Monday, April 17, 2006

அமிழ்து அமிழ்து ... தமிழ்.

தூத்துக்குடி தெய்வங்கள் பதிவில் விட்டுப்போன தெய்வங்கள் பலருண்டு. வாழ்க்கையை சீர்படுத்திய தெய்வங்களைப் பற்றி மட்டுமே அங்கு பதிந்திருந்தேன். வாழ்வின் பன் முகப்பு குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்திய சிலர் குறித்து எழுதலாமென இருக்கிறேன்.

பள்ளிச்சிறுவனாயிருந்தபோது தமிழ் இலக்கியமென்றாலே அப்படியொரு வெறுப்பு இருந்தது எனக்கு . திக்குவாய் ஒரு காரணம். இரண்டாவது , செய்யுள்கள் படித்தால் எளிதில் புரியாது. இந்த லட்சணத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் இரண்டு வினாத்தாள்கள்...
ஒன்பதாம் வகுப்பு, ரீசஸ் பீரியடில் சில நண்பர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தேன். 'இந்த தமிழ் அறுக்குதுல. இதப் படிச்சு என்ன சாதிக்கப்போறம்..சொல்லு பாப்பம்." நான் சொல்லிக்கொண்டிருந்ததை பின்னால் நின்றிருந்த தமிழைய்யா சலைஸ் சார் கேட்டுவிட்டார்.
சலைஸ் சார் என்றால் வெள்ளைக் கதர்/பருத்தி அரைக்கால்சட்டை, தும்பைப்பூ போல் வெளுத்த வேட்டி, வெற்றிலை போட்டு சிவந்த வாய் , கோபத்தில் சிவக்கும் கண்கள் என கலர்கலராய் நினைவு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் இரட்டைக்கோடு நோட்டில் தமிழ் எழுதிப் பழகச் சொன்னார். "தமிழ் எழுத்து சதுர வடிவத்துல இருக்கணும். தெரியுதா? வளைஞ்சி வளைஞ்சி இருந்தா அது மலையாளம்..முட்டாப்பயலுவளா'

"செத்தேன்" எனப் பயந்து கொண்டிருந்தபோது, " தமிழ் பிடிக்கலையா தம்பி?" என்ற மிருதுவான வார்த்தைகள் வினோதமாகமும், என்ன பெரிய அடி இருக்குதோ என்ற பயம் உண்டாக்குவதாகவும் இருந்தன.
"ஐயா, செய்யுள் வார்த்தையெல்லாம் கஷ்டமாயிருக்கு. இதுக்கு கத படிச்சுட்டுப் போயிரலாம்லா? இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்யுள் படிக்கணும்?" என்றேன்.
"நீ எந்த கிளாசு?"
"பத்து H " என்றேன்
" நாளைக்கு கோலியாத்து, தாவீது போர் பத்தி உன் வகுப்புல பாப்போம். அதுக்கப்புறம் ஏன் செய்யுள் படிக்கணும்னு சொல்லுதேன். என்னா? போ"
மதிய இடைவேளையில் டிபன்பாக்ஸ் கழுவிக்கொண்டிருக்கும்போது எனது சீனியர் (11ம் வகுப்பு) சண்முகத்திடம் காலையில் நடந்ததைச் சொன்னேன்.
" ஏல, அவருகிட்டயா இப்படிப் பேசின? கோவம் வந்தா பிச்சுருவாரு தெரியும்லா? அடிச்சாருன்னா டிராயர்லயே மோண்டுருவ. பாத்துல.." என அன்பாய் எச்சரித்தான்.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்பில் தயாராக அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரையும் எழுப்பி ஒரு செய்யுள் படிக்கச் சொன்னார். விளக்கமும் கொடுத்து வந்தார்.
எனக்கு அடுத்திருந்த ஜேம்ஸ்-இன் முறை வந்தது. எழுந்தான்.
"கோலியாத்தின் கோப மொழி" என்று தலைப்பில் தொடங்கினான். அவர் கண்களை மூடினார் " ம்.. மேல படி"
"நீயடா எதிர்நிற்பதோ? மதம்பொழி கரிமேல்
நாயடா வினைநடத்..." அவன் முடிக்கவில்லை..
பளீர் என ஜேம்ஸ் முதுகில் அடி விழுந்தது. "எய்யா." என அலறினான்.
"கோபமொழியால படிக்கே? செத்தவன் கூட உரக்கச் சொல்லுவான். கோப மொழின்னா கோபமாயிருக்கவேணாம்?மூதி" கோபத்தில் அவர் மூச்சு ஏறித்தாழ்ந்தது. வகுப்பு உறைந்தது. நான் முன்னயே சண்முகத்தால் எச்சரிக்கப்பட்டதால் ஆவென வாயைப் பொளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
"எல்லாவனும் புத்தகத்தை மூடுங்க. முன்னால என்னப் பாரு"
அத்தனை புத்தகங்களும் மூடும் சப்தம் மட்டும் கேட்டது. மயான அமைதி.
"நல்லா கவனிக்கணும். கோலியாத்து யாரு?பெரீய்ய்ய அரக்கன். பிலித்தியர்களோட பெரும் வீரன். அவன் கூட பெரிய பெரிய சேனைகள் கூடத் தோத்துப்போயிருச்சு. அவ்வளவு பெரிய்ய அரக்கன் முன்னால எலிக்குஞ்சு கணக்கா யாரு போய் நிக்கா?"
"தாவீது' உற்சாகக் குரல்கள் வகுப்பு முழுதும்
"இந்த எலிக்குஞ்சி போய் "சண்டைக்கு வரியால?"ன்னு கேட்டு நிக்கி. கோலியாத்துக்கு அவமானமுல்லா?"
"ஆமா சார்" கோரஸ்
"கோலியாத்துக்கு கோவமும், ஆத்திரமும் பொங்கிப் பொங்கி வருது. அவன் எப்படிப் பேசியிருப்பான்? "நீயடா எதிர் நிற்பதோ?" என்ன ஆவேசமா வந்திருக்கணும் வார்த்தை? என்னடே?"
"ஆமா சார்" மீண்டும் கோரஸ்
"இந்தப்பய செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி புஸ்தகத்த எடுத்துகிட்டு எந்திச்சி நிக்கான். அப்பவே நினைச்சேன். பிறவு, நம்ம பெரியகோயில் சர்ச்சுல சங்கீதம் பாடறமாதிரி மெல்லமா இனிமையா நீட்டிப் பாடுதான்.. "நீயடா எதிர்நிற்பதோ?"ன்னு"....
"உக்காரு" என்றார் ஜேம்ஸை.
"தாவீது கோலியாத்து கதை உங்க எல்லாருக்கும் தெரியும். ஏன் செய்யுள்ல படிக்கணும்? ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்வு, உயிர் இருக்கும். அது உணரணும்னா, முங்கி முங்கி முத்தெடுக்கற மாதிரிப் படிக்கணும். தமிழ் இலக்கியம் ஒரு கடல் மாதிரி. முத்து எடுக்கணும்னா மூச்சுத்திணறி முங்கினாத்தான் முடியும்.வெளங்குதா?
நான் திறந்த வாய் மூடவில்லை.
அடுத்தநாள் சலைஸ் சார் வகுப்புத் தாழ்வாரத்தில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். " என்னடே? செய்யுள் ஏன் படிக்கணும்னு வெளங்குதா?"
பீதியுடன் தலையாட்டினேன்.
"என்னமோ நான் சொல்லறது ஞாபகமிருந்தா சரி" வேட்டியின் ஒரு மூலையைக் கையால் சிறிது தூக்கிப்பிடித்தபடி அவர் சென்றுவிட்டார்.
கோலியாத்தின் கோப மொழியும், ஒரு தெய்வ மொழியும் என் மனதில் இன்றும் இருக்கின்றன.

