 2005

கடைவீதி- Kadaiveedhi ( poem)

கடைவீதி
--------

கோணலாக அழுந்திய
கற்கள் பாதையாக,
இரூபுறமும் கடைகள்
கூவிக்கூவி விற்பனை
இக்கடைவீதியில்.


விழாச்சந்தையில்லை
இக்கடைவீதி - நேற்றிருந்து
இன்றில்லாது போக...


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கூட்டம்
விற்பவனும் மாறுவான்
சிலபொழுதில்..

விற்பவனும் வாங்க,
வாங்குபவனும் ஏதோ
விற்கவே வாங்கும்
விபரீத வியாபரம்...

அழகுச் சாதனங்கள்,
அரிசி பருப்பு, தண்ணீர்
அண்ணன் தம்பி, அம்மா அப்பாவென
என எதை விட்டுவைத்தது
இக்கடைவீதி?

விற்பவனும் போக
வாங்குபவனும் போக
அன்றைய குப்பைகளும் வாரிப் போக..

நாளைய வியாபாரம்
எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது
கடைவீதி.

சுவர்க்கோழி சப்தங்களில்
எலிகளையும்,
திருட்டுப்பூனைகளையும்
சகித்தபடி,
நடுஇரவில்
படுசுத்தமாக.

Saturday, March 19, 2005

பரிசு -ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருப்பது தமிழர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய செய்தி. "அகிலனுக்குப் பிறகு யாருமே தகுதியானவர்கள் இல்லையா?" எனப் பொருமிக்கொண்டிருப்பவர்கள் சற்று ஆசுவாசப்படலாம். காலம் தாழ்ந்த மரியாதைதான். ±É¢Ûõ better late than never.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, தூத்துக்குடி பொது நூலகத்தில் கேட்ட புத்தகம் இல்லாமல், வேண்டாவெறுப்பாகப் புரட்டிய ஜெயகாந்தனின் "யுகசந்தி" எனது கண்ணோட்டத்தையே மாற்றியது. எனது கணிப்பில் புரட்சியான சிறுகதைகளில் தமிழைத்திசை திருப்பியதில் ஜெயகாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவரது பல கதைகள் project madurai-ல் படிக்கக் கிடைக்கின்றன. project maduraiக்கு இந்த இணைய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது... புரட்சி எழுத்துக்களுக்காக நாம் என்றென்றும் ஜெயகாந்தனுக்குக் கடமைப்பட்டிருப்பதைபோலவே.

Eccha mikuthikal -எச்ச மிகுதிகள்

எச்ச மிகுதிகள்
___________

என்றும்போலவே
அன்றும்,
கடமைக் கனலில்
கனன்று சிவந்தபடி
மாலைக் கங்கில்
எரிந்ததைத் தேடியலுத்து
இருளில் புகைகிறேன்.

வினையெச்சத்துடன்
பெயரும் பிற எச்சங்களும் கூட்டி
நாளை விரிக்க
சுருட்டிப்பந்தாக்கி
மிடறு விழுங்கித் திணறுகிறேன்..
நினைவில் சேர்த்த
கனத்தில்
காற்றில் அழுந்தியபடி.


தோட்டத்து மூலையில்
மூடச் செடிகளோவெனில்
மூடிய மலர்களில் நம்பிக்கையைச்
சேர்த்துவைத்து வைக்கின்றன
வெறுமே நாளை விரியுமென அறிந்திருந்தும்.

பரிணாமத்தில் திரும்புதல்
சாத்தியமிருக்கிறதா?
மலர்கள் குலுங்கும்
அம்மல்லிகைக் கொடியாகாவிட்டாலும்
நாய் கூட முகராத
பேர்தெரியாத அப்புதராக மாறினாலும்
போதும்.

Wednesday, March 16, 2005

Kaisikam -2 (concluding) கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை

கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை
-------------------------------------------------------

பக்திஇயக்கம் சாதியமைப்பு உள்ள சமூகச் சூழலில், இறைவனைத் துதிக்க ஜாதியில்லை என்ற புரட்சிக் கொள்கையை முக்கியமாக முன்வைத்தது. பக்தி இயக்கத்திற்கு முன்பும் இது காணப்பட்டது.ஆழ்வார்களும், நாயன்மார்களும்,ஆச்சார்யார்களும் இதனைத் தங்கள் வாழ்விலும், இயற்றிய நூல்களிலும் பல இடங்களில் உணர்த்தியிருக்கிறார்கள்.

