Sunday, October 04, 2015

பார்க்கில் ஒரு நடை


”உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

 யாரையோ சொல்கிறார் போலும் என முன்னே நடந்தேன். “உங்களைத்தான்.” என்றபோது சற்றே வியப்படைந்தேன். ’எங்கிட்டயா? இன்று காலைச் சொற்பொழிவில் எதாவது விளக்கம் கேட்கிறாரோ?’
 எனது பயத்தில் நியாயம் இருக்கிறது.

டாக்டர்.ரஜத் குப்தா  நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உணவு தயாரிப்பு, சத்து மேம்படுத்துதல், செறிவடையச் செய்தலில் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவது என்பதில் பெரும்புகழ் வாய்ந்தவர். ஆறு வருடங்களாக அவரோடு பழக்கம். பல கான்ஃபரன்ஸ்களில் சந்தித்திருக்கிறோம்.

பிரபலமான தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமுக்கு கம்பெனி என்னை அனுப்பியிருந்தது. தொழிற்சாலைகள், கல்லூரிகள், ஆய்வகங்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். அன்று இரண்டாம் நாள் முடிந்ததால் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

“வாங்க , மெயின் கேட் வரை நடந்துட்டு திரும்பி வரலாம்” என்றவரை மறுக்க முடியாமல், “ நீங்க போங்க. நான் கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்” என்று கூடவே வந்தவர்களை ரூமுக்கு அனுப்பிவிட்டு அவரோடு நடந்தேன்.

’மழை பெஞ்சிருக்குல்ல? கொஞ்சம் வழுக்கும், பாத்து” என்றார் . மெயின் ரோடு மழையில் கொஞ்சம் மோசமாயிருந்தது. ”வாங்க, பேசாம பூங்காவுக்குள்ள நடக்கலாம். அட்லீஸ்ட் அங்க இருட்டா இல்லாம இருக்கு”

இரு நிமிட மவுனத்தின் பின் ரஜத் ” கொஞ்சம் பெர்சனலான விசயம். உங்ககிட்ட பேசி ஆராயலாம்னு நினைச்சேன்” என்றார். நான் மவுனமாக நடந்தேன்.

“ஏன், இதை ஒரு கேஸ் ஸ்டடியாகக் கூட வச்சுக்கலாம். பேரு மட்டும் மாத்திரலாம். எட்டு மாசம் முன்னாடி, நீரஜாவை டெல்லியில சந்திச்சேன். ஒரு ஜாயிண்ட் ப்ராஜெக்ட் எடுத்திருக்கோம்”

“நீர்ஜா? டாக்டர் நீர்ஜா ,  **** லிமிடெட்-லேர்ந்து வந்திருக்காங்களே, அவங்களா?”

“யெஸ்” என்றவர் அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார்.
“அவளுக்கு வீடு சரியில்ல. புருஷன் எப்பவும் பிஸினஸ்னு அலையறான். இவகூட அன்பா நடந்துக்கறதில்ல. ஆபீஸ்ல மன அழுத்தம், அரசியல்...எதாவது ப்ராஜெக்ட்ல புது ஃபார்முலா வெற்றியடைஞ்சா வேலை இருக்கும். இல்லன்னா,அவ பாடு கஷ்டம்தான்”

“அவங்க கம்பெனி வைஸ் ப்ரெஸிடெண்ட் என்னோட நண்பர். நான் ஒரு வார்த்தை சொன்னால், இவ வேலைக்குப் பாதுகாப்பு. அதோட , இந்த ப்ராஜெக்ட்ல என்னோட ஒரு சோதனை முடிவு வெற்றிகரமா வந்திருக்கு., அதை நான் பகிர்ந்துகிட்டா, நல்ல பேப்பரா, பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்கள்ல வரும். ஏன், அது  அவளுக்கு ப்ரோமஷனுக்கே சாதகமா அமையும்”


அவர் சற்றே நிதானமாக நடந்தார். நானும் வேகத்தைக் குறைத்தேன். பார்க்கின் ட்யூப்லைட் வெளிச்சத்தில் அவர் முகத்தில் ஒரு புன்னகை கீற்று.