Sunday, April 16, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் ( முடிவு)

திடீரென ஒருநாள் பிரதாப் சிங் சார் "என்.ஸி.ஸி தினத்திற்கு நாடகத்துல நடிக்கிறியா?" என்று கேட்டார். அதன் முன் நடித்திராத தயக்கம் இருந்தாலும், சரி என்றேன். '84ல் தூத்துக்குடியில் கல்லுரி அளவில் எதோவொரு அமைப்பின் சார்பில் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திக்கொடுத்தனர்.அதிலும் நாடகத்தில் பங்கேற்க பேர் கொடுக்கப்போனேன்.
என் நண்பர்கள் எச்சரித்தனர். " வேணாம்ல. எதாச்சும் ஒரு ஃபீல்ட்ல இரு. நாடகம் எல்லாம் உனக்கு ஒத்துவராது. திக்குவாய் வந்துச்சி.. ... மவனே , மக்கள் உன்னை ஸ்டேஜ்-ல கல்லெறிஞ்சே கொன்னுருவாங்க"
பயப்பட்ட , பயப்படுத்திய விஷயங்களை தைரியமாக செய்யத் தூண்டிய பிரதாப் சிங் சார் அவர்களை நினைத்துக்கொண்டே என் பெயரைச் சேர்த்துவிட்டு வந்தேன்.
நண்பன் கிருஷ்ணன் கேட்டான் " நீ நடிக்கியா?வெளங்கினமாதிரித்தான்.. ஒழுங்கா தமிழ் வருமால உனக்கு?"
சைக்கிளை மிதித்தவாறே சொன்னேன் " தமிழ் நாடகம் இல்லடே. இது ஆங்கில ஓரங்க நாடகம்."

அவன் உறைந்து போனான். 'தமிழே உருப்படியா வராது.. இதுல இங்கிலீஷ்ல வேற..' போட்டி நடந்த நாளில் அவன் வரவேயில்லை. அழுகிய முட்டைகளும், கூவல்களும் கொண்டு கல்லூரியின் மானத்தை இவன் புடுங்கப்போகிறான் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு. அதில் பரிசு பெறாவிட்டாலும் பாராட்டுகள் கிடைத்தன. ஒரு மாதத்தில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி நடத்திய FEMER (84 அல்லது 85 ..சரியாக நினைவில்லை) விழாவில் ஓரங்க நாடகத்திற்கான முதல்பரிசு அந்த நாடகத்திற்குக் கிடைத்தது.

முன்பு எங்கோ படித்திருந்த ஒரு கதையை( Spaniard and Red Indian) ஒரங்க நாடகமாக்கியிருந்தேன் மற்ற ஒரு நாடகம் ஆப்பிரிக்க விடுதலைக் கவி பெஞ்சமின் மொலா குறித்தது. இந்த நாடகப் பயிற்சியின் விளைவாக எனது உச்சரிப்பு சரியானது. பிழைகள் குறைந்தன. பின்னாளில் கொச்சி பல்கலைக்கழகத்திலும் இந்நாடகம் முதல்பரிசு வாங்கித்தந்தது. இதன் காரணமாகவே தன்னம்பிக்கை பலமடங்காக உயர்ந்தது.

