Wednesday, July 16, 2014

மழையும் மனிதமும்

அடைமழை நேற்று மும்பையில். ஆபீஸை விட்டுக் கிளம்பும்போது லேசாகத் தூறிக்கொண்டிருந்ததால், நிதானமாகக் கிளம்பினேன். ஜோகேஷ்வரி லிங்க் ரோடு தொடக்கத்தில் பிடித்த மழை நிற்கவேயில்லை. மனைவி வேறொரு ஆட்டோவில் அந்த வழியாக வருகிறார் என்று தெரிந்ததும், காத்திருக்கலாம் என்று, வண்டியை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அலுவலகமருகே ஓரம் கட்டினேன். எனக்கு முன்னே ஒரு I 20 மினுக் மினுக்கென விளக்கைப் போட்டபடி நின்றிருக்க, புத்திசாலித்தனமாக அதற்கும் ஓரமாக வண்டியைக் கொண்டு போனேன். அவ்வளவுதான் தெரியும்.
திடீர் என்று முன்னே வண்டி இடப்புறம் சாய, என்ன என்று தெளியுமுன்... ஒரு சாக்கடையில் இறங்கிவிட்டது. பின்புறம் வடிவேலு மாதிரி தூக்கி இருந்தது. இத்தனைக்கும் வங்கியின் வளாக வாசல் கேட் அருகே. ... ஒரு எச்சரிக்கைப் பலகை ஒன்றுமில்லாமல் எப்படித்தான் இதை தினமும் சமாளிக்கிறார்களோ என்று எரிச்சலும் கோபமுமாகத் திட்டிக்கொண்டே மழையில் முழுக்க நனைந்து வெளியே வந்தபோது, ரோட்டில் போய்க்கொண்டிருந்த பஸ், ஆட்டோவில் இருந்த பயணிகள் எட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சிலர் சாய்ந்து நின்றிருந்த வண்டியைப் பார்த்து சிரித்தபடி சென்றனர்.
ஒருவரும் உதவ வரவில்லை.
வளாகத்தினுள் இருந்த காண்ட்ராக்ட் பேருந்துகளின் ஓட்டுநர்கள்,க்ளீனர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவன் பஸ்ஸினுள் பார்த்துக் கூவினான். “ அபே,,, ரெண்டாவது வண்டி.”
அடப் பாவிகளா. என்னடா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே மற்றொரு I20 காரைக் காட்டியபடி சொன்னான்.“பாய் ஸாப், பத்து நிமிஷம் முன்னாடிதான் இந்தக் காரை வெளியே எடுத்தோம்.”
இது வழக்கமான ஒன்றா? என்றெல்லாம் யோசிக்க மழை விடவில்லை. வண்டி கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் சரிந்து கொண்டிருந்தது.
யாரும் ஏன் முனைப்பாக வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒருவன் கண்ணாடியில் தட்டினான். “ஸாப், ஐநூறு ரூபாய் தருவீங்கன்னா, நாங்களே எடுக்கறோம்”
இது ஒரு சம்பாதிப்பா? என்று திகைத்திருக்க , சரியென்றேன். வண்டி வெளியே வந்தாப் போதும் இப்போதைக்கு. மனைவியின் ஆட்டோ வேறு மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தது. வண்டி சாக்கடையில் இறங்கியிருப்பது தெரிந்ததும், அவர் வேறு படபடப்பிலிருந்தார்.
ஐந்து பேராக வந்து வண்டியை, சாக்கடையிலிருந்து வெளியே தூக்க, ரிவர்ஸ் கியரில் மெல்ல எடுத்தேன். வெளி வந்ததும், பையில் துளவிப் பார்த்தேன்.
எழுபது ரூபாய், பத்து பத்தாக முழுக்க நனைந்த நோட்டுகள்.
ஐநூறு கேட்டவனிடத்தில் , எழுவது ரூபாயா?
மீண்டும் சாக்கடையில் வண்டியைத் தள்ளி விட்டுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையில் வண்டியை வளாகத்தினுள் கொண்டு போய் நிறுத்தினேன்.