“ இங்கதான் நான் சொன்ன கேஸ் ஸ்டடி வருது  இந்த எட்டு மாச கூட்டு வேலையில, அவகிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகிட்டேன். அவளுக்கும் கொஞ்சம் சாய்வு இருக்கு. அதோட, அந்த சோதனை முடிவுகள் வெளியிடப்படுவதற்கு எனது அனுமதி தேவை. என்னோட ஒத்துப்போறது, அவளுக்கு நல்லதும்கூட”

திகைத்தேன். “இத ஏன் எங்கிட்ட சொல்றீங்க, ரஜத்ஜி? உங்க சொந்த விசயம்”

என்  தோளை லேசாகத் தட்டிச் சிரித்தார் “ எங்க பெயர் , அடையாளம் என்பது இரண்டாவது விசயம். அதை உதாசீனப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன். என்ன சவால்னு கேட்டீங்கன்னா. சமூக நெறிகள், மதம் கோட்பாடுகள்னு சிக்கிற ஆளு நான் இல்ல. ஓரளவுக்கு சமூக விதிகளைப் பின்பற்றணும்னு சொல்றவந்தான் நான். ஆனா, ,பொறுப்பான இரு பெரியவர்கள் பரஸ்பரம் ஆசையுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வினை மாற்றிக்கொள்வதில் என்ன தவறு? அவள் தயங்குகிறாள். ஏன்?”

சற்றே சிந்தனை வயப்பட்டேன். இது விஷப்பரீட்சை. ஏதாவது சொல்லப்போனால் ஏடகூடமாக எங்கள் உறவில் விரிசல் வருமோ என்ற தயக்கம், அதோடு, வெகு குறைவாகவே பரியச்சப்பட்ட ஒரு பெண்ணைக்குறித்துப் பேசுவது எனக்கு ஒப்புதலில்லை.

“விடுங்க. வேற பேசுவோம்”என்றேன். “ஹா ஹா. நழுவுகிறீர்கள். மூன்றாம் மனிதராக இருந்து இதன் சிக்கலை யோசியுங்கள். நான் சற்றே முயற்சி எடுத்தால், மணவாழ்விலிருந்து மாறுபட்ட ஒரு தொடர்பு கிடைக்கலாம். கிடைக்கும். போரடிக்கும் வழக்கமான தனிவாழ்வில் ஒரு மாற்றம். நன்றாகவும் இருக்கும். அவள் மறுக்க வாய்ப்பில்லை” என்றவர் குறுகுறுவெனப் பார்த்தார்

“என்னை வில்லன் என நினைக்கிறீர்களோ?”

“இது உங்கள் சொந்த விஷயம். நான் என்ன்ன சொல்வதற்கு இருக்கிறது?”

“சரி, நானே தொடங்குகிறேன். படித்த , அனுபவமிக்க பெரியவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதன்பின் எடுக்கும் முடிவு இது. ஆனால்,  மூகத்தில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்று மதியம் கருத்தரங்கில், “ சமூக விதிகள், மத சாத்திரங்கள் என்பதெல்லாம் கேள்விக்குட்பட்டவை. மரபணுக்கள் தாங்கள் வளர்வதைத் தீர்மானிக்கின்றன” என்றபோது சற்றே சிரித்தவர்களில் நீங்களும் ஒருவர். இப்படி மனம் ஒத்த இருவர் தங்கள் வழிகளை, தங்கள் நலனுக்காக இணைத்துக்கொள்வதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது?”

“மரபணுக்கள் இங்கு எங்கிருந்து வந்தன? “ என்றேன் வியந்து.