எனது நிழல் எதிரிகளை அடையாளம் காணவும் அவற்றோடு போராடவும் கற்றுத் தந்த இத்தெய்வங்கள் இல்லாதிருந்தால் இன்னும் தாழ்வு மனப்பான்மையில் அழுந்தி எங்காவது கிடந்திருப்பேன். ஆண்டவன் இத்தெய்வங்களுக்கு நலமும் நீண்ட ஆயுளும் அளிக்கட்டும். மாணவர்களுக்கு வருங்காலத்திலும் இதுபோன்ற தெய்வங்கள் அமையட்டும் என்ற வேண்டுதல்களுடன்.
க.சுதாகர்.

தூத்துக்குடி தெய்வங்கள் 3 (1)

அடுத்தநாள் ஆங்கிலத் துறையில் திரு.சங்கரன் சார் அவர்களிடம் சென்று பொதுஅறிவுப்போட்டிக் குழுவில் எனது பெயரையும் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தேன். அடுத்ததாக தமிழ்த்துறையில் ஜெகதீசன் அய்யாவிடம் கவிதைப்போட்டிக்குப் பெயர் கொடுத்தேன். தமிழ் பேச்சுப்போட்டி, ஆங்கிலப் பேச்சுப்போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டி , ஆங்கிலக் கட்டுரைப்போட்டியென சகட்டுமேனிக்கு பெயர்கொடுத்துவிட்டு ஒரு வெறியில் வெளிவந்தேன்.

ஆங்கிலப் புத்தகங்களில்தான் தடுமாறினேன். சில பெயர்கள் தவிர எனக்கு ஆங்கில அறிஞர்கள் பெயர்கூடத் தெரியாது. சங்கரன் சார் அவர்களை அணுகினேன்.

ஆங்கில இலக்கியம் .... அதுவரை பாடம் மட்டும்தான். சங்கரன் சார் அறிவுரைப்படி ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முனைந்தேன். மீண்டும் குட்டியும் நானும் ஜோடி சேர்ந்தோம்.

ஹார்பர் பொது நூலகத்தில் எங்களுக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. பள்ளியின், நீண்ட விடுமுறைகளில் காலையிலேயே போய் , அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளில் வரும் ஜோக்குகளுக்கு கெக்கே பிக்கேவென நூலகத்தில் சிரித்து "ஷ்..சத்தம்போடாதீங்கடா.. சவத்து மூதிகளா"என பேப்பர் படிக்க வரும் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருந்தோம். பின்னும் எதாவது ஜோக் படித்து சிரித்து " ஏலா, சும்மா இருக்க முடியாது? வந்தேன்னா பின்னிருவேன். தெரியும்லா?" என உள்ளிருந்து நூலகரிடமும் வசவு வாங்கிய பின்னரே அங்கிருந்து போவோம்.

எனவே, நாங்கள் போய் ஆங்கிலப் புத்தகங்களைப் எடுக்கப்போனபோது அவர் நம்பவில்லை.

"இங்கிலீஷ் புத்தகம் படிக்கற மூஞ்சிகளப் பாரு" என்ற வாசகத்தை அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தார். King Arthur and Knights, Don Quixote போன்ற அடிப்படைநிலைக் கதைகள் இருந்தன. அது தாண்டினால் Early churches of Erstwhile Travancore Province' என சுத்தமாகப் புரியாத ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருந்தன.

சங்கரன் சார் சிபாரிசு செய்த புத்தகங்கள் ஸ்பிக் நகர் ஜிம்கானா லைப்ரரில இருக்கும் என்றான் குட்டி.
எங்கள் குவார்டர்ஸிலிருந்து ஸ்பிக் நகர் குடியிருப்பு 7 கிமீ இருக்கும். கடற்கரை எதிர்காற்றில் சைக்கிள் மிதித்துப் போய் ஒரு புத்தகம் எடுத்து வருவோம். புத்தகங்களைத் தேடும்போது,கையில் கிடைத்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் விவகாரமாக இருக்கவே, அதனை குட்டி என்னிடம் மறைமுகமாகக் காட்டினான்.

"பாத்தியால? சரோஜாதேவி புக் எல்லாம் வைச்சிருக்காங்க"

அது James Hadley Chase என்பது பின்னரே விளங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஆங்கிலப் புத்தக உலகு அறிமுகப்பட்டது. ஒரு பெரும் உலகின் வாயிற்கதவுகள் எனக்குத் திறந்ததென உணர்ந்தேன்.

ஒரு வெறியுடன் படித்துவந்ததில், சுவாரசியமும் கூடவே, ஆசிரியர்களிடம் தைரியமாக ஆலோசனை கேட்கும் பக்குவமும், புத்தகங்களை விவாதிக்கும் மனதிடமும் வந்தது. ஆசிரியர்கள் 'இதைப்படித்துப் பாரு' என அறிவுறுத்த, பல புத்தகங்கள் அறிமுகமாயின. பல பொதுஅறிவு, கவிதை,பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் தலைகுப்புற வீழ்ந்தாலும், பலவற்றில் வெற்றியும் கிடைத்தது. ( இதைக்கொண்டாட ஸ்ட்ரைக் செய்யவில்லை என்ற வருத்தம் இல்லாமலில்லை!)

Saturday, April 15, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 3

அக்காலத்தில் எல்லா மாணவர்களைப்போலவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒரே குறிக்கோள் எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதுதான். மிகவும் முயன்றேன். எனது முயற்சிகள் பலமாகத் தெரிந்த அளவு முடிவுகள் வரவில்லை. 84% மட்டுமே MPC -இல் எடுத்திருந்தேன். நம்பமுடியாத அதிர்ச்சியில் மிகவும் சோர்ந்து போன நாட்கள் அவை.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரிக்குப் போகவே மனமில்லாமல் போய்வந்தேன். எதிர்காலமே இல்லை இனி என முடிவானது. "டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட்,வங்கிப் பரீட்சை எழுது." என அறிவுறுத்தல்களுக்கு சோர்வோடு உடன்பட்டேன்.
வ.உ.சி கல்லூரி நான் சேர்ந்த காலத்தில் அதன் பேர் கெட்டிருந்தது. ஸ்ட்ரைக், கல்வீச்சு, காலவரையற்ற மூடுதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கல்லூரியின் பழம்புகழ், ஆசிரியர்களது சிறப்பு கொண்டு மட்டுமே அங்கு அட்மிஷன் வந்தது.

எனக்குப் பேச்சு தெளிவுற்றிருந்தது, ஆங்கிலம் ஓரளவு பேசவும் தெரிந்தது என்றாலும் எஞ்சினீயரிங் கிடைக்கததால் தளர்ந்திருந்ததாலும், பயம் காரணமாகவும் ஆரம்பத்தில் தனித்தே இருந்தேன். 'என்னமோ படிச்சோம், வெளியே போனோம் என்றிருப்போம்' என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

முதல்நாள் தமிழ் வகுப்பிற்கு டாக்டர்.பிரதாப் சிங் வந்தார். அவர் வந்த இருபது நிமிடங்களில் ஒரு மாணவர் கூட்டம் வகுப்பில் வந்து " காண்டீன்ல வடை இல்லையென்கிறார்கள். கேட்டால் அலட்சியமாகப் பதில்வருது. இதைக்கண்டித்து இன்று ஸ்ட்ட்ரைக்" என அறிவித்துப் போனது. 'பத்து நிமிடத்தில் வகுப்பு கலையவேண்டும்' என்ற எச்சரிக்கையுடன்..

டாக்டர். பிரதாப் சிங் எதைத்தான் படிக்கவில்லை எனத்தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம் , பொருளாதாரம், வரலாறு இவற்றில் முதுகலை, ஹோமியோபதி , தமிழில் முனைவர் பட்டம் இத்தோடு என்.சி.சி யில் கடற்படை பிரிவின் தலைவர் (naval wing I). அவரது பட்டங்களின் எண்ணிக்கையில் கவரப்பட்டு அவருடன் வகுப்பு கலைந்தபின்னும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது என்.சி.சியில் சேரவேண்டுவோர் பேர் கொடுக்கும்படி அறிவிப்பை பியூன் கொண்டுவந்தார். அது பிரதாப் சிங் அவர்களின் யூனிட்-காகவே இருந்தது. பூரி செட்டு தின்னக்கிடைக்கும் என்ற அல்ப ஆசையில் நானும் பெயர் கொடுத்தேன். பி.எஸ்.சி இயற்பியல், கணிதம் படித்தவர்களுக்கு என்.சி.சி C சான்றிதழ் கிடைத்தால் இராணுவத்தில் சேர எளிது என்று கேள்விப்பட்டதால், அங்கயாவது வேலை கிடைக்குமே என்ற நம்பிக்கை வேறு.

முதல்நாள் சீரணிவகுப்பில் பிரதாப்சிங் உரையாற்றினார். நான்குவருடம் முன்பு அவர் பூனாவில் ஒரு மலையேறும் குழுவில் இருந்ததைச் சொன்னார். அசந்துபோனேன். இந்த வயதில் மலையேறுவதா? நானாகவே அவரிடம் சீரணிவகுப்பு முடிந்ததும் சென்று பேச்சுக்கொடுத்தேன்.
"என்ன செய்யலாம் சார்? ஒண்ணுமே பிடிக்கலை. தோத்துட்டேன்-னு தோணுது" நான் கேட்க நினைத்தது வேலை கிடைக்க என்ன படிக்கலாம் என்ன செய்யலாம் என்றுதான். அவர் சொன்னது ஏமாற்றமாக இருந்தது.
" நீ எந்தப் போர்-ல ஈடுபட்டதா நினைச்சு ' தோத்துட்டேன்'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுத? "
எனக்கு கோபம் வந்தது. நான் முயற்சிக்கலை என்றா சொல்கிறார்?
" இல்லடே. எல்லாருக்கும் உழைக்கும் விதம் ஒண்ணுகிடையாது. உனக்கு இன்னும் மேலே முயற்சி தேவைப்பட்டிருக்கு. ஏன் இப்படி ஓரே இஞ்சினீயரிங்ல முட்டி மோதுத? உன்னோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்க. அதுல வளத்துக்க"
"பலம் என்னன்னு தெரிஞ்சாத்தானே சார் வளத்துக்க முடியும்?"
"உன் பலவீனம் தெரியணும்டே அதுக்கு"
நான் பொறுமையிழந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீ பயப்படுற விஷயம் என்ன?"
பயப்படுற விஷயம்னா? சற்று யோசித்தேன் " மேடைல பேசப் பயம் உண்டு சார்"
"சரி. ஒழுங்கா கட்டுரை மாதிரி எழுதத்தெரியுமா?"
தயக்கத்தோடு "இல்லை" என்றேன்.
"நீ எதச் செய்யப் பயப்படுறயோ, அதை முதல்ல கண்டுபிடி. அதை தைரியமா செய்யப் பாரு. உன் பயமெல்லாம் தேவையில்லாததுன்னு தெரியும்"
"தோத்துட்டேன்னா?"
"தோத்துப்போனா என்ன? நீ பயந்ததுதானே? அதுனாலதான் தோத்தேன்னு நினைச்சுக்க. விழுந்தா திரும்பி திரும்பி எழுந்திக்கணும். மத்தவங்களுக்காகப் பயப்படாதே.அவனா உன் வாழ்க்கைய வாழப்போறான்?"
"நானும் போராடித்தான் பாக்கிறேன் சார். ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது"
"போராடுறேன்னு ரொம்ப ஈஸியாச் சொல்லறே. போராடறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? தடுப்பு முயற்சிகள் போர் ஆகாது. எப்ப போராடறதுன்னு முடிவு பண்ணிட்டியோ, அதுக்கப்புறம் அது பத்தி மறு பரிசீலனைன்னு நினைக்கவே கூடாது. உன்னோட போரை நீ தான் தீர்மானிக்கணும். நீதான் போராடணும். வெளங்குதா?"
எழுந்து போகுமுன் அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.
" இந்த மூணு வார்த்தைகளை எப்பவும் ஞாபகம் வச்சுக்க. கடற்படையில் சொல்லுவாங்க. HIT FIRST. HIT HARD. KEEP HITTING TILL HE ( enemy) FALLS-ன்னு. எது கூட போரிடப்போற?-ன்னு தெளிவாக முடிவெடு. அதுக்கப்புறம் நீ தாக்குதல்தான் நடத்தணும். போர் என்பது வந்துவிட்டால் Defensiveஆகப் போகக்கூடாது.போர்க்களத்துல புண்களை நக்குறதற்கும்,அழறதுக்கும் நேரம் கிடையாது."
எழுந்தேன். என்னமோ இந்த வார்த்தைகள் ஆழப்பதிந்தன.
வீட்டுக்கு நேரே வராமல் கடற்கரைக்குப் போனேன். ஈர மணலில் நான் என்ன செய்யப் பயப்படுகிறேன் என்பதை எழுதினேன். அலைகளில் அக்கோடுகள் ஈரமணலால் நிரம்பி அழிவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

