Friday, December 30, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson

வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர்.

ஜோன் லி ஆண்டர்சனின் “செ”குவாரா , புரட்சிகரமான வாழ்வு’’ , நிஜமான நடுநிலையில் இயங்குகிறது. அவருக்கு செ குவாரா-வை போற்றவோ, தூற்றவோ வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. முன் முடிவுகள் அற்ற ,”இப்படித்தான்யா இருந்திருக்காரு” என தைரியமாக அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது. இது அத்தனை எளிதான வேலையில்லை. க்ம்யூனிசக் கொள்கை தாங்கிய போராளிகளளாலும், குறிப்பாக க்யூபா, தென் அமெரிக்க நாட்டு கம்யூனிச ஆதரவாளர்களாலும், கிட்டத்தட்ட ‘கடவுள்’ நிலையில் வைத்துக் கொண்டாடப்படும் செ குவாரா-வைக்குறித்து “ அவர் சில வெள்ளை வெறித்தன சிந்தைகளில் எழுதினார்” எனச் சொல்லவும், ஆதாரங்கள் காட்டவும் தலைப்படுதல் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது.
’ தலைவன் முதலில் மனிதன்’ என ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருந்தாலொழிய, அவன் சிறு வயதிலோ அல்லது தலைவனாகுமுன் தனக்குள் நடத்திய சுய போராட்டத்திலோ , செய்த தவறுகளை தவறுகள் என அடையாளம் காணும் பக்குவம் வந்துவிடமுடியாது. இது , அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் பொருந்துவது மட்டுமல்ல, கம்யூனிச, போராளிகளின் தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த ‘சனநாயக”ச் சிந்தனை என்னும் பதம் முரணாக இருந்தாலும் “பொதுவுடமை”வாதிகளுக்கும் பொருந்துவது இயல்பு.

எனவே ஆண்டர்சன் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மறைந்து போயிருந்த ஆவணங்களை மீண்டெடுத்தல், மனிதர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிலிருந்து உண்மையை வெளிக்கொணர்தல் என்பன 70களில் சாத்தியப்படாதவை. காலம் ,சிறிது ஓடிக் களைத்ததில், ஆண்டர்சனின் முயற்சிக்கு சற்றே விட்டுக்கொடுத்து பொலிவியக் காடுகளிலும், க்யூபாவிலும், சில மனிதர்களின் நினைவுகளிலும் புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது.

முப்பது வருடங்கள் கழித்து பொலிவியக் காடுகளினூடே ஒரு ஏர்ஸ்ட்ரிப்பின் அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு, புதைக்கப்பட்டிருந்த சில சடலங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணிக்கட்டிலிருந்து கைகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்த ஒரு சடலம் சற்றே மரியாதையாக புதைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே ஆறு சடலங்கள் அப்படியே வீசியெறியப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. செ குவாராவின் கைகள் அவர் சுடப்பட்டபின் வெட்டியெடுக்கப்பட்டு, பார்மால்டிஹைட்டில் மூழ்க வைத்து பொலிவியா அரசால் ரகசியமாக காக்கப்பட்டிருந்தன. இறந்தவர் செ குவாராதான் எனக் கண்டறிய, விரல் ரேகைப்பதிவுகளுக்கு வேண்டி, கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி ஒரு முன்னுரையோடு புத்தகம், மெல்ல அவரது பிற்ந்த நாளினைக்குறித்தான சர்ச்சையோடு தொடங்குகிறது. திருமணமாகுமுன்னே கர்ப்பம் தரித்த அவரது தாய், ப்யூனே அயர்ஸிலிருந்து கிளம்பிப் போய் காட்டுப்பகுதியில் கணவரோடு வாழ்ந்து, எர்னெஸ்டோ பிறந்த சில மாதங்கள் கழித்து, பிந்திய ஒரு நாளைப் பிறந்த தேதியாகப் பொய்யாகப் பதிவு செய்கிறார். முதலிலிருந்தே சர்ச்சையோடு வாழத் தொடங்கிய எர்னெஸ்டோ குவாராவின் இளமைக்காலம் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெற்று வளர்கிறது. ஹிட்லரை வெறுக்கும் எர்னெஸ்ட்டோ, அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தையும் வெறுக்கிறான். அவனது அசுரத்தனமான புத்தகப் வாசிப்பு, பல கண்ணோட்டங்களை அவனது சிந்தனையில் புகுத்துகிறது. அர்ஜெண்ட்டினப் புத்தகங்கள் மட்டுமன்றி, ப்ரெஞ்சுப் புத்தகங்களிலும் அவன் நாட்டம் விரிகின்றது. நேருவின் கொள்கைகள் அவனுக்குப் பிடித்திருப்பதாக தனது நண்பர்களிடம் சொல்கிறான். எங்கோ அர்ஜெண்டினாவில் , தனது நாட்டு அரசியலை மட்டுமன்றி உலகளாவிய மனித வளர்ச்சி நோக்கு கொண்ட ஒருவன் , ஒரு புரட்சியாளனாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஏனெனில், பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்க்ண் பார்வை வைத்தாள் “ எனப்பாடியதும் “பெல்ஜிய நாட்டின்” நிகழ்வுகளைக் குறித்துப் பாடியதும் ஒரு புரட்சி வாழ்வின் அடையாளமே.