“ மரபணுக்கள் கூட இல்லை, அவற்றின் மூலக்கூறுகளான அமினோ அமிலங்கள், புரதங்கள், வேதியற்பொருட்கள். இவை தமக்குத் தேவையான , தாங்கள் இருக்க சாதகமான புறச்சூழலைக் காணுகையில் , அவற்றிற்கு சாதகமாக இருந்துகொள்கின்றன. பரிமாண வளர்ச்சியில் இதுவும் ஒரு அங்கம். எனவே, வரும் நாட்களில், தனக்குப் பிடித்த ஒருவருடன் மற்றொருவர் , சமூகவிதிகளை மீறி நடப்பது இயல்பாகிப்போகும். தனக்கு ஒவ்வாத ஒருவரிடமிருந்து விலகுவதும் எளிதாக இருக்கும். இல்லையா? எனவே சமூக விதிகள், நெறிகள் இவற்றிற்கு கடவுள் நிலை அளிப்பது கேலிக்கூத்து”.

மவுனமானேன் “ என்ன , நின்றுவிட்டீர்கள்? நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. டாக்கின்ஸ் எழுதிய Selfish Genes என்ற  புத்தகத்தின் தருக்க நீட்டல்தான் இந்த சிந்தனைக் கோணம். மூன்று வருடமுன்பு, நாம் டாக்கின்ஸ் பற்றி ஹைதராபாத் ஓட்டலில் பேசினோம். நினைவிருக்கிறதா?”

‘ஆஹா’ , மனுசன் இங்கேர்ந்து வர்றாரா? ”ரஜத்ஜி” என்றேன் முன்னே பார்த்தவாறே. பார்க்க்கின் நடைபாதை, நான்கு நிறத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. இரண்டு டைல்ஸ்கள் போகும் பாதையையும், மற்ற இரண்டு நிறங்கள் , வரும் பாதையையும் ,  அம்புக்குறியிட்டப்பட்டு காட்டியிருந்தன. ட்யூப்லைட் வெளிச்சத்தில் அனைத்து நிறங்களும் ஏதோ அதீத கருப்பாகத் தெரிய, க்றுப்பு நிறம் மட்டும் தன் நிறத்தில் அடர்வாகத் தெரிந்தது.

“இந்த நடைபாதையில் நீங்கள் கறுப்பு டைல்ஸ் பாதையிலும், நான் காவிநிறப் பாதையிலும் நடப்போமா? நேராக நடக்கவேண்டும். வேறு டைல்ஸ்களில் கால் வைத்துவிடக்கூடாது.”
“ரைட்” என்றார் .”வேறு டைல்ஸில் கால் மாற்றிவைத்தால் தோல்வி, அப்படியா?”
“வெற்றி தோல்வி பற்றி அப்புறம் சொல்கிறேன். நடங்கள்” . இருவரும் நேரா நடந்தோம். சுவர்க்கோழிகளின் சத்தமும், மழையால், சில தவளைகளின் சப்தமும் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில், எங்கள் பாதணிகள் தரையில் உரசும் ஒலி மட்டும் கேட்டது.

“இப்போது, கண்களை மூடிக்கொண்டு முன்னால் நடங்க” என்றேன். அவர் கண்களை அழுத்தி மூடிக்கொண்டதிலும், விளையாட்டின் சிரிப்பிலும், பற்கள் வெளியே தெரிய நடந்தார். இரு அடிகள் எடுத்து வைத்திருப்பார், இடது கால் என் பாதையில் வந்தது.

“பாத்து, பாத்து, உங்க பாதையில் நடங்க”
“அங்?” என்றவர் லேசாக கண் திறந்து பார்த்து, நேராக நடந்தார். “ ம். இன்னும் கண் மூடி நடங்க”.  நான்கு அடிகளில் மறுபுறம் அவரது வலது கால் நீண்டது.

“ஹலோ. அந்தப்பக்கம்...” அவர் மீண்டும் கண் திறந்து நேராக சரிப்படுத்தினார். “ என்ன விளையாட்டு இது? சுதாகர்?”