தொடரும்

தூத்துக்குடி தெய்வங்கள்-2 (2)

சைக்கிள் மிதித்ததால் மூச்சு இழைக்க,குட்டியின் ஏமாற்றம் எரிச்சலாக வெளிப்பட்டது.

'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா?" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்

ஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.
அதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....

அந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.

' ஆமால" என்றான் கொஞ்சம் சிந்தித்து.

"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய?" என்றான் கவலையோடு.

கடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.

"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்"
உடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.

பேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.

முதல் கேள்வி 'என்ன பேசுவது?'

இரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது?' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது!

'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.

குட்டிதான் முதலில் ." நான் ஆரம்பிக்கேன்" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.
"என்னலே?" என்றேன்
" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா." என்றான் அழமாட்டாக்குறையாய்.
எதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.
'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா?" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.
நன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.
'This is my prayer to thee my Lord" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.

"Strike strike at the root of penury in my heart" என்றான் குட்டி.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது?' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.

Friday, April 14, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)

தூத்துக்குடி போன்ற சிறுநகரங்களின் பெரிய சாபக்கேடு 'போலித்தனம்" எனலாம். படித்தவர்கள் என ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்குள்ளேயே பேச்சுக்கள்,புத்தகப் பரிமாற்றங்கள்,கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். கிராமங்களிலிருந்து வந்தவர்கள் அதனோடு இணைய முடியாமல், புரிந்துகொள்ள இயலாமல் திணறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இத்திணறல்கள், குமுறல்கள், எதிர்குரலாக எந்த வளர்முயற்சிக்கும் எதிர்ப்ப்பாக, கிண்டலாகவும் மட்டம்தட்டும் வேலைகளாகவும் வெளிப்படும்.
பள்ளிகள் 'சிறிய உலகம்' என்பதால் இத்தகைய இடையூறுகள் சகஜம்.

'சார் படிக்கச் சொன்னாரே' என ஒரு மூலையில் உட்கார்ந்து அக்கறையாகப்படிக்கத் தொடங்கும் பையனை,சக மாணவர்கள், " பாருலே மக்கா, இவன் படிக்கத் துவங்கிட்டான். ஸ்டேட் பர்ஸ்ட்தான்..இல்லடே?" என கிண்டலடித்துத் தொடங்கி, அவன் வரும்போதெல்லாம் " எய்யா.. படிப்பாளி வர்ரான்டே, இடம் விட்டு நில்லுங்கலே" எனத் தொடர்ந்து, அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தால்.'என்னடே, புஸ்தகத்துலேயே முங்கிக்கிடந்த?மார்க்கெல்லாம் சாரு தொலைச்சுட்டாராங்கும்?" என புண்ணாக அடித்து அவன் வெறுத்து விடும்வரை நீளும். இது விளையாட்டுகளுக்கும், பாடம் சேரா போட்டிகளுக்கும் பொருந்தும். தானும் வளராமல், அடுத்தவனையும் வளரவிடாமல் இருக்கும் 'பரந்த மனப்பான்மை' சிறுநகரங்களின் பெரும் சாபக்கேடு. இதற்கு தூத்துக்குடி விதிவிலக்கல்ல.

இந்த லட்சணத்தில் ஆங்கிலத்தில் பேசப்போனால், கல்லெறியே விழும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். ஒரு நண்பன், ரஷ்ய -தமிழாக்கப் புத்தகங்களைப் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ன் மலிவு விலைப்புத்தகங்கள் தங்குதடையின்றி கிடைத்த நேரம் அது) படித்துவிட்டு, கம்யூனிசம் பற்றி தான் அறிந்ததை ஒரு படபடப்பில் என் நண்பர் குழுவில் சொல்லிவிட, அவனை " யோல, நீ பெரிய கம்யூனிஸ்ட்டுல்லா?" எனக் கிண்டலடித்து அவன் பேரையே ரஷ்யத்தனமாக அய்யாகுட்டியோவ் ( எதனோடும் யோவ், இஸ்கி சேர்த்தால் ரஷ்யப்பெயர்!) என மாற்றி வைத்து, அவனைக்கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கியது எனக்கு நல்ல நினைவிருந்தது. 'பட்ட அறிவினால்', பொதுவில் ஆங்கிலத்தில் பேசப் பயந்தேன்.

