Sunday, September 17, 2006

ஹீரோ பேனா

ஹீரோ பேனா

" ஏல, ஜான்சன் சட்டைப்பையில பாத்தியால?" கிசு கிசுத்தான் சரவணன். ஒன்பதாம் வகுப்பில் சரவணன் மிக நெருங்கிய தோழன். ரெண்டாம் பெஞ்சில் பெருமிதமாக ஜான்சன் அமர்ந்திருந்தான். அவன் சட்டையை உற்றுப்பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"என்னலா பாக்கச்சொல்லுத?" என்றேன் சரவணனிடம்.
'சட்' என புடதியில் ஒன்று போட்டான்." மூதி. கண்ணாடி போட்டும் கண்ணு தெரியாது உனக்கு. பளபளன்னு மின்னுது பாரு ஒரு பேனா -அவன் சட்டைப்பையிலெ"
அப்போதுதான் கவனித்தேன். ஜான்சனின் வெள்ளைச் சீருடை சட்டைப்பையில் தங்கமென மின்னியது ஒரு பேனாவின் கிளிப்.
"அது ஹீரோ பேனா- டே. நம்ம ஜஸ்டின் சார், ஹெட்மாஸ்டர் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஜான்சன் அப்பா கப்பல்ல வேலைபாக்கார்லா? அதான் வாங்கிவந்திருக்காரு அவனுக்கு" சரவணனின் குரலில் அந்தப் பேனாவின் மதிப்பும், அது நம்மிடமெல்லாம் இருக்காது என்னும் தாழ்வு மனப்பான்மையும் வழிந்தன.

ஹீரோ பேனாவை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். ஜான்சன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு எல்லாரையும் தொட்டுப்பார்க்க அனுமதித்தான். நானும் தொட்டுப்பார்த்தேன்.
"என்னலா இதனோட நிப்பு உள்ளேயே இருக்கு? நம்ம பேனா மாதிரி வெளிய இருந்தாத்தானே எடுத்து கழுவிப்போட முடியும்? என்ற கணேசனை ஜான்சன் ஏளனமாகப் பார்த்தான்.
"மூதி. இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு உள்ளதுல. நிப்பு, நாக்கட்டை எல்லாம் கழுவ தனி ஆட்களே இருப்பாங்க"
நம்பினோம்.
ஜான்சன் பெரிய ஆளாக அன்று கருதப்பட்டான். மரியதாஸ் சார் கூட " எங்கடே வாங்கின?" என்று எடுத்துப் பார்த்ததும், நான் சத்தியமாக ஜான்சன் பெரிய ஆள்தான் என முடிவே கட்டிவிட்டேன்.

அதன் தங்க நிற மூடியை சட்டையில் தேய்க்கத் தேய்க்க பளபளப்பு ஏறிக்கொண்டே போனது கண்டு ப்ரமித்தேன். அதில் ஜான்சனின் முகம் விகாரமாக வளைந்து தெரிந்தது. " கண்ணாடி கணக்கால்லா தெரியுது?' என்றேன் வாயைப் பொளந்த படி.
"போதும்ல. கொடு" என்றான் ஜான்சன் அலுத்தபடி. பேனாவை என் கண்ணிலிருந்து மறைத்தான் -சட்டைப்பையின் உள்ளே இட்டவாறே.

ஒரு உத்வேகம் எழுந்தது.
வாழ்க்கையில் எப்படியும் ஒருநாள் இந்த ஹீரோ பேனா கொண்டு எழுதவேண்டும்.

பேனா மேலும் எழுதும்.

Saturday, September 16, 2006

எனக்கும் ஒண்ணு வேணும்

வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது ஒன்பது வயது மகனை
ஈர்த்திருக்கிறது. தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்
உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
http:\\abhijeetthoughts.blogspot.com

சிறுபிள்ளைகள் தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவு
நல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இது அவனது வலைத்தளம்.
தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..