கைசிகபுராணக் கதையமைப்பு இதனைத் தன் கருவில் கொண்டிருக்கிறது. கைசிகபுராணத்தைக் கொண்டுள்ள வராஹ புராணமும் இதனை மற்ற இடங்களிலும் தெளிவாக்கியுள்ளது.
பலவகையான பக்தி நிலைகளை விவரித்தபின் ,
"இத்தகைய பக்தி எவனொருவன் அமையப்பெற்றுள்ளானோ, அவன் எக்குலத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், அவனோடு பிற பக்தர்கள் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்" என்கிறது வராஹ புராணம்.

இதில் எவனொருவன் என்னும் ஒற்றை விளி, ஜாதியற்று பொதுநிலையில் காணப்படுவதை கவனிக்கவும்.

"ஒரு வைணவ பக்தன், சக வைணவபக்தனின் ஜாதியைச் சோதித்தால் அவன் தன் தாயின் கருப்பையைச் சந்தேகித்த பாவத்தை செய்தவன் " என்கிறது ஆச்சார்ய ஹ்ருதயம்."மாத்ரு யோனி பரீக்க்ஷா".(நன்றி: திரு. பி.ஏ. கிருஷ்ணன்- புலி நகக் கொன்றை ஆசிரியர்)

இவ்வாறே பக்தரிடம் ஜாதி வேறுபாடில்லை என்பதை கைசிகபுராணம், பிற முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் விரதங்களுக்கு நிகராக, பிறப்பினால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பக்தனின் ஏகாதசி விரதத்தை சிறப்பாகக் காட்டுகிறது.
வைணவ பக்தர்களில் முக்கியமானவர்களுக்கு நம் என்ற அடைமொழி மிகுந்த மரியாதையுடன் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார், நம்பிள்ளை, நஞ்சீயர்,நம்பெருமாள், நம்பிராட்டி என்பதோடு நம்பாடுவான் என்று பாணர் குலப் பக்தனின் பெயர் கைசிகபுராணத்தில் காணப்படுவதால், இப் பக்தனின் சிறப்பு பன்மடங்காகிறது.

,இறைவனைப் பாடித்துதித்தல் என்பது பக்தியின் முக்கிய வெளிப்பாடு என்பதையும் கைசிகம் காட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் பாடித்துதிப்பதற்கு மிகமுக்கியத்துவம் இருப்பதைத் தெளிவாக அறியலாம்.
"வாயினற்பாடி மனத்தினாற் சிந்தித்து.."
"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி.."
"உன்னைப்பாடிப்பறைகொண்டு நாம் பெற்ற சன்மானம்" போன்ற வரிகள் இதனை விளக்குகின்றன.
மாணிக்கவாசகரின் திருவாசகமும் "சோதித்திறம்பாடி" இறைவனைத் துதிக்கத் தூண்டுகின்றது.

புராணக்கதையின் வழக்கு இப்படியென்றால், நாடகம் இன்னும் சிறப்பாக தன் செய்தியை வலுவுடன் தெரிவிக்கின்றது.
பேராசிரியர் இராமானுஜம், கீழ்க்கண்டவற்றை இந்நாடகத்தின் சிறப்பென்கிறார்.
1. நாடகக் கலைஞர்கள் , பிரம்மராட்சசன் தவிர அனைவரும் பெண்கள். பொதுவாக , மேடையில் ஆண்கள் பெண்வேடமணிந்து நடிக்கும் வழக்கிற்கு மாறாக பெண்கள் ஆண்வேடமணிந்து நடிக்கும் புதுமை இந்நாடகத்தில் நூற்றாண்டுகளாக வழங்கிவருகிறது.
2.இப்பெண்கள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள், ஏகாதசி விரதமிருந்தே, நாடகத்தில் பங்குகொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
3.விரதமிருக்கும் உயர்குலத்தோர் தரையில் அமர்ந்திருக்க, இந்நாடகம் மேடையில் நடிக்கப்பெறுகிறது.

