Saturday, May 16, 2009

கல்வித்தரக் காமாலை

”பையன் இந்த வருசம் 75க்கு மேல மார்க் எடுத்திருக்கான். ஐ.சி.எஸ்.ஸி சிலபஸ் இருக்கிற நல்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒண்ணு இருக்கா?” கேட்ட நண்பரை அனுதாபத்துடன் பார்த்தேன்.
“இப்ப இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பேர் வாங்கினதுதானே? எதுக்கு மெனக்கெடறீங்க?” என்ற எனது கேள்வி அவருக்கு புரியவில்லை.

“ இந்த ஸ்கூல் மாநில சிலபஸ்... ஐ.சி.எஸ்.ஸி-ன்னா நல்ல தரம் இருக்கும்லா?” எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்ளவெனத் தெரியவில்லை.

மாநில சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் என்னமோ மட்டம் என்றும் , சி.பி.எஸ்.ஸி, ஐ.ஸி.எஸ்.ஸி சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்றும் ஒரு தவறான எண்ணம் - பெரும்பாலும் மத்தியதர , உயர் மத்தியதர மக்கள் மட்டத்தில்... இவர்களில் பலரும் மாநில சிலபஸ் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இதற்குமேல் ஒரு கேலிக்கூத்து...தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் பாடங்கள் படிக்கும் மாணவர்களை விட ஆங்கிலமொழியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்னும் பேச்சு. ஆங்கில மொழிக் கல்விக்கூடமென்றால் அடிதடி.. தமிழ், மராட்டிய மற்றும் பிற பிராந்திய மொழி வகுப்புகளுக்கு ஆளே இருக்காது இங்கெல்லாம்.


எனது மனைவி பணிசெய்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களைக்குறித்து சொல்வது நினைவுக்கு வருகிறது. ”தாய்மொழியில் கற்ற மாணவர்களும், ஐ.சி.எஸ்.ஸியில் படித்து வரும் மாணவர்களும் சேரும் வகுப்பில் பார்த்தால், அடிப்படை அறிவும், முயற்சியெடுக்கும் பண்பும் தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு அதிகம். ஐ.சி.எஸ்.ஸி , சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் “ இதெல்லாம் நாங்க ஸ்கூல்லேயே படிச்சுட்டமாக்கும்” என்ற மெத்தனப் போக்கு கொண்டு திரிந்துவிட்டு, கடைசியில் லபோ லபோவென அடித்துக்கொண்டு படிப்பார்கள்.”என்பார். என்ன, ஐ.சி.எஸ்.ஸி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. தைரியமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள். இந்த பேச்சுத்திறமை, தெளிவாகத் தனது வாதத்தை முன் வைத்தல் போன்ற மென் தொடர்புத் திறமைகள் (soft skills) அவர்களது பெரும் பலம்... தாய்மொழிக்கல்வி மாணவர்களின் பலவீனம்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இண்டர்வியூவுக்கு வரும் பல மென்பொருள் நிறுவன மனிதவள அதிகாரிகள் முன்பு சிலாகித்ததுண்டு.” தென்னிந்திய மாணவர்களுக்கு தொடர்புத் திறமை மிகக்குறைவு. ஆனால் அடிப்படை நுட்ப அறிவு அதிகம். மும்பை, டெல்லியில் வாய்ப்பந்தல் ஜாஸ்தி... ஆனால் நம்மை , அவர்களது தன்னம்பிக்கை, பேச்சுத்திறமையில் நம்ப வைத்துவிடுகிறார்கள்” என்பார்கள். இப்போது நிலமை மாறியிருக்கலாம்.

மாநிலக் கல்வித் திட்டம் பிற திட்டங்களைவிடத் தாழ்ந்தது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. எனது மகனை மாநிலக் கல்வித்திட்டம் சார்ந்த பள்ளியில்தான் சேர்த்திருக்கிறோம். அவனது நண்பர்கள் பலர் ஐ.சி.எஸ்.ஸி பள்ளிக்குப் போகிறார்கள். அதிகமான பாடச்சுமை... அடிப்படை புரியாதபடி வேகமாகப் போகும் வகுப்புகள்... அடிக்கடி தேர்வுகள் என சுமையில் அச்சிறுவர்கள் அழுந்துவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இப்போதும் எனது நிறுவனத்தில் சேரும் பல இளைஞர்/இளைஞிகளின் அடிப்படை அறிவியல் அறிவு சுமாராகத்தான் இருக்கிறது. முக்கியமாக கணக்கு... பெருக்குதல், வகுத்தல், சதவீதம் என்றால் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் முடிவதில்லை. கையில் கம்புடன் “ ம்..சொல்லுல... 84ஐ நாலால வகுந்தா என்ன வரும்?” என்று எட்டாம் வகுப்பின் கணித ஆசிரியர் குருமலை சாரிடம் படித்த என்போன்ற மாணவர்கள் என்ன குறைந்து போய்விட்டனர்? அரை நிமிடத்தில் பதில் வரவில்லையென்றால் பிரம்பு முட்டியில் பாயும்...நூறு முறை பதினாறாம் வாய்ப்பாடு எழுதிவர, பதினாறாம் வாய்ப்பாடு ஜென்மத்துக்கும் மறக்காது. அடிப்பதை நான் வரவேற்கவில்லை. வாய்ப்பாடு, மனக்கணக்கு என்பதெல்லாம், கூகிளை மேய்ந்து , பக்கம் பக்கமாக ” ஆர்க்டிக் பனிக்கரடிகளின் வாழ்வு முறை” என எழுதுவதை விட மிக முக்கியம் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment