Sunday, September 27, 2015

அனிச்சை இயக்கமும் ஆழ்வார் பாசுரமும்.

”கூரியர், ஸாப்” கூரியர் பையனோடு , எங்கள் அடுக்குமாடிக் கட்டிடக் காவலாளியும் வந்திருந்தான். கூரியர் என்று சொல்லிக்கொண்டு டிக்‌ஷனரி, என்ஸைக்ளோபீடியா விற்க சில யுவதிகள் நுழைந்துவிடுகிறார்கள். ஜன்னல் பத்திரிகையில் கடைசி அத்தியாயம் வந்திருந்த இதழ். Kasthuri என்று வழக்கம்போல பெயரில் th வந்திருந்தது.

உள்ளே மீண்டும் சென்று பத்துநிமிடத்தில் இறைவணக்கத்தை முடித்துவிட்டு வரவும் மகன் தயாராகக் காத்திருந்தான். “அப்பா, ஒன்னு கேட்கட்டுமா? கோபப் படக்கூடாது”

“சொல்லு”

“இல்ல, வாசல்ல கூரியர் வாங்க நீங்க எந்திச்சு வரணுமா? திருப்பாவை சொல்லிகிட்டிருந்தா, அதை முடிக்கவேண்டியதுதானே? தப்பு வந்ததுன்னா?  கான்ஸண்ட்ரேஷன் இருக்காதுல்ல?”
“திருப்பாவை தானா வந்துகொண்டிருக்கும். பழகிப்போச்சு பாரு. பெருக்கல் வாய்ப்பாடு மாதிரி. தூக்கத்துல கேட்டாலும் சொல்லணும்”

“அதுல என்ன கான்ஸ்டண்ட்ரேஷன் இருக்கும்? சும்மா சொல்லணும்னு சொல்றீங்க”
”இல்லடா” கொஞ்சம் யோசித்தேன். எங்கிருந்து தொடங்குவது?

“மூளை இருக்கு பாரு, முதல்ல ஒரு வேலையைச் செய்யறச்சே, பழகற வரை, படுத்தும். அதுவும் உடல் இயக்கமும் சேர்ந்து வரணும்னா, ரொம்பவே திமிறும். பொறுமையா ஒரு பழக்கத்துக்குக் கொண்டுவந்ததும், அது படு புத்திசாலித்தனமா, நினைவையும், உடல் இயக்க ஆணைகளையும் காங்கில்லியான்னு ஒரு பகுதிக்கு அனுப்பிடும். இது ,தானியங்கியா, நாம உணர்வோட முழிச்சிகிட்டிருக்கறச்சேயும், அந்த வேலைகளை சரியா செய்ய வைக்கும்.”

அவன் முழித்ததில், மேலும் விளக்கினேன். “ கார் ஓட்டக் கத்துக்கிறப்போ, கை கால், சிந்தனை எல்லாம் கார் ஓட்டறதுலயே இருக்கும். பழகினதுக்கு அப்புறம், மொபைல் எடுத்து பேசற அளவுக்கு, தானியங்கி வேலையா அது மாறிடறது இல்லையா? இது காங்கிலியாவோட வேலை ஆயிடுத்து. மூளையின் பிற பகுதிகள் மற்ற வேலையைச் செய்யப் போயிரும். இதே மாதிரிதான், பாசுரங்கள் படிக்கறப்போ முதல்ல கஷ்டமாயிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்துகிட்டா, காங்கிலியாவுக்கு அந்த இயக்கங்கள் போயிரும். நாம மத்த வேலையையும் பாக்கலாம்”

“ஆனா, அதுல என்ன பயன் இருக்குப்பா? கவனம் இல்லாம சொல்றது வீண்-ன்னு நீங்கதான் சொன்னீங்க”