அமெரிக்க வெறுப்பு சிறு வயதிலேயே மனதில் ஏறிய எர்னெஸ்டோ , அக்காலத்தில் வாழ்ந்த வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகள் செய்யும் அநியாயங்களைத் தானும் செய்கிறான். வீட்டு வேலைக்காரியாக இருக்கும் இந்தியப் பழங்குடிப்பெண்ணுடன் பாலினத் தொடர்பு, பல பெண்களுடன் தொடர்கிறது. இடையில் மலர்ந்த காதல் நொறுங்கிப்போக.... எர்னெஸ்டோ குவாரா ஒரு போராளியாக மாறியதில் வியப்பில்லை.

மகாத்மா காந்தி இந்தியாவை அறிய ரயில் பயணம் மேற்கொண்டது போல, எர்னெஸ்ட்டோவின் அமெரிக்கப் பயணம் அமைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. பயணங்கள் நமது கொள்கைகளை மாற்றிவிடக் கூடியவை. ஒரு புதிய கொள்கையின் வித்துக்கள் விழுந்து விட சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுப்பவை. எர்னெஸ்ட்டோ, பெருவிலும், பொலிவியாவிலும் பழங்குடி இந்தியர்கள் படும் பாட்டை நேரில் காண்கிறான். நில ஆக்ரமிப்பு செய்து பெரும் பணம் ஈட்டும் நிலச் சுவாந்தார்கள் மீதும், அமெரிக்க சுரங்கக் கம்பெனிகள் மீதும் அவனது வெறுப்பு பன்மடங்காகிறது. எர்னெஸ்ட்டொவுன் அவனது நண்பன் வும் மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயண அனுபவங்கள் “மோட்டார் சைக்கிள் டைரிகள்” எனப் புத்தகமாக வந்திருக்கின்றது. அதனை கிட்டத்தட்ட இரண்டு அத்தியாயங்களாக ஆண்டர்சன் காட்டியிருக்கிறார்.

வெனிசுவேலாவில் கறுப்பர்களை முதன்முதலாக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எர்னெஸ்ட்டோவுக்குக் கிடைக்கிறது. அவர்களைக்குறித்தான அவரது கருத்துக்கள் , அக்காலத்திய அர்ஜெண்டீனிய வெள்ளை நிற வெறியைக் காட்டுவதாக அமைகிறது. இதனை ஆண்டர்சன் சர்வ சகஜமாக எழுதிப்போகிறார். இது கண்டிப்பாக க்யூபாவிலும், உலகளவில் செ குவாரா அபிமானிகளின் வட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்ககூடும்.

தொடரும்.

No comments:

Post a Comment