Saturday, December 31, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson
தெளிவான சிந்தனைகளுக்காவும், செயலாற்றல்களுக்காகவும் பாராட்டப்பட்ட அனைவரும் , வாழ்வின் அனைத்து முகங்களிலும் தெளிவாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் மனிதர்கள். மனிதர்க்ளின் சிந்தனைகள் காலத்திலும் தளங்களிலும் மாறுபடுகின்றன. தளங்களும், நேரமும் மாறும் பயணங்கள், அனுபவங்களை சாத்தியமாக்குகின்றன. அனுபவங்கள் மனதில் தாக்கங்களை சாத்தியமாக்குகின்றன. சிந்தனைத் தாக்கங்கள் , முன்பு எடுத்திருந்த முடிவுகளை மாற்றவும்,வேறு முடிவுகளைக் கைக்கொள்ளவும் தைரியம் ஊட்டுகின்றன.

எர்னெஸ்ட்டோ குவாராவுக்கும் இதுதான் நடந்தது. தென் அமெரிக்கப்பயணத்தின் பின், மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார். 40 பேப்பர்களை ஒரே வருடத்தில் வெறியோடு எழுதி முடித்துவிட்டு டாக்டர் பட்டம்பெற்றவர் , வெனிசூவேலா சென்று, நண்பன் அல்பெர்ட்டோவுடன் தங்கியிருந்து பணம் சேர்த்து, ஐரோப்பா செல்ல, நண்பன் கலீக்காவுடன் திட்டமிடுகிறார். ஒரு உரையாடலில் கலிக்காவிடம், தான் இறுதியில் இந்தியா செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். அவர் இந்தியா வந்திருந்தால் அவரது கொள்கை நிலைப்பாடு மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

இப்படி மிகத் தெளிவாகத் தனது மருத்துவ வாழ்வை வெனிசுவேலாவில் தொடரத் தீர்மானித்தவர், பொலிவியா, பெரு வழியே ஈக்குவடார் சென்று அதன் கடற்கரை நகர் ஒன்றில், அடுத்த வேளைச் சோற்றுக்கே திணறிக்கொண்டு,பனாமா செல்லக் கப்பலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர் “குட்டமாலா நாட்டில் அரசாங்கத்தின் சுரண்டலுக்கு எதிரே போராளிகள் ஆயுதங்கள் தூக்குவது “குறித்துக் கூறிக்கொண்டிருக்க, அங்கேயே , அப்போதே தனது மருத்துவ வாழ்வுத் தீர்மானத்தை அம்போவெனக் கைவிடுகிறார். சில தீர்மானங்கள் கைவிடப்படுவது, அதிலும் பெரிய தீர்மானங்களை கைகளில் ஏந்துவதற்காகத்தான் போலும். இந்தப் பகுதி, எர்னெஸ்ட்டோவின் தெளிவற்ற, தடுமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பகுதியைக் காட்டினாலும், அதனினும் பெரிய ஆவல் அவர் மனத்தில் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாகத்தான் எனக்குப் படுகிறது. அது குட்டமாலாவாகட்டும்,இந்தியாவாகட்டும்..எங்கெல்லாம் சுரண்டலின் பிடியிலிருந்து தப்ப முயற்சிகள் நடக்கின்றனவோ, அடிமட்டத்திலிருக்கும் சமூகங்கள் முன்னேற அரசாங்க அமைப்புகள் தடையாயிருக்கின்றனவோ, அங்கு சென்று போராட அவரது அடிமனதில் வெறி கனன்றுகொண்டிருப்பதை அவருடன் இருந்தவர்கள் அப்போது உணரவில்லை.


