Sunday, May 25, 2014

லூர்துவின் லிரில் சோப்பு

கே.வி.ஆர் ட்ரவெல்ஸ்ஸின் புக்கிங் ஆஃபீஸ் பாரத் பெட்ரோல் பம்ப்பின் அருகில் இருப்பது, பலருக்கும் வசதி. “ஒரு லிட்டர்” என்று சொல்லியபடி ஒரு கத்து கத்தி எப்ப வண்டி வரும்? என்று கேட்டால், தெரிந்துவிடும்.
சூசை அப்படி அன்று குரலெடுத்துக் கேட்கவில்லை. மாறாக, புல்லட்டை உருட்டிக்கொண்டே கடை வாசல் வரை வந்தான். ஈரமான வாசல் மண்ணில் , டயர் தடம் பதிய, போட்டிருந்த கோலத்தின் ஒரு பகுதி லேசாக சிதைந்தது.
“அரைமணி லேட்டு சூச.. கோயில்பட்டி ரோட்டுல ட்ராபிக்னாங்க. இப்பத்தான் ட்ரைவரு போன் பண்ணாரு”
வண்டியை வேப்ப மர நிழலில் நிறுத்திவிட்டு, லுங்கியை நெகிழ்த்துக் கட்டினான் சூசை. அரை நாள் லீவு போட்டாச்சு. அரைமணி கூட குறைய ஆனா என்னா? வர்றது லூர்து. அவனுக்காக மாசக்கணக்காவே லீவு போடலாம்.
நாலு வருசமிருக்குமா? லூர்து ,தூத்துக்குடி பெரியகோயில் திருவிழா தொடங்க ரெண்டு நாள் முன்னாடி மும்பைக்கு ரயிலேறினான். அப்புறம் நாலு மாசம் கழிச்சு துபாயி. இப்பத்தான் முத தடவையா ஊருக்கு வர்றான்.
“லூர்து எங்கே?’ எனத் தேடுபவர்கள், ’சூச எங்கே?’ எனத் தேடினாலும் சரிதான். இருவரும் ஓரே இடத்தில்தான் இருப்பார்கள். லூர்தின் வீட்டில் அவனோடு சேர்த்து, அவன் தங்கை, அம்மா என்று மூன்றுபேர்கள். சூசையின் வீட்டில், அவன் பெற்றோரோடு தங்கை மேரியும், தம்பி இன்ஞாசியும் இருக்கிறார்கள். எப்போதும் மோதிக்கொள்ளும் குழுக்கள் இருக்கும் பகை கொண்ட இரு தெருக்களில் இரு நண்பர்கள்.
லூர்து பத்தாவது படித்த்தோடு நிறுத்திக்கொண்டான். இல்லை, நின்று கொண்டான். தையல்கார்ரான அப்பா மாரடைப்பில் போனபின், வீட்டைத் தூக்கி நிறுத்துவது அவன் தலையில் விடிந்தது. சூசை பி,காம் வரை படித்தபின், தூத்துக்குடியில் ஒரு ஷிப்பிங் ஏஜெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சிறுவயது நண்பர்கள். தெருக் குழுக்களிடையே பெரிய அளவில் சண்டை வந்து, போலீஸ் படை குவிக்கப் பட்டபோதும், இருவரும் ஒரு பயமுமின்றி ஒருவர் தெருவுக்கு மற்றொருவர் போய்வந்தனர். அவர்களைத் தெரிந்தவர்கள் , அவர்கள் நட்பைத் தெரிந்தவர்கள் எவரும் குறுக்கே வந்ததில்லை.
சூசை தெருவின் மறுபுறத்தைப் பார்த்தான். வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் பஸ் வரவில்லை. ஒரு பெண் விரைவாக புதுத்தெருவில் நுழைவது தெரிந்தது. ஒரு நொடியில் சூசை அடையாளம் கண்டுகொண்டான். மேரிதான்.. யார் வீட்டுக்குப் போகிறாள்?
சட்டென நினைவு வந்து, உஷ்ணமானான். அங்கதானே கிருஷ்ணன் வீடு இருக்கிறது? அவந்தான் மெட்ராஸ் போயிட்டானே? அடிச்ச அடிக்கு இனிமே வரவே மாட்டான். அவன் வீட்டுல இவளுக்கு என்ன வேலை?
அது நாலு வருசம் முன்பு...அப்போது லூர்து ஊரில் இருந்தான். மேலக்கரை தொம்மைதான் சொன்னான் “ லே சூச, ஒந்தங்கச்சி அந்த கிருஷ்ணனோட நின்னு பேசிக்கிட்டிருக்கா. ரெண்டுதடவ பஸ்ஸ்டாண்டுல வச்சிப் பாத்துட்டன். நல்லதுக்கில்ல, சொல்லிட்டேன்.”