நாடகம் என்ற ஊடகம் ,சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகத்திலிருந்து வேறுபடுவதில் ஒரு முக்கிய காரணம் நாடகத்தில் பார்வையாளர்களின் பங்கு. ஒவ்வொரு நாடகமும், வேறு வேறு சமயங்களில், தளத்தில் செயலாக்கப்படும்போது, அதன் வீச்சு, பார்வையாளர்களின் பங்கு கொண்டு மாறுபடும். It is a cocreative activity.

கைசிகநாடகத்தில், கிழவராக வரும் நம்பிப் பெருமான், தன் பங்கு முடிந்ததும் "நாமும் நம் இடம் செல்வோம்" எனக்கூறி மேடையிலிருந்து இறங்கிச் செல்லும் போது, இரு புறமும் அமர்ந்திருக்கும் மக்கள் அவரை வணங்குவதும், நாடகம் முடிந்ததும், நடிகர்கள் வேடம் கலைக்குமுன், பக்தர்கள் அவர்களை வணங்கும் வழக்கம் இன்றும் காணலாம். இப்படியொரு பார்வையாளர்களின் பங்களிப்பை ஆழமாகக் கொண்டுள்ளது கைசிக நாடகம்.

இந்நாடகத்தில் பரதக்கலை, கூடியாட்டம் மற்றும் யக்ஷகானம் போன்றவற்றின் தாக்கம் தெரிகிறது. எனினும், தனது புரட்சியான வடிவமைப்பை சிதைக்காமல், பிற ஒழுங்குகளையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது இதன் சிறப்பு.

பொதுவாக புரட்சியான கருத்தை முதலில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப சடங்குகள் (rituals) அமைவது வழக்கம். கைசிகநாடகத்தில், முதலில் நாடகப்பாங்கு அமையப்பெற்று, அதனுள் கைசிகம் தன் கரு சிதையாமல் உள்வாங்கப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர்.இராமானுஜம்.
இதனை நோக்கும்போது, இந்நாடகப்பாங்கு மிகத் தெளிவாகச் சிந்திக்கப்பட்டு, அதனுள் கதை சிதையாமல் ஏற்கப்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

சமூகப் புரட்சியென்பதை , மதத்தின் வாயிலாக, மதக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அனுட்டானச் சைகைகள் (rites) மற்றும் சடங்குகள் மூலமாகவும் (rituals) மெல்லப் பரப்பி மக்களை அடிமனத்திலிருந்து உணரவைக்க இயலும்.புரட்சியென்பது முரட்டுத்தனமான எதிர்ப்பு மட்டுமே கொண்டு வருவதல்ல. சமூகத்தில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட புரையோடிப்போன கொள்கைகளை, அச்சமூகம் நம்பும் பிற கொள்கைகள் , நம்பிக்கைகள் கொண்டும் சீர்திருத்த இயலும். ஆயின், இச்சீர்திருத்த எண்ணங்கள் மீண்டும் சடங்குகளாக மட்டுமே உள்வாங்கப் பெறின், அதன் மூலங்கள் மீண்டும், அனுட்டானங்களின் சாம்பல் மண்டி, உள்மட்டும் கனன்றுகொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது.

கைசிகநாடகம் மீண்டும் புத்தொளி பெற்றதில், இவ்வமைதியான புரட்சி மீண்டும் காண்பவர் மனத்தில் எழும் வாய்ப்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நாடகம் காணவிரும்புவோர், வைணவத் தலங்களைத் தொடர்பு கொண்டால், கைசிகஏகாதசி நாளறிந்து, திருக்குறுங்குடி சேரலாம். நெல்லையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

