Friday, September 18, 2015

கம்பனும் கத்திரிக்காயும்

“ கத்திரிக்காயா?” அபி முகம் சுருங்கி முணுமுணுத்தான்.  இரவு உணவு மேடையில் நாங்கள் அனைவரும் ஒருசேர அமர்வதென்பது அபூர்வம். அதில் இன்று அபூர்வமாக அவனுக்குப் பிடிக்காத கத்திரிக்காய்.
“அன்னம் , லக்‌ஷ்மி தெரியுமா? முகத்தச் சுருக்காம சாப்பிட்டுப் போ” மங்கை சொல்வது எனக்கும் சேர்த்துத்தான். கத்திரிக்காய் பிடிக்காதது என்பதல்ல, அது இல்லாம இருந்திருந்தா நல்லா இருக்குமே? என்று கமல் ரேஞ்சுக்கு வசனம் பேச உணவு மேடை இடமல்ல.

அப்பா, நேத்திக்கு சிந்திப்பது பத்தி சொல்லிட்டிருந்தீங்களே?” . பிடிக்காததைத் தவிர்க்கும் உத்திகளில் ஒன்று அதனினின்று குவியத்தை , உணர்வை மாற்றுவது.
“என்ன சொன்னேன்?”
“ ஒரு நிகழ்வு , அதை நம் அறிவால், முன் அனுபவத்தால் தன்போக்கில்  அறிவது - பெர்ஸப்ஷன், அதுக்கு அப்புறம் அந்த நிகழ்வை ஆழ்மனத்துல வைச்சுக்கறது, அதுல இருந்து நினைவை, சுய உணர்வோடு, வடிகட்டிகளால் திருத்தி, எதிர்வினையாக வெளிப்படுத்துவது, ஃப்ராய்டு கொண்டுவந்த மாடல்-ன்னு சொன்னீங்க”
“ஆங்! கரெக்ட்” நினைவு வந்தது. அது Interpretation of Dreamsல இருந்து சொன்னதில்லையோ?
“இதை கொஞ்சம் மாத்தி, பெர்ஸப்ஷனுக்கு முன்னாடியே சுய உணர்வு ,தருக்கம் வந்தா, உள்வாங்கற உணர்வு முதல்லிலேயே வடிகட்டப்பட்டு, மனசைப் பாதிக்காமலேயே ஆழ்மனசுல இருக்கும்னீங்க”
“கரெக்ட். அது ஒருவகையிலநிகழ்வுகளால் பாதிப்பதைத் தடுக்கும் உத்தி. சிலரால இடர் வரும் காலத்துலயும் பதறாம எப்படி தெளிவா முடிவெடுக்க முடியுது-ங்கறதுக்கு ஒருகோணத்து விளக்கம்னு வைச்சுக்கலாம்”
“இந்த மாதிரி அதிர்ந்து போறது ஒரு பலவீனமாப்பா?”
“நிதானித்தேன். ஆமா என்றால் உணர்ச்சி வெளிப்படுத்துதலை அவ மதிப்பதாகும். இல்லையென்றால் தருக்க முடிவுகளை அவமதிப்பதாகும்.
“ரெண்டுமே சரிதான். ஆட்களையும், இடத்தையும் பொறுத்தது அது. கம்பராமாயணத்துல ரெண்டு இடம். இரண்டு பெண் கேரக்டர்கள். ரெண்டு பேருக்கும் சூழ்நிலை ஒண்ணுதான். கணவன் செத்துக் கிடக்கறான். அதிர்ச்சில அவங்க புலம்பறாங்க”  
“ம். சொல்லுங்க” ஆர்வத்துடன் முன்னே குனிந்தான். நேரம் சரியாக அமைந்த திருப்தியில் அவன் தட்டில் கத்திரிக்காய் பொறியலை வைத்தாள் என் மனைவி. கதை கேக்கிற ஆர்வத்துல என்ன திங்கறோம் என்ற நினைவே இன்றி முழுங்கிவிடுவான்.
“வாலி செத்துக்கிடக்கறான். தாரை ஓடி வர்றா. இராமன் உன்னைக் கொன்னுடுவான்ன்னு சொன்னேனே? கேக்காம போனியே? ‘என்று புலம்பறா. அதுக்கப்புறமும் அதிர்ச்சியில மீளாம சொல்றா,
“நீறாம் மேருவும் நீ நெருக்கினால். மேறோர் வாளியுன் மார்பையீவதோ?
தேறேன் யானினி, தேவர் மாயமோ? வேறோர் வாலிகொலோ விளிந்துளான்”
நீ நெருக்கிப் பிடிச்சா, மேருமலையே பொடிப்பொடியாகிவிடுமே? அப்படிப்பட்ட உன் மார்பை ஒருத்தன் அம்பு கிழிப்பதோ? என்னால நம்ப முடியலை. தேவர்கள் செய்த மாயம்தானோ? நீ சாகலை, வேறொரு வாலி செத்துப் போயிருக்கான்”
அவளால உணர்ச்சியின் அதிர்ச்சியைத் தாங்க முடியலை. அவன் இறந்ததை நம்ப மறுக்கிறா. இதை disbelief ரியாக்‌ஷன்னு ஹோரோவிட்ஸ்-ன்னு ஒரு சைக்கியாட்ரி சயண்டிஸ்ட் சொல்றார்”
”சரி, இன்னொரு இடம்? “ அவன் கதை கேட்பதில் குறியாயிருந்தான்.
“இராவணன் செத்துக்கிடக்கறான். மண்டோதரி ஓடி வர்றா. அவ புலம்பறப்போ,
“வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கவர்ந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடலெங்கும் தடவியதோ ஒருவன்வாளி?”
வெள்ளெருக்கம் பூச் சூடிய சிவனது மலையைத் தூக்கிய வலிமையுடைய உனது உடலில் அம்புகள் துளைத்திருக்கிறதே? இது அந்த சீதையின் மீது வைத்த தவறான காதல் உடல் எங்கேயோ இருக்கிறதோ? என்று தேடியிருக்கிறதோ அந்த ராமபாணம்?”
நல்லா கேட்டுக்கோ அபி, மண்டோதரி, ராவணனோட வீரத்தைச் சொல்கிற அதே இடத்துல, அவனது இறப்புக்குக் காரணம் ஒரு தவறான காதல் என்கிற தருக்கத்தை , ஒரு காரணத்தை முன்னாடி வைக்கிறா, பாரு. இதுலதான் , உணர்ச்சிகளுக்கு முன்னாடி சுய அறிவை, தருக்கத்தை முன்னாடி வைக்கிற உத்தி. இது சாதாரண விஷயமில்லை”

அபி மவுனமாக இருந்தான். கதை அசைத்திருக்க வேண்டும்.
“என்னடா, எமோஷனலான சீன் அழுத்தமா இருக்கோ?”
“இல்லப்பா, என்னமா  இந்த கம்பர் ஒரு சைக்காலஜியை எழுதிவைச்சிருக்காரு, இல்ல? ஸ்டன்னிங்”
“சரி, அம்மா கத்திரிக்காய்தான் போட்டிருக்கேன். உணர்ச்சிப் படாம, இது நல்லதுக்குத்தான்ன்னு லாஜிக்கா நினைச்சுட்டு சாப்பிடு.ஹலோ, நீங்களும்தான். ஏன் கத்திரிக்காய்னா மூஞ்சி சுருங்கறது?”
நினைப்பதையும், அதை மாற்றும் வேலையையும் எப்படி பெண்கள் புரிந்துகொள்கிறார்கள்? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

1 comment:

  1. Supero super kambanum kathirikayum!!!!!!!

    ReplyDelete