Friday, September 15, 2006

எண்ணித் துணியும் கருமம்...(கல்விக்கூடத்தில் லினக்ஸ்)

அண்மையில் ஒரு மின்மடல் காணும் வாய்ப்புக்கிடைத்தது ( எனக்கு வந்ததில்லை). திறந்த மூல மென்பொருட்களைக் கல்லூரிகளில் பயன்படுத்துவது குறித்த ஒரு புள்ளியியல் ஆய்விக்கான அழைப்பு அது. மாஸ்ட்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சி.டாக் (C.DAC) அமைப்பு (இப்போது வேறு பெயர்... நினைவில் இல்லை) நடத்தும் இயக்கத்திற்கான முன் ஏற்பாடுகள் குறித்தானது. மென்பொருள் தயாரிக்கும், பயன்படுத்தும் நிறுவனங்களின் முதுநிலை அதிகாரிகள், முதுநிலைக் கல்லூரி (கணனி, செய்தி தொழில்நுட்பம்)ஆசிரிய/ஆசிரியைகள் என கணனித்துறையில் பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களை விளித்து விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வுக்கேள்விப்பட்டியல் அது.
சில கேள்விகள் ஆய்வில் கலந்துகொள்பவர்களின் இயங்குநிலை, அவர்களது பணி குறித்துக் கேட்கப்பட்டிருந்தன. தொழில்நுட்பரீதியில் அமைந்திருந்த கேள்விகள்
1. தற்போது உபயோகிக்கும் மென்பொருட்கள்
2. அவற்றினைக்குறீத்தான மதிப்பீடு
3. வாய்ப்புக் கிடைத்தால், திறந்த நிலை மென்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்த மதிப்பீடு.
4. திறந்த மூல மென்பொருட்கள் குறித்தான மதிப்பீடு/ கருத்து
5. மென்பொருட்கள் வாங்குவது குறித்தான முடிவெடுக்கும் தகுதி, சிபாரிசு செய்யும் வலிமை
6. எந்த அளவில் திறந்த மூல மென்பொருள் மற்றும் Proprietary மென்பொருட்கள் பயன்படுத்த திட்டமிடுதல், எந்த விகிதத்தில் இரண்டும் கலந்திருக்க வேண்டும் என்பது குறித்த எண்ணம்

என நீண்டுசென்றது. கவனிக்கவேண்டும். இது வெறும் கருத்துக் கணிப்பல்ல. திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்த தற்போதைய இடர்கள், தடைகள் முதலியனவும் சில கேள்விகளில் வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்கள்.
இச்சுட்டியில் மேலும் விவரங்கள் காணலாம்.
http://www.cdac.in/HTmL/press/3q05/prs_rl170.asp

சர்வதேச அமைப்பான flossworld மற்றும் சி.டாக் இன் பணி குறித்து இச்சுட்டிகளில் காணலாம்.
http://www.hoise.com/primeur/05/articles/monthly/AE-PR-09-05-55.html
http://www.flossworld.org/

இதன் பலன் சிறிது வருடங்களில் தெரியலாம். தற்போது திறந்த மூல மென்பொருள் பயன்பாடு வளர்ந்து வருகிறது என்பது உண்மை.. ஆயின் மிகத் திறம்பட வந்திருக்கிறதா என்றால் இல்லை. H.P, IBM சில சர்வர்களை லினக்ஸிற்காக சந்தையில் விற்பது அவர்களது brand image, வளர்ந்து வரும் சந்தையிலும் வலுப்படலாம் என்னும் எண்ணம்தானே தவிர, லினக்ஸை வளர்க்கும் நல்லெண்ணம் எல்லாம் இல்லை. இதில் தவறும் இல்லை.