“கரெக்ட். இது்ல என்ன ஆச்சரியம்னா, காங்கிலியா அந்த வேலையைச் செஞ்சாலும், மூளையின் பிற பகுதிகள் அதே பாசுரத்தை அனுபவிக்கவும்,உணரவைக்கவும் இயங்கும். வயலுக்கு தண்னீர் இறைக்கிற ஏற்றப்பாட்டுக்கும், தாலாட்டுக்கும்,  பெருமாளை வீதிக்குப் புறப்பாடு பண்ணறப்போ  மந்திரங்களும், பாசுரங்களும் சொல்றதுக்கும் இதே நிலைதான்.
 ஆனா, “ ஏனமாய் நிலங்கீண்ட என் அப்பனே கண்ணா!” ந்ன்னு வானமாமலைப் பதிகம் சொல்றப்போ, ஆதிமூலமேன்னு அந்த யானை கத்தினமாதிரி நாம கத்தறதா மனசு நினைக்கறது பாரு, கண்ல கண்ணீர் துளீர்க்கறது பாரு, இதெல்லாம், உணர்வோடு மூளை அனுபவிக்கறதைக் காட்டறது. ஆனா, பாசுரம்? அது காங்கிலியாலேர்ந்து வர்ற ஆணையில வருது. நீ எப்படி உன் மூளையை வைச்சிருக்கே-ங்கறது முக்கியம். தானியங்கியா சொல்வதோ, புத்தகம் பாத்துச் சொல்வதோ முக்கியம் இல்ல. உணர்வு, அனுபவம்.. அது முக்கியம்”

“ஏன்ப்பா எனக்கு இதெல்லாம் வரமாட்டேங்குது? ஸம்திங் ராங் வித் மி?” பையனின் உளைச்சல் புரிந்தது எனக்கு.

அவன் தோளைத் தட்டினேன் “இந்த கேள்வி இருக்கு பாரு.இப்போதைக்கு அது போதும். என்னிக்கோ ஒரு நாள் திடீர்னு உன் மூளை உணர்தலில் முதிர்ச்சியைக் காட்டும். அதுவரை , பாசுரம் என்பது, நிலத்துல விழுந்த விதை மாதிரிதான். சிலது, உடனே முளைக்கும். சிலது நாளாகும், சிலது முளைக்காது. இதெல்லாம் உன் கையில் இல்ல.”

”அப்ப என்னதான் நாம செய்யணும்ப்பா?”

“ விதையை விதைக்கறது மட்டும்தான் உழவனோட வேலை. வளர்றது விதையோட வேலை.  அது முளைக்கலைன்னா, மீண்டும் விதைக்கணும். நிலத்தைப் பக்குவப்படுத்தணும். உழவன் மறுபடி மறுபடி வியர்வை சிந்த உழணும்.  எது உன் கையில் இல்லையோ, அதுக்குக் கவலைப்படாதே.”
அவன் எழுந்து போய்விட்டான்.

ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தேன். பின்னர் மெல்ல திருவாய் மொழி புத்தகத்தை எடுத்தேன் “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆயினும் உனை விட்டகன்றி ஆற்றகிற்கொன்றிலேன் , அரவிணனை அம்மானே” வானமாமலைப் பதிகம்.

எனக்கு நோன்புகள் , சடங்குகள் கொண்ட கர்மயோக வழி தெரியாது. அறிவு மயமான ஞான வழியும் தெரியாது. ஆயினும் உன்னை விட்டு ஒன்றும் செய்ய இயலாது. “  சரணாகதி பாசுரங்களின் தொடக்கம்.  எதுவும் தனக்கு இல்லை என்ற ஆழ்வார், தன் முயற்சியை மட்டும்  விடவில்லை. அவனின்று அதுவும் செய்ய முடியவில்லை என்பதையே சொல்கிறார். முயற்சி என்பது செரபரல் கார்ட்டெக்ஸுக்கும், காங்கிலியாவுக்கும் வினைகளை ஒழுங்குபடுத்துகிறது.

 முயற்சி மட்டும் மீண்டும் மீண்டும். என்றாவது திருவாய்மொழி எனக்கும் புரியும். அதுவரை காங்கிலியாவும், கார்ட்டெக்ஸும் தம்மில் அடித்துக்கொள்ளட்டும்.

No comments:

Post a Comment