பக்கத்தில் ஏ.டி.எம் இருக்கிறதா ? என்றேன். பாலத்துக்கு அடுத்த பக்கம் என்றார்கள். அதுவரை நடக்க என்னோடு வந்தவன், மரியாதையாக எனக்கு ஒரு குடையைப் பிடித்தான். முழுக்க நனைந்தவனுக்கு முக்காடு எதுக்கு? என்ற நினைப்பில் மழையில் முன்னே நடந்தேன்.
எதிர்பார்த்தபடியே, அந்த SBI ATM வேலை செய்யாமலிருந்தது. சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாது...
விரக்தியில் அவன் குடையை தனக்கு மட்டும் பிடித்தபடி முன்னே திரும்பி நடந்தான். உள்ளூற சிரித்தபடி மழையில் திரும்பி நடந்தேன்.
பஸ்ஸினுள் அமர்ந்திருந்தவர்கள் ஏமாற்றத்தில் “அரே...”என்றனர். டிரைவர் சீட்டில் இருந்தவன், “ பரவாயில்லை. அடுத்ததடவை..”
“விழணும்னு சொல்றீங்களா?” என்றேன்.
சிரித்தபடி “ இல்ல சார். இந்தப் பக்கமா வரும்போது, நினைவில வச்சிருந்து ஏதோ முடிஞ்சதக் கொடுங்க போதும்” என்றார்
.
“யாருங்க, சாக்கடையில இறங்கி தூக்கினது?” என்றேன்
“நான் சார்” என்றான் உள்ளிருந்து ஒருவன்.
“ என் பையில எவ்வளவு இருந்தாலும் அதை உனக்குத் தந்துடறேன். சாரி. எழுவது ரூபாய்க்கு மேல தேறாது. “ என்றேன்.
“அட பரவாயில்ல.சார்.” என்றான் சிரித்தபடி. அதிலிருந்து ஒரு பத்து ரூவாயை , கூட நடந்து வந்த பையனுக்குக் கொடுத்தான். “சூடா ஒரு சாய் குடி” என்றான். இந்த இயல்பான கொடையை வியந்து பார்த்தபடி நின்றிருந்தேன்.
” மழை பெய்யறப்போ, ரோடு ஓரமா என்னிக்கும் நிறுத்திடாதீங்க. மும்பை மழை ,எங்களையே சில நேரத்துல காவு வாங்கிரும். நடு ரோட்டுல போங்க. இல்ல, நிப்பாட்டிருங்க. தண்ணி வடிஞ்சப்புறம் போங்க” என்றான் டிரைவர்.
மனைவி , பாலத்தைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தி பதட்டமாக விரைந்து வர, நான் ஜோராக வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினேன். நிதானமாக 2ம் கியரில் ஓட்டியபடி வந்தபோது , பார்க்கும் தூரம் 50 மீட்டர் வரை குறைந்திருந்தது.
சாக்கடை அருகிலிருக்கிறது என்ற எச்சரிக்கை பலகை வைக்காதது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் குற்றமா?, முனிசிபாலிடியின் குற்றமா? விழுந்த காரில் இருப்பவர்கள் 500 ரூபாய் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்,புடுங்கலாம் என்ற நினைப்பு அந்த மனிதர்களுக்கு வந்தது தவறா? அல்லது செய்த வேலைக்கு கூலி கிடைக்காததைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருந்தது அவர்கள் பெருந்தன்மையா?
வெளியே பேய் மழை... உள்ளேயும்.

2 comments:

  1. ஐநூறு கொடுத்தாலும் அந்த நேரத்தில் ஆள் கிடைக்கனுமே! அதில்லாம சண்டை இழுக்காம கொடுத்ததை வாங்கிட்டதால, அன்றைய பொழுதை பசியின்றி கழிக்க உங்களை பயன்படுத்திக்க பார்த்திருக்கனும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் காண வாருங்கள்
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_7.html

    ReplyDelete