“நாப்பது வருசமாக நீங்களும் நடக்கறீங்க. நடை நன்றாகவே தெரிந்தாலும், கண் மூடினால் ஓரிரு அடிகளில் கோணம் தவறிவிடுகிறது. கால் எப்போதும்போல முன்னால்தான் நடக்கிறது என்று நம்புகிறோம். உண்மையில் கண்கள் மற்றும் பிற புலன்களால் ஒவ்வொரு மைக்ரோ வினாடிகளிலும், நம் மூளை நமது நடையைச் சரிப்படுத்துகிறது. இது உள்மறையாக நடக்கும் இயல்பான திருத்தம். இல்லையா?”

“வெல், வாட்ஸ் தி பாயிண்ட்?” என்றார், சற்றே எரிச்சலடைந்து.

“பாயிண்ட் இஸ்... சமூக நெறிகள் நம்முள் உள்வாங்கப்பட்டு, நாம் வாழ்க்கையில் நடப்பதை, ஒவ்வொரு நொடியிலும் சரிப்படுத்துகிறது. கன்னாபின்னாவென நாம் நடந்தால் எப்படியிருக்கும்? அத்தனை பேரும் இடித்துக்கொண்டு, கீழே விழுந்து, முன்னே போகவே மாட்டோம். சற்றே சீர்ப்படுத்தப்பட்ட, ஒழுங்கான நடை , அனைவருக்கும் நன்மை தரும், ஒரு பார்க்கில் நடக்கிறதுக்கே இப்படி இருக்கிறதென்றால், வாழ்க்கையில் நடக்க, மூளை எத்தனை ஒழுங்கு நெறிகளை வைத்துக்கொண்டு நம்மை திருத்தவேண்டும்? நீங்கள் ஒரு மூலையில் தாறுமாறாக ஓடுவது, நடைபாதை விதிகளை மீறுவது, பிறரை முதலில் பாதிக்காது இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நடக்க வருபவர்கள் உங்களை ‘கோட்டி பிடிச்சவன் போல” என்றுதான் நினைப்பார்கள். உங்களை விலக்கத்தான் நினைப்பார்கள்”

“ஹா, இது ஒரு உவமையா? இது யதார்த்த விதி மட்டும் தழுவிய பேச்சு, நான் அடிப்படையை கேள்விகேட்கிறேன். பார்க்கில் நடக்க அல்ல, பெரும் நிலத்தில், கோடிடப்படாத பெரு வெளியில் தன் வழியை ஏற்படுத்திக்கொண்டு ஓடச் சொல்கிறேன். குறுகியதாகச் சிந்திக்காதீர்கள்”

“ஓடுகளத்தில் விதிகள் வேறு, நடக்கும் பாதையில் விதிகள் வேறு. காட்டில் செல்ல விதிகள் வேறு. அனைத்தும் பாதுகாப்பு என்பதை முதலில் வரையறுக்கின்றன. டாக்கின்ஸுக்கு வர்றேன். நீங்கள் சொன்ன மரபணு கெமிக்கல்கள் பல்வழியில் தம்மில் கலந்து புதுப்புது பரிணாம படிவங்களை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் மேற்குக்கரையில், அட்லாண்டிக் கடலில்கூட சிங்கத்தின் பண்பைக்கொண்ட உயிரினத்தை உருவாக்க கெமிக்கல்கள் என்றோ இணைந்திருக்கக்கூடும். ஆனால் அது வெற்றிபெறாது அவ்வுருவம் பிறக்குமுன்னே மடிந்திருக்கும். கெமிக்கல்கல்களின் கலவை உருவாக்கிய மீன் உருவங்கள் வெற்றி பெற்றன. அந்த மரபணுக்கள் அடிப்படையில் மீன் உருவை உருவாக்கி அதன்மீது மாறுபட்ட பண்புடைய உருவங்களை படைத்தன. அதிலும் பல தோற்றிருக்கும், இதேபோல் மண்ணில் மீன் உருவம் தோன்ற, இணைந்த கெமிக்கல் கலவை தோற்றிருக்கும். ஒரு உயிரினம் வளர மட்டுமல்ல, வாழ்வதற்கு அதன் சூழ்நிலை அமையவேண்டும். தமிழ்ல் சொல்லவேண்டுமானால் ‘நொந்தது சாகும்’ “

“நொந்தது சாகும்’ .. நல்லாயிருக்கே? “ என்றார் ரஜத் வியந்து.