லூர்துவும், சூசையும், கிருஷ்ணனை அன்று இரவு இடைமறித்து, அவனை முள்ளுக்காட்டில் புரட்டி எடுத்தார்கள். மேரி இருநாட்கள் அழுது கொண்டிருந்தாள்.
’அத்தோடு முடிஞ்சுபோச்சுனுல்லா நினைச்சிருந்தேன்? இது எத்தனை நாளா நடக்கு? ’ ஒரு வேளை கிருஷ்ணன் தங்கச்சிகிட்ட பேசிட்டிருப்பாளோ? அவளும் இவளுக்கு கூட்டாளியோ, அண்ணங்கிட்ட பேச வைக்க? . இன்னிக்கு மேரியைக் கேட்டுவிட வேண்டியதுதான்.’ சூசை நினைத்துக் கொண்டிருக்கும்போதே பஸ் புழுதியைக் கிளப்பி வந்து நின்றது.
லூர்து என்னமா மாறிட்டான்? வியந்தான் சூசை. தலை செம்பட்டை யாயிருச்சே? ஒல்லியாப் போயிட்டான்? சூசையை அணைத்துக் கொண்ட லூர்து விம்மினான். சூசையின் கண்களும் பனித்தன. இருவரும் ஏன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. இருவருக்கும் அழுகை இயலாமையால். ஒன்று வரமுடியாத இயலாமை, மற்றொன்று, கண் முன்னேயே, நண்பனின் காதலி கலியாணம் செய்து கொள்வதைக் கண்டும் ஒன்றும் செய்ய முடியாது நின்ற இயலாமை.
“ஏலெ, புல்லட்டுல இம்புட்டு சாமான் ஏத்த முடியாது சூச. ஒரு ஆட்டோ வச்சிருவம். வண்டிய இங்கனக்குள்ளயே விட்டுட்டு வா.” சூசை மறுக்காமல் புல்லட்டை நிறுத்திவிட்டு ஒரு ஆட்டோ பிடித்தான்.
இருவரும் ஊர் வரும்வரை மற்ற விசயங்களைப் பேசிவந்தனர். ’துபாய்ல என்ன திங்கே? அங்கிட்டு மாதா கோயில் இருக்கா? ஏப்பா, ஒரு வேளை துண்ணனும்னா 250 ரூவாயாவுமா? என்னலே, எப்படி கட்டுப்படியாவும்? ’
முக்கியமான ஒரு விஷயத்தை இருவரும் தவிர்த்தனர் - சில்வியா தாமஸ்.
லூர்துவின் எதிர் வீட்டு வரிசையில் இருந்த தாமஸ்ஸின் இரண்டாவது மகள் சில்வியா காலேஜ் படித்துக் கொண்டிருந்தாள். தாமஸின் பலசரக்குக் கடை லூர்துவின் வீட்டுக்கு நேர் எதிரே இருந்தது. அவர் இல்லாதபோது, சில்வியா கடையைக் கவனித்திருந்தாள். லூர்து, வாசலில் இரண்டு மெஷின் போட்டு தையலை தொடங்கியபோது, மெல்ல இருவருக்கும் காதல் துளிர் விடத் தொடங்கியது. சூசைதான், செயிண்ட் மேரீஸ் காலேஜுக்கும், லூர்து கடைக்கும் தூது போனவன். திருமணம் பத்தி பேசவும் லூர்துவுடன் சூசைதான் தாமஸிடம் போனான்.
“ஒங்கம்மா வராம நான் எப்படி பேசமுடியும்?” என்றார் தாமஸ். அதுவும் சரிதான் என்று நினைத்தார்கள் இருவரும்.
“லூர்து. ஒங்குடும்பம் எனக்குத் தெரியும். ஆனா, ஒஞ்சம்பளம் போதாது பாத்துக்க. அவ படிக்கணுங்கா-ன்னு வை. ஒங்கிட்ட பணமிருக்கா? சரி, வேற வீடு போகணுங்கா-ன்னு வை.சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.
போகமுடியுமா? முதல்ல சம்பாரி தம்பி. அப்புறம் பேசலாம்”
“சார்” லூர்து எழுந்து கை கூப்பினான். “ கொஞ்ச நாள் டயம் கொடுங்க. நான் சம்பாரிச்சுக் காட்டுதேன். அதுவர எனக்காக காத்திருங்க”
“பாப்போம். நீ சம்பாரிக்கற வழியப் பாரு” என்றார் தாமஸ்.
சூசையும், லூர்துவும் தீவிரமாக யோசித்தனர். தாமஸ் இருவதாயிரம் ரூபாய் கொடுத்தார். “எதுக்கு ?” என்ற லூர்துவிடம் “ துபாய்ல டெய்லர் வேணும்னு ஒரு விளம்பரம் வந்திருக்கு, இன்னிக்கு தினமலர் பாரு. போயி பணம் கட்டிட்டு சேர்ற வழியப் பாரு. அதுவரை, நீ சில்வியாகிட்ட பேசவோ, லெட்டர் எழுதவோ கூடாது, என்னா?”
லூர்து கிளம்பி பம்பாய் சென்றான். அதன் பின் மூன்று மாதம் தொடர்பு இல்லை. திடீரென அவனிடமிருந்து போன் வந்தது. “ஏமாத்திட்டானுவ சூச. நான் இங்க செத்து சீரழிஞ்சு, ஒரு மாதிரியா, இப்ப ஒர் ஏஜெண்ட் மூலமா துபாய் போறேன். நாளைக்கு காலேல ப்ளைட்டு. ஒரு வருசம் கழிச்சி லீவு கிடைக்கும். தாமஸ் ஸார், சில்வியாகிட்ட சொல்லிடுடே.”
தாமஸ் வீட்டில் , லுங்கி மட்டும் கட்டியபடி ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். “சொல்லுடே” என்றார்.
”லூர்து இன்னிக்கு போன் பண்ணான். துபாய் போறானாம் நாளைக்கு. ஒரு வருசத்துல வருவானாம்.”
“லேட் ஆயிட்டப்பா” என்றார் தாமஸ் போலியாக வருத்தப்பட்டபடி..
“இவன் எங்க திரும்பி வரப் போறான்னு, சில்வியாவுக்கு ஒரு சம்பந்தம் சரி பண்ணிட்டேனே? அவளும் சரின்னுட்டா”
சூசை இடிந்து போனான்.”என்ன சார் சொல்லுதிய? அப்ப லூர்து?”
“நாங்க காத்துகிட்டிருந்தோம். அவரு வரலேல்லா. எத்தனை நாள் இருக்கறதுன்னு அப்பா , வரனை முடிச்சிட்டாரு. என்ன மறந்திரச் சொல்லிருங்க” சில்வியாவின் குரல் திரைக்குப் பின் தழுதழுத்தது.
“இங்கேருடே, நானும் பொண்ணு நிலமையப் பாக்கணும்லா? நாளைக்கு எனக்கு ஒன்னு ஆயிட்டுன்னா அவளுக்கு யாரிருக்கா? அதான்.... லூர்தோட தங்கமான மனசுக்கு ஏசு காப்பாத்துவாரு. அவனுக்கு நல்ல பொண்ணா நானே பாத்து முடிக்கேன்ன்னு சொல்லு, என்னா?”
சூசை அன்றிரவு லூர்துவிடம் சொன்னபோது , அடுத்த முனையில் ஒரு நிமிடம் மவுனம். அதன்பின் லூர்து பேசினான் “சரி. நான் கிளம்புதேன். வீட்டுல , அம்மா தங்கச்சிய பாத்துக்கடே சூசை. எனக்கு நீ மட்டுந்தான் இருக்க”
அதன்பின் இன்றுதான் அவர்கள் பேசுகிறார்கள்.
லூர்துவின் வீட்டில், சூசையின் தங்கை மேரியும், தம்பி இஞ்ஞாசியும் முன்னே வந்து காத்திருந்தனர். பத்து நிமிட உணர்ச்சி பிரவாகத்தின் பின், லூர்து, தனது பெரிய சிகப்பு சூட்கேஸைத் திறந்தான். இஞ்ஞாசிக்கு கூலிங்கிளாஸ், சூசைக்கு ஒரு தங்க வாட்சு, மோதிரம்... பெட்டிக்குள் துபாயே இருந்தது.
“யம்மா, ஒனக்கு தங்க செயினு.”
“எனக்கு எதுக்கடா ராசா? ஒன் தங்கச்சிக்கு போடு,. கலியாணத்து ஒதவும்”
”ரெண்டு தங்கச்சிக்கும் வாங்கியாந்திருக்கேன். ரெண்டு பவுனு செயினு” சூசை திகைத்துப் போனான்.
”டே, லூர்து. மேரிக்கு எதுக்கு?. வேணாம். விக்டோரியாக்கு வச்சிக்க.”
‘லே, நீ யாருல அவளுக்கு வேணாம்னு சொல்ல? அவளும் எந்தங்கச்சிதான். விக்டோரியாவுக்கு என்ன உண்டோ, அது மேரிக்கும் உண்டு. நீ இதிலெல்லாம் இடபடாதே,கேட்டியா?”
“போட்டும்டே மக்கா. சம்பாதிச்சு என்ன கிழிச்சேன்? எதுக்குப் போனேனோ அதுவே இல்லேன்னு ஆனப்புறம், எந்த அன்பு உண்மையோ அதுக்குதானெ செஞ்சிருக்கேன்?. நிறைவா இருக்கு மக்கா.”
சூசை பேச்சைத் தவிர்த்தான். என்ன சொல்லமுடியும்? அதே சில்வியா இப்போது , அடுத்த தெருவில்தான் இருக்கிறாள் என்பதையா ? இல்லை, ஒருமுறை அவளை மறித்து “இப்படி ஏமாத்திட்டயே?” என்று பொருமினபோது “ அவரு கிட்ட பணம் ஒண்ணுமே இல்லயே? அந்தாளக் கட்டிக்கிட்டு என்ன வாழுறது?”என்று எகத்தாளமாகச் சொன்னதையா?
“குளிச்சிட்டு வர்றேன்மா.” லுங்கியோடு கிணற்றங்கரைக்கு போனான் லூர்து.
“சரிய்யா. சோறு எடுத்து வக்கேன்.. சூசை நீயும் தின்னுட்டுத்தான் போவணும். எப்பிள்ளே விக்டோரியா, கோளி கொளம்பு ஆயிட்டான்னு பாரு. ”
கிணத்தருகே சாய்வாக இருந்த துணி தோய்க்கும் கல்லில் சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு , வாளியை கிணற்றில் தள்ள, தொபுக்கடீர் என்ற சத்தமும், களக் களக் என்று அது நீர் மொள்ளும் ஒலியும் கேட்ட்து.
“ஐ, என்ன சோப்புண்ணே இது?” இஞ்ஞாசி , பெரிதாக இளம் பச்சையிலிருந்த அந்த சோப்பை ஆர்வமுடம் எடுத்தான்.
“லே ,அத வையி. எடுக்காத”
இஞ்ஞாசி கவனிக்கவில்லை. கையிலெடுத்து மூக்கில் வைத்து உரக்க முகர்ந்தான். “ய்ய்யா! என்ன வாசனை?”
பளேரென அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்த்து. “ எடுக்கதலே, எடுக்காதலேன்னு சொல்லிட்டிருக்கேன். அதென்ன எடுக்கறது?” லூர்துவின் கோபத்தில் , கண்கள் வலியில் துடிக்க, வீங்கிய கன்னத்தை பிடித்தவாறு இஞ்ஞாசி சிலை போல் நின்றான்.
துண்டு கொண்டு வந்த மேரியும், அவள் பின் சப்தம் கேட்டு ஓடிவந்த விக்டோரியாவும் திகைத்து நின்றனர். இஞ்ஞாசி , வீறிட்டுக்கொண்டே “சூசை அண்ணே,” என்று அலறி வாசலுக்கு ஓட, விம்மல்களுக்கிடையே அவன் சொன்ன கதையை ஓரளவு புரிந்துகொண்ட சூசை பின்பக்கம் விரைந்தான். அவன் கண்கள் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.
”லே, லூர்து, எந்தம்பி இங்க வர்றது பிடிக்கலேன்னா சொல்லியிருக்கலாம். அவன வீட்டுக்குப் போயி திங்கச் சொல்லியிருப்பேன். ஏன் கைய நீட்டுனே? “
லூர்து துணி தோய்க்கும் கல்லில் சிலை போல் அமர்ந்திருந்தான்.
“சொல்லுலே, நாதியத்துப்போயி ஒன் வீட்டுல கோளி திங்க வரலைடே நாங்க. ஏட்டி மேரி, தம்பியக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ”
திரும்பிய சூசை, வெடித்துக் கதறிய கேவல் ஒலியில் திரும்பினான்.
“என் புத்திய செருப்பால அடிக்கணும்லே. புத்தியத்துப் போயி பிள்ள கன்னத்துல எவம்மேலயோ இருக்கிற கோவத்துல அறைஞ்சிட்டேன்.
ஊருக்குப் பொறப்பட நாளு, சில்வியா வந்து ஒரு லிரில் சோப்பு கொடுத்தா.”என் ஞாபகமா வச்சிக்க”ன்னா. முதல் தடவையா அவ உள்ளங்கையை மோந்து பாத்தேன். லிரில் சோப்பு வாசனை. சிரிச்சுகிட்டே போயிட்டா. லிரில் சோப்பை பத்திரமா வச்சிருந்தேன்.