சிகாமணி சாரிடம் மீண்டும் சென்றேன் " ·பாதர் , ஒருத்தனும் இங்கிலீஷ்ல பேசமாட்டேங்கான் "
புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தவர், புன்னகைத்தார் " உன்னை மாதிரி நிறையப் பேர் மனசுக்குள்ளேயே பயந்துகொண்டிருக்கிறான். உன் நெருங்கிய நண்பன் ஒருத்தன்கிட்ட தனியே பேசிப்பாரு, தெரியும்" விடமாட்டார் எனப் புரிந்தது. மீண்டும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.

'யாரிடம் கேட்கலாம்?' என யோசித்துக்கொண்டிருக்கையில்,குட்டி நினைவுக்கு வந்தான். குட்டி என்பது அவன் பட்டப்பெயர். பேருக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆஜானுபாகுவாக அப்பவே 5 அடி இருப்பான். இயற்பெயர் சுந்தரராஜனான அவன் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரன். . கால்டுவெல் பள்ளியில் படித்துவந்த,மிக நெருங்கிய தோழன்.( இவன் பெயரையே எனது கதைகளிலும் வைத்து குட்டியென்ற கற்பனைப்பாத்திரம் படைத்தேன். என் மனத்தின் உள்ளொலியாக)

"லே, குட்டி, ஒண்டியா உங்கிட்ட பேசணும்டே" என்றேன்
அவன் 'என்னமோ ரகசியம் போலிருக்கு' என்ற ஆவலோடு கடற்கரைக்கு வந்தான்.
விஷயத்தைச் சொன்னேன்.
'போல..மூதி. வேற வேலையில்ல உனக்கு. இதுக்குத்தான் வரச்சொன்னியாங்கும்? உன்னை வைச்சு சைக்கிள்ள மிதிச்சு வந்தேன் பாரு..அதுவும் எதிர்காத்து"

தொடரும்..

Thursday, April 13, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் -2

தெய்வம் -2 ஆங்கிலத்தில் பேசு

பத்தாவது வகுப்பு வரை நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஆங்கில மீடியம் என்றால் பணம் கட்டவேண்டும்
ஆங்கிலம் ஒரு பாடமாகவே இருந்ததே தவிர, தொடர்புகொள்ளும் ஊடகம் என நான் கருதவில்லை. படித்தால் புரி
யும். சரளமாகப் பேச, எழுதத் தெரியாது. இது ஒரு பெரிய குறையாக அன்று நான் நினைக்கவில்லை.
பதினோராம் வகுப்பில் சேர்ந்தது ஆங்கில மீடியத்தில். புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை. படித்ததைச் சொல்லத்தான் தெரியவில்லை.
ஒரு நாள் இயற்பியல் வகுப்பில் " what is the phenomenon of surface tension?" ஆசிரியர் கேட்டதற்கு விழித்தேன்.
surface tension தெரியும்... phenomenon என்றால் யார்? என்ற கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தேன்.
ஆசிரியர் பொறுமையிழந்தார் , " Don't you understand ?"
"ஆமாம்" என தலையாட்டினேன்
"என்ன ஆமா? இங்கிலீஷ்லதான கேக்கிறேன்? இது கூடப் புரியலைன்னா என்ன படிச்சே இத்தனை வருசமா?"
எனது வகுப்பில் ஆங்கில மீடியத்திலேயே படித்து வந்த பையன்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு இது புதிது போலும்.. வியப்பாக என்னைப் பார்த்தார்கள்.
எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. பேசாம தமிழ் மீடியத்திலேயே போய்ச் சேர்ந்துரலாம் என முடிவு செய்தேன்.
"Get out of the class" ஆசிரியர் அன்பாகப் பணித்தார். எங்கள் பள்ளி வழக்கப்படி வகுப்பை விட்டு வெளியேறினாலும், கதவு பக்கமே நிற்கவேண்டும் ஒரு ஓரமாக.

முதல்முறையாக வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன். கதவருகில் நின்றுகொண்டேன்.
"Outstanding student" என்றார் ஆசிரியர். அர்த்தம் புரிந்த பையன்கள் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை.
எதோ என்னைக்குறித்தான கேலி என்பது மட்டும் தெரிந்தது. உள்ளுக்குள் கொதித்தாலும் சொல்ல முடியாத நிலை.
பியூன் வந்து அழைத்தார்.
" அசிஸ்டெண்ட் ஃபாதர் கூப்புடறாரு. போ"
தந்தை சிகாமணி ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். எங்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.
"என்ன வகுப்புக்கு வெளியே நிக்கிற?"
சொன்னேன்.
" ஃபாதர், நான் தமிழ் மீடியத்துக்கு போயிடறேன். இது கஷ்டமாயிருக்கு. புரியமாட்டேங்குது"
அவர் என்னை நேராக கண்ணில் ஊடுருவிப் பார்த்தார்.
" சரி. எதாவது கஷ்டமாயிருந்தா அதைவிட்டு ஓடிடணும்.அப்படித்தானே?"
மெளனமாய் நின்றேன்.
"நான் தமிழ்மீடியம் சார். எனக்கு இங்கிலீஷ் தெரியாது"
"எல்லாரும் பிறக்கும்போதே இங்கிலீஷ் தெரிஞ்சேவா வர்றோம்? நீ அத ஒரு பாடமா மட்டுமே பார்க்கிற. பேசற மொழியா நினைச்சு பயிற்சி பண்ணு.வந்துடும்."