“சொன்னது ஒரு கவிஞன். ரெண்டு வார்த்தையில் பரிணாம வளர்ச்சியை சொல்லிப் போய்விட்டான், அந்தக் கிறுக்குப் பார்ப்பான். அதை விடுங்க, சமூகம் தரும் சூழ்நிலையில் தவறும்  சிந்தனைச் சேர்க்கைகைகள், புதியதோர் உலகம் செய்யாது. தருக்கமற்ற சேர்க்கையான விபரீத விளைவுகளைத்தான் கொடுக்கும், எதிர்வினைகளைச் சமாளிக்க முடியாமல் , அது மடிந்து போகும். நீங்கள் கடலில் பலவீனமாக உருவான சிங்கமாக இருக்கவிரும்புகிறீர்களா, சரியான சிறு மீனாக இருக்கவிரும்புகிறீர்களா, என்பதை உங்கள் எண்ண மரபணுக்கள் தீர்மானிக்கட்டும்.”

ரஜத் சிரித்தார். “ நீங்கள் , சமூக,மத நெறிகளுக்குக் கொடி பிடிக்கிறீர்கள். டாக்கின்ஸை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர் நாத்திகத்தை முன்னிறுத்தினார். விதிகள் நாம் செய்வது. பல்லாண் சேர்க்கை என்பது பல குழுக்களில் உள்ள பழக்கம், ஓராண் சேர்க்கை என்பது பிற்பாடு , ஆண் தனக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு நெறி. நீங்கள் சொல்லும் நெறிகள் காலம்காலமாக பிறழ்ந்து, மாறி வந்திருக்கின்றன.”

“உண்மைதான்” என்றேன் “ அவை மாறுவது அதன் பரிணாம வளர்ச்சி. சூழ்நிலைகள் மாறும்போது, தன் சமூகம் வாழவும், வளரவும் வகையில் சமூக நெறிகளை மனிதன் அமைக்கிறான். நெறிகள் பிறழ்ந்து, சமூகக் கட்டு உடையும்போது, புதிய நெறிகளை, புது சமுதாயத்தை அவன் உருவாக்குகிறான்.”

“அப்படி வாருங்கள் வழிக்கு! இதெல்லாம் ஐம்பது ஆண்டுகால சமூக விடுதலை உணர்வில் வந்த வார்த்தைகள். பழைய நெறிகள் இப்படிச் சொல்லியிருக்காது”

சிரித்தேன் “ பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினனானே’ - இதனை எனது முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்தில் கணியன் பூங்குன்றனார் சொல்லிப்போயிருக்கிறான். வளர் சிதை மாற்றத்தை அவர்கள் என்றோ அறிந்திருக்கிறார்கள்.  டாக்கின்ஸ் சொல்லும் மரபணு மாற்றங்கள் நிகழ சூழ்நிலைகள் சாதகமாக அமைகின்றன. அவர், கடவுள் உன்னை உருவாக்கவில்லை; சூழ்நிலை சாதகமாக அமையும்போது, மரபணுக்கள் தோற்றுவித்த உரு நீ’ என்கிறார். இது சரியான தருக்கமாக ஏற்றுக்கொள்ள நான் தயங்கவில்லை”

“சரி, எங்கள் கதைக்கு வாருங்கள். என்ன சொல்கிறீர்கள்?”

“ ரஜத் ஜி. இதில் நான் சொல்ல ஒன்றுமில்லை. நேராக நடக்க உங்களூக்கும் தெரியும். கண் மூடி நடந்தால் பாதை மாறினால், கீழே விழுந்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.”

மழை வலுத்தது.

இருவரும் தடுமாறாது  நடந்தோம் - நான் காவி டைல்ஸ் மேலும், அவர் கறுப்பு டைல்ஸ் மேலும்,

No comments:

Post a Comment