மும்பையில என்ன மாதிரி நாலு ஆளுங்கள ஒரு ரூம்புல போட்டு அடைச்சு வச்சிருந்தானுவ. பைசா எல்லாம் பிடிங்கிட்டாங்க. தாராவியில ஒரு லெதர் கம்பெனியில தோல் பை தைச்சேன். அங்கிட்டு பொம்பளைகளும் உண்டு அதுல நஸ்ரின்னு ஒருத்திக்கு என்மேல ஆசை. எங்கூட வந்திரு-ன்னா. நான் மயங்கல. தினமும், அந்த லிரில் சோப்பு வாசத்துலயே எதிர்காலத்தை முகர்ந்துகிட்டிருந்தேன். சில்வியா கூட , மணமா வாழற ஒரு கற்பனை வாழ்க்கை. லிரில் சோப்பு எப்பவும் எங்கூட இருக்கும். அதுல மணம் போனப்புறம் இன்னொரு லிரில் சோப்பு. அது இருக்கற வரைக்கும் எப்படியும் துபாய் போயிறணும்னு வெறியில வேலைபாத்தேன். நாயா அலைஞ்சேன்.
நாலுமாசம் கழிச்சு வேலை கிடைச்சிச்சி. சில்வியா கலியாணம் பண்ணிக்கிட்டான்னு நீ சொன்னதும் உடஞ்சு போனேன். முத வேலையா சோப்பை முகந்தேன். லிரில் வாசனை , முன்னே போக உந்திச்சு. துபாய்ல லிரில் கிடைக்கல. அங்க ஃபா(Fa)ன்னு ஒரு சோப்பு, லிரில் மாரியே இருக்கும். அத வாங்கி வச்சிருந்தேன்.எப்பெல்லாம் சில்வியா நினைவுக்கு வர்றாளோ, அப்பெல்லாம் ஃபா சோப்பு எடுப்பேன். இன்னும் முன்னேறணும்னு தோணும்.
அந்த சோப்பைத்தான் ஒந்தம்பி எடுத்து மோந்து பாத்தான். பொறுக்கலடே எனக்கு.. இன்னும் எத்தன லூர்து, எத்தன சில்வியா, எத்தன லிரில் சோப்பு இருக்கோ? இவனாச்சும் நல்லாயிருக்கணும்டே. இவனுக்காச்சும் நல்ல சோப்பு கிடைக்கணும்”
முகத்தில் அறைந்து அறைந்து அழும் நண்பனைக் கண்ணீர் மல்கப் பார்த்த சூசை ஒன்றும் பேசாமல் வெளியேறினான்.
புதுத் தெருவில் கிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளி வந்த மேரி, வாசலில் புல்லட்டின் மேல் ஆரோகணித்திருந்த சூசையைப் பார்த்து விக்கித்து போனாள்.
“கிருஷ்ணனுக்கு விசுவாசமா காத்திருட்டி"
உயிர்த்த புல்லட், திரும்பி வேகமெடுத்து, படபடவென ஒலியெழுப்பி மறைந்தது.
பல நூறு ஆண்டுகள் முன்பு, காதலியைப் பிரிந்து பொருளீட்டச் சென்றவன், வழியில் வந்த துன்பத்தையெல்லாம் எவ்வாறு அவள் நினைவால் கடந்தான் என்று கண்ணீருடன் சொல்கிறான். பிற நாடு சென்று வாழும் ஒரு மனிதனின் உணர்வுத் தவிப்பினை படம்போட்டுக் காட்டிய குறுந்தொகைப் பாடல் இது.
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடம் சுரக்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே
குறுநடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்கித்
தளை அவிழ் பல்போது கமழும்
மைஇருங் கூந்தல் மடந்தை நடப்பே”

- பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.

”சுரவழியில் (போகின்ற கொடிய வழியில்) காணப்பட்ட நெல்லிக்காய்கள் கிடக்கின்ற இடத்தில் பதுங்கிக் கிடக்கின்ற புலிக்குட்டிகள் இருக்க, கடப்பதற்கரிய மலைபோன்ற கடின வழிகளில் நான் சென்றேன். அங்கு சற்றே ஆறுதல் தரும் இனிய குரலுடைய, த்த்தி நடக்கின்ற அழகிய பறவைகளின் ஒலியில் மயங்காது, என் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்த, காட்டின் வெட்சிப் பூ போல் மணம் கமழும் என் காதலியின் கூந்தலையும், அவள் காதலையும் மட்டுமே நினைத்திருந்தேன்.”

No comments:

Post a Comment