இந்த ஆய்வின் பின் சில சுவையான தகவல்கள் வெளிப்படலாம். எந்த அளவில் கல்லூரிகளும், தொழிற்பேட்டைகளும் திறந்த மூல மென்பொருட்களுக்காகத் தயாராக இருக்கின்றன என்றும், எத்தனை வருடங்களில் அவை லாபகரமான தொழிலிற்குத் தயாராகும் என்பதும் சிறிது விளங்கும். இதன் மூலம் பாடத்திட்டங்கள் அமைக்கமுடியும். இந்த முயற்சி திருவினையாகும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் - இதில் அரசியல் இல்லை.

கேரள அரசு எடுத்திருக்கும் முடிவிற்கும், இந்த முயற்சிக்கும் உள்ள வித்தியாசம் .....

Sunday, September 03, 2006

மற்றொரு மாநிலம்- மற்றொரு கல்விக்கூட மென்பொருள் அரசியல்

கேரளா கல்வித்துறை மென்பொருளில் கை வைத்தால், காங்கிரஸ் அரசு சும்மாயிருக்குமா? மஹாராஷ்டிரா இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் இச்சுட்டியில் (http://epaper.hindustantimes.com/default.aspx) மும்பை பதிப்பில் மூன்றாம் பக்கம் (metro) பார்க்கவும்.

கல்வித்துறையில் கணனி மயமாக்குவதற்கும், இணையம் மூலம் கல்விக்கும் உள்ள திட்டங்களை செயல்படுத்த, மென்பொருள் வல்லுமையும் , ஆளுமையும் கொண்ட TCS நிறுவனத்தை வெளியேறச் சொல்லிவிட்டு, ஊழலும் ஆளுமைக்குறைவும் கொண்ட ஒரு அரசு சார்ந்த நிறுவனத்திடம் மஹாராஷ்டிர அரசு கொடுத்திருக்கிறது.
இத்தனைக்கும் மஹாராஷ்ட்டிராவின் கணனித் தொழில் மேம்பாட்டிற்காக இத்துறை வல்லுநர்களும்,உயர்நிலை ஆசிரியர்களும் பலமுறை அரசுக்குத் தங்கள் சேவையைத்தர முன்வந்திருக்கின்றனர். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பல கணனித்துறை வல்லுநர்களும் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் அறிவித்த ஒன்று.

எனக்கு TCS மீது என்ற சார்பும் இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும் "நாங்கள் சீரழித்தே தீருவோம்" என கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் கட்சிகள் பகிரங்கமாக செயல்படுவதை , இக்கட்சிகளின் தலைமை பீடம் கண்டுகொள்ளுமா? கணனித்துறையில் செல்வாக்குப் பெற்ற அதிபர்களூம், வல்லுநர்களும் பேசவேண்டிய நேரம் இது. வாய் மூடி நிற்பது ஒரு தலைமுறையையே சீரழிக்கும்.

Saturday, September 02, 2006

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ் - செய்திச் சுட்டிகள்

கேரள அரசும் லினக்ஸும் குறித்தான அரசியல் பின்னணி இந்த சுட்டியில் காணவும். Open Source Code குருவான ஸ்டால்மன் கேரள அரசின் ஆலோசகர் என்னுமளவிற்கு சொன்னது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது தூண்டுதல் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது என்பது தெளிவு. இந்த அளவில் ஒரு பெரும் வல்லுநரை ஆலோசித்தது முறையானதே. ஆனால் , தொழிற்நிறுவனங்கள் , பிற கணனி தொழில்நுட்ப வல்லுநர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
http://in.rediff.com/money/2006/sep/02microsoft.htm

கணனி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏன் கேரள அரசின் இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதற்கு சுவையான காரணம் இச்சுட்டியின் இறுதிப்பத்தியில் காண்க! லினக்ஸ் இலவசம் என்பதால் ஒவ்வொரு கணனி விற்பனையிலும் இவர்களின் லாப சதவீதம் கூடுகிறது. இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் ஈட்டிக்காரன் மாதிரி தன் பங்கைக் கேட்டு நிற்கும். திருட்டுத்தனமாக pirated மென்பொருள் இட்டுத்தந்தால், சட்டம் சும்மாயிருக்காது...
கேரள அரசின் முடிவில் இந்த ஹார்ட்வேர் விற்பனையாளர்களின் லாபி இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!
"எலி ஏண்டா அம்மணமா ஓடுது-ன்னு இப்பல்லா புரியுது?" http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=138464