Saturday, March 12, 2005

Kaiskam -1

கைசிகம் - ஒரு அறிமுகம்
(இக் கட்டுரையின் கருத்துகள் பேராசிரியர் சே.ராமானுஜம் அவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும், "சே.ராமானுஜம் -நாடகக் கட்டுரைகள்" தொகுப்பு- சி. அண்ணாமலை ,காவ்யா வெளியீடு புத்தகத்தையும், அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் பக்கங்களின் எண்களில் தரப்பட்டிருக்கின்றன )
நமது முன்னோர்கள் தங்களது செய்திகள் மக்களைக் காலம் காலமாகச் சென்றடைய பல உத்திகளைப் பயன்படுத்தினர்.
அனுட்டானச் சைகைகள் (rites), அவற்றைச் செய்யும் வழிமுறைகள் கொண்ட சடங்குகள்( rituals),
நிகழ்வுச்செயல்களை(events)ப் படம்பிடிக்கும் மீள்நிகழ்வுகள்(enactment), நிகழ்வுச் செயலாக்கங்கள் (performance) என இவற்றை வரையறுக்கலாம்.
இவற்றால் , தங்களது மரபுச் சிந்தனைகளை மட்டுமே, சந்ததிகளுக்குச் செய்தியாகத் தந்தனர் என்ற கோட்பாடு , சற்றே மீள்பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று ஒரு நாடகம் சிந்திக்க வைக்கிறது.
அது கைசிகபுராண நாடகம்.

கைசிகபுராணக் கதை வராஹ புராணத்தில் காணப்படுவதிலிருந்து அதன் தொன்மையை உணரலாம். ( வராஹ புராணம் -நாற்பத்தியெட்டாம் அத்தியாயம்). (பக்: 341)
வராஹ புராணத்தின் வியாக்கியானம் பராசரபட்டரால் ( கி.பி 12ம் நூற்றாண்டு) மணிப்ப்ரவாள நடையில் எழுதப்பட்டது எனக்காணக்கிடைக்கிறது.(பக் 347)

பெருமாளை கைசிகப்பண்கொண்டு பாடிய பக்தன் ஒருவனின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது இப்புராணக்கதை. கைசிகப்பண் என்பது தமிழ்ப்பண் -பைரவி ராகம் எனலாம்..
கைசிகபுராணம் , கைசிக அமாவாசையின் மறுநாள் -துவாதசியன்று வைணவத் திருத்தலங்களில் மணிப்ப்ரவாள நடையில் வாசிக்கப்பட்டு போற்றப்படுகிறது. பக் 341
முக்கியமாக, நிகழ்வுச் செயலாக்கமாக ( performance), நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக செயலாக்கப்பட்டு வந்த இந்நாடகம் காலத்தின் மாற்றத்தால் பொலிவிழந்து, சடங்காக ஆக்கப்பட்டு, "கைசிகம் கண்டால் புண்ணியம் உண்டு' என்ற எண்ணத்தால் மட்டுமே உந்தப்பட்ட சில பக்தர்களால் மட்டுமே காணப்பட்டு வந்தது அண்மையில் சில ஆண்டுகள் முன்பு வரை.

திருமதி. அனிதா ரத்தினம் (T.V.S group) அவர்களின் முயற்சி மற்றும் கொடையாலும், பேராசிரியர். இராமானுஜம் அவர்களின் முயற்சியாலும், இந்நாடகம் புதுப்பிக்கப்பட்டு, புது வாழ்வு பெற்று பொலிவுடன் மீண்டும் அரங்கேறியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
இந்நாடகம் ஆண்டுதோறும் திருக்குறுங்குடி ஊரில் (நெல்லைமாவட்டம் நாங்குநேரியருகில் ) கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் ஏகாதசிதினத்தன்று சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