"ஃபாதர். யார் கிட்ட பேசுவேன்?இங்கிலீஷ்ல பேசினா பசங்க சிரிப்பாங்க."

"அம்மணமா அலையறவங்க ஊர்ல , கோவணம் கட்டினவன் கோட்டிக்காரன்தான்" அவர் குரல் உயர்ந்தது.
" நீ அம்மணமா அலையணுமா, கோவணம் கட்டிகிட்டு வேட்டி கட்ட முயற்சிக்கணுமாங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்." .

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். அவரது மேசையின் மூலையில்
கைவிரல்களால் தன்னிச்சையாகக்கோடு போட்டவாறே.

"நானும் உனக்கு ஆங்கிலம் எடுத்திருக்கேன். எடுக்கிறேன். நீ இப்படி
கோழைத்தனமா விலகி ஓடினேன்னா, நான் உன்னை சரியா படிப்பிக்கலைன்னு
அர்த்தம்.வெளங்குதா?"என்றதோடு "நீ போகலாம்" என்று தலையசைத்தார்.

வெளியே வந்தேன். உச்சி வெயில் சுட்டெரித்தது.

இன்னும் வரும்

Tuesday, April 11, 2006

தூத்துக்குடி தெய்வங்கள்-1

தூத்துக்குடி தெய்வங்கள்-1

கடவுள்/மதம் குறித்தான பதிவு என நினைத்துவிடவேண்டாம். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பது பழமொ
ழி. இறைவன் ஒவ்வொரு ஆண்டும் புது அவதாரமெடுத்து எனக்கு அருளியிருக்கிறான். எனக்கு பலமுறை வாழ்வைப்
புதிதாக உண்டாக்கித்தந்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவுத் தொடர் இது. பலர் இருப்பினும், மிக மிக முக்கியமான
திருப்பங்களை என் வாழ்வில் உருவாக்கிய சிலரைப் பற்றி மட்டும் இங்கே பதிகிறேன்.

தெய்வம் -1 தி..தி..திக்கு வ்..வ்வா..ய்ய்
___________________________________________

மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா
வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை.
மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான
அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி
ட்டியது.

சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி
றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க
ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி
லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ
ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.

தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார்
ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர்
சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி
தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம்.
நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார
வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்).

Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார்.
வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும்.
"இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது.

" வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா
னது.

பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்"

மீண்டும் மயான அமைதி.

எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு...

வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார்.

" ஏல, கண்ணாடி.. எந்திரு."

எழுந்தேன். " நீ சொல்லு"

வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன..

"இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ
ய்ல் நின்றது

அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

" சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி
ப்பலை மோதியது.

கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?'

சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந
னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக..

"வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன்
கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட
சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது.

சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை
அவருடன் நடந்தேன்.

"நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?"

அவரது வார்த்தைகளில் விம்மினேன்.

"இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்."

" இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார்.

"எங்கேந்துடே வார?"

"ஹார்பர் குவார்டர்ஸ் சார்"

" கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை
உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க."

என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா"

கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார்

" திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு"

மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா?

யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம்
கத்திப் பேசத் தொடங்கினேன்.

நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி
சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது.

பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.

இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம
஡க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது.

இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை
வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன்.

இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல்.

"இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல.

தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”

Saturday, April 08, 2006

தவறிய உடைகளும் மனங்களும்

இரு நாட்களுக்கு முன் என் பையன் அவன் நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது , துரத்திய ஒரு சிறுவனின் டிராயர் நழுவிவிட்டது. ஒரு கையால் பிடித்துக்கொண்டே துரத்திய அவனைப் பார்த்து என் பையன் சொன்னான்."ஹே. உனக்கு வார்டுரோப் மால்ஃபங்க்ஷன்(wardrobe malfunction)." கூடியிருந்த பெரியவர்கள் சிரித்து விட்டு அவரவர் குழுவில் கதையடிக்கத் தொடங்கினர்.
எனக்கு ஒரு குறுகுறுப்பு... இந்தப் பதத்தை என்னவென இந்தச் சிறுவர்/சிறுமியர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என அறியும் ஆவல். காதைத் தீட்டிக்கொண்டு சிறுவர்கள் கூட்டமாக இருந்து பேசுவதைக் கவனிக்கலானேன்.
ஒரு சிறுமி சொல்கிறாள் " அன்னிக்கு நியூஸ்-ல காமிச்சாங்க. ஸ்டேஜ்ல ஒரு ஆண்ட்டிக்கு கவுண் பிஞ்சுபோச்சாம்... "
கெக்கே பிக்கேவென சிரிப்பலைகள்.
"ஷேம் ஷேம்.."
"சீய்ய்..." யோடு ஒரு குரல் கேட்டது
"அந்த ஆண்ட்டி ஏன் ஜட்டி போடாம போனாங்க? வேணும்.. எங்க டீச்சர் இருந்தா அடிச்சிருப்பாங்க"