கோஸ்ட்டோ ரிக்காவின் ஸான் ஓசேயில் நாடுகடத்தப்பட்டு மறைந்து வாழும் லத்தீன் அமெரிக்க தலைவர்களை சந்திக்கிறான் எர்னெஸ்ட்டோ. அதில் மார்க்ஸிஸத்தில் உறுதியாக இருப்பவர்களை மிகவும் மதிப்பதாகச் சொல்கிறான். அங்கிருந்து குட்டமாலா சென்று சேர்ந்தபின்னரே, எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளில் ஒரு தெளிவும் உறுதியும் பிறக்கிறது. இங்குதான் மருத்துவம் படித்து, தெளிவற்று ஊர் சுற்றும் அர்ஜெண்டின இளைஞன், மனித உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கும் போராளியாக, புரட்சிக்காரனாகப் பரிணாமிக்கிறான். எர்னெஸ்ட்டோ குவாரா டி லா ஸெர்னா, “செ’ குவாராவாக அழைக்கப்படுவதும், மாறுவதும் இங்குதான்.

கலங்கிய மனங்கள், தெளிவுற்று உறுதிபெற ஒரு உந்துதல் எங்கிருந்தோ கிடைப்பதை வரலாற்றில் பல இடங்களில் பார்க்கலாம். Zen and The Art of Motor Cycle Maintenance புத்தகத்தில் பிர்ஸிக் இவ்வாறு கூறுகிறார். “ ஆழ்ந்த சிந்தனைகளில் மனம், பெரும் செறிவை அடைந்த கரைசல்(super saturated solution) போன்றதாகிறது. அதில் கரைந்திருக்கும் உப்புக்கள் படிவமாகதற்கு சிறு சலனம் தேவைப்படுகிறது. மிக மெல்லிய தீண்டல்..வேண்டாம்.. வீச்சு மிக்க ஒரு ஒலி போதும் அதற்கு. " இந்த உந்துதலை ஒரு “தெய்வீகக் காட்சி(Divine Vision)”யாகவோ அல்லது வேறுதளத்தில் உணரப்படுகிற ஒரு அனுபவமாகவோ பல தலைவர்களின் வாழ்க்கையில் வரலாறு ஆவணப்படுத்துகிறது. அன்னை தெரசாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்யும்போது கிடைத்த “தெய்வீக காட்சி அனுபவம்” அவரை தொண்டு செய்வதில் உறுதி கொள்ளச் செய்தது போல.

எர்னெஸ்ட்டோ, இதுபோன்ற ஒரு விவரிக்க முடியாத ஆழ்ந்த உணர்வை குட்டமாலாவில் அனுபவிக்கிறான். பின்னாளைய பயணக்குறிப்பினில், காகிதத்தின் மார்ஜின் பகுதியில் இந்த அனுபவத்தை எழுதிச் செல்கிறான். Notes On the Margin (NOM) நோம் என்று மிகவும் கொண்டாடப்படுகிற இந்த குறிப்பு, அளவில் குறுக்கப்பட்டு இப்புத்தகத்தில் இரு பத்திகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அருமையான பொருள் செறிந்த வரிகள் இவை. மொழிபெயர்க்கப்பட்டு, குறுக்கப்பட்டதே இத்தனை உயிர்ப்புடனும், உணர்ச்சிப் ப்ரவாகமுமாக இருக்குமானால், மூலத்தைக் குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. பின்னாளில் வரப்போகிற நிகழ்வுகளை, அவை தரப்போகின்ற வலிகளையும், ஏமாற்றங்களையும் சேர்த்து அப்படியே தெள்ளத்தெளிவாக முன்கூட்டியே கண்ட பின்னும் தான் செய்யவேண்டிய தியாகங்களை வரையறுத்து, அவற்றை ஏற்றெடுக்கத் துணிவும், மன முதிர்வையும் எர்னெஸ்ட்டோ கொள்வதற்கு அக்காட்சி அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. காட்சியில் கண்டதை , உணர்ந்ததை வார்த்தைகளில் வடிப்பதென்பது இயலாததென்றாலும், ‘நோம் " நம்மை அங்கேயே தளம் பெயர்க்கும் இழுப்பு நிறைந்த காட்டாறு. எர்னெஸ்ட்டோ ,”செ “ குவாராவாக மாறியதின் காரணங்களை, முன் பின் நிகழ்வுகளின் தேவையின்றி உணர வைக்கிறது ‘நோம்”.