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்(contd)

( போன பதிவில் மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கம். மிக நீண்டதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.)
எனது வாதம் லினக்ஸுக்கு எதிர் அல்ல. லினக்ஸ் பயன்படுத்துவதைப் வரவேற்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த கேரளா எடுத்திருக்கும் அரசியல் போக்குதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளியில்"லினக்ஸ் பயன்படுத்துவோம்" என்பதன் பின்புலம் மைக்ரோஸாஃப்ட் மென்பொருளை பயன்படுத்துவது குறித்தான எதிர்ப்பு என்பதுதான். மாநில அளவில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமுன் சரியான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். எந்த pilot project ம் கேரளா நடத்தி அதன் புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
நான் லினக்ஸ் ஆதரவாளன். ஆனால் பள்ளிகளில் கொண்டு வருமுன் அதனை சரிவர நடைமுறைப்படுத்த சில கேள்விகளுக்கு பதில் தேவையாயிருக்கிறது. லினக்ஸுக்கு தற்போது கேரளாவில் பயிற்சி infrastructure இருக்கிறதா?, அரசு இயந்திரம் இதனை சரிவர புழக்கத்தில் கொண்டுவர பயிற்சி அளிக்க எத்தனை வல்லுநர்கள் தேவைப்படுவர்? எத்தனை காலம் ஆகும்? இது குறித்த அச்சுதானந்தன் அரசின் விளக்கம் என்ன?
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவதோடு, பிரபலமான மென்பொருள்கள் குறித்தான exposure பள்ளிகளில் கொடுக்கவேண்டும். மைக்ரோசாஃப்ட் நாம் வெறுத்தாலும் விருப்பப்பட்டலும் சரி, உலகளவில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதனைப் படிப்பிக்க மறுப்பது வர்த்தக ரீதியில் ஒரு competitive disadvantage நிலையை கேரளாவில் ஏற்படுத்தும்.
லாபி என்பது மைக்ரோசாஃப்ட்டுக்கு மட்டுமல்ல, லினக்ஸூக்கும் உண்டு! லினக்ஸ் ஆதரளவாளர்கள் பாராட்டியதில் நான் ஆச்சரியப்படவில்லை.

IT Parks & பள்ளிக்கல்வி:
IT Parkகள் அந்தந்த பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கின்றன. ஆனால், IT Park கள் வியாபார ரீதியில் செயல்படவேண்டியவை. இதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமல்ல. வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் தங்களுக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட்க்ளின் தேவைகளை ஆராய்ந்து வல்லுநர்களை எடுப்பர். இதில் எத்தனை ப்ரோஜெக்ட்கள் பிரபலமான மென்பொருட்களை ( மைக்ரோசாஃப்ட்/ ஆராகிள்/ ஐ.பி.எம்) சார்ந்து இருக்கின்றன ? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அச்சுதானந்தன் அரசு கணித்துள்ளதா? எந்த அளவில் இது வருங்கால லினக்ஸ் மட்டும் கற்ற கேரள மாணவ /மாணவியருக்கு வேலை வாய்ப்பிற்கு அனுகூலமாக இருக்கும் - என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றனவா? முக்கியமாக , அங்கு முதலீடு செய்ய முன்வரும் தொழில் வல்லுநர்கள், கம்பெனிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா?

கொச்சி இன்னும் பெங்களூர்/ஹைதராபாத்/ சென்னை போல hot location இல்லை. அதன் வியாபார uniqueness இப்போது என்ன? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் அதிகம் வந்திருக்குமானால், பெங்களூர், ஹைதராபாத் எப்பவோ அதில் குதித்திருக்கும்.