குழந்தைகள் பேச்சை விடுங்கள். ஒரு விஷயம் சரியெனவே படுகிறது எனக்கும். அண்மையில் நடந்த ஃபாஷன் நிகழ்ச்சிகளில் மேடையில் திடீரென உடைகள் அவிழ்ந்து விழுவதும், கிழிந்து போவதுமாக நடந்த அசம்பாவிதங்களை FTV காட்டியிருந்தால் சரியென்று சொல்லலாம். Breaking News என்னுமளவில் முன்னிலை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பரபரப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் பார்க்கச் செய்ததை எப்படி பத்திரிகை ஒழுங்கு என்பது? இது ஒரு முக்கியச் செய்தியா? அது குறித்து விவாதங்கள் அலசல்கள்... போதும் போதுமென சலிப்படையச் செய்துவிட்டார்கள்.
இந்த செய்திச் சேனல்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் சேனல்கள் என்பதால் பெரும்பாலோர்க்கு அதிர்ச்சியாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. ஒன்பது வயதுப்பையன் wardrobe malfunction என்னும் வார்த்தை கற்று பயன்படுத்துகிறான் என்றால் எத்தனை முறை இந்த விஷ அலைகள் அவனைத் தாக்கியிருக்கக் கூடும்?
குழந்தைகள் வெளிப்படையாகக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சில ஆடைகளுக்கு உள்ளாடை அணியமுடியாது. தொலைகிறது. கவுண் போன்றவற்றிற்குமா? உள்ளாடைகள் அணிந்து வரக்கூடாது எனச் சட்டமிருக்கிறதா என்ன? இதனைப்பார்க்கும்போது இந்நிகழ்ச்சிகளின் அடியோடும் குறிக்கோள் என்ன என்பதிலேயே சந்தேகம் வருகிறது.

ஒழுங்கு என்பதும் நாகரீகம் என்பதும் நவீனம்/புரட்சி என்னும் வார்த்தைகளால் கேவலப்படுத்தப்படுவது சரியல்ல என நினைக்கிறேன். எது அழகுணர்வு எது அழகு எனக் காட்டப்படுகின்ற வக்கிரம் என்ற எல்லைக்கோட்டினை இவர்கள் கடந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. எங்கு பாலுணர்வு இருபால் தன்மைகளை கூசச்செய்து வெளிக்காட்டப்படுகிறதோ , அங்கு உரத்த குரலில் எதிர்ப்புகள் சொல்லப்படவேண்டும். மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமல்ல பார்வையாளர்கள்... தொலைக்காட்சிகளால் , அனைத்து தர மக்களின் வீட்டிலும் வழிகிறது இவ்விரசம்... அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அழகுணர்வு என்னும் கோணத்தில் பார்க்க முடியும் என நினைப்பது சாத்தியமில்லை.

இம்மாடல் பெண்கள் மட்டுமல்ல அவமானப்பட்டது... பெண்ணினமே ஒரு வக்கிரமான ஆணாதிக்க பாலுணர்வு மிகுந்த கும்பலால் காட்சிப்பொருளாக சிதைபட்டது என்பது நிதர்சனம். இதற்கு இந்நிகழ்ச்சி நடத்துபவர்களும்,அவற்றிற்கு அதிகமான விளம்பரம் அளித்த ஊடகங்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

மேடையில் தவறாகச் செயல்பட்டது உடைகளல்ல... உடல் காட்டி வியாபாரம் செய்ய நினைக்கும் மனங்கள்...
என்று தணியும் இச்"சுதந்திர" தாகம்?

Monday, April 03, 2006

வலையில் வக்கிரங்கள்.

சில நாட்களாக எனது மின்மடலில் வெறுப்பு உமிழும் மடல்கள் வருவது அதிகரித்திருக்கிறது. காரணம் பாரதி குறித்த பதிவு. என்ன எழுதுவது என்றெல்லாம் வரம்பு இல்லை போலும். டோ ண்டு அவர்களுக்கு 60ம் திருமண வாழ்த்துச் சொல்வது குற்றம் என ஒன்று... தேவுடா..

எப்படி ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டோ அதனைப் போலவே அதன் மாற்றுக் கருத்துக்கும் உரிமையுண்டு என்னும் சனநாயகப் போக்கு புதைக்கப்பட்டு தனிமனித வெறுப்புமடல்கள் நிரம்பி வழிவதைப்பார்க்கையில் நிஜமாகவே சந்தேகம்வருகிறது. " நாம் சமூக முதிர்வு பெற்றிருக்கிறோமா? குறைந்த பட்சம் அதனை நோக்கி வளரவாவது செய்கிறோமா?"

வலைப்பதிவுகளில் வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் அக்கருத்துகளைச் சார்ந்து இருப்பது பண்பு என்பது தவிர்க்கப்பட்டு வேண்டுமென்றே கருத்துகளுக்குப்பதிலாக காழ்ப்புணர்வு பரப்பபடுகிறது. பல வகையான பின்னூட்டங்கள் இதற்கு ஆதாரம். இது ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றத்தை அடியோடு ஒழிப்பதோடு நில்லாமல், மேலும் பிளவுகள் ஏற்படவும், தன் அடிமட்ட சிந்தனை சார்ந்த ஒரு கும்பலை வளர்வதையும் துரிதப்படுத்துகிறது.

வலைப்பதிவுகளை பின்னாளில் பார்த்துவளரும் ஒரு சமுதாயம் இந்த சீர்கேடலில் முழுகித் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனைக்கருதியாவது நம் நண்பர்கள் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.

இந்த வெறுப்பு மடல்கள் spamல் இடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு எனக்கு பிரச்சினையில்லை. பின்னாளில் மற்றொரு மடல் முகவரி/மற்றொரு தொடர் வெறுப்பு மடல்கள்...காலம் இப்படியே வலைக்குள் நகரும் போலும்.