கைசிக புராணத்தின் கதைச் சுருக்கம்:
நம்பாடுவான் என்ற , நால்வகை வருணத்தாரினும் தாழ்த்தப்பட்ட குடிப்பிறந்த வைணவ பக்தன், தனது யாழினால் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாளை தினமும் பாடி வணங்கிவந்தான். ஒரு கார்த்திகை மாதத்து ஏகாதசியன்று இரவில் பெருமானைப் பாடிவணங்கச் சென்ற போது, அவனை ஒர் பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு கொன்று தின்னப்போவதாகச் சொன்னது. உயிர்போவது குறித்து வருந்தாத நம்பாடுவான், ஓர் ஏகாதசி இரவில் பெருமானைப்பாடும் வாய்ப்பு போகிறதே என வருந்தி, " நான் வணங்கி வந்தபின் என்னைப் புசித்துக்கொள்" எனப் பிரம்மராட்சசனிடம் கூறினான்.முதலில் நம்பாத பிரம்மராட்சசன், பின் இரக்கம் கொண்டு அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது. கோவிலில் பண்பாடி வணங்கித் திரும்பிவந்த நம்பாடுவான் தன்னைப்புசித்துக்கொள்ளும்படி பிரம்மராட்சசனிடம் சொன்ன சொல் தவறாது திரும்பிவந்தான். இதனால் மனம்மாறிய ப்ரம்மராட்சசன் "உன்னைக்கொல்ல மனம் வரவில்லை. இன்று நீ இறைமுன் பாடியதின் புண்ணியத்தைக் கொடு " என இறைஞ்ச, நம்பாடுவான் மறுத்தான். "நீ கைசிகப் பண் கொண்டுபாடியதின் புண்ணியத்தையாவது கொடு" என ப்ரம்மராட்சசன் மன்றாட, இறுதியில் நம்பாடுவான்"தந்தேன்" எனச் சொல்ல, பிரம்மராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த ஒர் அந்தணன் ,சாபவிமோசனமடைந்து, நம்பாடுவானை வணங்கி, இறைவனின் திருவடிகளை அடைந்தான்

இக்கதையில், நம்பாடுவான் கோவிலிலிருந்து திரும்பி ப்ரம்மராட்சசனிடம் வர முயலும்போது, திருக்குறுங்குடிப் பெருமாளான நம்பி , ஒர் கிழவன் வடிவம் கொண்டு " நீ தப்பிச்செல்லலாம்" என நம்பாடுவானிடம் ஆசைகாட்டிச் சோதிக்க , "வைணவ பக்தன் சொன்ன சொல் தவறான்" எனச்சொல்லி நம்பாடுவான் ப்ரம்மராட்சசனிடம் செல்ல உறுதியாயிருக்கிறான் எனவும் வருகிறது. இது நாடகத்தில் காணப்பெறுகிறது.

இக்கதையின் மூலம் திருக்குறுங்குடி தலபுராணம் பக் XXVI -XXVII - என சே.ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் பக் 346 ல் காணக்கிடைக்கிறது

இந்நம்பாடுவானைக்குறித்து வைணவப் பெரு நூலான நாலாயிரத்திவ்யப் ப்ரபந்தத்தில் காணப்பெறவில்லை. ஆயின் நம்பிள்ளை ஸ்வாமியின் ஈடுரையிலும், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திலும் , கைசிகம் எடுத்துக்காட்டப்படுகிறது.
இவ்வாறே புகழேந்திப்ப்புலவரின் பாடலிலும், பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பாடலிலும் நம்பாடுவான்பற்றி விவரங்கள் காணக்கிடைக்கின்றன ( பக் 346-7)

இக்கதையின் புரட்சிகரமான சமூகச்சிந்தனை வெளிப்பாடு நாடகத்தில் எவ்வாறு காணக்கிடைக்கிறது என்பதைப் பின் காண்போம்.

Saturday, March 05, 2005

NaatuppuRappaadalkaL-2

சில நாட்கள் முன்பு நாட்டுப்புறப்பாடல்களின் முன்னோடியென அமரர். திரு. அன்னகாமு அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1950-60களில் நடைபெற்ற அவரது நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டு முயற்சிகள், அதற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றி விவரங்கள் தேடும் முயற்சியிலிருந்தேன். அதிர்ஷ்டம் எனச் சொல்லவேண்டும். பேராசிரியர் இராமானுஜம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல விவரங்கள் கிடைத்தன.