லினக்ஸ் பயன்படுத்துவது வளர்ந்துவருகிறது. மறுக்கவில்லை. மேலே குறித்த கேள்விகளுக்கு பதில் அது வளரும் வேகமென்ன, எந்த அளவில் வல்லுநர்களின் தேவை இருக்கும் என்னும் ஆய்வில் இருக்கிறது. இந்த ஆய்வுகள் நடத்தினார்களா/ என்ன முடிவு என்பது வெளிவராத நிலையில் , கேரள அரசின் போக்கினை ஒரு அரசியல் சார்ந்த முடிவாகவே எண்ண வாய்ப்பு இருக்கிறது.
பெப்ஸி/ கோக் பூச்சிக்கொல்லி விவகாரம் அமெரிக்க முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை நானும் ஒத்துக்கொள்ளவில்லை! ஆனால் இங்கு நிலை வேறு. எனது வாடிக்கையாளர்களுக்கு லினக்ஸ் வேண்டுமானால் நான் அதில் மகிழ்ச்சியாகச் செய்யலாம். அவருக்கு மைக்ரோசாஃப்டின் மென்பொருள் அடிப்படையில் வேண்டுமானால் நான் செய்ய முடியாவிட்டால் வேறொருவன் செய்துபோவான். எது தேவையென நான் முடிவு செய்யவேண்டும். அரசு என் கையைக் கட்டிப்போட உரிமையில்லை.

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரள மார்க்சிஸ அரசு, பள்ளிகளில் மைக்ரோஸாஃப்ட் மென்பொருள்களை அகற்றி இலவச லினக்ஸ் மென்பொருளை உபயோகிக்கும் படி ஆணையிட்டிருக்கிறது.

ஓப்பன் சோர்ஸ்கோட் ( open sourcecode software) லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது வரவேற்கப்படவேண்டியதுதான்.. ஆனால் இதன் அரசியல் பின்னணிதான் உதைக்கிறது.

மைக்ரோசாஃப் மென்பொருள்களை அரசு உபயோகிப்பதை தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடுமையாக எதிர்த்தவர் அச்சுதானந்தன். இப்போது லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது மைக்ரோசாஃப்டை துரத்தத்தானே என்பது "கடைஞ்செடுத்த அரசியல். என்னல கேணத்தனமா கேக்க?" என ஐந்து வயது பயல் கூடக் கேட்டுவிடுவான். எதில்தான் அரசியல் கொண்டு விளையாடுவது என்பது இல்லை. ஏற்கெனவே கேரளா மென்பொருள் உற்பத்தியில் அப்படியொன்றும் பேர் எடுத்துவிடவில்லை. இப்போதுதான் கொஞ்சமாக கொச்சியில் காக்கநாடு பகுதியில் I.T Park வர ஆரம்பித்திருக்கிறது.

முதலில் கோக், பெப்சி, இப்போது மைக்ரோசாஃப்ட் . சும்மாவே வெத்து வாயை மெல்லும் கேரள இடது சாரி அரசுக்கு பொரி கிடைச்சது போல... "இந்தியாவின் லினக்ஸ் மென்பொருள் திறம் கொண்ட மையமாக கேரளாவை உருவாக்குவதே என் லட்சியம்" என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது..:)

லினக்ஸ் வளர்ந்து வருவது உண்மை. ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு அரசு IT park வரும்படி பற்றி சற்று யோசிக்கவேண்டும். இந்த டெக்னாலாஜி சண்டையெல்லாம் வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அரசியல் வாதிகள் திறப்பு விழாவில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி, மாலை வாங்கிக்கொண்டு அம்பாசிடர் காரில் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. டெக்னாலஜி பத்தி அரசியல்வாதிகள் அதிகம் பேசுவது ஆபத்து..


சேட்டம்மாரே.. ஜமாயுங்கள்.