ஜோன் லீ ஆண்டர்சனின் வெற்றி, எர்னெஸ்ட்டோவின் அன்றாட வாழ்வை ஆவணப்படுத்துவதில் இல்லை. மாறாக, எர்னெஸ்ட்டோ , “செ” என்னும் போராளியாக மாறும் களங்களை விவரிப்பதில் இருக்கிறது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க “ வாழைப்பழ குடியரசுகள்” குறித்து இரு பக்கங்களுக்கு விவரிக்கிறார். இதில் கலங்கலான அக்கண்டத்தின் அரசியல் , அதன் பின்புலங்கள் , கொடுங்கோலர்களின் அமெரிக்க சார்புக் கொள்கைகள் ஏன் ஏற்பட்டன என்பன மிகத் தெளிவாக விளங்குகிறது. 1930-1954 வரையான தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலை, எர்னெஸ்ட்டோ ஒரு புரட்சியாளனாக மாற வைத்திருக்கிறது.

கலங்கலான அக்கால அரசியலை ஊன்றிக்கவனிக்கிறான் எர்னெஸ்ட்டோ. காதலியுடன் குட்டமாலாவில் வாழ்கிறான். சரியான வேலை கிடைக்காமல் அவளது சார்பில் வாழ்க்கை நடத்துகிறான். இதன் சில வருடங்கள் முன்பு குட்டமாலாவின் அதிபர் அர்பென்ஸ், சக்தி வாய்ந்த அமெரிக்கக் கம்பெனி “ யுனைட்டர் ஃப்ரூட்ஸ்”-ஐ வெளியேற்றி,அதன் மற்றும் அமெரிக்க அரசின் பகையினை சம்பாதித்துக்கொண்டார். . யுனைட்டட் ப்ரூட்ஸ், பல நாடுகளில் பெருமளவில் நில ஆக்ரமிப்பு செய்து, கொத்தடிமைகளாக அங்கிருக்கும் விவசாயிகளை வேலை வாங்கி, வேளாண்மைப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டும் கொள்ளை நிறுவனம். அதன் சக்தி, வாஷிங்டனிலும், சி.ஐ.ஏவிலும் பரவியிருந்தது. அமெரிக்க அரசு சி.ஐ.ஏ மூலமும், யுனைட்டட் ப்ரூட்ஸ்ஸின் பண உதவி கொண்டும், குட்டமாலாவின் அரசை போர் செய்து கவிழ்க்கிறது. அதிபர் அர்பென்ஸ் நாடு விட்டுச் செல்லும் நாள், ஏர்ப்போர்ட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டு , அவமானப்படுகிறார்.
எர்னெஸ்ட்டோ இதெல்லாம் நேரில் கண்டு குமுறுகிறான். தெளிவாக ஒரு முடிவு எடுக்கிறான். “ ஏகாதிபத்தியத்தை பூண்டோடு ஒழிக்க போரிடுவேன். நான் கம்யூனிஸத்தில் சேருகிறேன். ஒரு முடிவுக்கு வருவதற்கு இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று அதன் கொள்கையில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இல்லை, பிற கொள்கைகளில் நம்பிக்கை அற்றுப் போகவேண்டும். நான் இரண்டாவது வழியில் வருகிறேன். ஏன் இந்த அமெரிக்கர்கள் மத்திய, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை துச்சமாக நடத்துகின்றனர் என ஆராய்ந்து பார்த்ததின் விடையும், என் குட்டமாலா, பெரு, பொலிவிய அனுபவங்களும் என்னை கம்யூனிசக் கொள்கையில் சேர வைத்திருக்கின்றன.” எனப் பிரியமான அத்தை பீட்ரைஸ்க்கு மடல் எழுதுகிறான். எர்னெஸ்ட்டோ ஒரு கம்யூனிஸ்டாக பரிணாமிக்கிறான். இந்த பின்புல விவரணம் மிக முக்கியமானது எனப் படுகிறது. இல்லாவிட்டால் அர்ஜெண்டினாவில் ஒரு பணக்காரனாக ,ஒரு புகழ்பெற்ற மருத்துவனாக மிக சொகுசாக வாழ வேண்டியவன், வேறு எதோ நாட்டில் ஏன் போரிட்டு மடியவேண்டும்?