பேராசிரியர் இராமானுஜம் , காந்திகிராம ஆசிரியர் கல்லூரியில் அன்னகாமு அவர்களின் மாணவர். காந்திகிராமத்தில் வாழ்ந்தவர்.அன்னகாமு அவர்களுடன் கிராமங்களுக்குச் சென்று, பாடல்களை எழுதிப் பதிவு செய்த மாணவர்களில் ஒருவர். அவர் குறிப்பிட்ட சில செய்திகள் இவை.

அன்னகாமு அவர்கள் 50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.மதுரைமாவட்ட கிராமங்களில் நேரில் சென்று, பாடல்களைத் திரட்டினார். குறிப்பாக ஆலம்பட்டி,முருகன் பட்டி, கன்னிவாடி போன்ற கிராமங்கள் ( காந்திகிராமத்தைச் சுற்றிய கிராமங்கள் இவை).
பாடல்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் ஏற்பட்டன.
1. நாட்டுப்புறப்பாடல்கள் , தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. பாடும் இடம், காலம், பாடுபவரின் உணர்வு அனைத்தும் கலந்த புலப்பாடு. அவ்வாறு பாடுபவர்களுக்கு பிறர் நகலெடுக்கப் பாடுவதில் தயக்கம் வெட்கம் இருந்தது.அதனால், பாடல்களைப் பதிவு செய்வதற்கு, அவர்கள் அத்தயக்கத்தினை மீறி வந்து பாடுவதற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.. அவர்கள் மொழியில் பேசி, நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
2. ஒலிப்பதிவு இல்லாததாலும், மொழியின் மாறுபாடுகளாலும், வரிகளை ஒழுங்குபடுத்துவதில் உண்டான சிரமங்கள் பல. அன்னகாமு அவர்கள், கிராம வழக்குப்படி வழங்கிய மொழிச்சொற்களைச் சிதைக்காமல் அப்படியே கையாளுவதில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதனால், நாலு மாணவர்களோடு சேர்ந்து தானும் கிராம மக்கள் பாடும்போது எழுதியெடுப்பார். அனைவரின் எழுத்துப்படிவங்களையும் ஒப்பிட்டு, அன்னகாமு அவர்கள் எந்தச் சொல் எந்த இடத்தில் வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவார்.
3.எழுதியபின், அதன் மெட்டுகளை வரிசைப்படுத்துவதில் முதலில் சிரமமிருந்தது.
இதில் மறைந்த திருமதி. சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள்(நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் அவர்களின் அண்ணி) பெரும்பங்கு ஆற்றினார். கிராமங்களில் பாடல்களைப் பாடும்போது , அருகிலிருந்து கேட்டு, மெட்டுகளை அப்படியே உள்வாங்கி, பாடல்களை அந்த இசைவடிவு மாறாமல் ஒருங்கமைத்துக் கொடுத்தார். அவரது அபார இசையறிவால், பாடல்கள் மெட்டு, சிதையாமல் பொலிவுடன் பதிவு செய்யப்பட்டன.

சில நாட்டுப்புறப்பாடல்களின் திரட்டுகளில், வரிகள் சரியாக அமையாதிருந்தால், திரட்டியவரே, சில வரிகளை தானே எழுதி அல்லது மாற்றியமைத்து பாடல்களைப் பதிவு செய்திருந்த காலமது. அக்காலக்கட்டத்தில், வார்த்தைகள் சிதைந்திருப்பினும், பாடல் வழக்கிலிருந்த வார்த்தைகளையே அன்னகாமு அவர்கள் பதிவு செய்தார். அவரது திரட்டுகள் உண்மையான பாடல்களைக்கொண்டிருந்தன.
திரைப்படங்களிலும் நாட்டுப்புறப்பாடல்கள் வந்திருந்தாலும், பெருமளவில் திரைக்கேற்ப மாற்றப்பட்டிருந்தன. சில திரைப்படப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல் பண்ணிலும், மொழியமைப்பிலும், பாடலாசிரியர்களால் எழுதப்பட்டிருந்தன.இவ்வழக்கம் 70 களிலும் தொடர்ந்தது.

அன்னகாமு அவர்களது வாழ்க்கைப்பின்னணி குறித்து மேற்கொண்டு தகவல் கிடைக்கப்பெறும்போது மேலும காண்போம்