தொடரும்

Friday, December 30, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson

வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர்.

ஜோன் லி ஆண்டர்சனின் “செ”குவாரா , புரட்சிகரமான வாழ்வு’’ , நிஜமான நடுநிலையில் இயங்குகிறது. அவருக்கு செ குவாரா-வை போற்றவோ, தூற்றவோ வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. முன் முடிவுகள் அற்ற ,”இப்படித்தான்யா இருந்திருக்காரு” என தைரியமாக அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது. இது அத்தனை எளிதான வேலையில்லை. க்ம்யூனிசக் கொள்கை தாங்கிய போராளிகளளாலும், குறிப்பாக க்யூபா, தென் அமெரிக்க நாட்டு கம்யூனிச ஆதரவாளர்களாலும், கிட்டத்தட்ட ‘கடவுள்’ நிலையில் வைத்துக் கொண்டாடப்படும் செ குவாரா-வைக்குறித்து “ அவர் சில வெள்ளை வெறித்தன சிந்தைகளில் எழுதினார்” எனச் சொல்லவும், ஆதாரங்கள் காட்டவும் தலைப்படுதல் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது.
’ தலைவன் முதலில் மனிதன்’ என ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருந்தாலொழிய, அவன் சிறு வயதிலோ அல்லது தலைவனாகுமுன் தனக்குள் நடத்திய சுய போராட்டத்திலோ , செய்த தவறுகளை தவறுகள் என அடையாளம் காணும் பக்குவம் வந்துவிடமுடியாது. இது , அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் பொருந்துவது மட்டுமல்ல, கம்யூனிச, போராளிகளின் தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த ‘சனநாயக”ச் சிந்தனை என்னும் பதம் முரணாக இருந்தாலும் “பொதுவுடமை”வாதிகளுக்கும் பொருந்துவது இயல்பு.

எனவே ஆண்டர்சன் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மறைந்து போயிருந்த ஆவணங்களை மீண்டெடுத்தல், மனிதர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிலிருந்து உண்மையை வெளிக்கொணர்தல் என்பன 70களில் சாத்தியப்படாதவை. காலம் ,சிறிது ஓடிக் களைத்ததில், ஆண்டர்சனின் முயற்சிக்கு சற்றே விட்டுக்கொடுத்து பொலிவியக் காடுகளிலும், க்யூபாவிலும், சில மனிதர்களின் நினைவுகளிலும் புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது.

முப்பது வருடங்கள் கழித்து பொலிவியக் காடுகளினூடே ஒரு ஏர்ஸ்ட்ரிப்பின் அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு, புதைக்கப்பட்டிருந்த சில சடலங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணிக்கட்டிலிருந்து கைகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்த ஒரு சடலம் சற்றே மரியாதையாக புதைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே ஆறு சடலங்கள் அப்படியே வீசியெறியப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. செ குவாராவின் கைகள் அவர் சுடப்பட்டபின் வெட்டியெடுக்கப்பட்டு, பார்மால்டிஹைட்டில் மூழ்க வைத்து பொலிவியா அரசால் ரகசியமாக காக்கப்பட்டிருந்தன. இறந்தவர் செ குவாராதான் எனக் கண்டறிய, விரல் ரேகைப்பதிவுகளுக்கு வேண்டி, கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி ஒரு முன்னுரையோடு புத்தகம், மெல்ல அவரது பிற்ந்த நாளினைக்குறித்தான சர்ச்சையோடு தொடங்குகிறது. திருமணமாகுமுன்னே கர்ப்பம் தரித்த அவரது தாய், ப்யூனே அயர்ஸிலிருந்து கிளம்பிப் போய் காட்டுப்பகுதியில் கணவரோடு வாழ்ந்து, எர்னெஸ்டோ பிறந்த சில மாதங்கள் கழித்து, பிந்திய ஒரு நாளைப் பிறந்த தேதியாகப் பொய்யாகப் பதிவு செய்கிறார். முதலிலிருந்தே சர்ச்சையோடு வாழத் தொடங்கிய எர்னெஸ்டோ குவாராவின் இளமைக்காலம் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெற்று வளர்கிறது. ஹிட்லரை வெறுக்கும் எர்னெஸ்ட்டோ, அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தையும் வெறுக்கிறான். அவனது அசுரத்தனமான புத்தகப் வாசிப்பு, பல கண்ணோட்டங்களை அவனது சிந்தனையில் புகுத்துகிறது. அர்ஜெண்ட்டினப் புத்தகங்கள் மட்டுமன்றி, ப்ரெஞ்சுப் புத்தகங்களிலும் அவன் நாட்டம் விரிகின்றது. நேருவின் கொள்கைகள் அவனுக்குப் பிடித்திருப்பதாக தனது நண்பர்களிடம் சொல்கிறான். எங்கோ அர்ஜெண்டினாவில் , தனது நாட்டு அரசியலை மட்டுமன்றி உலகளாவிய மனித வளர்ச்சி நோக்கு கொண்ட ஒருவன் , ஒரு புரட்சியாளனாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஏனெனில், பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்க்ண் பார்வை வைத்தாள் “ எனப்பாடியதும் “பெல்ஜிய நாட்டின்” நிகழ்வுகளைக் குறித்துப் பாடியதும் ஒரு புரட்சி வாழ்வின் அடையாளமே.

அமெரிக்க வெறுப்பு சிறு வயதிலேயே மனதில் ஏறிய எர்னெஸ்டோ , அக்காலத்தில் வாழ்ந்த வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகள் செய்யும் அநியாயங்களைத் தானும் செய்கிறான். வீட்டு வேலைக்காரியாக இருக்கும் இந்தியப் பழங்குடிப்பெண்ணுடன் பாலினத் தொடர்பு, பல பெண்களுடன் தொடர்கிறது. இடையில் மலர்ந்த காதல் நொறுங்கிப்போக.... எர்னெஸ்டோ குவாரா ஒரு போராளியாக மாறியதில் வியப்பில்லை.

மகாத்மா காந்தி இந்தியாவை அறிய ரயில் பயணம் மேற்கொண்டது போல, எர்னெஸ்ட்டோவின் அமெரிக்கப் பயணம் அமைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. பயணங்கள் நமது கொள்கைகளை மாற்றிவிடக் கூடியவை. ஒரு புதிய கொள்கையின் வித்துக்கள் விழுந்து விட சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுப்பவை. எர்னெஸ்ட்டோ, பெருவிலும், பொலிவியாவிலும் பழங்குடி இந்தியர்கள் படும் பாட்டை நேரில் காண்கிறான். நில ஆக்ரமிப்பு செய்து பெரும் பணம் ஈட்டும் நிலச் சுவாந்தார்கள் மீதும், அமெரிக்க சுரங்கக் கம்பெனிகள் மீதும் அவனது வெறுப்பு பன்மடங்காகிறது. எர்னெஸ்ட்டொவுன் அவனது நண்பன் வும் மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயண அனுபவங்கள் “மோட்டார் சைக்கிள் டைரிகள்” எனப் புத்தகமாக வந்திருக்கின்றது. அதனை கிட்டத்தட்ட இரண்டு அத்தியாயங்களாக ஆண்டர்சன் காட்டியிருக்கிறார்.

வெனிசுவேலாவில் கறுப்பர்களை முதன்முதலாக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எர்னெஸ்ட்டோவுக்குக் கிடைக்கிறது. அவர்களைக்குறித்தான அவரது கருத்துக்கள் , அக்காலத்திய அர்ஜெண்டீனிய வெள்ளை நிற வெறியைக் காட்டுவதாக அமைகிறது. இதனை ஆண்டர்சன் சர்வ சகஜமாக எழுதிப்போகிறார். இது கண்டிப்பாக க்யூபாவிலும், உலகளவில் செ குவாரா அபிமானிகளின் வட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்ககூடும்.

தொடரும்.